Author Topic: ~ புறநானூறு ~  (Read 108584 times)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #105 on: June 17, 2013, 07:40:24 PM »


புறநானூறு, 106. (கடவன் பாரி கைவண்மையே!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
======================================

நல்லவும் தீயவும் அல்ல குவிஇணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே.

அருஞ்சொற்பொருள்:-

குவிதல் = கூம்புதல்
இணர் = பூங்கொத்து
பேணல் = விரும்பல்
மடவர் = அறிவில்லாதவர்
மெல்லியர் = அற்ப குணம் உடையவர்

இதன் பொருள்:-

நல்லது தீயது என்ற இருவகையிலும் சேராத, சிறிய இலையையுடைய எருக்கம் செடியில் உள்ள மலராத பூங்கொத்தாயினும் அதுதான் தன்னிடம் உள்ளது என்று அதை ஒருவன் கடவுளுக்கு அளிப்பானானால், கடவுள் அதை விரும்ப மாட்டேன் என்று கூறுவதில்லை. அது போல், அறிவில்லாதவரோ அல்லது அற்ப குணமுடையவரோ பாரியிடம் சென்றாலும் அவர்களுக்கு கொடை வழங்குவதைத் தன் கடமையாகக் கருதுபவன் பாரி.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், தன்னை நாடி வருவோர் அறிவில்லாதவரானாலும் அற்ப குணமுடையவராக இருந்தாலும் அவர்களுக்கு வேண்டுவன அளிப்பதைத் தன் கடமையாகக் கொண்டவன் வேள் பாரி என்று கபிலர் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

நறுமணம் இல்லாத காரணத்தால் எருக்கம் பூ நல்ல பூக்களின் வகையில் சேராதது. ஆனால், எருக்கம் பூ கடவுளுக்குச் சூட்டப்படும் பூக்களில் ஒன்று என்ற காரணத்தால் அது தீய பூக்களின் வகையிலும் சேராதது. ஆகவேதான், அதை “நல்லவும் தீயவும் அல்ல” என்று கபிலர் கூறுவதாக அவ்வை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் கூறுகிறார். மற்றும், பித்தரும் நாணத்தைத் துறந்து மடலேறுவோரும் எருக்கம் பூ அணிவது மரபு. ஆகவேதான், “எருக்கம் ஆயினும்” என்று இழிவுச்சிறப்பு உம்மையைக் கபிலர் இப்பாடலில் பயன்படுத்தி உள்ளாதாகவும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #106 on: June 17, 2013, 08:14:19 PM »


புறநானூறு, 107. (பாரியும் மாரியும்)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
======================================

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே.

அருஞ்சொற்பொருள்:-

ஏத்துதல் = உயர்த்திக் கூறுதல்
செந்நா = செம்மையான நா , நடுநிலை தவறாத நா
மாரி = மழை
ஈண்டு = இவ்விடம், இவ்வுலகம்
புரத்தல் = காத்தல்.

இதன் பொருள்:-

நடுநிலை தவறாத (நாவையுடைய) புலவர் பலரும் “பாரி, பாரி” என்று பாரி ஒருவனையே உயர்வாகப் புகழ்கிறார்கள். பாரி ஒருவன் மட்டும் (தன் கொடையால்) இவ்வுலகைக் காக்கவில்லை; இவ்வுலகைக் காப்பதற்கு மழையும் உண்டு.

பாடலின் பின்னணி:-

இப்பாடலில், “புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கிறார்கள். ஆனால், இவ்வுலகைக் காப்பதற்கு பாரி மட்டுமல்லாமல் மாரியும் உண்டு” என்று வஞ்சப் புகழ்ச்சியணியால் பாரியைக் கபிலர் சிறப்பிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில், கபிலர் பாரியை இகழ்வது போல் புகழ்கிறார். இது வஞ்சப் புகழ்ச்சி அணிக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. சில சமயங்களில் மழை அதிகமாகப் பெய்து கேடு விளைவிக்கும் ஆற்றலையுடையது. ஆனால், பாரியின் கொடையால் அத்தகைய கேடுகள் விளையும் வாய்ப்பில்லை. ஆகவேதான், செந்நாப் புலவர் பாரி ஒருவனையே புகழ்ந்தார் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #107 on: June 17, 2013, 08:19:45 PM »
புறநானூறு, 108. (பாரியும் மாரியும்)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
======================================

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே; அறம்பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
‘வாரேன்’ என்னான் அவர்வரை யன்னே

அருஞ்சொற்பொருள்:-

குறத்தி = குறிஞ்சிப்பெண்
மாட்டுதல் = செருகுதல்
வறல் = வற்றல்
வறக்கடை= வறண்ட காலம்
கொள்ளி = கொள்ளிக் கட்டை
ஆரம் = சந்தனமரம்
அயல் = அருகில்
சாரல் = மலைச் சரிவு
வேங்கை = வேங்கை மரம்
சினை = கிளைவாரேன் = வரமாட்டேன்
வரை = எல்லை

இதன் பொருள்:-

குறிஞ்சிப்பெண் ஒருத்தி அடுப்பில் செருகிய வற்றிய கொள்ளிக்கட்டை சந்தனமாகையால், அதன் அழகிய புகை அருகில் உள்ள மலைச்சரிவில் இருக்கும் வேங்கை மரத்தின் பூக்களுடைய கிளைகளுக்கெல்லாம் பரவுகிறது. அத்தகையது பறம்பு நாடு. தன்னைப் பாடி வந்த பரிசிலர்க்குப் பாரி பறம்பு நாட்டையே பரிசாக அளித்ததால் அது இப்பொழுது அவர்க்கு உரியதாயிற்று. பரிசிலர் பாடி வந்து, “உன்னையே பரிசாக எமக்குத் தர வேண்டுமென்று” கேட்டால், அறத்தை மேற்கொண்டு, பாரி அவரிடம் வரமாட்டேன் என்று கூற மாட்டான்.

பாடலின் பின்னணி:-

தன்னைப் பாடி வந்த இரவலர்க்குப் பறம்பு நாட்டிலுள்ள முந்நூறு ஊர்களையும் பாரி பரிசாக அளித்துவிட்டான். இனி வருவோர், தன்னையே பரிசாகக் கேட்டாலும், பாரி தயங்காமல் தன்னை அவர்களுக்குப் பரிசாக அளிக்கும் கொடைத்தன்மையுடையவன் என்று கபிலர் பாரியின் கொடைத்தன்மையை இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

சந்தன மரக்கட்டை எரிக்கப்படுவதால் எழும் புகையைத் தவிர பறம்பு நாட்டில் பகைவர் மூட்டிய தீயினால் எழும் புகை இல்லை என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது.

அன்புடைமை என்னும் அதிகாரத்தில், “அன்பில்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே உரியதாகக் கொள்வர். ஆனால், அன்புடையவர் தன் எலும்பையும் (தன்னையே) வேண்டுமானாலும் பிறர்க்கு அளிப்பர்” என்பதை

அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (குறள் - 72)

என்ற குறளில் வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவரின் கருத்துக்கும் இப்பாடலில் கபிலர் கூறும் கருத்துக்கும் உள்ள ஒற்றுமை குறிப்பிடத் தக்கது.
« Last Edit: June 17, 2013, 08:27:40 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #108 on: June 17, 2013, 08:25:21 PM »


புறநானூறு, 109. (மூவேந்தர் முன் கபிலர்!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை : மகண் மறுத்தல். ஒரு தலைவன் அவனைவிட எளியவனின் மகளை வேண்ட, அவ்வெளியவன் தன் மகளை அத்தலைவனுக்கு மணம் செய்விக்க மறுத்துக் கூறுதல்.
==========================================

அளிதோ தானே, பாரியது பறம்பே;
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;

நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதுஅழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான்கண் அற்றுஅவன் மலையே; வானத்து
மீன்கண் அற்றுஅதன் சுனையே; ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்

தாளிற் கொள்ளலிர்; வாளிற் றாரலன்;
யான்அறி குவன்அது கொள்ளு மாறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர,
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.

அருஞ்சொற்பொருள்:-

அளி = இரக்கம்
நளி = பெருமை
வெதிர் = மூங்கில்
ஊழ்த்தல் = முதிர்தல்
வீழ்க்கும் = தாழ இருக்கும் (நிலத்துள் ஆழச் சென்றிருக்கும்)
அணி =அழகு
ஓரி = குரங்கு
மீது = மேல்
கண் = இடம்
அற்று = அத்தன்மைத்து
கண் - அசை நிலை
புலம் = இடம்
தாள் = முயற்சி
சுகிர்தல் = வடித்தல்
புரி = முறுக்கு
சுகிர்புரி = தொய்வற்ற இறுக்கமான நரம்பு
விரை = மணம்
ஒலித்தல் = தழைத்தல்

இதன் பொருள்:-

அளிதோ=====> வீழ்க்கும்மே

பாரியின் பறம்பு மலை இரங்கத் தக்கது. பெருமையுடைய முரசுடன் நீங்கள் மூவரும் சேர்ந்து முற்றுகை இட்டாலும், உழவர் உழாமல் விளையும் பயனுள்ள நான்கு பொருள்கள் பறம்பு நாட்டில் உள்ளன. ஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலில் நெல் விளையும். இரண்டு, இனிய சுளைகள் உள்ள பலாவில் பழுத்த பழங்கள் இருக்கும். மூன்று, வளமான வள்ளிக் கொடியிலிருந்து கிழங்குகள் கீழே தாழ்ந்து இருக்கும்

நான்கே=====> ஆயினும்

நான்கு, அழகிய நிறமுள்ள குரங்குகள் தாவுவதால் தேனடைகள் மிகவும் அழிந்து, கனத்த நெடிய மலையிலிருந்து தேன் சொரியும்.
பாரியின் பறம்பு மலை அகல, நீள, உயரத்தில் வானத்தைப் போன்றது. அதிலுள்ள நீர்ச்சுனைகள் விண்மீன்கள் போன்றன. அந்த மலையில், நீங்கள் மரங்கள் தோறும் யானைகளைக் கட்டினாலும், இடமெல்லாம் தேர்களை நிறுத்தினாலும்

தாளிற்=====> ஒருங்குஈ யும்மே

உங்கள் முயற்சியால் பறம்பு நாட்டைப் பெற முடியாது. நீங்கள் வாளால் போரிட்டாலும் அவன் தன் நாட்டை உங்களுக்குத் தரமாட்டன். அதை அடையும் வழியை நான் அறிவேன். தொய்வற்றதாகவும் இறுக்கமாகவும் முறுக்கப் பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைச் செய்து, அதை மீட்டி, மணமிக்க தழைத்த கூந்தலையுடைய உங்கள் விறலியர் பின் வர ஆடியும் பாடியும் சென்றால், பாரி பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும் ஒருங்கே உங்களுக்கு அளிப்பான்.

பாடலின் பின்னணி:-

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் மகளிரை மணக்க விரும்பினர். தன் மகளிரை மூவேந்தரில் எவருக்கும் மணம் செய்விக்கப் பாரி மறுத்தான். ஆகவே, மூவேந்தரும் ஒருவர் ஒருவராகப் பாரியோடு போரிட்டுத் தோல்வியுற்றனர். அது கண்ட கபிலர், "நீங்கள் பாணர்களைப் போல உங்கள் விறலியரோடு சென்று பாடலும் ஆடலும் செய்தால், பாரி தன் நாட்டையும் மலையையும் உங்களிக்கு அளிப்பான்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இங்கு “அளிதோ” என்பது வியப்பின் காரணத்தால் கூறப்பட்டது.

ஒரு நாட்டிற்கு அரண் எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர்,

கொளற்கரியதாய் கொண்ட கூழ்த்தாகி, அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண். (குறள் - 745)

என்ற குறளில் கூறுகிறார். அதாவது, அரண் என்பது பகைவரால் பற்றுதற்கு அரியதாய் உள்ளிருப்போர்க்கு வேண்டிய அளவு உணவு உடையதாய் உள்ளிருப்பவர்கள் தங்கிப் போர்செய்வதற்கு எளியதாய் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவரின் கருத்தும் இப்பாடலில் கபிலர் கூறும் கருத்தும் ஒத்திருப்பது சிந்திக்கத் தக்கது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #109 on: June 17, 2013, 09:38:13 PM »


புறநானூறு, 110. (யாமும் பாரியும் உளமே!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை : மகண் மறுத்தல்.
====================================

கடந்துஅடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்புகொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே.

அருஞ்சொற்பொருள்:-

கடந்து அடுதல் = வஞ்சியாது எதிர் நின்று போரிடுதல்
தானை = படை
உடன்றல் = போரிடுதல்
தண் = குளிர்ந்த

இதன் பொருள்:-

வஞ்சியாது எதிர்த்து நின்று போரிடும் படைகளையுடைய நீங்கள் மூவரும் ஒன்று கூடிப் போரிட்டாலும் பறம்பு நாடு பெறுதற்கு அரிது. குளிர்ந்த பறம்பு நன்னாடு முந்நூறு ஊர்களை உடையது. அங்குள்ள முந்நூறு ஊர்களையும் பரிசிலர் முன்னரே பெற்றனர். எஞ்சியிருப்பது, பாரியும் எம் போன்ற புலவர்களும்தான். நீங்கள் பரிசிலரைப் போல் பாடி வந்தால் பாரியையும், எம் போன்ற புலவர்களையும் பறம்பு மலையையும் பெறலாம்.

பாடலின் பின்னணி:-

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தம் பெரும் படையுடன் பறம்பு மலையை முற்றுகை இட்டனர். அச்சமயம், “நீங்கள் உங்கள் பெரும்படையுடன் எதிர்த்து நின்று போரிட்டாலும் பறம்பு நாட்டைப் பெற முடியாது. பறம்பு நாட்டில் உள்ள முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றனர். இனி என்னைப் போன்ற புலவர்களும் பாரியும் மட்டுமே உள்ளோம்; நீங்களும் பரிசிலரைப் போல் வந்து பாடினால் எஞ்சி யுள்ள எங்களையும் பறம்பு மலையையும் பெறலாம்.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பாரி ஒரு கொடை வள்ளல் என்பது இப்பாடலும் ஒரு சான்று.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #110 on: June 17, 2013, 09:41:32 PM »


புறநானூறு, 111. (விறலிக்கு எளிது!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை : மகண் மறுத்தல்.
====================================

அளிதோ தானே, பேர்இருங் குன்றே;
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து இணைமலர் புரையும் உண்கண்
கிணைமகட்கு எளிதால், பாடினள் வரினே.

அருஞ்சொற்பொருள்:-

அளிது = இரங்கத் தக்கது
இரு = பெரிய
வேறல் = வெல்லுத
இணை = இரண்டு
புரையும் = ஒத்த
உண்கண் = மை உண்ட கண் (மை தீட்டிய கண்)
கிணை = ஒரு வகைப் பறை

இதன் பொருள்:-

மிகப் பெரிய பறம்பு மலை இரங்கத் தக்கது. அதை வேற்படையால் வெல்லுதல் வேந்தர்களுக்கு அரிது. நீலமலர்களைப் போன்ற மை தீட்டிய கண்களையுடய பெண்கள் கிணைப் பறையோடு பாடி வந்தால் பறம்பு மலையைப் பெறுவது எளிது.

பாடலின் பின்னணி:-

”பறம்பு மலை இரங்கத் தக்கது; அது வேந்தர்களால் கைப்பற்ற முடியாதது. ஆனால், பறையுடன் பாடி வரும் பெண்களுக்கு எளிதில் பரிசாகக் கிடைக்கும்” என்று தன் வியப்பைக் கபிலர் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

அழகிய பெண்களாக இருந்தாலும் அவர்களும் பரிசிலராகப் பாடி வந்து கேட்டால்தான் பறம்பு மலையைப் பெறமுடியுமே ஒழிய, தன் அழகால் பாரியை மயக்கி அம்மலையைப் பெற முடியாது என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #111 on: June 17, 2013, 09:45:38 PM »


புறநானூறு, 112. (உடையேம் இலமே!)
பாடியவர்: பாரி மகளிர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!

அருஞ்சொற்பொருள்:-

அற்றை = அன்று
திங்கள் = மாதம்
எறிதல் = அடித்தல்
இலம் = இல்லாதவர்கள் ஆனோம்

இதன் பொருள்:-

ஒரு மாதத்திற்கு முன் வெண்நிலவு ஓளிவீசிக் கொண்டிருந்த பொழுது நாங்கள் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம்; எங்கள் (பறம்பு) மலையையும் பிறர் கொள்ளவில்லை. அதேபோல், இன்று வெண்நிலவு வீசுகிறது. ஆனால், வெற்றி முரசு கொட்டும் வேந்தர்கள் எங்கள் மலையைக் கொண்டனர்; நாங்கள் எங்கள் தந்தையை இழந்தோம்.

பாடலின் பின்னணி:-

பாரி இறந்த பின்னர், பாரியின் மகளிரைக் கபிலர் பாதுகாவலான இடத்தில் சேர்த்து அவர்களைக் காப்பாற்றி வந்தார். பாரி இறந்து ஒரு மாதம் ஆகிய பிறகு, ஒரு நாள் முழு நிலவில் அவர்களுக்குத் தங்கள் தந்தையின் நினைவும் நாட்டின் நினைவும் வந்து அவர்களை வாட்டியது. அவர்களின் மனவருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்கள்.

சிறப்புக் குறிப்பு:-

மூவேந்தர்களும் பாரியைப் போரில் வெல்ல முடியவில்லை. ஆனால், அவர்கள் அவனை சூழ்ச்சியால் வென்றனர். “வென்றெறி முரசின் வேந்தர்” என்பது மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #112 on: June 17, 2013, 09:47:46 PM »


புறநானூறு, 113. (பறம்பு கண்டு புலம்பல்!)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும்,
அட்டுஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே; இனியே,
பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று

நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே;
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே

அருஞ்சொற்பொருள்:-

மட்டு = கள்
வாய் = தாழியின் வாய்
மை = செம்மறியாடு
விடை = கடா
வீழ்ப்ப = வீழ்த்த
அடுதல் = சமைத்தல்
ஆன்று = நீங்கி
ஆனாமை = குறையாமை
பெட்டல் = மிக விரும்பல்
பழுனுதல் = முதிர்தல், முடிவடைதல்
நட்டல் = நட்பு செய்தல்
மன்னோ - அசைச்சொல்
இனி = இப்போது
கையற்று = செயலற்று
வார்தல் = வடிதல்
பழிச்சுதல் = வாழ்த்துதல்
சேறல் = செல்லல், நடத்தல்
வாழி, ஓ இவை இரண்டும் அசைச் சொற்கள்
பெயர் = புகழ்
கோல் = அழகு
திரள் = திரட்சி
நாறுதல் = மணத்தல்
இரு = கரிய
கிழவர் = உரியவர்
படர்தல் = நினைத்தல்

இதன் பொருள்:-

மட்டுவாய்=====> கையற்று

பறம்பு மலையே! முன்பு, உன்னிடத்துக் கள் நிறைந்த தாழியின் வாய் திறந்தே இருந்தது; ஆட்டுக் கிடாவை வெட்டிச் சமைத்த கறியுடன் கூடிய கொழுமையான துவையலும் சோறும் குறையாது விரும்பிய அளவு அளிக்கும் முதிர்ந்த வளமும் இருந்தது. அவை மட்டுமல்லாமல் எம்மோடு நட்பாகவும் இருந்தாய். பெரும் புகழ் பெற்ற பறம்பு மலையே! இப்பொழுது, பாரி இறந்துவிட்டதால் கலங்கிச் செயலற்று

நீர்வார்=====> படர்ந்தே

நீர் வடியும் கண்ணோடு உன்னைத் தொழுது வாழ்த்தி, அழகிய திரண்ட முன்கைகளில் சிறிய வலையல்களை அணிந்த பாரி மகளிரின் மணமுள்ள கரிய கூந்தலுக்கு உரிமையுடையவரை நினைத்துச் (தேடிச்)செல்கிறோம்.

பாடலின் பின்னணி:-

பாரி இறந்த பிறகு, பாரி மகளிருக்குத் திருமணம் செய்யும் பொறுப்பைக் கபிலர் ஏற்றார். அவர்களைப் பாதுகாவலாக ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்புவித்து, அவர்களுக்கேற்ற கணவரை தேடுவதற்காக கபிலர் பறம்பு நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் பாரி மகளிரோடு பறம்பு நாட்டைவிட்டுச் செல்லும் பொழுது பெரும் வருத்தத்திற்கு உள்ளானார். அந்நிலையில் அவருடைய புலம்பலை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

ஒரு பெண்ணின் கூந்தலைத் தீண்டும் உரிமை அவள் கணவனுக்கு மட்டுமே உள்ளது என்பது சங்க காலத்து மரபு. ஆகவே, கணவன் அவன் மனைவியின் கூந்தலுக்கு உரியவன் என்று கருதப்பட்டான். இக்கருத்து குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலிலும் காணப்படுகிறது.

………..... மென்சீர்க்
கலிமயிற் கலாவத் தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே. (குறுந்தொகை - 225)

பொருள்: மெல்லிய சிறப்பை உடைய ஆரவாரிக்கும் மயிலினது பீலியைப் போன்ற தழைத்த மெல்லிய கூந்தல் உனக்கே உரிமை உடையதாகும் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

இப்பாடலில், கூந்தல் கிழவரைத் தேடிச் செல்கிறோம் என்று கபிலர் கூறுவது பாரி மகளிரை மணப்பதற்கேற்ற கணவரைத் தேடிச் செல்கிறோம் என்பதைக் குறிக்கும்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #113 on: June 17, 2013, 09:51:13 PM »


புறநானூறு, 114. (நெடியோன் குன்று)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும்; சிறுவரை
சென்றுநின் றோர்க்கும் தோன்றும் மன்ற;
களிறுமென்று இட்ட கவளம் போல
நறவுப்பிழிந்து இட்ட கோதுஉடைச் சிதறல்
வார்அசும்பு ஒழுகு முன்றில்
தேர்வீசு இருக்கை நெடியோன் குன்றே

அருஞ்சொற்பொருள்:-

ஈண்டு = இங்கு
வரை = அளவு
மன்ற - அசைச் சொல் (தெளிவாக என்றும் பொருள் கொள்ளலாம்)
நறவு = கள், தேன்
கோது = சக்கை
வார்த்தல் = ஊற்றுதல்
அசும்பு = சேறு
முன்றில் = முற்றம்
வீசுதல் = வரையாது கொடுத்தல்

இதன் பொருள்:-

யானை மென்று துப்பிய கவளம் சிதறிக் கிடப்பதைப் போல், மதுவடித்த பிறகு ஒதுக்கப்பட்டுச் சிதறிக் கிடக்கும் சக்கையிலிருந்து மதுச் சேறு ஒழுகும் முற்றத்திலிருந்து தேர்களை வரையாது வழங்கும் இயல்புடைய உயர்ந்தோனாகிய பாரியின் குன்று இங்கு நின்றோர்க்கும் தெரியும்; இன்னும் சிறிதளவு தூரம் சென்று நின்றவர்களுக்கும் அது தெளிவாகத் தெரியும்.

பாடலின் பின்னணி:-

நீண்ட தூரம் சென்ற பிறகும் பறம்பு மலை கண்ணுக்குத் தெரிவதைக் கண்டு பாரி மகளிர் வியப்படைந்தனர். அது கண்ட கபிலர், பாரி உயிரோடிருந்த பொழுது அம்மலையின் நிலையையும் பாரியின் வள்ளல் தன்மையையும் இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பாரி உயிரோடு இருந்த பொழுது பறம்பு மலை புகழ் மிக்கதாய் எங்கும் விளங்கிற்று. அதைக் கண்டிராதவர்களும் அதன் புகழை அறிந்திருந்தார்கள். அவன் இறந்த பிறகு, மற்ற மலைகளைப் போல் கண்ணுக்குப் புலப்படும் சாதரண மலையாகவே பறம்பு மலையும் உள்ளது என்ற குறிப்பும் இப்பாடலில் காணப்படுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #114 on: June 19, 2013, 07:21:47 PM »


புறநானூறு, 115. (இன்னான் ஆகிய இனியோன் குன்று)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

ஒருசார் அருவி ஆர்ப்ப, ஒருசார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க உக்க தேக்கள் தேறல்
கல்அலைத்து ஒழுகும் மன்னே; பல்வேல்
அண்ணல் யானை வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!

அருஞ்சொற்பொருள்:-

சார் = பக்கம்
ஆர்த்தல் = ஒலித்தல்
மண்டை = இரப்போர் கலம்
ஆர் = நிறைவு
வாக்க = வார்க்க (வடிக்க)
உக்க = அழிந்த (சிந்திய)
தேக்கள் = இனிய கள்
தேறல் = கள், தேன்
மன் - அசைச் சொல் ( கழிவைக் குறிக்கும் அசைச் சொல்)

இடன் பொருள்:-

பல வேற்படைகளுக்குத் தலைமையும் யானைகளையுமுடைய வேந்தர்களுக்குக் கொடியவனாகவும் பரிசிலர்க்கு இனியவனாகவும் இருந்த பாரியின் குன்றில் ஒரு பக்கம் ஒலிக்கும் அருவி முழங்கும்; மற்றொரு பக்கம் இரப்போர் கலங்களில் வார்த்த இனிய கள் அவர்களின் கலங்கள் நிரம்பி வழிந்து ஒழுகி அருவி போல் மலையிலுள்ள கற்களை உருட்டிக்கொண்டு ஒழுகும்

சிறப்புக் குறிப்பு:-

இரப்போர் கலங்களில் இட்ட கள் நிரம்பி வழிந்து அருவி போல் ஓடியது என்று கபிலர் கூறுவது பாரியின் வரையாது கொடுக்கும் வள்ளல் தன்மையையும் பறம்பு நாட்டின் வளத்தையும் குறிக்கிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #115 on: June 19, 2013, 07:23:19 PM »


புறநானூறு, 116. (நோகோ யானே! தேய்கமா காலை!)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்
ஏந்தெழில் மழைக்கண் இன்னகை மகளிர்
புல்மூசு கவலைய முள்மிடை வேலிப்
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்

பீரை நாறிய சுரைஇவர் மருங்கின்
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்புஓய் ஒழுகை எண்ணுப மாதோ!
நோகோ யானே! தேய்கமா காலை!
பயில்பூஞ் சோலை மயிலெழுந்து ஆலவும்

பயில்இருஞ் சிலம்பிற் கலைபாய்ந்து உகளவும்
கலையுங் கொள்ளா வாகப் பலவும்
காலம் அன்றியும் மரம்பயம் பகரும்
யாணர் அறாஅ வியன்மலை அற்றே
அண்ணல் நெடுவரை ஏறித் தந்தை

பெரிய நறவின் கூர்வேற் பாரியது
அருமை அறியார் போர்எதிர்ந்து வந்த
வலம் படுதானை வேந்தர்
பொலம்படைக் கலிமா எண்ணு வோரே

அருஞ்சொற்பொருள்:-

தீ = இனிமை
குண்டு = ஆழம்
குவளை = செங்கழுநீர்
கூம்பு = அரும்பு
அவிழ்தல் = மலர்தல்
நெறித்தல் = முறித்தல், ஒடித்தல்
அல்குல் = இடை
ஏந்தெழில் = மிகுந்த அழகு
மழை = கருமை
மூசு = மொய்த்தல், சூழ்தல்
கவலை = பிரிவு பட்ட வழி, பல தெருக்கள் கூடும் இடம்
மிடைதல் = நெருங்கல், செறிதல்
முன்றில் = முற்றம்
சிற்றில் = சிறிய வீடு
நாறுதல் = முளைத்தல்
இவர்தல் = ஏறுதல்
மருங்கு = பக்கம்
ஈந்து = ஈச்ச மரம்
ஒய்தல் = செலுத்தல், போக்குதல், இழுத்தல்
ஒழுகை = வரிசை, வண்டி
நோகு = நோவேன்
ஓ - அசை
காலை = வாழ் நாள்
மா - அசை
பயில் = பழக்கம்
ஆலல் = ஆடல்
சிலம்பு = மலை
கலை = குரங்கு
உகளல் = தாவுதல்
பயம் = பயன்
பகர்தல் = கொடுத்தல்
யாணர் = புது வருவாய்
வியன் = அகன்ற, பெரிய
நறவு = கள், மது
வலம் = வலி
பொலம் = அழகு
படை = குதிரைச் சேணம்
கலிமா = செருக்குடைய குதிரை

இடன் பொருள்:-

தீநீர்=====> ஆங்கண்

இனிய நீருடைய ஆழமான சுனைகளில் பூத்த, புறவிதழ்கள் ஒடிக்கபடாத முழு செங்கழுநீர் மலர்களால் செய்த ஆடைகள் தங்கள் இடுப்பில் புரளுமாறு, மிகுந்த அழகும், கருமை நிறமுள்ள கண்களும், இனிய சிரித்த முகமும் உடைய பாரி மகளிர் அணிந்திருக்கிறர்கள். அவர்கள் இருக்கும் சிறிய வீடு பல தெருக்கள் கூடுமிடத்தில் புல் முளைத்த பாதைகளுடையதாகவும்

பீரை=====> ஆலவும்

முற்றத்தில் பஞ்சு பரந்தும் முள் செறிந்த வேலியால் அடைக்கப் பட்டதாகவும் உள்ளது. அங்கே பீர்க்கங்காய்களும் சுரைக்காய்களும் கொடிகளில் முளைத்திருக்கின்றன. அவற்றிற்குப் பக்கத்தில் ஈச்ச மரத்தின் இலைகள் நிறைந்த குப்பை மேடுகளில் ஏறிப் பாரி மகளிர் அவ்வழியே வரிசையாகச் செல்லும் உப்பு வண்டிகளை எண்ணுகிறார்கள். முன்பு, அவர்கள் வாழ்ந்த பறம்பு மலையில், அவர்களுக்குப் பழக்கமான பூஞ்சோலைகளில் மயில்கள் எழுந்து ஆடின

பயில்=====> தந்தை

மற்றும் குரங்குகள் தாவித் திரிந்தன; அக்குரங்களும் தின்னமுடியாத அளவுக்கு அங்குள்ள மரங்கள் பயனுள்ள பழங்களும் காய்களும் பருவமல்லாக் காலத்தும் கொடுத்தன. அத்தகைய வளம் மிகுந்த இடமாகப் பறம்பு மலை இருந்தது. குறையாது புதுவருவாயை அளிக்கும் அகன்ற மலையைப் போன்ற தலைமையுடைய பாரியின் நெடிய மலையின் உச்சியில் ஏறி

பெரிய=====> எண்ணு வோரே

மிகுந்த அளவில் கள்ளையும் கூரிய வேலினையும் உடைய தந்தை பாரியின் அருமையை அறியாது அவனை எதிர்த்துப் போர் புரிய வந்த வலிமைமிக்க படையுடைய வேந்தர்களின் அழகிய சேணங்களணிந்த செருக்குடைய குதிரைகளை எண்ணிய பாரி மகளிர் இப்பொழுது குப்பை மேட்டில் ஏறி உப்பு வண்டிகளை எண்ணுகிறார்களே! இதைக் காணும் பொழுது நான் வருந்துகிறேன். என் வாழ்நாள்கள் (இன்றோடு) முடியட்டும்.

பாடலின் பின்னணி:-

பாரி மகளிரை ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்த பிறகு, அவர்களுக்குத் திருமணம் செய்விப்பதற்காகக் கபிலர் பல குறுநிலமன்னர்களை காணச் சென்றார். ஒரு சமயம், அவர் மீண்டும் பாரி மகளிரைப் பார்க்க வந்தார். அப்பொழுது அவர்கள் ஒரு குப்பை மேட்டில் ஏறி நின்று அவ்வழியே செல்லும் உப்பு வண்டிகளை எண்ணிப் பொழுது போக்கிக்கொண்டிருந்தனர். அது கண்ட கபிலர், அம்மகளிர் தம் தந்தையொடு இருந்த பொழுது, தந்தையொடு போர் புரிய வந்த வேந்தர்களின் குதிரைகளை எண்ணிப் பொழுதுபோக்கியது நினைவு கூர்ந்து, அவர்களின் அவல நிலையை நினைத்து வருந்தித் தன் வாழ்நாள் முடியட்டும் என்று இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #116 on: June 19, 2013, 07:25:01 PM »


புறநானூறு, 117. (தந்தை நாடு!)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்

கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே
பிள்ளை வெருகின் முள்எயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே

அருஞ்சொற்பொருள்:-

மை = கருநிறம்
மைம்மீன் = சனி
புகைதல் = மாறுபடுதல், சினங்கொள்ளுதல்
தூமம் = புகை (வால் நட்சத்திரம்)
மருங்கு = பக்கம்
வெள்ளி = சுக்கிரன்
அமர் = அமைதி, விருப்பம்
ஆமா = பால் கொடுக்கும் பசு
ஆர்தல் = புசித்தல்
பல்குதல் = மிகுதல்
பெயல் = மழை
புன்புலம் = புன்செய் நிலம்
வெருகு = பூனை
எயிறு = பல்
புரைய = போன்ற
முகை = மலரும் பருவத்தில் உள்ள அரும்பு
ஆய் = அழகு

இதன் பொருள்:-

மைம்மீன்=====> நன்புல் ஆர

சனி சில இராசிகளிலிருந்தாலும், வால் நட்சத்திரம் தோன்றினாலும், சுக்கிரன் தெற்கு நோக்கிச் சென்றாலும் உலகில் வறட்சியும் வறுமையும் மிகுந்து தீய செயல்கள் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் காலத்திலும், பறம்பு நாட்டில் வயல்களில் விளைவு மிகுந்திருக்கும்; புதர்களில் பூக்கள் நிரம்ப மலர்ந்திருக்கும்; வீடுகளில் கன்றுகளை ஈன்ற பசுக்கள் தங்கள் கன்றுகளை விருப்பத்துடன் நோக்கும் கண்களோடு நல்ல புல்லை நிரம்பத் தின்னும்

கோஒல்=====> தந்தை நாடே

செம்மையான ஆட்சி நடைபெறுவதால் சான்றோர்கள் மிகுதியாக இருப்பர்; புன்செய் நிலங்களில்கூட மழை தவறாமல் பெய்யும். பூனைக்குட்டியின் முள்போன்ற பற்களை போன்றதும், பசுமையான முல்லை அரும்பு போன்றதும் ஆகிய பற்களை உடைய, அழகிய வளையல்களை அணிந்த பாரி மகளிரின் தந்தையின் நாடு அவன் ஆட்சிக் காலத்தில் வளம் குன்றாமல் இருந்தது. ஆனால், இன்று வளம் குன்றியது

சிறப்புக் குறிப்பு:-

சனி இடபம் (ரிஷபம்), சிம்மம், மீனம் ஆகிய மூன்று இராசிகளில் இருக்கும் பொழுது உலகில் வறட்சியும் வறுமையும் தீய செயல்களும் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. மற்றும், வானில் வால் வெள்ளி (வால் நட்சத்திரம்) தோன்றினாலும் சுக்கிரன் தெற்குத் திசையில் சென்றாலும் உலகுக்கு நல்லதல்ல என்ற கருத்தும் சோதிட நூல்களில் கூறப்படுகின்றன. இப்பாடலில் கபிலர் கூறும் கருத்துகள் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன.
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (சிலப்பதிகாரம் 10: 102-103)
என்ற வரிகளுக்கு உரை கூறிய அடியார்க்கு நல்லார் “ கோள்களிற் சனிக்கோள் இடபம், சிம்மம் மீனமென்னும் இவற்றினோடு மாறுபடினும், ஆகாயத்தே தூமக்கோள் எழினும், விரிந்த கதிருடய வெள்ளிக்கோள் தென்றிசைக் கண்ணே பெயரினும்” என்று கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றாலும் காவிரி நீர்வளம் குன்றாது என்ற கருத்து சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது.

இப்பாடலில், பாரி செங்கோல் செலுத்தியதால் சான்றோர் பெருகி இருந்தனர்; மழை பொய்யாது பெய்தது என்று கபிலர் கூறுவதைப் போல், வள்ளுவரும் மன்னவன் செங்கோல் செலுத்தினால் மழை தவறாது பெய்யும் என்று கூறியிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. (குறள் - 545)

பொருள்: முறைப்படி செங்கோலாட்சி செய்யும் அரசனது நாட்டில் பருவ மழையும் குன்றாத விளையுளும் ஒருங்கு திரண்டு இருக்கும்.

இதே கருத்தை மற்றொரு குறளில் சற்று வேறு விதமாக வள்ளுவர் கூறுகிறார்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். (குறள் - 559)

பொருள்: மன்னவன் முறைதவறி ஆட்சி செய்வானாயின் அவன் நாட்டிற் பருவமழை தவறுவதால் வானம் பொழியாது

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #117 on: June 19, 2013, 07:26:26 PM »


புறநானூறு, 118. (தேர்வண் பாரி தண்பறம்பு நாடே!)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரி தண்பறம்பு நாடே!

அருஞ்சொற்பொருள்:-

அறை = பாறை
பொறை = சிறுமலை
மணந்த = கூடிய
கீளுதல் = உடைதல், கிழிதல்
மாதோ - அசை
குவை = திரட்சி
மொய்ம்பு = தோள் வலிமை

இதன் பொருள்:-

பாறைகளும் சிறு குன்றுகளும் கூடிய இடத்தில் எட்டாம் பிறைத் திங்கள் போல் வளைந்த கரையைக்கொண்ட தெளிந்த நீருடைய சிறிய குளம் உடைந்திருப்பது போல், கூரிய வேலும் திரண்ட வலிய தோள்களும் தேர் வழங்கும் வள்ளல் தன்மையும் உடைய பாரியின் குளிர்ந்த பறம்பு நாடு அழிந்துவிடுமோ?

பாடலின் பின்னணி:-

பாரியால் பாதுகாக்கப்பட்ட பறம்பு நாடு, அவன் இறந்ததால் பாதுகாவலின்றி அழிவதைக் கண்டு கபிலர் வருந்துகிறார். ஒரு சிறு குளம் அதன் கரை உடைந்து அழிவதைக் கண்டவர் பறம்பு நாடும் இப்பாடித்தான் அழியுமோ என்று இப்பாடலில் தன் வருத்தத்தைக் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பாறைகளையும் சிறுகுன்றுகளையும் கரைகளாகக் கொண்டு குளங்கள் அமைப்பது சங்க காலத்தில் வழக்கிலிருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது. மற்றும் இது போன்ற குளங்களை நீர் நிரம்பும் காலத்துப் பாதுகாப்பது மரபு என்ற கருத்து அகநாநூற்றில் காணப்படுகிறது.

………….சிறுக்கோட்டுப்
பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே. (அகநானூறு - 252)

பொருள்: சிறிய கரையையுடைய பெரிய குளத்தைக் காவல் காப்பவனைப் போல் தன் உறக்கத்தையும் மறந்து என் தாய் என்னைக் காவல் காத்து வருகின்றனள் என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

இப்பாடலில், சிறுகுளம் பாழாகியதாகக் கபிலர் கூறுகிறார். அச் சிறுகுளம் பாதுகாவல் இல்லாத காரணத்தால் கரைகள் உடைந்து பாழாகியதைக் கண்ட கபிலர், அக்குளம் போல், பாரியின் பாதுகாவல் இல்லாததால் பறம்பு நாடும் பாழாகியது என்று குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.
« Last Edit: June 19, 2013, 07:28:47 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #118 on: June 19, 2013, 07:30:33 PM »


புறநானூறு, 119. (இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

கார்ப்பெயல் தலைஇய காண்புஇன் காலைக்
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ;
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

அருஞ்சொற்பொருள்:-

கார் = கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
பெயல் = மழை
தலைஇய = பெய்த
காண்பு = காட்சி
காலை = காலம், பொழுது
வரி = புள்ளி
தெறுழ் = ஒரு கொடி
வீ = பூ
ஈயல் = ஈசல்
அளை = மோர்
யாணர் = புதுவருவாய்
நந்துதல் = கெடுதல்
பணை = முரசு
கெழு = பொருந்திய(உடைய)
இறத்தல் = மிகுதல்

இதன் பொருள்:-

பாரி இருந்த பொழுது, கார்காலத்து மழை பெய்து ஓய்ந்த காட்சிக்கினிய நேரத்து, யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் தெறுழ்ப் பூக்கள் பூத்தன. செம்புற்றிலிருந்த வெளிவந்த ஈசலை இனிய மோரில் புளிக்கவைத்த கறி சமைக்கப்பட்டது. அத்தோடு மெல்லிய தினையாகிய புதுவருவாயையும் உடையதாக இருந்தது பறம்பு நாடு. நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல், முரசுடைய வேந்தர்களைவிட அதிகமாக இரவலர்க்கு வழங்கிய வள்ளல் பாரியின் நாடு இனி அழிந்துவிடுமோ?

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில் கபிலர் கூறியுள்ளதைப் போல், ஈசலைத் தயிர் அல்லது மோரோடு சேர்த்துச் சமைத்து உண்பது பண்டைக்காலத்தில் மரபாக இருந்தது என்பது பற்றிய குறிப்பு அகநானூற்றிலும் காணப்படுகிறது.

சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்
இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு
கார்வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு
சேதான் வெண்ணெய் வெம்புறத்து உருக
இளையர் அருந்த … (அகநானூறு - 394: 1- 7)

பொருள்: சிறிய தலையையுடைய செம்மறி ஆட்டினது பழுப்பு நிறம் அமைய முற்றிய தயிரிலே, கொல்லையில் விளைந்த வரகின் குத்துதலாலே மாட்சியுற்ற அரிசியொடு, கார் காலத்து மழைபெய்து நீங்கிய ஈரமான வாயிலையுடைய புற்றினிடத்திருந்து வெளிப்படுகின்ற ஈயலையும் பெய்து சமைத்த இனிதான சூடான புளியஞ்சோற்றினைச், செவலைப் பசுவின் வெண்ணெயானது அதன் வெப்பமான புறத்தே இட்டுக் கிடந்து உருகிக்கொண்டிருக்க, நின் ஏவலாளர் அருந்துவர்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #119 on: June 19, 2013, 07:32:13 PM »
புறநானூறு, 120. (பெருவிறல் நாடு நந்துங் கொல்லோ?)
பாடியவர்: கபிலர்.
திணை: பொதுவியல்.
துறை : கையறு நிலை.
====================================

வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப்பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்துப்
பூழி மயங்கப் பலஉழுது வித்திப்
பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி

மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக்
கருந்தாள் போகி ஒருங்குபீள் விரிந்து
கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து
வாலிதின் விளைந்த புதுவரகு அரியத்
தினைகொய்யக் கவ்வை கறுப்ப அவரைக்

கொழுங்கொடி விளர்க்காய் கோள்பதம் ஆக
நிலம்புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல்வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
நறுநெய்க் கடலை விசைப்பச் சோறுஅட்டுப்
பெருந்தோள் தாலம் பூசல் மேவர

வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ
இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை
ஆடுகழை நரலும் சேட்சிமைப் புலவர்
பாடி ஆனாப் பண்பிற் பகைவர்
ஓடுகழல் கம்பலை கண்ட

செருவெஞ் சேஎய் பெருவிறல் நாடே!

அருஞ்சொற்பொருள்:-

வெப்பு = வெப்பம்
சுவல் = மேட்டு நிலம்
கார் = கார் காலம் ( ஆவணி, புரட்டாசி)
கலித்த = மிகுந்த
பாடு = இடம்
பூழி = புழுதி
மயங்குதல் = கலத்தல்
பல்லியாடல் = நெருக்கமாக விளைந்த பயிர்களப் விலக்குவதற்கும் மற்றும் களையெடுப்பதற்கும் உழவர்கள் செய்யும் ஒரு பணி
செவ்வி = சமயம், நிலை
கழால் =கலைதல், களைதல்
தோடு = இலை
ஒலிதல் = தழைத்தல்
நந்தி = விளங்கி (பெருகி)
புனிற்ற = ஈன்றணிமை ( பிரசவித்தவுடன்)
பெடை = பறவையின் பெட்டை
கடுப்ப = ஒப்ப
நீடி = நீண்டு
தாள் = தண்டு
போகுதல் = நீளம்
பீள் = பயிரிளங்கதிர்
வாலிதின் = சீராக
கவ்வை = எள்ளிளங்காய்
கறுப்ப = கறுக்க
விளர்தல் = வெளுத்தல்
கோள் = ஏற்றுக் கொள்ளுதல்
பழுனுதல் = முதிர்தல்
மட்டு = கள்
குரம்பை = குடிசை
பகர்தல் = கொடுத்தல்
விசைத்தல் = வேகமுறல்(துள்ளல்)
தாலம் = கலம்
பூசல் = கழுவுதல்
மேவுதல் = உண்ணல்
யாணர் = புது வருவாய்
நந்துதல் = அழிதல்
இரும் = கரிய
கழை = மூங்கில்
நரலும் = ஒலிக்கும்
சேட்சிமை = உயர்ச்சி
ஆனா = குறையாத
கம்பலை = ஆரவாரம்
செரு = போர்
வெம்பல் = விரும்புதல்
விறல் = வலிமை, வெற்றி

பல்லியாடல்: “பல்லியாடுதல், தாளியடித்தல், ஊடடித்தல் என்பன ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள். அது நெருங்கி முளைத்த பயிர்ளை விலக்குதற்கும், எளிதாகக் களை பிடுங்குவதற்கும் கீழ்நோக்கியுள்ள கூரிய பல முனைகளையுடைய பலகையின் இரண்டு பக்கத்திலும் மேற்புறத்திலுள்ள வளையங்களில் கட்டிய கயிறுகளைச் சேர்த்துப் பூட்டிய நுகத்தை வாய் கட்டப்பட்டுள்ள எருதுகளின் பிடரியில் வைத்துப் பூட்டி உழச்செய்தல்” - பழைய உரையாசிரியரின் குறிப்பு.

இதன் பொருள்:-

வெப்புள்=====> ஒலிபு நந்தி

வெப்பம் நிறைந்ததாகவும் வேங்கை மரங்களுடையதுமான சிவந்த மேட்டு நிலத்தில் கார்காலத்து மழைக்குப் பிறகு மிகுந்த ஈரமான பெரிய இடத்தில் புழுதி கலக்குமாறு உழவர்கள் பலமுறை உழுது பின்னர் விதைகளை விதைக்கின்றனர். அதன் பிறகு, பல்லியாடி நெருங்கி முளைத்தப் பயிர்களைப் பிரிப்பதோடு மட்டுமல்லாமல் களைகளையும் நீக்குகின்றனர். பல கிளைகளையுடைய வரகுப் பயிர்களிலிருந்து களைகள் அடியோடு நீக்கப்பட்டதால் அவை இலைகளுடன் தழைத்துப் பெருகி

மென்மயிற்=====> அவரைக்

கரிய தண்டுகள் நீண்டு, அண்மையில் முட்டையிட்ட மெல்லிய மயில்களின் நிறத்தோடு காட்சி அளிக்கின்றன. எல்லாக் கதிர்களும் விரிந்து, அடியிலும் மேல் பாகத்திலும் காய்த்து சீராக விளைந்த புதிய வரகை உழவர்கள் அறுவடை செய்கின்றனர். தினைகளைக் கொய்கின்றனர். எள்ளிளங்காய்கள் முற்றி இருக்கின்றன. அவரையின்

கொழுங்கொடி=====> மேவர

வெண்ணிறக்காய்கள் பறிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளன. நிலத்தில் புதைக்கப்பட்ட முதிர்ந்த கள்ளை புல்லைக் கூரையாகக்கொண்ட குடிசையில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொடுக்கின்றனர். மணம் வீசும் நெய்யில் கடலையை வறுத்து அதைச் சோறோடு சேர்த்துச் சமைத்து அனைவருக்கும் மகளிர் உணவளித்துப் பின்னர் பாத்திரங்களைக் கழுவுகின்றனர்.

வருந்தா=====> நாடே!

கரிய கூந்தலுடைய மகளிரின் தந்தையாகிய பாரி, அசையும் மூங்கில் ஒலிக்கும் உயர்ந்த மலை உச்சியையுடையவன். அவன் புலவரால் பாடப்படும் பெருமையில் குறைவற்றவன். பகைவர் புறமுதுகு காட்டி ஓடும் ஆரவாரத்தைக் கேட்டவன். அவன் போரை விரும்பிய முருகனைப் போன்ற பெரிய வெற்றியையுடையவன். அவன் நாடு, வருந்தாமல் கிடைக்கும் புது வருவாய் உள்ள நாடு. அந்நாடு அழிந்துவிடுமோ?

சிறப்புக் குறிப்பு:-

இப்பாடலில் கபிலர் கூறுவதைப் போல், பலமுறை உழுதால் பயிர்கள் நன்றாக விளையும் என்ற கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது.

தொடிப்புழுதி கஃசா உணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். (குறள் - 1037)

பொருள்: ஒரு நிலத்தை உழுதவன் ஒருபலப் புழுதி காற்பலம் ஆகும் வண்ணம் அவ்வுழவடிப் புழுதியைக் காயவிடுவானாயின் அந்நிலத்தில் விளையும் பயிர்கள் ஒரு பிடி எருவும் தேவையின்றிச் செழித்து வளரும்.