Author Topic: ~ புறநானூறு ~  (Read 108589 times)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #120 on: June 19, 2013, 07:35:03 PM »


புறநானூறு, 121. (பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பொதுவியல்.
துறை : முதுமொழிக் காஞ்சி.
====================================

ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசில் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்
அதுநற்கு அறிந்தனை ஆயின்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!

அருஞ்சொற்பொருள்:-

உள்ளி = நினைத்து
வரிசை = தகுதி
தோன்றல் = அரசன், தலைவன்
மதி - அசைச்சொல்

இதன் பொருள்:-

ஒரு திசையில் உள்ள வள்ளல் ஒருவனை நினைத்து, பல (நான்கு) திசைகளிலிருந்தும் பரிசுபெற விரும்பும் மக்கள் பலரும் வருவர். பெரிய வண்மையுடைய அரசே! (தகுதியை ஆராயாமல்) அவர்களுக்குப் பரிசுகள் அளிப்பது மிகவும் எளிது. அவர்களின் தகுதியை அறிந்து அவர்களுக்குப் பரிசுகள் அளிப்பது அரிய செயலாகும். அவர்களின் தகுதியை நீ நன்கு அறிந்தாயானால், புலவர்கள் அனைவரையும் ஒரே தரமாக (பொது நோக்காக) மதிப்பிடுவதைத் தவிர்ப்பாயாக.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம், கபிலர் மலையமான் திருமுடிக்காரியைக் காணச் சென்றார். எல்லாப் புலவர்களுக்கும் சிறப்புச் செய்வதைப் போலவே காரி கபிலருக்கும் சிறப்புச் செய்தான். அது கண்ட கபிலர், புலவரின் தகுதி அறிந்து சிறப்புச் செய்தல் வேண்டும் என்று காரிக்கு இப்படலில் அறிவுரை கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பரிசளிப்பவர்கள் பரிசு பெறுபவர்களின் தகுதியை ஆராய்ந்து பரிசளிக்க வேண்டும் என்ற கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். (குறள் - 528)

பொருள்: அரசன் எல்லாரையும் ஒரே தன்மையராகப் பார்க்காமல், அவரவர் தகுதிக்கேற்ப வரிசைப்படுத்திப் பார்ப்பானானால், அச்சிறப்பை நோக்கி அவனை விடாது நெருங்கி வாழும் சுற்றத்தார் பலராவர்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #121 on: June 19, 2013, 07:36:41 PM »


புறநானூறு, 122. (பெருமிதம் ஏனோ!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
====================================

கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்துஅடிக் காரிநின் நாடே
அழல்புறம் தரூஉம் அந்தணர் அதுவே;
வீயாத் திருவின் விறல்கெழு தானை
மூவருள் ஒருவன் துப்பாகியர் என

ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே;
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோள்அளவு அல்லதை
நினதுஎன இலைநீ பெருமிதத் தையே

அருஞ்சொற்பொருள்:-

உடலுநர் = பகைவர்
ஊக்கல் = முயலுதல்
திருந்துதல் = அழகு பெறுதல், செவ்விதாதல்
புறந்தருதல் = பாதுகாத்தல்
வீதல் = கெடுதல், சாதல்
விறல் = வலிமை, வெற்றி
கெழு = பொருந்திய
துப்பு = துணை, வலிமை
ஏத்துதல் = புகழ்தல்
கூழ் = பொன், பொருள், உணவு, செல்வம்
வடமீன் = அருந்ததி (கற்பில் சிறந்தவள்)
புரைதல் = ஒத்தல்
அரிவை = பெண் (மனைவி)

இதன் பொருள்:-

கடல்கொள=====> துப்பாகியர் என

வீரக்கழல் அணிந்த சிறந்த திருவடிகளுடைய திருமுடிக்காரி! உன் நாடு கடலால் கொள்ளப்படாதது; அதை கொள்ளுதற்குப் பகைவரும் முயற்சி செய்ய மாட்டார்கள். அது வேள்வித் தீயைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு உரியது. குறையாத செல்வத்தையும் வெற்றி பொருந்திய படையையுமுடைய மூவேந்தருள் ஒருவன் தனக்குத் துணையாகப் போரிட வேண்டுமென்று

ஏத்தினர்=====> பெருமிதத் தையே

உன்னைப் புகழ்ந்து உனக்கு அளிக்கும் பொருள் உன் குடியை வாழ்த்தி வரும் பரிசிலர்க்கு உரியது. அருந்ததியைப் போல் கற்பில் சிறந்தவளும் மெல்லிய மொழியுமுடையவளாகிய உன் மனைவியின் தோள்கள் மட்டுமே உனக்கு உரியதாகவும், வெறொன்றும் இல்லாத பெருமிதம் உடையவன் நீ.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில் திருமுடிக்காரியின் வள்ளல் தன்மையை வியந்து, “திருமுடிக்காரி! உன் நாடு கடலால் கொள்ளப்படாதது; அதை அந்தணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டாய். மூவேந்தர்களுக்கு நீ துணையாக இருப்பதற்கு அவர்கள் அளிக்கும் பொருளை இரவலர்களுக்கு அளிக்கிறாய். உனக்கு உரியது உன் மனையின் தோள்கள் மட்டுமன்றி வேறொன்றும் இல்லை. நீ அத்தகைய பெருமிதம் உடையவன்” என்று கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #122 on: June 19, 2013, 07:38:02 PM »
புறநானூறு, 123. (மயக்கமும் இயற்கையும்!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
====================================

நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே

அருஞ்சொற்பொருள்:-

நாள்மகிழ் = அரசன் நாட்பொழுதில் வீற்றிருக்கும் திருவோலக்கம் (அத்தாணி மண்டபம்)
தொலைதல் = கெடுதல், முடிதல்
மீமிசை = மேலுக்கு மேல்
உறை = துளி

இதன் பொருள்:-

பகல் பொழுதில் கள்ளுண்டு அரசவையில் மகிழ்ச்சியோடு இருக்கும் பொழுது தேர்களைப் பரிசாக அளிப்பது யாவர்க்கும் எளிது. ஆனால், குறையாத புகழுடன் விளங்கும் மலையமான் திருமுடிக்காரி அவ்வாறு கள்ளுண்டு மகிழாது தெளிவாக இருக்கும்பொழுது அளித்த வேலைப்பாடுகள் நிறைந்த நெடிய தேர்கள் பயனுள்ள முள்ளூர் மலைமேல் விழுந்த மழைத்துளிகளைவிட அதிகம்.

பாடலின் பின்னணி:-

ஓரு மன்னன் கள்ளுண்டு மகிழ்ந்து இருக்கும் பொழுது புலவர்களுக்குத் தேர்களைப் பரிசாக அளிப்பது எளிது. அவ்வாறு கள்ளுண்டு மகிழாது தெளிந்த அறிவோடு இருக்கும் பொழுது திருமுடிக்காரி புலவர்களுக்குப் பரிசாக அளித்த தேர்கள் முள்ளூர் மலைமேல் பெய்த மழைத்துளிகளைவிட அதிகம் என்று இப்பாடலில் கபிலர் காரியின் வள்ளல் தன்மையைப் புகழ்கிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #123 on: June 19, 2013, 08:00:12 PM »


புறநானூறு, 124. (வறிது திரும்பார்!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
====================================

நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர்; நெறிகொளப்
பாடுஆன்று இரங்கும் அருவிப்
பீடுகெழு மலையற் பாடி யோரே

அருஞ்சொற்பொருள்:-

நாள் = நல்ல நாள்
புள் = பறவை
தட்ப = தடுக்க
பதன் = பக்குவம்
திறன் = தன்மை, வகை
நெறிகொள் = ஒழுங்கு பட
பாடு = ஒசை
ஆன்று = நிறைந்தது
இரங்கும் = ஒலிக்கும்
பீடு = பெருமை
கெழுதல் = பொருந்துதல்

இதன் பொருள்:-

நல்ல நாளன்று போகாவிட்டாலும், போகும் பொழுது கெட்ட சகுனங்களைக் குறிக்கும் பறவைகள் குறுக்கே வந்தாலும், மன்னனைச் சந்திக்கூடாத நேரத்தில் அவன் அவைக்குள் நுழைந்தாலும், தன்மையற்ற சொற்களைச் சொன்னாலும் இடைவிடாத ஓசை நிறைந்த அருவிகளுடைய பெருமை பொருந்திய மலையையுடைய திருமுடிக்காரியைப் பாடியோர் (பரிசு பெறாமல்) வெறுங்கையோடு திரும்ப மாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு:-

திறன் அறிந்து பேச வேண்டும் என்ற கருத்தைத் திருவள்ளுவர் சொல்வன்மை என்ற அதிகாரத்தில் வலியுறுத்தியிருப்பது இங்கு ஒப்பு நோக்குதற்குரியது.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூங்கு இல். (குறள் - 644)

பொருள்: சொல்லும் சொல்லைத் தன்மை அறிந்து சொல்லுக; அப்படிச் சொல்வதைவிட மேலான அறமும் பொருளும் இல்லை. கேட்பவர்களின் தன்மையறிந்து அவர்கள் விரும்புமாறு பேசுவது அறம்; திறமான பேச்சால் தான் நினைத்த காரியத்தைச் சாதிக்க முடிவதால் பொருள் அல்லது இலாபம் கிடைப்பதற்கு வழியுமுண்டு.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #124 on: June 19, 2013, 08:02:20 PM »


புறநானூறு, 125. (புகழால் ஒருவன்!)
பாடியவர்: வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
====================================

பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
பரூஉக்கண் மண்டையொடு ஊழ்மாறு பெயர
உண்கும் எந்தைநிற் காண்குவந் திசினே!
நள்ளாதார் மிடல்சாய்ந்த

வல்லாளநின் மகிழிருக்கையே
உழுத நோன்பகடு அழிதின் றாங்கு
நல்லமிழ்து ஆகநீ நயந்துண்ணும் நறவே;
குன்றத் தன்ன களிறு பெயரக்
கடந்தட்டு வென்றோனும் நிற்கூ றும்மே;

வெலீஇயோன் இவன்எனக்
கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு
விரைந்துவந்து சமந்தாங்கிய
வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
நல்லமர் கடத்தல் எளிதுமன், நமக்குஎனத்

தோற்றோன் தானும் நிற்கூ றும்மே
தொலைஇயோன் இவன்என
ஒருநீ ஆயினை பெரும பெருமழைக்கு
இருக்கை சான்ற உயர்மலைத்
திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே

அருஞ்சொற்பொருள்:-

பனுவல் = பஞ்சு
தயங்குதல் = நிலை தவறுதல்
குறை = உண்ணுவதற்குப் பக்குவப்படுத்தப்பட்ட தசை
பரூஉ = பருமை
மண்டை = இரப்போர் கலம்
ஊழ் = முறைமை
நள்ளாதார் = பகைவர்
மிடல் = வலிமை
சாய்த்தல் = கெடுத்தல், முறித்தல்
மகிழ் இருக்கை = மகிழ்ச்சியான இடம் (அரசவை)
பகடு = காளை மாடு
அழி = வைக்கோல்
நயத்தல் = விரும்புதல்
நறவு = மது
பெயர்தல் = சிதைவுறுதல்
கடந்து அடுதல் = எதிர் நின்று போரிடுதல்
வெலீஇயோன் = வெல்வித்தவன் (வெற்றிக்குக் காரணமாக இருந்தவன்)
கவர்பு = கவர்ந்து
சமம் = போர்
மன் - அசைச்சொல்
தொலைஇயோன் = தோல்விக்குக் காரணமாக இருந்தவன்
சேஎய் = முருகன்

இதன் பொருள்:-

அரசே! பகைவரின் வலிமையை அழித்த வலியவனே! பெண்கள் நூல் நூற்பதற்குப் பயன்படுத்தும் பஞ்சு போல் மென்மையானதாகவும், நெருப்பின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் நன்கு சமைக்கப்பட்டதும் கொழுமை நிறைந்ததுமான ஊன் துண்டுகளையும், பெரிய பாத்திரங்களில் வார்த்த கள்ளையும் முறையாக மாறி மாறி உண்ணலாம் என்று உன் மகிழ்ச்சியான இடத்திற்கு உன்னைக் காண வந்தோம். உழுத வலிய காளை (நெல்லைத் தின்னாமல்) வைக்கோலைத் தின்பதுபோல் நீ விரும்பி உண்ணும் மது அமிழ்தம் ஆகட்டும்.

மலைபோன்ற யானை சிதைவுறுமாறு எதிர் நின்று போரிட்டு வென்றவனும் வெற்றிக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான். வீரக் கழலணிந்த, சிறந்த திருவடிகளால் போர்க்களத்தைக் கைக்கொள்ள விரும்பி, விரைந்து வந்து போரைத் தடுத்த வலிய வேலையுடைய மலையன் வராது இருந்திருந்தானானால், நல்ல போரை வெல்லுதல் நமக்கு எளிதாக இருந்திருக்கும் என்று போரில் தோற்றவனும் தம் தோல்விக்குக் காரணமாக இருந்தவன் நீதான் என்று கூறுவான். ஆகவே, அரசே! உன்னை நட்பாகவும் பகையாகவும் கொண்டவர்களுக்கு, நீ பெரிய மழைக்கு இருப்பிடமான உயர்ந்த மலையையுடைய சிறந்த முருகனைப் போல் ஒப்பற்ற ஒருவன் ஆனாய்.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறைக்கும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் இடையே போர்மூண்டது. அப்போரில், மலையமான் திருமுடிக்காரி, சோழனுக்குத் துணையாக சேரனை எதிர்த்துப் போர் புரிந்தான். அது கண்ட வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தானார், “போரில் வென்றவன் உன்னால்தான் வெற்றி பெற்றாதாகக் கூறுவான். போரில் தோற்றவன், நீ போரில் ஈடுபடாமல் இருந்திருந்தால் தோல்வி அடைந்திருக்க மாட்டோம் என்று கூறுவான்” என்று திருமுடிக்காரியின் வலிமையை இப்பாடலில் புகழ்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

தனது முயற்சியால் வந்த பொருளெல்லாம் பிறர்க்கு அளித்து, எஞ்சியதைக் காரி உண்பது குறித்து, “உழுத நோன்பகடு அழிதின்றாங்கு நல்லமிழ்து ஆகநீ நயந்துண்ணும் நறவே” என்று வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் இப்பாடலில் கூறுவது போல் தோன்றுகிறது.

சூரபத்மன் என்ற அரக்கன் தேவர்களுக்கு இன்னல் விளைவித்தாகவும், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபெருமான் முருகப் பெருமானை உருவாக்கி, அவரைத் தேவர்களுக்குத் துணையாக சூரபத்மனை எதிர்த்துப் போரிடுமாறு பணித்ததாகவும், அப்போரில் முருகப் பெருமான் சூரபத்மனைக் கொன்று வெற்றி பெற்றதாகவும், வெற்றி பெற்ற தேவர்களும் தோல்வியுற்ற அரக்கர்களும் முருகனின் வலிமையைப் புகழ்ந்ததாகவும் கந்த புராணம் கூறுகிறது. தேவர்களுக்குத் துணையாக முருகன் போர் செய்தது போல் காரி சோழனுக்குத் துணையாகப் போர்செய்ததால் இப்பாடலில் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் காரியை முருகனுக்கு ஒப்பிடுகிறார் என்று கருதப்படுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #125 on: June 27, 2013, 09:37:07 PM »


புறநானூறு, 126. (கபிலனும் யாமும்!)
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.
====================================

ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு
பாணர் சென்னி பொலியத் தைஇ
வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே

நின்வயிற் கிளக்குவம் ஆயின் கங்குல்
துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்
பறைஇசை அருவி முள்ளூர்ப் பொருந!
தெறலரு மரபின்நின் கிளையொடும் பொலிய
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்

புலன்அழுக்கு அற்ற அந்த ணாளன்
இரந்துசென் மாக்கட்கு இனிஇடன் இன்றிப்
பரந்துஇசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினமிகு தானை வானவன் குடகடல்
பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப்

பிறகலம் செல்கலாது அனையேம்; அத்தை;
இன்மை துரப்ப இசைதர வந்துநின்
வண்மையின் தொடுத்தனம் யாமே; முள்எயிற்று
அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப
அண்ணல் யானையொடு வேந்துகளத்து ஒழிய

அருஞ்சமம் ததையத் தாக்கி நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:-

ஒன்னார் = பகைவர்
ஒடை = யானையின் நெற்றிப்பட்டம்
சென்னி = தலை
பொலிவு = அழகு
தைத்தல் = இடுதல், பொருத்துதல், அலங்கரித்தல்
விழு = சிறந்த
சீர் = தலைமை
ஒடா = புறமுதுகு காட்டி ஒடாத
பூட்கை = கொள்கை
உரம் = வலிமை
மருகன் = வழித்தோன்றல்
வல்லேம் = வலிமை (திறமை) இல்லாதவர்கள்
வல் = விரைவு
கிளத்தல் = கூறுதல்
கங்குல் = இரவு
துயில் = உறக்கம்
மடி = அடங்குதல்
தூங்கிருள் = மிகுந்த இருள்
இறும்பு = சிறு காடு
பொருநன் = அரசன்
தெறல் = சினத்தல், அழித்தல்
மரபு = பெருமை
பொலிதல் = சிறத்தல், விளங்குதல்
பரத்தல் = மிகுதல்
புலன் = அறிவு
அதற்கொண்டு = அக்காலந் தொடங்கி
வானவன் = சேரன்
குட = மேற்கு
பொலம் = பொன்
நாவாய் = மரக்கலம் (கப்பல்)
அத்தை - அசைச் சொல்
துரப்புதல் = துரத்துதல்
தொடுத்தல் = தொடங்குதல்
எயிறு = பல்
அரவு = பாம்பு
எறிதல் = ஊறு படுத்தல்
உரும் = இடி
இயம்பல் = ஒலித்தல்
சமம் = போர்
ததைதல் = சிதறுதல்
நன்று = பெரிது
நண்ணுதல் = நெருங்குதல் (பொருந்துதல்)
தெவ்வர் = பகைவர்
தாங்குதல் = தடுத்தல்
படப்பை = பக்கத்துள்ள இடம்

இதன் பொருள்:-

ஒன்னார்=====> வல்லே

பகைவர்களுடைய யானைகளின் நெற்றிப் பட்டத்தில் இருந்த பொன்னால் செய்த தாமரைப் பூ போன்ற அணிகலன்களைப் பாணர்களின் தலையில் அணிவித்து அழகு செய்த பெருமையும், சிறந்த தலைமையும், புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையும் உடைய வலியவர்களின் வழித்தோன்றலே! யாம் எதையும் திறம்படக் கூறும் ஆற்றல் இல்லாதவராக இருப்பினும்

நின்வயிற்=====> எல்லாம்

விரைவாக உன்னிடத்து வந்து உன் புகழைச் சொல்லுவேம் என்று இங்கு வந்துள்ளோம். இரவு ஓரிடத்தே அடங்கி உறங்குவது போன்ற அடர்ந்த இருளுடைய சிறுகாடுகளும் பறையொலி போலும் ஒலி பொருந்திய அருவியையுமுடைய முள்ளூர் வேந்தே! அழித்தற்கு அரிய பெருமையுடைய உன் சுற்றத்துடன் நீ விளங்குவாயாக. இவ்வுலக மக்கள் எல்லாரினும்

புலன்அழுக்கு=====> அவ்வழி

தூய அறிவுடைய அந்தணனாகிய கபிலன், இரந்து செல்லும் பரிசிலர்கள் சொல்வதற்கு இனி இடம் இல்லை என்று கூறுமளவுக்கு உன் பெருகிய புகழ் நிலைத்து நிற்குமாறு பாடிவிட்டான். சினமிக்க படையுடைய சேரன் மேற்குக் கடலில் பொன் கொண்டு வரும் கலத்தைச் செலுத்திய காலந் தொடங்கி

பிறகலம்=====> நாடுகிழ வோயே

அவ்விடத்துப் பிறர் கலம் செல்வதில்லை. அதுபோல், கபிலன் உன்னை புகழ்ந்து பாடிய பிறகு யாம் பாட முடியாத நிலையில் உள்ளேம். ஆயினும், வறுமையால் துரத்தப்பட்டு உன் புகழால் இழுக்கப்பட்டு உன் வள்ளல் தன்மையைப்பற்றி சில சொல்லத் தொடங்கினோம். முள்போன்ற பல்லையுடைய பாம்பை நடுங்க வைக்கும் இடிபோல் முரசு ஒலிக்க, யானையொடு அரசும் களத்தில் அழியுமாறு பொறுத்தற்கரிய போரைச் சிதறடித்துப் பொருந்தாப் பகைவரைத் தடுக்க வல்ல, பெண்ணையாற்றின் அழகிய பக்கங்களையுடைய நாட்டுக்குத் தலைவனே!

பாடலின் பின்னணி:-

இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் மலையமான் திருமுடிக்காரியின் முன்னோர்களின் பெருமையையும் திருமுடிக்காரியின் பெருமையையும் புகழ்ந்து பாடுகிறார். சேர மன்னர்கள் மேற்குக் கடலில் கப்பலோட்டத் தொடங்கிய பிறகு மற்றவர்கள் அக்கடலில் தம் கப்பலை ஓட்டிச் செல்ல அஞ்சுவது போல், புலவர்களில் சிறந்தவரான கபிலர் மலையமானைப் புகழ்ந்து பாடிய பிறகு அது போல் யாராலும் இனி பாட முடியாது என்றாலும், தன் வறுமையின் காரணத்தால் தன்னால் முடிந்த அளவு மலையமானைப் புகழ்ந்து பாட வந்ததாக இப்பாடலில் மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #126 on: June 27, 2013, 09:39:34 PM »


புறநானூறு, 127. (உரைசால் புகழ்!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: வேள் ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : கடைநிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல் கடைநிலை எனப்படும்.
===================================

களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடுஇன் பனுவல் பாணர் உய்த்தெனக்
களிறில ஆகிய புல்அரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழையணி மகளிரொடு

சாயின்று என்ப ஆஅய் கோயில்;
சுவைக்குஇனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவுஇன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே.

அருஞ்சொற்பொருள்:-

கோடு = தண்டு
சீறியாழ் = சிறிய யாழ்
பனுவல் = பாட்டு
உய்த்தல் = கொண்டு போதல்
அரை = அடியிடம்
வெளில் = யானை கட்டும் தறி
மஞ்ஞை = மயில்
கணம் = கூட்டம்
சேப்ப = தங்க
சாயின்று = தளர்ந்தது, குன்றியது
கோயில் = அரண்மனை
குய் = தாளிப்பு
அடிசில் = உணவு
ஈவு = கொடை
அருத்துதல் = புசிப்பு
ஒரீஇய = நீங்கிய
நகர் = அரண்மனை

இதன் பொருள்:-

களங்கனி=====> மகளிரொடு

களாப்பழம் போன்ற கரிய நிறத் தண்டினையுடைய சிறிய யாழுடன் இனிய பாட்டைப் பாடும் பாணர்கள், ஆய் பரிசாக அளித்த யானைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு போனதால் யானை கட்டும் நெடிய கட்டுத்தறிகள் வெறுமையாகக் காட்சி அளிக்கின்றன. அவ்விடத்து இப்பொழுது காட்டு மயில்கள் தம் கூட்டத்தோடு தங்கி இருக்கின்றன. பிறருக்கு அளிக்க இயலாத மங்கல அணிகலன்கள் மட்டுமே அணிந்த மகளிர்

சாயின்று=====> நகர்போ லாதே

ஆயின் அரண்மனையில் உள்ளனர். இவ்வாறு இருப்பதால், ஆயின் அரண்மனை தன் பெருமையில் குறைந்தது என்று கூறுவர். ஆனால், இனிய சுவையுடன் தாளித்த உணவை பிறர்க்கு அளிக்காமல் தாம் மட்டும் வயிறு நிரம்ப உண்டு, மிகுந்த புகழை இழந்த முரசுடைய செல்வர்களின் அரண்மனைகள் ஆயின் அரண்மனைக்கு ஒப்பாகாது.

சிறப்புக் குறிப்பு:-

பிறர்க்கு உதவி செய்வதால் தனக்கு ஒரு கேடு வருவதாக இருந்தாலும், தன்னை விற்றாவது உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை,

ஒப்புர வினால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. (குறள் 220)

என்ற குறளில் வள்ளுவர் கூறுவதைப் போலவே, ஆய் தன் யானைகளை எல்லாம் பரிசிலர்க்கு அளித்து, தன் செல்வத்தையும் இழந்ததாக இப்பாடலில் ஏணிச்சேரி முடமோசியார் கூறுகிறார். வள்ளுவர் குறளும் ஆயின் செயலும் ஒப்பு நோக்கத் தக்கவையாகும்.

மற்றொரு குறளில்,

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். (குறள் - 232)

என்று இரவலர்க்கு ஈகை செய்வதே ஒருவருடைய புகழுக்குக் காரணம் என்பதை வள்ளுவர் கூறுகிறார். ஆய் அண்டிரனின் புகழுக்கும் அவன் ஈகைதான் காரணம் என்று இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #127 on: June 27, 2013, 09:41:41 PM »


புறநானூறு, 128. (முழவு அடித்த மந்தி!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண் கனிசெத்து அடிப்பின்
அன்னச் சேவல் மாறுஎழுந்து ஆலும்
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே

அருஞ்சொற்பொருள்:
மன்றம் = ஊர்ப் பொதுவிடம்
மா = பெரிய
சினை = கிளை
மந்தி = குரங்கு
நாற்றுதல் = தூக்குதல்
விசி = கட்டு
பாடு = ஓசை
தெண்கண் = தெளிந்த இடம்
செத்து = கருதி
ஆலல் = ஒலித்தல், ஆடல்
கழல் = கழலும்
மழை = மேகம்
குறுகல் = நெருங்கல்
பீடு = பெருமை

இதன் பொருள்:-

ஊர்ப் பொதுவிடத்துப் பலாமரத்தின் பெரிய கிளையில் இருந்த குரங்கு, பரிசிலர் தூக்கிவைத்திருந்த இறுகக் கட்டிய முழவை பலாப்பழம் என்று எண்ணி, அதன் இனிய ஒசை பிறக்கும் தெளிந்த இடத்தில் அடித்தது. அதைக் கேட்ட ஆண் அன்னப் பறவைகள் அந்த ஒசைக்கு மாறாக ஒலித்தன. கழலும் வீரவளையல்களை அணிந்த ஆயின் மேகங்கள் தவழும் பொதிய மலை ஆடிவரும் மகளிரால் அணுக முடியுமே தவிர பெருமை பொருந்திய மன்னர்களால் அணுக முடியாது.

பாடலின் பின்னணி:-

ஆய் அண்டிரன் கொடைச் சிறப்பால் மிகுந்த புகழுடையவனாக இருந்தான். அவ்வாறு இருப்பினும், மற்ற வேந்தர்கள் பொறாமையால் அவனோடு போர் புரியாது இருப்பதற்குக் காரணம் அவனைப் போரில் வெல்வது அரிது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று கருத்தை இப்பாடலில் முடமோசியார் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

கபிலர் 111 - ஆவது பாடலில், பாரியிடமிருந்து பறம்பு மலையை வெல்லுவது வேந்தர்க்கு அரிது; ஆனால், “நீலத்து இணைமலர் புரையும் உண்கண் கிணைமகட்கு எளிதால் பாடினள் வரினே” என்று கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #128 on: June 27, 2013, 09:43:22 PM »


புறநானூறு, 129. (வேங்கை முன்றில்!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும்
தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்;
ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்;
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவின்று
வானம் மீன்பல பூப்பின் ஆனாது
ஒருவழிக் கருவழி யின்றிப்
பெருவெள் என்னில் பிழையாது மன்னே

அருஞ்சொற்பொருள்:-

குறி = குறுகிய
இறை = இறப்பு (சுவரைத் தாண்டி நிற்கும் கூரைப் பகுதி)
வாங்கு = வளைவு
அமை = மூங்கில்
பழுனுதல் = முதிர்தல்
தேறல் = மது
முன்றில் = முற்றம்
அயர்தல் = விளையாடுதல்
கரவு = மறைவு
ஆனாது = அளவிட முடியாது
கருவழி இன்றி = கரிய இடம் இல்லாமல்
மன் - அசைச் சொல்

இதன் பொருள்:-

குறுகிய இறப்பையுடைய சிறிய வீடுகளில் வாழும் குறவர்கள் வளைந்த மூங்கில் குழாயில் வார்த்திருந்து முதிர்ந்த மதுவை நுகர்ந்து மகிழ்ந்து, வேங்கை மரங்களுடைய முற்றத்தில் குரவைக் கூத்தாடும், இனிய சுளைகளையுடைய பலா மரங்கள் உள்ள பெரிய மலைக்கு உரிமையாளனாகிய ஆய் அண்டிரன் கொல்லும் போரைச் செய்யும் தலைவன். அவன் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகை எண்ணிலடங்காது. மேகம் மறைக்காமல், வானத்தில் சிறிதளவும் கரிய இடமின்றி எல்லா இடத்திலும் விண்மீன்கள் தோன்றி, வானமே வெண்மையாகக் காட்சி அளித்தால் அவ்விண்மீன்களின் தொகை ஆய் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகைக்கு நிகராகலாம்.

பாடலின் பின்னணி:-

ஆய் அண்டிரன் தன்னிடம் வரும் பரிசிலர்க்கு யானைகளை அளிப்பதைக் கண்ட முடமோசியார், வானம் முழுதும் விண்மீன்கள் பூத்து விளங்கினால் அவற்றின் தொகை ஆய் பரிசிலர்க்கு வழங்கும் யானைகளின் தொகைக்கு நிகராகலாம் என்று இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், ஆய் இரவலர்க்கு அளித்த யானைகளின் தொகை வானத்தில் உள்ள விண்மீன்களைவிட அதிகம் என்று ஏணிச்சேரி முடமோசியார் கூறுவது போல், 123-ஆவது பாடலில் மலையமான் திருமுடிக்காரி இரவலர்க்கு அளித்த தேர்களின் எண்ணிக்கை முள்ளூர் மலைமீது பெய்த மழைத்துளிகளைவிட அதிகம் என்று கபிலர் கூறியிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #129 on: July 07, 2013, 05:57:23 PM »


புறநானூறு, 130. (சூல் பத்து ஈனுமோ?)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும்நின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்துநீ அளித்த
அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:-

கொடு = வளைவு
பூண் = அணிகலன்
பிடி = பெண் யானை
சூல் = கருப்பம்
கரவு = மறைவு
ஞான்று = காலம்
தலை = இடம்
தலைப் பெயர்தல் = புறங்காட்டி ஓடுதல்

இதன் பொருள்:-

விளங்கும் மணிகளால் செய்யப்பட்ட வளைந்த அணிகலன்களை அணிந்த ஆய்! உன் நாட்டில், ஒரு இளம்பெண் யானை கருவுற்றால் பத்து குட்டிகளைப் பெறுமோ? உன்னையும் உன் மலையையும் பாடி வருபவர்களுக்கு இன்முகம் மறைக்காமல், மகிழ்ச்சியொடு நீ அளித்த உயர்ந்த யானைகளின் தொகையைக் கணக்கிட்டால், நீ கொங்கரை மேற்குக் கடற்கரைப் பக்கம் ஓட்டிய பொழுது அவர்கள் புறங்காட்டி ஓடிய சமயத்தில் விட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்குமே!

பாடலின் பின்னணி:-

ஆய் அண்டிரன் இரவலர்க்கு எண்ணற்ற யானைகளைப் பரிசாக வழங்குவதைக் கண்ட முடமோசியார், “ஆயே! நின்னையும் நின் மலையையும் பாடி வரும் பரிசிலர்க்கு நீ மிகுந்த யானைகளைப் பரிசாக அளிக்கிறாய். அவற்றின் தொகையை நோக்கின், நீ முன்பு கொங்கரொடு போரிட்ட காலத்தில் அவர்கள் உன்னிடம் தோற்று உயிர் தப்பி மேற்குக் கடற்கரைப் பக்கம் ஓடிய பொழுது அவர்கள் விட்டுச் சென்ற வேல்களினும் அதிகமாக உள்ளன. உன் நாட்டில் ஒவ்வொரு இளம்பெண் யானையும் கருவுற்றால் பத்து குட்டிகளை ஈனுமோ?” என்று தன் வியப்பை இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #130 on: July 07, 2013, 05:59:19 PM »


புறநானூறு, 131. (குன்றம் பாடின கொல்லோ?)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

மழைக்கணம் சேக்கும் மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ;
களிறுமிக உடையஇக் கவின்பெறு காடே?

அருஞ்சொற்பொருள்:-

மழை = மேகம்
கணம் = கூட்டம்
சேக்கும் = தங்கும்
வழை = சுரபுன்னை
வாய் = தவறாத
கவின் = அழகு

இதன் பொருள்:-

மிகுந்த யானைகள் உள்ள அழகான காடுகள் இம்மலையில் உள்ளனவே! மேகங்கள் கூட்டமாகத் தங்கும் பெரிய இம்மலைக்கு உரிமையுடையவனும் சுரபுன்னைப் பூவாலான மாலையைத் தலையில் அணிந்தவனும் குறி தவறாத வாளையுடையவனுமாகிய ஆய் அண்டிரனை இம்மலை பாடிற்றோ?

பாடலின் பின்னணி:-

ஆயின் நாட்டில், மலைப்பகுதியில் இருந்த காடுகளில் மிகுந்த அளவில் யானைகள் இருப்பதை முடமோசியார் கண்டார். அந்த யானைகளைக் கண்டவுடன், இரவலர்க்கு எண்ணற்ற யானைகளைப் பரிசாக ஆய் அண்டிரன் அளிப்பதை நினைவு கூர்ந்தார். அந்நிலையில், “இம்மலையும் ஆய் அண்டிரனைப் புகழ்ந்து பாடியதால் அதிலுள்ள காடுகள் இத்தனை யானைகளைப் பரிசாகப் பெற்றதோ” என்று முடமோசியார் தனக்குள் வியப்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

களிறு என்ற சொல் ஆண் யானையைக் குறிக்கும் சொல். ஆனால், இப்பாடலில் களிறு என்ற சொல் பொதுவாக யானையைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #131 on: July 07, 2013, 06:00:47 PM »


புறநானூறு, 132. (முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

முன்உள்ளு வோனைப் பின்உள்ளி னேனே!
ஆழ்கஎன் உள்ளம்; போழ்க என் நாவே!
பாழ்ஊர்க் கிணற்றின் தூர்கஎன் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி அயல

தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை அதுவே வான்தோய் இமயம்
தென்திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே

அருஞ்சொற்பொருள்:-

ஆழ்தல் = அமிழ்தல்
போழ்தல் = அழிதல், பிளத்தல்
தூர்த்தல் = நிரப்புதல்
நரந்தை = நாரத்தை
கவரி = கவரிமா (ஒரு விலங்கு)
பை = பசுமை
சுனை = நீர் நிலை
அயல் = அருகிடம், பக்கம்
தகரம் = தகர மரம்
பிணை = பெண் மான்
வதிதல் = தங்குதல், துயிலுதல்
தோய்தல் = உறைதல், கலத்தல்
பிறழ்தல் = மாறுபாடுதல் (தலை கீழாக மாறுதல்)
மலர்தல் = விரிதல், பரத்தல்

இதன் பொருள்:-

முன்உள்ளு=====> அயல

ஆய் அண்டிரனை முன்னமேயே நினைக்காமல் காலந்தாழ்த்திப் பின்னர் நினைத்தேனே! என் உள்ளம் வருத்தத்தில் மூழ்கட்டும்; என் நாக்கு அழியட்டும்; பாழ் அடைந்த ஊரில் உள்ள கிணறுபோல் என் செவிகள் அடைபட்டுப் போகட்டும். நாரத்தம் பழங்களையும் மணமுடைய புல்லையும் தின்ற கவரிமா, குவளை மலர்களுடன் கூடிய பசுமையான நீர்நிலையில் உள்ள நீரைக் குடித்துவிட்டு அதனை அடுத்துள்ள

தகர=====> உலகே

தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தன் பெண்ணினத் துணையோடு தங்கியிருக்கும் வானளாவிய இமயம் வடதிசையில் உள்ளது. தென் திசையில் ஆயின் குடி இல்லை எனின் இப்பரந்த உலகம் தலைகீழாக மாறிவிடும்.

பாடலின் பின்னணி:-

ஆய் அண்டிரனைக் கண்டு, அவனோடு பழகி, அவன் கொடைத் தன்மையை நேரில் கண்ட முடமோசியார், இத்துணை நாட்களும் ஆயை நினையாமல் மற்றவரை நினைத்தும், அவர் புகழ் பாடியும், அவர் புகழைக் கேட்டும் இருந்ததை எண்ணி வருந்துகிறார். தான் செய்த தவறுக்காகத் தன் உள்ளமும், நாவும், செவியும் அழியட்டும் என்று இப்பாடலில் கூறித் தன் வருத்ததைத் தெரிவிக்கிறார். மற்றும், வட திசையில் உள்ள புகழ் மிக்க இமயத்திற்கு ஈடாகத் தென்திசையில் புகழ் மிக்க ஆய்குடி இருக்கிறது. அது இல்லையாயின், இவ்வுலகம் தலைகீழாகப் பிறழும் என்றும் இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

ஆய் அண்டிரனை முன்பே நினைக்காதது தவறு. அத்தவற்றை எண்ணித் தன் உள்ளம் வருத்தத்தில் மூழ்கட்டும் என்றும், ஆயின் புகழைப் பாடாமால் பிறர் புகழைப் பாடியதால் தன் நாக்கு அழியட்டும் என்றும், ஆயின் புகழைக் கேளாமல் பிறர் புகழைக் கேட்டதால் தன் செவித் துளைகள் பாழூர்க் கிணறு போல் அடைபட்டுப் போகட்டும் என்றும் முடமோசியார் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. மற்றும், புகழால் சிறந்த இமய மலைக்கு ஈடாக ஆய் வாழும் ஆய்குடியும் புகழ் மிக்கதாக இருப்பதால்தான் இப்பரந்த உலகம் நிலைபெற்றிருக்கிறது. ஆய்குடி இல்லை எனில், இவ்வுலகம் தலைகீழாக மாறி அழிந்துவிடும் என்றும் முடமோசியார் கருதுவதாகவும் தோன்றுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #132 on: July 07, 2013, 06:02:00 PM »


புறநானூறு, 133. (காணச் செல்க நீ!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : விறலியாற்றுப்படை.
===================================

மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற்
கேட்பின் அல்லது காண்புஅறி யலையே;
காண்டல் வேண்டினை ஆயின் மாண்டநின்
விரைவளர் கூந்தல் வரைவளி உளரக்
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி
மாரி யன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!

அருஞ்சொற்பொருள்:-

மாண்ட = பெருமைக்குரிய
விரை = மணம்
வரை = மலை
வளி = காற்று
உளர்தல் = தலை மயிராற்றுதல், அசைத்தல்
கலவம் = தோகை
மஞ்ஞை = மயில்

இதன் பொருள்:-

மெல்லிய இயல்புடைய விறலியே! நீ நல்ல புகழைப்பற்றிக் கேள்விப் பட்டிருப்பாய்; ஆனால், அத்தகைய புகழுடையவரைக் கண்டிருக்க மாட்டாய். அத்தகைய புகழுடையவரைக் காண விரும்பினால், உன் பெருமைக்குரிய மணம் வீசும் கூந்தல், மயில் தோகை போல் மலைக் காற்றில் அசையுமாறு காட்சி அளிக்கும் வகையில் நீ நடந்து, மழை போன்ற வள்ளல் தன்மையோடு தேர்களைப் பரிசாக வழங்கும் ஆயைக் காணச் செல்க.

பாடலின் பின்னணி:-

விறலி ஒருத்தி, ஆயின் புகழைக் கேட்டிருந்தாலும் அவனை நேரில் கண்டதில்லை. அவளை ஆய் அண்டிரனிடம் முடமோசியார் ஆற்றுப்படுத்தும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #133 on: July 07, 2013, 06:03:11 PM »


புறநானூறு, 134. (அறவிலை வணிகன் ஆய் அலன்!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கைவண் மையே

அருஞ்சொற்பொருள்:-

ஆங்கு = அவ்வாறு, அவ்விடம்
பட்டன்று = பட்டது

இதன் பொருள்:-

இப்பிறப்பில் செய்யும் அறச்செயல்கள் மறுபிறப்பில் பயனளிக்கும் என்று கருதி, அறம் செய்வதை ஆய் ஒரு விலைபொருளாகக் கருதுபவன் அல்லன். அறம் செய்வதுதான் சான்றோர் கடைப்பிடித்த வழி என்று உலகத்தவர் கருதுகிறார்கள். ஆய் அண்டிரனின் கொடைச் செயல்களும் அவ்வழிப் பட்டவையே.

பாடலின் பின்னணி:-

ஆய் கொடைத் தன்மை மிகுந்தவன். தன்னிடம் உள்ள பொருளைப் பிறர்க்கு அளிப்பதால் மறுபிறவியில் நன்மைகளை அடையலாம் என்று எண்ணி அவன் கொடையை ஒரு வணிகமாகக் கருதுபவன் அல்லன். அறச் செயல்களைச் செய்வதுதான் சான்றோர் கடைப்பிடித்த நெறி என்று உணர்ந்து அவன் அறச் செயல்களைச் செய்கிறான் என்று இப்பாடலில் முடமோசியார் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

ஈகை என்ற அதிகாரத்தில்,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள் - 221)

என்று வள்ளுவர் கூறுகிறார். அதாவது, “வறுமையில் உள்ளவர்களுக்குக் கொடுத்து உதவுவதுதான் ஈகை. மற்றெல்லாம் ஒரு குறிப்பிட்ட பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையதாகும்” என்று வள்ளுவர் கூறுகிறார். சான்றோர் கடைப்பிடிக்கும் நெறி என்ற கொள்கையோடு, ஆய் அண்டிரன் எதையும் எதிர்பார்க்காமல் ஈகை செய்வது வள்ளுவரின் குறளோடு ஒப்பு நோக்கத் தக்கது.

அடுத்து வரும் குறளில் (குறள் - 222), ”மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று” என்று வள்ளுவர் கூறுகிறார். ஈகையினால் மேலுலகத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும் ஈகை நல்ல செயல்தான் என்று வள்ளுவர் கூறியிருப்பதும் ஆய் அண்டிரனின் செயலோடு ஒப்பிடத் தக்கதாகும்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #134 on: July 07, 2013, 06:04:34 PM »


புறநானூறு, 135. (காணவே வந்தேன்!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை.
====================================

கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை
அருவிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்
தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்
வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்
பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்

வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்
புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே: என்றும்

மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே;

பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்குஅவர்
தமதுஎனத் தொடுக்குவர் ஆயின் எமதுஎனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு
அன்ன வாகநின் ஊழி; நின்னைக்
காண்டல் வேண்டிய அளவை; வேண்டார்

உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:-

கொடுவரி = புலி
கோடு = மலைச் சிகரம்
வரை = மலை
விடர் = பிளவு
தடவரல் = பெருந்துயர், வளைவு
தகை = தளர்வு, அழகு
ஒதுக்கு = நடை
புரி = முறுக்கு
வரி = இசைப்பாடல்
நவிலல் = கற்றல், பெரிது ஒலித்தல்
பனுவல் = பாட்டு
படுமலை = படுமலைப் பலை (ஒரு பண்)
ஒல்கல் = தளர்ச்சி
கறை = உரல்
இரியல் = விட்டுப் போதல், விரைந்து செல்கை
இரியல் போக்குதல் = திரளாகக் கொடுத்தல்
ஒளிறு = ஓளி விடும்
புரவி = குதிரை
தொடுத்தல் = சேர்த்தல், வளைத்துக் கொள்ளுதல்
தேற்றா = தெளியா
தாயம் = சுற்றம்
ஊழி = வாழ்நாள்
வேண்டார் = பகைவர்
உறு = மிக்க
முரண் = வலிமை, மாறுபாடு
பொது = அனைவரும்
மீக்கூறுதல் = புகழ்ந்து கூறுதல்

இதன் பொருள்:-

கொடுவரி=====> நரம்பின்

புலிகள் திரியும் உயர்ந்த சிகரத்தையுடைய நெடிய மலையின் கடத்தற்கரிய பிளவுகளுடைய சிறுவழியில் ஏறி வந்ததால் வருத்தத்தோடும், வளைந்த உடலோடும், நடையில் தளர்ச்சியோடும் வளையல்களை அணிந்த விறலி என் பின்னால் வர நான் மலைப்பாதையில் வந்தேன். நான் வரும் வழியில், பொன்னை உருக்கிக் கம்பியாகச் செய்ததைப் போன்ற முறுக்கிய நரம்புகளுடைய

வரிநவில்=====> என்றும்

என்னுடைய யாழ், இசையுடன் கூடிய பாடல்களை நிலத்திற்கேற்ப மாறி மாறி பெருமளவில் ஒலித்தது. என்னுடைய யாழ் படுமலைப் பண் அமைந்த பாடல்களைப் பாடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அத்தகைய சிறிய யாழைத் தளர்ந்த மனத்தோடு ஒரு பக்கம் தழுவிக்கொண்டு, புகழ்தற்கு அமைந்த சிறப்புடைய உன் நல்ல புகழை நினைத்து நான் என் தலைவனாகிய உன்னிடத்து வந்தேன். எந்நாளும்

மன்றுபடு=====> அன்றே

மன்றத்திற்கு வந்த பரிசிலரைக் கண்டால் உரல்போன்ற பருத்த அடிகளுடைய யானைகளையும் அவற்றின் கன்றுகளையும் திரளாக வழங்கும் மலை நாட்டினனே! பெருமைக்குரிய வேளிர் குலத்தவனே! நான் உன்னிடத்து வேண்டுவது யனையும் அன்று; குதிரையும் அன்று; ஒளிமிக்க படையுடன் குதிரைகள் பூட்டப்பட்ட தேரும் அன்று

பாணர்=====> நாடுகிழ வோயே!

பாணரும், புலவரும், பரிசிலரும் ஆகியோர் தமது என உன் பொருளை வளைத்துக் கொள்வாராயின், அதனை எம்முடையது என்று அவரிடமிருந்து மீண்டும் (கைக்கொள்வதை அறியாத) கைக்கொள்ளாத, பயனுள்ள சுற்றத்தோடு கூடியதாக உன் வாழ்நாட்கள் அமையட்டும். உன்னைக் காண வேண்டுமென்பதற்காகவே வந்தேன். பகைவருடைய மிகுந்த வலிமையை அழிக்க வல்ல ஆற்றலும், எவரும் புகழந்து கூறும் நாட்டையும் உடையவனே!

பாடலின் பின்னணி:-

முடமோசியார் ஆய் அண்டிரனைக் காணச் சென்றார். அவருடைய புலமையை நன்கு அறிந்திருந்த ஆய், அவருக்கு யானை, குதிரை, தேர் போன்றவற்றைப் பரிசாக அளிக்க முன்வந்தான். அவர் அவற்றை விரும்பவில்லை. ஆய் மகிழ்ச்சியோடு அளிக்கும் பரிசுகளை வேண்டம் என்று கூறினால் அவன் வருந்துவானோ என்று கருதி, ஒரு பாணன் ஆயைக் காணும் விருப்பம் மட்டுமே உள்ளத்தில் கொண்டு அவனக் காண வந்ததாகவும், அவன் தனக்கு யானை, குதிரை, தேர் போன்றவை வேண்டாம் என்று கூறி ஆயின் வலிமையையும் புகழையும் பாராட்டிப் பாடுவது போலும் இப்பாடலில் கூறித் தன் கருத்தை முடமோசியார் வெளிப்படுத்துகிறார்.