Author Topic: ~ புறநானூறு ~  (Read 156091 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #165 on: July 31, 2013, 08:43:40 PM »
புறநானூறு, 166. (யாமும் செல்வோம்!)
பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.
பாடப்பட்டோன்: சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்.
திணை: வாகை.
துறை : பார்ப்பன வாகை. கல்வி கேள்விகளால் சிறந்த பார்ப்பானின் வேள்விச் சிறப்பையும் வெற்றியையும் புகழ்ந்து பாடுவது.
===================================

நன்றாய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல்
இகல்கண்டோர் மிகல்சாய்மார்

மெய்அன்ன பொய்உணர்ந்து
பொய்ஓராது மெய்கொளீஇ
மூவேழ் துறையும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
வினைக்குவேண்டி நீபூண்ட

புலப்புல்வாய்க் கலைப்பச்சை
சுவல்பூண்ஞாண் மிசைப்பொலிய;
மறம்கடிந்த அருங்கற்பின்
அறம்புகழ்ந்த வலைசூடிச்
சிறுநுதல்பேர் அகல்அல்குல்

சில சொல்லின் பலகூந்தல் நின்
நிலைக்குஒத்தநின் துணைத்துணைவியர்
தமக்குஅமைந்த தொழில்கேட்பக்;
காடுஎன்றா நாடுஎன்றுஆங்கு
ஈரேழின் இடம்முட்டாது

நீர்நாண நெய்வழங்கியும்
எண்நாணப் பலவேட்டும்
மண்நாணப் புகழ்பரப்பியும்
அருங்கடிப் பெருங்காலை
விருந்துற்றநின் திருந்துஏந்துநிலை

என்றும் காண்கதில் அம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்

செல்வல் அத்தை யானே; செல்லாது
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம் போல
நிலீஇயர் அத்தைநீ நிலமிசை யானே

அருஞ்சொற்பொருள்:-

ஆய்தல் = நுணுகி அறிதல்
முது முதல்வன் = இறைவன் (சிவன்)
நிமிர் = மேன்மை
புரிதல் = செய்தல்
இகல் = மாறுபாடு
மிகல் = வெற்றி, செருக்கு
சாய்தல் = அழிதல்
ஆர்வு = விருப்பம்
ஓராது = ஆராயாது
கொளீஇ = கொண்டு
துறை = காரியம் ( வேள்வி)
முட்டு = குறைவு
உரவோர் = அறிஞர், முனிவர்
மருகன் = வழித்தோன்றல்
புலம் = வயல், இடம்
புல்வாய் = கலைமான்
சுவல் = தோள்மேல்
ஞாண் = கயிறு
மிசை = மேல்
மறம் = மிகுதி
கடிந்த = நீக்கிய
வலை = ஒரு வகை ஆடை
முட்டாது = குறையாது
கடி = வேள்வி
பெருகுதல் = நிறைதல்
தில், அம்ம - அசைச் சொல்
வரை = மலை
சிலைத்தல் = முழங்குதல்
புயல் = மேகம்
ஏறு = இடி
புரக்கும் = காக்கும்
படப்பை = தோட்டம், புழைக்கடை
அத்தை - அசைச் சொல்
அண்ணாத்தல் = தலை நிமிர்தல், தலையெடுத்தல்
கழை = மூங்கில்

இதன் பொருள்:-

நன்றாய்ந்த=====> மிகல்சாய்மார்

மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, முழுமுதற் கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின்

மெய்அன்ன=====> நீபூண்ட

செருக்கை அழிக்க விரும்பி, அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல், மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து முடித்த, சொல்லுதற்கரிய சிறப்புடைய முனிவர்களின் (அறிஞர்களின்) வழித்தோன்றலே! வேள்விக்காக, நீ

புலப்புல்வாய்க்=====> அல்குல்

காட்டு மானின் தோலை உன் பூணுலுக்கு மேல் அணிந்திருக்கிறாய். குற்றமற்ற, அரிய கற்பும், அற நூல்களில் புகழப்பட்ட வலை என்னும் ஆடையையும், சிறிய நெற்றியையும், அகன்ற இடையையும்

சில=====> முட்டாது

அதிகமாகப் பேசாத இயல்பையும், மிகுதியான கூந்தலையும் உடைய, உன் தகுதிக்கேற்ற துணைவியராகிய உன் மனைவியர் அவர்களுக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கின்றனர். காட்டிலும் நாட்டிலும் வாழ்ந்த பதினான்கு பசுக்களின் நெய்யை

நீர்நாண=====> ஏந்துநிலை

நீரைவிட அதிகமாக வழங்கி, எண்ணற்ற பல வேள்விகளைச் செய்து உலகெங்கும் புகழ் பரப்பிய, அரிய வேள்வி நிறைவு பெறும் வேளையில் விருந்தினரோடு கூடியிருக்கும் உன் மேன்மையான நிலையை

என்றும்=====> ஆடுகம்

இன்றுபோல் நாங்கள் என்றும் காண்போமாக; மேற்கில், பொன் மிகுதியாக உள்ள உயர்ந்த மலையில் மேகம் இடியோடு முழங்கியதால் மலர்ந்த பூக்களைச் சுமந்து வரும் காவிரியில் புது வெள்ளம் பெருகி வருவதால் குளிர்ந்த நீருடைய தோட்டங்களுடைய எங்கள் ஊரில், நாங்கள் உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடியும்

செல்வல்=====> யானே

மகிழ்வோம்; யான் செல்கிறேன். மேகங்கள் அகலாது மழை பொழியும் உயர்ந்த மலைகளையுடைய, மூங்கில் வளரும் இமயம் போல் நீ இவ்வுலகில் வாழ்வாயாக.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம், சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் ஒரு வேள்வி நடத்தினான். அவ்வேள்விக்கு ஆவூர் மூலங் கிழார் சென்றிருந்தார். அவ்வேள்வியின் சிறப்பையும் விண்ணந்தாயனின் வள்ளல் தன்மையையும் இப்பாடலில் ஆவூர் மூலங் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #166 on: July 31, 2013, 08:45:40 PM »
புறநானூறு, 167. (நீயும் ஒன்று இனியை;அவரும் ஒன்று இனியர்!)
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஏனாதி திருக்கிள்ளி.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
===================================

நீயே, அமர்காணின் அமர்கடந்துஅவர்
படைவிலக்கி எதிர்நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை கட்குஇன் னாயே;
அவரே, நிற்காணின் புறங்கொடுத்தலின்
ஊறுஅறியா மெய்யாக்கையொடு

கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே!
அதனால், நீயும்ஒன்று இனியை;அவரும்ஒன்று இனியர்;
ஒவ்வா யாவுள மற்றே? வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!
நின்னை வியக்குமிவ் உலகம் அஃது
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே

அருஞ்சொற்பொருள்:-

அமர் = போர்
கடந்து = வென்று
வாய்த்தல் = கிடைத்தல், சேர்தல்
கட்கு = கண்ணுக்கு
ஊறு = காயம், தழும்பு
ஒவ்வுதல் = பொருந்துதல் (ஒத்திருத்தல்)
ஒவ்வா = பொருந்தாத (ஒப்பில்லாத)
கடு = விரைவு
உரைத்திசின் = உரைப்பாயாக

இதன் பொருள்:-

நீயே=====> மெய்யாக்கையொடு

நீ, போரைக் கண்டால், அப்போரில் வென்று, அப்பகைவர்களின் படையை எதிர்த்து நிற்கிறாய். அதனால், வாளால் உண்டாகிய தழும்புகளுடைய உடலோடு உள்ள உன் வீரச் செயல்களைக் கேட்பதற்கு இனியவனாய் உள்ளாய். ஆனால், நீ கண்ணுக்கு இனியவனாயக (அழகானவனாக) இல்லை. உன் பகைவர், உன்னைக் கண்டால் புறங்காட்டி ஓடுவதால் தழும்பில்லாத உடலோடு

கண்ணுக்கு=====> எமக்கே

பார்ப்பதற்கு இனிமையானவர்களாக (அழகானவர்களாக) இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் செயல்கள் கேட்பதற்கு இனிமையானவையாக இல்லை. அதனால், நீ ஒருவகையில் இனியவன்; அவர்களும் ஒரு வகையில் இனியவர்களாக உள்ளனர். உங்களுக்குள் வேறுபாடுகள் எவை? போரில் வெற்றியும், வீரக்கழல் அணிந்த திருவடிகளும், விரைவாகச் செல்லும் குதிரைகளும் உடைய உன்னைக் கண்டு இவ்வுலகம் வியக்கிறது. அதற்குக் காரணம் என்னவோ? தலைவா! அதை எனக்கு உரைப்பாயாக.

பாடலின் பின்னணி:-

ஏனாதியின் வீரத்தையும் வண்மையையும் கேள்விப்பட்டு, அவனைக் காணக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் சென்றவர். அவர் திருக்கிள்ளியின் உடலில் இருந்த வடுக்களைக் கண்டு வியந்து, இகழ்வதுபோல் புகழ்ந்து அவனை இப்பாடலில் சிறப்பிக்கிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #167 on: July 31, 2013, 08:47:31 PM »
புறநானூறு, 168. (கேழல் உழுத புழுதி!)
பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண் திணை.
துறை : பரிசில் துறை. இயன்மொழியும் அரச வாகையும் ஆம்.
===================================

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கண் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்

உழாஅது வித்திய பரூஉக்குரல் சிறுதினை;
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்

சாந்த விறகின் உவித்த புன்கம்;
கூதளம் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ, கூர்வேல்
நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும,

கைவள் ஈகைக் கடுமான் கொற்ற,
வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
பாடுப என்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே.

அருஞ்சொற்பொருள்:-

ஆர்த்தல் = ஒலித்தல்
பயிறல் = கூடுதல்
நனம் = அகற்சி
நனந்தலை = அகன்ற இடம்
கறி = மிளகு
அடுக்கம் = மலைப்பக்கம், மலைச் சாரல்
மிளிர்தல் = புரளுதல், மேலாதல்
கிளை = இனம், கூட்டம்
கடுங்கண் = குரூரம், கொடுமை
கேழல் = பன்றி
பூழி = புழுதி
பதம் = சமயம்
பரூஉ = பருமை
குரல் = கதிர், தினை
முந்து = பழைமையான (முன்னர்)
யாணர் = புது வருவாய்
மரையா = காட்டுப் பசு
தீ = இனிமை
தடி = தசை
புழுக்கல் = அவித்தல்
குழிசி = பானை
வான் = அழகு
கேழ் = நிறம்
புடை = பக்கம்
சாந்தம் = சந்தனம்
உவித்தல் = அவித்தல்
புன்கம் = சோறு, உணவு
கூதளம் = வெள்ளரி, கூதாளிச் செடி
குளவி = காட்டு மல்லிகை
முன்றில் = முற்றம்
கோள் = குலை
பகுத்தல் = ஈதல், பங்கிடுதல்
நறை = பச்சிலைக் கொடி
வடி = கூர்மை
நவிலல் = பழகுதல்
வள் = வளம்கடு = விரைவு
மான் = குதிரை
நெளிதல் = வருந்துதல்
வீதல் = கெடுதல்

இதன் பொருள்:-

அருவி=====> குறவர்

அருவிகள் சத்தமிடும், மூங்கில்கள் அடர்ந்த அகன்ற இடத்தில், மிளகுக் கொடி வளரும் மலைப்பக்கத்தில் காட்டுப் பன்றிகள் தன் இனத்தோடு, காந்தளின் வளமான கிழங்குகளைத் தோண்டியெடுப்பதற்காகக் கிளறிய நிலத்தில் தோன்றிய புழுதியில், நல்ல நாள் வந்த சமயம் பார்த்துக் குறவர்

உழாஅது=====> ஏற்றி

உழாமல் விதைத்து விளைந்த பெரிய கதிரையுடைய சிறுதினையப் புது வருவாயாகப் பெற்று அதைப் புது உணவாக உண்ணுவர். காட்டுப் பசுவிடம் கறந்த நுரையுடன் கூடிய இனிய பாலில் மான் தசையை வேகவைத்தப் புலால் மணமுள்ள அழகிய நிறமுள்ள பானையின் வெளிப்புறத்தைக் கழுவாமல் உலைவைத்து,

சாந்த=====> பெரும

சந்தன விறகால் சமைத்த சோற்றை வெள்ளரி சிறந்து விளங்கும், காட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்னும், குதிரை மலைத் தலைவனே! கூர்மையான வேலையும், பச்சிலைக் கொடியுடன் தொடுத்த வேங்கை மலர் மாலையையும் அணிந்து கூரிய அம்பைச் செலுத்துவதில் பயிற்சி பெற்ற வீரர்களுக்குத் தலைவா!

கைவள்=====> புகழே

கையால் வழங்கும் ஈகையும் விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய தலைவா! உலகத்து எல்லையுள், தமிழகம் முழுதும் கேட்க, இரவலர்க்குப் பரிசளிக்காத மன்னர்கள் நாள்தோறும் நாணுமாறு நன்கு பரவிய உன் பழியற்ற புகழைப் பொய் பேசாத, நடுவு நிலை தவறாத நாவுடையோர் தங்கள் நாவு வருந்துமாறு புகழ்ந்து உன்னை பாடுவர் என்று பரிசிலர் கூறுவர்.

பாட்டின் பின்னணி:-

தமிழகம் முழுதும் பிட்டங்கொற்றனின் புகழ் பேசப்படுவதைக் கண்ட புலவர் கருவூர்க் கதப்பிள்ளை அவனைக் காண வந்தார். இப்பாடல், அவ்வமயம் அவரால் இயற்றப்பட்டது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #168 on: August 06, 2013, 11:58:38 AM »
புறநானூறு, 169. (நின் வலன் வாழியவே!)
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண் திணை.
துறை : பரிசில் கடாநிலை.
===================================

நும்படை செல்லுங் காலை அவர்படை
எடுத்தெறி தானை முன்னரை எனாஅ
அவர்படை வருஉம் காலை நும்படைக்
கூழை தாங்கிய அகல்யாற்றுக்
குன்றுவிலங்கு சிறையின் நின்றனை எனாஅ,
அரிதால் பெருமநின் செவ்வி என்றும்

பெரிதால் அத்தைஎன் கடும்பினது இடும்பை
இன்னே விடுமதி பரிசில் வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்
பெருமரக் கம்பம் போலப்
பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே

அருஞ்சொற்பொருள்:-

தானை = ஆயுதங்கள்
முன்னரை = முன்னர் நிற்பவன்
கூழை = படை வகுப்பு
விலங்கு = குறுக்கானது
சிறை = தடை
எனாஅ = ஆகலானும் (இடைச்சொல்)
செவ்வி = காலம்
ஆல், அத்தை - அசைச் சொற்கள்
கடும்பு = சுற்றம்
இடும்பை = துன்பம்
இன்னே = இப்பொழுதே
கோசர் = ஒரு வகை வீரர்கள்
கன்மார் = கற்பவர்கள்
இகல் = மாறுபாடு
உலைதல் = மனங்கலங்கல்
வலன் = வெற்றி

இதன் பொருள்:-

நும்படை=====> என்றும்

உம் படை பகைவரோடு போரிடப் போகும் பொழுது, வேல் முதலியவற்றை எடுத்து எறியும் பகைவரின் படைக்கு முன் நிற்பாய். பகவரின் படை உம் படையோடு போரிட வரும் பொழுது, உம் படையின் அணியைத் தாங்குவதற்காக, அகன்ற ஆற்றைத் தடுத்து நிறுத்தும் மலைபோல் அதனைத் தடுத்து நிற்பாய். அதனால், பெரும, உன்னைக் காண்பதற்கு ஏற்ற காலம்

பெரிதால்=====> வாழியவே

கிடைப்பது எந்நாளும் அரிது. என் சுற்றத்தாரின் துன்பம் பெரிதாகையால், இப்பொழுதே பரிசு அளித்து என்னை அனுப்புவாயாக. வெல்லும் வேலையுடைய இளம் கோசர்கள் பலரும் படைப் பயிற்சி செய்யும் பொழுது வேலெறிந்து பழகும் அகன்ற இலையுடைய முருக்க மரத்தூணால் ஆகிய இலக்கு போல் பகைவர்களைக் கண்டு மனங்கலங்காத உன் வெற்றி வாழ்க.

பாடலின் பின்னணி:-

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பிட்டங்கொற்றனைக் காண விரும்பினார். ஆனால், அவர் பிட்டங்கொற்றனைக் காண முயன்ற பொழுதெல்லாம் அவன் போருக்குச் சென்றிருந்தான். ஒருமுறை, அவனை நேரில் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது, அவன் மீண்டும் போருக்குப் போவதற்குமுன் தனக்குப் பரிசு கொடுத்து அருள வேண்டுமென்று அவர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #169 on: August 06, 2013, 12:00:18 PM »
புறநானூறு, 170. (உலைக்கல்லன்ன வல்லாளன்!)
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்.
திணை: வாகை.
துறை : வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவன் ஆண்மைத் தன்மையை நன்மை பெருகச் சொல்லுதல்.
தானை மறமும் ஆம்: இரு படைகளும் தங்களுள் போரிட்டுச் சாகாதவாறு வீரன் ஒருவன் பாதுகாத்ததைக் கூறுவது.
===================================

மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்
பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்
எல்அடிப் படுத்த கல்லாக் காட்சி
வில்லுழுது உண்மார் நாப்பண் ஒல்லென
இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப

வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி
புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்
குறுகல் ஓம்புமின் தெவ்விர்; அவனே
சிறுகண் யானை வெண்கோடு பயந்த
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து

நார்பிழிக் கொண்ட வெம்கள் தேறல்
பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன வல்லா ளன்னே

அருஞ்சொற்பொருள்:-

மரை = காட்டுப்பசு
பரல் = விதை
முன்றில் = முற்றம்
எல் = பகல்
அடிப்படுதல் = அடிச்சுவடு படுதல்
காட்சி = அறிவு
நாப்பண் = நடுவே
கருமை = வலிமை
துரந்து = முயன்று
சிலைத்தல் = ஒலித்த
துடி = குறிஞ்சிப் பறை
குடிஞை = ஆந்தை
இரட்டல் = மாறி மாறி ஒலித்தல்
குறுகல் = அணுகல்
வெம்மை = விருப்பம்
தேறல் = கள்ளின் தெளிவு
கூடம் = சம்மட்டி
உலைக்கல் = பட்டடைக் கல் (பட்டறை)

இதன் பொருள்:-

மரைபிரித்து=====> சிவப்ப

காட்டுப் பசுக்கள் வீட்டு வேலியில் உள்ள நெல்லிமரத்தின் கனிகளின் விதைகளை நீக்கித் தின்றதால் அவ்விதைகள் வீடுகளின் முற்றங்களில் சிதறிக் கிடக்கும் அழகிய வீடுகளுடைய சிற்றூரில், பகற் பொழுதெல்லாம் வேட்டையாடித் திரிகின்ற, கல்வியில்லாத, வேற்பயிற்சியுள்ள வேட்டையாடி உண்ணும் வேடர்களின் நடுவே, “ஒல்” என்னும் ஓசையுடன் இழிந்த பிறப்பாளன் என்று கருதப்படும் பறை கொட்டுபவன் தன் வலிய கை சிவக்குமாறு

வலிதுரந்து=====> ஈந்து

விரைந்து அடிக்கும் வலிய கண்ணையுடைய, அச்சம் தரும் பறையின் ஒலி, புலி படுத்திருக்கும் மலையில் ஆந்தையின் அலரலோடு மாறி மாறி ஒலிக்கும். இத்தகைய மலையுள்ள நாட்டுக்குத் தலைவன் கூரிய வேலையுடைய பிட்டங்கொற்றன். பகைவர்களே! அவனை அணுகுவதைத் தவிர்க. அவன் சிறிய கண்களையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களில் விளையும் ஒளி பொருந்திய முத்துகளை விறலியர்க்குக் கொடுப்பவன்.

நார்பிழி=====> வல்லா ளன்னே

நாரைப் பிழிந்து எடுத்த விரும்பத்தக்க கள்ளின் தெளிவை, யாழோடும் பண்ணோடும் பாடும் பாணர்களுக்குக் கொடுத்து அவர்களையும் அவர்களின் சுற்றத்தாரையும் உண்ண வைப்பவன். ஆனால், பகைவர்க்கு அவன் இரும்பைப் பயன்படுத்தும் வலிய கொல்லனின் உலைக்களத்தில் விரைந்து சம்மட்டியால் அடிக்கப்படும் பட்டடைக்கல் போன்ற வலிமையுடையவன்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், மருத்துவர் தாமோதரனார் பிட்டங்கொற்றனைக் காணச் சென்றார். அவ்வமயம், பிட்டங்கொற்றனின் பகைவர்கள் அவனோடு போர் புரிவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக, பகைவர்களின் ஒற்றர்கள் மூலம் அறிந்தார். அவ்வொற்றர்கள் அறியுமாறு, அவர் பிட்டங்கொற்றனின் வலிமையைப் புகழ்ந்து பாடுவதாக, இச்செய்யுள் அமைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #170 on: August 06, 2013, 12:01:45 PM »
புறநானூறு, 171. (அவன் தாள் வாழியவே!)
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே; பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்

தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
அருந்தொழில் முடியரோ திருந்துவேல் கொற்றன்
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
அருங்கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை

பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே;
அன்னன் ஆகலின் எந்தை உள்ளடி
முள்ளும் நோவ உற்றாக தில்ல!
ஈவோர் அரியஇவ் உலகத்து
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே!

அருஞ்சொற்பொருள்:-

வரை = காலம்
துன்னி = நெருங்கி (தொடர்ந்து)
வைகல் = நாள்
உவப்ப = மகிழ
மலிதல் = மிகுதல், நிறைதல்
கதம் = சினம்
சே = காளை
களன் = தொழுவம்
குப்பை = குவியல்
எந்தை = எம் தந்தை ( எம் தலைவன்)

இதன் பொருள்:-

இன்று=====> நிறைப்போன்

இன்று சென்றாலும் (பரிசுகள்) தருவான்; சில நாட்கள் கழித்துச் சென்றாலும் (பரிசுகள்) தருவான். அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து நாள்தோறும் சென்றாலும், “முன்பே தந்தேன்” என்று கூறாமல், யாம் வேண்டியவாறு தவறாமல் எங்கள் வறுங்கலங்களை நிரப்புவான்.

தான்வேண்டி=====> பெருந்தகை

தன் அரசன் விரும்பியவாறு, அவன் மகிழ , திருந்திய வேலையுடைய பிட்டங்கொற்றன் தன்னுடைய அரிய போர்த்தொழிலை முடிப்பானாக. பெரிய கூட்டமாக உள்ள, சினமுடைய காளைகளைத் தொழுவத்தோடு கேட்டாலும், களத்தில் மிகுதியாக இருக்கும் நெற்குவியலைக் கேட்டாலும், அரிய அணிகளை அணிந்த யானைகளைக் கேட்டாலும், பெருந்தன்மையுடைய பிட்டங்கொற்றன்

பிறர்க்கும்=====> வாழியவே!

எமக்கு மட்டுமல்லாமல் பிறர்க்கும் கொடுக்கும் தன்மை உடையவன். ஆகவே, எம் தந்தை போன்ற பிட்டங்கொற்றனின் காகல்களில் முள்கூடக் குத்தி வலி உண்டாக்காது இருக்க வேண்டும். ஈவோர் அரிதாக உள்ள இவ்வுலகில், வாழ்வோரை வாழவைக்கும் பிட்டங்கொற்றனின் முயற்சி வாழ்கவே.

பாடலின் பின்னணி:-

பிட்டங்கொற்றனைக் காண்பது அரிதாக இருப்பதாகக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியதை 169- ஆம் பாடலில் கண்டோம். அப்பாடலை இயற்றிய பிறகு, பிட்டங்கொற்றனை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாருக்குக் கிடைத்தது. அவனும் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாருக்குப் பெருமளவில் பரிசுகள் அளித்து அவரை மகிழ்வித்தான். பிட்டங்கொற்றனின் அன்பாலும் வண்மையாலும் பெருமகிழ்ச்சி அடைந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், அவன் தனக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் வேண்டியது அளிக்கும் தன்மையவன் என்றும் அவன் எவ்வித துன்பமும் இல்லாமல் வாழ வேண்டுமென்றும் இப்பாடலில் வாழ்த்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

அதியமானிடம் எத்தனை நாள் சென்றாலும் அவன் முதல் நாள் பரிசளித்ததைப் போலவே தினமும் பரிசளித்து இரவலரை மகிழ்விப்பான் என்று 101 - ஆம் பாடலில் அவ்வையார் கூறுகிறார்.

ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ. (புறம். 101; 1-3; அவ்வையார்)

வையாவிக் கோப்பெரும் பேகனிடம் சென்று பரிசு பெறுவதற்கு, நல்ல நாள் பார்த்துச் செல்லவேண்டியதில்லை; நிமித்தம் நல்லாதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அவனைச் சந்திப்பதற்கு ஏற்ற சமயமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; திறமையாக செய்யுள் இயற்ற வேண்டிய அவசியமும் இல்லை; அவன் நிச்சயம் பரிசளிப்பான் என்று பேகனின் கொடைத் திறத்தைக் கபிலர் 124-ஆம் பாடலில் கபிலர் புகழ்ந்து கூறுகிறார்.

நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர்; (புறம். 124; 1-3; கபிலர்)

அவ்வையார் அதியமானைப் பற்றிக் கூறியிருப்பதும், கபிலர் பேகனைப் பற்றிக் கூறியிருப்பதும் இப்பாடலில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பிட்டங்கொற்றனின் கொடைத் தன்மையைப் புகழ்ந்து பாடுவதும் சங்ககாலத்து மன்னர்கள் புலவர்களையும் இரவலர்களையும் ஆதரிப்பதில் மிகுந்த ஆர்வமுடைவர்களாக இருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #171 on: August 06, 2013, 12:03:21 PM »
புறநானூறு, 172. (பகைவரும் வாழ்க!)
பாடியவர்: வடம வண்ணக்கன் தாமோதரனார்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம்
பரியல் வேண்டா; வருபதம் நாடி;

ஐவனங் காவல் பெய்தீ நந்தின்
ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
வன்புல நாடன் வயமான் பிட்டன்
ஆரமர் கடக்கும் வேலும், அவன்இறை
மாவள் ஈகைக் கோதையும்
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே!

அருஞ்சொற்பொருள்:-

ஓம்புதல் = தவிர்தல்
கோதை = மாலை
புனைதல் = சூடுதல்
பரியல் = இரங்குதல், வருந்துதல்
பதம் = உணவு
நந்துதல் = கெடுதல்
ஆர் = கூர்மை
ஐவனம் = மலைநெல்
வன்புலம் = வலிய நிலம் (மலை நாடு)
வயமான் = வலிய குதிரை
கோதை = சேரமான் கோதை

இதன் பொருள்:-

ஏற்றுக=====> நாடி

உலையை ஏற்றுக; சோற்றை ஆக்குக; கள்ளையும் நிறைய உண்டாக்குக; அழகாக செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த, பாடுவதில் சிறந்த, விறலியர் மாலைகளைச் சூடுக; அது போன்ற பிற செயல்களையும் செய்க. அடுத்து வரவேண்டிய உணவைப்பற்றி சிறிதும் வருந்த வேண்டாம்.

ஐவனங் காவல்=====> நெடிதே

வலிய குதிரைகளையுடைய பிட்டங்கொற்றன் மலைநாட்டுத் தலைவன். அவன் நாட்டில், மலைநெல்லைக் காப்பவர் காவலுக்காக மூட்டிய தீயின் ஒளி குறைந்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஓளி பொருந்திய அழகிய மணிகள், அடர்ந்த இருளை அகற்றும். அவன் அரிய போரில் வெல்லும் வேலும், அவன் தலைவனாகிய வள்ளல் தன்மை மிகுந்த (அரசன்) கோதையும் அவனோடு மாறுபட்டுப் போர் புரியும் மன்னர்களும் நெடுநாட்கள் வாழ்க.

பாடலின் பின்னணி:-

வடம வண்ணக்கன் தாமோதரனார் ஒரு சமயம் பிட்டங்கொற்றனைப் பாடித் தான் பெற்ற பெருஞ்செல்வத்தை பாணன் ஒருவன் தன் சுற்றத்தாருக்கு உரைக்கும் வகையாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #172 on: August 06, 2013, 12:05:28 PM »


புறநானூறு, 173. (யான் வாழுநாளும் பண்ணன் வாழிய!)
பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய;
பாணர் ! காண்கிவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்

சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்
மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே!

அருஞ்சொற்பொருள்:-

காண்கிவன் = காண்க இவன்
கடும்பு = சுற்றம்
இமிழ்தல் = ஒலித்தல்
புள் = பறவை
தானும் - அசைச் சொல்
எழிலி = மேகம்
வற்புலம் =வன்+புலம் = மேட்டு நிலம்
ஒழுக்கு = வரிசை
ஏய்ப்ப = ஒப்ப
வீறு = பகுப்பு
வீறு வீறு = கூட்டம் கூட்டமாக
காண்டும் = காண்கிறோம்
மற்றும் = மீண்டும்
தெற்று = தெளிவு
அணித்து = அருகில்
சேய்த்து = தொலைவில்

இதன் பொருள்:-

யான்வாழும்=====> ஏய்ப்ப

யான் வாழும் நாளையும் சேர்த்து பண்ணன் வாழ்வானாக. பாணர்களே! இந்தப் பாணனின் சுற்றத்தாரின் துன்பத்தைப் பாருங்கள். புதிது புதிதாகப் பழங்கள் பழுத்திருக்கும் மரங்களில் பறவைகள் உண்ணுவதால் உண்டாகும் ஒலி கேட்கிறோம். காலம் தவறாது மழைபெய்யும் இடத்திலிருக்கும் எறும்புகள் தம் முட்டைகளைத் தூக்கிக்கொண்டு மேட்டு நிலத்திற்கு வரிசையாகச் செல்வதைப் போல்

சோறுடை=====> எமக்கே!

கையில் சோற்றுடன் கூட்டம் கூட்டமாகப் பெரிய சுற்றத்துடன் செல்லும் சிறுவர்களைக் காண்கிறோம். அதைக் கண்ட பிறகு, மீண்டும் மீண்டும் “ பசி என்னும் பிணியைத் தீர்க்கும் மருத்துவனின் (பண்ணனின்) இல்லம் அருகில் உள்ளதோ? தொலைவில் உள்ளதோ? எங்களுக்குக் கூறுங்கள் என்று கேட்கிறோம்

பாடலின் பின்னணி:-

சோழ வேந்தனாகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் சிறுகுடி கிழான் பண்ணனிடம் மிகுந்த அன்பு கொண்டவன். அவன் இயற்றிய இப்பாடல், பண்ணனிடம் பரிசில் பெறச் செல்லும் பாணனின் கூற்று போல் அமைந்துள்ளது. இப்பாடலில், பரிசில் பெறப்போகும் பாணர்கள், சிறுகுடியை அணுகிய பொழுது, பண்ணனிடம் பரிசில் பெற்று வரும் பாணர்கள் சிலரைக் காண்கின்றனர். அவர்கள் பண்ணனை வாழ்த்திக்கொண்டு வருகின்றனர். பரிசில் பெறச் சென்ற பாணர்களில் ஒருவன், “ நான் வாழும் நாளையும் சேர்த்துப் பண்ணன் வாழ்க” என்று வாழ்த்தி, “ பரிசில் பெற்ற பாணர்களே! என்னோடு உள்ள பாணனின் சுற்றம் வருந்துவதைப் பாருங்கள். பசிப்பிணி மருத்துவன் பண்ணனின் இல்லம் அருகில் உள்ளதா, தொலைவில் உள்ளாதா?” என்று வினவுகிறான்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #173 on: August 06, 2013, 12:09:57 PM »
புறநானூறு, 174. (அவலம் தீரத் தோன்றினாய்!)
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
===================================

அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு
அரசுஇழந்து இருந்த அல்லற் காலை

முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு கரைபொருது
இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி
மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்
பொய்யா நாவிற் கபிலன் பாடிய
மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்
செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட

எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!
விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப் பூண்
சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்

ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்
ஆறுகொல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலந் தீர
நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல்!

கல்கண் பொடியக் கானம் வெம்ப
மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக்
கோடை நீடிய பைதறு காலை
இருநிலம் நெளிய ஈண்டி
உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!

அருஞ்சொற்பொருள்:-

அணங்கு = அச்சம்
அவுணர் = அசுரர்
கணம் = கூட்டம்
பருதி = வட்டம்
பருவரல் = துன்பம்
திறல் = வலிமை
அஞ்சனம் = மை
அஞ்சன உருவன் = திருமால்
மல்லல் = வளமை
மை = மேகம்
ஓய்யென = விரைவாக
செரு = போர்
புகல் = விருப்பம்
எள் = இகழ்ச்சி
விறல் = வெற்றி
மருள் = போன்ற
விடர் = மலைப்பிளவு
சுரும்பு = வண்டு
மாதிரம் = திசை
நிரை = படை வகுப்பு, ஒழுங்கு
மல்குதல் = நிறைதல், பெருகுதல்
உணங்கல் = வற்றல்
பைது = பசுமை
உரும் = இடி
உரறு = ஒலி

இதன் பொருள்:-

அணங்குடை=====> காலை

தொலைவில் ஒளியுடன் விளங்கும் சிறப்புடைய ஞாயிற்றைப் பிறர்க்கு அச்சம் தரும் அசுரர்களின் கூட்டம் ஒளித்து வைத்தது. அதனால் சூழ்ந்த இருள், வட்ட வடிவமான இந்த உலகத்தில் வாழும் மக்களின் பார்வையைக் கெடுத்துத் துன்பத்தைக் கொடுத்தது. அத்துன்பம் தீர, மிகுந்த வலிமையும் கரிய உருவமும் உடைய திருமால், கதிரவனைக் கொண்டுவந்து நிறுத்தினான். அதுபோல், ஒரு சமயம் சோழ நாடு தன் அரசனை இழந்து துன்பப்பட்டது. அதைக் கண்ட உன் முன்னோர்களுள் ஒருவன்

முரசுஎழுந்து=====> கண்ட

முரசு முழங்கும் முற்றத்தோடு, கரையை மோதி உடைத்து ஒலிக்கும் நீர் மிகுந்த காவிரி ஓடும் வளம் மிகுந்த நல்ல (சோழ)நாட்டின் துன்பதைத் தீர்க்க நினைத்து, பொய்யாத நாவுடைய கபிலரால் பாடப்பட்ட , மேகங்கள் தவழும் பெரிய மலையிடத்து விரைந்து, போரை விரும்பி வந்த பகைவர்கள் புறங்காட்டி ஓடும்

எள்ளறு=====> நும்முன்

மிகுந்த சிறப்புடைய முள்ளூர் மலையுச்சியில், காண்பதற்கரிய இடத்தில் இருந்த வலிமையுடைய சோழனின் திங்கள் போன்ற வெண்குடையைத் தோற்றுவித்து அக்குடையை புதிதாக நிலை நிறுத்தினான். அவன் புகழ் மேம்படட்டும். மலைக்குகையில் வாழும் புலியின் சின்னம் பொறித்த கோட்டையையும், ஒளிரும் அணிகலன்களையும், வண்டுகள் மொய்க்கும் மாலையையும் பெரும்புகழையும் உடைய நின் முன்னோனாகிய மலையமான் திருமுடிக்காரி

ஈண்டுச்செய்=====> அண்ணல்!

இவ்வுலகில் செய்த நல்வினைப் பயனை நுகர்வதற்காக வானவர் உலகம் அடைந்தனன். அவனுக்குப் பிறகு, எல்லாத் திசைகளிலும் கவலையுற்றவர்களின் துயரம் நீங்க நீ தோன்றினாய்.

கல்கண்=====>பொழிந் தாங்கே!

வரிசையாக மாலைகள் அணிந்த தலைவனே! நீ தோன்றியது, மலைகள் பொடிபடவும், காடுகள் தீப்பற்றவும், மிகுந்த நீர் வளமுடைய குளங்கள் வற்றவும், கோடைக்காலம் நீண்டு பசுமையற்ற காலத்துப் பெரிய நிலம் தாங்காமல் வாடிய பொழுது, மேகங்கள் திரண்டு இடியுடன் மழைபொழிந்தது போல் இருந்தது.

பாடலின் பின்னணி:-

மலையமான் திருமுடிக்காரி இறந்த பிறகு, அவன் குடி மக்கள் வருந்திய பொழுது, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் பதவி ஏற்றான். அச்சமயம், மாறோக்கத்து நப்பசலையார் அவனைக் காண வந்தார். அவன் காரிக்குப் பிறகு அரசனாகி, நல்லாட்சி புரிவதை இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #174 on: August 10, 2013, 01:55:49 PM »
புறநானூறு, 175. (என் நெஞ்சில் நினைக் காண்பார்!)
பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார்.
பாடப்பட்டோன்: ஆதனுங்கன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================


எந்தை வாழி ஆத னுங்கஎன்
நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே;
நின்யான் மறப்பின் மறக்குங் காலை
என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
என்யான் மறப்பின் மறக்குவென் வென்வேல்

விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே

அருஞ்சொற்பொருள்:-

எந்தை = எம்+தந்தை
மோரியர் = மௌரியர்
திண் = வலி
கதிர் = ஆரக்கால்
திகிரி = ஆட்சிச் சக்கரம்
திரிதர = இயங்குவதற்கு
குறைத்தல் = சுருங்குதல்
அறைவாய் = மலையை வெட்டி எடுக்கப்பட்ட இடம்
இடைகழி = வாயிலைச் சேர்ந்த உள்நடை (இரேழி)
மலர்தல் = விரிதல்
வாய் = இடம்
மண்டிலம் = வட்டம்
புரவு = பாதுகாப்பு
எதிர்ந்து = ஏற்றுக்கொண்டு

இதன் பொருள்:-

என் தந்தை போன்ற ஆதனுங்கனே! நீ வாழ்க. வெல்லும் வேலையும் விண்ணைத் தொடும் உயர்ந்த குடையையும், கொடி பறக்கும் தேரையும் உடைய மௌரியரின் வலிமை மிகுந்த ஆணைச் சக்கரம் இயங்குதற்கு அறுக்கப்பட்ட இடைகழி முடிவில் நிறுத்தப்பட்ட பரந்த கதிர் மண்டிலம் போல் நாளும் பலரையும் பாதுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அறவழியில் நிற்கும் உன்னை நான் மறந்தால், அப்பொழுது, என் உயிர் என் உடலிலிருந்து நீங்கும்; மற்றும் என்னையே நான் மறப்பேன். என் நெஞ்சத்தைத் திறப்போர் அங்கே உன்னைக் காண்பர்.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில் ஆத்திரையனார் தனக்கு ஆதனுங்கன் மீதுள்ள அன்பைக் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

மௌரிய வம்சத்தைச் சார்ந்த பிந்துசாரா ( அசோகனின் தந்தை, சந்திரகுப்தனின் மகன்) என்ற மன்னன் கி. மு. 288 -இல் தமிழ் நாட்டின் மீது படையெடுத்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இப்பாடலில், மௌரியர்கள் தமிழ் நாட்டின் மீது படையெடுத்த பொழுது மலையை வெட்டி வழி அமைத்ததாகக் குறிப்பிடப்படுவது பிந்துசாரனின் படையெடுப்பைப் பற்றிய செய்தியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மற்றும், தமிழ் மன்னர்கள் ஒருங்கிணைந்து பிந்துசாரனின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தினர் என்றும் வரலாறு கூறுகிறது. இப்பாடலில் பிந்துசாரனின் படையெடுப்பைக் கூறுவதை ஆதாரமாகக் கொண்டு ஆதனுங்கன் பிந்துசாரனின் காலத்தில் வாழ்ந்தவன் என்று கூற முடியாது. இப்பாடலில் குறிப்படப்பட்டிருப்பது ஒரு வரலாற்றுச் செய்தி என்றுதான் முடிவு செய்ய வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #175 on: August 10, 2013, 02:00:12 PM »


புறநானூறு, 176. (காணா வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம்)
பாடியவர்: புறத்திணை நன்னாகனார்.
பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியக் கோடன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================


ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்
பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்

இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
உடையை வாழியெற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக்
காணாது கழிந்த வைகல் காணா
வழிநாட்கு இரங்குமென் நெஞ்சமவன்
கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே

அருஞ்சொற்பொருள்:-

ஓரை = மகளிர் விளைட்டுகளில் ஒன்று
ஆயம் = கூட்டம்
கேழல் = பன்றி
இரு = கரிய
கிளைப்பு = கிண்டுகை
புனல் = நீர்
அம் - இடைச் சொல்
புதவு = மதகு
மலைத்தல் = சூடுதல்
பால் = ஊழ்
வைகல் = நாள்
கழி = மிகுதி

இதன் பொருள்:-

ஓரை=====> சீறியாழ்

ஒளிபொருந்திய வளையல்களை அணிந்து, ஓரை விளையாடும் மகளிர், பன்றிகள் கிளரிய கரிய சேற்றில், ஆமைகள் இட்ட புலால் மணக்கும் முட்டைகளையும், தேன் மணக்கும் ஆம்பல் கிழங்குகளையும் கிண்டி எடுப்பர். இழும் என்ற ஒலியுடன் மதகுகளின் வழியே நீரோடும் பெரிய மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவன் நல்லியக் கோடன். அவன் சிறிய யாழையுடைய

இல்லோர்=====> நினைந்தே

வறியவர்கள் பாடும் புகழ்மாலைகளை அணிந்தவன். அத்தகைய நல்லியக் கோடனைத் துணையாக நான் பெற்றதற்குக் காரணம் என்னைச் சார்ந்த நல்வினைதான். வாழ்க என் நல்வினை! பாரியின் பறம்பு நாட்டில் குளிர்ந்த நீர்ச் சுனைகளில் தெளிந்த நீர் எப்பொழுதும் அருகேயே இருந்ததால் அந்நாட்டு மக்கள் அதைப் பெரிதாகக் கருதவில்லை. அதுபோல், அருகிலேயே இருந்தும், இதுவரை பல நாட்கள் நான் நல்லியக் கோடனைக் காணாது கழித்தேன். ஆனால் நல்லியக் கோடனின் மிகுந்த நற்குணங்களைக் காணும்பொழுது, இனிவரும் நாட்களில் அவனைக் காணாத நாட்கள் இருக்குமோ என்று நினைத்து என் நெஞ்சம் வருந்துகிறது.

பாடலின் பின்னணி:-

வேங்கடத்தின் அருகில் இருந்த கரும்பனூர் சென்று, கரும்பனூர் கிழானைப் பாடி, அவனிடம் மிகுந்த அளவில் பரிசுகள் பெற்றுப் பல நாட்கள் யாரிடமும் இரவாது தம் இல்லத்தே நன்னாகனார் இனிது வாழ்ந்துவந்தார். அவர், தற்பொழுது தன்னிடம் வந்ததைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த நல்லியக் கோடன் அவருக்குப் பெருமளவில் பரிசுகள் அளித்து அவரைச் சிறப்பித்தான். அதனால் பெரு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த நன்னாகனார், இப்பாடலில் நல்லியக் கோடனைப் புகழ்ந்து பாடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #176 on: August 10, 2013, 02:03:21 PM »


புறநானூறு, 177. (யானையும் பனங்குடையும்!)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================


ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்
வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்
பாடிப் பெற்ற பொன்னணி யானை
தமர்எனின் யாவரும் புகுப; அமர்எனின்
திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்
கண்மாறு நீட்ட நணிநணி இருந்த

குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப்
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்
மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்
கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்
பெரும்பெயர் ஆதி பிணங்கரில் குடநாட்டு

எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே

அருஞ்சொற்பொருள்:-

நகர் = அரண்மனை
வெளிறு = நிறக்கேடு
திரங்குதல் = உலர்தல்
புழை = சிறு வாயில்
நணிநணி = பக்கம் பக்கமாக
குறும்பு = அரணிருக்கை
வைகுதல் = தங்குதல்
களா = ஒரு வகைப் பழம்
துடரி = ஒரு வகைப் பழம்
முனை = வெறுப்பு
மட்டு =எல்லை
அறல் =அரித்தோடுகை
எக்கர் = மணற்குன்று
பிணக்கு = நெருக்கம்
அரில் = மூங்கில்
எயினர் = வேடுவர்
எய்ம்மான் = முள்ளம்பன்றி
எறிதல் = அறுத்தல்
பைஞ்ஞிணம் = வளமான தசை
அமலை = திரளை (உருண்டை)
சொரிதல் = பொழிதல், உதிர்தல்
பனங்குடை = பனை இலைகளால் செய்யப்பட்ட கிண்ணம் போன்ற பாத்திரம் (பனங்கூடை)
மிசையும் = உண்ணும்
சாலுதல் = ஒப்பாதல்

இதன் பொருள்:-

ஒளிறுவாள்=====> இருந்த

ஒளிபொருந்திய வாளையுடைய வேந்தர்கள் வாழும் ஒளியுடன் விளங்கும் பெரிய அரண்மனைகளுக்குச் சென்று, கண் ஒளி மழுங்குமாறு பலநாட்கள் வாடிக் காத்திருந்து பொன்னாலான அணிகலன்களை அணிந்த யானைகளைப் பரிசாகப் பெறலாம். அது வேந்தர்களிடம் பரிசு பெறும் முறை. ஆனால் மல்லி கிழான் காரியாதியிடம் பரிசு பெறுவாது அவ்வாறல்ல. மல்லி கிழான் காரியாதியின் அரண்மனைக்குள் அவனுக்கு வேண்டியவர்கள் எளிதில் புகலாம். ஆனால், போர் எனில், அந்த அரண்மனையில், திங்களின் கதிர்கள்கூட நுழைய முடியாதவாறு பல பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கே, கள்ளை ஒருவருக்கொருவர் மாறி மாறிக் கொடுக்கும்

குறும்பல்=====> குடநாட்டு

வகையில் நெருங்கிய பாதுகாப்பான பல இடங்கள் உள்ளன. அங்கு, கள்ளை நிரம்ப உண்டு, பிறகு, புளிச்சுவையை விரும்பிய, சிவந்த கண்களை உடைய ஆடவர் இனிய புளிப்புடைய களாப் பழங்களையும் துடரிப் பழங்களையும் உண்பர். அப்பழங்களைத் தின்று சலிப்பு ஏற்பட்டால், காட்டாற்றின் கரையில் மரங்கள் உள்ள மணற்குன்றில் ஏறிக் கரிய நாவல் பழங்களைப் பறித்து உண்பர். பெரும்புகழ் வாய்ந்த காரியாதியின் மூங்கில் காடுகள் செறிந்த குடநாட்டில்,

எயினர்=====> லாதே

வேடர்கள் வேட்டையாடிக் கொண்டுவந்த முள்ளம்பன்றியின் கொழுமையான தசைத்துண்டுகளுடன் வெண் சோற்று உருண்டைகளை விருந்தாக வருபவர்க்கெல்லாம் காரியாதி கொடுப்பான். அவர்கள் அதைப் பெரிய பனங்குடையில் வாங்கி உண்பர். இவ்வாறு, மல்லி கிழான் காரியாதியின் அரண்மனையில், பொழுது புலரும் விடியற்காலை நேரத்தில் நடைபெறும் விருந்தின் சிறப்புக்கு வேந்தர்களின் யானைக்கொடை ஒப்பாகாது.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம் ஆவூர் மூலங்கிழார், மல்லி கிழான் காரியாதியைக் காணச் சென்றார். மல்லி கிழான் தந்த கள்ளை, அவ்வூரில் பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் குடித்து, களா, துடரி போன்ற பழங்களை உண்பதையும், பின்னர் காட்டாற்று மணற்குன்றின் மீது ஏறி நின்று நாவல் பழங்களைக் கொய்து தின்பதையும், பன்றிக் கறி உண்பதையும் கண்டார். அக்காட்சிகளைக் கண்ட ஆவூர் மூலங்கிழார், காரியாதி சோற்றையும் கள்ளையும் பலருக்கும் அளிப்பது மற்ற வேந்தர்கள் களிறுகளைப் பரிசாக அளிப்பதைவிட மிகச் சிறந்தது என்று இப்பாடலில் காரியாதியின் விருந்தோம்பலையும் வள்ளல் தன்மையையும் புகழ்ந்து பாடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #177 on: August 10, 2013, 02:05:35 PM »
புறநானூறு, 178. (இன்சாயலன் ஏமமாவான்!)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன்.
திணை: வாகை.
துறை : வல்லாண் முல்லை.
===================================


கந்துமுனிந்து உயிர்க்கும் யானையொடு பணைமுனிந்து
கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று
உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்

ஈண்டோ இன்சா யலனே ; வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
அஞ்சி நீங்கும் காலை
ஏம மாகத் தான்முந் துறுமே

அருஞ்சொற்பொருள்:-

கந்து = யானை கட்டும் தூண்; முனிதல் = வெறுத்தல்; உயிர்த்தல் = மூச்சு விடுதல்; பணை = குதிரை கட்டுமிடம். 2. காலியல் = கால்+இயல் = காற்றின் இயல்பு; புரவி = குதிரை; ஆலும் = ஒலிக்கும். 4. சூளுற்று = உறுதி மொழி கூறி. 6. ஈண்டு = இவ்விடத்தில். 7. ஞாட்பு = போர். 9. நெடுமொழி = வஞ்சினம்; சிறுபேராளர் = வீரம் மேம்பட்ட வார்த்தைகளைப் போரின்கண் மறந்த ஆண்மையற்றவர். 11. ஏமம் = பாதுகாப்பு

இதன் பொருள்:-

கந்துமுனிந்து=====> சாத்தன்

தூணில் கட்டப்பட்ட யானைகள் வெறுப்போடு பெருமூச்சு விடுகின்றன; அதுமட்டுமல்லாமல், காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள், கட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஆரவாரிக்கின்றன; அவ்விடத்தில் மணல் மிகுந்த முற்றத்தில் நுழைந்த சான்றோர்கள் தாம் உண்ணமாட்டோம் என்று சொன்னாலும் அவர்களை வற்புறுத்தி உண்ணுமாறு பெரும்புகழ் வாய்ந்த பாண்டியன் கீரஞ்சாத்தன் வேண்டிக்கொள்வான்.

ஈண்டோ=====> முந்துறுமே

அவன் சான்றோர்களிடத்து மிகவும் இனிமையாகப் பழகுபவன். ஆனால், அச்சம் தரும் படைக்கலங்களைப் பகைவர்கள் எறியும் போர்க்களத்தில், பாண்டியன் கீரஞ்சாத்தனுடைய வீரர்கள், கள்ளின் மயக்கத்தால், ஊர் மக்களிடம் அவர்கள் கூறிய வீர வஞ்சின மொழிகளை மறந்து வீரமற்றவர்களாகப் புறங்காட்டி ஓடினால், அவன் அவர்களுக்குப் பாதுகாப்பாக முன் வந்து நிற்பான்.

பாடலின் பின்னணி:-

பாண்டியன் கீரஞ்சாத்தனை ஆவூர் மூலங்கிழார் காணச் சென்றார். அவன் சான்றோர்பால் காட்டிய அன்பு அவரை மிகவும் கவர்ந்தது. இப்பாடலில், பாண்டியன் கீரஞ்சாத்தன் சான்றோரிடத்துக் காட்டும் அன்பையும் அவன் போரில் காட்டும் வீரத்தையும் ஆவூர் மூலங்கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #178 on: August 10, 2013, 02:10:44 PM »
புறநானூறு, 179. (பருந்தின் பசி தீர்ப்பான்!)
பாடியவர்: வடநெடுந்தத்தனார்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்.
திணை: வாகை.
துறை : வல்லாண் முல்லை.
===================================


ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்
படை வேண்டுவழி வாள்உதவியும்

வினை வேண்டுவழி அறிவுஉதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்
தோலா நல்லிசை நாலை கிழவன்
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர் பலரே

அருஞ்சொற்பொருள்:-

ஞாலம் = உலகம்
மீமிசை = மேல்
வள்ளியோர் = கொடையாளர்
ஏலல் = பிச்சையிடல்
மண்டை = இரப்போர் கலம்
மலைத்தல் = போரிடுதல்
விசி = வார், கட்டு
பிணி = கட்டு
திரு = திருமகள்
வீழ்தல் = விரும்புதல்
மறவன் = வீரன்
வினை = தந்திரம்
தோலா = தளராத

இதன் பொருள்:-

ஞாலம்=====> வாள்உதவியும்

”உலகில் வாழ்ந்த வள்ளல்கள் எல்லாம் இறந்தனர்; பிறரிடம் எதுவும் பெற முடியாத காரணத்தால் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் என் இரவல் கலத்தை நிரப்புபவர் யார்?”, என்று கேட்டேன். ”பாண்டியன், தனது பகைவர்களின் வலிமையாகக் கட்டப்பட்ட முரசோடு அவர்களது நாட்டையும் வென்று, திருமகள் விரும்பும், அழகிய அணிகலன்களை அணிந்தவன். அத்தகைய பாண்டியனின் வீரனாகிய நாலை கிழவன் நாகன், பாண்டியனுக்குப் படை வேண்டிய பொழுது வாட்படையையும்,

வினை=====> பலரே

அவன் அறிவுரை கேட்ட பொழுது அறிவுரைகளையும் வழங்குபவன். அவன், பாண்டியன் வேண்டுவன எல்லாம் வேண்டியவாறு கொடுத்து உதவுபவன். நுகத்தடியில் பூட்டப்பட்ட வண்டியை நேராக இழுத்துச் செல்லும் தளராத காளை போன்ற ஆண்மையும், சளைக்காத உள்ளமும், நல்ல புகழும் உடைய நாலை கிழவன் நாகன் பருந்துகளின் பசியைத் தீர்க்கும் நல்ல வேலை உடையவன்” என்று பலரும் கூறினர்.

பாடலின் பின்னணி:-

நாலை கிழாவன் நாகனைப் பற்றிப் பலரும் கூறிய செய்திகளை இப்பாடலில் கூறி அவனை வட நெடுந்தத்தனார் புகழ்ந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பருந்துகளின் பசியைத் தீர்க்கும் நல்ல வேலை உடையவன் என்பது அவன் போரில் பகைவரைக் கொல்லும் ஆற்றல் உடையவன் என்பதைக் குறிக்கிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #179 on: August 27, 2013, 06:02:57 PM »
புறநானூறு, 180. (நீயும் வம்மோ! முதுவாய் இரவல!)
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்.
திணை: வாகை.
துறை : வல்லாண் முல்லை.
===================================

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;
இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண் நோய்தீர்ந்து
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து

ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ! முதுவாய் இரவல!
யாம்தன் இரக்கும் காலைத் தான்எம்
உண்ணா மருங்குல் காட்டித் தன்ஊர்க்
கருங்கைக் கொல்லனை இரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே

அருஞ்சொற்பொருள்:-

நிரப்பு = வறுமை (இன்மை)
இறை = அரசன்
விழுமம் = துன்பம்
மயங்கி = கலந்து
வடு = குற்றம்
வடிவு = அழகு
மருங்குல் = வயிறு

இதன் பொருள்:-

நிரப்பாது=====> கொடையெதிர்ந்து

முதிய இரவலனே! ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் இரப்பவர்களின் வறுமையைத் தீர்க்கும் அளவிற்குக் கொடுக்கும் செல்வம் உடையவன் அல்லன்; ஆனாலும், இல்லையென்று மறுத்துக் கூறும் சிறுமை இல்லாதவன். அவன், தன் அரசனுக்கு வந்த துன்பங்களைத் தான் தாங்கிக்கொண்டு, போர்க்களத்தில் படைக்கருவிகளால் உண்டாகும் விழுப்புண்களை ஏற்றுக் கொண்டவன். மருந்துக்காக பல இடங்களில் வெட்டப்பட்ட அடிமரம்போல் உடலெல்லாம் வடுக்கள் நிறைந்திருந்தாலும் அவன் குற்றமற்ற அழகிய உடலுடையவன்; இரவலரை எதிர்பார்த்திருப்பவன்

ஈர்ந்தை=====> எனவே

ஈர்ந்தூர் என்னும் ஊரைச் சார்ந்தவன்; பாணர்களின் பசிக்குப் பகைவன். உன்னுடைய வறுமை தீர வேண்டுமானால், நீ என்னோடு வருவாயாக. நாம் இரக்கும் பொழுது, நம்முடைய பசியால் வாடும் வயிற்றைத் தன் ஊரில் உள்ள வலிய கைகளுடைய கொல்லனிடம் காட்டிச் சிறந்த இலைவடிவில் அமைந்த நெடிய வேலை வடிப்பாயாக என்று கூறுவான்.

பாடலின் பின்னணி:-

இப்பாடல், ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் பரிசில் பெற்ற பாணன் ஒருவன் பசியால் வாடும் பாணன் ஒருவனை ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

கொல்லனிடம் வேல் வடிப்பாயாக என்று கூறுவது, பகைவர்களோடு போருக்குச் சென்று, அவர்களை வென்று, பொருள் கொண்டுவந்து இரப்போர்க்கு அளிப்பதற்காக என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது.