Author Topic: ~ புறநானூறு ~  (Read 156195 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #135 on: July 07, 2013, 06:06:36 PM »


புறநானூறு, 136. (வாழ்த்தி உண்போம்!)
பாடியவர்: துறையூர் ஓடை கிழார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் கடாநிலை.
==================================

யாழ்ப்பத்தர்ப் புறம்கடுப்ப
இழைவலந்த பஃறுன்னத்து
இடைப்புரைபற்றிப் பிணிவிடாஅ
ஈர்க்குழாத்தொடு இறைகூர்ந்த
பேஎன்பகையென ஒன்றுஎன்கோ?

உண்ணாமையின் ஊன்வாடித்
தெண்ணீரின் கண்மல்கிக்
கசிவுற்றஎன் பல்கிளையொடு
பசிஅலைக்கும் பகைஒன்றுஎன்கோ?
அன்னதன்மையும் அறிந்துஈயார்

நின்னதுதாஎன நிலைதளர
மரம்பிறங்கிய நளிச்சிலம்பின்
குரங்குஅன்ன புன்குறுங்கூளியர்
பரந்தலைக்கும் பகைஒன்றுஎன்கோ?
ஆஅங்கு எனைப்பகையும் அறியுநன்ஆய்

எனக்கருதிப் பெயர்ஏத்தி
வாயாரநின் இசைநம்பிச்
சுடர்சுட்ட சுரத்துஏறி
இவண்வந்த பெருநசையேம்;
எமக்குஈவோர் பிறர்க்குஈவோர்

பிறர்க்குஈவோர் தமக்குஈபவென
அனைத்துஉரைத்தனன் யான்ஆக
நினக்குஒத்தது நீநாடி
நல்கினை விடுமதி பரிசில் அல்கலும்
தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை

நுண்பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே

அருஞ்சொற்பொருள்:-

பத்தர் = குடுக்கை
கடுப்ப = ஒப்ப
இழை = நூற்கயிறு
வலந்த =சூழ்ந்த
துன்னம் = தையல்
புரை = இடுக்கு
குழாம் = கூட்டம்
இறை கூர்ந்த = தங்கிய
என - அசை
கசிவு = வருத்தம்
அலைத்தல் = வருத்துதல்
பிறங்குதல் = நிறைதல்
நளி = குளிர்ச்சி
சிலம்பு = மலை
புன்மை = இழிவு
கூளியர் = வழிப்பறி செய்வோர்
பரத்தல் = மிகுதல்
ஆஅங்கு - அசை
ஏத்துதல் = புகழ்தல்
நம்பி = விரும்பி
சுரம் = வழி
ஏறுதல் = கடத்தல்
நசை = விருப்பம்
நாடி = ஆராய்ந்து
அல்கல் = நாள்
அல்கலும் = நாள்தோறும்
ஏத்துதல் = வாழ்த்தல்
நல்குதல் = ஈதல்.

இதன் பொருள்:-

யாழ்ப்பத்தர்ப்=====> ஒன்றுஎன்கோ?

யாழின் பத்தர் என்னும் உறுப்பின் பின் பக்கத்தில் உள்ள பல தையல்களைப் போல், என் துணியின் தையல்களின் இடைவெளியில் உள்ள இடுக்குகளில் பற்றிப் பிடித்துக்கொண்டு அங்கே தங்கியிருக்கும் ஈர்களின் கூட்டத்தோடு கூடிய பேன்களை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ?

உண்ணாமையின்=====> அறிந்துஈயார்

உண்ணாததால் உடல் வாடி, கண்களில் நீர் பெருகி இருக்கும் என்னையும் என் சுற்றத்தாரையும் வருத்தும் பசியை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ? எங்கள் நிலையை அறிந்தும் எங்களுக்கு ஒன்றும் அளிக்காமல்,

நின்னது=====> அறியுநன்ஆய்

”உன்னிடத்து உள்ளதைத் தா” என்று கூறி எங்களை நிலை தடுமாறுமாறு வருத்தும், மரங்கள் நிறைந்த குளிர்ந்த மலையில் வாழும் குரங்குகள் போல் பரவி வந்து வழிப்பறி செய்யும் இழிந்த குணமுள்ள குள்ளரை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ? எனக்குரிய எல்லாப் பகைகளையும் அறிபவன் ஆய் அண்டிரன்

எனக்கருதிப்=====> பிறர்க்குஈவோர்

என்று எண்ணி, உன் பெயரைப் புகழ்ந்து, உன் புகழை வாயார வாழ்த்துவதை விரும்பி, வெயில் சுட்டெரிக்கும் வெப்பமான வழிகளைக் கடந்து பெரும் ஆசையோடு இங்கே வந்துள்ளோம். எங்களுக்குப் பரிசு அளிப்பவர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாகவே பிறருக்கு ஈகை செய்பவர்கள்.

பிறர்க்குஈவோர்=====> வளனே

மற்றவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவி செய்பவர்கள் (அவர்களிடத்திருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொடுப்பதால்) தமக்கே ஈகை செய்பவர்கள் என்றுதான் நான் கூறுவேன். ஆராய்ந்து, உனக்குத் தகுந்த முறையில் நீ எங்களுக்குப் பரிசளித்து எங்களை அனுப்புவாயாக. குளிர்ந்த நீரோடுகின்ற வாய்த்தலைகளையுடைய துறையூரில் உள்ள ஆற்று மணலினும் அதிக நாட்கள் நீ வாழ்க என நாள் தோறும் வாழ்த்தி, நீ கொடுக்கும் செல்வத்தை வைத்து நாங்கள் உண்போம்.

பாடலின் பின்னணி:-

ஒடை கிழார் மிகுந்த வறுமையில் இருந்த பொழுது, தன் நிலையைக் கூறி ஆய் அண்டிரனிடம் பரிசில் கேட்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

ஈகை என்னும் அதிகாரத்தில் வறியவர்களுக்கு அளிப்பதுதான் ஈகை. மற்றவர்களுக்குக் கொடுப்பது கைமாறு கருதி (எதாவது ஒரு பயனை எதிர்பார்த்து) அளிப்பதாகும் என்று கூறுகிறார்.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. (குறள் - 221)

இதே கருத்தை துறையூர் ஓடை கிழார் இப்பாடலில் குறிப்பிடுவது ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #136 on: July 07, 2013, 06:07:39 PM »


புறநானூறு, 137. (நீ வாழ்க! நின்பெற்றோரும் வாழ்க!)
பாடியவர்: ஒருசிறைப் பெரியனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

இரங்கு முரசின் இனம்சால் யானை
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர்யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அறியு மோனே; துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது

கழைக்கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண்ணன்ன மலர்பூக்குந்து
கருங்கால் வேங்கை மலரின் நாளும்
பொன்னன்ன வீசுமந்து

மணியன்னநீர் கடற்படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் அருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர்நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!

அருஞ்சொற்பொருள்:-

இரங்கல் = ஒலித்தல்
இனம் = கூட்டம்
சால் = மிகுதி, நிறைவு
முந்நீர் = கடல்
ஏணி = எல்லை
விறல் = வெற்றி
துவன்றல் = நிறைதல்
கயம் = நீர் உள்ள பள்ளம்
வறம் = வறட்சி
கழை = மூங்கில், கரும்பு, தண்டு
ஒலித்தல் = தழைத்தல்
ஒலிக்குந்து = தழைக்கும்
கொண்டல் = மேகம்
பூக்குந்து = பூக்கும்
வீ = மலர், மகரந்தம்
மணி = நீலமணி
படர்தல் = செல்லுதல்
அரை = அடியிடம்
படப்பை = கொல்லை, தோட்டம், பக்கத்துள்ள இடம், ஊர்ப்புறம், நாடு
பயத்தல் = பெறுதல் (பிறப்பித்தல்)

இதன் பொருள்:-

இரங்கு=====> சாவாது

ஒலிக்கும் முரசும், நிறைந்த யானைக் கூட்டமும், கடலை எல்லையாகவும் கொண்டு வெற்றியுடன் பொருந்திய மூவேந்தரைப் பாடுவதில் நான் ஒருவனே அவா இல்லாதவனாக இருக்கிறேன். முன்னரே இருந்து உன்னையே நான் அறிவேன். நீர் நிறைந்த பள்ளத்தில் விதைத்த வித்து வறட்சியால் சாவது இல்லை.

கழைக்கரும்பின்=====> வீசுமந்து

அது கரும்பைப் போல் தழைக்கும். கோடைக் காலத்தில் வெயில் காய்ந்தாலும், மேகம் முகந்த நீர் மழையாகப் பெய்வதால் மகளிரின் கண்கள் போன்ற மலர்கள் பூக்கும். கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் பொன்போன்ற மலர்களின் மகரந்தத் தூள்களைச் சுமந்து

மணியன்னநீர்=====> பயந்திசி னோரே!

நீலமணி போன்ற நீர் கடலுக்குச் செல்லும். செம்மையான மலைப் பக்கங்களையுடைய நாஞ்சில் நாட்டு அரசே! சிறிய வெண்ணிற அருவிகளும் பெரிய மலைகளும் உள்ள நாட்டை உடையவனே! நீ வாழ்க! உன்னைப் பெற்ற உன் தந்தையும் தாயும் வாழ்க!

பாடலின் பின்னணி:-

நாஞ்சில் வள்ளுவனைப் பாடுவதில் மட்டுமே ஒரு சிறைப் பெரியனார் ஆர்வம் உடையவராக இருந்தார். இப்பாடல் நாஞ்சில் நாட்டு வளத்தைப் பாராட்டுவதாகவும் நாஞ்சில் வள்ளுவனைப் புகழ்வதாகவும் அமைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #137 on: July 15, 2013, 11:25:27 AM »


புறநானூறு, 138. (நின்னை அறிந்தவர் யாரோ?)
பாடியவர்: மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண்.
துறை : பாணாற்றுப்படை.
===================================

ஆனினம் கலித்த அதர்பல கடந்து
மானினம் கலித்த மலையின் ஒழிய
மீனினம் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண!

நீயே பேரெண் ணலையே; நின்இறை
மாறி வாஎன மொழியலன் மாதோ;
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளிமரீஇய வியன்புனத்து
மரன்அணி பெருங்குரல் அனையன் ஆதலின்
நின்னை வருதல் அறிந்தனர் யாரே!

அருஞ்சொற்பொருள்:-

ஆ = பசு
இனம் = கூட்டம்
கலித்த = தழைத்த
அதர் = வழி
உயிர் = ஓசை (இசை)
சிதார் = கந்தை
முதாஅரி = மூத்த
எண்ணல் = எண்ணம்
மாதோ = அசை
ஒலித்தல் = தழைத்தல்
இரு = கரிய
கதுப்பு = மயிர்
ஆயிழை = தெரிந்தெடுத்த அணிகலன்களையுடையவள்
மரீஇய = மருவிய, தங்கிய
வியன் =மிகுதி, பெரிய
புனம் = காடு, கொல்லை
மரன் = மரம்
அணி = பொந்து
குரல் = கதிர்

இதன் பொருள்:-

ஆனினம்=====> பாண!

பசுக்களின் கூட்டம் மிகுந்த வழிகளைக் கடந்து, மான் கூட்டங்கள் நிறைந்த மலைகளைக் கடந்து, மீன்கள் மிகுந்த பல நீர்த்துறைகளை நீந்திப் பரிசு பெறலாம் என்ற எண்ணத்தோடு வளமான இசை எழுப்பும் சிறிய யாழுடன் கந்தைத் துணி உடுத்தி வந்த மூத்த பாணனே!

நீயே=====> யாரே!

நீ பெரிய எண்ணங்கள் உடையவன். உன் அரசன் (நாஞ்சில் வள்ளுவன்) ’மற்றொரு நாள் வா’ என்று கூறி உனக்குப் பரிசளிக்காமல் உன்னை அனுப்ப மாட்டான். தழைத்த, கரிய கூந்தலும் தேர்ந்தெடுத்த அணிகலன்களும் உடையவளின் கணவனாகிய நாஞ்சில் வள்ளுவன், கிளிகள் தங்கியிருக்கும் பெரிய தினைப்புனத்தில் உள்ள மரப் பொந்தில் வைக்கப்பட்ட பெரிய நெற்கதிரைப் போன்றவன். அங்கு, கிளிகள் வேண்டும் பொழுது சென்று அவற்றைத் தின்னலாம். அதுபோல் நாஞ்சில் வள்ளுவனிடத்துப் பரிசிலர் பலமுறை செல்லலாம். ஆகவே, நீ முன்னர் வந்ததை அறிந்தவர் யார்?

பாடலின் பின்னணி:-

நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெறுவதற்காகச் செல்லும் பாணன் ஒருவனை மருதன் இளநாகனார் கண்டார். அவனை நோக்கி, “மூத்த பாணனே! நீ பெரிய எண்ணங்களோடு நாஞ்சில் வள்ளுவனைக் காணச் செல்கிறாய். நீ அவனைக் கண்டால் அவன் உன்னை ’மற்றொரு நாள் வா’ என்று கூறாமல் உனக்கு வேண்டிய பரிசுகளை அளிப்பான் “ என்று கூறுகிறார். அதைக் கேட்ட பாணன், தான் முன்பு ஒருமுறை நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசு பெற்றதால் மீண்டும் அவனிடம் செல்லுவதற்குத் தயங்குவதாகக் கூறினான். அதற்கு மறுமொழியாக, மருதன் இளநாகனார், “ மரப்பொந்தில் உள்ள உணவுப் பொருளைக் கிளிகள் பலமுறை உண்ணுவதை நீ கண்டதில்லையா? நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசு பெறுவதும் அது போன்றதுதான். நீ முன்பு வந்து போனவன் என்று கூறுவார் அங்கு யாருமில்லை” என்று கூறிப் பாணனை மருதன் இளநாகனார் ஆற்றுப்படுத்துகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #138 on: July 15, 2013, 11:32:36 AM »


புறநானூறு, 139. (சாதல் அஞ்சாய் நீயே!)
பாடியவர்: மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் கடாநிலை.
===================================

சுவல்அழுந்தப் பலகாய
சில்லோதிப் பல்இளைஞருமே
அடிவருந்த நெடிதுஏறிய
கொடிமருங்குல் விறலியருமே
வாழ்தல் வேண்டிப்

பொய்கூறேன்; மெய்கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர்சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் உன்னிக்
கனிபதம் பார்க்கும் காலை யன்றே;

ஈதல் ஆனான் வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே; ஆயிடை
இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒருநாள்
அருஞ்சமம் வருகுவ தாயின்
வருந்தலும் உண்டுஎன் பைதலம் கடும்பே

அருஞ்சொற்பொருள்:-

சுவல் = தோள்
காயம் = காழ்ப்பு, தழும்பு
ஓதி = கூந்தல்
மருங்குல் = இடை
ஓடா = புறமுதுகு காட்டி ஓடாத
பூட்கை = கொள்கை
உரவோர் = வலியோர்
மருகன் = வழித்தோன்றல்
சிமை = மலை உச்சி
மாயா = மறையாத (மறவாத)
உன்னல் = நினைக்கை
ஆயிடை = அவ்விடத்து
இரு = பெரிய
மிளிர்தல் = பிறழ்தல்
சமம் = போர்
பைதல் = துன்பம்
கடும்பு = சுற்றம்

இதன் பொருள்:-

சுவல்=====> வேண்டிப்

மூட்டைகளைத் தூக்கியதால் தோள்களில் பல தழும்புகளுடைய நானும், (குறைந்த அளவில் தலை முடியுடைய) இளஞர்களும், நீண்ட மலைவழியில் தங்கள் கால்கள் வருந்துமாறு ஏறி வந்த கொடி போன்ற இடையையுடைய விறலியரும் வாழ வேண்டும். ஆகவே,

பொய்கூறேன்=====> காலை யன்றே

பொய் கூற மாட்டேன்; நான் கூறுவது மெய்யே. புறமுதுகு காட்டி ஒடாத கொள்கையையுடைய வலியோரின் வழித்தோன்றலே! உயர்ந்த மலைச் சிகரஙளுடைய நாஞ்சில் நாட்டுக்கு அரசே! பரிசில் பெறும் எண்ணத்தை மறவாமல் நாங்கள் வந்துள்ளோம். உன்னைப் பார்ப்பதற்கேற்ற சரியான சமயத்தை எண்ணிப் பார்க்க இது ஏற்ற காலம் இல்லை

ஈதல்=====> கடும்பே

உன் வேந்தன் (சேரன்) உனக்கு வேண்டியதெல்லாம் வழங்குகிறான். அவனுக்காக உயிர் விடுவதற்குக் கூட நீ அஞ்சுவது இல்லை. இந்நிலையில் பெரிய நிலம் இரண்டு படுவது போன்ற போர் வந்தாலும் வரலாம். போர் வந்தால் நீ போருக்குப் போய் விடுவாய். அவ்வாறு, நீ போருக்குச் சென்று விட்டால், என் குடும்பமும் நானும் வறுமையால் வருந்துவோம். ஆகவே, இப்பொழுதே எங்களுக்குப் பரிசளிப்பாயாக.

பாடலின் பின்னணி:-

மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெறச் செல்கிறார். தனக்குப் பரிசில் வேண்டும் என்று நேரிடையாகக் கூறாமல், பல இன்னல்களைக் கடந்து தன் குடும்பத்தோடு நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெற வந்த ஒரு பாணன் தனக்குப் பரிசில் வேண்டும் என்று கேட்பது போல் இப்பாடலில் தன் விருப்பத்தை மறைமுகமாக மருதன் இளநாகனார் வெளிப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

நாஞ்சில் என்ற சொல்லுக்குக் கலப்பை என்று பொருள். அச்சொல் நாஞ்சில் நாட்டையும் குறிக்கும். இப்பாடலில், உழா நாஞ்சில் என்பது நாஞ்சில் நாட்டைக் குறிக்கிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #139 on: July 15, 2013, 11:34:03 AM »
புறநானூறு, 140. (தேற்றா ஈகை!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன்.
திணை: பாடாண்.
துறை : பரிசில் விடை.
===================================

தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம்சில
அரிசி வேண்டினெம் ஆகத் தான்பிற

வரிசை அறிதலில் தன்னும் தூக்கி.
இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர்
பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்
போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே?

அருஞ்சொற்பொருள்:-

தடவு = பெருமை
மடவன் = மடையன்
மன்ற = உறுதியாக
செந்நா = செம்மையான(நடுநிலை தவறாத) நாக்கு
படப்பை = கொல்லை, தோட்டம்
அடகு = கீரை
கண்ணுறை = மேலே தூவுவது
பிற - அசை
வரிசை = தகுதி, தரம்
கடறு = காடு
இரு = பெரிய
தேற்ற = தெளியாத
போற்றுதல் = பாதுகாத்தல்
அம்ம - அசை

இதன் பொருள்:-

தடவுநிலை=====> தான்பிற

நடுவு நிலைமை தவறாத புலவர்களே! பெரிய பலா மரங்களையுடைய நாஞ்சில் நாட்டு அரசன் நிச்சயமாக ஒரு மடையன்! வளையல் அணிந்த விறலியர், தோட்டத்தில் பறித்த கீரையைச் சமைத்த பொழுது, அக்கீரையின் மேல் தூவுவதற்காக நாஞ்சில் வள்ளுவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டர்கள். தான் பரிசிலருக்கு

வரிசை=====> கடனே?

உதவும் முறையை அறிதலால் என் வறுமையைக் கருதாமல், தன் தகுதியை எண்ணி, பெரிய காடுகள் சூழ்ந்த மலைபோன்ற ஒரு யானையை அளித்தான். இப்படி ஆராயாது அளிக்கும் ஈகையும் உண்டோ? பெரியவர்கள் தங்கள் கடமையைச் சிந்தித்துச் (செய்யும் முறையைப் பாதுகாத்துச்) செய்ய மாட்டார்கள் போலும்!

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம், சில விறலியருடன் அவ்வையார் நாஞ்சில் வள்ளுவனைக் காணச் சென்றார். விறலியர் அங்குள்ள கீரையப் பறித்து, சமைக்க ஆரம்பித்தார்கள். அக்கீரைக் கறியின் மேலே தூவுவதற்காகக் கொஞ்சம் அரிசி வேண்டுமென்று நாஞ்சில் வள்ளுவனைக் கேட்டார்கள். அரிசி கேட்ட விறலியருக்கு, நாஞ்சில் வள்ளுவன் ஒரு யானையைப் பரிசாக அளித்தான். அதைக் கண்ட அவ்வையார், “அரிசி கேட்டதற்கு யானையையா கொடுப்பர்கள்?” என்று நாஞ்சில் வள்ளுவனின் கொடைத்தன்மையை வியக்கிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #140 on: July 15, 2013, 11:43:24 AM »


புறநானூறு, 141. (மறுமை நோக்கின்று!)
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண்.
துறை : பாணாற்று படை.
===================================

பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்
யாரீ ரோஎன வினவல் ஆனாக்

காரென் ஒக்கல் கடும் பசி இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்

படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே

அருஞ்சொற்பொருள்:-

மாண் = மாட்சிமை, அழகு, பெருமை
கடு = விரைவு
பரி = குதிரை
அசைவு = இளைப்பு
சுரம் = வழி
கார் = கருமை
ஒக்கல் = சுற்றம்
ஊங்கு = முன்பு
புல்லியேம் = வறியேம்
இன்னேம் = இத்தகையேம்
உடாஅ = உடுத்தாதது
போரா = போர்த்தாதது
படாஅம் = படாம் = துணி (போர்வை)
மஞ்ஞை = மயில்
கடாம் = மத நீர்
கலிமான் = செருக்குடைய குதிரை

இதன் பொருள்:-

பாணன்=====> ஆனா

உங்களைப் பார்த்தால் பாணன் போல் இருக்கிறதே! நீங்கள் உயர்ந்த பொன்னாலான தாமரை மலரை அணிந்திருக்கிறீர்கள்; உங்கள் விறலியர் சிறப்பாகச் செய்யப்பட்ட மாலையோடு விளங்குகிறார்கள். விரைவாகச் செல்லும் குதிரைகளை உங்கள் தேரிலிருந்து அவிழ்த்துவிட்விட்டு, நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருப்பதைப் போல் இந்த வழியில் இளைப்பாறுகிறீர்களே! நீங்கள் யார்? என்று கேட்கிறாயோ?

காரென்=====> அறிந்தும்

வாடிய தோற்றத்தோடு காணப்படும் சுற்றத்தாரோடும் கடும் பசியோடும் உள்ள இரவலனே! (பாணனே!) வெற்றியைத் தரும் வேல்களையுடைய தலைவன் பேகனைக் காண்பதற்கு முன் நாங்களும் உன்னைவிட வறியர்களாகத்தான் இருந்தோம். இப்பொழுது, அவ்வறுமை நீங்கி இந்த நிலையில் உள்ளோம். எப்பொழுதும் உடுத்தவோ அல்லது போர்த்தவோ பயன்படுத்தாது என்று தெரிந்தும்

படாஅம்=====> கைவண்மையே

தன் போர்வையை மயிலுக்கு அளித்த எங்கள் அரசன் பேகன் மதமிக்க யானைகளும் செருக்குடைய குதிரைகளும் உடையவன். மறுமையில் வரக்கூடிய நன்மைகளை எதிர்பார்க்காமல் எவ்வளவு ஆயினும் பிறர்க்கு அளிப்பது நன்று என்று எண்ணுபவன். அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது.

பாடலின் பின்னணி:-

பேகன் மயிலுக்குப் போர்வை அளித்ததைக் கேள்வியுற்ற பரணர் அவனைக் காணச் சென்றார். பரணரின் தகுதிக்கேற்ப அவருக்குப் பரிசளித்து அவரைப் பேகன் சிறப்பித்தான். அவர் பரிசுகளைப் பெற்றுச் செல்லும் வழியில், வறுமையில் வாடிய பாணன் ஒருவனைச் சந்தித்தார். அப்பாணன், “நீவிர் யார்” என்று பரணரைக் கேட்டான். தான் மிகவும் வறுமையில் இருந்ததாகவும் பேகனைப் பாடி பரிசில் பெற்றதாகவும் பேகன் இம்மையில் ஈகை செய்தால் மறுமையில் நலம் பெறலாம் என்று எண்ணாமல் இரப்போர்க்கு ஈதல் செய்பவன் என்று கூறிப் பாணனைப் பேகனிடம் பரணர் ஆற்றுப்படுத்துகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #141 on: July 15, 2013, 11:49:01 AM »


புறநானூறு, 142. (கொடைமடமும் படைமடமும்!)
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே

அருஞ்சொற்பொருள்:-

அறுதல் = இல்லாமற் போதல், அற்றுப் போதல்
உகுத்தல் = சொரிதல்
வரை = அளவு
கடாம் = மத நீர்
கொடை மடம் = காரணமின்றி (ஆராயாது)கொடுத்தல்
படைமடம் = அறப்போர் நெறியிலிருந்து மாறுபடுதல்
மயங்குதல் = கலத்தல், தாக்கப்படுதல்

இதன் பொருள்:-

நீரற்ற குளத்தில் நீர் சொரிந்தும், அகண்ட வயல்வெளிகளில் பொழிந்தும், தேவையான இடத்தில் பெய்யாது களர் நிலத்தும் அளவின்றி நீரை அளிக்கும் மழையினது இயல்பைப் போன்றது பேகனின் கொடைத்தன்மை. அவன் காரணமின்றி, ஆராயாது யாவர்க்கும் பொருள் கொடுத்தலால் கொடைமடம் கொண்டவன் என்று கருதப்படலாம். ஆனால், மதங்கொண்ட யானைகளும் வீரக் கழலணிந்த கால்களும் உடைய பேகன் பிறர் படை வந்து தாக்கிய பொழுதும் அறநெறியினின்று தவற மாட்டான். ஆகவே, அவன் கொடைமடம் கொண்டவனாக இருந்தாலும் படைமடம் கொண்டவன் அல்லன்.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம், பேகனின் கொடை வண்மையைப்பற்றி சான்றோரிடையே ஒரு உரையாடல் நிகழ்ந்தது. சிலர், பேகன் மயிலுக்குப் போர்வை அளித்தது குறித்து அவன் கொடைமடம் மிகுந்தவன் என்று கூறினர். அதைக் கேட்ட பரணர், “ பேகன் கொடைமடம் உள்ளாவனாக இருந்தாலும் படைமடம் இல்லாதவன்” என்று பேகனைச் சிறப்பித்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #142 on: July 21, 2013, 07:42:59 PM »
புறநானூறு, 143. (யார்கொல் அளியள்!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை : குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.
===================================

மலைவான் கொள்கஎன உயர்பலி தூஉய்
மாரி ஆன்று மழைமேக்கு உயர்கஎனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய உவகையர் சாரல்
புனத்தினை அயிலும் நாட! சினப்போர்க்

கைவள் ஈகைக் கலிமான் பேக,
யார்கொல் அளியள் தானே; நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்

வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும்நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மிக்
குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே

அருஞ்சொற்பொருள்:-

வான் = மழை
பலி = அருச்சனைப் பூ
ஆன்று = அடங்கி, நீங்கி
மேக்கு = மேல்
பேணுதல் = போற்றுதல்
புனம் = வயல், கொல்லை
அயில்தல் = உண்ணுதல்
கைவள் = கைவண்மை
அளியள் = இரங்கத் தக்கவள்
நெருநல் = நேற்று
சுரன் = சுரம் = காடு
உழந்து = வருந்தல், புரளல் (நடத்தல்)
குணில் = ஒருவகைப் பறை, பறையடிக்குந் தடி
பாய்தல் = தாக்குதல்
நளி = அகலம், பெருமை
இரு = பெரிய
சிலம்பு = மலை
இன்னா = துன்பம்
இகுத்தல் = சொரிதல்
குழல் = புல்லாங்குழல்
இனைதல் = வருந்துதல்

இதன் பொருள்:-

மலைவான்=====> சினப்போர்

மலைகளை மேகங்கள் சூழ்ந்து மழை பெய்க எனவும், மழை அதிகமாகப் பெய்தால் மேகங்கள் மேலே செல்லட்டும் என்றும் கடவுளை வாழ்த்தி உயர்ந்த பூக்களைத் தூவி வழிபட்டு, மழை நின்றதால் மகிழ்ச்சி அடைந்து மலைச் சாரலில் விளையும் தினையை உண்ணும் குறவர்கள் வாழும் நாட்டை உடையவனே! சினத்தோடு செய்யும் போரையும்,

கைவள்=====> ஆங்கண்

கைவண்மையால் கொடுக்கும் கொடையையும், செருக்குடைய குதிரைகளையும் உடைய பேகனே! நேற்று காட்டில் நடந்து வருந்திய என் சுற்றத்தினர் பசியுற்றனர். தடியால் அடிக்கப்பட்ட முரசின் ஒலி போல் முழங்கும் அருவியையுடைய பெரிய உயர்ந்த மலைஇடத்து உள்ள சிறிய ஊரின்

வாயில்=====> பெரிதே

வாயிற்புறத்து வந்து உன்னையும் உன் மலையையும் வாழ்த்திப் பாடினோம். அப்பொழுது, தான் துன்பத்தோடு வடிக்கும் கண்ணீரை நிறுத்த முடியாமல், தன் மார்பகங்கள் விம்மிக் கண்ணீரால் நனையுமாறு புல்லாங்குழல் வருந்துவது போல் ஒரு பெண்மணி மிகவும் அழுதாள். அவள் இரங்கத் தக்கவள். அவள் யார்?

பாடலின் பின்னணி:-

பேகன் தன் மனைவியிடமிருந்து பிரிந்து பரத்தை ஒருத்தியோடு வாழ்வதைக் கேள்வியுற்ற கபிலர், இப்பாடலில், பேகன் மனைவியின் துயரத்தையும் அவளுக்குப் பேகன் அருள் செய்ய வேண்டுமென்று ஒரு பாணன் கூறுவது போல் இப்பாடலை இயற்றியுள்ளார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #143 on: July 21, 2013, 07:44:40 PM »


புறநானூறு, 144. (அருளா யாகலோ கொடிதே!)
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை : குறுங்கலி.
===================================

அருளா யாகலோ கொடிதே; இருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
கார்எதிர் கானம் பாடினே மாக
நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்
கலுழ்ந்துவார் அரிப்பனி பூண்அகம் நனைப்ப

இனைதல் ஆனா ளாக, ’இளையோய்
கிளையை மன்எம் கேள்வெய் யோற்கு’என
யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள்
முகைபுரை விரலில் கண்ணீர் துடையா
யாம்அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள்இனி;

எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்
வரூஉம் என்ப வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே

அருஞ்சொற்பொருள்:-

சீறியாழ் = சிறிய யாழ்
செவ்வழி = மாலைப் பொழுதிற்குரிய பண்
யாழ - அசைச்சொல்
கார் = மழை
எதிர் = இலக்கு
கானம் = காடு
நெய்தல் = ஆம்பல் மலர்
உண்கண் = மை தீட்டிய கண்
கலுழ்தல் = அழுதல், கலங்கல்
அரி = இடைவிடுகை
பனி = துளி
பூண் = அணிகலன்
இனைதல் = வருந்துதல்
கிளை = உறவு, நட்பு
கேள் = நட்பு
வெய்யோன் = விரும்பத்தக்கவன்
முகை = மொட்டு
புரை = ஒத்த
கிளைஞர் = உறவோர்
நலன் = அழகு
நயந்து = விரும்பி
வயங்குதல் = ஒளி செய்தல், விளங்குதல்
ஒல் - ஒலிக் குறிப்பு

இதன் பொருள்:-

அருளா=====> நனைப்ப

மாலைநேரத்தில் இருள் வந்ததால் சிறிய யாழை இசைத்து உன் மழைவளம் மிகுந்த காட்டை செவ்வழிப் பண்ணில் பாடினோம். அப்பாட்டைக் கேட்டவுடன், நீல நிறமும் மணமும் உடைய ஆம்பல் மலர் போன்ற மை தீட்டிய கண்களுடைய பெண் ஒருத்தி கலங்கி விட்டுவிட்டு உகுத்த கண்ணீர்த்துளிகள் அவள் அணிகலன்களை நனைத்தன

இனைதல்=====> கேள்இனி

அவள் வருந்தி அழுதாள். ஆகவே, நாங்கள் “இளம்பெண்ணே! நீ எங்கள் நட்பை விரும்புபவனுக்கு (பேகனுக்கு) உறவினளோ?” என்று வணங்கிக் கேட்டோம். அவள் காந்தள் மொட்டுப் போன்ற தன் கை விரல்களால் கண்ணீரைத் துடைத்து, “ நான் அவனுடைய உறவினள் அல்ல; கேள்! இப்போழுது,

எம்போல்=====> நல்லூ ரானே

என் போன்ற ஒருத்தியின் அழகை விரும்பி, புகழ் மிக்க பேகன் ஒலிக்கும் தேரில் முல்லையை வேலியாக உடைய நல்லூருக்கு எந்நாளும் வருவதாகக் கூறுகிறார்கள்” என்று கூறினாள். அவளுக்கு நீ அருள் செய்யாதிருப்பது கொடிது.

பாடலின் பின்னணி:-

பேகன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து, பரத்தை ஒருத்தியோடு வாழ்வதைக் கேள்வியுற்ற பரணர், இப்பாடலில் பேகனுக்கு அறிவுரை கூறுகிறார். பாணன் ஒருவன் பாட்டிசைக்கக் கேட்ட கண்ணகி கண் கலங்குகிறாள். அதைக் கண்ட பாணன், “ அம்மையே, தாங்கள் என் தலைவன் பேகனுக்கு உறவினரோ?” என்று கேட்கிறான். அதற்குக் கண்ணகி, தான் பேகனுக்கு உறவினள் அல்லள் என்றும் தன்னைப் போல் ஒருத்தியின் அழகை விரும்பிப் பேகன் தினமும் அவள் இருக்கும் ஊராகிய நல்லூருக்குத் வருவதாகப் பலரும் கூறுகிறார்கள் என்றாள். பாணன் கண்ணகியோடு நடத்திய உரையாடலைப் பேகனுக்கு எடுத்துரைத்து அவளுக்கு பேகன் அருள் செய்யாதிருப்பது மிகவும் கொடிய செயல் என்று பரணர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #144 on: July 21, 2013, 07:46:13 PM »
புறநானூறு, 145. (அவள் இடர் களைவாய்!)
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை : குறுங்கலி.
===================================

மடத்தகை மாமயில் பனிக்கும்என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக,
பசித்தும் வாரோம்; பாரமும் இலமே ;
களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்

நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி
அறம்செய் தீமோ அருள்வெய் யோய்என
இஃதியாம் இரந்த பரிசில்அஃது இருளின்
இனமணி நெடுந்தேர் ஏறி
இன்னாது உறைவி அரும்படர் களைமே!

அருஞ்சொற்பொருள்:-

மடம் = மென்மை
தகை = தன்மை
மா = கருமை
பனித்தல் = நடுங்குதல்
படாஅம் = படாம் = போர்வை
கடாம் = மத நீர்
கலிமான் = செருக்குடைய குதிரை
கோடு = யாழ்த்தண்டு
நயம் புரிந்து உறையுநர் = இசை நயம் புரிந்து வாழ்பவர்
வெய்யோய் = விரும்புபவன்
இனம் = நிறை
படர் = துன்பம்

இதன் பொருள்:-

மடத்தகை=====> சீறியாழ்

மென்மையான இயல்பும் கருமை நிறமும் உடைய மயில் ஒன்று குளிரில் நடுங்குகிறது என்று எண்ணி அம்மயிலுக்குப் போர்வை அளித்தவனே! குறையாத புகழும் மதமுள்ள யானைகளும் செருக்குடைய குதிரைகளும் உடைய பேகனே! நான் பசியினால் வரவில்லை; எனக்குச் சுற்றத்தாரால் வரும் சுமையும் இல்லை. களாப்பழம் போன்ற கரிய தண்டையுடை ய சிறிய யாழுடன்,

நயம்புரி=====> களைமே

இசை நயம் தெரிந்தோர் தலையைசைத்துக் கேட்குமாறு “ அறம் செய்க; அருளை விரும்புபவனே” என்று பாடி உன்னிடம் பரிசிலாகக் கேட்பது என்னவென்றால் ”நீ இன்று இரவே நிறைந்த மணிகளுடைய உயர்ந்த தேரில் ஏறிப்போய் துயரத்துடன் வாழ்பவளின் (உன் மனைவி கண்ணகியின்) துன்பத்தைக் களைவாயாக” என்பதுதான்.

பாடலின் பின்னணி:-

பரணர் பாடியதைக் கேட்ட பேகன் அவருக்குப் பரிசில் அளிக்க முன்வந்தான். அதைக் கண்ட பரணர், “ மயிலுக்குப் போர்வை அளித்த பேகனே! நாங்கள் பசியால் இங்கு வரவில்லை; எமக்குச் சுற்றமும் இல்லை; நீ இன்றே புறப்பட்டு உன் மனைவியிடம் சென்று அவள் துன்பத்தைத் தீர்க்க வேண்டும்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #145 on: July 21, 2013, 07:47:39 PM »
புறநானூறு, 146. (தேர் பூண்க மாவே!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை : குறுங்கலி.
===================================

அன்ன வாக; நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணிநின் வன்புல
நன்னாடு பாட, என்னை நயந்து
பரிசில் நல்குவை யாயின் குரிசில்நீ

நல்கா மையின் நைவரச் சாஅய்
அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை
கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்
தண்கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே!

அருஞ்சொற்பொருள்:-

வெறுக்கை = செல்வம்
செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண்
நயந்து = விரும்பி
குரிசில் = அரசன், தலைவன்
நைவரல் = இரங்குதல்
சாய்தல் = தளர்தல்
உழத்தல் = வருந்துதல்
அரிவை = இருபத்து ஐந்து வயதுள்ள பெண் (பெண்)
கலித்தல் = தழைத்தல்
கலாவம் = தோகை
ஒலித்தல் = தழைத்தல்
கோதை = பூ மாலை
புனைதல் = சூடுதல்
வண் = மிகுதி
பரிதல் = ஓடுதல்
மா = குதிரை

இதன் பொருள்:-

அன்ன வாக=====> குரிசில்நீ

நீ எனக்கு அளிக்கும் அரிய அணிகலன்களும் செல்வமும் அப்படியே இருக்கட்டும். அவற்றை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. போர்களில் வெல்லும் பேகனே! சிறிய யாழை ஏந்தி, மலை நேரத்திற்குரிய செவ்வழிப் பண்ணில் பாட்டிசைத்து உன் வலிய நிலமாகிய நல்ல நாட்டை நான் பாடுவதால் நீ என்னை விரும்பி எனக்குப் பரிசில் அளிப்பதாக இருந்தால்,

நல்கா=====> நின் மாவே

தலைவனே! நீ அருள் செய்யாததால் அரிய துயரத்தால் மனம் வருந்தி உடல் தளர்ந்து அழகிய அணிகலன்களோடு உள்ள உன் மனைவியின் மயில் தோகை போல் காலளவு தழைத்த மெல்லிய கூந்தலில் நறுமணமுள்ள புகையூட்டி, குளிர்ந்த மணமுள்ள மாலை அணியுமாறு விரைந்தோடும் குதிரைகளை உன் நெடிய தேரில் பூட்டுவாயாக!

பாடலின் பின்னனி:-

வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து வாழ்வதைக் கேள்வியுற்ற அரிசில் கிழார் அவனைக் காணச் சென்றார். பேகன் இவருக்குப் பெருமளவில் பரிசில் அளித்தான். இவர், “என்னைப் பாராட்டி எனக்குப் பரிசில் அளிக்க விரும்பினால், நான் விரும்பும் பரிசில் பொன்னும் பொருளும் அல்ல; நீ உன் மனைவியோடு சேர்ந்து வாழவேண்டும். அதுவே நான் வேண்டும் பரிசில்” என்று இப்பாடலில் பேகனுக்கு அறிவுரை கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #146 on: July 21, 2013, 07:48:51 PM »
புறநானூறு, 147. (எம் பரிசில்!)
பாடியவர்: பெருங்குன்றூர்க் கிழார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை : குறுங்கலி.
===================================

கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார்வான் இன்னுறை தமியள் கேளா
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப்
புதுமலர் கஞல, இன்று பெயரின்
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!

அருஞ்சொற்பொருள்:-

முழை = குகை
நீந்தி = கடந்து
செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண்
கார் = கார் காலம் (ஆவணி, புரட்டாசி)
உறை = மழைத்துளி
தமி = தனிமை
சிறை = பக்கம்
புலம்பு = வருத்தம்
அரி = செவ்வரி (கண்வரி)
மதர் = செருக்கு
அம் = அழகு
மா = நிறம்
அரிவை = பெண்
மண்னுதல் = கழுவுதல்
கஞல = விளங்க
பெயரின் = செல்லின்

இதன் பொருள்:-

ஆவியர் கோவே! கற்குகைகளிலிருந்து விழும் அருவிகளுடைய பலமலைகளைக் கடந்து, வரும் வழியில் சிறிய யாழால் மாலை நேரத்திற்குரிய செவ்வழிப் பண்ணை இசைத்து வந்தோம். நேற்று நாங்கள் வந்த பொழுது, கார் காலத்தில் வானத்திலிருந்து விழும் இனிய மழைத்துளிகளின் ஓசையைத் தனித்திருந்து கேட்டு ஒரு பெண் ஒரு பக்கத்தில் இருந்து வருந்திக்கொண்டு இருந்தாள். (அவள் உன் மனைவி என்று தெரிந்து கொண்டோம்). அவள் கண்கள் செவ்வரியுடனும் செருக்குடனும் கண்ணீர் மல்கி இருந்தது. அழகிய நிறமுள்ள அப்பெண்னின் நெய் தடவப்படாத கரிய கூந்தலை கழுவப்பட்ட நீல மணி போல் மாசு இல்லாமல் கழுவிப் புதுமலர் பொலியச் செய்வதற்கு இன்றே நீ புறப்பட்டால், அதுவே எம் பரிசு.

பாடலின் பின்னணி:-

இப்பாடலை ஒரு பாணனின் கூற்று போல் பெருங்குன்றூர்க் கிழார் பாடியுள்ளார். பாணன் ஒருவன், “ நேற்று நாங்கள் செவ்வழிப் பண்னை இசைத்தோம். அதைக் கேட்டு ஒரு பெண் தனியளாக, கண்ணீரும் கம்பலையுமாக இருந்தாள். அவள் முடியில் பூச் சூடவில்லை. அவள் உன் மனைவி என்று தெரிந்து கொண்டோம். அவள் தன் கூந்தலில் பூச்சூடி மகிழுமாறு நீ அருளுதல் வேண்டும். ஆவியர் குடியில் தோன்றிய பேகனே! அதுவே நீ எமக்கு அளிக்கும் பரிசில்” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #147 on: July 21, 2013, 07:50:03 PM »
புறநானூறு, 148. (என் சிறு செந்நா!)
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண்.
துறை : பரிசில் துறை.
===================================

கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளிநின்
அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி
நாடொறும் நன்கலம் களிற்றொடு கொணர்ந்து
கூடுவிளங்கு வியன்நகர்ப், பரிசில் முற்று அளிப்பப்
பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று, எம் சிறு செந்நாவே

அருஞ்சொற்பொருள்:-

கறங்குதல் = ஒலித்தல்
மிசை = மேல்
பிறங்குதல் = ஒளி செய்தல்
அசைவு = மடி, இளைப்பு
நோன்மை = வலிமை
நோன்தாள் = வலிய முயற்சி
நசை = விருப்பம்
ஏத்தி = வாழ்த்தி
கூடு = நெற்கூடு
பீடு = பெருமை
கிளத்தல் = கூறுதல்
எய்யாது = அறியாதது

இதன் பொருள்:-

மலை மேலிருந்து ஒலியுடன் விழுந்து விளங்கும் அருவிகள் உள்ள மலை நாட்டு நள்ளி! உன்னுடைய தளராத வலிய முயற்சியால் திரட்டிய விரும்பத்தக்க செல்வத்தை வாழ்த்தி நாள்தோறும் நல்ல அணிகலன்களை யானைகளோடு கொண்டுவந்து, நெற்குதிர்கள் விளங்கும் பெரிய நகரங்களில் இருக்கும் பரிசிலர்களுக்கு அனைத்தையும் அளிக்கிறாய். ஆகவே, பெருமை இல்லாத மன்னர்களைப் புகழ்வதை விரும்பி அவர்கள் செய்யாதவற்றைக் செய்தது போல் கூறுவதை எம் சிறிய, நடுவு நிலைமை தவறாத நாக்கு அறியாததாயிற்று.

பாடலின் பின்னணி:-

வன்பரணர் நள்ளியிடம் சென்று அவன் அவன் வெற்றிச் சிறப்பையும் வண்மையையும் புகழ்ந்தார். அதனைக் கேட்ட நள்ளி, அப்புகழுரைகளுக்குத் தான் தகுதியுடையவனா என்பதில் தனக்கு ஐயம் உண்டு என்று கூறினான். அவன் கூற்றுக்கு மறுமொழியாக, “ உன் கொடையால் என் வறுமை மறைந்து விட்டது. ஆகவே, பெருமை இல்லாத மன்னர்களின் புகழ்ச்சியை விரும்பி அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகப் பொய்யாகக் கூற வேண்டிய வறிய நிலை என்னிடம் இல்லை. அதனால், என் நாக்கு ஒருவரையும் அவர் செய்யாததைக் கூறிப் பாராட்டாது” என்று கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #148 on: July 21, 2013, 07:54:58 PM »
புறநானூறு, 149. (வண்மையான் மறந்தனர்!)
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

நள்ளி வாழியோ; நள்ளி நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர் அதுநீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

அருஞ்சொற்பொருள்:-

நள் = இரவு, இருள்,செறிவு
மருதம் = காலை நேரத்திற்குரிய பண்
கைவழி = பாணர்கள் எப்பொழுதும் கையில் வைத்துள்ள ஒரு வகை யாழ்
செவ்வழி = மாலை நேரத்திற்குரிய பண்
எமர் = எம்மவர்
புரவு = கொடை

இதன் பொருள்:-

நள்ளி! நீ வாழ்க! கொடுப்பதைக் கடமையாக மேற்கொண்டு நீ அளித்த கொடையால் ஏற்பட்ட வளத்தால், பாணர்கள் இசைக்குரிய வழிமுறைகளை மறந்து இருண்டு வரும் மாலைப் பொழுதில் மருதப் பண்ணையும் காலையில் கையிலுள்ள யாழால் செவ்வழிப் பண்ணையும் வாசிக்கிறார்கள்.

பாடலின் பின்னணி:-

ஒரு சமயம் வன்பரணர் கண்டீராக் கோப்பெரு நள்ளியுடன் இருந்தார். அப்பொழுது பாணர் சிலர் காலையில் பாட வேண்டிய மருதப் பண்ணை மாலையிலும், மாலையில் பாட வேண்டிய செவ்வழிப் பண்ணை காலையிலும் மாற்றிப் பாடினர். அவர்கள் ஏன் அவ்வாறு தவறாகப் பாடுகிறார்கள் என்று நள்ளி வன்பரணரைக் கேட்டான். அதற்கு, வன்பரணர், “ நள்ளி! காலையில் மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப் பண்னும் பாடுவதுதான் முறை. நீ அவர்களுக்கு வறுமை தெரியாதவாறு வேண்டியவற்றை எல்லாம் நிரம்ப அளித்ததால் அவர்கள் அம்முறைமையை மறந்தனர்” என்று இப்பாடலில் விடை அளிக்கிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226266
  • Total likes: 28727
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #149 on: July 21, 2013, 07:56:25 PM »
புறநானூறு, 150. (நளி மலை நாடன்!)
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
===================================

கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்
தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி
மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்

வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்
செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன்
தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ
இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை
கான்அதர் மயங்கிய இளையர் வல்லே

தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, ‘நின்
இரும்பேர் ஒக்கலொடு தின்ம்’ எனத் தருதலின்
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி
நல்மரன் நளிய நறுந்தண் சாரல்

கல்மிசை அருவி தண்ணெனப் பருகி
விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே
“பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டோம்” என
மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்

மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்
‘எந்நா டோ?’ என, நாடும் சொல்லான்;
‘யாரீ ரோ!’ எனப், பேரும் சொல்லான்:
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே;
இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி

அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
பளிங்கு வகுத் தன்ன தீநீர்
நளிமலை நாடன் நள்ளிஅவன் எனவே

அருஞ்சொற்பொருள்:-

கூதிர் = குளிர்
கூதிர் காலம் = ஐப்பசி, கார்த்திகை
பாறுதல் = அழிதல், சிதறுதல்
சிதார் = கந்தை
புலம் = இடம்
படர்ந்த = சென்ற
உயக்கம் = வருத்தம்
உயங்குதல் = வருந்துதல், வாடுதல், துவளுதல்
உலைவு = இளைப்பு, ஊக்கக் குறைவு
கணம் = கூட்டம்
வான் = மழை, அழகு, சிறப்பு
சென்னி = தலை
இரீஇ = இருத்தி
இழுது = நெய்
கொழுங்குறை = ஊன் துண்டுகள்
கான் = காடு
அதர் = வழி
ஞெலிதல் = கடைதல், தீக் கடைதல்
மிசைதல் = அனுபவித்தல், உண்டல், நுகர்தல்
காய் = வருந்தல், பசி
நளிய = செறிந்த
வல் = விரைவு
வீறு = ஒளி, பெருமை
வயங்குதல் = விளங்குதல்
காழ் = முத்து வடம், மணி வடம்
மடை = ஆபரணக் கடைப் பூட்டு
நளி = பெரிய

இதன் பொருள்:-

கூதிர்=====> கழற்கால்

குளிர் காலத்தில் மழையில் நனைந்த பருந்தின் கரிய சிறகைப் போன்ற கிழிந்த கந்தைத் துணியை உடுத்திய நான் பலாமரத்தடியில் என்னையே மறந்து இருந்தேன். வேற்று நாட்டிலிருந்து அங்கே வந்துள்ள என்னுடைய வருத்ததையும் தளர்ச்சியையும் கண்டு, மான் கூட்டத்தைக் (வேட்டையாடிக்) கொன்று குருதி தோய்ந்த, அழகிய வீரக்கழலணிந்த காலும்,

வான்கதிர்=====> வல்லே

அழகிய நீலமணி ஒளிரும் தலையும் உடைய, செல்வச் செம்மல் போன்ற ஒரு வேட்டுவன் வலிய வில்லோடு அங்கே தோன்றினான். அவனைக் கண்டு நான் வணங்கி எழுந்திருப்பதைப் பார்த்த அவன், தன் கையை அசைத்து என்னை இருக்கச் செய்தான். காட்டு வழியில் சென்று வழிதவறிய இளைஞர்கள் விரைந்து வந்து சேர்வதற்கு முன்,

தாம்வந்து=====> சாரல்

நெய் விழுது போன்ற வெண்ணிறமுடைய புலால் துண்டுகளை தான் மூட்டிய தீயில் சமைத்து, “தங்கள் பெரிய சுற்றத்தோடு இதை உண்ணுக” என்று எனக்கு அளித்தான். அதனை நாங்கள் அமிழ்தத்தைப் போல் உண்டு எங்களை வருத்திய பசியைத் தீர்த்து, நல்ல மரங்கள் சூழ்ந்த மணமுள்ள குளிர்ந்த மலைச் சாரலில்

கல்மிசை=====> ஆரம்

மலை உச்சியிலிருந்து விழும் அருவியின் குளிர்ந்த நீரைப் பருகினோம். நான் அவனிடமிருந்து விடைபெற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அவன் விரைந்து வந்து, “ தாங்கள் பெறுதற்கரிய பெருமைக்குரிய அணிகலன்கள் வேறு எதுவும் எங்களிடம் இல்லை; நாங்கள் காட்டு நாட்டைச் சார்ந்தவர்கள்” என்று கூறித் தனது மார்பில் அணிந்திருந்த ஒளிபொருந்திய முத்து மாலையையும்

மடைசெறி=====> எனவே

முன் கையில் அணிந்திருந்த கடகத்தையும் கொடுத்தான். ”தங்களது நாடு எது?” என்று கேட்டேன். அவன் தன் நாடு எது என்று கூறவில்லை. “தாங்கள் யார்?” என்று கேட்டேன். அவன் தன் பெயரையும் கூறவில்லை. அவன், பெருமைக்குரிய தோட்டி என்னும் அழகிய மலையையும், பக்கத்திலுள்ள அழகிய பெரிய மலையையும் காப்பவன் என்றும் பளிங்கு போன்ற நிறமுடைய இனிய நீருடைய பெரிய மலை நாட்டு நள்ளி என்றும் வழியில் வந்த பிறர் சொல்லக் கேட்டேன்

சிறப்புக் குறிப்பு:-

தோட்டி என்னும் சொல்லுக்கு, யானைப்பாகன் யானையைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தும், ”அங்குசம்” என்று ஒரு பொருள். அது இரும்பால் செய்யப்பட்டது. ஆனால், இப்பாடலில் குறிப்பிடப்படும் தோட்டி என்னும் சொல் தோட்டி மலையைக் குறிக்கிறது. இப்பாடலை இயற்றிய புலவர், “இரும்பு புனைந்து இயற்றா” என்ற அடைமொழியால் “இரும்பால் செய்யாப்படாத தோட்டி” என்று தோட்டி மலையைக் குறிப்பிடுகிறார்.