Author Topic: கார் நாற்பது  (Read 16664 times)

Offline Global Angel

கார் நாற்பது
« on: July 07, 2012, 04:22:23 PM »
மதுரைக் கண்ணங் கூத்தனார்
இயற்றிய

கார் நாற்பது



1 பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ1
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந் தாலிக்கும் போழ்து.2



(ப-ரை) பொருகடல் வண்ணன் - கரையை மோதுங் கடலினது நிறத்தினையுடைய திருமால், மார்பில் புனை தார்போல் மார்பில் அணிந்த பூமாலைபோல, திருவில் - இந்திரவில்லை, விலங்கு ஊன்றி - குறுக்காக நிறுத்தி, தீம் பெயல் தாழ - இனிய பெயல் விழாநிற்க, வருதும் என மொழிந்தார் - வருவேம் என்று சொல்லிப் போன தலைவர், வானம் - மேகமானது, கரு இருந்து கருக்கொண்டிருந்து, ஆலிக்கும் போழ்து - துளிகளைச் சொரியாநிற்கையில், வாரார் கொல் - வாராரோ? (வருவார்) என்றவாறு.

பொருகடல் : வினைத்தொகை, புனைதார் என்க. திரு. - அழகு, விரும்பப்படுந்தன்மை. திருவில் என்பது இந்திரவில் என்னும் பொருட்டு; ‘திருவிற் கோலி' என ஐங்குறு நூற்றுள் வருவதுங் காண்க. விலங்கு - குறுக்கு : ‘விலங்ககன்ற வியன்மார்ப' என்பது புறம். ஆக என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது நீலநிறமுடைய வானின்கண் பன்னிறமுடையத்தாய் வளைந்து தோன்றும் இந்திரவில் நீலநிறமுடைய மாயோனது மார்பிலணிந்த பன்னிறமலர்த் தாரினைப் போலும் என்க. தாழ : நிகழ்காலவினையெச்சம். வருதும் : தனித் தன்மைப் பன்மை வருவர் என்பது குறிப்பாற் போந்தது.
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #1 on: July 07, 2012, 04:23:29 PM »
2 கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த
நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய்1
இன்னே வருவர் நமரென் றெழில்வானம்
மின்னு மவர்தூ துரைத்து.



(ப-ரை) கொடுங்குழாய் - வளைந்த குழையையுடையாய், கடுங்கதிர் நல்கூர - ஞாயிற்றின் வெங்கதிர் மெலிவெய்த, கார் செல்வம் எய்த - கார்ப்பருவம் வளப்பத்தைப் பொருந்த, நெடுங்காடு - நெடிய காடெல்லாம், நேர்சினை ஈன - மிக்க அரும்புகளை யீன, எழில் வானம் - எழுச்சியையுடைய முகில், நமர் இன்னே வருவர் என்று நமது தலைவர் இப்பொழுதே வருவரென்று, அவர் தூது உரைத்து அவரது தூதாய் அறிவித்து, மின்னும் - மின்னாநின்றது, எ-று.

கடுங்கதிர் : அன்மொழித் தொகையாய் ஞாயிற்றை உணர்த்துவதெனக் கோடலும் ஆம். ஞாயிற்றுக்கு வெங்கதிர் செல்வமெனப்படுதலின் அது குறைதலை நல்கூர்தல் என்றார். கார் : ஆகுபெயர் முதலடியிற் பொருள்முரண் காண்க. நேர் - ஈண்டு மிகுதி என்னும் பொருட்டு. கொடுமை - வளைவு. கொடுங்குழை காதணி. எழில் - அழகுமாம். செயவெனெச்சம் மூன்றும் மின்னும் என்னும் வினைகொண்டன.
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #2 on: July 07, 2012, 04:26:29 PM »
பருவம் கண்டு அழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தனது
ஆற்றாமை தோன்ற உரைத்தது


3.வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள,
உரும் இடி வானம் இழிய, எழுமே-
நெருநல், ஒருத்தி திறத்து.



(ப-ரை) வரிநிறப் பாதிரி வாட -வரிநிறத்தை யுடைய பாதிரிப் பூக்கள் வாட, வளி போழ்ந்து - காற்றினால் ஊடறுக்கப் பட்டு, அயிர்மணல் - இளமணலையுடைய, தண் புறவின் -குளிர்ந்த காட்டிண்கண், ஆலி புரள - ஆலங்கட்டிகள் புரள, உரும் இடி வானம் - இடி இடிக்கும் முகில், நெருநல் - நேற்று முதலாக, ஒருத்தி திறத்து - தனித்திருக்கும் ஒருத்திமாட்டு (அவளை வருத்துவான்வேண்டி), இழிய - மழைபெய்ய எழும் - எழா நின்றது, எ-று.

பாதிரி : ஆகுபெயர்; அது வேனிற்பூ ஆகலின் வாட என்றார். வாட என்றமையின் அது முல்லைக்கண் மயங்காமை யோர்க, ‘புன்காற் பாதிரி வரிநிறத்திரள்வீ' என அகத்தினும் வரிநிறம் கூறப்பட்டமை காண்க. போழ்தல் - ஊடறுத்தல் ; ‘வளியிடை', ‘போழப்படா அமுயக்கு' என முப்பாலினும் இப்பொருட்டாயது இது. அயிர்மணல் - இளமணல், ஆவது நுண்மணல். ஆலி - நீர் திரண்ட கட்டி, உழிய எனப் பாடங்கொள்ளுதல் சிறப்பு; உழிதர என்க. நெருநல் எழும் எனமுடிக்க. நேற்றுமுதல் தனிமையால் வருந்துவாள் எனினும் அமையும் பாதிரி வாட ஆலி புரள வானம் வளி போழ்ந்து ஒருத்தி திறத்து எழும் என வினைமுடிவு செய்க.
« Last Edit: July 07, 2012, 04:28:53 PM by Global Angel »
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #3 on: July 07, 2012, 04:27:55 PM »
தோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தது

4 ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடுங் கடுக்கை கவின்பெறப்1 பூத்தன
பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி
வாடும் பசலை மருந்து.
 


(ப-ரை) ஆடும் மகளிரின் - கூத்தாடும் மகளிர்போல மஞ்ஞை - மயில்கள், அணிகொள - அழகுபெற, காடும் - காடுகளும், கடுக்கை - கொன்றைகள், கவின்பெற - அழகுபெற, பூத்தன- மலர்ந்தன ; பாடு வண்டு - பாடுகின்ற வண்டுகளும், ஊதும் - அப் பூக்களை ஊதாநிற்கும்; (ஆதலால்) பணைத்தோளி - மூங்கில் போலும் தோளையுடையாய், பருவம் - இப் பருவமானது, வாடும் பசலை - வாடுகின்ற நின் பசலைக்கு, மருந்து - மருந்தாகும், எ-று.

மகளிரின் என்பதில் இன் உவமவுருபு. மஞ்ஞை கார்காலத்திற் களிப்புமிக்கு ஆடுதலின் ஆடுமகளிரை உவமை கூறினார். காடும் : உம்மை எச்சப்பொருளது. பூத்தன என்னும் சினைவினை முதலொடும் பொருந்திற்று ; காடுமுதலும் கடுக்கை சினையுமாகலின், வாடும் : காரண காரியப்பொருட்டு.
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #4 on: July 07, 2012, 04:30:00 PM »
5 இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ் சிதறி யவைபோலக் கோபந்
தவழுந் தகைய புறவு.



(ப-ரை) பகழிபோல் - அம்புபோலும், உண் கண்ணாய் - மையுண்ட கண்களையுடையாய், ஈண்டை - இவ்விடத்து, பவழம் சிதறியவை போல - பவழம் சிந்தியவை போல, புறவு - காடுகள், கோபம் தவழும் தகைய - இந்திர கோபங்கள் பரக்குந் தகைமையை உடையவாயின ; (ஆதலால்), இகழுநர் சொல் அஞ்சி இகழ்வார் கூறும் பழிக்கு அஞ்சி ; சென்றார் - பொருள் தேடச்சென்ற தலைவர், வருதல் - மீளவருதல், பொய் அன்மை மெய்யாம். எ-று.

தமது தாளாண்மையாற் பொருள்தேடி அறஞ்செய்யாதார்க் குளதாவது பழியாகலின் ‘இகழுநர் சொல்லஞ்சி' எனப்பட்டது. வடிவானும் தொழிலானும் கண்ணுக்குப் பகழி உவமம். பொய்யன்மை - மெய்ம்மை. ஈண்டைப் பவழஞ் தறியவை என்றமையால் தலைமகள் வருத்த மிகுதியால் தான் அணிந்திருந்த பவழவடத்தை அறுத்துச் சிந்தினாளென்பது கருதப்படும். ஈண்டை - குற்றுகரம் ஐகாரச் சாரியையேற்றது. கோபம் - கார்கலத்தில் தோன்றுவதொரு செந்நிறப்பூச்சி; தம்பலப்பூச்சி யென்பர்
 
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #5 on: July 07, 2012, 04:30:54 PM »
6 தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்1
சென்றாரை நீடன்மி னென்று.



(ப-ரை) வடு இடை - மாவடுவின் நடுவே. போழ்ந்து - பிளந்தாற்போலும், அகன்ற கண்ணாய் - பரந்த கண்களை யுடையாய் கடிது இடி வானம் - கடுமையாய் இடிக்கும் முகில், நெடு இடை சென்றாரை - நெடிய வழியிற் சென்ற தலைவரை, நீடன்மின் என்று - காலந் தாழ்க்கா தொழிமின் என்று சொல்லி, உரறும் - முழங்காநிற்கும்; (ஆதலால்) தொடி இட ஆற்றா - வளையிடுதற்கு நிரம்பாவாய், தொலைந்த - மெலிந்த, தோள் நோக்கி - தோள்களைப் பார்த்து வருந்தல் - வருந்தாதே எ.று.

ஆற்றா : எதிர்மறை வினையெச்சமுற்று தொடியிடவாற்றா தொலைந்த தோள் என்றது உறுப்பு நலனழிதல் கூறியவாறு; ‘தொடியொடு தொல்கவின் வாடிய தோள்' என்பது முப்பால். போழ்ந்தால் என்பது போழ்ந்து எனத் திரிந்து நின்றது. உவமஉருபு தொக்கத்து. நெடுவிடை - மருவின்பாற்படும்; நெட்டிடை என்பதே பயின்ற வழக்காகலின்.
 
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #6 on: July 07, 2012, 04:31:31 PM »
7 நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந்
தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய்
பொச்சப் பிலாத புகழ் வேள்வித் தீப்போல
எச்சாரு மின்னு மழை



(ப-ரை) தளர் இயலாய் - தளர்ந்த இயல்பினையுடையாய், நச்சியார்க்கு - தம்மை விரும்பியடைந்தார்க்கு, ஈதலும் - கொடுத்தலும், நண்ணார் - அடையாத பகைவரை, தெறுதலும் - அழித்தலும், தற்செய்வான் - தம்மை நிலைநிறுத்துவனவாக நினைத்து, (அவற்றின் பொருட்டு) சென்றார் - பொருள் தேடச் சென்ற தலைவரை, பொச்சாப்பு இலாத - மறப்பில்லாத, புகழ் - புகழையுடைய, வேள்வித் தீப்போல - வேள்வித்தீயைப்போல, எச்சாரும் - எம் மருங்கும், மின்னும் - மின்னாநிற்கும், மழை வானமானது, தரூஉம் - கொண்டு வரும் எ-று.

அறஞ் செய்தற்கும் பகைதெறுதற்கும் பொருள் காரணமாதலை, ‘அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும், பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்.... தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்ற நங்காதலர்' என்னும் பாலைக்கலியானு மறிக. தற்செய்வான் சென்றார் : பன்மை யொருமை மயக்கம்; சில சொற்கள் வருவிக்கப்பட்டன. ‘தளிரியலாய்' என்பது பாடமாயின் தளிர்போலும் சாயலையுடையாய் என்று பொருள் கூறப்படும். பொச்சாப்பின்றிச் செய்தலாற் புகழுண்டாம் ஆகலின் பொச்சாப்பிலாத என்னும் பெயரெச்சம் காரணப்பொருட்டு. ‘பொச்சாப் பார்க்கில்லை புகழ்மை' என்பது திருவள்ளுவப் பயன் வேள்வித்தீ உவமம். அது மழைக்குக் காரணமென்பதற்குப் ஞாபகமாகவும் உள்ளது.

 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #7 on: July 07, 2012, 04:32:14 PM »
8 மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப்
பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வரல்கூறும்
கண்ணிய லஞ்சனங் தோய்ந்த போற் காயாவும்
நுண்ணரும் பூழ்த்த புறவு.



(ப-ரை) பெண் இயல் நல்லாய் - பெண் தகைமையையுடைய நல்லாய், மண் இயல் ஞாலத்து - மண்ணானியன்ற உலகத்து, மன்னும் புகழ் வேண்டி - நிலைபெறும் புகழை விரும்பி, பிரிந்தார் - பிரிந்து சென்ற தலைவர், வரல் - மீண்டு வருதலை, கண் இயல் அஞ்சனம் கண்ணிற்கு இயற்றப்பட்டமையை, தோய்ந்தபோல் தோய்ந்தவை போல, காயாவும் - காயாஞ் செடிகளும், நுண் அரும்பு ஊழ்த்த - நுண்ணிய அரும்புகள் மலரப் பெற்ற, புறவு காடுகள், கூறும் - சொல்லாநிற்கும், எ-று.

பெண் இயல் - நாண் முதலியன; ‘அச்சமு நாணு மடனுமுந் துறத்த, நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப'என்று தொல்காப்பியம் கூறுவதுங் காண்க. காயாமலர் அஞ்சனத் தோய்ந்தாற்போலும் என்பதனை ‘செறியிலைக் காயா அஞ்சன மலர' என்னும் முல்லைப்பாட்டானும் அறிக. ஊழ்த்தல் - மலர்தல்; ‘இணரூழ்த்து நாறா மலர்' என்பது திருக்குறள். புறவு பிரிந்தார்வரல் கூறும் என முடிக்க.

 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #8 on: July 07, 2012, 04:32:51 PM »
9 கருவிளை கண்மலர் போற் பூத்தன கார்க்கேற்
றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை
முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
இன்சொற் பலவு முரைத்து. 



(ப-ரை) கண்மலர் போல் பூத்தன - கண்மலர் போலப் பூத்தனவாகிய, கருவிளை - கருவிளம் பூக்களும், கார்க்கு ஏற்று - கார்ப்பருவத்திற் கெதிர்ந்து, எரி வனப்பு உற்றன - தீயினது அழகையுற்றனவாகிய, தோன்றி - தோன்றிப் பூக்களும், வரிவளை முன்கை இறப்ப - வரியையுடைய வளைகள் முன்னங் கையினின்று கழல, இன்சொல் பலவும் உரைத்து - இனிய சொற்கள் பலவும் மொழிந்து, துறந்தார் - பிரிந்து சென்ற தலைவர், வரல் - வருதலை, கூறும் கூறா நிற்கும், எ-று.

கருவிளை - கருங்காக்கணம்பூ; அது கண்போலும் என்பதனைக் கண்ணெனக் ‘கருவிளை மலர' என்னும் ஐங்குறு நூற்றானு மறிக. தோன்றிப்பூ செந்நிற ஒளியுடையது; ‘சுடர்ப்பூந் தோன்றி' என்பது பெருங்குறிஞ்சி. ‘தோடார் தோன்றி குருதி பூப்ப' என்றார் பிறரும் உரைத்து இறப்பத் துறந்தார் என்க. கருவிளையும் தோன்றியும் துறந்தார் வரல்கூறும் என முடிக்க.
 
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #9 on: July 07, 2012, 04:33:26 PM »
10 வானேறு வானத் துரற வயமுரண்
ஆனேற் றொருத்த லதனோ டெதிர்செறுப்பக்
கான்யாற் றொலியிற் கடுமான்றே ரென்றோழி
மேனி தளிர்ப்ப வரும்.
 


(ப-ரை) என் தோழி என் தோழியே, வான்ஏறு - இடியேறு, வானத்து உரற - முகிலின்கண் நின்று ஒலிப்ப, வய - வலியினையும், முரண் - மாறுபாட்டினையும் உடைய, ஆன் ஏறு ஒருத்தல் - எருமையின் ஆணாகிய ஒருத்தல், அதனோடு - அவ்விடியேற்றுடன்; எதிர் செறுப்ப - எதிராகி வெகுள, கடுமான்தேர் - விரைந்த செலவினையுடைய குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர், கான் யாற்று ஒலியின் - காட்டாற்றின் ஒலிபோலும் ஒலியினையுடைத்தாய், மேனி தளிர்ப்ப - நின்மேனி தழைக்க, வரும் - வாரா நிற்கின்றது, எ-று.

வய - வலி; ‘வயவலி யாகும்' என்பது தொல்காப்பியம். ஆன் என்னும்பெயர் எருமைக்குரித்தாதலும், ஒருத்தல் என்னும் பெயர் அதன்
ஆணுக்குரித்தாதலும் தொல்காப்பிய மரபியலானறிக; இடபம் எனினும் ஆம். தேரொலி அருவியொலி போலும் என்பதனை ‘அருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்' என்னும் பதிற்றுப்பத்தானும் அறிக. செயவெனச்சம் முன்னைய விரண்டும் நிகழ்விலும், பின்னையது எதிர்விலும் வந்தன.
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #10 on: July 07, 2012, 06:20:33 PM »
11 புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்
வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும்
அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல்
பூங்குலை யீன்ற புறவு.



(ப-ரை) வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலாய், கூந்தலையுடையாய், அணர்த்துஎழு - மேனோக்கியெழும், பாம்பின் தலைபோல் - பாம்பினது படத்தைப் போல, புணர்கோடல் - பொருந்திய வெண்காந்தள்கள், பூங்குலை ஈன்ற - பூக்கொத்துக்களை யீன்ற, புறவு - காடுகள், புணர்தரு - (இம்மை மறுமையின்பங்கள்) பொருந்துதலையுடைய, செல்வம் - பொருளை, தருபாக்கு - கொண்டு வர, சென்றார் - பிரிந்து சென்ற தலைவர், வல் வருதல் - விரைந்து வருதலை, கூறும் கூறாநிற்கின்றன, எ-று.

தருபாக்கு : வினையெச்சம் வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலி நெடும் பீலி' என்னும் நெடுநல்வாடையடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது; கூந்தல். ஐந்து பகுப்பாவன : குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடியென்ப. இங்ஙனம் ஒரொவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி, ஒரொப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். ‘வணரொலி யைம்பாலார்' என இன்னாநாற்பதிலும் இத்தொடர் வந்துள்ளமை காண்க.
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #11 on: July 07, 2012, 06:21:34 PM »
12 மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய்
ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம்1
நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ
வைகலு மேரும் வலம்.
 


(ப-ரை) மை எழில் - கருமையும் அழகும் பொருந்திய, உண்கண் - மையுண்ட கண்களையுடைய, மயில் அன்ன சாயலாய் - மயில் போலும் சாயலினையுடையாய், நெய் அணி குஞ்சரம்போல எண்ணெய் பூசப்பட்ட யானைகள்போல, இருங்கொண்மூ - கரிய மேகங்கள், வைகலும் - நாடோறும், வலம் ஏரும் - வலமாக எழாநின்றன; (ஆதலால்) ஐயம் தீர் காட்சி - ஐயந்தீர்ந்த அறிவினையுடைய, அவர் - நம் தலைவர், வருதல் திண்ணிது -
மீளவருதல் உண்மை, எ-று.

சாயல் - மென்மை : உரிச்சொல். ஐயந்தீர்ந்த எனவே திரிபின்மையும் பெற்றாம். காட்சி - அறிவு. காட்சியவர் எனக்குறிப்பு வினைப் பெயராக்கலும் ஒன்று. பொய் உள்ளீ டில்லாததாகலின் உண்மையைத் ‘திண்ணிது' என்றார் . ஆம் : அசை. இருமை - கருமை பெருமையுமாம். ஏர்தல் - எழுதல்; ‘பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு' என்பது முல்லைப்பாட்டு.
 
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #12 on: July 07, 2012, 06:22:11 PM »
13 ஏந்தெழி லல்குலா யேமார்ந்த1 காதலர்
கூந்தல் வனப்பிற் பெயறாழ - வேந்தர்
களிநெறி வாளரவம் போலக்கண் வௌவி
ஒளிறுபு மின்னு மழை.



(ப-ரை) எழில் - அழகினையுடைய, ஏந்து அல்குலாய் - ஏந்திய அல்குலையுடையாய், ஏம் ஆர்ந்த காதலர் - தம் தலைவரொடு கூடி இன்பந் துய்த்த மகளிரின், கூந்தல் - சரிந்த கூந்தலினது, வனப்பின் - அழகுபோல, பெயல் தாழ - மழை பெய்ய, மழை முகில், வேந்தர் களிறு ஏறி - அரசர் யானையை வெட்டி வீழ்த்துகின்ற, அரவம் - ஒலியினையுடைய, வாள் போல - வாளினைப்போல, கண் வௌவி - கண்களைக் கவர்ந்து, ஒளிறுபு - ஒளிவிட்டு , மின்னும் - மின்னா நின்றது; (ஆதலால் நம் காதலர் வருவர்) எ-று.

ஏம் - ஏமம் : கடைக்குறை காதலர் - ஈண்டு மகளிரை உணர்த்திற்று. ‘அரவம்' என்றமையால் மழைக்கு முழக்கம் வருவித்துக் கொள்ளப்படும் மழையின் மின்னுக்கு வாள் உவம மாதலை, ‘அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய லாடவர், கழித் தெறிவாளி னழிப்பன விளங்கு மின்னுடைக் கருவியை யாகி நாளுங் ‘கொன்னே செய்தியோ அரவம் - மழையே' என்னும் அகப்பாட்டானும் அறிக. கண் வௌவல் - கண் வழுக்குறச் செய்தல். ஒளிறுபு; செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம் காதலர் வருவரென்பது வருவிக்கப்பட்டது.
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #13 on: July 07, 2012, 06:22:52 PM »
14 செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல வினிய நகும்.
 


(ப-ரை) வயங்கிழாய் - விளங்காநின்ற அணிகளையுடையாய்! முல்லை - முல்லைக்கொடிகள், இலக்கு - விளங்குகின்ற, எயிறு ஈன மகளிரின் பற்களைப் போலும் அரும்புகளை ஈனும் வகை, நறு தண்கார் - நல்ல குளிர்ந்த மேகம், மெல்ல இனிய நகும் - மெல்ல இனியவாக மின்னாநின்றன; (ஆதலால்) செல்வம் தரல்வேண்டி பொருள் தேடிக்கொள்ளுதலை விரும்பி, சென்ற - பிரிந்து சென்ற, நம் காதலர் - நமது தலைவர், வல்லே வருதல் - விரைந்து வருதலை, தெளிந்தாம் - தெளிய அறிந்தாம் எ-று.

வல்லே என்பதில் ஏகாரம் அசை; தேற்றமும் ஆம் தெளிந்தாம் : உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. எயிறு போலும் அரும்பினை எயிறென்றார். ‘முல்லையெயிறீன' என்பது ஐந்திணையெழுபது. நறு - நல்ல; இஃதிப்பொருட்டாதலைப் ‘பொலனறுந் தெரியல்' என்பதானும் அறிக.
 
                    

Offline Global Angel

Re: கார் நாற்பது
« Reply #14 on: July 07, 2012, 06:23:30 PM »
15 திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர்
குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத்
திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி
இன்குழ லூதும் பொழுது.



(ப-ரை) திருந்திழாய் - திருந்திய அணிகளையுடையாய், குருந்தின் - குருந்த மரத்தின், குவி இணர் உள் - குவிந்த பூங்கொத்துக்களின் உள்ளிடமே, உறை ஆக - தமக்கு உறைவிடமாக இருந்து, திருந்து இன் இளி - திருந்திய இனிய இளியென்னும் பண்ணை, வண்டுபாட வண்டுகள்பாட, இரு தும்பி - கரிய தும்பிகள், இன்குழல் ஊதும்பொழுது - இனிய குழலை ஊதாநிற்கும் இக்காலத்தில், காதலர் - நம் தலைவர், தீர்குவர் அல்லர் -நம்மை நீங்கியிருப்பாரல்லர் எ-று.

திருந்து இழை என்னும் இரு சொல்லும் தொக்க வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைப் பெயர் விளியேற்றுத் திருந்திழாய் என்றாயது; வயங்கிழாய் போல்வனவும் இன்ன. உறை என்னும் முதனிலைத் தொழிற் பெயர் உறையும் கடத்திற்காயிற்று; உள்ளுறை என்பதனை உறையுள் என மாறுதலும் ஆம். இளி - பஞ்சம சுரம். ‘குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, மயிலாடரங்கின் மந்திகாண் பனகாண்' என்பது மணிமேகலை.