Author Topic: கார் நாற்பது  (Read 16683 times)

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #15 on: July 07, 2012, 06:24:19 PM »
16 சுருங்குயில் கையற மாமயி லாலப்
பெருங்கலி வான முரறும் - பெருந்தோள்
1செயலை யிளந்தளி ரன்னநின் மேனிப்
பசலை பழங்கண் கொள.



(ப-ரை) பெருந்தோள் - பெரிய தோளினையுடையாய், செயலை - அசோகினது, இளந்தளிர் அன்ன - இளந்தளிர் போன்ற நின்மேனி - உன் உடம்பினது, பசலை - பசலையானது, பழங்கண் கொள - மெலிவு கொள்ளவும், கருங்குயில் - கரிய குயில்கள், கையற - செயலாற்றுத் துன்பமுறவும், மா மயில் - பெரிய மயில்கள், ஆல - களித்து ஆடவும், பெருங் கலி வானம் - பெரிய ஒலியையுடைய முகில்கள், உரறும் - முழங்காநிற்கும், எ-று.

கையறல் - ஈண்டுக் கூவாதொடுங்குதல்; கார்காலத்தில் குயில் துன்புறலும் மயில் இன்புறலும் இயற்கை. ஆல - அகல; ஆட. பசலை - காதலர்ப் பிரிந்தார்க்கு உளதாகும் நிற வேற்றுமை. பழங்கண் - மெலிவு; ‘பழங்கணும் புன்கணும் மெலிவின் பால' என்பது திவாகரம். பசலை பழங்கண் கொள என்றது தலைவர் வருகையால் தலைவி மகிழ்ச்சியுற என்றபடி.
 
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #16 on: July 07, 2012, 06:24:54 PM »
17 அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப்
பறைக்குர லேறொடு பௌவம் பருகி
உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை
கொண்டன்று பேதை நுதல்.



(ப-ரை) பேதை - பேதாய், வானம் - மேகமானது, பௌவம் பருகி - கடல் நீரைக் குடித்து, பறைக் குரல் ஏறொடு பறையொலி போலும் ஒலியையுடைய இடியேற்றாலே, பாம்பு சவட்டி பாம்புகளை வருத்தி, அறைக்கல் பாறைகற்களையுடைய, இதுவரை மேல் - பக்க மலையின்மேல், உறைத்து - நீரைச்சொரிந்து, இருள் கூர்ந்தன்று - இருளைமிக்கது; (ஆதலால்) நுதல் - உனது நெற்றி, பிறைத் தகை - பிறை மதியின் அழகை, கொண்டன்று - கொண்டதே எ-று.

இறுவரை - பக்கமலை. சவட்டி - வருத்தி; ‘மன்பதை சவட்டுங் கூற்றம்' எனப் பதிற்றுப்பத்திலும் இச் சொல் இப் பொருளில் வந்துள்ளமை காண்க; இது ‘கடிசொல்லில்லைக் காலத்துப் படினே' என்பதனாற் போந்தது. பௌவம் : ஆகுபெயர். உறைத்தல் - துளித்தல்; சொரிதல். கூர்ந்தன்று : கூர் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த உடம்பாட்டு வினைமுற்று. இருள் கூர்ந்தன்று : ஒரு சொல்லாய் வானம் என்னும் எழுவாய்க்கு முடிபாயிற்று.
 
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #17 on: July 07, 2012, 06:25:35 PM »
18 கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே
நல்லிசை யேறொடு வான நடுநிற்பச்
செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார்
மேனிபோற் புல்லென்ற காடு.


(ப-ரை) கல்பயில் - மலைநெருங்கிய, கானம் கடந்தார் காட்டைக் கடந்து சென்ற தலைவர் : வர - வரும்வகை, ஆங்கே - அவர் வருங்காலம் வந்தபொழுதே, வானம் - மேகங்கள், நல்இசை - மிக்க ஒலியையுடைய, ஏறோடு - உருமேற்றுடனே, நடுநிற்ப - நடுவு நின்று எங்கும் பெய்தலால், நல்கூர்ந்தார் மேனிபோல் - வறுமையுற்றார் உடம்புபோல, புல்லென்ற - (முன்பு) பொலிவிழந்த, காடு - காடுகள், செல்வர் மனம்போல் பொருளுடையார் மனம் போல, கவின் ஈன்ற - அழசைத் தந்தன எ-று.

நல் - ஈண்டு மிக்க என்னும் பொருளது; ‘நன்று பெரிதாகும்' என்னும் தொல்காப்பியச் சூத்திரம் இங்கு நோக்கற்பாலது. கடந்தார் வர ஆங்கே வானம் நடுநிற்பக் காடு கவினீன்ற என வினை முடிவு செய்க; வர நடுநிற்ப ஆங்கே கவினீன்ற என முடிப்பினும் அமையும்
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #18 on: July 07, 2012, 06:27:31 PM »
வினை முற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது ( 18,19 )


19 நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற்
றொடி பொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு.



(ப-ரை) நாஞ்சில் வலவன் - கலப்பைப்படை வென்றியை யுடையவனது, நிறம்போல - வெண்ணிறம் போல, பூஞ்சினை பூங்கொம்பினையும், செங்கால் - செவ்விய தாளினையுமுடைய, மரா அம் - வெண்கடம்புகள், தகைந்தன - மலர்ந்தன; (ஆதலால்) என் நெஞ்சு - என் மனம், பைங்கோல் தொடி பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி - விளங்குகின்ற, முன் கையாள் - முன்னங்கையை யுடையாளின், தோள் - தோள்கள், துணையாவேண்டி - எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது - நெடிய காட்டு வழியைக் கடந்து சென்றது எ-று.

நாஞ்சில் வலவன் - பலராமன்; அவன் வெண்ணிறமுடைய னென்பதனையும், கலப்பைப்படையால் வெற்றியுடையனென் பதனையும் ‘கடல்வளர் புரிவளை புரையுமேனி, அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்' என்னும் புறப்பாட்டானுமறிக. மராஅம் - வெண்கடம்பு; ‘செங்கான் மராஅத்த வாலிணர்' என்னும் திருமுருகாற்றுப் படையானும் மராஅம் செங்காலும் வாலிணரு முடைத்தாதல் காண்க. ‘ஒருகுழை யொருவன் போலிணர்சேர்ந்த மராஅமும்' எனப் பாலைக் கலியிலும் வெண்டம்பின் பூங்கொத்திற்குப் பலராமன் உவமை கூறப்பட்டிருத்தல் ஓர்க. தகைதல் - மலர்தல்; இஃதிப் பொருட்டாதலைப் ‘பிடவுமுகை தகைய' (ஐங்குறுநூறு) என்புழிக் காண்க. நெடு விடைக்கு முன்புரைத்தாங்குரைத்துக் கொள்க.

 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #19 on: July 07, 2012, 06:28:28 PM »
20 வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன
ஆறும் பதமினிய வாயின - ஏறோ
டருமணி நாக மனுங்கச் செருமன்னர்
சேனைபோற் செல்லு மழை.



(ப-ரை) வீறுசால் - சிறப்பமைந்த, வேந்தன் - அரசனுடைய, வினையும் - போர்த்தொழில்களும், முடிந்தன - முற்றுப்பெற்றன, ஆறும் - வழிகளும், பதம்இனிய ஆயின - செவ்வி யினியவாயின, மழை - மேகங்கள், அருமணி - அரிய மணியையுடைய, நாகம் - பாம்புகள், அனுங்க - வருந்தும் வகை, ஏறொடு உருமேற்றுடனே, செருமன்னர் சேனைபோல் - போர்புரியும் வேந்தரின் சேனைபோல, செல்லும் - செல்லா நிற்கும்; (ஆதலால் நாம் செல்லக்கடவேம்) எ-று.

இடியோசையால் நாகம் வருந்துதலை ‘விரிநிற நாகம் விடருளதேனும், உருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்' என்னும் நாலடியானறிக. ‘முதிர்மணி நாக மனுங்க முழங்கி' என்னும் திணை மொழியைம்பதும் ஈண்டு நோக்கற்பாலது. அணியணியாய் விரைந்து சேறலும், முழங்கலும், அம்பு சொரிதலும் பற்றிச் சேனை உவமமாயிற்று.

 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #20 on: July 07, 2012, 06:29:36 PM »
21 பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே
சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற்
செல்வ மழைத்தடங்கட் சின்மொழிப் பேதைவாய்
முள்ளெயி றேய்ப்ப வடிந்து.



(ப-ரை) பொறிமாண் - எந்திரச் செய்கைகளான் மாட்சிமைப் பட்ட, புனை திண் தேர் அலங்கரிக்கப்பட்ட திண்ணிய தேர், போந்த வழியே - வந்த வழியிதே, சிறு முல்லைப் போது எல்லாம் - சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம், வடிந்து - கூர்மையுற்று, செவ்வி நறுநுதல் - செவ்விய அழகிய நெற்றியையும், செல்வ மழைத் தடங்கண் - வளப்பமான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும், சில்மொழி - சிலவாகிய மொழியினையுமுடைய, பேதைவாய் - மடவாளது வாயின்கண் உள்ள, முள் எயிறு - கூரிய பற்களை, ஏய்ப்ப - ஒவ்வா நிற்கும் எ-று.

சின்மொழி - மெல்லிய மொழியுமாம். ‘முள்ளெயிறொக்க வடிவுபட்டு' என்று பொருளுரைத்து, ‘நின்றது' என்னும் பயனிலை தொக்கது என்றுரைப்பர் பழைய வுரைகாரர். இப்பொருளில் ‘ஏய்ப்ப' என்பது வினையெச்சம்.
 
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #21 on: July 07, 2012, 06:30:24 PM »
   
22 இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து
புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார்
இளநலம் போலக் கவினி வளமுடையார்
ஆக்கம்போற் பூத்தன காடு.



(ப-ரை) இளையரும் - சேவகரும், ஈர்ங்கட்டு அயர - குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க, உளை அணிந்து - தலையாட்டம் அணிந்து, புல்உண் - புல்லினை யுண்ட, கலிமாவும் மனஞ்செருக்கிய குதிரையையும், பூட்டிய - தேருடன் பூட்டுதலைச் செய்ய, காடு - காடுகள், நல்லார் - நற்குணமுடைய மகளிரின், இளநலம் போல - இளமைச் செவ்விபோல, கவினி - அழகுற்று, வளம் உடையார் - வருவாயுடையாரது, ஆக்கம்போல் செல்வம்போல், பூத்தன - பொலிவுற்றன. (எ-று).

இளையர் - சேவகர் ; ஏவலாளர், ஈர்ங்கட்டயர என்பதற்கு அழகிதாகக் கட்டியுடுத்தலைச் செய்ய என்றனர் பழையவுரைகாரர். உளை - தலையாட்டம்; சாமரை யெனவும்படும்; இது கவரிமான் மயிராற் செய்து குதிரையின் தலையிலணியப்படுவது. பூட்டிய : செய்யிய என்னும் வினையெச்சம். இளநலம் என்புழி நலம் வடிவுமாம். வளம் வருவாயாதலை ‘வளத்தக்காள் வாழ்க்கைத் துணை' என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த
உரையானறிக. பூத்தல் - பொலிதல்; மலர்தலுமாம்.
 
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #22 on: July 07, 2012, 06:31:15 PM »
தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தது

23 கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந்
தண்டுளி யாலி புரளப் புயல்கான்று
கொண்டெழில் வானமுங் கொண்டன் றெவன் கொலோ
ஒண்டொடி யூடுநிலை.



(ப-ரை) ஒண்டொடி - ஒள்ளிய வளைகளை யணிந்தவளே, புறவு எல்லாம் - காடெங்கும். கண்திரள் முத்தம் கடுப்ப - இடந்திரண்ட முத்தையொப்ப, தண்துளி - குளிர்ந்த நீர்த்துளிகளும் ஆலி - ஆலங்கட்டிகளும் , புரள - புரளும்வகை, புயல் - மேகம், கான்று கொண்டு - மழைபொழிந்து கொண்டு, எழில் - அழகினையுடைய, வானமும் கொண்டன்று - வானத் திடத்தையெல்லாம் கொண்டது;(ஆதலால்), ஊடுநிலை பிணங்குந்தன்மை, எவன் கொல் - எற்றுக்கு, எ-று.

கண்டிரள் முத்தம் என்றது மேனி திரண்ட முத்தம் என்றபடி அகத்திலும். பிறாண்டுங் ‘கண்டிரண் முத்தம்' என வருதலுங் காண்க. கொல் , ஓ : அசைநிலை தலைவர் வருவர்; இனிப் பிணங்குதல் வேண்டா என்பது குறிப்பு.

 
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #23 on: July 07, 2012, 06:34:10 PM »
வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது

 
24 எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே
கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும்
பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம்
1மெல்லவுந் தோன்றும் 2பெயல்.



(ப-ரை) கல் ஓங்கு கானம் - மலைகள் உயர்ந்த காடுகள், களிற்றின் மதம் நாறும் - யானையின் மதம் நாறாநிற்கும் ; கார் வானம் - கரிய வானத்தின்கண். பெயல் - மழை. மெல்லவும் தோன்றும் - மென்மையாகத் தோன்றாநிற்கும்; (ஆதலால்) பல் இருங்கூந்தல் - பலவாகிய கரிய கூந்தலையுடையவள், பணிநோனாள் - ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்கமாட்டாள்; நெஞ்சே - மனமே, எல்லா வினையும் கிடப்ப - எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க; எழு - நீ போதற்கு ஒருப்படு, எ-று.

கிடப்ப : வியங்கோள்; வினையெச்சமாகக் கொண்டு கிடக்கும் வகை எனப் பொருளுரைத்தலுமாம். களிற்றின் மதம் நாறும் என்றது கார்காலத்தில் பிடியுடன் இயைந்தாடுதலான் என்க. பணி - பணித்த சொல். எல்லியும் என்று பாடமாயின் இரவிலும் எனப் பொருள் கொள்க.

 
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #24 on: July 07, 2012, 06:35:26 PM »
பருவங்கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி
தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது


25 கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந்
தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன
சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று
கூர்ந்த பசலை யவட்கு.



(ப-ரை) ஈர்ந்தண் புறவில் - குளிர்ச்சி மிக்க காட்டில், கருங்கால் வரகின் பொரிபோல - கரிய தாளினையுடைய வரகினது பொரியைப் போல, தெறுழ்வீ - தெறுழினது மலர்கள், அரும்பு அவிழ்ந்து மலர்ந்தன - அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன; செய்குறி சேர்ந்தன - (தலைவர்) செய்த குறிகள் வந்துவிட்டன; (ஆதலால்) அவர் வாரார் என்று - தலைவர் இனி வரமாட்டாரென்று, அவட்கு - தலைவிக்கு, கூர்ந்த - பசலை மிக்கது, எ-று.

ஈர்ந்தண்: ஒரு பொரு ளிருசொல், தெறுழ்-காட்டகத்ததொரு கொடி கூர்ந்தது என்பதில் ஈறுகெட்டது.
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #25 on: July 07, 2012, 07:05:48 PM »

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது

26 நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-
தூதொடு வந்த, மழை.



(ப-ரை) சிலமொழி - சிலவாகிய மொழியினையுடையாய், தோன்றி - தோன்றிப்பூக்கள், நலம்மிகு கார்த்திகை - நன்மைமிக்க கார்த்திகைத் திருவிழாவில் , நாட்டவர் இட்ட - நாட்டிலுள்ளோர் கொளுத்திவைத்த, தலைநாள் விளக்கின் - முதல் நாள் விளக்கைப் போல், தகை உடையவாகி - அழகுடையனவாகி, புலம் எலாம் - இடமெல்லாம், பூத்தன - மலர்ந்தன; மழை தூதொடு வந்த - மழையும் தூதுடனே வந்தது, எ-று.

கார்த்திகை நாளில் நிரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டைநாள் தொட்டுள்ளது; ‘குறுமுயன் மறுநிறங்கிளர மதிநிறைந், தறுமீன் சேரு மகலிருணடுநாண், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் றுவன்றிய, விழவுட னயர வருகதி லம்ம' அகநானூற்றிலும், ‘கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கு' எனக் களவழிநாற்பதிலும், ‘துளக்கில் கபாலீச்சுரத் தான்றொல் கார்த்தி கைநாள் ............ விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்' எனத்ம தேவாரத்திலும் ‘குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன' எனச் சிந்தாமணியிலும் இத்திருவிழாக் கூறப்பெற்றுள்ளமை காண்க. தலைநாள் - திருவிழாவின் முதல் நாளாகிய கார்த்திகை; நலமிகு கார்த்திகை என்பதனைக் கார்த்திகைத் திங்கள் எனக் கொண்டு, தலைநாள் என்பதனை அத் திங்களிற் சிறந்த நாளாகிய கார்த்திகை எனக் கொள்ளலும் ஆம்; முன்பு நாட்கள் கார்த்திகை முதலாக எண்ணப்பட்டவாகலின் தலைநாள் என்றார் எனலுமாம். வந்த - ‘கூர்ந்த' என்புழிப்போல் ஈறுகெட்டது.
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #26 on: July 07, 2012, 07:07:27 PM »
ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூற வற்புறுத்தது


27 முருகியம்போல் வான முழங்கி யிரங்கக்
குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி
உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப்1
பள்ளியுட் பாயும் பசப்பு.
 


(ப-ரை) வானம் - மேகம், முருகியம்போல் - குறிஞ்சிப் பறைபோல், முழங்கி இரங்க - முழங்குதலைச் செய்ய, கானம் - காட்டின்கண், குருகுஇலை பூத்தன - குருக்கத்தியிலை விரிந்தன; பிரிவு எண்ணி - (நம் காதலர்) பிரிதலை நன்றென்று நினைத்து, உள்ளாது அகன்றார் என்று - நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று, ஊடுயாம் பாராட்ட - நாம் ஊடுதலைப் பாராட்டுவதால், பசப்பு - பசலை நோய், பள்ளியுள் பாயும் - படுக்கை யிடத்தில் பரவும், எ-று.

முருகுஇயம் - குறிஞ்சிப் பறைவிசேடம்; முருகனுக்கு இயக்கப்படுவது; தொண்டகம், துடி என்பனவும் குறிஞ்சிப் பறைகள் முழங்கி இரங்க; ஒரு பொருளிருசொல். குருகு - குருக்கத்தி; முருக்கென்பாரும் உளர். இலையென்றமையால் பூத்தலாவது தழைத்தல் எனக்கொள்க ஊடு : முதனிலைத் தொழிற்பெயர். இகரம் சந்தியால் வந்தது. பள்ளியுட்பாயும் என்றது படுக்கையிற் கிடக்கச் செய்யும் என்னும் குறிப்பிற்று.
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #27 on: July 07, 2012, 07:08:49 PM »
வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது

28 இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப்1
பொன்செய் குழையிற் றுணர்தூங்கத் தண்பதஞ்
செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர்
கவ்வை யழுங்கச் செலற்கு.



(ப-ரை) இமிழ் இசை - ஒலிக்கும் இசையினையுடைய, வானம் முகில், முழங்க - முழங்குதலைச் செய்ய. குமிழின் பூ - குமிழின் பூக்கள், பொன் செய் குழையின் - பொன்னாற் செய்யப் பட்ட குழைபோல், துணர் தூங்க - கொத்துக்களாய்த் தொங்க, நெஞ்சே - மனமே, காதலி ஊர் - நம் காதலியது ஊருக்கு, கவ்வை அழுங்க - அலர் கெடும் வகை, செலற்கு - நாம் செல்வதற்கு, சுரம் - காடுகள், தண்பதம் செவ்வி உடைய - குளிர்ந்த பதமும் செவ்வியும் உடையவாயின எ-று.

இமிழ் இசை - இனிய இசையுமாம். சுரம் - காடு; அருநெறியுமாம். கவ்வை - அலர்; ஊரார் கூறும் பழமொழி. அழுங்கல் வருந்துதல்; ஈண்டு இலவாதல்.
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #28 on: July 07, 2012, 07:09:32 PM »
29 பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத்
தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகைகொண்ட
லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ்
செவ்வி யுடைய சுரம்.



(ப-ரை) பொங்கரும் - சோலைகளெல்லாம், ஞாங்கர் பக்கங்களில், மலர்ந்தன - பூத்தன; கானம் - காட்டின்கண்ணே, தங்கா - தங்குதலின்றித் திரியும், தகை வண்டு - அழகையுடைய வண்டுகள், பாண்முரலும் - இசைப்பாட்டைப் பாடாநின்றன; பகைகொண்டல், பகைத்தெழுந்த மேகம், எவ்வெத்திசைகளும் எல்லாத்திசைக் கண்ணும், வந்தன்று - வந்தது; சுரம் - காடுகளும் செவ்வி உடைய - தட்பமுடையவாயின; (ஆதலால்) நாம் சேறும் - நாம் செல்லக் கடவேம், எ-று.

பொங்கர் - இலவுமாம். பகைகொண்டல் : வினைத்தொகை சேறும் என்றது நெஞ்சை உளப்படுத்தித் தேர்ப்பாகற்குக் கூறியதுமாம்.
 
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #29 on: July 07, 2012, 07:10:18 PM »
30 வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந்
திருநிலந் தீம்பெய றாழ - விரைநற1
ஊதை யுளரு நறுந்தண்கா பேதை
பெருமட நம்மாட் டுரைத்து. 


(ப-ரை) வரைமல்க - மலைகள் வளம் நிறைய, வானம் சிறப்ப வானகம் சிறப்பெய்த, இருநிலம் - பெரிய பூமியை, உறை போழ்ந்து - துளிகளால் ஊடறுத்து, தீம்பெயல் தாழ - இனிய மழை விழாநிற்க, விரை நாற - நறுமணம் கமழாநிற்க, ஊதை காற்றானது, பேதை பெருமடம் - காதலியது பெரிய மடப்பத்தை, நம்மாட்டு உரைத்து - நமக்குத் தெரிவித்து. நறுந்தண் கா - நறிய குளிர்ந்த சோலையில், உளரும் - அசையா நிற்கும் (ஆதலால் நீ விரையத் தேரைசி செலுத்துவாய்) எ-று.

உறை - நீர்த்துளி : மூன்றன் தொகை ஊதை - குளிர்காற்று. உளர்தல் - அசைதல்; பேதை பெருமடம் - தலைவர் வாரா ரென்று கருதி வருந்தியிருக்கும் தலைவியது அறியாமை.