
ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை அவன் கரிசனத்தோடு உழுது பயிரிட்டு விளைத்து வந்தான். அப்படி விளைந்த தானியத்தை மூட்டையாக கட்டி தூக்கி வர ஒரு கழுதையை பயன்படுத்தி வந்தான். கழுதையும் எஜமானருக்கு விசுவாசமாக உழைத்து வந்தது. அந்தக் கழுதைக்கும் வயசானது. ஒரு நாள் கழுதை வழி தவறி ஒரு பாழுங் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டது.
கிணற்றுக்குள் விழுந்த கழுதை குய்யோ முறையோ என கூச்சல் போட்டது. எஜமான் எட்டிப் பார்த்தான். என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தான். கழுதையை மீட்க முடியாமல் கண் கலங்கினான். பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சென்று கழுதையை மீட்க உதவி கோரினான்.
அவர்களும் வந்தார்கள். கிணறோ பாழும் கிணறு , பயன்படாதது. கழுதையோ வயதாகி போனது. இனி அதனால் உழைக்க முடியாது. இனி அது இருந்தும் என்ன பயன் என ஊரார் அவனிடம் கூறினார்கள். மண், கல், செடி செத்தைகளைப் போட்டு கிணறையும் மூடி விடுவோம், மாட்டிக்கொண்ட கழுதையும் இறந்து விடும் என கூறி அதற்கான செயல்களில் இறங்கினார்கள்.
தன் மேலே ஊரார் கற்களையும், மணலையும் செடி செத்தைகளையும் போடும் போதெல்லாம் வலி தாங்காமல் துடிதுடித்து அழுதது கழுதை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கழுதைக்கு ஒரு யோசனை உதித்தது. அது என்னவெனில், இவர்கள் போடும் பொருட்களின் மேல் நாம் ஏறிக் கொள்ள வேண்டும். வலித்தாலும், காயம்பட்டாலும் பரவாயில்லை. இந்த வலிகளை எல்லாம் நாம் தப்பிக்கும் வழிகளாக மாற்றிக் கொள்வோம் என எண்ணியது. அதன் படியே மண், கல், செடி, செத்தைகள் மேலே வலியையும் பொறுத்துக் கொண்டு ஏறி ஏறி நின்றது. தன் உடம்பை உலுப்பி உலுப்பி கிணறு நிறையும் வரை இப்படியே செய்தது. ஒரு கட்டத்தில் கிணறும் நிரம்பியது. கழுதையும் மேலே வந்தது.
Moral: சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்பவனே வெற்றி பெறுவான்.