Author Topic: ~ புறநானூறு ~  (Read 108585 times)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #180 on: August 27, 2013, 06:05:26 PM »
புறநானூறு, 181. (இன்னே சென்மதி!)
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார்.
பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன்.
திணை: வாகை.
துறை : வல்லாண் முல்லை.
===================================

மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
புலாஅ அம்பில் போர்அருங் கடிமிளை

வலாஅ ரோனே வாய்வாள் பண்ணன்
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே சென்மதி நீயே சென்றுஅவன்
பகைப்புலம் படரா அளவைநின்
பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே

அருஞ்சொற்பொருள்:-

மன்றம் = ஊர் நடுவில் உள்ள பொதுவிடம்
விளவு = விளாமரம்
வெள்ளில் = விளாம்பழம்
எயிற்றி = வேடர் குலப் பெண்
இரு = கரிய
பிடி = பெண் யானை
குறும்பு = அரண்
உடுத்த = சூழ்ந்த
இருக்கை = இருப்பிடம்
கடி = காவல்
மிளை = காடு
வலார் = ஒருஊரின் பெயர்(வல்லார் என்பதின் திரிபு)
வாய் = சிறந்த
கடும்பு = சுற்றம்
இன்னே = இப்பொழுதே

இதன் பொருள்:-

மன்ற=====>கடிமிளை

ஊர்ப்பொதுவிடத்தில் உள்ள விளாமரத்திலிருந்த விளாம்பழம் அங்கிருந்த வீட்டின் முற்றத்தில் விழுந்தவுடன், கரிய கண்ணையுடைய மறக்குலப் பெண் ஒருத்தியின் அன்பிற்குரிய மகன் அதை எடுப்பதற்குச் செல்வான். காட்டில் வாழும் கரிய பெண்யானையின் கன்றும் அவனோடு அந்தப் பழத்தை எடுப்பதற்குச் செல்லும். இத்தகைய வளமான வல்லார் என்னும் ஊர்,

வலாஅ=====> கொளற்கே

புலால் நாற்றமுள்ள அம்புகளையும், போர் செய்வதற்கு அரிய பாதுகாப்பான காவற் காடுகளையுமுடைய, பெரிய அரண்கள் சூழ்ந்த வலிய நிலத்தின் இருப்பிடம். அங்கே, சிறந்த (குறி தவறாத) வாளையுடைய பண்ணன் வாழ்கிறான். பசியுடன் வாடும் வறுமையுற்ற உன் சுற்றம் பிழைக்க வேண்டுமானால், இப்பொழுதே சென்று, அவன் போருக்குப் போவதற்கு முன் உன் வறுமையைக் காட்டி, உங்கள் பசிக்குப் பகையாகிய (பசியைப் போக்கும்) பரிசிலைப் பெற்றுக் கொள்வாயாக.

பாடலின் பின்னணி:-

வறுமையில் வாடும் பாணன் ஒருவனை சிறுகருந்தும்பியார் வல்லார் கிழான் பண்ணனிடத்து ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #181 on: August 27, 2013, 06:07:08 PM »


புறநானூறு, 182. (உண்டாலம்ம இவ்வுலகம்!)
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி. உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.
=====================================

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

அருஞ்சொற்பொருள்:-

தமியர் = தனித்தவர்
முனிதல் = வெறுத்தல்
துஞ்சல் = சோம்பல்
அயர்வு = சோர்வு
மாட்சி = பெருமை
நோன்மை = வலிமை
தாள் = முயற்சி

இதன் பொருள்:-

இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, மனித நேயத்தொடு “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்” உள்ளதால்தான் இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உயர்ந்த கருத்தைக் கூறுகிறான். இவன் பாண்டிய மன்னர் குலத்தைச் சார்ந்தவன். சங்க காலத்துத் தமிழ் மன்னர்கள், தங்கள் கடற்படையைக் கொண்டு கடாரம், சாவகம், ஈழம் போற நாடுகளுக்குச் சென்று போர்புரிந்து வெற்றி பெற்றவர்கள். அவர்களின் கடற்படை போருக்குச் செல்லும் பொழுது மன்னர்களும் தம் கடற்படையோடு செல்வது வழக்கம். அவ்வாறு கடற்படையோடு இளம்பெருவழுதி சென்ற பொழுது, அவன் சென்ற கப்பல் கவிழ்ந்ததால் அவன் கடலில் மூழ்கி இறந்தான். ஆகவே, “கடலுள் மாய்ந்த” என்ற அடைமொழி அவன் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

திருக்குறளில் பல அதிகாரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் இப்பாடலில் சுருக்கமாகக் கூறப்படிருக்கின்றன. குறிப்பாக, விருந்தோம்மபல், அன்புடைமை, வெகுளாமை, அறிவுடைமை, மடியின்மை, தீவினையச்சம், ஊக்கமுடைமை, புகழ், ஈகை, ஒப்புரவு, பண்புடைமை ஆகிய அதிகாரங்களின் மையக்கருத்துகளை இப்பாடலில் காணலாம். கீழே கொடுக்கபட்டுள்ள நான்கு குறட்பாக்களின் கருத்துகளுக்கும் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காண்க.

"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று" (குறள் - 82)

பொருள்:-

விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தது அன்று.

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்" (குறள் - 428)

பொருள்:-

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

"பண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்" (குறள் - 996)

பொருள்:-

பண்புடையவர்கள் பொருந்தி இருத்தலால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது; அவர்கள் இல்லையேல் அது மண்ணினுள்ளே புதைந்து மறைந்து போகும்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #182 on: August 27, 2013, 06:08:21 PM »
புறநானூறு, 183. (கற்றல் நன்றே!)
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=====================================

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

அருஞ்சொற்பொருள்:-

உழி = இடம்
உற்றுழி = உற்ற இடத்து
உறு = மிக்க
பிற்றை = பிறகு
பிற்றை நிலை = வழிபாட்டு நிலை
முனியாது = வெறுப்பில்லாமல்

இதன் பொருள்:-

உற்றுழி=====> பல்லோ ருள்ளும்

தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும்

மூத்தோன்=====> கண் படுமே

“மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பை மிக அழகாக வலியுறுத்துகிறான்.

சிறப்புக் குறிப்பு:-

வருணாசிரம தருமம் சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு இப்பாடல் ஒருசான்று.

இப்பாடலில், ஆசிரியரிடம் பணிவோடு கல்வி கற்க வேண்டும் என்று பாண்டியன் நெடுஞ்செழியன் கூறுவதைப் போல் திருவள்ளுவர், ”செல்வந்தரிடம் உதவி கோரும் எளியவர் பணிந்து நிற்பது போல் ஆசிரியரிடம் பணிந்து நின்று கல்வி கற்பவரே சிறந்தவர்; அவ்வாறு கல்லாதவர் இழிந்தவர்” என்ற கருத்தை கல்வி என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். (குறள் - 395)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #183 on: August 27, 2013, 06:09:34 PM »
புறநானூறு, 184. (யானை புக்க புலம்!)
பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி.
திணை: பாடாண்.
துறை : செவியறிவுறூஉ.
=====================================

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

அருஞ்சொற்பொருள்:-

காய் நெல் = விளைந்த நெல்
மா = ஒருநில அளவு (ஒருஏகரில் மூன்றில் ஒருபங்கு)
செறு = வயல்
தமித்து = தனித்து
புக்கு = புகுந்து
யாத்து = சேர்த்து
நந்தும் = தழைக்கும்
வரிசை = முறைமை
கல் - ஒலிக்குறிப்பு
பரிவு = அன்பு
தப = கெட
பிண்டம் = வரி
நச்சின் = விரும்பினால்

இதன் பொருள்:-

காய்நெல்=====> கொளினே

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால்

கோடி=====> கெடுமே

நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.

பாடலின் பின்னணி:-

பாண்டியன் அறிவுடை நம்பி தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி வாங்கினான். அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை. அந்நிலையில், அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஒருஅரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #184 on: September 04, 2013, 11:59:30 AM »
புறநானூறு, 185. (ஆறு இனிது படுமே!)
பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=====================================

கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக்கூழ் அள்ளற் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே

அருஞ்சொற்பொருள்:-

கால் = வண்டிச் சக்கரம்
பார் = வண்டியின் அடிமரம் (அச்சு)
ஞாலம் = உலகம்
சாகாடு = வண்டி
உகைத்தல் = செலுத்துதல்
மாண் = மாட்சிமை
உய்த்தல் = செலுத்தல்
தேற்றான் = தெளியான்
வைகலும் = நாளும்
அள்ளல் = சேறு
கூழ் அள்ளல் = கலங்கிய சேறு
தலைத்தலை = மேன்மேல்

இதன் பொருள்:-

சக்கரத்தோடு அடிமரமும் சேர்ந்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம். வண்டியைச் செலுத்துபவன் திறமை உடையவனாக இருந்தால் வண்டி இடையூறு இல்லாமல் செல்லும். அவன் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ளும். அது போல், மன்னன் மாட்சிமை பொருந்தியவனாக இருந்தால் நாடு நலம் பெறும். மன்னன் தெளிவில்லாதவனாக இருந்தால், பகை என்னும் சேற்றில் நாடு மூழ்கி ஒவ்வொரு நாளும் பலவிதமான கொடிய துன்பங்கள் மேலும் மேலும் வந்து சேரும்.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், “அரசன் ஆட்சி புரியும் ஆற்றல் உடையவனாக இருந்தால் நாடு நலம் பெறும்; அவன் ஆற்றல் அற்றவனாக இருந்தால் பலவகையான துன்பங்கள் வந்து சேரும்” என்று தன் கருத்தைத் தொண்டைமான் இளந்திரையன் கூறுகிறான்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #185 on: September 04, 2013, 12:00:40 PM »
புறநானூறு, 186. (வேந்தர்க்குக் கடனே!)
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=====================================

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

அருஞ்சொற்பொருள்:-

உயிர்த்து = உயிரை உடையது
மலர்தல் = விரிதல்

இதன் பொருள்:-

இவ்வுலகுக்கு நெல்லும் நீரும் உயிரல்ல. இவ்வுலகம் மன்னனையே உயிராக உடையது. அதனால், தான் இந்தப் பரந்த உலகுக்கு உயிர் (போன்றவன்) என்பதை அறிந்து கொள்வது (மிகுந்த வேல்களுடன் கூடிய படைகளையுடைய) மன்னனுக்கு கடமையாகும்.

சிறப்புக் குறிப்பு:-

ஒருநாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்தாலும், சிறப்பாக ஆட்சி புரியும் மன்னன் இல்லாவிட்டால், அந்த வளங்களால் பயனொன்றுமில்லை என்ற கருத்தைத் திருவள்ளுவர்,

ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு. (குறள் - 740)
என்ற குறளில் கூறுகிறார். மோசிகீரனாரின் கருத்தும் திருவள்ளுவர் கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கவை.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #186 on: September 04, 2013, 12:01:53 PM »
புறநானூறு, 187. (ஆண்கள் உலகம்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=====================================

நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே.

அருஞ்சொற்பொருள்:-

கொன்றோ - ஆக ஒன்றோ
அவல் = பள்ளம்
மிசை = மேடு

இதன் பொருள்:-

நிலமே! நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமான இடமாகவோ அல்லது மேடான இடமாகவோ எப்படி இருந்தாலும், அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய். நீ வாழ்க!

சிறப்புக் குறிப்பு:-

நாடு, காடு, அவல், மிசை என்பவை முறையே மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி நிலப்பகுதிகளைக் குறிக்கும். சங்காலத்தில் ஆண்களின் உழைப்பால் நிலம் செப்பனிடப்பட்டு வேளாண்மை நடைபெற்றது. ஆகவே, நிலத்தினது இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொருத்ததாக இருந்தது. பாடுபட்டு உழைப்பவர்கள் இருந்தால் எல்லா நிலப்பகுதிகளுமே பயனளிப்பதாக இருக்கும். ஆகவே, இப்பாடலில், ”ஆடவர்” என்பதை “மக்கள்” என்றும் “நல்லவர்” என்பதை ”கடமை உணர்வோடு உழைப்பவர்” என்றும் பொதுவான முறையில் பொருள் கொள்வது சிறந்ததாகத் தோன்றுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #187 on: September 04, 2013, 12:03:00 PM »
புறநானூறு, 188. (மக்களை இல்லோர்!)
பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=====================================

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே

அருஞ்சொற்பொருள்:-

படைப்பு = செல்வம்
படைத்தல் = பெற்றிருத்தல்
துழத்தல் = கலத்தல் (துழாவல்)
அடிசில் = சோறு
விதிர்த்தல் = சிதறல்
பயக்குறை = பயக்கு+உறை = பயன் அமைதல்

இதன் பொருள்:-

பலவகையான செல்வங்களையும் பெற்றுப் பலரோடு உண்ணும் பெருஞ்செல்வந்தராயினும், மெல்ல மெல்ல, குறுகிய அடிகளைவைத்து நடந்து, தன் சிறிய கையை நீட்டி, அதை உணவில் இட்டு, தொட்டு, வாயால் கவ்வி, கையால் துழாவி, நெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிப் பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாள்கள் பயனற்றவையாகும்.

சிறப்புக் குறிப்பு:-

சிறுகுழந்தை நடக்கும் பொழுது, அது ஒருஅடி வைப்பதற்கும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கும் சற்று கால தாமதாவதால், “இடைப்பட” என்று நயம்படக் கூறுகிறார் பாண்டியன் அறிவுடை நம்பி.

மக்கட்பேற்றால் வரும் இன்பத்தை பல குறட்பாக்களில் வள்ளுவர் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (குறள் - 64)

மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (குறள் - 65)

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #188 on: September 04, 2013, 12:04:21 PM »


புறநானூறு, 189. (செல்வத்துப் பயனே ஈதல்!)
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
பாடப்பட்டோன் : யாருமில்லை.
திணை : பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
==================================

" தெண்கடல் வளாகம் பொதுமை ‘இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே "

அருஞ்சொற்பொருள்:-

பொதுமை = பொதுத்தன்மை
வளாகம் = இடம் (வளைந்த இடம்)
யாமம் = நள்ளிரவு
துஞ்சல் = தூங்குதல்
கடு = விரைவு
மா = விலங்கு
நாழி = ஒருஅளவு (ஒருபடி)
ஓர் - அசை
துய்த்தல் = அனுபவித்தல்

இதன் பொருள்:-

தெளிந்த கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் மற்றவர்களுக்கும் பொதுவானது என்று எண்ணாமல், தானே ஆட்சி செய்யும் ஒருவர்க்கும், பகலும் இரவு தூங்காமல், விரைந்து ஓடும் விலங்குகளை வேட்டையாடுபவனுக்கும் உணவு ஒருபடி அளவுதான்; அவர்கள் உடுப்பது இரண்டு ஆடைகள் தான். அதுபோல், மற்ற தேவைகளிலும் இருவரும் ஒப்பானவரரே ஆவர். ஆகவே, எவ்வளவு செல்வம் இருந்தாலும் ஓரளவுக்கு மட்டுமே அதை அனுபவிக்க முடியும். அதனால், செல்வத்தினால் ஒருவன் பெறக்கூடிய பயன் அதைப் பிறர்க்கு அளித்தலேயாகும். அவ்வாறு பிறர்க்கு அளிக்காமல் தானே அனுபவிக்கலாம் என்று ஒருவன் எண்ணினால் அவன் செல்வத்தினால் வரும் பயன்கள் பலவற்றையும் இழந்தவனாவான்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #189 on: September 14, 2013, 09:21:23 PM »
புறநானூறு, 190. (எலியும் புலியும்)
பாடியவர்: சோழன் நல்லுருத்திரன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=====================================

விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ;
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,

அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ

அருஞ்சொற்பொருள்:-

பதம் = பருவம்
சீறிடம் = சிறிய இடம்
வல்சி = உணவு
அளை = வளை
மல்கல் = நிறைதல்
உறுத்தல் = இருத்தல்
கேண்மை = நட்பு
கேழல் = பன்றி
அவண் = அவ்விடம், அவ்விதம்
வழிநாள் = மறுநாள்
விடர் = குகை
புலம்பு = தனிமை
வேட்டு = விரும்பி
இரு = பெரிய
ஒருத்தல் =ஆண் விலங்குக்குப் பொதுப்பெயர்
மெலிவு = தளர்ச்சி
உரன் = வலிமை, அறிவு, ஊக்கம்
வைகல் = நாள்

இதன் பொருள்:-

விளைபத=====> வீழ்ந்தென

நெல் விளைந்த சமயத்தில், சிறிய இடத்தில், கதிர்களைக் கொண்டுவந்து உணவுப்பொருட்களைச் சேகரித்துவைக்கும் எலி போன்ற முயற்சி உடையவராகி, நல்ல உள்ளம் இல்லாமல், தம்முடைய செல்வத்தை இறுகப் பிடித்துக் கொள்பவர்களுடன் நட்பு கொள்வதைத் தவிர்க. கொடிய பார்வையையுடைய பன்றி, தன்னால் தாக்கப்பட்டவுடன் இடது பக்கமாக விழுந்தது என்பதால்

அன்று=====> உளவா கியரோ

அதை உண்ணாது, பெரிய குகையில் தனித்திருந்து, பின்னர் வேட்டையாட விரும்பி, எழுந்து, பெரிய யானையைத் தாக்கி வலப்பக்கம் வீழ்த்தி அதை உண்ணும் பசியுடைய புலிபோல் தளராத கொள்கையையுடைய வலியவர்களோடு நட்பு கொள்க.

சிறப்புக் குறிப்பு:-

தன்னால் தாக்கப்பட்ட விலங்கு இடப்பக்கமாக வீழ்ந்தால் அதைப் புலி உண்ணாது என்ற கருத்து சங்க காலத்தில் நிலவியது என்பதற்குச் சான்றாக அகநானூற்றிலும் ஒருபாடல் காணப்படுகிறது.

தொடங்குவினை தவிரா அசைவுஇல் நோன்தாள்
கிடந்துஉயிர் மறுகுவது ஆயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலி…… (அகநானூறு, 29, 1-3)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #190 on: September 14, 2013, 09:22:42 PM »
புறநானூறு, 191. (நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?)
பாடியவர்: பிசிராந்தையர்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=============================

“யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?” என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை,
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே

அருஞ்சொற்பொருள்:-

யாண்டு = ஆண்டு
யாங்கு = எவ்வாறு, எங்ஙனம்
மாண்ட = மாட்சிமைப் படுதல்
இளையர் = வேலையாட்கள்

இதன் பொருள்:-

“தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீர்களானால், சொல்கிறேன். “சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.”

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #191 on: September 14, 2013, 09:24:41 PM »


புறநானூறு,192. (யாதும் ஊரே! யாவரும் கேளிர்!)
பாடியவர்: கணியன் பூங்குன்றன்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி.
=============================

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

அருஞ்சொற்பொருள்:-

கேளிர் = உறவினர்
நோதல் = வருந்துதல்
தணிதல் = குறைதல்
முனிவு = கோபம், வெறுப்பு
தலைஇ = பெய்து
ஆனாது = அமையாது
இரங்கல் = ஒலித்தல்
பொருதல் = அலைமோதல்
மல்லல் = மிகுதி, வளமை
புணை = தெப்பம்
திறம் = கூறுபாடு
திறவோர் = பகுத்தறிவாளர்
காட்சி = அறிவு
மாட்சி = பெருமை

இதன் பொருள் :-

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #192 on: September 14, 2013, 09:26:01 PM »
புறநானூறு, 193. (ஒக்கல் வாழ்க்கை தட்கும்)
பாடியவர்: ஓரேருழவர்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=============================

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே!

அருஞ்சொற்பொருள்:-

அதள் = தோல்
எறிதல் = நீக்கல்
களர் = களர் நிலம்
புல்வாய் = மான்
உய்தல் = தப்பிப் பிழைத்தல்
மன் - அசைச் சொல்
ஒக்கல் = சுற்றம்
தட்கும் = தடுக்கும்

இதன் பொருள்:-

தோலை உரித்துத் திருப்பிப் போட்டதுபோல் உள்ள வெண்மையான நெடிய நிலத்தில் வேட்டுவனிடமிருந்து தப்பியோடும் மான்போல் எங்கேயாவது தப்பியோடிப் பிழைத்துக்கொள்ளலாம் என்றால், அவ்வாறு தப்ப முடியாமல் சுற்றத்தாருடன் கூடிய இல்வாழ்க்கை காலைத் தடுத்து நிறுத்துகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #193 on: September 17, 2013, 02:21:58 PM »
புறநானூறு, 194. (படைத்தோன் பண்பிலாளன்!)
பாடியவர்: பக்குடுக்கை நன்கணியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=============================

ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே

அருஞ்சொற்பொருள்:-

நெய்தல் = இரங்கற் பறை (சாப்பறை)
கறங்கல் = ஒலித்தல்
ஈர் = இனிமை
தண் = அருள்
பாணி = (இனிய) ஓசை
பைதல் = துன்பம்
உண்கண் = மை தீட்டிய கண்
வார்ப்பு = வார்த்தல்
உறைத்தல் = சொரிதல், உதிர்த்தல்
மன்ற - அசைச் சொல்
அம்ம - அசைச் சொல்

இதன் பொருள்:-

ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்க.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #194 on: September 25, 2013, 07:26:16 PM »
புறநானூறு, 195. (நல்லாற்றுப் படும் நெறி)
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
=============================

பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ!

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே!

அருஞ்சொற்பொருள்:-

கயல் = கெண்டை மீன்
திரை = தோல் சுருக்கம்
கவுள் = கன்னம்
கணிச்சி = மழு
திறல் = வலிமை
இரங்குவீர் = வருந்துவீர்
மாதோ - அசைச் சொல்
ஓம்பல் = தவிர்த்தல்
உவப்பது = விரும்புவது
படூஉம் = செலுத்தும்
ஆர் = அழகு, நிறைவு
ஆர் - அசைச் சொல்

இதன் பொருள்:-

பல்சான்=====> மாதோ!

பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரைமுடியும், முதிர்ந்து சுருக்கம் விழுந்த கன்னங்களோடு, பயனற்ற முதுமையும் அடைந்த பல குணங்கள் அமையப் பெற்றவர்களே! கூர்மையான மழுவைக் கருவியாகக் கொண்ட பெரு வலிமையுடைய இயமன் வந்து உங்களைப் பற்றி இழுத்துச் செல்லும்பொழுது வருந்துவீர்கள்.

நல்லது=====> அதுவே

நல்ல செயல்களைச் செய்யாவிட்டாலும் தீய செயல்களைச் செய்வதைத் தவிர்க. அதுதான் எல்லாரும் விரும்புவது. அதுமட்டுமல்லாமல், அதுதான் உங்களை நல்ல நெறியில் செலுத்தும் வழியும் ஆகும்.