Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 395  (Read 128 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 395

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 304
  • Total likes: 632
  • Karma: +0/-0
  • Gender: Female
  • இசையின் காதலி

நான் பேச வரல....கேட்கவும் வரல..

சும்மா நின்னு
உன்னைப் பார்க்க தான் வந்தேன்..

உன் முன்னாடி நின்னா, என்ன கேட்கணும்னே
எனக்கே தெரியல..

ஒரு காலத்துல நிறைய கேள்விகள் இருந்தது.
உன்னைக் கேள்வி கேட்கவும்
செஞ்சிருக்கேன்.

ஏன்?
எப்படி?
இன்னும் எத்தனை நாள்?
எனக்கு மட்டும் தானா?
இப்படி எல்லாம்…

ஆனா இப்ப,
அந்த கேள்விகள் எல்லாம்
சோர்ந்து
மௌனமா மாறிடுச்சு...

கடந்து வந்த பாதை
ரொம்ப நீளம்...

திரும்பிப் பார்க்க
சக்தி இல்ல...தெம்பும் இல்ல...

சிரிச்ச முகத்தோட
வாழ பழகிட்டேன்.
வேற வழி இல்லாம.
உள்ளுக்குள்ள வலி இருந்தாலும்,
அது
என்னோட தனிப்பட்ட விஷயமா
மாறிடுச்சு...

சரணடையணும்னு தான் ஆசை.
முழுசா...

எதையும் பிடிச்சுக்காம.

“நீயே போதும்”

என்று சொல்லும் அளவுக்கு.
ஆனா
என் கைகளில்
கடமைகள் இருக்கு...

என் தோள்களில்
பொறுப்புகள் இருக்கு...

அதை இறக்கி வைக்க
இடமில்லை,நேரமில்லை, சில நேரம்
அனுமதியும் இல்லை.

அதனால தான்
உன் காலடியில் கூட
முழுசா உடைய முடியல....

என் கண்ணீர் இப்ப
சத்தம் போடாது.
மௌனத்துக்குள்ள
கரைய பழகிட்டுச்சு...

நான் உன் கிட்ட
எதுவும் கேட்கல... பதில் வேண்டாம்னு
நானே முடிவு பண்ணிட்டேன்.

சுகம் வேண்டாம்....அதிர்ஷ்டம் வேண்டாம்....
ஒரு நாள் கூட
சுமை குறையலன்னாலும்,
இந்த மூச்சு
நிக்காம இருக்க
பார்த்துக்கோ...


உன் மேல இருக்க நம்பிக்கை
இன்னும் போகல.
அது
கூச்சலில்லாம
உள்ளுக்குள்ள
உயிரோட இருக்கு...


இன்னும் நான்
உன்னை விட்டுப் போகல.
போவதுக்கும்
மனம் வரல...

இல்ல…
போறதுக்கு தான்
இடம் இருக்கா சொல்லு..?

கேள்விகள் முடிஞ்ச இடத்துல,
நான் இப்ப
நின்னுட்டு இருக்கேன்.
மௌனமா.
அமைதியா. அவ்ளோதான்...

அதுவே
என் வேண்டுதல்.
« Last Edit: January 19, 2026, 10:32:38 PM by Thooriga »

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 240
  • Total likes: 797
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
நீயும் நானும் ஒன்றுதான்.

நீ ஆயுதம் ஏந்தி
அகிலத்தை காக்கிறாய் ,
நான் பொறுப்புகளை  ஏந்தி
என் அகத்தை  காக்கிறேன்
போர்க்களம் வேறு ,
பொறுப்பு ஒன்றே,
நீயும் நானும் ஒன்றுதான்.

உன் நெற்றியில் குங்குமம்
சக்தியின் அடையாளம் என்றால்,
என் நெற்றியில் வியர்வை
தியாகத்தின் சாட்சி.
ஒன்று பூஜையில் மின்னுகிறது,
ஒன்று உழைப்பில் கரைகிறது
அர்ப்பணிப்பு ஒன்று
அலங்காரம் வேறு
நீயும் நானும் ஒன்றுதான்.

நீ கோயில் கருவறையில்
மூடப்பட்ட கதவுக்குள் நிற்கிறாய்,
நான் சமையலறையின்
அடுப்பங்கரைக்குள் என்னை முடக்கி கொள்கிறேன் .
இடங்கள் வேறு,
சிறைகள் ஒன்றே ..
நீயும் நானும் ஒன்றுதான்.

உனக்கு அர்ச்சனை,
எனக்கு கடமை.
உனக்கு மலர்கள்,
எனக்கு மௌனம்.
வாழ்விடம் வேறு 
வலி ஒன்றே..
நீயும் நானும் ஒன்றுதான்.

நீ திருவிழா எனும் நாளில்,
உலகம் உன்னை வணங்கும்.
திருநாளைக் காண்கிறாய்;
நான் அன்னையர் தினம் மட்டும்  போற்றப்பட்டு,
வேறு நாட்களில் யாரும் காணாத,
தனிமையில்  வாழ்கிறேன்.
கோலங்கள் வேறு
தனிமை ஒன்றே
நீயும் நானும் ஒன்றுதான்.

நீ பத்துக் கரங்களால்
பாதுகாப்பை அளிக்கிறாய்,
நான் இரண்டு கரங்களால்
பசி போக்கி படியளிக்கின்றேன்  .
அளவுகள் வேறு
சுமை ஒன்றே
நீயும் நானும் ஒன்றுதான்.

அடுப்பின் நெருப்பில்
என் பொறுமை சோதிக்கப்படுகிறது,
வேண்டுதல்கள்  அழைப்பில்
உன் சக்தி சோதிக்கப்படுகிறது.
சோதனை வேறு,
பொறுப்புகள் ஒன்றே
நீயும் நானும் ஒன்றுதான்.

வாய் மூடி,
சொல் கேட்டு,
வேண்டுதல்களை நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறோம்
நீ கடவுளாக,
நான் பெண்ணாக.
பெயர்கள் வேறு,
நிலை ஒன்றே
நீயும் நானும் ஒன்றுதான்.

கடவுளாய் உலகத்தின் 'போற்றுதல்' எனக்கு வேண்டாம்,
மனிதியாய் இந்த மண்ணின் 'புரிதல்' ஒன்றே போதும்!
பீடத்தின் மகுடத்தை விட ,
என் சுதந்திரத்தின் சிறு சிறகே போதும்!

சரணடையும் பக்தியை விட,
என் சமத்துவத்தை ஏற்கும் மனிதம் போதும்!
பூசைக்குரிய சிலையாய் அல்ல ,
தோள்சேரும் சக உயிராய் மதிக்கப்படுதலே போதும்!"
ஏனெனில் நீயும் நானும் ஒன்றுதான்
« Last Edit: January 19, 2026, 10:37:33 PM by Madhurangi »

Offline Thenmozhi

  • Jr. Member
  • *
  • Posts: 81
  • Total likes: 553
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
            இறை பக்தி

அகிலத்தை படைத்த
  அற்புதமான சக்தி இறைவன்!
அன்பை கொடுத்து ஆச்சர்யத்தை     
  நிறைவேற்றுவார் இறைவன்!

அதர்மம் எங்கே தலைதூக்குகிறதோ
 அங்கே நிற்பார் இறைவன்!
நல்லவர்களுக்கு நன்மையே
 செய்வார் இறைவன்!
தீய செயல்கள் செய்வோரை
 நின்று கொல்வார் இறைவன்!

இறைைன் ஒருவனே
உருவமற்ற மாபெரும் சக்தியான 
 இறைவனுக்கு உருவம் கொடுத்து,   
  வழிபடுவது மானிடனின் இறைபக்தியே!
பக்தனிடத்தில் பரிவு, பாசம் காண்பித்து,
  துணிவு, சுறுசுறுப்பு கொடுப்பது
   இறை பக்தியே!
   
உலகக்  காலப்பரிமாணத்தைக்
 குறிப்பவர் இறைவனே!
படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல் 
 இயற்றுவது இறைவனே!

தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார் இறைவன்!
கடவுளின் இருப்பிடம் உருவச் சிலை அல்ல
மக்களின் எண்ணங்களிலும்     
    உணர்ச்சிகளிலும் மட்டுமே!

பசித்தோர் வாசலில் காத்திருக்க,
பால் அபிஷேகம் கோவிலில்!
பசித்தவன் உருவத்தில் தான் கடவுள் இருக்கிறான் என்று அறியாத
   பாழாய்ப்  போன மனிதர்!
பசித்தவன் பசியை போக்கு
  அது தான் இறை பக்தி!

உடுத்த உடை இன்றி பச்சிளம்
  குழந்தைகள் நடுரோட்டில்...
உள்ளிருக்கும் சிலையான சாமிக்கு
  ஆயிரம் பொன்னாடைகள்....
உடுத்திக்க உடை இன்றி தவிப்பவனுக்கு உடை கொடு அதுதான் இறை பக்தி!

தங்க இடமின்றி தவிக்கும்
  குழந்தைகள் எத்தனையோ....
தங்கத்தில் பிரம்மாண்ட கோயில்கள்!
தர்மம் தழைத்தோங்க  தங்கும் இடம்     
  கொடு அதுதான் இறை பக்தி!

இன்பம் வரும் போது கடவுள்
 இருக்கிறார் என்று நம்புகின்றாய்!
துன்பம் வரும்போது கடவுள்
 இல்லை என்று ஏன் சொல்கிறாய்?
இதிலிருந்து புரிகின்றது தன்னம்பிக்கை   
  உன்னிடம் இல்லையென்று!
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்!
அது தான் இறை பக்தி!

அனைத்து உயிர்கள் மீதும் அன்பு வை 
  அதுதான் இறை பக்தி!
ஆணவத்தில் ஆடாதே அழிவு நேரிடும்!
இன்சொல் பேசி அனைவரையும் மகிழ்வி   
  அதுதான் இறை பக்தி!
ஈகை உணர்வை உன்னிடத்தில்   
 வளர்த்துக்கொள் அது தான் இறை பக்தி!
உன்னைப்போல் மற்றவரையும் நேசி
  அது தான் இறை பக்தி!

பஞ்சமா பாதகங்களை பண்ணாதே!
பரணி போற்ற வாழ்ந்திடு
அது தான் இறை பக்தி!
இறை பக்தியுடன் நாமும்
இன்புற வாழ்ந்து,
 மற்றவரையும் வாழ வைப்போம்!









« Last Edit: January 19, 2026, 10:38:00 PM by Thenmozhi »

Offline Luminous

 கல்லும் கடவுளும் நடுவே ஒரு அம்மை                                                                                                                         கல்லில் செதுக்கிய
அம்மையின் காலடியில்
கண்ணீரை மறைத்துக்
கைகளைக் கூப்பும்
இன்னொரு அம்மை…

கணவன் என்ற நிழல்
குடிக்குள் கரைந்து போன நாளிலிருந்து
விடியலை வாங்க
இரவுகளைக் கடன் வாங்கியவள்.
கை குழந்தைகளாய் இருந்த
அவள் பிள்ளைகள்
இன்று புத்தக சுமையுடன்
பள்ளி வாசல் கடக்க
அவள் தோள்கள் தான்
பாலம் ஆனது.

வீட்டு வேலை,
எங்கே கிடைக்குமோ அங்கே வேலை,
காயும் கைகளில்
கனவு மட்டும்
உலராமல் வைத்தவள்.
“தனி பெண்” என்ற சொல்லால்
சமூகம் எறியும்
கூர்மையான பார்வைகள்,
வார்த்தைகள்,
மௌன அவமானங்கள்...
எல்லாவற்றையும்
பிள்ளைகளின் புன்னகைக்காக
விழுங்கிக் கொண்டவள்.

படிக்காத குறை
வாழ்க்கையில் வலியாக மாறினாலும்,
“என் பிள்ளைகள்
அதே வலியை
சுமக்கக் கூடாது”
என்ற வெறி ஆசை
அவள் மூச்சாகி நிற்கிறது.
அதனால்தான்
கோவிலின் இருட்டில்
விளக்கின் முன்
அவள் மண்டியிடுகிறாள்...
“துர்கையே… காளியே…
அநியாயத்தை அழிக்கும்
உன் தைரியத்தின்
ஒரு துளி போதும் தாயே.
தனி பெண்ணாக
இந்த சமூகத்தில்
மானத்தோடு
என் குடும்பத்தோடு
நான் வாழ
அருள் தா...

பாரதி கண்ட
புதுமைப் பெண்ணின்
உறுதியையும்,
தெளிவையும்,
தன்னம்பிக்கையையும்
என் மனத்தில் விதை.”

அவள் வேண்டுதல்
ஆண்களுக்கு எதிரல்ல..
கொடூர குணம் கொண்ட
சிலருக்கே.
நல்ல மனம் கொண்ட
ஆண்களையும்
அவள் மனம்
வணங்கத் தவறவில்லை.

இவள் கதையல்ல இது…
தெய்வம் சில நேரம்
சிலையிலிருந்து இறங்கி
அம்மாவாக உழைக்கும்
உண்மை.
    LUMINOUS 💜🧡💛💐😇
« Last Edit: January 19, 2026, 10:56:56 PM by Luminous »

Offline Ramesh GR

  • Newbie
  • *
  • Posts: 13
  • Total likes: 71
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ஒரு சொல் கொள்ளும் ஒரு சொல் வெல்லும் 🎊
கண்கள் மூடி புலம்ப உகந்தவன் நீ

யாரும் அரியா ரகசியம் சொல்ல ஏற்றவன் நீ

கோபப்பட்டு திட்ட உரிமையானவன் நீ

கொஞ்சி விளையாடி ஆசையை தீர்க்க குழந்தை நீ

என்னை நல்வழி படுத்தும் ஆசன் நீ

நீ இருக்கிறாய் என்று பலர் நீ இல்லை என்று சிலர்

இருகிறாயோ இல்லையோ நான் அறியேன் எனக்கு நீ வேண்டும் இறைவனே

அழும்போது நான் சாயும் தோள் உன்னுடையது

நான் குழம்பும் நேரத்தில் பிறக்கும் தெளிவு நீ

நான் ஆணவம் கொள்ளும் நேரம் என் ஆணவம் அழிப்பவன் நீ

 நீயே என் உற்ற தோழன்
அறிவு மிக்க ஆசான்
அன்பு காட்டும் அன்னை
அனுபவம் தரும் தந்தை
கோபிதுகொள்ளும் குழந்தை
அனைத்து நீ

 சொன்னதும் மனதின் குறை திர்ப்பவன்

இந்த புலம்பலும் கேட்டு பதிலும் தந்தான் அதையும் சொல்கிறேன்
 
இந்த பூமியில் பசி எதற்கு?

இன்பம் இருக்கையில் துன்பம் எதற்கு?

தாய் இருக்கையில் தாரம் எதற்கு?

நல்லவர் இருக்கையில் தீயவர் எதற்கு?

அவன் சொன்ன பதில்

பசியே பூமியின் சுழற்சிக்கு காரணம்.பசி இல்லையேல் உழைபில்லை மாற்றம் இல்லை எதுவும் இல்லை

இன்பத்தின் சுவை அறிய துன்பத்தின் வடுக்கள் தேவை

ஆணின் தலை சாய்ந்து அழ தேவைப்பட்ட இடம் அன்னை மடி அவள் போன பின் தாரதின் தோள்

முழுமையான நல்லவர் தீயவர் யாரும் இல்லை  நல்ல குணம் அதிகம் உள்ளவர் தீய குணத்தை கட்ட தீய குணம் கொண்டோர்

கண்ணீரோடு புலம்பி கண்ணீர் துடைத்து மனம் தேரும் போது கண்ணாடி கூட கடவுளே....

Offline PreaM

வேண்டாத தெய்வங்களை  வேண்டி விட்டேன்
வேண்ட  வந்தேனம்மா உன்னிடத்தில்
காணாத கஷ்டங்கள் கண்டேனம்மா
கண்களில் நீர்வழிய நின்றேனம்மா

தீராத வேதனை என்னிடத்தில்
தீர்த்து வையடி இந்த பெண்னிடத்தில்
வேதனை நீ தந்த சோதனையா
நீ சோதிக்க நான் என்ன பாதகியா

பட்ட கஷ்ட்டம் எல்லாம் போதுமம்மா
கண் திறந்தென்னை பாரும் அம்மா
கல்லான உன்னைக் காண வந்தேன்
சொல்லாலே சோகம் தீர்க்க வந்தேன்

உன் சோதனையால் வாழ்வு வேதனையே
சோறும் தண்ணியும் இறங்கலையே
விரதம் இருந்து வேண்டி வந்தும்
என் வேதனை  இன்னும் தீரலையே

கையேந்தி வேண்டி நிற்கின்றேன் பாரம்மா
காது கொடுத்து கொஞ்சம்  கேளம்மா
உன் கண்களை திறந்து பாரம்மா
நீ கருணை கொஞ்சம் காட்டம்மா

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 299
  • Total likes: 1183
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
கண்ணுக்கு தெரியாத தெய்வத்திடம்
நடமாடும் தெய்வத்தின் கையேந்தல்...
எதை எதிர் நோக்கி
இந்த யாசகன் கோலம்...
சுயநலமற்ற அந்த இதயத்தின்
உருக்கம் யாருக்காக...
நிச்சயம் அவளுக்காக அல்ல...

இடுப்பெலும்பு உடைய
தன் மக்களை ஈன்றவள்...
உதிரத்தை அமுதாக்கி
தன் சிசுவின் உயிரை வளர்த்தவள்.
ஞாயிற்று கிழமையும்
விடுமுறை அறியாதவள்...

தன் மழலையின் மகிழ்வுக்காக
கோமாளியாக உருமாறியவள்...
தன் பிணியிலும் ஓய்வின்றி
குழந்தைகளின் பசியாற்றியவள்....
பல பணிகளின் மத்தியிலும்
சோர்வின்றி சுழன்றவள்....

கந்தல் துணியாக
தன் தேகம் மாறினாலும்...
சுருக்கங்களின் அணிவகுப்பாக அவளின்
தோல் காட்சி அளித்தாலும்..
அவளின் இதய அரங்குகளில்
சுரக்கும் அன்பிலும்
ஒளியிழந்த கண்களில்
ஒளிர்ந்து மிளிரும் கருணையிலும்

ஓங்கி ஒலிக்கும் ஒரே
வேண்டுதல்
"இறைவா! என் புள்ளைங்கள
நல்லா வச்சுரு!
நோய் நொடி இல்லாம
நல்ல ஆரோக்கியத்த கொடு!
மனம் வாடாம சந்தோஷமா பாத்துக்கோ!"


என்ற தன் நிலையான வேண்டுதலை
யாசகமாக இறையிடம் வேண்டி
திரும்பி சென்றாள் முதியோர் இல்லத்திற்கு
« Last Edit: January 19, 2026, 11:26:32 PM by Yazhini »

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1885
  • Total likes: 5839
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

ஒரு காலத்தில்
மனிதன்
தெய்வங்களைத் தேடவில்லை
ஒளியை மட்டுமே
வணங்கி வந்தான்.

இருள்
அவனுக்குப் பயம்,
அந்தப் பயத்தில்
பிறந்தது அவனின்
முதல் தெய்வம்
சூரியன்.

வெளிச்சம் இருந்தால்
பாதை தெரியும்,
வாழ்க்கை நகரும்,
நம்பிக்கை வளரும்.

பிறகு…

மனிதன்
உருவம் தேடி
வழிபாட்டை
நோக்கி நகர்ந்தான்.

கல்லில் மஞ்சள் பூசி,
மரத்தில் சிவப்பு துணி கட்டி,
மண்ணில் சிலை வடித்து,
அங்கே பிறந்தது
மக்களுக்கான தெய்வங்கள்.

பிறகு…
மழைக்கு மாரியம்மன்,
திசைக்கு அய்யனார்,
நோய்க்கு கருப்பசாமி என
மனிதன்
தன் தெய்வங்களுக்கு
மனித உருவம் தந்தான்.

இவை
பயத்தால் வந்த
தெய்வங்கள் அல்ல,
இவை
நம்பிக்கையின் முகங்கள்.

“உருவம் ஏன்?”
என்று கேள்வி எழுந்த போது,
வழிபட
மனிதனுக்கு
ஒரு முகம் தேவைப்பட்டது.

அது தன்னைப் போல
உருவம் இருந்தால்
அன்பு கொள்வதற்கும்,
பயம் குறைவதற்கும்
எளிதாக இருக்கும் என்று
தன் முகத்தை
தெய்வங்களுக்கு தந்தான்.

“நமக்கு மேலே
ஒருவர் இருக்கிறார்”

என்ற எண்ணமே
அவனை
ஒழுக்கத்தின் பாதையில்
நடக்க வைத்தது.

அப்போதெல்லாம்
கோயில் இல்லை,
நன்கொடை இல்லை,
பூசாரி இல்லை.

மனிதனின்
இதயமே கருவறை,
மனிதனின்
பக்தியே பூஜை.

ஆனால் இன்று…

பெரிய கடவுள்களின்
வருகையால்
பக்தி
வணிகமாகிவிட்டது.

பணம் இருந்தால்
வழிபாடு,
இல்லையெனில்
அவமதிப்பு.

பக்திக்குள்
சாதி புகுந்தது,
கடவுள்கள் மனிதனை
பிரிக்கும் ஆயுதமானது.

மறந்துவிட்டோம்
மண்ணின் வாசம் கொண்ட
சிறு தெய்வங்களை.

மக்கள் தெய்வங்கள்
“நீ உயர்ந்தவன்”
“நீ தாழ்ந்தவன்”
என்று சொல்லவில்லை,
அவை சொன்னது
ஒன்றே ஒன்றுதான்
“நல்லவனாய் இரு.”

தெய்வங்களும், கடவுள்களும்
மனிதனால்
உருவாக்கப்பட்டவை,
அதை வைத்து
மனிதனை இழிவுபடுத்த
அவற்றை பயன்படுத்தாதே.

மூடநம்பிக்கை விட்டு
அறநெறி பிடித்து,
சுயஒழுக்கம் வளர்த்து
மனிதனே
மனிதனுக்கான
தெய்வமாக
மாறட்டும்.

நம்பிக்கை
ஒளியானால்
வாழ்வு பிரகாசிக்கும்
அதே நம்பிக்கை
மூடநம்பிக்கையானால்
முன்னேற்றம்
சிறைபடும்.

சூரியன்
தந்தையின் தோள்போல்
உலகம் முழுதும்
வெளிச்சம் சுமக்கும்.

பூமி
தாயின் மடிபோல்
எல்லா விதைகளையும்
அன்பாய் அணைக்கும்.

மழை
கருணையின் குரல்,
வறண்ட நெஞ்சங்களில்
உயிர் ஊற்றும்.

காற்று
உயிரின் மூச்சு,
கண்ணுக்குத் தெரியாமல்
உலகை தாங்கும்.

இந்த இயற்கையே
நமக்கான
உயர்ந்த
மக்கள் தெய்வங்கள்.

இயற்கை சீற்றம் கொண்டால்
உலகம் தாங்காது,
அதன் முன்
எந்த சக்தியும்
நிற்காது.

இயற்கையை வணங்குவோம்,
வாழ்வில் உயர்வு காணுவோம்.