ஓவியம் உயிராகிறது – என் உள்ளத்தின் ஓர் பயணம்
FTC-யின்
“ஓவியம் உயிராகிறது” என்ற
கவிதை உலகில் நான் நின்ற நாள்,
அது ஒரு ஆரம்பம் மட்டுமல்ல,
ஒரு அடையாளத்தின் பிறப்பு.
முழு ஒரு ஆண்டு கூட ஆகவில்லை,
ஆனால் என் பெயருக்கு முன்
ஒரு சிறிய ஒளி வந்தது
அது இந்த மேடையால்தான்.
இங்கு எழுத்துகள்
வெறும் வார்த்தைகள் அல்ல,
மதிக்கப்படுகின்றன,
பாராட்டப்படுகின்றன,
அன்போடு செதுக்கப்படுகின்றன.
ஒரு வரி தடுமாறினால்
திருத்தம் சொல்லும் நண்பர்கள்,
ஒரு உணர்வு மலர்ந்தால்
அதை உயர்த்தி நிறுத்தும் இதயங்கள்
இவை அனைத்தும் இங்கே கிடைத்த வரங்கள்.
இந்த நிகழ்ச்சி
ஒரு virtual media மேடையல்ல,
மறைந்திருக்கும் திறமைகளை
உலகிற்கு அறிமுகப்படுத்தும்
ஒரு அழகான வாயில்.
பயந்து நின்ற மனங்களை
பாசமாக இணைத்து,
“உன்னால் முடியும்” என்று சொல்லி
அவர்களின் திறமையை வெளிக்கொணரும்
ஒரு அருமையான பாலம்.
இங்கே கண்ட கவிதைகள்
என் உள்ளத்தில் பதிந்தன…
அதில் ஒரு கவிதையை நான்
என் கல்லூரியில்
மகளிர் தினத்தன்று வாசித்தேன்
அந்த நொடி…
மெய் சிலிர்த்த பார்வைகள்,
கைத்தட்டல்களின் ஓசை,
இதயமார்ந்த பாராட்டுகள்
அவை எல்லாம் அந்த கவிஞருக்கே சென்றது.
அந்த ஒரு நிமிடம்
இந்த மேடையின் மதிப்பை
இன்னும் உயர்த்தியது.
நான் அதிகம் பேசவில்லை இங்கே,
ஆனால்…
கவிதைகளோடு நான்
நிறைய பேசிக் கொண்டிருக்கிறேன்.
பதிவேற்றும் முன்
“இது இன்னும் அழகாகலாம்” என்று
உரிமையோடு சொல்லும் நண்பர்கள்
அவர்கள் என் எழுத்தின் வழிகாட்டிகள்.
400 வாரங்கள் கவிதைகளை கடந்த இந்த பயணம்
இது ஒரு எண்ணிக்கை அல்ல,
400 இதயங்களின் துடிப்பு.
இன்னும் பல வாரங்கள், நூறுகள் ஆக
இந்த மேடை மலரட்டும்…
மேலும் பல திறமைகள்
அடையாளம் காணப்படட்டும்…
இந்த சமுதாயத்திற்கும்,
அந்த திறமையாளர்களுக்கும்
ஒளி தரும் இந்த நிகழ்ச்சி
என்றும் தொடரட்டும்.
சமூகத்தை நாடிய
என் உள்ளத் தாகத்திற்கு
அடையாளம் கொடுத்தது
இந்த நிகழ்ச்சி.
என்னை நான் கண்டெடுத்த அந்த நிமிடங்களுக்கு…
என் நன்றிகள் அல்ல
என் மரியாதை.
இவ்வளவு அருமையான
ஒரு உலகத்தை உருவாக்கிய
FTC-க்கு
என் காதல்,
என் மரியாதை,
என் மனமார்ந்த நன்றிகள்.
LUMINOUS 😇🧡💛💚💙💜🌹🧚♀️