Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )
»
~ புறநானூறு ~
« previous
next »
Print
Pages:
1
...
5
6
[
7
]
8
9
...
22
Go Down
Author
Topic: ~ புறநானூறு ~ (Read 99188 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #90 on:
June 13, 2013, 07:52:00 PM »
புறநானூறு, 91. (எமக்கு ஈத்தனையே!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண் திணை.
துறை : வாழ்த்தியல்.
=====================================
வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.
அருஞ்சொற்பொருள்:-
வலம் = வெற்றி
வாய் = மெய்ம்மை, கூர்மை
ஒன்னார் = பகைவர்
தொடி = வளையல்
கடத்தல் = வெல்லுதல்
தடக்கை = பெரிய கை
ஆர்கலி = மிகுந்த ஒலி, ஆரவாரம்
நறவு = கள்
பொலம் = பொன்
தார் = மாலை
புரை = போன்ற
சென்னி = தலை
நுதல்= நெற்றி
மிடறு = கழுத்து
ஒருவன் = கடவுள்
விடர் = மலைப்பிளப்பு, குகை
மிசை = உயர்ச்சி
குறியாது = கருதாது
ஆதல் = ஆவது.
இதன் பொருள் :-
வெற்றி மிகுந்த, குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போர்க்களத்தில் வென்ற கழலணிந்த காலும், வளையணிந்த பெரிய கையையும், அழன்ற கள்ளையும் உடைய அதியர் தலைவனே! பகைவர்களைப் போரில் வெல்வதால் பெறும் செல்வத்தையும் பொன் மாலையையும் உடைய அஞ்சியே! பழைய பெரிய மலைப்பிளவின்கண் அரிய உயரத்தில் இருந்த சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியினால் விளையும் (சிறந்த) பயனைக் கூறாது தன்னுள் அடக்கிச் சாதல் நீங்க எனக்கு அளித்தாயே! நீ, பால் போன்ற பிறை நெற்றியிலே இருந்து அழகு செய்யும் தலையையும், நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய கடவுள் (சிவன்) போல் நிலைபெற்று வாழ்க!
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #91 on:
June 13, 2013, 07:53:52 PM »
புறநானூறு, 92. (மழலையும் பெருமையும்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண் திணை.
துறை : இயன் மொழி.
=====================================
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீஅருளல் மாறே.
அருஞ்சொற்பொருள்:-
கொள்ளுதல் = ஏற்றுக் கொள்ளுதல்
புணர்தல் = பொருந்துதல்
அறிவரா = அறிய வாரா
கடி = காவல்
கடத்தல் = வெல்லுதல்
மாறு = ஆல்
இதன் பொருள் :-
குழந்தைகளின் மழலை யாழிசையோடும் ஒத்து வராது; தாளத்தோடும் பொருந்தாது; பொருள் அறிவதற்கும் முடியாது. அது அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன. பகைவர்களுடைய காவல் மதில்களையும் பல அரண்களையும் வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே! என் சொற்களைக் கேட்டு நீ என்னிடம் அன்பு காட்டுவதால், என் சொற்களும் குழந்தைகளின் மழலைச் சொற்கள் போன்றனவே.
பாடலின் பின்னணி:-
அதியமான் அவ்வையார்க்கு அரிய நெல்லிக்கனியை அளித்ததால், அவர் மனம் மகிழ்ந்து, நாக்குழறிப் பலவாறாக அவனைப் புகழ்கிறார். அவற்றை அதியமான் அன்போடு கேட்கிறான். அந்நிலையில், அவன் அன்பை வியந்து அவ்வையார் இப்பாடலை இயற்றுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
இப்பாடலில் அவ்வையார் மழலைச் சொற்களின் சிறப்பைக் கூறுவதைப்போல் திருவள்ளுவர்,
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)
குறள் விளக்கம்:-
தன் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #92 on:
June 13, 2013, 07:57:18 PM »
புறநானூறு, 93. (பெருந்தகை புண்பட்டாய்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
=====================================
திண்பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறிநீ
பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே.
அருஞ்சொற்பொருள்:-
திண்மை = வலிமை
பிணி = கட்டு
இழும் - ஒலிக் குறிப்பு
அமர் = போர்
கடத்தல் = வெல்லுதல்
யாவது = எவ்வாறு
தார் = முற்படை
வெடிபடுதல் = சிதறுதல்
மரீஇய = மருவிய, தழுவிய
பீடு = பெருமை, வலிமை
விளித்தல் = இறத்தல்
யாக்கை = உடல்
தழீஇய = தழுவிய
மருங்கு = பக்கம், விலாப்பக்கம்
புரிதல் = விரும்பல்
திறம் = செவ்வை (செப்பம்), மேன்மை
கந்து = பற்றுக்கோடு
நீள் = உயரம், ஒளி
உழி = இடம்
போழ்தல் = பிளத்தல்
உய்ந்தனர் = தப்பினர்
மாதோ - அசைச் சொல்
ஞிமிறு = வண்டு, தேனீ
ஆர்க்கும் = ஒலிக்கும்
கடாம் = யானையின் மத நீர்
அடுகளம் = போர்க்களம்
சமம் = போர்
ததைதல் = நெருங்கல், சிதைதல்
நூறுதல் = வெட்டுதல், அழித்தல்
மாறு = ஆல்
இதன் பொருள் :-
திண்பிணி=====> தழீஇக்
பெருந்தகையே! உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடினர். அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்), நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி,
காதல்=====> செல்கஎன
அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து, அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என
வாள்போழ்ந்து=====> பட்ட மாறே
வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க்களத்தில் நெருங்கி அழித்து விழுப்புண் பட்டதால், இனி வலிய கட்டமைந்த முரசம் “இழும்” என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி? பகைவர்கள் ஓடியதால் இனி, போர்கள் நிகழ வாய்ப்பில்லை; அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள்.
பாடலின் பின்னணி:-
ஒரு சமயம் நடைபெற்ற போரில், அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றான். வெற்றி பெற்றாலும், அவன் போரில் பகைவர்களின் படைக்கருவிகளால் தாக்கப்பட்டு மார்பிலும் முகத்திலும் புண்பட்டான். போரில் வெற்றி வாகை சூடி விழுப்புண்ணோடு இருக்கும் அதியமானைக் கண்ட அவ்வையார் பெருமகிழ்ச்சி அடைந்தார். இப்பாடலில், “பெரும, உன்னால் போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் சிதறியோடினார்கள். அவர்கள் அவ்வாறு தோற்று ஓடியதால், விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். மற்றும், பகைவர்கள் ஓடியதால், இனி போர்கள் நடைபெற வாய்ப்பில்லை; ஆகவே, இனி நீ போர்களில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்?” என்று கூறுகிறார்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #93 on:
June 13, 2013, 08:01:24 PM »
புறநானூறு, 94. (சிறுபிள்ளை பெருங்களிறு!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
=====================================
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே.
அருஞ்சொற்பொருள்:-
குறு மாக்கள் = சிறுபிள்ளைகள்
கோடு = கொம்பு (தந்தம்)
கழாஅல் = கழுவுதல்
படிதல் = அமருதல்
துன்னுதல் = நெருங்குதல்
கடாம் = யானையின் மத நீர்
இன்னாய் = இனிமை இல்லாதவன்
ஒன்னாதோர் = பகைவர்
இதன் பொருள் :-
ஊரில் உள்ள சிறுபிள்ளைகள் தனது வெண்மையான தந்தத்தைக் கழுவுவதற்கு நீர்த்துறையில் (பொறுமையாக) அமர்ந்து இருக்கும் பெரிய யானையைப் போல நீ எமக்கு இனிமையானவன். ஆனால், உன் பகைவர்க்கு, நீ நெருங்குதற்கு அரிய மதம் கொண்ட யானையைப் போல பொல்லாதவன்.
பாடலின் பின்னணி:-
அரசவையிலிருந்தாலும் போர்க்களத்திலிருந்தாலும் அவ்வையார்க்கும் அவர் போன்ற புலவர்களிடத்தும் அதியமான் இன்முகமும் இன்சொல்லும் உடையவனாக இருப்பதை வியந்து ” பெரும! நீ எமக்கு இனியவன்; ஆனால் உன் பகைவர்க்கு இன்னாதவன்” என்று அவ்வையார் இப்பாடலில் அதியமானைப் பாராட்டுகிறார்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #94 on:
June 13, 2013, 08:03:38 PM »
புறநானூறு, 95. (புதியதும் உடைந்ததும்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண் திணை.
துறை : வாண் மங்கலம்.
=====================================
இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.
அருஞ்சொற்பொருள்:-
இவ்வே = இவையே
பீலி = மயில் தோகை
கண் = உடம்பு
திரள் = திரட்சி
நோன்மை = வலிமை
காழ் = காம்பு
திருத்துதல் = சீர்ப்படுத்துதல், அழகு செய்யப்படுதல்
கடி = காவல்
வியன் = அகன்ற
நகரம் = அரண்மனை
அவ்வே = அவையே
கோடு = பக்கம்
நுதி = நுனி
கொல் = கொல்லன்
துறை = இடம்
குற்றில் = கொட்டில் (சிறிய இடம்)
மாது - அசைச் சொல்
பதம் = உணவு
ஒக்கல் = சுற்றம்
வை = கூர்மை.
இதன் பொருள் :-
செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கு உணவளித்துப் பிறகு தான் உண்ணுவதும், செல்வம் இல்லையானால் (குறைந்தால்) தன் உணவைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும் பண்புடைய, வறிய சுற்றத்தார்களின் தலைவனாகிய பெருமைக்குரிய என் வேந்தன் அதியமானின் கூர்மையான வேல்கள், பகைவரைக் குத்தியதால் பக்கமும் நுனியும் முரிந்து கொல்லர்களின் சிறிய உலைக்களத்தில் எந்நாளும் உள்ளன. ஆனால், உன் படைக்கருவிகளான இவை, மயில் தோகை அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, வலிய திரண்ட பிடிகளை உடையதாய் நெய் பூசப்பட்டு, அழகு செய்யபட்டு காவல் மிக்க பெரிய இடத்தில் உள்ளன.
பாடலின் பின்னணி:-
தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான் அதியமான் மீது பகை கொண்டான். தன்னிடத்துப் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி மிகவும் செருக்கடைந்திருந்தான். தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான், தன் படை வலிமையையும் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு அவ்வையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான். அவ்வையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தன் படைவலிமையை எண்ணிச் செருக்கொடு இருந்த தொண்டைமான், அவ்வையாரைத் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று, தன் படைக்கருவிகளைப் பெருமையோடு காண்பித்தான். அவன் கருத்தை அறிந்த அவ்வையார், தொண்டைமானின் படைக்கலங்களைப் புகழ்வது போல் இகழ்ந்தும், அதியமானின் படைக்கலங்களை இகழ்வது போல் புகழ்ந்தும் இப்பாடலில் கூறுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
தூது என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர்,
கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. (குறள் - 687)
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. (குறள் - 690)
என்கிறார். அதாவது, தன் கடமையை அறிந்து காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து சிந்தித்து உரைப்பவன் சிறந்த தூதன். மற்றும், தான் கூறும் செய்தியால் தான் உயிரிழக்க நேரினும், தன்னாலான எல்லா முயற்சிகளையும் குறையாது செய்து தன் அரசனுக்கு நன்மை உண்டாக்குபவனே சிறந்த தூதன். இந்த குறட்பாக்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அவ்வையாரின் சொல்வன்மையும் செயலும் இருப்பதை இப்பாடலின் மூலம் நாம் அறிய முடிகிறது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #95 on:
June 13, 2013, 08:05:15 PM »
புறநானூறு, 96. (அவன் செல்லும் ஊர்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் அதியமான் பொகுட்டெழினி.
திணை: பாடாண் திணை.
துறை : இயன் மொழி.
=====================================
அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்ஐ இளையோற்கு
இரண்டு எழுந்தனவால் பகையே; ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றோ
‘விழவுஇன்று ஆயினும், படுபதம் பிழையாது
மைஊன் மொசித்த ஒக்கலொடு துறைநீர்க்
கைமான் கொள்ளுமோ?’ என
உறையுள் முனியும்அவன் செல்லும் ஊரே.
அருஞ்சொற்பொருள்:-
அலர்தல் = மலர்தல்
அம் = அழகு
பகடு = வலிமை, பெருமை (அகன்ற)
தடக்கை = பெரிய கை
நுணுகுதல் = மெலிதல்
படு - மிகுதிக் குறிப்பு
பதம் = உணவு
மை = செம்மறி ஆடு
ஊன் =தசை, புலால்
மொசித்தல் = உண்ணல்
ஒக்கல் = சுற்றம்
கைம்மான் = கைமான் = யானை
உறையுள் = இருப்பிடம்
முனிதல் = வெறுத்தல்
இதன் பொருள் :-
அலர்பூ=====> ஒன்றோ
மலர்ந்த தும்பைப் பூவாலான மாலையை அணிந்த அழகிய அகன்ற மார்பினையும், திரண்டு நீண்ட பெரிய கையையும் உடைய என் தலைவன் அதியமானின் மகனுக்கு இரண்டு பகைகள் தோன்றி உள்ளன. ஒன்று, பூப்போன்ற, மைதீட்டிய கண்கள் பசந்து, தோள்கள் மெலிந்த பெண்கள் காதல் நோயால் இவன் மீது கொண்ட சினம். மற்றொன்று,
விழவுஇன்று=====> ஊரே
விழா இல்லையாயினும், தவறாது மிகுந்த அளவில் ஆட்டுக்கறியை உண்ட சுற்றத்தினரோடு இவன் வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள மக்கள், இவன் யானைகள் அவர்களுடைய நீர்த்துறைகளில் இறங்கி அங்குள்ள நீரை எல்லாம் குடித்துவிடுமோ என்று அவர்கள் கொண்ட வெறுப்பு. இவை இரண்டும் இவனுக்குப் பகையாகும்.
பாடலின் பின்னணி:-
அவ்வையார் பொகுட்டெழினியிடம் மிகுந்த அன்பு உடையவர். அவன் அழகிலும் வலிமையிலும் சிறந்தவன். அவனுடைய அழகாலும் வலிமையாலும் அவனுக்குத் தீங்கு வரக்கூடும் என்ற கருத்தை இப்பாடலில் அவ்வையார் கூறுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
பொகுட்டெழினியின் அழகிலும் இளமையிலும் மயங்கிய பெண்கள் அவன் மீது காதல் கொண்டு தங்கள் காதல் நிறைவேராததால் அவன் மீது கோபம் கொள்கிறார்கள். மற்றும், அவன் தன் படையுடன் வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள மக்கள் அவன் யானைகள் தங்கள் குளங்களைப் பாழ் செய்துவிடுமோ என்று அவன் மீது வெறுப்படைகிறார்கள். இந்த இரண்டு காரணங்களால் அவனுக்குப் பெண்களும் அவன் செல்லும் ஊரில் உள்ள மக்களும் பகைவர்கள் என்று கூறி, அவ்வையார் பொகுட்டெழினியின் அழகையும் வெற்றிகளையும் பாராட்டுகிறார்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #96 on:
June 13, 2013, 08:07:13 PM »
புறநானூறு, 97. (இறுக்கல் வேண்டும் திறையே!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண் திணை.
துறை : இயன் மொழி.
=====================================
போர்க்குஉரைஇப் புகன்று கழித்தவாள்
உடன்றவர் காப்புடை மதில்அழித்தலின்
ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
வேலே, குறும்படைந்த அரண்கடந்தவர்
நறுங்கள்ளின் நாடுநைத்தலின்
சுரைதழீஇய இருங்காழொடு
மடைகலங்கி நிலைதிரிந்தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம்மலைத்துஅவர்
குழூஉக்களிற்றுக் குறும்புஉடைத்தலின்
பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே;
மாவே, பரந்துஒருங்கு மலைந்தமறவர்
பொலம்பைந்தார் கெடப்பரிதலின்
களன்உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;
அவன்தானும், நிலம்திரைக்கும் கடல்தானைப்
பொலந்தும்பைக் கழல்பாண்டில்
கணைபொருத துளைத்தோலன்னே
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடம்தாள்
பிணிக்கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றுஅவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே; மறுப்பின்
ஒல்வான் அல்லன் வெல்போ ரான்எனச்
சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்
கழற்கனி வகுத்த துணைச்சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்றுஅஃது அறிந்துஆ டுமினே.
அருஞ்சொற்பொருள்:-
உரைஇ = உலாவி, சுழன்று, பரந்து
புகன்று = விரும்பி
கழிதல் = போக்குதல், நீக்குதல்
உடன்று = வெகுண்டு
உற = மிக
குறும்பு = குறும்பர், பகைவர், தீயோர்
நறுமை = மனம், நன்மை
நைத்தல் = கெடுத்தல்
சுரை = அம்புத் தலை (வேலின் தலைப் பாகம்)
தழீஇய = பொருந்திய
இரு = பெரிய
காழ் = காம்பு
மடை = ஆணி, ஆயுத மூட்டு
எழு = கணைய மரம்
மலைத்தல் = பொருதல், வருத்துதல், எதிர்த்தல்
குறும்பு = அரண்
பரூஉ = பருமை
தொடி = கிம்புரி (யானையின் தந்தங்களில் அணியப்படும் அணிகலன்)
பொலம் = பொன்
பைந்தார் = பசுமை
தார் = மாலை
பரிதல் = ஓடுதல்
உழத்தல் = வெல்லுதல், துவைத்தல், வருத்துதல்
அசைவு = வருத்தம்
மறு = கறை
திரைதல் = சுருங்குதல், திரளுதல்
கழல் = கழற்சிக் காய்
பாண்டில் = வட்டம்
தோல் = கேடயம்
ஆயிடை = அவ்விடத்து, அக்காலத்து
தடம் = பெரிய
இறுக்கல் = திறை கொடுத்தல்
ஒல்லுதல் = இணங்குதல்
கனி = காய்
ஓதி = பெண்களின் கூந்தல்
இறும்பூது = வியப்பு
ஆடுதல் = போர் செய்தல்.
இதன் பொருள் :-
போர்க்கு=====> நைத்தலின்
போர் புரிவதற்கு விரும்பி, உறையிலிருந்து எடுத்த வாள்கள் பகைவரின் காவலுடைய மதில்களை அழித்து அவர்களின் தசைக்குள் மிகவும் மூழ்கியதால் தங்கள் உருவத்தை இழந்தன. வேல்களோ, பகைவரின் அரண்களை வென்று அவர்களின் மணம் மிகுந்த கள்ளுடைய நாட்டை அழித்ததால்
சுரைதழீஇய=====> தொடிகழிந்தனவே
தலைப்பாகத்தோடு கூடிய வலிய காம்பும் ஆணியும் நிலை கெட்டன. யானைகளோ, கணையமரங்களால் தடுக்கப்பட்டக் கதவுகளைத் தாக்கி, பகைவரின் யானைகளோடு கூடிய அரண்களை அழித்ததால், தங்கள் தந்தங்களில் இறுகக் கட்டப்பட்ட பெரிய அணிகலன்களை (கிம்புரிகளை)இழந்தன.
மாவே=====> கழல்பாண்டில்
குதிரைகளோ, பரவலாக ஒன்று சேர்ந்து வந்து தாக்கிய பசும்பொன்னாலான அழகிய மாலைகளணிந்த பகைவர்களின் மார்புகளை உருவழியுமாறு வருத்தித் தாக்கிப் போர்க்களத்தில் அவர்களை அழித்ததால் தங்கள் குளம்புகளில் குருதிக் கறை கொண்டன. அதியமான், நிலத்தைத் தன்னுள் அடக்கிய கடல் போன்ற படையுடன், கழற்காய் வடிவாகவும், வட்ட வடிவான கிண்ணிகளுடைய
கணைபொருத=====> மறுப்பின்
கேடயத்தை ஏந்திப் பொன்னாலான தும்பை மாலையை அணிந்திருக்கிறான். அவ்விடத்து, அவனுடைய சினத்துக்கு ஆளானோர் எப்படி உயிர் தப்ப முடியும்?
பெரிய தாளினையும் பின்னிக் கிடக்கும் நெற்கதிர்களையும் உடைய தலைமையும் பழைமையும் கூடிய உங்கள் ஊர் உங்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமானால், அவனுக்குச் செலுத்த வேண்டிய திறையை நீங்கள் செலுத்த வேண்டும். திறை செலுத்த மறுத்தால்
ஒல்வான்=====> ஆடுமினே
அவன் அதற்கு உடன்பட மாட்டன். அவன் உங்களை எதிர்த்துப் போரிடுவான். நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் என் சொல்லைக் கேட்கவில்லையானால், மென்மையும் கழற்காயின் உதவியால் வகுத்து சுருட்டி முடியப்பட்ட கூந்தலும் சிறிய வளையல்களையும் அணிந்த உங்கள் உரிமை மகளிரின் தோள்களைத் தழுவமுடியாமல் அவர்களை விட்டு நீங்கள் பிரியப் போவதில் (இறக்கப் போவதில்) வியப்பில்லை. அதை அறிந்து போர் செய்க!
பாடலின் பின்னணி:-
அதியமான் நெடுமான் அஞ்சிக்குத் திறை செலுத்த வேண்டிய வேந்தர்களில் சிலர், அதனைச் செலுத்தாது அதியமானோடு போர் புரிவதற்குத் திட்டமிட்டனர். அதை அறிந்த அவ்வையார், “அதியமானின் வாட்படை, விற்படை, களிற்றுப் படை, குதிரைப் படை மற்றும் காலாட் படை எல்லாம் போர் செய்வதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவை; அவனை எதிர்த்தவர்கள் தப்ப முடியாது; உங்களுக்குச் சொந்தமான ஊர்கள் உங்களிடத்தில் இருக்க வேண்டுமானால், அவனுக்குச் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்துங்கள்; நீங்கள் திறை கொடுக்க மறுத்தால் அவன் அதற்கு உடன்பட மாட்டான்; நிச்சயமாக உங்களை எதிர்த்துப் போரிடுவான்; நான் சொல்லியும் நீங்கள் கேட்காமல் அவனோடு போருக்குச் சென்றால் உங்கள் மகளிரிடம் இருந்து நீங்கள் பிரியப் (இறக்கப்) போகிறீர்கள்; அது நிச்சயம்.” என்று எச்சரிக்கிறார்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #97 on:
June 13, 2013, 08:09:50 PM »
புறநானூறு, 98. (பகைவர்களின் வளநாடு கெடுமோ!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
=====================================
முனைத்தெவ்வர் முரண்அவியப்
பொரக்குறுகிய நுதிமருப்பின்நின்
இனக்களிறு செலக்கண்டவர்
மதிற்கதவம் எழுச்செல்லவும்,
பிணன்அழுங்கக் களன்உழக்கிச்
செலவுஅசைஇய மறுக்குளம்பின்நின்
இனநன்மாச் செலக்கண்டவர்
கவைமுள்ளின் புழையடைப்பவும்,
மார்புறச் சேர்ந்துஒல்காத்
தோல்செறிப்பில்நின் வேல்கண்டவர்
தோல்கழியொடு பிடிசெறிப்பவும்,
வாள்வாய்த்த வடுப்பரந்தநின்
மறமைந்தர் மைந்துகண்டவர்
புண்படுகுருதி அம்புஒடுக்கவும்,
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்
இரங்க விளிவது கொல்லோ; வரம்புஅணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்
பெரும்புனல் படப்பைஅவர் அகன்றலை நாடே
அருஞ்சொற்பொருள்:-
முனை = போர்முனை
தெவ்வர் = பகைவர்
முரண் = வலி, மாறுபாடு
அவிதல் = ஒடுங்குதல், கெடுதல் , தணிதல், அழிதல், குறைதல், அடங்குதல்
பொர = போர் செய்ததால்
நுதி = நுனி
மருப்பு = கொம்பு (யானைத் தந்தம்)
எழு = கணையமரம்
அழுங்குதல் = உருவழிதல்
உழக்குதல் = மிதித்தல், கலக்குதல்
மறு = கறை
நன்மை = சிறப்பு
மா = குதிரை
கவை = பிளப்பு
புழை = காட்டு வழி (வாயில்)
ஒல்குதல் = எதிர்கொள்ளுதல்
தோல் = தோலால் ஆகிய உறை
செறிப்பு = அடக்கம்
செறித்தல் = சேர்த்தல்
தோல் = கேடயம்\
வாய்த்தல் = கிடைத்தல்
மைந்து = வலிமை
ஐயவி = சிறு வெண்கடுகு
ஒய்யென = விரைவாக
உய்த்தல் = கொண்டுபோதல்
வரம்பு = வரப்பு
அலம் = அலமரல் = சுழலல்
கழனி = வயல்
படப்பை = தோட்டம் (நிலப்பகுதி)
இதன் பொருள் :-
முனைத்தெவ்வர்=====> உழக்கி
போர்முனையில் பகைவரது வலிமை அடங்குமாறு போர்புரிந்ததால் குறைந்த (உடைந்த) நுனியுடன் கூடிய கொம்புகளுடைய உனது யானைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர்கள் மதிற்கதவுகளில் கணையமரங்களைப் பொருத்திக் கொள்கின்றனர். பிணங்கள் உருவழியுமாறு போர்க்களத்தில் அவற்றை மிதித்து,
செலவுஅசைஇய=====> வேல்கண்டவர்
தங்கள் கால்கள் வருந்துமாறு சென்றதால் குருதிக்கறைப் படிந்த குளம்புகளுடைய உன் சிறப்புக்குரிய குதிரைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர்கள் காட்டுவாயில்களை கிளைகளாய் பிளவுபட்ட முட்களை வைத்து அடைக்கின்றனர். உறையில் இருந்து எடுத்த வேல்களை உன் வீரர்கள் பகைவர்களின் மீது எறிய அவை அவர்களை ஊடுருவிச் சென்றன. அதைக்கண்ட உன் பகைவர்கள் தங்கள்
தோல்கழியொடு=====> ஒய்யென
கேடயங்களின் காம்புகளோடு (புதிய) பிடிகளைப் பொருத்திக் கொள்கின்றனர். வாள் பாய்ந்ததால் உண்டாகிய தழும்புகளுடைய உன் வீரர்களின் வலிமையைக் கண்டவர் குருதிக்கறைப் படிந்த தங்கள் அம்புகளைத் தங்கள் அம்புறாத்தூணிகளில் அடக்கிக் கொள்கின்றனர். நீயோ, (தன்னை இயமனிடத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக) சிறிய வெண்கடுகுகளைப் புகைத்தாலும் அதைப் பொருட்படுத்தாது விரைந்து
உறுமுறை=====> நாடே
வந்து சேர்ந்து முறைப்படி புறத்தே இருந்து உயிரைக் கொண்டுபோகும் இயல்புடைய இயமனைப் போன்றவன். ஆதலால், வரப்புகளைச் சார்ந்து வளைந்து ஆடும் நெற்கதிர்களுடைய வயலொடு மிக்க நீர்ப்பகுதிகளையுமுடைய உன் பகைவர்களின் அகன்ற இடங்களுடைய நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்துவிடுமோ?
பாடலின் பின்னணி:-
அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் கோவலூரிலிருந்து ஆட்சி புரிந்து வந்த மலாடர் வேந்தனுக்கும் பகை மூண்டது. அதியமான் தன்னுடைய வலிமையும் ஆற்றலும் மிக்க படையுடன் கோவலூரை நோக்கிச் சென்றான். கோவலூருக்குச் செல்லும் வழியிலிருந்த சிற்றரசர்கள் அதியமானின் படையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றனர். இதனைக் கண்ட அவ்வையார், அதியமானுடன் போர் புரியும் மன்னர்களது நாடு என்னாகுமோ என்ற எண்ணத்தோடு இப்பாடலை இயற்றுகிறார். இப்பாடலில், “அரசே! உன் யானைப்படையைக் கண்டவர்கள் தம்முடைய மதில் வாயில் கதவுகளுக்குப் புதிய கணையமரங்களைப் பொருத்துகின்றனர். உன் குதிரைப்படையைக் கண்டவர்கள் காவற்காட்டின் வாயில்களை முட்களை வைத்து அடைக்கின்றார்கள். உன் வேற்படையைக் கண்டவர் தங்கள் கேடயங்களைப் பழுது பார்த்துக்கொள்கிறார்கள். உன் வீரர்களைக் கண்டவர்கள் தங்கள் அம்புறாத்தூணிகளில் அம்புகளை அடக்கிக் கொள்கிறார்கள். நீயோ, இயமனைப் போன்றவன். உன் பகைவர்களுடைய வளமான நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்து விடுமோ” என்று அதியமானின் படைவலிமையைப் பாராட்டிக் கூறுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
வீரர்கள் புண்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் பொழுது, வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால், இயமன் அவர்களின் உயிரைப் பறிக்க மாட்டான் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. மற்றும், சங்க காலத்திற்குப் பிந்திய காலத்திலும், வெண்கடுகுப் புகை கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. உதாரணமாக பன்னிரண்டாம் திருமுறையில் உள்ள ஒரு பாடலில் இக்கருத்து காணப்படுகிறது.
ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் வினைப்பர்.
(பன்னிரண்டாம் திருமுறை,
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணம், பாடல் 39)
பொருள்:-
வெண்கடுகு முதலானவற்றைச் சேர்த்து அமைத்த புகையினாலும், நெய்யுடன் நல்ல மணமுடைய அகில் துண்டுகளால் உண்டாக்கப்பட்ட புகையாலும், விருப்பம் அளிக்கும் வேள்வித் தீயின் புகையாலும் கடவுள் தன்மை கமழ்கின்ற செயலைச் செய்வார்கள்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #98 on:
June 13, 2013, 08:14:51 PM »
புறநானூறு, 99. (பரணன் பாடினன்)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
=====================================
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து எழா அத்தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய்; செருவேட்டு
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்றுஅமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல், மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே
அருஞ்சொற்பொருள்:-
அமரர் = தேவர்; பேணுதல் = போற்றுதல்; ஆவுதி = வேள்வி; அருத்தல் = உண்பித்தல். 2. இவண் = இவ்விடம். 3. இருக்கை = குடியிருப்பு, ஊர்; ஆழி = சக்கரம், கட்டளை, ஆணை; சூட்டுதல் = நியமித்தல். 5. ஈகை = பொன்; புடையல் = மாலை; இரு = பெரிய. 6. ஆர் = நிறைவு; கா = சோலை; புனிறு = ஈன்ற அணிமை (புதுமை). 7. நாட்டம் = ஐயம்; தாயம் = அரசு உரிமை. 8. செரு = போர்; வேட்டு = விரும்பி. 9. இமிழ்தல் = ஒலித்தல்; குரல் = ஓசை; முரணி = பகைத்து. 12. கொல் என்பது ஐயத்தைக் குறிக்கிறது. மன் - அசைநிலை 13. முரண் = மாறுபாடு, வலிமை; நூறி = அழித்து. 14. அடுதல் = அழித்தல்; திகிரி = சக்கரம்
இதன் பொருள் :-
அமரர்=====> புடையல்
தேவர்களைப் போற்றி, அவர்களுக்கு வேள்வி நடத்தி, அதன் மூலம் உணவுப் பொருட்களை அவர்களுக்கு உண்பித்துப் பெறுதற்கரிய முறைமையுடைய கரும்பை இவ்வுலகத்திற்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், கடலால் சூழப்பட்ட நிலத்தின்கண் தன் ஆணையை நிலைநாட்டிப் பழைய நிலைமை பொருந்திய மரபுடைய உன் முன்னோர் போல, காலில் பொன்னாலான அழகிய கழல்களும், கழுத்தில் பெரிய பனம்பூ மாலையும்,
பூவார்=====> தோற்றிய
பூக்கள் நிறைந்த சோலையும், பகைவரைக் குத்தியதால் ஈரத் தசைகளுடைய நெடிய வேலும், ஏழு சின்னங்களுடைய முத்திரையும் ஐயத்திற்கு இடமில்லாத அரசுரிமையும் தவறாமல் பெற்றிருந்தாலும், உன் மனம் நிறைவடையவில்லை. போரை விரும்பி, ஒலிக்கும் ஓசையுடன் கூடிய முரசோடு சென்று எழுவரையும் வென்ற பொழுது உன் ஆற்றல் வெளிப்பட
அன்றும்=====> தோளே
அன்றும் நீ பாடுவதற்கு அறியவனாக இருந்தாய். கோவலூரில் பகைவரின் மிகுந்த வலிமையையும் அவர்களது அரண்களையும் அழித்து ஆட்சிச் சக்கரத்தை ஏந்திய உன் வலிமையைப் (தோளைப்) பாடுவது இன்றும் அரிதே. பரணனால் தானே உன்னைப் பாட முடிந்தது!
சிறப்புக் குறிப்பு:-
எவராலும் பாடற்கரிய அதியமானைப் பரணரால்தான் பாடமுடிந்தது என்று அவ்வையார் கூறுவது பரணரின் பெருமையைக் குறிக்கிறது. பரணரைப் புகழ்வதால் அவ்வையாரும் பெருமைக்கு உரியவராகிறார்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #99 on:
June 13, 2013, 08:16:05 PM »
புறநானூறு, 100. (சினமும் சேயும்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
=====================================
கையது வேலே; காலன புனைகழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோடு
வெட்சி மாமலர் வேங்கையடு விரைஇச்
சுரிஇரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர்இவன் உடற்றி யோரே;
செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே.
அருஞ்சொற்பொருள்:-
புனை = அழகு. 2.வியர் = வியர்வை; மிடறு = கழுத்து; பசும்புண் = ஆறாத புண். 3. வட்கு = கேடு; வட்கர் = வட்கார் = பகைவர்; போகிய = ஒழிந்த, தொலைந்த; போந்தை = பனங்குருத்து. 5. வெட்சி = ஒரு செடி (பசு நிரை கவர்தல்); விரைஇ = கலந்து; வேங்கை = ஒரு வகை மரம். 6. சுரிதல் = சுருளுதல்; இரு = கரிய; பித்தை = முடி. 7. வரிவயம் = புலி; வயம் = வலி. 8. அன்னோ = ஐயோ. 9. உய்ந்தனர் = பிழைத்தவர்; உடல்தல் = சினத்தொடு போரிடுதல். 10. செறுவர் = பகைவர். 11. ஆனாமை = நீங்காமை, குறையாமை
இதன் பொருள்:-
கையது=====> சூடி
கையிலே வேல்; கால்களிலே அழகான கழல்கள்; உடலிலே வியர்வை; கழுத்திலே ஈரம் ஆறாத புண்; பகைவரை அழிப்பதற்காக, வளரும் இளம் பனங்குருத்தின் உச்சியில் உள்ள ஊசி போன்ற வெண்மையான தோட்டையும், வெட்சியின் பெரிய மலர்களோடு வேங்கைப் பூவும் கலந்து சுருண்ட, கரிய முடியில் அழகுறச் சூடி,
வரிவயம்=====> ஆனாவே
புலியோடு போரிட்ட வலிய யானையைப் போல இன்னும் நீங்காத சினத்துடன் அதியமான் உள்ளானே! இவனுடன் சினந்து போரிட்டவர்கள் பிழைக்கமாட்டார்கள். பகைவரைப் பார்த்த கண்கள் தன் புதல்வனைப் பார்த்தும் சிவப்பு நிறம் குறையாமல் இருக்கின்றனவே!
சிறப்புக் குறிப்பு:-
அதியமான் போர்க்கோலம் பூண்டு தன் மகனைக் காண வந்ததாகப் பாடலின் பின்னணியில் குறிப்பிடப்பட்ட கருத்து அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் உரையில் காணப்படும் கருத்து. ஆனால், போர்க்களத்தில் பகைவரை அழித்த பிறகு, அரண்மனைக்குச் சென்று அதியமான் தன் மகனைக் காண்பது போன்ற காட்சியை அவ்வையார் இப்பாடலில் கூறுகிறார் என்றும் கருதுவதற்கும் இப்பாடல் இடமளிக்கிறது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #100 on:
June 17, 2013, 07:24:40 PM »
புறநானூறு, 101. (பலநாளும் தலைநாளும்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்.
துறை : பரிசில் கடா நிலை. “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.
=====================================
ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ.
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்ஆ காதே;
அருந்தஏ மாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா வாழ்கவன் தாளே!
அருஞ்சொற்பொருள்:-
செல்லலம் = செல்லேம் (செல்லவில்லை)
பயின்று = தொடர்ந்து
தலைநாள் = முதல் நாள்
கோடு = கொம்பு
ஏமாத்தல் = அவாவுதல் (ஆசைப் படுதல்)
தாள் = கால்.
இதன் பொருள்:-
ஒருநாள்=====> காலம்
நாம் ஒரு நாள் அல்லது இருநாட்கள் செல்லவில்லை; பல நாட்கள் தொடர்ந்து பலரோடு நாம் (அதியமானிடம் பரிசில் பெறுவதற்குச்) சென்றாலும், அதியமான் முதல் நாள் போலவே நம்மிடம் விருப்பமுடையவனாக இருக்கிறான். அழகிய அணிகலன்கள் அணிந்த யானைகளையும் நன்கு செய்யப்பட்ட தேர்களையும் உடைய அதியமான் பரிசளிப்பதற்குக் காலம்
நீட்டினும்=====> தாளே
தாழ்த்தினாலும் தாழ்த்தாவிட்டாலும், யானை தன் கொம்புகளிடையே கொண்ட உணவுக் கவளத்தை உண்ணத் தவறாதது போல், அதியமானிடமிருந்து நாம் பெறப்போகும் பரிசில் நம் கையில் இருப்பதாகவே நாம் நம்பலாம். பரிசு பெறுவதற்கு ஆசைப்பட்ட நெஞ்சே! வருந்த வேண்டாம்! வாழ்க அவன் திருவடிகள்!
பாடலின் பின்னணி:-
ஒரு சமயம், அவ்வையார் அதியமானிடம் பரிசு பெற விரும்பிச் சென்றார். அதியமான் அவ்வையார்க்குப் பரிசளிப்பதற்குச் சிறிது காலம் தாழ்த்தினான். அது கண்ட அவ்வையார் வருத்தப்பட்டார். ஆயினும், அவர் அதியமானின் கொடைத் தன்மையை நன்கு அறிந்திருந்ததால், பரிசு பெறுவதற்குச் சற்று கால தாமதமாயினும், யானை தன் கொம்புகளிடையே வைத்திருக்கும் உணவுக் கவளத்தை உண்ணத் தவறாதது போல், அதியமான் கால தாமதமயினும் நிச்சயம் பரிசளிப்பான் என்று தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் இப்பாடல் அமைந்துள்ளது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #101 on:
June 17, 2013, 07:26:45 PM »
புறநானூறு, 102. (சேம அச்சு!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி.
திணை: பாடாண்.
துறை : இயன் மொழி.
=======================================
எருதே இளைய நுகம்உண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவல்இழியினும் மிசைஏறினும்
அவணது அறியுநர் யார்என உமணர்
கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன
இசைவிளங்கு கவிகை நெடியோய்! திங்கள்
நாள்நிறை மதியத்து அனையைஇருள்
யாவண தோநின் நிழல்வாழ் வோர்க்கே?
அருஞ்சொற்பொருள்:-
நுகம் = நுகத்தடி
சகடம் = வண்டி
பெய்தல் = இடுதல்
அவல் = பள்ளம்
இழியல் = இறங்குதல்
மிசை = மேடு
உமணர் = உப்பு வணிகர்
யாத்த = கட்டிய
சேம அச்சு = பாதுகாப்பான பதில் அச்சு
இருள் = துன்பம்
யாவண் = எவ்விடம்
இதன் பொருள்:-
காளைகள் இளையவை; நுகத்தடியில் பூட்டப் படாதவை. வண்டியில் பண்டங்கள் அதிகமாக ஏற்றப்பட்டுள்ளன. (போகும் வழியில்) வண்டி பள்ளத்தில் இறங்க வேண்டியதாக இருக்கலாம்; மேட்டில் ஏற வேண்டியதாக இருக்கலாம்; வழி எப்படி இருக்கும் அன்பதை யார் அறிவர் என்று எண்ணி உப்பு வணிகர்கள் தங்கள் வண்டியின் அடியில் பாதுகாப்பாகக் கட்டிய சேம அச்சு போன்றவனே! விளங்கும் புகழும், கொடையளிக்கக் கவிழ்ந்த கையும் உடைய உயர்ந்தோனே! நீ முழுமதி போன்றவன். உன் நிழலில் வாழ்பவர்களுக்குத் துன்பம் எங்கே உள்ளது?
பாடலின் பின்னணி:-
அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி, தன் தந்தைக்குத் துணையாக ஆட்சி செய்து வந்தான். அவன் அவ்வாறு அதியமானுக்குத் துணையாக இருந்து மக்களுக்கு நன்மைகளைச் செய்து நல்லாட்சி புரிவதை அவ்வையார் இப்பாடலில் பாராட்டுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
அதியமானின் ஆட்சிக்குத் துணையாக பொகுட்டெழினி இருப்பது அதியமானுக்குப் பாதுகாவலாக உள்ளது என்பதை அவ்வையார் உமணர் எடுத்துச் செல்லும் சேம அச்சுக்கு ஒப்பிடுகிறார். மற்றும், முழு நிலவு போன்றவன் என்பது அவன் அருள் மிகுந்தவன் என்பதைக் குறிக்கிறது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #102 on:
June 17, 2013, 07:29:03 PM »
புறநானூறு, 103. (புரத்தல் வல்லன்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்.
துறை : விறலியாற்றுப்படை.
======================================
ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!
செல்வை யாயின், சேணோன் அல்லன்;
முனைசுட எழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின், மழகளிறு அணியும்
பகைப்புலத் தோனே பல்வேல் அஞ்சி
பொழுதுஇடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கஅவன் தாளே!
அருஞ்சொற்பொருள்:-
பதலை = ஒரு வகைப் பறை (ஒரு கண் பறை)
தூங்கல் = தணிதல், தாழ்தல், தொங்குதல்
தூம்பு = துளை
முழா = முழவு (மேளம் போன்ற ஒரு இசைக் கருவி)
மண்டை = இரப்போர் கலம்
மலர்த்தல் = நிமிரச் செய்தல், நிரம்பச் செய்தல்
சுரன் = பாலை நிலம்
முதல் = இடம் (ஏழாம் வேற்றுமை உருபு)
சேண் = தொலை, சேய்மை (தூரம்)
முனை = போர் முனை, போர்க்களம்
மங்குல் = இருள்,மேகம்
மா = கறுப்பு
மஞ்சு = மேகம்
மழ = இளமை
அணிதல் = பூணல், அலங்கரித்தல்
புலர்தல் = உலர்தல்
மெழுகு = மிருது
நிணம் = கொழுப்பு (கொழுப்பு உள்ள புலால்)
பெருப்ப = மிகுதல்
பெருப்பித்தல் = பெரிதாக்குதல்
அலத்தல் = வறுமைப் படுதல்
காலை = பொழுது (காலம்)
புரத்தல் = ஈதல், காத்தல்
இதன் பொருள்:-
ஒருதலைப்=====> மாப்புகை
காவடியில் ஒரு பக்கம் பதலையும் ஒரு பக்கம் உள்ளே துளை உள்ள சிறிய முழவும் தொங்குமாறு தூக்கிக்கொண்டு, ”என் கவிழ்ந்த பாத்திரத்தை நிரப்புபவர் யார்?” என்று கேட்டுக்கொண்டு பாலை நிலத்திடத்து இருந்த விறலியே! போர்க்களத்திலிருந்து எழுந்த இருள் போன்ற புகை,
மலைசூழ்=====> தாளே
மலையைச் சூழும் மேகங்களை போல இளைய யானைகளைச் சூழும் பகைவர் நாட்டில் பல வேற்படைகளையுடைய அதியமான் அஞ்சி உள்ளான். நீ அவனிடம் செல்வதாக இருந்தால், அவன் அருகில்தான் உள்ளான். அவன் ஒரு பொழுதும் தவறாமல் மிருதுவான மென்மையான அடைபோன்ற கொழுத்த புலால் உணவால் இரப்போரின் ஈரம் உலராத பாத்திரங்களை நிரப்புவான். வறுமைக் காலத்திலும் அவன் இரப்போர்க்கு அளிப்பதில் வல்லவன். வாழ்க அவன் திருவடிகள்!
பாடலின் பின்னணி:-
அதியமானிடம் பரிசில் பெற்றுச் சென்ற அவ்வையார், வழியில் பாலை நிலத்தில், தன் சுற்றத்தோடு இருந்த விறலி ஒருத்தியைக் கண்டார். அவள் தன் வறுமையை அவ்வையாரிடம் கூறி, “ என்னிடம் உள்ள பாத்திரத்தை நிரப்புவர் யார்?” என்று கேட்கிறாள். அதற்கு, அவ்வையார், ”விறலி! அதியமான் அருகில்தான் உள்ளான், அவனிடம் சென்றால் அவன் உனக்கு மிகுந்த அளவில் புலால் உணவு அளிப்பான்; நீ அவனிடம் செல்க” என்று விறலியை ஆற்றுப்படுத்துகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
இரப்போர் உண்டவுடன் அவர்களின் பாத்திரம் மீண்டும் மீண்டும் நிரப்பப்படுவதால், “புலரா மண்டை” என்று குறிபிடப்பட்டது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #103 on:
June 17, 2013, 07:36:12 PM »
புறநானூறு, 104. (யானையும் முதலையும்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
======================================
போற்றுமின் மறவீர்! சாற்றுதும் நும்மை;
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது
இளையன்என்று இகழின் பெறல்அரிது ஆடே.
அருஞ்சொற்பொருள்:-
போற்றுதல் = பாதுகாத்தல்
சாற்றுதல் = சொல்லுதல், விளம்பரப் படுத்துதல்
குறுமாக்கள் = சிறுவர்கள்
தாள் = கால்
சின்னீர் = சிறிது அளவு நீர்
அடுதல் = வெல்லுதல், கொல்லல்
ஈர்ப்பு = இழுப்பு
கராம் = முதலை
கருமம் = செயல்
ஆடு = வெற்றி
இதன் பொருள்:-
வீரர்களே! உங்களுக்கு நான் (ஒன்று) கூறுகிறேன்! ஊர்ச் சிறுவர் விளையாடுவதால் கலங்கும் அளவுக்கு நீர் குறைவாக, அவர்களின் கால் அளவே இருந்தாலும், அந்த நீரில், முதலை யானையை இழுத்து, வென்று வீழ்த்திவிடும். அந்த முதலை போன்றவன் என் தலைவன். அவனுடைய ஊராகிய தகடூரில் அவனை வெல்வது உங்களால் இயலாத செயல். அவனுடைய நுண்ணிய ஆற்றலையும் செயல்களையும் சிந்தித்துப் பார்க்காமல், அவன் இளையவன் என்று அவனை இகழ்ந்தால் உங்களால் வெற்றி பெற முடியாது. (இனியாவது) உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
பாடலின் பின்னணி:-
ஒரு சமயம், அதியமானைப் போரில் வெல்லும் பொருட்டு, அவன் ஊராகிய தகடூரை பகைமன்னர்கள் முற்றுகை இட்டனர். போர் மூண்டது. போரில் அதியமான் வெற்றி பெற்றான். அவ்வையார், பகைமன்னர்களிடம் சென்று, “ நீங்கள், அதியமான் இளையவன் என்று எண்ணி, அவன் இருந்த ஊரிலேயே அவனை வெல்ல நினைத்தீர்கள். சிறிதளவு நீர் இருந்தாலும், அந்த நீரில் முதலை யானையை எளிதாக வென்றுவிடும். அதுபோல், அதியமானை அவன் ஊரில் உங்களால் வெல்ல முடியவில்லை. வீரர்களே, நீங்கள் இனியாவது, உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.” என்று எச்சரிக்கிறார்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 220648
Total likes: 26363
Total likes: 26363
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #104 on:
June 17, 2013, 07:38:22 PM »
புறநானூறு, 105. (சேயிழை பெறுகுவை வாள்நுதல் விறலி!)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: பாடாண்.
துறை : விறலியாற்றுப்படை.
======================================
சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யா தாயினும் அருவி
கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆக
மால்புடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.
அருஞ்சொற்பொருள்:-
சேயிழை = சிவந்த பொன்னாலான அணிகலன்
வாள் = ஒளி
தடம் = பெரிய
வாய் = இடம்
தடவுவாய் = நீர்ச்சுனை(நீர் நிலை) நீர்ச் சுனைக்கு ஆகு பெயர்
கலித்த = தழைத்த
மா = கரிய
தண் = குளிrந்த
சிதர் =மழைத்துளி
கலாவ = கலக்க
வியன் = பரந்த, அகன்ற
புலம் =நிலம்
உழைகால் = வாய்க்கால்
மால்பு = கண்ணேணி (கணுவில் புள் செருகிய ஏணி)
மால் = மேகம்
புடைத்தல் = குத்துதல், குட்டுதல், தட்டுதல்
வரை = மலையுச்சி
கோடு = மலை
இழி = இறங்கு
சாயல் = ஒப்பு (மிக).
இதன் பொருள்:-
ஒளி பொருந்திய நெற்றியையுடைய விறலி! பெரிய நீர்ச்சுனைகளில் தழைத்த கரிய இதழ்களுடைய குவளையின் வண்டுகள் மொய்க்கும் புது மலர்களில் குளிர்ந்த மழைத்துளிகள் கலக்குமாறு மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும், மேகங்கள் மோதுகின்ற நெடிய பறம்பு மலையின் சிகரங்களிலிருந்து வரும் அருவிகளின் நீர், கொள் விளைப்பதற்காக உழுத வயல்களில் வாய்க்காலாக ஓடி வருகிறது. அந்த நீரினும் மிகவும் இனிய தன்மை வாய்ந்தவன் வேள் பாரி. நீ அவனை பாடிச் சென்றால் சிவந்த பொன்னாலான அணிகலன்களைப் பெறுவாய்.
”மால்புடை நெடுவரைக் கோடுதொறும்” என்பதற்கு ”கண்ணேணியையுடைய நெடிய மலையினது சிகரங்கள் தோறும்” என்றும் பொருள் கொள்ளலாம்.
பாடலின் பின்னணி:-
ஒரு சமயம், வறுமையால் வாடும் விறலி ஒருத்தியைக் கபிலர் கண்டார். வேள் பாரியிடம் சென்று அவனைப் புகழ்ந்து பாடினால் அவள் பரிசில் பெறலாம் என்று அவளை ஆற்றுபடுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
சிறப்புக் குறிப்பு:-
மழை பெய்தாலும் மழை பெய்யாவிட்டாலும் பறம்பு மலையின் சிகரங்களிருந்து அருவிகள் வழியாக நீர் வந்துகொண்டே இருக்கும் என்பது பாரியின் பறம்பு நாட்டின் குன்றாத நீர் வளத்தைக் குறிக்கிறது. வருவாய் குன்றினும் வள்ளல் தன்மையில் குறையாதவன் பாரி என்ற கருத்தும் இப்பாடலில் தொக்கி நிற்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Logged
Print
Pages:
1
...
5
6
[
7
]
8
9
...
22
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )
»
~ புறநானூறு ~