Author Topic: ~ புறநானூறு ~  (Read 108818 times)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #195 on: October 02, 2013, 02:30:45 PM »


புறநானூறு, 196. (குறுமகள் உள்ளிச் செல்வல்)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண் திணை.
துறை : பரிசில் கடாநிலை.
=============================

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே

இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை;
அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்

வெயிலென முனியேன்; பனியென மடியேன்;
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை; சிறக்க நின்நாளே

அருஞ்சொற்பொருள்:-

ஒல்லுதல் = இயலுதல்
ஆள்வினை = முயற்சி
மருங்கு = பக்கம், கண்ணோட்டம்
கேண்மை = நட்பு, இயல்பு
வாயில் = வழி
அத்தை - அசை
முனிதல் = வெறுத்தல்
மடி = சோம்பல்
குயிறல் = செய்தல்
நல்கூர்தல் = வறுமைப்படுதல்
முனிவு = வெறுப்பு

இதன் பொருள்:-

ஒல்லுவது=====> வல்லே

தம்மால் கொடுக்க முடிந்ததைப் பிறர்க்கு அளித்தலும், தம்மால் கொடுக்க முடியாததைக் கொடுக்க மறுத்தலும் ஆகிய இரண்டும் முயற்சியும் கண்ணோட்டமும் உடையவர்களின் இயல்பு. தம்மால் கொடுக்க முடியாததை கொடுக்க முடியும் என்று கூறுவதும், கொடுக்க முடிந்ததை கொடுக்காமல் மறுப்பதும் ஆகிய இரண்டும்

இரப்போர்=====> யானும்

இரவலரை விரைவில் வருத்துவதோடு மட்டுமல்லாமல் புரவலர்களின் புகழையும் குறைக்கும் வழியாகும். இப்பொழுது என்னிடம் நீ நடந்துகொண்ட விதமும் அதுவே. இது போன்ற செயல்களை இதுவரை நான் கண்டதில்லை; இப்பொழுதுதான் கண்டேன். உன் புதல்வர்கள் நோயில்லாமல் வாழ்வராக! நான்

வெயிலென=====> நின்நாளே

வெயிலின் வெம்மையை வெறுக்காமலும், பனியின் குளிரைக் கண்டு சோம்பாமலும், கல்போன்று தங்கியிருக்கும் என் வறுமையுடன், காற்றைத் தடுக்கும் சுவர்கள் மட்டுமே உள்ள என் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கே, நாணத்தைத் தவிர வேறு அணிகலன்கள் அணியாத, கற்பிற் சிறந்தவளும் ஒளிபொருந்திய நெற்றியை உடைவளுமாகிய மெல்லியல்புகளுடைய என் மனைவியை நாடிச் செல்கிறேன். உன் வாழ்நாள்கள் பெருகட்டும்!

சிறப்புக் குறிப்பு:-

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனின் செயலால் ஆவூர் மூலங் கிழார் மிகவும் மனவருத்தமும் கோபமும் கொண்டார். அவன் தீய செயலால் அவன் புதல்வர்கள் நோயுடன் வருந்துவதையும் அல்லது அவன் வாழ்நாள்கள் குறைவதையும் அவர் விரும்பினாலும் அதை நேரிடையாகக் கூறாது எதிர்மறைக் குறிப்பாகக் கூறுகிறார். இவ்வாறு எதிர்மறைக் குறிப்பாக மொழிவதைத் தொல்காப்பியம்,

எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட் புறத்ததுவே குறிப்புமொழி யென்ப” (தொல்காப்பியம் - செய்யுளியல் 177)

என்று கூறுகிறது. இப்பாடலில் ஆவூர் மூலங் கிழாரின் கூற்று குறிப்புமொழிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

”வளிமறை” என்பது ஆவூர் மூலங்கிழாரின் வீட்டில் வெயில், மழை போன்றவற்றிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான கூரை இல்லை என்பதைக் குறிக்கிறது.

“நாணலது” என்பது, மிகுந்த வறுமையின் காரணத்தால், ஆவூர் கிழாரின் மனைவி, அணிகலன்கள் எதுவும் இல்லாமல் நாணம் ஒன்றையே தன் அணிகலனாகக் கொண்டவள் என்பதைக் குறிக்கிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #196 on: October 02, 2013, 02:32:55 PM »
புறநானூறு, 197. (நல்குரவு உள்ளுதும்)
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்.
திணை: பாடாண் திணை.
துறை : பரிசில் கடாநிலை.
=============================

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ
உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு

செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ
மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே
இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த

குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியடு பெறூஉம்
சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னாரே;
மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்

உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும்; பெரும யாம் உவந்துநனி பெரிதே

அருஞ்சொற்பொருள்:-

வளி = காற்று
வாவுதல் = தாவுதல்
இவுளி = குதிரை
நுடங்குதல் = ஆடல், துவளல், முடங்குதல், தள்ளாடுதல், வளைதல்
எனா - இடைச்சொல்
உரும் = இடி
உட்கு = அச்சம்
செரு = போர்
படப்பை = தோட்டம்
மறி = ஆட்டுக்குட்டி
அடகு = கீரை
முஞ்ஞை = முன்னை
சொன்றி = சோறு
பாடறிந்து ஒழுகும் பண்பு = பண்பாடு
எவ்வம் = துன்பம்
நல்குரவு = வறுமை
நனி = மிகவும்

இதன் பொருள்:-

வளிநட=====> முரசமொடு

காற்றைப்போல் தாவிச்செல்லும் குதிரைகளும், கொடிகள் அசைந்தாடும் தேர்களும், கடல்போன்ற படையும், மலையையும் எதிர்த்துப் போர் புரியவல்ல களிறுகளும் உடையவர்கள் என்பதற்காகவோ, இடிபோல் ஒலிக்கும் அச்சம்தரும் முரசோடு

செருமேம்=====> ஒழிந்த

போரில் வெற்றி பெற்றவர்கள் என்பதற்காகவோ, பெருநிலமாளும், ஒளிபொருந்திய அணிகலன்கள் அணிந்த அரசர்களின் வெண்கொற்றக்குடையுடன் விளங்கும் செல்வத்தை நாங்கள் மதிப்பது இல்லை. முள்வேலியுடைய தோட்டத்தில் ஆடு மேய்ந்தது போக

குறுநறு=====> பெரிதே

மிஞ்சியுள்ள சிறிய இலையுள்ள, மணம் நிறைந்த முன்னைக் கீரையை புன்செய் நிலத்தில் விளைந்த வரகுச் சோற்றுடன் உண்ணும் மக்களுடைய சிறிய ஊர்க்கு அரசனாக இருந்தாலும் எம்மிடத்துப் பழகும் முறை அறிந்து நடக்கும் பண்பு உடையவர்களைத்தான் நாங்கள் மதிப்போம். மிகப்பெரிய துன்பமுற்றாலும், எங்களிடம் அன்பில்லாதவர்களின் செல்வத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெரும! நல்ல அறிவுடையவர்களின் வறுமையை மிகவும் மகிழ்வோடு பெருமையாகக் கருதுவோம்.

பாடலின் பின்னணி:-

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைக் காணச் சென்றார். அவன் இப்புலவர்க்குப் பரிசளிப்பதற்குக் கால தாமதமாக்கினான். அதனால் கோபமடைந்த கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், “அரசே, அரசர்களிடம் தேர்களும் படைகளும் மிகுதியாக இருப்பதாலோ, பல போர்களில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதற்காகவோ நாங்கள் அவர்களை வியந்து பாராட்டுவதில்லை. சிறிய ஊரின் மன்னர்களாக இருந்தாலும் எங்கள் பெருமையை உணர்ந்தவர்களைத் தான் நாங்கள் பாராட்டுவோம். எத்துணைத் துன்பம் வந்தாலும் உண்மை உணர்வும் நல்லறிவும் இல்லாதவர்களின் செல்வத்தை விரும்பமாட்டோம். நல்லறிவு உடையவர்கள் வறுமையில் இருந்தாலும் அவர்களைப் பெரிதும் பாராட்டுவோம்” என்று இப்பாடலில் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. (குறள் - 657)
என்ற குறளில், பழியை மேற்கொண்டு செய்த செயல்களால் பெற்ற செல்வத்தைவிட, சான்றோர்களின் மிகுந்த வறுமையே சிறந்தது என்று திருவள்ளுவர் கூறுவது இப்பாடலில் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் கூறும் கருத்தோடு ஒத்திருப்பதைக் காண்க.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #197 on: October 02, 2013, 02:34:34 PM »
புறநானூறு, 198. (மறவாது ஈமே)
பாடியவர்: வடமவண்ணக்கன் பேரி சாத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண் திணை.
துறை : பரிசில் கடாநிலை.
=============================

அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்
கடவுள் சான்ற கற்பின் சேயிழை
மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
கிண்கிணிப் புதல்வர் பொலிகஎன்று ஏத்தித்

திண்தேர் அண்ணல்! நிற்பா ராட்டிக்
காதல் பெருமையின் கனவினும் அரற்றும்என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்
வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,

விடுத்தனென்; வாழ்க நின் கண்ணி! தொடுத்த
தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்
பணித்துக்கூட் டுண்ணும் தணிப்பருங் கடுந்திறல்
நின்னோர் அன்னநின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அருங்கலம் தந்துநும்

பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்க இவர் பெருங்கண் ணோட்டம்;
யாண்டும் நாளும் பெருகி ஈண்டுதிரைப்
பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்
நீண்டுஉயர் வானத்து உறையினும் நன்றும்

இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை! யானும்
கேளில் சேஎய் நாட்டின்எந் நாளும்
துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கிநின்

அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே

அருஞ்சொற்பொருள்:-

வரை = மலை
ஆரம் = மாலை (முத்து மாலை)
மணி = பவழ மணி
கிண்கிணி = காலணி
அரற்றுதல் = கதறுதல், அழுதல்
ஆல் = ஆல்மரம்
வரைப்பு = எல்லை
கொண்டி = கொள்ளை, பிறர் பொருள் கொள்ளுதல்
நெடுநகர் = பெரிய அரண்மணை

இதன் பொருள்:-

அருவி=====> ஏத்தி

அருவி வீழும் பெரிய மலைபோல் ஆரத்தோடு விளங்கும் மார்பையுடையவனே! கடவுள் தன்மை அமைந்த கற்புடைய உன் மனைவி உன் மீது குறையாத அன்புடையவள். அவள் பெற்ற உன் புதல்வர்கள் சிறப்புடன் வாழ்க என வாழ்த்துகிறேன்.

திண்தேர்=====> ஆதலின்

வலிய தேரையுடைய தலைவ! உன்னைப் பாராட்டுகிறேன். பரிசில் மீது மிகுந்த விருப்பம் உள்ளதால், கனவிலும் உன் புகழையே கூறிக்கொண்டிருக்கிறேன். வேலையுடய வேந்தே! அப்பரிசிலின் மீது எனக்குள்ள விருப்பத்தால் என் நெஞ்சம் இன்புற்று மகிழுமாறு, ஆலமரத்தில் அமர்ந்த கடவுள் போன்ற உன் பெருஞ்செல்வத்தைக் கண்டேன். ஆதலால்,

விடுத்தனென்=====> தந்துநும்

நான் விடைபெறுகிறேன். உன் தலையில் அணிந்துள்ள மாலை வாழ்க! நீ தமிழகம் முழுவதும் கொள்ளைகொண்டு உன் பகைவரை வென்று அவர் பொருள்களைக் கொள்ளை கொள்ளும் மிக்க வலிமையையுடையவன். உன் புதல்வரும் உன்னைப் போன்ற மிக்க வலிமை உடையவர்கள்.எந்நாளும் பகைவர்களை அழித்து அவர்களுடைய அரிய அணிகலன்களைக் கொண்டுவந்து

பொன்னுடை=====> நன்றும்

உன்னுடைய பொன்னாலான பொருள்கள் நிறைந்த பெரிய அரண்மனையில் உன் முன்னோர்கள் வைத்தார்கள். அந்த முன்னோர்களைப் போலவே உன் புதல்வரின் கருணை நிரம்பிய உள்ளமும் உள்ளது. (முன்னோர்க்கும் கண்ணோட்டம் இல்லை; உன் புதல்வருக்கும் கண்ணோட்டம் இல்லை). எப்பொழுதும் அலையுடன் கூடிய கடல் நீரினும், அக்கடல் மணலினும், மழைத்துளிகளினும் அதிக நாட்கள்

இவர்பெறும்=====> மறவா தீமே

உன் புதல்வரின் பிள்ளைகளோடும் நீ விரும்பிய செல்வத்தோடும் வாழ்க! பெருந்தகையே! நான் உறவினர் இல்லாத தொலைவில் உள்ள ஊரில் மழைத்துளிக்கு ஏங்கி இருக்கும் வானம்பாடிப் பறவையைப் போல் உனது பரிசிலை விரும்பி உன் நிழலில் வாழ்ந்து பழகிய அடியேனாகவே வாழ்வேன். விரைவாகச் செல்லும் இயல்புடைய குதிரைகளையுடைய பாண்டியனே! நீ செய்த செயலை மறவாதே!

பாடலின் பின்னணி:-

ஒருசமயம், வடமவண்ணக்கன் பேரி சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனிடம் பரிசில் பெறலாம் என்ற எண்ணத்தோடு அவனைக் காணச் சென்றார். அவன் பரிசில் அளிக்காமல் காலத்தைப் போக்கினான். அதனால் ஏமாற்றமடைந்த வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் அவனை வாழ்த்தி விடைபெறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பாண்டியன் செய்த தீய செயலால் அவனுக்குத் தீங்கு வரும் என்று உணர்ந்த பேரி சாத்தனார், அவனுக்கு அத்தகைய தீங்குகள் வராமல் இருக்க வேண்டுமென்று எண்ணி அவனை வாழ்த்தி விடைபெறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #198 on: October 02, 2013, 02:36:42 PM »
புறநானூறு, 199. (கலிகொள் புள்ளினன்)
பாடியவர்: பெரும்பதுமனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பாடாண் திணை.
துறை : பரிசில் கடாநிலை.
=============================

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும்அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே

அருஞ்சொற்பொருள்:-

தடவு = பெரிய
சினை = மரக்கொம்பு
நெருநல் = நேற்று
ஆனா = அமையாது
கலி = ஒலி
வாழி, ஓ - அசைச் சொற்கள்
புரவு = பாதுகாப்பு
இன்மை = வறுமை

இதன் பொருள்:-

கடவுள் உறையும் ஆலமரத்தின் பெரிய கிளைகளில் இருந்த பழங்களை நேற்று உண்டோம் என்று நினைத்து ஆரவாரமாக ஒலிக்கும் பறவைகள் அம்மரத்தைவிட்டு விலகுவதில்லை. இரவலர்களும் அப்பறவைகள் போன்றவர்கள்தான். இரவலர்களை எதிர்பார்த்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் புரவலர்களின் செல்வம்தான் இரவலர்களின் செல்வம். புரவலர்கள் வறுமையுற்றால் இரவலர்களுக்கும் வறுமைதான்.

சிறப்புக் குறிப்பு:-

பறவைகள் ஆலமரத்தில் உள்ள பழங்களைத் தின்று, அப்பழங்களில் உள்ள விதைகளைத் தம் எச்சத்தின் மூலம் வெளிப்படுத்திப் பல்வேறு இடங்களில் புதிய ஆலமரங்கள் முளைத்துத் தழைக்க வழி செய்கின்றன. அதுபோல், இரவலர்கள் புரவலர்களிடம் பரிசுபெற்று, பல்வேறு ஊர்களுக்குச் சென்று பரிசளித்த இரவலர்களின் புகழைப் பரப்புவதால், ஆங்காங்கே, புதுப் புரவலர்கள் தோன்றக்கூடும். (அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை, புறநானூறு, பகுதி 1, பக்கம் 432-433)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #199 on: October 02, 2013, 02:38:25 PM »


புறநானூறு, 200. (கொடுப்பக் கொள்க!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: விச்சிக்கோ.
திணை: பாடாண்.
துறை: பரிசில் துறை.
====================================

பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி
மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக்
கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப!
நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்
களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக்கோவே!
இவரேபூத் தலைஅறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கவெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்
யானே பரிசிலன் மன்னுமந் தணன்நீயே
வரிசையில் வணங்கும் வாள்மேம் படுநன்
நினக்குயான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடுகிழ வோனே!

இதன் பொருள்:-

பனிவரை நிவந்த=====> கல்லக வெற்ப
குளிர்ந்த மலையில் வளர்ந்த பச்சை இலைகளையுடைய, பலா மரத்தின் கனிகளைக் கவர்ந்து உண்ட, தடயங்களைக் கொண்ட கரிய விரல்களை உடைய ஆண் குரங்கு,
தன் இணையான பெண் குரங்கோடு, அன்போடு சிறந்து விளங்கி,
மேகத்தைக் கண்டறிய முடியாதபடிக்கு விளங்கும், அடர்ந்த மரங்களைக் கொண்ட மலை முகட்டினில் இருக்கும் மூங்கிலின் மேல் துயிலும்!
அத்தகைய வளமான மலையை உடைய வெற்பனே.....

நிணந்தின்று=====> விச்சிக்கோவே

பகைவரின் உடல்களை சுவைத்து களித்த, கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைப் போன்ற நெடுவேலையும்,
களத்தினில் பகைவரை சிதைக்கும் கடுங்கண் யானையும்,
பகையரசனின் தலையை அலங்கரித்து விளங்கிய மணிமகுடத்தை சிதைத்துச், செய்த கழலையும் உடைய விச்சிக்கோவே!

இவரே=====> பாரிமகளிர்

இவர்கள்,
படர்ந்து விரிந்த முல்லைக் கொடி ஒன்று,
எந்த ஒரு புகழ் மாலையும் பாடிப், பரிசில் கேளாத போழ்தும் அதற்கு,
அழகிய வேலைப்பாடுடைய தன் தேரை பரிசாகக் கொடுத்து மகிழ்ந்த பாரியின் பிள்ளைகள்...

யானே பரிசிலன்=====> நாடு கிழவோனே!

நானோ இப் பரிசினை வைத்திருப்பவன்! மேலும், நானொரு அந்தணன்!
நீயோ, பகைவரை அடக்கி அவர்கள் பொருள் கொடுத்து வணங்கும் வீரமுடையவன்!

மேலும், அடங்காத மன்னவரையும் அடக்கியவனே,
எப்பொழுதும் மடங்காத விளைச்சல் நிலங்களையும் உடையவனே,
இவர்களை நான் கொடுக்கிறேன்!
நீ கொள்வாயாக!

அருஞ்சொற் பொருள்:-

நிவந்த= வளர்ந்த
கடுவன்= ஆண்குரங்கு
மந்தி= பெண்குரங்கு
சேண்= உயர்ச்சி
கழை= மூங்கில்
கறங்குமணி= ஒலியெழுப்பும் பரல்
வரிசை= சீர்வகை
கிழவன்= உடையவன்

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #200 on: October 19, 2013, 09:32:40 PM »
புறநானூறு, 201. (இவர் என் மகளிர்)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: இருங்கோவேள்.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே

தந்தை தோழன்; இவர்என் மகளிர்;
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்புபுனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு

நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்,
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்

யான்தர இவரைக் கொண்மதி; வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ, வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல்அருங் குரைய நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:-

செல்லா = தொலையாத
படுதல் = ஒலித்தல்
மா = பெருமை
தடவு = ஓம குண்டம்
புரிசை = மதில்
சேண் = உயர்
உவர்த்தல் = வெறுத்தல்
வேள் = வேளிர் குலத்தைச் சார்ந்தவன்
சேடு = பெருமை
ஆண் = தலைமை
ஒலியல் = தழைக்கை
மால் = உயர்ந்த
உடலுநர் = பகைவர்
உட்கும் = அஞ்சும்
குரை = பெருமை

இதன் பொருள்:-

இவர் யார்?=====> யானே

”இவர்கள் யார்?” என்று கேட்பாயாயின் , இவர்கள் தன்னுடைய ஊர்களையெல்லாம் இரவலர்க்கு அளித்ததோடு மட்டுமல்லாமல், முல்லைகொடிக்குத் தன் தேரையும் அளித்ததால் பெற்ற அழியாப் புகழையும், ஒலிக்கும் மணிகளை அணிந்த யானைகளையும் உடைய பறம்பு நாட்டின் தலைவனாகிய உயர்ந்த பெருமையுடைய பாரியின் மகளிர். நான்

தந்தை=====> யாண்டு

இவர்களின் தந்தையின் தோழன். ஆகவே, இவர்கள் எனக்கு மகளிர் (போன்றவர்கள்). நான் ஒரு அந்தணன்; மற்றும் ஒருபுலவன். நான் இவர்களை அழைத்து வந்தேன். வடக்கே இருந்த முனிவன் ஒருவன், எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட “தடவு” என்று சொல்லப்படும் இடம் ஒன்றில் வாழ்ந்தான். உன் முன்னோர்கள் அந்தத் தடவிலிருந்து வந்தவர்கள். நீ அவர்கள் வழியினன்; நீ செம்பால் அலங்கரிக்கப்பட்ட நெடிய உயர்ந்த மதிற்சுவர்களைக் கொண்ட கோட்டைகளையுடையவன்; விரும்பத்தக்க ஈகைத் தன்மையுடையவன்; துவரை நகரத்தை ஆண்ட

நாற்பத்து ஒன்பது=====> மாஅல்

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள்களுக்குள் சிறந்த வேள். போர்களில் வெற்றிபெற்ற தலைவ! மாலையணிந்த யானையையுடைய பெருமைமிக்க இருங்கோவேளே! நீ தலைவனின் கடமையை அறிந்து பாணர்களுக்கு உதவுபவன். தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே!

யான்தர=====> நாடுகிழ வோயே!

வானத்தின் வளைவுக்குள் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் அரிய வலிமையுடைய, பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவ! வெற்றி பொருந்திய வேலும், பகைவர்கள் அஞ்சும் படையும், அழியாத பெருமையும் உடைய நாட்டுக்கு உரியவனே! நான் இவர்களை உனக்கு அளிக்கிறேன்; நீ இவர்களை ஏற்றுக்கொள்.

பாடலின் பின்னணி:-

பாரி இறந்தபின், பாரி மகளிரைத் தகுந்தவர்க்கு மணமுடிக்க விரும்பி அவர்களைப் பல குறுநிலமன்னர்களிடம் கபிலர் அழைத்துச் சென்றார். இப்பாடலில், கபிலர் பாரி மகளிரை இருங்கோவேளிடம் அழைத்துச் சென்று, அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களை மணந்துகொள்ளுமாறு கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பல தமிழறிஞர்கள் பல்வேறு கருத்துகளையும் கற்பனைக் கதைகளையும் இருங்கோவேளின் வரலாற்றுடன் இணைத்துக் கூறியிருப்பதால், இருங்கோவேளின் வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. இப்பாடலில், “ வடபால் முனிவன் தடவினுட் தோன்றி” என்று கபிலர் கூறியிருப்பதற்குப் பலரும் பலவிதமான விளக்கங்களை அளிக்கிறார்கள். விசுவபுராண சாரம் என்னும் தமிழ் நூலையும் தெய்வீக உலா என்னும் நூலையும் ஆதாரமாக வைத்து, இங்கு முனிவன் என்று குறிபிடப்பட்டது சம்புமுனிவனாக இருக்கலாம் என்று டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் கூறுகிறார். இப்பாடலில் “துவரை” என்று குறிப்பிடப்பட்டிருப்பது இந்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்த நகரம் என்றும் அந்த நகரத்திலிருந்து அகத்தியர் வேளிர்களைத் தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்ததாகவும் நச்சினினார்க்கினியார் குறிப்பிடுகிறார்.

மைசூர் அருகே உள்ள துவரை என்னும் நகரத்திலிருந்து ஆட்சி செய்த ஹொய்சள மன்னர்களின் முன்னோன் ஒருவன் சளன் என்ற பெயருடையவன். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற பொழுது முயல் ஒன்று புலியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. அவன் அப்புலியைத் தொடர்ந்து சென்றான். அங்கே ஒருமுனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். புலியக் கண்ட அந்த முனிவர், சளனைக் கண்டவுடன், “சளனே, அப்புலியைக் கொல்க” எனக் கட்டளையிட்டார். சளன் தன் வாளை உருவிப் புலியைக் கொன்றான். புலியைக் கொன்றதால் அவன் ஹொய்சளன் என்று அழைக்கப்பட்டான். இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் முனிவரை இந்த முனிவரோடு தொடர்புபடுத்தி, “புலிகடிமால்” என்பது “ஹொய்சளன்’ என்பதின் தமிழ்மொழிபெயர்ப்பு என்று கொண்டு இருங்கோவேளை ஹொய்சள வழியனன் என்று கூறுவாரும் உளர்.

மேலே குறிப்பிடப்பட்ட கற்பனைக் கதைகளைவிட, அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் “வடபால் முனிவன் தடவினுட் தோன்றி” என்பதற்கும் “புலிகடிமால்” என்பதற்கும் அளிக்கும் விளக்கம் பகுத்தறிவுக்கு ஏற்றதாகவும் வரலாற்றுச் சான்றுகளோடு பொருந்துவதாகவும் உள்ளது. அவர் அளிக்கும் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லாப் பக்ககங்களிலும் மலைகளால் சூழப்பட்ட இடத்திற்குத் “தடவு” என்று பெயர். தமிழகத்தின் வடமேற்குப்பகுதியில் (தற்போது கர்நாடக மாநிலத்தில்) இருந்த அத்தகைய தடவு ஒன்றில் முனிவன் ஒருவன் வாழ்ந்துவந்ததால் அந்தத் தடவுக்கு ”முனிவன் தடவு” என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். அந்த ”முனிவன் தடவு”ப் பகுதியை ஆண்ட குறுநிலமன்னன், புலிநாடென்று வழங்கப்பட்ட கன்னட நாட்டு வேந்தனை வென்றதால் “புலிகடிமால்” என்ற பட்டம் பெற்றிருக்கலாம். அல்லது, அந்தத் தடவுப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆந்திர சாதவாகன வேந்தருள் ஒருவனான புலிமாய் என்பவனை வென்றதால் “புலிகடிமால்” என்ற பட்டம் பெற்றிருக்கலாம். சாதவாகனர்களுடைய ஆட்சி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. அந்நாளில் துவராவதி நகரம் சாதவாகனர்களின் நாட்டில் இருந்தது. சாதவாகன மன்னனை வென்ற இருன்கோவேளின் முன்னோர்கள் துவராவதி என்னும் துவரை நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்ததை இப்பாடலில் “துவரை யாண்டு நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த வேளிருள் வேள்” என்று குறிப்பிடுகிறார் என்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் கருத்துப்படி, வேளிர் குலத்தினர் அக்காலத் தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் தொடங்கி பிற்காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் குறுநிலமன்னர்களாக ஆட்சி புரிந்துவந்தனர் என்பது தெரிய வருகிறது. அந்த வேளிர்குலத்தை சார்ந்தவன்தான் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இருங்கோவேள்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #201 on: October 19, 2013, 09:39:26 PM »
புறநானூறு, 202. (கைவண் பாரி மகளிர்)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: இருங்கோவேள்.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி

இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோடிபல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்

நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்றுஇவர்
கைவண் பாரி மகளிர் என்றஎன்

தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும!
விடுத்தனென்; வெலீஇயர்நின் வேலே; அடுக்கத்து
அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:-

வெட்சி = ஒருசெடி
கானம் = காடு
கட்சி = புகலிடம்
கடமா = காட்டுப் பசு, மத யானை
கடறு = காடு
கிளர்தல் = எழுதல்
கடி = மிகுதி
கதழ்தல் = விரைதல்
படப்பை = தோட்டம், பயிர் நிலம், நாடு
உரு = அச்சம்
தாயம் = உரிமை
ஒலியல் = தழைக்கை
மா = கறுப்பு
அடுக்கம் = மலைச்சாரல்
மா = கரிய
தகடு = பூவின் புறவிதழ்
வீ = மலர்
துறுகல் = பாறை
கடுக்கும் = போலும்
கல் = மலை

இதன் பொருள்:-

வெட்சி=====> ஒன்றி

வெட்சிச் செடிகள் நிறைந்த காட்டில் வேடர்களால் விரட்டப்பட்ட மதங்கொண்ட யானை புகலிடம் இல்லாமல், காட்டில் மணியோசையை எழுப்பி, பொன்னின் தூள்கள் சிதறி மிளிருமாறு, வெகு விரைவாக ஓடும் நெடிய மலைப் பக்கத்தில் உள்ள நாட்டில் வெற்றி நிலைபெற்ற, சிறந்த புகழ் பொருந்திய

இருபால்=====> மாஅல்

சிற்றரையம், பேரரையம் என்று அஞ்சத்தக்க இரண்டு பழைய ஊர்கள் இருந்தன. கோடிக்கணக்கில் பொருள் கொடுத்து உன் முன்னோர்களுக்கு உதவி, உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம் ஏன் அழிந்தது என்று கூறுகிறேன்; கேட்பாயாக. உன் தந்தையாரிடமிருந்து உரிமையாகப் பெருமளவில் செல்வங்களைப் பெற்று, தழைத்த மாலையுடன் உள்ள புலிகடிமால்!

நும்போல்=====> என்றஎன்

உன்னைப்போன்ற அறிவுடைய உன் முன்னோருள் ஒருவன், புகழ் மிக்க செய்யுள் இயற்றும் கழாத்தலையாரை இகழ்ந்ததின் விளைவுதான் அரையத்தின் அழிவு. நன்கு செய்யப்பட்ட தேர்களை உடையவனே! ”இவர்கள் எவ்வி என்னும் பழங்குடியைச் சார்ந்தவர்கள்; வள்ளன்மை மிகுந்த பாரியின் மகளிர்”

தேற்றா=====> நாடுகிழ வோயே

என்ற என் தெளிவில்லாத சொற்களைப் பொறுத்துக்கொள்வாயாக! மலைச்சாரலில், அரும்புகள் அனைத்தும் மலர்ந்த, கரிய அடிமரத்தையுடைய வேங்கையின் கரிய புறவிதழ்களையுடைய ஒளிபொருந்திய பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை கரிய வரிகளையுடைய புலியின் முதுகைப்போல் உள்ளது. அத்தகைய பெரிய மலைகளுள்ள இடங்களில் ஊர்களையுடைய நாட்டுக்கு உரியவனே! நான் செல்கிறேன். உன் வேல் வெற்றி பெறட்டும்!

பாடலின் பின்னணி:-

பாரி மகளிரை மணந்துகொள்ளுமாறு கூறிய கபிலரின் வேண்டுகோளுக்கு இருங்கோவேள் இணங்க மறுத்தான். அதனால் கோபமடைந்த கபிலர், “வேளே! உன் நாட்டில் சிற்றரையம், பேரரையம் என்று இரண்டு சிறப்பான ஊர்கள் இருந்தன. இன்று அவ்வூர்கள் அழிந்துவிட்டன. உன் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையார் என்னும் புலவரை இகழந்தான். அதனால்தான் அவ்வூர்கள் அழிந்தன. நான் இவர்களின் சிறப்பைக் கூறி இவர்களை மணந்துகொள்ளுமாறு உன்னை வேண்டினேன். நீ என் சொல்லை இகழ்ந்தாய்; நான் செல்கிறேன்; உன் வேல் வெற்றி பெறட்டும்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், கபிலர் பல கருத்துகளை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இருங்கோவேளின் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையாரை இகழ்ந்ததால் அரையம் அழிந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, தன் சொல்லைக் கேளாமல் தன்னை இகழ்ந்ததால் இருங்கோவேளின் நாட்டுக்குக் கேடு வரும் என்று கூறாமல் கூறுகிறார். அடுத்து, அரையத்தின் அழிவைப் பற்றிக் கூறும்பொழுது, “நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்” என்று இருங்கோவேளின் முன்னோர்களின் ஒருவன் இருங்கோவேளைப்போல் அறிவில்லாதவன் என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். ”நுந்தை தாயம் நிறைவுற எய்திய” என்று அவனுடைய நாடு மற்றும் செல்வம் அனைத்தும் அவன் தந்தையால் அவனுக்கு அளிக்கப்பட்டதே ஒழிய அவன் தன் சொந்த முயற்சியால் எதையும் பெறவில்லை என்று மறைமுகமாகக் கூறுகிறார். தன்னுடன் வந்த பெண்கள் பாரியின் மகளிர் என்பதால் அவர்களை மணந்தால் மூவேந்தருடன் பகை வரக்கூடும் என்ற அச்சத்தால் இருங்கோவேள் அவர்களை மணக்க மறுக்கிறான் என்று கபிலர் கருதுகிறார். அஞ்ச வேண்டாதவற்றை எண்ணி அவன் அஞ்சுகிறான் என்பதை, வேங்கைப் பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை, புலியின் முதுகுபோல் இருக்கிறது என்று மறைமுகமாக அவன் அச்சத்தைச் சுட்டிக் காட்டுகிறார். கடைசியாக, “வெலீயர் நின் வேல்” என்று கபிலர் கூறுவது, வாழ்த்துவதுபோல் இருந்தாலும், அது “கெடுக உன் வேல்” என்ற எதிர்மறைப் பொருளில் ”குறிப்பு மொழி”யாகக் கூறியதுபோல் (பாடல் 196-இல் குறிப்பு மொழி என்பதற்கு விளக்கம் இருப்பதைக் காண்க.) தோன்றுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #202 on: October 19, 2013, 09:41:51 PM »
புறநானூறு, 203. (இரவலர்க்கு உதவுக)
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம்மென எம்மனோர் இரப்பின்
முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்!

இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்
உள்ளி வருநர் நசையிழப் போரே
அனையையும் அல்லை நீயே, ஒன்னார்
ஆர்எயில் அவர்கட் டாகவும் நுமதுஎனப்
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண்கடன் எந்தை நீஇரவலர் புரவே

அருஞ்சொற்பொருள்:-

வான் = மேகம்
கரத்தல் = மறைத்தல், கொடாது இருத்தல்
ஆல் - அசைச் சொல்
தம் = தருக
அம்ம = கேளாய் (கேட்டற்பொருளைத் தழுவி வரும் இடைச்சொல்)
நசைதல் = விரும்ம்புதல், அன்பு செய்தல்
ஆர் = அரிய
எயில் = மதில்
இறுத்தல் = செலுத்துதல், கடமை ஆற்றுதல்
புரவு = பாதுகாப்பு

இதன் பொருள்:-

கழிந்தது=====> அண்ணல்!

கடந்த காலத்தில் பொழிந்தோம் என்று மேகங்கள் மழை பொழியாமல் இருந்தாலோ முற்காலத்தில் விளைச்சலை அளித்தோம் என்று எண்ணி நிலம் விளைச்சலை அளிக்காமல் இருந்தாலோ உயிர்களுக்கு எல்லாம் வாழ்க்கை இல்லை. அதுபோல், மீண்டும் எமக்குப் பரிசில் அளிக்குமாறு எங்களைப் போன்றவர்கள் கேட்டால், “நீங்கள் முன்பே பரிசில் பெற்றுக்கொண்டீர்கள்” என்று மறுத்தல் கொடியது. நான் சொல்வதைக் கேள்! நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய தலைவா!

இல்லது=====> புரவே

தம்மிடத்துள்ள வறுமையினால் தம்மை நாடி வந்தவர்க்குப் பரிசளிக்க இயலாதவர்களைவிட, தம்மை நாடிவந்தவர்களுக்குப் பரிசளிக்கக் கூடிய செல்வம் இருந்தும் பரிசளிக்காதவர்கள், தம்மை நாடிவந்தவர்களால் விரும்பப்படுவதை இழந்தவர்களாவார்கள். ஆனால், நீ அத்தகையவன் அல்லன். நீ, பகைவருடைய அரண்கள் அவர்களிடம் இருக்கும்பொழுதே அவர்களின் பொருளைப் பாணர்களுக்கு கொடுப்பதைக் கடமையாகக்கொண்ட வள்ளன்மை உடையவன். எம் தலைவா! இரப்போரைப் பாதுகாத்தலை நீ கடமையாகக் கொள்வாயாக.

பாடலின் பின்னணி:-

ஊன்பொதி பசுங்குடையார் முன்பு ஒருமுறை சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியைக் கண்டு பரிசில் பெற்றார். அவர் மீண்டும் அவனைக் காண வந்தார். இம்முறை, சோழன் அவருக்கும் மற்ற புலவர்களுக்கும் பரிசில் அளிக்கக் கால தாமதமாக்கினான். அதனால் அவனை நாடி வந்த புலவர்கள் வருத்தமடைந்தனர். இவ்வாறு பரிசில் அளிக்காமல் நீட்டிப்பது சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் இயல்பு அல்ல என்பதை ஊன்பொதி பசுங்குடையார் அறிந்திருந்தார். “முன்பே மழை பொழிந்தோம் என்று நினைத்து மேகங்கள் மழை பொழியாமல் இருந்தாலோ அல்லது முன்பே விளைச்சலை அளித்தோம் என்று நிலம் மீண்டும் பயிர்களை விளைவிக்காமல் இருந்தாலோ உலகில் உயிர்களுக்கு வாழ்க்கை இல்லை. அதுபோல், முன்பே பரிசளித்ததால் இப்போது நீ பரிசளிக்காமல் இருப்பது முறையன்று . நீ இரவலர்க்குக் கொடுக்காமல் இருப்பவன் அல்லன். இரவலரைப் பாதுகாப்பது உன் கடமையாகும் “ என்று இப்பாடலில் சோழனுக்கு ஊன்பொதி பசுங்குடையார் அறிவுரை கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #203 on: October 19, 2013, 09:47:34 PM »
புறநானூறு, 204. (அதனினும் உயர்ந்தது)
பாடியவர்: கழைதின் யானையார்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக் கலங்கிச்

சேறொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர் ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே

அருஞ்சொற்பொருள்:-

இழிந்தன்று = இழிந்தது
உயர்ந்தன்று = உயர்ந்தது
இமிழ் = ஒலி
வேட்டல் = விரும்பல்
ஆ = பசு
மா = விலங்கு
அதர் = வழி
புள் = பறவை
புலத்தல் = வெறுத்தல்
கருவி வானம் = கரிய நிறமுடைய மேகம்

இதன் பொருள்:-

ஈஎன=====> கலங்கி

ஒருவனிடம் சென்று இரத்தல் இழிந்தது. அவ்வாறு ஒருவன் கேட்ட பிறகு, கொடுக்கமாட்டேன் என்று மறுப்பது அதைவிட இழிந்தது. ஒருவன் இரப்பதன்முன் இப்பொருளை எடுத்துக்கொள் என்று கொடுப்பது உயர்ந்தது. அப்படிக் கொடுத்த பிறகு அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறுவது அதைவிட உயர்ந்தது. நீர் வேட்கை (தாகம்) எடுத்தால் தெளிந்த நீர் பரப்பையுடைய கடல் நீரைக் குடிக்க முடியாது. பசுக்களும் மற்ற விலங்குகளும் உண்ணுவதால்

சேறொடு=====> நின்னே

சேறுடன் கலங்கிய நீர் சிறிதளவே இருந்தாலும் அதைத் தேடிப் பல வழிகளில் பலரும் செல்வர்.
உன்னைப் போன்றவர்களிடத்துப் பரிசில் பெறச் செல்பவர்கள் தமக்குப் பரிசில் கிடைக்காவிட்டால், தாம் புறப்பட்ட நேரத்தையும் சகுனத்தையும் பழிப்பார்களே அன்றி, உன்னைப்போல் வரையாது கொடுக்கும் வள்ளல்களைப் பழிக்க மாட்டார்கள். ஆகவே, நீ எனக்குப் பொருள் வழங்கவில்லை என்றாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். ஓரி, நீ வாழ்க! வானத்தில் உள்ள கரிய மேகம் மழைபொழிவதுபோல் குறையாது பரிசளிக்கும் வள்ளலே!

பாடலின் பின்னணி:-

வல்வில் ஓரி கொல்லிமலைப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன். அவன் கடையெழு வள்லல்களில் ஒருவன். அவனை வன்பரணர் என்ற புலவர் புகழ்ந்து பாடியதை பாடல்கள் 152 மற்றும் 153 ஆகியவற்றில் காணலாம். ஒருகால், கழைதின் யானையார் வல்வில் ஓரியைக் காணவந்தார். அச்சமயம் வல்வில் ஓரி அவருக்குப் பரிசு அளிக்கவில்லை. அவன் பரிசளிக்கவிட்டாலும் அவருக்கு அவன் மீது வெறுப்பில்லை என்பதை இப்பாடலில் கூறுகிறார். மற்றும், இரப்போர்க்கும் அளிப்போர்க்கும் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #204 on: October 19, 2013, 09:51:28 PM »
புறநானூறு, 205. (பெட்பின்றி ஈதல் வேண்டலம்)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: கடிய நெடுவேட்டுவன்.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்
தாளுளம் தபுத்த வாள்மிகு தானை

வெள்வீ வேலிக் கோடைப் பொருந
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
நோன்சிலை வேட்டுவ, நோயிலை யாகுக;
ஆர்கலி யாணர்த் தரீஇய கால்வீழ்த்துக்

கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா ஆங்குத் தேரொடு
ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே

அருஞ்சொற்பொருள்:-

பெட்பு = அன்பு, விருப்பம்
விறல் = வெற்றி, வீரம்
பரிதல் = ஓடுதல்
புரவி = குதிரை
உறுவர் = பகைவர்
சார்வு = புகலிடம்
தாள் உளம் = முயற்சியுடய உள்ளம்
தபுதல் = கெடுதல்
வீ = மலர்
புழை = துளை, வழி
கதம் = சினம்
சிலை = வில்
ஆர்கலி = மிகுந்த ஒலி
தரீஇ = தந்து
குழீஇய = திரண்ட
கொண்மூ = மேகம்
கடும்பு = சுற்றம்

இதன் பொருள்:-

முற்றிய=====> தானை

நிறைந்த செல்வத்தை உடைய மூவேந்தராயினும், எங்கள் மீது விருப்பமில்லாது அவர்கள் அளிக்கும் பரிசுகளை நாங்கள் விரும்பமாட்டோம். வெற்றி பெறுவதற்காகக் கொண்ட சினம் தணிந்து, விரைந்து ஓடும் குதிரைகளையுடைய உன் பகைவர்கள் அஞ்சி வந்து உன்னை அடைந்தால் நீ அவர்களுக்குப் புகலிடமாய் விளங்குகிறாய். அவ்வாறன்றி, முயற்சியுடன் போர் புரிந்தவர்களின் உள்ளத்தின் வலிமையை அழித்த வாட்படையை உடையவன் நீ

வெள்வீ =====> வீழ்த்து

வெண்மையான பூக்களையுடைய முல்லையை வேலியாகக்கொண்ட கோடை என்னும் மலைக்குத் தலைவன் நீ. சிறியதாகவும் பெரியதாகவும் உள்ள வழிகளில் குறுக்கே வந்த மான்களின் கூட்டத்தை அழித்த விரைந்து செல்லும் சினம்கொண்ட நாய்களையும் வலிய வில்லையும் உடைய வேட்டுவனே! நீ துன்பமில்லாமல் வாழ்வாயாக! மிகுந்த ஒலியுடன் புதுமழையைத் தருவதற்காகக் காலூன்றிக்

கடல்=====> கடும்பே

கடலின்மேல் கூடிய மேகம் நீரைக் குடிக்காமல் போகாது. அதுபோல், தேர்களையும், வெண்மையான தந்தங்களையுடைய யானைகளையும் பரிசாகப் பெறாது பரிசிலர் சுற்றம் வெறிதே செல்லமாட்டார்கள்.

பாடலின் பின்னணி:-

ஒருசமயம், பெருந்தலைச் சாத்தனார் கடிய நெடுவேட்டுவனைக் காண வந்தார். எக்காரணத்தாலோ, அவன் அவருக்குப் பரிசில் அளிப்பதற்கு கால தாமதம் செய்தான். அதனால், வருத்தமுற்ற பெருந்தலைச் சாத்தனார், “பெரும் செல்வமுடைய மூவேந்தராயினும் , அவர்கள் விருப்பமின்றி அளிக்கும் கொடையை யாம் விரும்பமாட்டோம். உன்னிடம் வரும் பரிசிலர்கள், மேகங்கள் கடலிலிருந்து நீரைக் கொண்டு செல்வதுபோல் பரிசு பெறாமல் செல்வதில்லை. ஆனால், இப்பொழுது நீ எனக்குப் பரிசில் கொடுக்கக் கால தாமதம் செய்தாய்.” என்று கூறி விடை பெறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

பெருந்தலைச் சாத்தனார் பரிசு பெறாமல் கடிய நெடுவேட்டுவனிடமிருந்து விடை பெறுகிறார். அவனிடம் பரிசு பெறுவதற்காக வந்த இரவலர் கூட்டம் தேர்களையும் யானைகளையும் பெறாமல் செல்லமாட்டர்கள் என்று கூறித் தான் பரிசில்லாமல் செல்வதைச் சுட்டிக் காட்டுகிறார். மற்றும், அவர் “நோயிலை ஆகுக” என்று கூறுவது குறிப்பு மொழியால் அவனை இகழ்ந்ததுபோல் தோன்றுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #205 on: October 19, 2013, 09:59:13 PM »
புறநானூறு, 206. (எத்திசைச் செலினும் சோறே)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே

அருஞ்சொற்பொருள்:-

வள்ளியோர் = வரையாது கொடுப்போர்
வயங்குதல் = விளங்குதல், மிகுதல்
உரன் = வலிமை (மன வலிமை)
வரிசை = தகுதி
கடு = விரைவு
மான் = குதிரை
தோன்றல் = அரசன்
வறுந்தலை = வெற்றிடம்
காவுதல் = சுமத்தல்
கலம் = யாழ்
கலப்பை = கலம் + பை = யாழ் மற்றும் பல பொருள்களையும் தூக்கிச் செல்வதற்குப் பயன்படும் பை
மழு = கோடரி

இதன் பொருள்:-

வாயி லோயே=====> வாயி லோயே

வாயிற் காவலனே! வாயிற் காவலனே! வரையாது கொடுக்கும் வள்ளல்களின் காதுகளில், விளங்கிய சொற்களை விதைத்துத் தாம் விரும்பிய பரிசிலை விளைவிக்கும் மனவலிமையோடு, தம் தகுதிக்கேற்பப் பரிசுபெற விழையும் பரிசிலர்க்குக் கதவுகளை மூடாத வாயிற் காவலனே!

கடுமான்=====> சோறே

விரைந்தோடும் குதிரைகளையுடைய அரசனாகிய அதியமான் நெடுமான் அஞ்சி தன்னை அறியாதவனா? அல்லது, என்னை அறியாதவனா? அறிவும் புகழுடையவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதனால் உலகம் வெற்றிடமாகிவிடவில்லை. ஆகவே, என் யாழையும், மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு நான் செல்கிறேன். மரம் வெட்டும் தச்சனின் திறமை வாய்ந்த சிறுவர்கள் கோடரியுடன் செல்லும் காடு போன்றது இவ்வுலகம். நான் எங்கே சென்றாலும் அங்கே சோறு (பரிசில்) கிடைக்காமல் போகாது.

பாடலின் பின்னணி:-

அதியமான் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். அவனது கொடைப் புகழ் தமிழகமெங்கும் பரவியிருந்தத்து. பல ஊர்களிலிருந்தும் அவனைக் காணப் புலவர்களும், பாணர்களும், பரிசிலர்களும் வந்தவண்ணம் இருந்தனர். அதியமானின் புகழைக் கேள்விப்பட்ட அவ்வையார், பரிசிலர் பலரோடும் சேர்ந்து அதியமானைக் காண வந்தார். அவ்வையாரோடு வந்த பரிசிலர் அனைவரும் அதியமானிடம் பரிசு பெற்று விடைபெற்றுச் சென்றனர். அவ்வையாரின் புலமையையும் திறமையையும் கேள்விப்பட்ட அதியமான், அவரைத் தன்னுடன் சிலகாலம் தங்க வைக்க வேண்டும் என்று விரும்பினான். அவருக்குப் பரிசு அளித்தால் அவர் தன் அரண்மனையைவிட்டுச் சென்றுவிடுவார் என்று எண்ணி அவ்வையாருக்குப் பரிசளிக்காமலும் தன்னை காண்பதற்கு அவருக்கு வாய்ப்பு அளிக்காமலும் அதியமான் காலம் கடத்தினான். அதியமான் பரிசளிக்காமல் இருப்பது, தன்னைக் காணாது இருப்பது போன்ற செயல்களின் உள்நோக்கம் அவ்வையாருக்குப் புரியவில்லை. ஆகவே, அவர் தன்னை அதியமான் அவமதிப்பதாக எண்ணி, அதியமான் மீது கோபம் கொண்டார். ஒருநாள், அதியமானைச் சந்திப்பதற்கு அரன்மனைக்குச் சென்றார். ஆனால், வாயிற்காவலன் எப்பொழுதும்போல், அதியமானைக் காணவிடாமல்அவ்வையாரைத் தடுத்து நிறுத்தினான். ”நீ பரிசிலர்க்கு எப்பொழுதும் வாயிற்கதவை அடைப்பதில்லை; ஆனால், எனக்கு மட்டும் வாயிற் கதவை அடைக்கிறாய்; அதனால் எனக்கு அதியமானைக் காண வாய்ப்பில்லை; அதியமான் சொல்லித்தான் நீ இவ்வாறு செய்கிறாய்; உன் அரசனாகிய அதியமான் தன்னை அறியாதவனா? அல்லது என்னை அறியாதவனா? நான் சோற்றுக்காகவா இங்கே தங்கியிருக்கிறேன்? நான் இனிமேல் இங்கே இருக்கப் போவதில்லை. நான் என்னுடைய யாழையும் மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கொண்டு புறப்படப்போகிறேன். அறிவும் திறமையும் உடைவர்களுக்கு எங்கு சென்றாலும் சோறு கிடைக்கும்.” என்று வாயிற்காவலனிடம் கூறினார். இதை அறிந்த அதியமான், அவ்வையாருக்கு மிகுந்த அளவில் பரிசளித்துத் தன் அரசவைப் புலவராக நீண்டகாலம் தன்னுடனேயே இருக்கச்செய்தான்.

சிறப்புக் குறிப்பு:-

பரிசிலர்களுக்குச் சிறுவர்களும், கல்வி, திறமை ஆகியவற்றிற்கு கோடரியும், சோற்றிற்கு காட்டிலுள்ள மரமும் உவமை என்று கொள்க.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #206 on: October 19, 2013, 10:06:25 PM »
புறநானூறு, 207. (வருகென வேண்டும்)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

எழுஇனி நெஞ்சம்; செல்கம் யாரோ
பருகு அன்ன வேட்கை இல்வழி
அருகிற் கண்டும் அறியார் போல
அகம்நக வாரா முகன்அழி பரிசில்
தாள் இலாளர் வேளார் அல்லர்

வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள்அவிந்து அடங்காது வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமரு வோரே

அருஞ்சொற்பொருள்:-

செல்கம் = செல்வோம்
பருகுதல் = குடித்தல்
பருகு அன்ன வேட்கை = நீர் வேட்கை உடையவன் நீரைக் கண்டவுடன் குடிப்பது போல், கண்டவுடன் மிகுந்த அன்பு காட்டும் பண்பு
நக = மகிழ
அழிதல் = நிலைகெடுதல்
தாள் = முயற்சி
வேளார் = விரும்ப மாட்டர்கள்
வரிசையோர் = பரிசிலர்
மீளி = வலிமை
முன்பு = வலிமை
ஆளி = சிங்கம்
வெள்ளென = கண்டோர் யாவருக்கும் தெரியுமாறு
வயின் = இடம்
திரங்குதல் = தளர்தல்
வாயா வன்கனி = நன்றாகப் பழுக்காமல் கன்றிய கனி
உலமரல் = திரிதல், சுழல்தல்

இதன் பொருள்:-

எழுஇனி=====> அல்லர்

மிகுந்த விருப்பமில்லாமல், கண்டும் காணாதுபோல் இருந்து, உள்ளத்தில் மகிழ்ச்சியில்லாமல், முகம் திரிந்து தரும் பரிசிலை முயற்சி இல்லாதவர்கள்தான் விரும்புவர்.

வருகென=====> உலமரு வோரே

வரும்பொழுது, “வருக, வருக” என்று எம்மை வரவேற்க வேண்டும். தகுதி உடையோர்க்கு இந்த உலகம் பெரியது; எங்களை விரும்புவோர் பலரும் உள்ளனர். வலிமை மிகுந்த சிங்கம்போல் ஊக்கம் குறையாது, என் நெஞ்சமே! இப்பொழுதே நீ எழுவாயாக; நாம் செல்வோம். கண்டோர் யாவருக்கும் தெரியுமாறு, எம்மைக் கண்டு இரக்கம் கொள்ளாதவரிடத்து வருந்திநின்று, கனியாத கனியை அடைய அலைபவர் யாரோ?

பாடலின் பின்னணி:-

புலவர் பெருஞ்சித்திரனார் மிகவும் வறுமையில் வாடியவர். தம் வறுமையைத் தீர்ப்பதற்காகக் கொடை வள்ளலாகிய வெளிமானைக் காணச் சென்றார். இவர் வெளிமானின் அரண்மனைக்குச் சென்ற சமயத்தில், வெளிமான் இறக்கும் தருவாயில் இருந்தான். அவன், தன் தம்பியாகிய இளவெளிமானிடம், பெருஞ்சித்திரனார்க்குத் தகுந்த பரிசில் அளிக்குமாறு கூறிய பின்னர் இறந்தான். ஆனால், இளவெளிமான் புலவர்களின் தகுதி அறிந்து பரிசு கொடுக்கும் ஆற்றல் இல்லாதவன். இளவெளிமான், பெருஞ்சித்திரனாரைக் காணும்போது காணாததுபோல் நடந்துகொண்டான். அவரைக் கண்டாலும், அவனிடத்தில் முகமலர்ச்சி இல்லை; அவரை முறையாக வரவேற்கவில்லை. இளவெளிமானின் இத்தகைய செயல்களால் வருத்தமடைந்த புலவர் பெருஞ்சித்திரனார், இப்பாடலில் தம் மனவருத்தத்தை வெளிப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

திருவள்ளுவர் “பருகுவார் போலினும்” என்ற சொற்றொடரை

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது. (குறள் - 811)

என்னும் குறளில் ”அன்பின் மிகுதியால் கண்டவுடன் குடித்துவிடுவார் போல் “ என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பது காண்க.

உள்ளன்பில்லாமல், முக மலர்ச்சியில்லாமல் பெருஞ்சித்திரனாரின் நெஞ்சத்தைப் புண்படுத்திய இளவெளிமானின் செயல், வள்ளுவர் விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில்,

மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. (குறள் - 90)

என்று கூறும் குறளுக்கு ஒர் எடுத்துக்காட்டு

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #207 on: October 19, 2013, 10:10:00 PM »
புறநானூறு, 208. (வாணிகப் பரிசிலன் அல்லேன்)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்குஎன
நின்ற என்நயந்து அருளி இதுகொண்டு
ஈங்கனம் செல்க தான்என என்னை
யாங்குஅறிந் தனனோ தாங்கரும் காவலன்?

காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
தினையனைத்து ஆயினும் இனிதுஅவர்
துணைஅளவு அறிந்து நல்கினர் விடினே

அருஞ்சொற்பொருள்:-

பின் ஒழிதல் = கடத்தல்
ஈங்கனம் = இங்ஙனம், இவ்வாறு
யாங்கு = எவ்வாறு
தாம்க்குதல் = தடுத்தல்
காவலன் = மன்னன்
பேணல் = விரும்பல்
துணை = அளவு

இதன் பொருள்:-

குன்றும்=====> காவலன்

நான் பல குன்றுகளையும் மலைகளையும் கடந்து பரிசில் கொண்டு செல்வதற்கு வந்தேன் என்று கூறிய என் மீது அன்புகொண்டு, “இப்பொருளைக் கொண்டு இவ்வாறு செல்க” என்று பகைவரால் தடுத்தற்கரிய அரசன் அதியமான் கூறுகின்றானே! என்னைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்?

காணாது=====> விடினே

என்னைக் காணாமல் அவன் அளித்த பொருளை ஏற்றுக்கொள்வதற்கு நான் ஊதியம் மட்டுமே கருதும் வாணிகப் பரிசிலன் அல்லேன். என்னை விரும்பி, என் புலமை, கல்வி முதலியவற்றின் அளவை அறிந்து, திணை அளவே பரிசளித்தாலும் நான் அதை இனியதாகக் கருதுவேன்.

பாடலின் பின்னணி:-

அதியமான் நெடுமான் அஞ்சியைக் கண்டு பரிசில் பெறலாம் என்று பெருஞ்சித்திரனார் சென்றார். எக்காரணத்தினாலோ, அதியமான் அவரைக் காணாது, அவர் தகுதிக்கேற்ற பரிசிலை மற்றவர்களிடத்துக் கொடுத்துப் பெருஞ்சித்திரனாரிடம் கொடுக்குமாறு செய்தான். அதியமான் தன்னை காணாது அளித்த பரிசிலை பெருஞ்சித்திரனார் ஏற்றுக்கொள்ள மறுத்தார். “குன்றுகளையும் மலைகளையும் கடந்து நான் பரிசு பெறுவதற்காக மட்டும்தான் வந்தேன் என்று அதியமான் எண்ணினா? சரியான முறையில் என்னை அவன் வரவேற்றிருக்க வேண்டும். என்னைக் காணாமல் அவன் அளித்த பரிசிலை ஏற்றுக்கொள்வதற்கு, நான் ஒரு வாணிகப் பரிசிலன் அல்லேன். என்னை விரும்பி வரவேற்று, ”வருக” என்று எதிர்கொண்டு அழைத்து, என் புலமையைக் கண்டு, பாராட்டி, எனக்கு அளிக்கும் பரிசு மிகச்சிறியதானாலும் அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்” என்று இப்பாடலில் கூறுகிறார். பெருஞ்சித்திரனார் இவ்வாறு பாடிய பிறகு, அதியமான் தன் பிழையை உணர்ந்து, அவரை நேரில் கண்டு தன் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டியதாகவும், அதன் பின்னர், பெருஞ்சித்திரனார் அதியமான் அளித்த பரிசிலை ஏற்றுக்கொண்டதாகவும் அவ்வை. சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #208 on: October 19, 2013, 10:14:19 PM »
புறநானூறு, 209. (நல்நாட்டுப் பொருந!)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: மூவன்.
திணை: பாடாண்
துறை: பரிசில் கடாநிலை.
==========================

பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தித் தெண்கடல்
படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்

மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
பல்கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப்
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்

நசைதர வந்து நின்இசை நுவல் பரிசிலேன்
வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்;
நோயிலை ஆகுமதி; பெரும, நம்முள்
குறுநணி காண்குவ தாக; நாளும்

நறும்பல் ஒலிவரும் கதுப்பின் தேமொழித்
தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்
பெருவரை அன்ன மார்பின்
செருவெம் சேஎய் நின் மகிழ்இருக்கையே

அருஞ்சொற்பொருள்:-

பொய்கை = குளம்
போர்வு = வைக்கோற் போர்
சேத்தல் = கிடத்தல், தங்கியிருத்தல்
கழனி = வயல்
தொழுவர் = உழவர்
பிணி = அரும்பு
ஆம்பல் = அல்லி
அடை = இலை
அரியல் = மது
மாந்துதல் = குடித்தல்
சீர் = தாளவொத்து
பாணி = இசை
பாணி தூங்குதல் = தாளத்திற்கேற்ப ஆடுதல்
மென்புலம் = மருதமும் நெய்தலும்
அல்கல் = தங்குதல்
விசும்பு = ஆகாயம்
உகந்து = உயர்ந்து
விடர் = மலைப்பிளவு, குகை
சிலம்பு = ஒலி
முன்னுதல் = முற்படுதல், எதிர்ப்படுதல்
கையறுதல் = செயலறுதல்
நசை = விருப்பம்
நுவலுதல் = கூறுதல்
வறுவியேன் = வறுமையுடையவன்
குறு நணி = மிகுந்த நெருக்கம்
பல் = பல
ஒலித்தல் = தழைத்தல்
கதுப்பு = பெண்களின் கூந்தல்
தெரியிழை = ஆராய்ந்த ஆபரணம் (ஆராய்ந்த ஆபரணங்களைத் தரித்த பெண்)
பாணி = காலம், சமயம்
வரை = மலை
சேய் = முருகன்
செரு = போர்
மகிழிருக்கை = அரசவை, நாள் ஓலக்கம் ( அரசன் நாட்பொழுதில் வீற்றிருந்து அரசாட்சி செய்யும் இடம்)

இதன் பொருள்:-

பொய்கை=====> தூங்கும்

குளத்தில் மேய்ந்த நாரை வைக்கோற் போரில் உறங்கும் நெய்தல் நிலத்தில் உள்ள வயல்களில் நெல்லை அறுவடை செய்யும் உழவர், நன்கு மலர்ந்த ஆம்பலின் அகன்ற இலைகளில் மதுவை உண்டு, தெளிந்த கடல் அலைகளின் இனிய சீரான ஒலிக்கேற்ப ஆடுகின்றனர்.

மென்புல=====> நின்

இத்தகைய வளமான நெய்தல் மற்றும் மருத நிலங்களையுடைய நல்ல நாட்டுக்குத் தலைவனே! பழங்களை விரும்பி, தாம் வாழும் ஆகாயத்தில் உயரப் பறந்து, பெரிய மலைக் குகையில் எதிரொலி முழங்கச் சென்று, பழமரத்தில் பழங்கள் இல்லாததால் வருந்தி மீளும் பறவைகளைப் போல், உன்

நசைதர=====> நாளும்

மீதுள்ள விருப்பத்தினால் உன் புகழைக் கூற வந்த நான் பரிசு பெறாமல் வெறுங்கையோடு செல்லப் போகிறேனா? வாட்போரில் சிறந்த வீரனே! நீ எனக்குப் பரிசளிக்காவிட்டாலும் நான் வருந்தமாட்டேன். நீ நோயில்லாமல் வாழ்வாயாக! தலைவ!

நறும்பல்=====> மகிழ்இருக்கையே

நாள்தோறும், மணமுடைய, நீண்ட, தழைத்த கூந்தலோடு, ஆராய்ந்த ஆபரணங்களை அணிந்து, தேன்போன்ற இனிய மொழி பேசும் பெண்கள் உன்னுடைய மலைபோன்ற மார்பைத் தழுவும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீ போரை விரும்பும் முருகனுக்கு ஒப்பானவன். நான் பரிசு பெறாமல் செல்வது உன் அரசவையில் உன்னோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும்.

பாடலின் பின்னணி:-

மூவன் கொடையில் சிறந்தவன் என்ற புகழோடு விளங்கினான். அதனால் பெருந்தலைச் சாத்தனார் அவனைக் காணச் சென்றார். மூவன், பெருந்தலைச் சாத்தனாருக்குப் பரிசளிக்காமல் காலம் தாழ்த்தினான். அவனிடமிருந்து பரிசு பெறலாம் என்ற நம்பிக்கையை இழந்த சாத்தனார், மூவன் தன்னை இகழந்ததாகக் கருதினார். “மலையிலிருந்த மரம் ஒன்று பழுத்த பழங்கள் உடையது என்று எண்ணிப் பறவைகள் அந்த மரத்தை நாடிச் சென்றன. ஆனால், பருவகாலம் மாறியதால் அம்மரத்தில் பழங்கள் இல்லை. பறவைகள் பழங்கள் இல்லாமல் திரும்பின. அப்பறவைகளைப்போல், நான் உன்னை நாடி வந்தேன்; நான் இப்பொழுது வெறுங்கையோடு செல்லவேண்டிய நிலையில் உள்ளேன். நீ எனக்குப் பரிசு அளிக்காவிட்டால், நான் அது குறித்து வருந்த மாட்டேன். நீ நோயில்லாமல் வாழ்வதையே நான் விரும்புகிறேன். ஆனால், நான் பரிசு இல்லாமல் திரும்பிச் செல்வது நமக்குள் இருக்கட்டும்.” என்று கூறிப் பெருந்தலைச் சாத்தனார் பரிசு பெறாமலேயே சென்றார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #209 on: October 19, 2013, 10:20:52 PM »
புறநானூறு, 210. (நினையாதிருத்தல் அரிது)
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்
துறை: பரிசில் கடாநிலை.
==========================

மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;
செயிர்தீர் கொள்கை எம்வெம் காதலி

உயிர்சிறிது உடையள் ஆயின், எம்வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,
அறனில் கூற்றம் திறனின்று துணியப்
பிறனா யினன்கொல் இறீஇயர் என் உயிர்என
நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும்

இடுக்கண் மனையோள் தீரிய இந்நிலை
விடுத்தேன்; வாழியர் குருசில்! உதுக்காண்
அவல நெஞ்சமொடு செல்வல்; நிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறுத்தே

அருஞ்சொற்பொருள்:-

மன்பதை = மக்கள் கூட்டம்
புரைமை = உயர்வு
காட்சி = பார்வை
செயிர் = குற்றம்
வெம் = விருப்பம்
வயின் = இடம்
திறன் = காரணம்
இறீஇயர் = கெடுவதாக
சிறுமை = துன்பம்
புலந்து = வெறுத்து
தீரீஇய = தீர்க்க
உது - அருகிலிருப்பதைக் குறிக்கும் சொல் ”இது”; தொலைவில் இருப்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்தப்படும் சொல் ”அது”; அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல் இடைப்பட்ட தூரத்தில் உள்ள பொருளைச் சுட்டிக்காட்டப் பயன்படும் சொல் ”உது”. ”உது” என்னும் சொல் தற்பொழுது வழக்கில் இல்லை
அவலம் = வரித்தம்
கறுத்தோர் = பகைவர்
முனை = போர்முனை
கையற்ற = செயலற்ற
புலம்பு = வறுமை
முந்துறுத்து = முன்னே போகவிட்டு

இதன் பொருள்:-

மன்பதை=====> காதலி

உலகத்து மக்களைக் காக்கும் உயர்ந்த நிலையில் உள்ள உன் போன்றவர்கள் தங்கள் நிலையைக் கருதாமல், அன்பில்லாமலும், அறத்தோடு பொருந்தாத பார்வையோடும் இருந்தால் என் போன்றவர்கள் இவ்வுலகத்தில் பிறவாமல் இருப்பார்களாக. என் மனைவி குற்றமற்ற கற்புடையவள்; என்னை விரும்புபவள்.

உயிர்சிறிது=====> உறையும்

அவள் உயிருடன் இருந்தால் என்னை நினையாது இருக்கமாட்டாள். அதனால், அறமற்ற கூற்றுவன் காரணமின்றி முடிவெடுத்ததால், நான் இறந்ததாக எண்ணித் தன் உயிர் ஒழியட்டும் என்று சொல்லி வருத்தத்துடனும் பலவகையிலும் வெறுப்போடும் வாழ்ந்துகொண்டிருக்கும் என்

இடுக்கண்=====> துறுத்தே

மனைவியின் துன்பம் தீர்க்க விரும்பி, இப்பொழுதே செல்கிறேன். இதோ பார்! நான் வருந்திய மனத்தோடு செல்கிறேன். உன்னால் தாக்கப்பட்ட உன் பகைவர்களின் அரண்கள் அழிவதைப்போல், என்னை நிலைகலங்கவைக்கும் என் வறுமையை முன்னே போகவிட்டு நான் பின்னே செல்கிறேன். அரசே, நீ வாழ்க!

பாடலின் பின்னணி:-

சேரன் குடக்கோச் சேரலிரும்பொறையின் கொடைப் புகழைக் கேள்வியுற்ற பெருங்குன்றூர் கிழார் அவனைக் காணச் சென்றார். சேரலிரும்பொறை பெருங்குன்றூர் கிழாருக்குப் பரிசளிக்கக் கால தாமதமாக்கினான். அதனால், பெருங்குன்றூர் கிழார் கோபமடைந்தார். “உன்னைப்போல் புலவர்களுக்கு ஆதரவு அளிக்காத வேந்தர்கள் இருந்தால் புலவர்களுக்கு வாழ்வே இல்லை. வறுமையோடு இருந்தாலும் என் மனைவி கற்புடையவள்; ஒருகால் அவள் உயிரிழந்திருக்கலாம்; இறவாது இருந்தால் என்னையே நினைத்துக் கொண்டிருப்பாள். அவளைப் பிரிந்து வாழும் நான் இறந்தேனோ என்று எண்ணித் தானும் சாக வேண்டும் என்று தன்னை வருத்திக்கொள்வாள். அவள் வருத்தத்தைத் தீர்த்தல் வேண்டி நான் அவளை நாடிச் செல்கிறேன்” என்று இப்பாடலில் பெருங்குன்றூர் கிழார் கூறுகிறார்.