Author Topic: ~ புறநானூறு ~  (Read 156175 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #150 on: July 31, 2013, 07:43:50 PM »
புறநானூறு, 151. (அடைத்த கதவினை!)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: இளவிச்சிக் கோ.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
கிழவன் சேட்புலம் படரின் இழைஅணிந்து
புன்தலை மடப்பிடி பரிசில் ஆகப்
பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
கண்டீ ரக்கோன் ஆகலின் நன்றும்

முயங்கல் ஆன்றிசின் யானே பொலந்தேர்
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே வயங்குமொழிப்
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடுமழை
அணங்குசால் அடுக்கம் பொழியும்நும்
மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே

அருஞ்சொற்பொருள்:-

பண்டு = பழமை
உவத்தல் = மகிழ்தல்
சிமையம் = உச்சி
விறல் = சிறந்த
வரை = மலை
கவா = மலைப் பக்கம்
சேண்புலம் = நெடுந்தூரம்
படர்தல் = செல்லல்
பிடி = பெண் யானை
தம்பதம் = தம் தகுதிக்கேற்ப
வண் = மிகுதி
முயங்கல் = தழுவல்
பொலம் = பொன்
வியங்குதல் = விளங்குதல்
ஆடுதல் = அசைதல்
அணங்கு = அச்சம்
சால் = மிகுதி, நிறைவு
அடுக்கம் = மலைப் பக்கம்
மால் = பெருமை
வரை = மலை
வரைதல் = நீக்கல்

இதன் பொருள்:-

பண்டும்=====> நன்றும்

வானளாவிய சிறந்த மலைச் சிகரங்களும், மலைப்பக்கங்களும் உடைய நாட்டிற்கு உரியவனாகிய இளங்கண்டீராக் கோ நெடுந்தூரம் சென்றிருந்தாலும், அவன் இல்லத்து மகளிர் தமக்குகந்த முறையில், பாடி வருபவர்கள் மகிழும் வகையில் நன்கு செய்யப்பட்ட அணிகலன்கள் அணிந்த சிறிய தலையையுடைய இளம்பெண் யானைகளைப் பரிசாக அளிக்கும் புகழ் மிகுந்ததாகப் பன்னெடுங்காலமாகவே அவன் நாடு உள்ளது. ஆகவே,

முயங்கல்=====> எமரே

நான் அவனை நன்றாகத் தழுவினேன். நீயும் தழுவுவதற்கு ஏற்றவன்தான். ஆனால், நீ பொன்னாலான தேரையுடைய (பெண் கொலை புரிந்த) நன்னனின் வழித்தோன்றல். அது மட்டுமல்லாமல், உன் நாட்டில், விளங்கும் மொழியில் பாடுவோர்க்கு வாயிற் கதவுகள் அடைக்கப் படுவதால், அச்சம் நிறைந்த மலைப் பக்கங்களில் தவழும் மேகம் பொழியும் மழையுடன் மணமும் உடைய பெருமைக்குரிய விச்சி மலையை எம் போன்றவர்கள் பாடுவதை நீக்கினார்கள். ஆகவே, நான் உன்னைத் தழுவவில்லை.

பாடலின் பின்னணி:-

கண்டீராக் கோப்பெரு நள்ளியின் இளவல் இளங்கண்டீராக் கோ என்று அழைக்கப்பட்டான். இளங்கண்டீராக் கோவும் இளவிச்சிக் கோவும் நெருங்கிய நண்பர்கள். ஒரு சமயம், அவர்கள் இருவரும் கூடியிருந்த இடத்திற்குப் புலவர் பெருந்தலைச் சாத்தனார் இளங்கண்டீராக் கோவைக் காண வந்தார். இளங்கண்டீராக் கோவைக் கண்டவுடன் அவனைத் தழுவினார். ஆனால், அவர் இளவிச்சிக் கோவைத் தழுவவில்லை. அதைக் கண்டு கலக்கமுற்ற இளவிச்சிக்கோ, பெருந்தலைச் சாத்தனார் ஏன் தன்னைத் தழுவவில்லை என்று கேட்டான். அவனுடைய கேள்விக்குப் பெருந்தலைச் சாத்தனார், “அரசே, இளங்கண்டீராக் கோ வண்மை மிக்கவன். அவன் வீட்டில் இல்லாவிட்டாலும் அவன் வீட்டுப் பெண்டிர் தம் தகுதிக்கேற்ப இரவலர்க்குப் பரிசளிப்பர். அதனால், இளங்கண்டீராக் கோவைத் தழுவினேன். உன் முன்னோருள் முதல்வன் நன்னன் என்பவன் ஒரு பெண்ணைக் கொலைச் செய்தவன். அது மட்டுமல்லாமல், உன் நாட்டில் பாடி வருபவர்களுக்குப் பரிசளிக்காமல் வீட்டுக் கதவை அடைக்கும் வழக்கம் உள்ளது. அதனால் என் போன்ற புலவர்கள் விச்சி மலையைப் பாடுவதில்லை. அதனால் அம்மலைக்குரிய உன்னைத் தழுவவில்லை” என்று இப்பாடலில் விடையளிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

நன்னன் என்பவன் ஒரு சிற்றரசன். அவன் நாட்டில் இருந்த மா மரம் ஒன்றிலிருந்து விழுந்த காய் நீரில் மிதந்து சென்றது. அந்நீரில் குளிக்கச் சென்ற பெண் ஒருத்தி அந்த மாங்காயைத் தின்றாள். அதைக் கண்ட நன்னனின் வேலையாட்கள் அவனிடம் சென்று அந்தப் பெண் மாங்காயைத் தின்ற செய்தியைக் கூறினர். அதைக் கேள்வியுற்ற நன்னன், அந்தப் பெண்ணை அழைத்து வரச் சொன்னான். அப்பெண் செய்த தவற்றிற்காக அவள் தந்தை அப்பெண்ணின் எடைக்கு ஈடாக பொன்னால் செய்யப்பட்ட பாவை (பொம்மை) யையும், எண்பத்தொரு யானைகளையும் நன்னனுக்கு தண்டனையாக அளிப்பதாகக் கூறினான். நன்னன் அதை ஏற்க மறுத்து, அப்பெண்ணைக் கொலை செய்யுமாறு தன் வேலையாட்களைப் பணித்தான். அவர்களும் அவ்வறே செய்தனர். நன்னன் பெண்கொலை செய்தவன் என்று பலராலும் பழிக்கபட்டான். அவன் செயலால் அவனது குலத்தினரும் நீங்காத பழி உற்றனர். இச்செய்தி குறுந்தொகைப் பாடல் 292 -இல் காணப்படுகிறது.

மண்ணிய சென்ற வொண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன்
(குறுந்தொகை - 292: 1-5)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #151 on: July 31, 2013, 07:45:51 PM »
புறநானூறு, 152. (பெயர் கேட்க நாணினன்!)
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி. கடையேழு வள்ளல்களில் (அதியமான், ஆய் அண்டிரன், பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன்) ஒருவன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் விடை.
===================================

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
கேழற் பன்றி வீழ அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்

வல்வில் வேட்டம் வலம்படுத்து இருந்தோன்
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்றுஇவன்
விலைவன் போலான் வெறுக்கைநன்கு உடையன்:
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்

சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?
பாடுவல் விறலி ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;
கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:

எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பையென இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின்என்று
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்

கோவெனப் பெயரிய காலை ஆங்கு அது
தன்பெயர் ஆகலின் நாணி மற்றுயாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்குஓர்
வேட்டுவர் இல்லை நின்ஒப் போர்என
வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்

தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு
ஆன்உருக்கு அன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்ம்எனச்
சுரத்துஇடை நல்கி யோனே விடர்ச்சிமை

ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!

அருஞ்சொற்பொருள்:-

வேழம் = யானை
விழு = சிறந்த
தொடை = அம்பின் பின் தோகை, அம்பு
பகழி = அம்பு
பேழ் = பெரிய
உழுவை = புலி
பெரும்பிறிது = இறப்பு
உறீஇ = உறுவித்து
புழல் = துளையுள்ளது
புகர் = புள்ளி
கலை = ஆண்மான்
கேழற்பன்றி = ஆண்பன்றி
ஆழல் = ஆழமுடைத்தாதல்
செற்றுதல் = அழுந்துதல்
வேட்டம் = வேட்டை
வலம் = வெற்றி
திளைத்தல் = பொருதல், மகிழதல், விடாதுபயிலல்
வெறுக்கை = செல்வம்
ஆரம் = மாலை, சந்தனம்
வண்ணம் = இசையுடன் கூடிய பாட்டு
மண் = முழவுக்குத் தடவப்ப்டும் மார்ச்சனை (ஒரு வகைக் கருஞ்சாந்து)
நிறுத்துதல் = நிலைநாட்டுதல்
தூம்பு = ஒரு இசைக் கருவி
எல்லரி, ஆகுளி = இசைக் கருவிகள்
பதலை = ஒரு இசைக் கருவி
பை = இளமை (மென்மை)
மதலை = பற்று
மா = கரிய
வலம் = இடம்
தமின் = தம்மின் = கொணர்மின்
புழுக்கல் = அவித்தல்
ஆன் உருக்கு = நெய்
வேரி = கள்
தா = குற்றம்
குவை = கூட்டம், திரட்சி
சுரம் = வழி
விடர் = குகை, மலைப் பிளப்பு
வெய்யோய் = விரும்புபவன்

இதன் பொருள்:-

வேழம்=====> செற்றும்

சிறப்பாகத் தொடுக்கப்பட்ட அம்பு, யானையை வீழ்த்தி, பெரிய வாயையுடைய புலியைக் கொன்று, துளையுள்ள கொம்புகளையுடைய புள்ளி மானை உருட்டித் தள்ளி, உரல் போன்ற தலையையுடைய பன்றியை வீழ்த்தி, அருகில் ஆழமான பள்ளத்தில் இருந்த உடும்பின் உடம்பில் குத்தி நின்றது

வல்வில்=====> மார்பின்

வலிய வில்லோடு இவ்வாறு வேட்டையாடியவன் அம்பு எய்வதில் மிகவும் புகழுடையவனாகவும் வல்லவனாகவும் இருக்கின்றான். அவன் யாரோ? அவனைப் பார்த்தால் கொலைத்தொழில் புரிபவன் போல் தோன்றவில்லை. நல்ல செல்வந்தன் போல் உள்ளான்; முத்துமாலை தவழும் அழகிய அகன்ற மார்பினையுடைய

சாரல்=====> தொடுமின்

இவன் மலைச் சரிவில் விழும் அருவிகளையுடைய பயனுள்ள மலைக்குத் தலைவனாகிய ஓரியோ? அல்லது இவன் ஓரி அல்லனோ? விறலியரே! நான் இசையுடன் கூடிய பாடல்களைப் பாடப் போகிறேன். நீங்கள், முரசுகளில் மார்ச்சனையைப் பூசுங்கள்; யாழை மீட்டுங்கள்; யானையின் தும்பிக்கை போன்ற துளையுள்ள பெருவங்கியத்தை இசையுங்கள்;

எல்லரி=====> கழிப்பிக்

எல்லரியை வாசியுங்கள்; சிறுபறையை அறையுங்கள்; ஒருதலைப் பதலையைக் கொட்டுங்கள்; இசைப்புலமையை உணர்த்தும் சிறிய கரிய கோலை என் கையில் கொடுங்கள் என்று சொல்லி வேட்டுவனை அணுகி, அவன் அரசன் போலிருப்பதால் இருபத்தொரு பாடல் துறையும் முறையுடன் பாடி முடித்து,

கோவெனப்=====> வேட்டத்தில்

”கோ” என்று கூறினேன். ”கோ” என்று கூறியதைக் கேட்டவுடன் அது தன்னைக் குறிப்பதால் அவன் நாணினான். பின்னர், “நங்கள் நாடு நாடாகச் சென்று வருகிறோம். உன்னைப் போன்ற வேட்டுவன் யாரும் இல்லை” என்று நாங்கள் கூற விரும்பியதைக் கூறினோம்.

தான்=====> வெய் யோனே

அவன் என்னை மேற்கொண்டு பேசவிடாமல், தான் வேட்டையாடிக் கொன்ற மானின் தசையை வேகவைத்து, அதோடு நெய் போன்ற மதுவையும் கொடுத்தான். தன் மலையாகிய கொல்லி மலையில் பிறந்த குற்றமற்ற நல்ல பொன்னையும் பல மணிகளையும் கலந்து “இதை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கொடுத்தான். குகைகளையும் சிகரங்களையும் உடைய உயர்ந்த பெரிய கொல்லிக்குத் தலைவன் வரையாத ஈகையுடையவன்; வெற்றியை விரும்புபவன்.

பாடலின் பின்னணி:-

வன்பரணர் கொல்லிமலையைச் சார்ந்த காட்டில் தன் சுற்றத்தாரோடு சென்று கொண்டிருக்கையில், வேட்டுவன் ஒருவன் வேட்டையாடியதைக் கண்டார். அவ்வேட்டுவன் எய்த அம்பு ஒன்று யானையின் உடலைத் துளைத்து, புலியின் வாய் வழியாகச் சென்று, ஒரு மானை உருட்டித் தள்ளி, ஒரு பன்றியின் உடலையும் துளைத்து உடும்பு ஒன்றின் உடலில் தைத்து நின்றது. அந்த வேட்டுவனின் ஆற்றலைக் கண்டு வன்பரணர் வியந்தார். அவன் தோற்றத்தைப் பார்த்தால் வேட்டுவன் போல் தோன்றவில்லை. அவன் ஓரு மன்னனைப் போல் இருந்தான். வன் பரணரும் அவர் சுற்றத்தாரும் பல இசைக்கருவிகளோடு பல பாடல்களைப் பாடி ஒரியைப் புகழ்ந்தார்கள். அவர்கள் உண்பதற்கு ஊனும் மதுவும் அளித்து கொல்லிமலையில் கிடைக்கும் பொன்னையும் கொடுத்து அவர்களை ஓரி சிறப்பித்தான். வன்பரணர் இச்செய்தியை இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #152 on: July 31, 2013, 07:47:43 PM »
புறநானூறு, 153. (கூத்தச் சுற்றத்தினர்!)
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்
சுடர்விடு பசும்பூண் சூர்ப்புஅமை முன்கை
அடுபோர் ஆனா ஆதன் ஓரி
மாரி வண்கொடை காணிய நன்றும்
சென்றது மன்எம் கண்ணுளம் கடும்பே;

பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கிப்
பசியார் ஆகல் மாறுகொல் விசிபிணிக்
கூடுகொள் இன்னியம் கறங்க
ஆடலும் ஒல்லார்தம் பாடலும் மறந்தே?

அருஞ்சொற்பொருள்:-

சூர்ப்பு = கடகம்
நன்று = பெருமை, சிறப்பு
கண்ணுள் = கூத்து
கடும்பு = சுற்றம்
மிடைதல் = கலத்தல்
கண்ணி = தலையில் அணியும் மாலை
ஆகன்மாறு = ஆகையால்
விசி = கட்டு
இயம் = இசைக் கருவிகள்
கறங்கல் = ஒலித்தல்
ஒல்லல் = இயலல்

இதன் பொருள்:-

மழையணி=====> கடும்பே

மேகங்கள் சூழ்ந்த கொல்லி மலைக்குத் தலைவனாகிய ஓரி நாள்தோறும் நன்கு செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த யானைகளை இரப்போர்க்கு அளிப்பவன். அவன் ஒளிவிடும் பசும்பொன்னாலான வளைந்த கடகம் அணிந்த முன்கயையுடையவன். கொல்லும் போர்த்திறமையில் குறையாத ஆதன் ஓரியின் வளமை மிகுந்த கொடையைக் காண்பதற்கு என் கூத்தர்களாகிய சுற்றத்தார் சென்றனர்.

பனிநீர்=====> மறந்தே

அவர்கள் பொன்னாலாகிய (குளிர்ந்த நீரில் பூக்காத) குவளை மலர்களும் மணிகளும் கலந்து வெள்ளியால் ஆகிய நாரால் கட்டப்பட்ட மாலையையும் பிற அணிகலங்களையும் யானைகளையும் பரிசாகப் பெற்றனர். அவர்கள், தாம் பெற்ற கொடையால் தம் பசி நீங்கினார். ஆகையால், அவர்கள் வாரால் பிணித்துக் கட்டப்பட்ட பல இனிய இசைக்கருவிகள் ஒலிக்க ஆடுவதை விட்டனர்; பாடுவதையும் மறந்தனர்.

பாடலின் பின்னணி:-

வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம், தமக்குரிய ஆடலையும் பாடலையும் செய்யாது இருந்தனர். இதைக் கண்டவர்கள், “தங்கள் சுற்றத்தார் ஏன் ஆடலையும் பாடலையும் செய்யாது இருக்கின்றனர்?” என்று கேட்டனர். அதற்கு, வன்பரணர், “என் சுற்றத்தாரோடு நான் வல்வில் ஓரியைக் காணச் சென்றேன். எங்களுக்குப் பொன்னாலான மாலையையும் பிற அணிகலன்களையும் ஓரி அளித்தான். அவனிடமிருந்து நாங்கள் பெற்ற பெரு வளத்தால் என் சுற்றத்தார் பசி அறியாது இருக்கின்றனர். ஆகவேதான் அவர்கள் ஆடலையும் பாடலையும் மறந்தனர்.“ என்று இப்பாட்டில் குறிப்பிடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #153 on: July 31, 2013, 07:50:14 PM »
புறநானூறு, 154. (இரத்தல் அரிது! பாடல் எளிது!)
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை.
===================================

திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
அரசர் உழைய ராகவும் புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
யானும்,பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்

உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
ஈயென இரத்தலோ அரிதே; நீஅது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடல்எனக்கு எளிதே

அருஞ்சொற்பொருள்:-

உழை = பக்கம், இடம்
புரை = குற்றம்
தபுதல் = கெடுதல்
புரைதபு = குற்றமற்ற
அறுவை = உடை, ஆடை
தூ = தூய
துவன்றல் = பொலிவு
கடுப்ப = ஒப்ப
மீமிசை = மேலுக்குமேல் (உச்சி)

இதன் பொருள்:-

திரைபொரு=====> என்னேன்

அலைகள் மோதும் கடற்கரை அருகில் சென்றாலும், தெரிந்தவர்களைக் கண்டால் தாகத்திற்கு நீர் வேண்டும் என்று கேட்பது உலக மக்களின் இயல்பு. அது போல், அரசரே பக்கத்தில் இருந்தாலும் குற்றமற்ற வள்ளல்களை நினைத்துப் புலவர் செல்வர். அதனால், நானும் பெற்றதைப் பயனுள்ளாதாகக்கொண்டு, பெற்ற பொருள் சிறிதாயினும், “இவன் அளித்தது என்ன?” என்று இகழ மாட்டேன்.

உற்றனென்=====> எளிதே

வறுமை உற்றதால் உன்னை நினைத்து வந்தேன். எனக்கு , “நீ பரிசில் ஈவாயாக” என்று இரப்பது கடினமான செயல். நீ பரிசில் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் போரில் உன்னை நோக்கி எறியப்பட்ட படைக்கலங்களுக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடாத உன் ஆண்மையையும், தூய ஆடையை விரித்தது போன்ற பொலிவுடன் உச்சியிலிருந்து விழும் குளிர்ந்த அருவியையுடைய கொண்கான நாட்டையும் பாடுவது எனக்கு எளிது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #154 on: July 31, 2013, 07:53:43 PM »
புறநானூறு, 155. (ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!)
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண்.
துறை : பாணாற்று படை.
===================================

வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ
உணர்வோர் யார்என் இடும்பை தீர்க்கஎனக்
கிளக்கும் பாண கேள்இனி நயத்தின்
பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண்பெருங் கானத்துக் கிழவன்
தண்தார் அகலம் நோக்கின் மலர்ந்தே

அருஞ்சொற்பொருள்:-

வணர் = வளைவு
கோடு = யாழ்த் தண்டு
புடை = பக்கம்
தழீஇ = தழுவிய
கிளத்தல் = கூறுதல்
பசலை = பொன்னிறமாதல்
வான் = அழகு
ஏர்தல் = எழுதல்
இலம் = வறுமை
மண்டை = இரப்போர் பாத்திரம்
அகலம் = மார்பு

இதன் பொருள்:-

வளைந்த தண்டையுடைய சிறிய யாழைத் உனது வாடிய உடலின் ஒரு பக்கத்தில் தழுவிக்கொண்டு, உன்னுடைய துன்பத்தை உணர்ந்து அதைத் தீர்ப்பவர் யார் என்று கூறும் பாணனே! நான் சொல்வதை நீ நன்றாகக் கேட்பாயாக. பாழூரில் நெருஞ்சிச் செடியின் பொன்னிறமான அழகிய பூ எழுகின்ற கதிரவனை எதிர் நோக்கியிருப்பது போல், வறுமையுற்ற புலவர்களின் கலங்கள் (பாத்திரங்கள்) புகழ் விளங்கும் பெரும் கொண்கானம் கிழானது மார்பை நோக்கித் திறந்திருக்கும்.

பாடலின் பின்னணி:-

கொண்கானம் கிழானிடம் பரிசில் பெற்று மகிழ்ச்சியுற்ற மோசி கீரனார் ஒரு பாணனை கொண்கானம் கிழானிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #155 on: July 31, 2013, 08:04:08 PM »
புறநானூறு, 156. (இரண்டு நன்கு உடைத்தே!)
பாடியவர்: மோசிகீரனார்.
பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

ஒன்றுநன் குடைய பிறர்குன்றம் என்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும் அஃதான்று
நிறையருந் தானை வேந்தரைத்
திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே

அருஞ்சொற்பொருள்:-

நச்சி = விரும்பி
சுட்டி = குறித்து
தொடுத்து = சேர்த்து
நிறை = திண்மை
பெயர்தல் = திரும்பல்
செம்மல் = அரசன், தலைவன்

இதன் பொருள்:-

ஒரு நன்மை உடையதாக மற்றவர்களின் மலைகள் இருக்கும். ஆனால், கொண்கானம் எந்நாளும் இரண்டு நன்மைகளையுடையது. ஒன்று, பரிசில் பெற விரும்பிச் சென்ற இரவலர் தனது என்று குறிப்பிட்டுச் சேகரித்து உண்ணக் கூடிய உணவுப் பொருட்களை உடையதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், நிறுத்தற்கரிய படையுடைய வேந்தர்களைத் திறை கொண்டுவந்து கொடுத்து திருப்பி அனுப்பும் தலைவனும்(கொண்கானங் கிழானும்) உடையது.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில் மோசிகீரனார் கொண்கான மலையின் வளத்தையும் கொண்கானங் கிழானின் வெற்றிகளையும் புகழ்ந்து பாடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #156 on: July 31, 2013, 08:06:17 PM »
புறநானூறு, 157. (ஏறைக்குத் தகுமே!)
பாடியவர்: குறமகள் இளவெயினி.
பாடப்பட்டோன்: ஏறைக் கோன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்
பிறர்கை யறவு தான்நா ணுதலும்
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பின் கொலைவேல்
கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்

ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை
எற்படு பொழுதின் இனம்தலை மயங்கிக்
கட்சி காணாக் கடமான் நல்லேறு
மடமான் நாகுபிணை பயிரின் விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
பெருங்கல் நாடன்எம் ஏறைக்குத் தகுமே

அருஞ்சொற்பொருள்:-

தமர் = தமக்கு வேண்டியவர்
தப்பின் = தவறு செய்தால்
நோன்றல் = பொறுத்தல்
கையறவு = வறுமை, செயலற்ற நிலை
மைந்து = வலிமை
சிலை = வில்
மலர்ந்த = விரிந்த
கோடல் = செங்காந்தள் மலர்
ஆடுதல் = அசைதல், அலைதல்(தவழுதல்)
தவிர்த்தல் = தடுத்தல்
மீமிசை = மலையுச்சி
எல் = கதிரவன்
படுதல் = மறைதல்
தலைமயக்கம் = இடம் தடுமாற்றம்
கட்சி = சேக்கை
கடம் = காடு
மடம் = மென்மை
நாகு = இளமை
பிணை = பெண்மான்
பயிர்த்தல் = அழைத்தல், ஒலித்தல்
விடர் = மலைப்பிளப்பு
முழை = குகை
இரு = பெரிய
புகர் = கபில நிறம், கருமை கலந்த பொன்மை
போத்து = விலங்கு துயிலிடம்
ஓர்த்தல் = கேட்டல்

இதன் பொருள்:-

தமர்தன்=====> பெருமகன்

தமது சுற்றத்தார் தவறேதும் செய்தால் அதைப் பொறுத்தருள்வதும், பிறர் வறுமையைக் கண்டு தான் நாணுதலும், தன் படையைப் பழி கொடுக்க விடாத வலிமையுடைவனாக இருத்தலும், வேந்தர்கள் உள்ள அவையில் நிமிர்ந்து நடத்தலும் நும்மால் மதிக்கப்படும் தலைவர்களுக்குத் தகுந்த குணங்கள் அல்ல. எம் தலைவன், வில்லை வலித்தலால் அகன்ற மார்பினையும், கொல்லும் வேலினையும், செங்காந்தள் மலரான மாலையையும் கொண்ட குறவர்க்குத் தலைவன்.

ஆடுமழை=====> தகுமே

தவழும் மேகங்களைத் தடுக்கும் பயன் பொருந்திய உயர்ந்த மலையின் உச்சியில் கதிரவன் மறையும் பொழுது, தனது கூட்டத்தில் இருந்து பிரிந்து, தான் சேர வேண்டிய இடம் தெரியாமல் காட்டில் கலங்கிய ஆண்மான், தன் மெல்லிய இளம் பெண்மானை அழைக்கும் ஒலியை மலைப்பிளவில் இருந்து கபில நிறமான பெரிய புலி கேட்கும் பெரிய மலை நாடனாகிய எங்கள் ஏறைக் கோனுக்குத் அக்குணங்களெல்லாம் தகுந்தனவாகும்.

சிறப்புக் குறிப்பு:-

நெடுங்காலமாக நண்பராக இருக்கும் ஒருவர், தன்னைக் கேளாது, உரிமையோடு ஒரு செயலைச் செய்தால், அதை விரும்பி ஏற்றுக் கொள்வதுதான் நெடுங்கால நட்பின் அடையாளம் என்ற கருத்தைத் திருவள்ளுவர்,

விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். (குறள் - 804)

என்ற குறளில் கூறுவது இங்கு ஒப்பிடத் தக்கதாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #157 on: July 31, 2013, 08:10:04 PM »
புறநானூறு, 158. (உள்ளி வந்தெனன் யானே!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : வாழ்த்தியல். பரிசில் கடாநிலையும் என்றும் கூறுவர்.
===================================

முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;

காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
மாரி ஈகை மறப்போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக், கொடும்பூண் எழினியும்;
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை

அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்

கொள்ளார் ஓட்டிய நள்ளியும் எனஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை அழிவரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கென விரைந்துஇவண்
உள்ளி வந்தனென் யானே; விசும்புஉறக்

கழைவளர் சிலம்பின் வழையடு நீடி
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்
அதிரா யாணர் முதிரத்துக் கிழவ

இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண
இசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம் படுக நீ ஏந்திய வேலே!

அருஞ்சொற்பொருள்:-

கடிப்பு = குறுந்தடி
இகுத்தல் = அறைதல், ஒலித்தல்
வால் = வெண்மை
வளை = சங்கு
துவைத்தல் = ஒலித்தல், முழங்கல்
கறங்கல் = ஒலித்தல்
வரை = மலையுச்சி
பிறங்குதல் = உயர்தல்
கடத்தல் = வெல்லுதல்
ஈர் = குளிர்ச்சி
சிலம்பு = மலை
நளிதல் = செறிதல்
திறல் = வலிமை
திருந்துதல் = ஒழுங்காதல், சிறப்புடையதாதல்
உலைவு = வறுமை
நனி = மிகுதியாக
கொள்ளார் = பகைவர்
அழி = இரக்கம்
அற்றம் = துன்பம்
விசும்பு = ஆகாயம்
கழை = மூங்கில்
சிலம்பு = மலை
வழை = சுரபுன்னை
ஆசினி = ஒரு வகை மரம்
கடுவன் = ஆண் குரங்கு
துய் = பஞ்சு மென்மை
கை இடூஉ = கையால் குறி செய்து
பயிர்தல் = அழைத்தல்
அதிர்தல் = தளர்தல்
யாணர் = புது வருவாய்

இதன் பொருள்:-

முரசுகடிப்பு=====> ஓரியும்

நெடிய மலையுச்சியிலிருந்து ஒலியுடன் கற்களில் மோதி ஓடி வரும் வெண்மையான அருவிகளுடைய பறம்பு மலைக்குத் தலைவன் பாரி. அவன், குறுந்தடிகளால் அறையப்பட்ட முரசுகள் ஒலிக்க வெண் சங்கு முழங்கத் தன்னுடன் போருக்கு வந்த மூவேந்தர்களுடன் போரிட்டவன். வலிய வில்லை உடைய ஓரி என்பவன், உயர்ந்த உச்சிகளையுடைய கொல்லி மலையை ஆண்டவன்.

காரி=====> நளிமுழை

காரி என்னும் குதிரையில் சென்று பெரும்போரில் வெற்றியும், மழை போன்ற வண்மையும், போர் புரிவதில் மிகுந்த வீரமும் உடையவன் மலையமான் திருமுடிக்காரி. எழினி என்று அழைக்கப்பட்ட அதியமான், உயர்ந்த (செலுத்தப் படாத) குதிரை என்னும் மலையையும், கூரிய வேலையும், கூவிள மாலையையும், வளைந்த அணிகலன்களையுமுடையவன். மிகக் குளிர்ந்த மலையின் இருள் செறிந்த குகையையும்,

அருந்திறல்=====> வண்மை

மிகுந்த வலிமையும், கடவுள் காக்கும் உயர்ந்த உச்சியையும் உடைய பெரிய மலை நாடன் வையாவிக் கோப்பெரும் பேகன். நற்றமிழால் மோசி (உறையூர் ஏணிச்சேறி முடமோசியார்) என்னும் புலவரால் பாடப்பட்டவன் ஆய் அண்டிரன். நள்ளி என்பவன் ஆர்வத்தோடு தன்னை நினைத்து வருவோர் வறுமை முற்றிலும் தீருமாறு குறையாது கொடுக்கும் பெருமைக்குரிய வண்மையும்

கொள்ளார்=====> விசும்புஉற

பகைவரைத் துரத்தி வெற்றி கண்ட வலிமையும் உடையவன். இவர் எழுவரும் மறைந்த பின்னர் இரக்கம் வரும் வகையில், பாடிவரும் பாணரும் மற்றவரும் படும் துன்பத்தை தீர்ப்பவன் நீ என்பதால் உன்னை நினைத்து நான் இங்கே விரைந்து வந்தேன். வானத்தைத் தொடுமளவிற்கு

கழைவளர்=====> வேலே

மூங்கில் வளரும் மலையிடத்து சுரபுன்னையோடு ஓங்கி, ஆசினி மரத்தோடு அழகாக வளர்ந்திருக்கும் பலாவின்மேல் ஆசைப்பட்டு, முள்ளைப் புறத்தேயுடைய முதிர்ந்த பலாப்பழத்தைப் பெற்ற ஆண்குரங்கு பஞ்சுபோல் மயிருடைய தலையையுடைய பெண் குரங்கைக் கையால் குறி செய்து அழைக்கும். இத்தகைய குறையாத புது வருவாயையுடைய முதிரமென்னும் மலைக்குத் தலைவ! இவ்வுலகத்து விளங்கும் சிறப்பும் நன்கு செய்யப்பட்ட தேர்களும் உடைய குமணனே! புகழ் மேம்பட்ட வண்மையுடன் பகைவரை வென்று உன் வேல் உயர்வதாக!

பாடலின் பின்னணி:-

கடையேழு வள்ளல்கள் இறந்த பிறகு, இரவலர்க்குப் பெருமளவில் பரிசளிப்பவன் குமணன் என்று கேள்விப்பட்டுப், பெருஞ்சித்திரனார் அவனிடம் பரிசில் பெறச் சென்றார். இப்பாடலில், கடையேழு வள்ளல்களையும் குமணனையும் பெருஞ்சித்திரனார் புகழ்ந்து பாடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #158 on: July 31, 2013, 08:13:25 PM »
புறநானூறு, 159. (கொள்ளேன்! கொள்வேன்!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் கடாநிலை.
===================================

வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின்
தீர்தல்செல் லாது, என் உயிர்எனப் பலபுலந்து
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று
முன்றிற் போகா முதிர்வினள் யாயும்;

பசந்த மேனியொடு படர்அட வருந்தி
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள் பெரிதுஅழிந்து
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று

நீர்உலை யாக ஏற்றி மோரின்று
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம்பழியாத்
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்
என்றாங்கு இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்

கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்
ஈத்த நின்புகழ் ஏத்தித் தொக்கஎன்

பசிதினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்துஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்துநீ
இன்புற விடுதி யாயின் சிறிது
குன்றியும் கொள்வல் கூர்வேற் குமண!

அதற்பட அருளல் வேண்டுவல் விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்நிற் பாடிய யானே

அருஞ்சொற்பொருள்:

தீர்தல் = முடிதல்
புலத்தல் = வெறுத்தல்
குறும்பல = குறுகிய பல
ஒதுங்குதல் = நடத்தல்
கதுப்பு = மயிர்
துயில்தல் = உறக்கம், சாவு
முன்றில் = முற்றம்
படர் = துன்பம், நோவு
அடல் = வருத்தம்
மருங்கு = பக்கம், இடுப்பு
அழிவு = வருத்தம்
அகைத்தல் = எழுதல், கிளைத்தல் (முளைத்தல்)
அவிழ் = சோறு
பதம் = உணவு
பாசடகு = பசிய இலை
மிசைதல் = உண்டல்
துவ்வல் = புசித்தல்
வெய்யோள் = விரும்புபவள்
கானவர் = வேடர்
புனம் = கொல்லை, வயல்
ஐவனம் = மலைநெல்
மை = பசுமை
கவின் = அழகு
ஈனல் = ஈனுதல்
ஏனல் = தினை
இழும் = துணையான ஓசை
கருவி = துணைக்கரணம்
தலைஇ = பெய்து
தொக்க = திரண்ட
திரங்குதல் = தளர்தல்
ஒக்கல் = சுற்றம்
மருப்பு = கொம்பு (தந்தம்)
தவிர்தல் = நீக்குதல்
குன்றி = குன்றி மணி (குண்டு மணி)
விறல் = வெற்றி
விழு = சிறந்த
திணை = குடி

இதன் பொருள்:-

வாழும்=====> யாயும்

தான் பல ஆண்டுகள் வாழ்ந்தும் இன்னும் தன் உயிர் போகவில்லையே என்று தன் வாழ் நாட்களைப் பலவாறாக வெறுத்து கோலைக் காலாகக் கொண்டு அடிமேல் அடிவைத்து நடப்பவளாய், வெள்ளை நூல் விரித்தது போன்ற முடியுடையவளாய், கண் பார்வை பழுதடைந்ததால் முற்றத்திற்குப் போக முடியாதவளாய் என் தாய் இருக்கிறாள்.

பசந்த=====> உப்பின்று

ஓளியிழந்த மேனியுடன் வறுமைத் துயரம் வருத்துவதால் வருந்தி இடுப்பில் பல சிறு குழந்தைகளுடன், குழந்தைகள் பிசைந்து பால் குடித்ததால் வாடிய மார்பகங்களுடன் பெருந்துயர் அடைந்து, குப்பையில் முளைத்த கீரைச் செடியில், முன்பு பறித்த இடத்திலேயே மீண்டும் முளைத்த, முற்றாத இளந்தளிரைக் கொய்து உப்பில்லாத

நீர்உலை=====> கானவர்

நீரில் வேகவைத்து மோரும் சோறும் இல்லாமல் வெறும் இலையை மட்டுமே உண்டு, அழுக்குப் படிந்த கிழிந்த ஆடையை உடுத்தி, இல்லற வாழ்வைப் பழித்து உண்ணாதவள் என்னை விருபும் என் மனைவி. என் தாயும் என் மனைவியும் மனம் மகிழ வேண்டும். வேடர்கள்

கரிபுனம்=====> தொக்கஎன்

மூட்டிய தீயால் எரிக்கப்பட்டு கருமை நிறமாகத் தோன்றும் அகன்ற நிலப்பகுதியை நன்கு உழுது மலை நெல்லை விதைத்ததால் பசுமையாக அழகுடன் தோன்றும் தினைப் பயிர்கள், மழை பெய்யாததால் கதிர்களை ஈனாமல் இருக்கும் பொழுது “இழும்” என்ற ஒசையுடன் மின்னல் இடி ஆகியவற்றோடு வானம் மழை பொழிந்தது போல் வறியோர்க்கு வழங்கும் உன் புகழைப் பாராட்டிப்

பசிதின=====> பாடிய யானே

பசியால் தளர்ந்த என் சுற்றத்தினரின் கூட்டம் மகிழவேண்டும். உயர்ந்த, பெருமைக்குரிய தந்தங்களையும் கொல்லும் வலிமையுமுடைய யானைகளைப் பெறுவதாக இருந்தாலும் நீ அன்பில்லாமல் அளிக்கும் பரிசிலை ஏற்றுக் கொள்ளமாட்டேன். நீ மகிழ்ச்சியோடு கொடுத்தால் சிறிய குன்றிமணி அளவே உள்ள பொருளாயினும் அதை நான் ஏற்றுக் கொள்வேன். கூறிய வேலையுடைய குமணனே, அவ்வாறு நீ மகிழ்ச்சியோடு அளிப்பதை வேண்டுகிறேன். வெற்றிப் புகழோடு, பழியில்லாத சிறந்த குடியில் பிறந்த புகழுடைய தலைவா! உன்னை நான் புகழ்ந்து பாடுகிறேன்.

பாடலின் பின்னணி:-

வறுமையால் வாடும் தாயும், மனைவியும், குழந்தைகளும், சுற்றத்தாரும் மகிழுமாறு பரிசளிக்க வேண்டுமென்று பெருஞ்சித்திரனார் குமணனிடம் வேண்டுகிறார். மற்றும், குமணன் மனமுவந்து அளிக்காத பரிசு பெரிய யானையாகவிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், அவன் மனமுவந்து அளிக்கும் பரிசில் சிறிய குன்றிமணி அளவே இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன் என்றும் இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #159 on: July 31, 2013, 08:16:01 PM »
புறநானூறு, 160. (செல்லாச் செல்வம் மிகுத்தனை வல்லே !)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் கடாநிலை.
===================================

உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
முளிபுல் கானம் குழைப்பக் கல்லென
அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
அவிழ்புகுவு அறியா தாகலின் வாடிய

நெறிகொள் வரிக்குடர் குளிப்பத் தண்எனக்
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
மதிசேர் நாள்மீன் போல நவின்ற
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
கேடின் றாக பாடுநர் கடும்புஎன

அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்
மட்டார் மறுகின் முதிரத் தோனே
செல்குவை யாயின் நல்குவன் பெரிதுஎனப்
பல்புகழ் நுவலுநர் கூற வல்விரைந்து

உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று
இல்லுணாத் துறத்தலின் இல்மறந்து உறையும்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்

உள்ளில் வறுங்கலம் திறந்துஅழக் கண்டு
மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டுஎனப் பலவும்
வினவல் ஆனா ளாகி நனவின்

அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்
செல்லாச் செல்வம் மிகுத்தனை வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை படுதிரை
நீர்சூழ் நிலவரை உயரநின்
சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே

அருஞ்சொற்பொருள்:-

உரு =அச்சம்
கெழு = பொருந்திய
மிசைதல் = தின்னல்
முளிதல் = உலர்தல்
குழைத்தல்= தளிர்த்தல்
ஏறு = இடி
திரங்குதல் = உலர்தல், தளர்தல்
கசிவு =வியர்வை
அவிழ் = சோறு
நெறிப்படுதல் = உள்ளடங்கல்
குய் = தாளிப்பு
அடிசில் = சோறு
நவில்தல் = செய்தல்
இரீஇ = இருத்தி
கடும்பு = சுற்றம்
பொலம் = பொன்
வீசுதல் = கொடுத்தல்
நட்டார் = நண்பர்கள்
மட்டார் = மது நிறைந்த
மறுகு = தெரு
நுவலுதல் = சொல்லுதல்
துரப்ப = துரத்துதல்
எள் = நிந்தை
எள்ளுற்று = இகழ்ந்து
உணா = உணவு
உளை = ஆண்மயிர்
மாண் = மடங்கு
கடைஇ = மொய்த்து
ஊழ் = முறை
உள்ளுதல் = நினைத்தல்
பொடிதல் = திட்டுதல், வெறுத்தல்
செவ்வி காட்டல் = அழகு காட்டல்
உழத்தல் = வருந்துதல்
மல்லல் = வளமை
அத்தை = அசை
ஏத்துதல் = வாழ்த்துதல்

இதன் பொருள்:-

உருகெழு=====> வாடிய

அச்சம் பொருந்திய ஞாயிற்றின் ஒளிக் கதிர்களால் சுட்டெரிக்கப்பட்ட காய்ந்த புல்லையுடைய காடுகள் தளிர்ப்ப, “கல்’ என்னும் ஒலியுடன் நடுக்கதைத் தரும் ஒசையையுடைய இடியுடன் மழைபொழிந்தது போல், பசியால் தின்னப்பட்ட தளர்ந்த வியர்வையுடைய உடல், சோறு உட்செல்லுவதை அறியாததால் வாடி,

நெறிகொள்=====> கடும்புஎன

உள்ளடங்கிய வரிகளுடைய குடல் நிரம்புமாறு குளிர்ந்ததும் தாளிப்பு உடையதுமான, வளமை மிகுந்த தசையும் நெய்யும் உடைய உணவைத் திங்களைச் சூழ்ந்த விண்மீன்கள் போன்ற பொன்னால் செய்யப்பட்ட சிறிய பாத்திரங்களைச் சூழ வைத்து, உண்ணச் செய்து, பாடும் பாணர்களின் சுற்றம் கேடின்றி வாழ்க என்று வாழ்த்திப்

அரிதுபெறு=====> வல்விரைந்து

பெறுதற்கரிய அணிகலன்களை எளிதில் அளித்து நண்பர்களைவிட அதிகமாக நட்பு கொண்டவன் குமணன். அவன் மது நிறைந்த தெருக்களுடைய முதிரமலைக்குத் தலைவன். அங்கே சென்றால். பெருமளவில் பரிசுகள் அளிப்பான் என்று கூறுபவர் கூற, விரைந்து வந்தேன்.

உள்ளம்=====> ஊழின்

உள்ளம் என்னைத் துரத்த வந்தேன். எனது இல்லத்தில் உணவு இல்லாததால், என் இல்லத்தை வெறுத்து, இல்லத்தை மறந்து திரிந்து கொண்டிருக்கும், குறைந்த அளவே முடியுள்ள என் புதல்வன், பல முறையும் பால் இல்லாத வற்றிய முலையைச் சுவைத்துப் பால் பெறாததால், கூழும் சோறும் இல்லாத பாத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் திறந்து பார்த்து அழுகிறான்.

உள்ளில்=====> நனவின்

அதைக் கண்ட என் மனைவி, “புலி வருகிறது” என்று அவனை அச்சுறுத்துகிறாள்; அவன் அழுகையை நிறுத்தவில்லை; திங்களைக் காட்டி சமாதானப் படுத்த முயல்கிறாள்; ஆனால், அவன் அழுகை ஓயாததால், வருந்தி, “உன் தந்தையை நினைத்து, வெறுத்து அழகு காட்டு” என்று பலமுறை கூறுகிறாள்.

அல்லல்=====> பலவே

அவள் நாளெல்லாம் வருந்துகிறாள். வளமை மிகுந்த குறையாத செல்வத்தை அதிக அளவில் எனக்கு விரைவில் கொடுத்து என்னை அனுப்புமாறு வேண்டுகிறேன். ஒலிக்கும் அலைகளுடைய நீரால் சூழப்பட்ட நில எல்லையில் உனது சிறப்பான புகழைப் பலவாகப் வாழ்த்துவோம்.

பாடலின் பின்னணி:-

வெய்யிலால் வாடும் பயிர்களுக்கு மழை போல இரவலர்க்கு உணவு அளித்து ஆதரிப்பவன் குமணன் என்று கேள்விப்பட்டு, பெருஞ்சித்திரனார் அவனிடம் பரிசில் பெற வந்தார். தன் இல்லத்தில் மனைவியும் குழந்தையும் உணவில்லாமல் வாடுகிறார்கள் என்றும் தனக்குப் பரிசிலை விரைவில் அளித்தருள்க என்றும் இப்பாடலில் பெருஞ்சித்திரனார் குமணனை வேண்டுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #160 on: July 31, 2013, 08:20:23 PM »
புறநானூறு, 161. (வேந்தர் காணப் பெயர்வேன்!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை.
===================================

நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு
ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றல சூல்முதிர்பு
உரும்உரறு கருவியொடு பெயல்கடன் இறுத்து
வளமழை மாறிய என்றூழ்க் காலை

மன்பதை யெல்லாம் சென்றுணக் கங்கைக்
கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு
எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்
அன்பில் ஆடவர் கொன்றுஆறு கவரச்
சென்றுதலை வருந அல்ல அன்பின்று

வன்கலை தெவிட்டும் அருஞ்சுரம் இறந்தோர்க்கு
இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயரஎனக்
கண்பொறி போகிய கசிவொடு உரன்அழிந்து
அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவிநின்
தாள்படு செல்வம் காண்டொறும் மருளப்

பனைமருள் தடக்கையொடு முத்துப்பட முற்றிய
உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு
ஒளிதிகழ் ஓடை பொலிய மருங்கில்
படுமணி இரட்ட ஏறிச் செம்மாந்து
செலல்நசைஇ உற்றனென் விறல்மிகு குருசில்

இன்மை துரப்ப இசைதர வந்துநின்
வண்மையில் தொடுத்தஎன் நயந்தனை கேண்மதி!
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
என்அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
நின்அளந்து அறிமதி பெரும என்றும்

வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்தருந்திப்
பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்
மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல
நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்
தாள்நிழல் வாழ்நர் நன்கலம் மிகுப்ப
வாள்அமர் உழந்தநின் தானையும்
சீர்மிகு செல்வமும் ஏத்துகம் பலவே

அருஞ்சொற்பொருள்:-

நீண்ட = நெடிய (பெரிய)
அழுவம் = கடல்
ஈண்டு = விரைவு
கொண்மூ = மேகம்
வயின் = இடம்
குழீஇ = திரண்டு
சூல் = கருப்பம்
உரும் = இடி
உரறு = ஒலி
கருவி = துணைக்கரணம் (இடி, மின்னல்)
இறுத்தல் = வடித்தல், தங்குதல் ( பெய்தல்)
என்றூஊழ் = கோடை
மன்பதை = எல்லா மக்களும்
உண = உண்ண
மலிதல் = நிறைதல்
கலை = ஆண்மான்
தெவிட்டல் = அசையிடுதல்
யாண்டு = ஆண்டு
பொறி = ஓளி
கசிவு = ஈரம் (இரக்கம்)
உரன் = வலிமை
உழத்தல் = வருந்துதல்
மருளல் = வியத்தல்
மருள் = (போன்ற)உவமை உருபு
தடக்கை = பெரிய கை (துதிக்கை)
மருப்பு = கொம்பு (தந்தம்)
வரை = மலை
மருள் = போன்ற
நோன் = வலிய
பகடு = ஆண் யானை
ஓடை = யானையின் நெற்றிப் பட்டம்
மருங்கு = பக்கம்
இரட்டல் = மாறி மாறி ஒலித்தல்
நசை = விருப்பம்
விறல் = வெற்றி, வலிமை
குருசில் = அரசன், தலைவன்
துரப்ப = துரத்த
தொடுத்தல் = கோத்தல், சேர்த்தல்
நயம் = அன்பு
பொறி = புள்ளி (தேமல்)
அகலம் = மார்பு
புல்லுதல் = தழுவுதல்
புகலுதல் = விரும்புதல்
உழத்தல் = பழகுதல், வெல்லுதல்

இதன் பொருள்:-

நீண்டொலி=====> காலை

நீளமாக ஒலிக்கும் கடல், அதிலுள்ள உள்ள நீர் குறையும் வகையில் அந்நீரை முகந்து கொண்டு, வேகமாகச் செல்லும் மேகங்கள் வேண்டிய இடத்துத் திரண்டு மாமலை போல் தோன்றி, கருவுற்று, இடி, மின்னல் ஆகியவற்றுடன் கூடி முறையாகப் பெய்து வளத்தைத் தரும் மழை இல்லாத கோடைக் காலத்தில்,

மன்பதை=====> அன்பின்று

உலகத்து உயிர்களெல்லாம் குடிப்பதற்காகக் கங்கை ஆறு கரை புரண்டு ஓடும் அளவிற்கு நீர் நிறைந்ததாக உள்ளது. எமக்கும் பிறர்க்கும் நீ அது (கோடையிலும் நீர் நிறைந்த கங்கையைப்) போன்ற தலைவன். அன்பில்லாத வழிப்பறிக் கள்வர், வழியில் செல்வோரைக் கொன்று, அவர்களின் பொருட்களைப் பறித்தலால், முடிவற்ற காட்டு வழி செல்லுவதற்கு எளிதானதல்ல. தம் உயிர் மீது அன்பில்லாமல்

வன்கலை=====> மருள

வலிய கலைமான்கள் (ஆண் மான்கள்) அசைபோட்டுத் திரியும் அரிய காட்டு வழியில் சென்றவர்க்கு, “இன்றோடு ஒரு ஆண்டு கழிந்தது” என்று எண்ணிக் கண்களில் ஒளியிழந்து, இரக்கத்தோடு உடல் வலிமையும் இழந்து, பொறுத்தற்கரிய துன்பமுற்று வறுமையில் என் மனைவி வாடுகிறாள். உன் முயற்சியால் வந்த செல்வத்தை அவள் காணுந்தோறும் வியக்கும் வகையில்,

பனைமருள்=====> குருசில்

பனை போன்ற துதிக்கையையும், முத்து உண்டாகுமாறு முதிர்ந்த தந்தங்களையும் உடைய மலை போன்ற, ஓளி திகழும் நெற்றிப் பட்டங்கள் அழகு செய்யும் யானையின் இரு பக்கங்களிலும் தொங்கும் மணிகள் மாறி மாறி ஒலிக்க அந்த யானை மீது ஏறிப் பெருமையுடன் செல்ல விரும்புகிறேன். வெற்றிப்புகழ் மிகுந்த தலைவனே!

இன்மை=====> என்றும்

எனது வறுமை துரத்த, உனது புகழ் என்னைக் கொண்டு வர நான் இங்கு வந்தேன். உனது கொடைத்திறத்தைப் பற்றிய சில செய்திகளை நான் பாடல்களாகத் தொடுத்ததை அன்போடு கேட்பாயாக. நான் அவற்றைச் சொல்வதில் வல்லவனாக இருந்தாலும் இல்லாவிட்டலும் என் அறிவை அளந்து ஆராயாமல், சிறந்த உன்னை அளந்து அறிவாயாக. பெரும! நீ எனக்கு அளிக்கும் பரிசிலைக் கண்டு

வேந்தர்=====> பலவே

மற்ற மன்னர்கள் எந்நாளும் நாணுமாறு நான் திரும்பிச் செல்வேன். சந்தனம் பூசியதும், பல அழகிய புள்ளிகள் (தேமல்கள்) நிறைந்ததுமான உன் அழகான மார்பைச் சிறப்புடை மகளிர் தழுவுந்தோறும் விரும்புபவர்களாகுக. நாளும் முரசு ஒலிக்கும் உன் நாட்டில், உன் நிழலில் வாழும் மக்கள் நல்ல அணிகலன்கள் மிகுந்தவர்களாக இருப்பார்களாக. வாட்போர் புரிவதில் பயிற்சி பெற்ற உன் படையையும், உன் சிறந்த செல்வத்தையும் பலவாக வாழ்த்துவோம்.

பாடலின் பின்னணி:-

இளவெளிமான் அளித்த பரிசிலை ஏற்க மறுத்து, பெருஞ்சித்திரனார் குமணிடம் பரிசில் பெறச் சென்றார். வறுமையில் வாடும் தன் மனைவியை நினைத்து வாடும் அவர் மனத்தை அறிந்த குமணன், அவருக்குப் பெருமளவில் பரிசளிக்க நினைத்தான். அந்நிலையில், பெருஞ்சித்திரனார் குமணன் முன் நின்று, “அரசே, நான் மலை போன்ற யானையின் மீது ஏறி என் ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். நான் யானை மீது வருவதைக் கண்டு என் மனைவி வியப்படைய வேண்டும். என் தகுதியை ஆராயாமல், உன் தகுதியை ஆராய்ந்து எனக்குப் பரிசு வழங்குக. எனக்குப் பரிசு கொடுக்காத மன்னர்கள், நான் உன்னிடம் பெறும் பரிசுகளைக் கண்டு நாணுமாறு எனக்கு நீ பரிசளிக்க வேண்டுகிறேன்.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #161 on: July 31, 2013, 08:22:55 PM »
புறநானூறு, 162. (இரவலர்அளித்த பரிசில்!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் விடை.
===================================

இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண்இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி; நின்ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த
நெடுநல் யானைஎம் பரிசில்;
கடுமான் தோன்றல் செல்வல் யானே

அருஞ்சொற்பொருள்:-

புரவலர் = அரசன், கொடையாளன்
கடிமரம் = காவல் மரம்
கடுமான் = விரைவாகச் செல்லும் குதிரை
தோன்றல் = அரசன், தலைவன்

இதன் பொருள்:-

இரப்பவர்களுக்குக் கொடையாளன் நீ அல்லன். இரப்பவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் இல்லாமலும் இல்லை. இரவலர்கள் உள்ளனர் என்பதையும் அவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவும் புரவலர்களும் உள்ளனர் என்பதையும் நீ அறிந்து கொள்வாயாக. உன் ஊரில் உள்ள காவல் மரம் வருந்துமாறு அதில் நான் கட்டிய பெரிய நல்ல யானை, நான் உனக்கு அளிக்கும் பரிசில். விரைவாகச் செல்லும் குதிரைகளையுடைய தலைவா! நான் செல்கிறேன்.

பாடலின் பின்னணி:-

இளவெளிமான் தன் தகுதி அறிந்து தனக்குப் பரிசளிக்கவில்லை என்று எண்ணி, அவன் அளித்த பரிசிலை ஏற்க மறுத்து,பெருஞ்சித்திரனார் குமணனிடம் பரிசு பெறச் சென்றார். குமணன், பெருஞ்சித்திரனாருக்குப் பெருமளவில் பரிசளித்தான். பரிசு பெற்ற பெருஞ்சித்திரனார், தன் ஊருக்குப் போகாமல், இளவெளிமான் ஊருக்குச் சென்று குமணன் அளித்த யானை ஒன்றை, இளவெளிமானின் காவல் மரத்தில் கட்டி, அதைத் தான் அவனுக்கு அளித்த பரிசு என்று கூறிச் சென்றார். மற்றும், இப்பாடலில் “இரப்போர்க்குப் பொருள் கொடுக்கும் புரவலன் நீ அல்லன்; ஆனால், பொருள் கொடுத்து உதவும் புரவலர்கள் இல்லாமலும் இல்லை. உலகில் இரவலர்களும் புரவலர்களும் உள்ளனர் என்பதை நீ அறிவாயாக” என்று அவனுக்கு அறிவுரை கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #162 on: July 31, 2013, 08:31:16 PM »
புறநானூறு, 163. (எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே!)
பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: பெருஞ்சித்திரனாரின் மனைவி.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை.
===================================

நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேல் குமணன் நல்கிய வளனே

அருஞ்சொற்பொருள்:-

நயந்து = விரும்பி
உறைதல் = வாழ்தல்
மாண் = மடங்கு
முதலோர் = மூத்தோர்
கடும்பு = சுற்றம்
யாழ - முன்னிலை அசைச் சொல்
குறி எதிர்ப்பு = எதிர் பார்ப்பு
சூழ்தல் = ஆராய்தல், கலந்து ஆலோசித்தல்
வல்லாங்கு = நல்ல முறையில் (சிறப்பாக)

இதன் பொருள்:-

உன்னை விரும்பி வாழ்பவர்க்கும், நீ விரும்பி வாழ்பவர்க்கும், பல வகைகளிலும் சிறந்த கற்புடைய உனது சுற்றத்தாருள் மூத்தோருக்கும், நமது சுற்றத்தாரின் கொடிய பசி நீங்குவதற்காக உனக்குக் கடன் கொடுத்தோர்க்கும், மற்றும் இன்னவர்களுக்கு என்னாமல், என்னையும் கலந்து ஆலாசிக்காமல், இப்பொருளை வைத்து நாம் நன்றாக வாழலாம் என்று எண்ணாது அதை எல்லோர்க்கும் கொடு, என் மனைவியே! பழங்கள் தொங்கும் மரங்கள் நிறைந்த முதிரமலைத் தலைவனும் செவ்விய வேலையுடையவனுமாகிய குமணன் கொடுத்த இந்தச் செல்வத்தை

பாடலின் பின்னணி:-

குமணனிடம் பரிசு பெற்ற பெருஞ்சித்திரனார், தன் இல்லத்திற்குச் சென்று, தான் குமணனிடமிருந்து பரிசாகப் பெற்ற செல்வத்தை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளுமாறு தன் மனைவியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #163 on: July 31, 2013, 08:37:23 PM »
புறநானூறு, 164. (வளைத்தாயினும் கொள்வேன்!)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் கடாநிலை.
===================================

ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்

மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண!
என்நிலை அறிந்தனை யாயின் இந்நிலைத்
தொடுத்தும் கொள்ளாது அமையலென்; அடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர்
இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே

அருஞ்சொற்பொருள்:-

அடுதல் = சமைத்தல்
நனி = மிகவும்
கோடு = பக்கம்
ஆம்பி = காளான்
தேம்பல் = இளைத்தல், மெலிதல், வாடல்
உழத்தல் = வருந்துதல்
திரங்கி = தளர்ந்து
இல்லி = துளை
தூர்த்தல் = நிரப்புதல்
எவ்வம் = துன்பம், வெறுப்பு
படர்தல் = செல்லுதல்
தொடுத்தும் = வளைத்தும்
பச்சை = தோல்
மண் = மார்ச்சனை
வயிரியர் = கூத்தர்

இதன் பொருள்:-

ஆடுநனி=====> மழைக்கண்என்

சமைத்தலை முற்றிலும் மறந்த உயர்ந்த பக்கங்களையுடைய அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. உடல் மெலிந்து வருந்தி, பால் இல்லாததால் தோலோடு சுருங்கித் துளை மூடிய பயனில்லாத வற்றிய முலையச் சுவைத்து அழும் என் குழந்தையின் முகத்தை நோக்கி, நீர் மல்கிய ஈரம் படிந்த இமைகளைக்கொண்ட கண்களுடைய என்

மனையோள்=====> தோயே

மனைவியின் துன்பத்தை நினைத்து உன்னை நாடி வந்தேன். நல்ல முறையில் போரிடும் குமணா! என் நிலையை நீ அறிந்தாயாயின், இந்த நிலையில் உன்னை வளைத்துப் பிடித்துப் பரிசில் பெறாமல் விடமாட்டேன். பலவாக அடுக்கிய, இசையமைந்த நரம்புகளையுடைய, தோலால் போர்த்தப் பட்ட நல்ல யாழையும், மார்ச்சனை பூசிய மத்தளத்தையும் உடைய கூத்தர்களின் வறுமையைத் தீர்க்கும் குடியில் பிறந்தவனே!

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், தன் வறுமையையும் தன் மனைவி படும் துயரத்தையும் குமணனிடம் எடுத்துரைத்துத், தனக்குப் பரிசில் அளிக்குமாறு பெருந்தலைச் சாத்தனார் குமணனை வேண்டுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #164 on: July 31, 2013, 08:41:55 PM »
புறநானூறு, 165. (எனக்குத் தலை ஈய வாள் தந்தனனே!)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: குமணன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் விடை.
===================================

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே;
துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையில்
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;

தாள்தாழ் படுமணி இரட்டும் பூனுதல்
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றெனன் ஆகக் கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்

நாடுஇழந் ததனினும் நனிஇன் னாதுஎன
வாள்தந் தனனே தலைஎனக்கு ஈயத்
தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்
ஆடுமலி உவகையோடு வருவல்
ஓடாப் பூட்கைநின் கிழமையோன் கண்டே

அருஞ்சொற்பொருள்:-

மன்னா = நிலை இல்லாத
மன்னுதல் = நிலை பெறுதல்
நிறீஇ = நிலை நிறுத்தி
துன்னுதல் = அணுகுதல்
தொடர்பு = தொடர்ச்சி, ஒழுங்கு
படு = பெரிய
இரட்டல் = ஒலித்தல்
பூ = புள்ளி
நுதல் = நெற்றி
அருகா = குறையாத
வய = வலிய
மான் = குதிரை
தோன்றல் = அரசன், தலைவன்
கொன்னே = வறிதே
நனி = மிகவும்
ஆடு = வெற்றி
மலி = மிகுந்த
பூட்கை = கொள்கை
கிழமையோன் = உரிமையோன்

இதன் பொருள்:-

மன்னா=====> அறியலரே

நிலையில்லாத இவ்வுலகில் நிலைபெற நினைத்தவர்கள் தம் புகழை நிறுவித் தாம் இறந்தனர். அணுகுதற்கரிய சிறப்புடைய செல்வந்தர்கள் வறுமையால் இரப்பவர்களுக்கு ஒன்றும் ஈயாததால், முற்காலத்தில் வாழ்ந்த வள்ளல்களின் வரிசையில் சேராதவர்களாக உள்ளனர்.

தாள்தாழ்=====> பெயர்தல்என்

கால்வரைத் தாழ்ந்து ஒன்றோடு ஒன்று மாறி மாறி ஒலிக்கும் பெரிய மணிகளும், நெற்றியில் புள்ளிகளும், அசையும் இயல்பும் உடைய யானைகளை, பாடிவருபவர்க்குக் குறையாது கொடுக்கும் அழிவில்லாத நல்ல புகழையும், வலிய குதிரைகளையும் உடைய தலைவனாகிய குமணனைப் பாடி நின்றேன். பெருமை பெற்ற பரிசிலர் பரிசு பெறாமல் வறிதே செல்லுதல்,

நாடு=====> கண்டே

தான் நாடு இழந்ததைவிட மிகவும் கொடுமையானது என்று கூறித் தன் தலையை எனக்குப் பரிசாக அளிப்பதற்காக என்னிடம் வாளைக் கொடுத்தான். தன்னிடம் தன்னைவிடச் சிறந்த பொருள் யாதும் இல்லாமையால் அவன் அவ்வாறு செய்தான். போரில் புறம் காட்டி ஓடாத கொள்கையுடைய உன் தமையனைக் கண்டு வெற்றி மிகுந்த மகிழ்ச்சியோடு நான் உன்னிடம் வந்தேன்.

பாடலின் பின்னணி:-

கடையேழு வள்ளல்களின் காலத்திற்குப் பிறகு கொடையிற் சிறந்தவனாக விளங்கியவன் வள்ளல் குமணன். அவன் முதிர மலைப் பகுதியை ஆண்டு வந்தான். அவன் பெரும் புகழோடு நல்லாட்சி நடத்தியதைக் கண்டு பொறாமை அடைந்த அவன் இளவல் இளங்குமணன், குமணனோடு போரிட்டான். அப்போரில் தோற்ற குமணன், காட்டிற்குச் சென்று அங்கே வழ்ந்து வந்தான். அச்சமயம், பெருந்தலைச் சாத்தனார் குமணனைப் பாடிப் பரிசில் பெறச் சென்றார். அவன் அவருக்கு எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். அவ்வாறு இருப்பினும், அவன் பெருந்தலைச் சாத்தனார் பரிசு ஒன்றுமில்லாமல் திரும்பிச் செல்வதை விரும்பவில்லை. ஆகவே, அவன் தன் தலையை வெட்டி, அதைக் கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் அவன் பெருமளவில் பரிசு கொடுப்பான் என்று கூறித் தன் வாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்தான். அவ்வாளைப் பெற்றுக் கொண்டு, பெருந்தலைச் சாத்தனார் குமணன் சொல்லியவாறு செய்யாமல், இளங்குமணனிடம் சென்று தான் குமணனைச் சந்தித்ததையும் அவன் வாள் கொடுத்ததையும் இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

உலகில் நிலைபெற்று இருப்பது புகழைத் தவிர வேறொன்றும் இல்லை என்று திருவள்ளுவர் கூறுவது இங்கு குறிப்பிடத் தக்கது.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல். (குறள் - 233)

பிறர் வறுமையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்பவன் (ஒப்புரவு செய்பவன்) வருந்துவது அவனால் பிறருக்கு உதவி செய்ய முடியாத நிலையில்தான் என்ற கருத்தைத் திருவள்ளுவர்,

நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும்நீர
செய்யாது அமைகலா வாறு. (குறள் - 219)

என்று ஒப்புரவு என்னும் அதிகாரத்தில் கூறுகிறார். திருவள்ளுவர் கருத்தும், இப்பாடலில் குமணன் தன்னால் பெருந்தலைச் சாத்தனாருக்குப் பரிசு கொடுக்க முடியவில்லையே என்று வருந்துவதும் ஒத்திருப்பது குறிப்பிடத் தக்கது.