பால் பணியாரம்
தேவையானவை: பச்சரிசி - அரை கப், உளுந்து - அரை கப், பால் - 1 லிட்டர், தேங்காய்ப்பால் - 1 கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை: அரிசியையும் உளுந்தையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, நைஸாக அரைத்து (வடைமாவு பதத்தில்), கடைசியில் உப்பைச் சேர்த்து நன்கு அரைத்தெடுங்கள். பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கால் பாகம் வற்றிய பிறகு, சர்க்கரை சேர்த்து, மேலும் 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள். அதில், ஏலக்காய்த் தூள், தேங்காய்ப்பால் சேர்த்து கலந்துவையுங்கள். கடாயில் எண்ணெய் காயவைத்து, அரைத்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, சுண்டைக்காயளவு கிள்ளி, எண்ணெயில் போட்டு, வெந்தவுடன் (சிவந்துவிடாமல்) எடுங்கள். எல்லா மாவையும் இதேபோல் பொரித்து வைத்துக்கொள்ளுங்கள். பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பாக இந்தப் பணியாரங்களை, ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் பாலில் கலந்து பரிமாறுங்கள். இது செட்டிநாட்டு ஸ்பெஷல் ஸ்வீட். குறிப்பு: மாவில் சிறிதளவேனும் அரிசியோ, உளுந்தோ அரைபடாமல் இருந்தால் பணியாரம் வெடிப்பதற்கு வாய்ப்புண்டு. எனவே, அரைக்கும்போதே மாவை அடிக்கடி தள்ளிவிட்டு, நன்கு அரையுங்கள்.