Author Topic: ~ புறநானூறு ~  (Read 106720 times)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #285 on: May 23, 2015, 10:29:02 PM »
புறநானூறு, 288. (மொய்த்தன பருந்தே!)
பாடியவர்: கழாத்தலையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: மூதின் முல்லை.
===========================================

மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டுடன் மடுத்து
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க
ஆர்அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர

நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து
அருகுகை .. .. .. .. .. .. மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே.

(பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை)

அருஞ்சொற்பொருள்:-

வரிந்த = வரி அமைந்த
வை = கூர்மை
நுதி = நுனி
மருப்பு = விலங்கின் கொம்பு
அண்ணல் = பெருமை, தலைமை
மடுத்தல் = குத்துதல்
பச்சை = தோல்
திண்பிணி = திண்ணியதாய்க் கட்டப்பட்ட
புலம் = இடம்
இடைப்புலம் = போர்க்களத்தின் நடுவிடம்
இரங்கல் = ஒலித்தல்
ஆர் = அருமை
அமர் = போர்
ஞாட்பு = போர்
தெறு = சினம்
மன்ற = நிச்சயமாக
துயல்வரும் = அசையும்
முயக்கு = முயங்கல் = தழுவல்
இடை = இடம்

இதன் பொருள்:-

மண்கொள=====> தெறுவர

மண்ணைக் குத்தியதால் வரிவரியாகக் கோடுகள் உள்ள கூரிய கொம்பினையுடைய பெருமைபொருந்திய நல்ல ஏறுகள் இரண்டைப் போரிடச் செய்து, வெற்றிபெற்ற ஏற்றின் தோலை உரித்து, மயிர் சீவாத அத்தோலால் போர்த்தப்பட்ட முரசு போர்க்களத்தின் நடுவே ஒலித்தது. தடுத்தற்கரிய போர் நடந்த அப்போர்க்களத்தில் சினம் தோன்ற

நெடுவேல்=====> பருந்தே

பகைவர் எறிந்த நெடியவேல் வந்து பாய்ந்ததால் ஒரு வீரன் நாணமுற்றான். குருதியோடு துடிக்கும் அவனது மார்பைத் தழுவவந்த அவன் மனைவியைத் தழுவவிடாமல் பருந்துகள் அவன் உடலை மொய்த்தன.

பாடலின் பின்னணி:-

ஒருகால், பெரும்போர் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போரில் வீரன் ஒருவனின் மார்பில் வேல் பாய்ந்தது. வேல் பாய்ந்த மார்புடன் அவன் நிலத்தில் வீழ்ந்தான். அவன் மனைவி அவனைத் தழுவும் நோக்கத்தோடு அவன் அருகில் வந்தாள். அவளைத் தழுவவிடாமல் அவன் உடலைப் பருந்துகள் மொய்த்தன. இக்காட்சியைப் புலவர் கழாத்தலையார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

கழாத்தலையார் 62-ஆம் பாடலில் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் அவ்விருவரும் இறந்ததைப் பாடியுள்ளார். இப்பாடலில் இவர் கூறும் வீரனைப் பற்றிய செய்திகளை அப்போரோடு சிலர் தொடர்புபடுத்துகிறார்கள். இப்பாடலில் குறிப்பிடப்படும் போருக்கும் பாடல் 62-இல் குறிப்படப்படும் போருக்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் எதுவும் இப்பாடலில் காணப்படவில்லை.

இப்பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை.

சிறப்புக் குறிப்பு:-

கேடயம் கையிலிருந்தும், தன்னை நோக்கிவந்த வேலைத் தடுத்துத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளாததால், “நாணுடை நெஞ்சத்து” என்று புலவர் கழாத்தலையார் குறிப்பிடுகிறார் போலும்.

போர் முரசு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தோல், வீரம் மிகுந்த ஏற்றினின்று எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது பழங்கால மரபு என்று இப்பாடலிலிருந்தும், “கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த, மாக்கண் முரசம்” என்ற மதுரைக் காஞ்சியின் வரிகளிலிருந்தும் (752-3) தெரியவருகிறது. ஏற்றின் தோல் மயிர் சீவாது பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #286 on: July 24, 2015, 11:43:05 AM »
புறநானூறு, 289. (ஆயும் உழவன்!)
பாடியவர்: கழாத்தலையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தெரியவில்லை.
துறை: தெரியவில்லை.
===========================================

ஈரச் செவ்வி உதவின ஆயினும்
பல்எருத் துள்ளும் நல்லெருது நோக்கி
வீறுவீறு ஆயும் உழவன் போலப்
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய
மூதி லாளர் உள்ளும் காதலின்

தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை
இவற்குஈக என்னும் அதுவும்அன் றிசினே;
கேட்டியோ வாழி பாண! பாசறைப்
பூக்கோள் இன்றென்று அறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே

அருஞ்சொற்பொருள்:-

செவ்வி = பருவம் (தக்க சமயம்)
வீறு = தனிமை, பகுதி
வீறுவீறு = வேறுவேறு
பீடு = பெருமை
பாடு = கடமை
காதலின் = அன்பினால்
முகத்தல் = மொள்ளல்
மண்டை = கள்குடிக்கும் பாத்திரம்
அன்றுதல் = மறுத்தல்
சின் - முன்னிலை அசை
மடிவாய் = தோல் மடித்துக் கட்டப்பட்ட வாய்
இழிசினன் = பறையடிப்பவன்

இதன் பொருள்:-

ஈரச் செவ்வி=====> காதலின்

ஈரமுள்ள பருவம் மாறுவதற்குமுன், முன்பு உழுவதற்கு உதவிய ஏறுகளில் சிறந்த ஏறுகளை உழவர்கள் வேறுவேறு விதமாய் ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது வழக்கம். அதுபோல், பெருமைபெற்ற பழமையான குடியில் பிறந்த, வழிவழியாகத் தங்கள் கடமைகளை நன்கு ஆற்றிய சிறந்த வீரர்களுள் ஒருவீரனுக்கு

தனக்கு=====> குரலே

தனக்காக முகந்து எடுத்துப் பொற்கலத்தில் தந்த கள்ளை “இவனுக்கு ஈக” என்று அரசன் அன்போடு கொடுத்துச் சிறப்பிப்பதைக் கண்டு வியப்பதை விடு; பாணனே, இன்று போர்க்குரிய பூக்கள் வழங்கப்படுகின்றன என்று இழிசினன் எழுப்பும் தண்ணுமைப் பறையின் ஓசையைக் கேட்பாயாக

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஒருவேந்தன் வெட்சிப்போர் நடத்துவதற்காகப் ( மற்றொரு நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்வதற்காகப்) போர்ப்பறை ஒலித்தது. அந்நாட்டிலுள்ள வீரர்கள் பலரும் வந்து கூடினர். வேந்தன் வீரர்களுடன் கூடி விருந்துண்டான். அப்போது, வீரர்களுக்குக் கள் வழங்கப்பட்டது. மறக்குடியில் தோன்றி வீரச் செயல்களைச் செய்த வீரர்களை அவரவர் தகுதிக்கேற்ப அரசன் புகழ்ந்தான். அங்கு, வீரர்கள் மட்டுமல்லாமல் சான்றோர் பலரும் இருந்தனர். வேந்தன் தனக்குப் பொற்கலத்தில் வழங்கப்பட்ட கள்ளை சிறப்புடைய வீரன் ஒருவனுக்கு அளித்து அவனைச் சிறப்பித்தான். இந்தக் காட்சியைக் கண்டு பாணன் ஒருவன் வியந்தான். கழாத்தலையார், அப்பாணனை நோக்கி, “பாணனே, வேந்தன் செய்யும் சிறப்பைக் கண்டு வியத்தலை விட்டுவிட்டு, போர்க்குரிய பூவைப் பெற்றுக்கொள்ளுமாறு புலையன் தண்ணுமைப் பறையை அடிக்கின்றான். அதைக் கேட்பாயாக.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #287 on: July 24, 2015, 11:44:00 AM »
புறநானூறு, 290. (மறப்புகழ் நிறைந்தோன்!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: குடிநிலை உரைத்தல்.
===========================================

இவற்குஈத்து உண்மதி கள்ளே; சினப்போர்
இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை
எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே:
மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே

அருஞ்சொற்பொருள்:-

இவற்கு = இவனுக்கு
ஈத்து = கொடுத்து
மதி – அசை
இனம் = கூட்டம்
இயற்றல் = புதிதாகச் செய்தல்
குருசில் = குரிசில் = தலைவன், அரசன்
நுந்தை = உன் தந்தை
ஞாட்பு = போர், போர்க்களம்
குறடு = வண்டிச்சக்கரத்தின் நடுப்பகுதி
மறம் = வீரம்
மைந்து = வலிமை
உறை = மழை
உறைப்புழி = மழை பெய்யும்பொழுது
ஓலை = ஓலைக்குடை

இதன் பொருள்:-

”அரசே, முதலில் கள்ளை இவனுக்கு அளித்து பின்னர் நீ உண்பாயாக; சினத்துடன் செய்யும் போரையும், யானைகளையும், நன்கு செய்யப்பட்ட தேர்களையுமுடைய தலைவனே! உன் பாட்டனை நோக்கிப் பகைவர்கள் எறிந்த வேல்களைக் கண்ணிமைக்காமல் இவன் பாட்டன் தாங்கிக்கொண்டான்; தச்சனால் வண்டியின் குடத்தில் செருகப்பட்ட ஆரக்கால்கள்போல் அவன் காட்சி அளித்து இறந்தான். வீரத்துடன் போர்செய்து புகழ்பெற்ற வலிமையுடைய இவன், மழை பெய்யும்பொழுது நம்மை அதனின்று காக்கும் பனையோலையால் செய்யப்பட்ட குடைபோல் உன்னை நோக்கி வரும் வேல்களைத் தாங்கி உன்னைக் காப்பான்.”

பாடலின் பின்னணி:-

ஒருஅரசனின் ஆநிரைகளை மற்றொரு அரசனின் வீரர்கள் கவர்ந்தனர். ஆநிரைகளை இழந்த அரசன் அவற்றை மீட்பதற்காகக் கரந்தைப் போர் நடத்த விரும்பினான். அவன் தன்நாட்டிலுள்ள வீரர்களைப் போருக்கு வருமாறு அழைத்தான். அரசனின் அழைப்பிற்கிணங்கி, வீரர்கள் பலரும் ஒன்று கூடினர். போருக்குப் போகுமுன் அரசன் வீரர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் வீரச் செயல்களைப் புகழ்வது வழக்கம். அவ்விருந்தில், ஒளவையாரும் கலந்துகொண்டார். வீரர்களைப் புகழும் பணியை ஒளவையார் மேற்கொண்டார். ஒரு வீரனின் குடிப்பெருமையைக் கூற விரும்பிய ஒளவையார், “அரசே, இவன் பாட்டன் உன் பாட்டனின் உயிரைக் காப்பதற்காக, வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள்போல் தன் உடல் முழுதும் வேல்கள் பாய்ந்து இறந்தான். இவனும், தன் பாட்டனைப்போல், உன்னை மழையிலிருந்து காக்கும் பனையோலைக் குடைபோலக் காப்பான்.”

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #288 on: November 25, 2015, 07:07:56 PM »
புறநானூறு, 291. (மாலை மலைந்தனனே!)
பாடியவர்: நெடுங்களத்துப் பரணர்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: வேத்தியல்.
===========================================

சிறாஅஅர்! துடியர்! பாடுவன் மகாஅஅர்
தூவெள் அறுவை மாயோற் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்;
என்போற் பெருவிதுப்பு உறுக வேந்தே;
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை
மணிமருள் மாலை சூட்டி அவன்தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே.

அருஞ்சொற்பொருள்:-

சிறாஅஅர் = சிறுவர்
துடியர் = துடி என்னும் பறயை அடிப்பவர்
மகாஅஅர் = மக்கள்
தூ = தூய்மை
வெள் = வெண்மையான
அறுவை = ஆடை
மாயோன் = பெரியவன் (கரியவன்)
இரு = பெரிய
இரும்புள் = பெரிய பறவை
பூசல் = ஆரவாரம்
ஓம்புதல் = தவிர்தல், நீக்கல்
விளரி = ஒரு பண்
கொட்பு = சுழற்சி
கடிதல் = ஓட்டுதல்
விதுப்பு = நடுக்கம்
கொன் = பயனின்மை (எதுவும் இல்லாமல் இருத்தல்)
மருள் = மயக்கம் (கலத்தல்)
காழ் = மணிவடம்
மலைதல் = அணிதல்

இதன் பொருள்:-

சிறுவர்களே! துடி அடிப்பவர்களே! பாடும் வல்லமைபெற்ற பாணர்களே! தூய வெள்ளாடை உடுத்திய கரிய நிறமுடைய என் கணவனை நெருங்கியுள்ள பெரிய பறவைக் கூட்டத்தின் ஆரவாரத்தை நீக்குவீர்களாக; நானும் விளரிப் பண்ணைப் பாடிச் சுற்றிவந்து, வெள்ளை நிறமுள்ள நரிகள் அவனுடலை நெருங்கவிடாமல் ஓட்டுவேன். வேந்தனுக்காக எந்தக் காரணமுமின்றித் தன் உயிரைத் தர விரும்பும் என் தலைவனுக்கு, அவ்வேந்தன் தன் மார்பில் இருந்த பலமணிகள் கலந்த மாலையை அணிவித்து என் கணவன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டான். என் தலைவன் இறந்ததால் நான் வருத்தத்தோடு நடுங்குவதைப்போல் அவ்வேந்தனும் வருந்தி நடுங்கட்டும்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், அரசன் ஒருவன் தன் பகைவர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்குப் படை திரட்டினான். அரசன் ஆணைப்படி வீரர்கள் பலரும் கரந்தைப் போருக்குப் புறப்பட்டனர். வீரர்கள் போருக்குப் போகுமுன், அவர்களுள் சிறப்புடைய வீரன் ஒருவன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டு தான் அணிந்திருந்த பலவடங்களுடைய மாலையை அவ்வீரனுக்கு அரசன் அணிவித்தான். அதைக்கண்டவர்கள் அவ்வீரனின் மனைவியிடம் அரசன் அவள் கணவனுக்குத் தன் மாலையை அணிவித்ததைத் தெரிவித்தனர். பின்னர், அவ்வீரன் போரில் இறந்தான். அவன் மனைவி அவனைக் காணப் போர்க்களத்திற்குச் சென்றாள். அரசன் அணிவித்த மாலையை அவள் கணவன் அணிந்திருப்பதைக் கண்டாள். தன் கணவன் இறந்ததால் தான் வருந்துவதைப் போலவே அரசனும் வருந்துவானாக என்று அவள் கூறுவதாக இப்பாடலில் நெடுங்களத்துப் பரணர் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

போருக்குச் செல்லும் வீரர்கள் வெண்ணிற ஆடை அணிந்து செல்வது மரபு என்பது இப்பாடலிலிருந்தும், ”வெளிது விரித்து உடீஇ” என்று ஒக்கூர் மாசாத்தியார் பாடல் 279-இல் கூறியிருப்பதிலிருந்தும் தெரியவருகிறது.

-- ஆசிரியர் பக்கம் -- — with அவளதிகாரம், தாமரை-பாடல் ஆசிரியர் and அழகோவியம்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #289 on: November 25, 2015, 07:09:20 PM »
புறநானூறு, 292. (சினவல் ஓம்புமின்!)
பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வஞ்சி.
துறை: பெருஞ்சோற்று நிலை.
===========================================

வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமுறை வளாவ விலக்கி
வாய்வாள் பற்றி நின்றனென் என்று
சினவல் ஓம்புமின்; சிறுபுல் லாளர்!
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
”என்முறை வருக” என்னான்; கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.

அருஞ்சொற்பொருள்:-

ஏந்திய = எடுத்த
தீ = இனிமை
தண் = குளிர்ந்த
நறவம் = மது
முறை = வரிசை, ஒழுங்கு
வளாவல் = கலத்தல்
வாய்வாள் = தப்பாமல் வெட்டும் வாள்
ஓம்புதல் = தவிர்தல்
புல்லாளர் = குறைந்த ஆண்மையுடைவர்கள் ( வீரம் குறைந்தவர்கள்)
ஈண்டு = இவ்விடம்
கம் – விரைவுக் குறிப்பு

இதன் பொருள்:-

”அரசனுக்குக் கொடுப்பதற்காக முகந்து எடுத்த இனிய குளிர்ந்த கள்ளை நாங்கள் முறைப்படிக் கலந்து கொடுத்தோம். இவன், அதை மறுத்துத், தன் குறிதவறாத வாளைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான்” என்று அவன் மீது சினம் கொள்ளாதீர்கள். வீரத்தில் அவனைவிடக் குறைந்தவர்களே! இங்கே எவ்வாறு வீரத்தோடு அவன் வாளைப் பற்றினானோ அதுபோல் போர்க்களத்திலும் செய்வான்; ”எனக்குரிய முறை வரட்டும்.” என்று காத்திருக்காமல், விரைந்து முன்னே எழுகின்ற பெரிய படையைத் தடுத்து விலக்கி அங்கே நிற்கும் வீரம் (ஆண்மை)உடையவன் அவன் என்பதை அறிவீர்களாக.

பாடலின் பின்னணி:-

ஒருகால், உண்டாட்டு ஒன்று நடைபெற்றது. அவ்விடத்து, வீரன் ஒருவன் முறை தவறி, அரசனுக்குக் கொடுத்த கள்ளைத் தனக்குக் கொடுக்கவேண்டுமென்று கூறி வாளைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான். அவன் செயலால், அங்கிருந்தவர்கள் சினமுற்றனர். அதைக் கண்ட புலவர் விரிச்சியூர் நன்னாகனார், “அவ்வீரன் கள் குடிப்பதில் மட்டும் முந்திக் கொள்பவன் அல்லன்; அவன் போரிலும் அப்படித்தான். ஆகவே, அவன் மீது சினம் கொள்ள வேண்டா.” என்று அங்கிருந்தவர்களுக்கு அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

“அரசனுக்கு முன்னதாக, எனக்குக் கள்ளைத் தருக.” என்று கூறியவன் வலிமையிலும் வீரத்திலும் சிறந்தவன். அவன் போர்க்களத்தில் விரைந்து சென்று எதிர்த்துவரும் பெரும்படையை விலக்கிப் போரிடும் பேராண்மையுடையவன். அவன் சிறப்பை அறியாமல் அவன் மீது சினம் கொண்டவர்களின் அறியாமையைக் கருதி, அவர்களைச் ”சிறுபுல்லாளர்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #290 on: November 25, 2015, 07:12:14 PM »
புறநானூறு, 293. (பூவிலைப் பெண்டு!)
பாடியவர்: நொச்சிநியமங்கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: காஞ்சி.
துறை: பூக்கோள் காஞ்சி.
===========================================

நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேர்எழில் இழந்து வினைஎனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ?
அளியள் தானே பூவிலைப் பெண்டே!

அருஞ்சொற்பொருள்:-

நிறப்படை = குத்துக்கோல் (அங்குசம்)
ஒல்கா = தளராத
குறும்பு = அரண்
குறும்பர் = அரணுக்குப் புறத்தே நின்று போர் செய்யும் பகைவர்
ஏவல் = கட்டளை
தண்ணுமை = ஒருவகைப் பறை
இரங்கல் = ஒலித்தல்
எழில் = தோற்றப் பொலிவு
வினை = போர்
அளியள் = இரங்கத் தக்கவள்

இதன் பொருள்:-

குத்துக்கோலுக்கும் அடங்காத யானையின் மேலே இருந்து தண்ணுமை என்னும் பறையை அறைவோன், அரணுக்கு வெளியே இருந்து போர் செய்யும் பகைவரை எதிர்த்துப் போரிடுவதற்கு வருமாறு, போருக்கு அஞ்சி நாணி இருக்கும் ஆண்களுக்கு கட்டளையிடும் பறையின் முழக்கம் கேட்கிறது. ஆகவே, இங்குள்ள ஆண்கள் அனைவரும் போருக்குப் போகப்போகிறார்கள். இனி இங்குள்ள என்னைப் போன்ற மறக்குலப் பெண்கள் பூச் சூட மாட்டார்கள். இந்தப் பூ விற்கும் பெண், எங்களைவிட அதிகமாகத் தோற்றப் பொலிவிழந்து காணப்படுகிறாள். அவள் பூவை விற்பதற்கு, போருக்குப் போகாதவர்கள் இருக்கும் வீடுகளுக்குப் போவாள் போலும்; அவள் இரங்கத் தக்கவள்.

பாடலின் பின்னணி:-

ஓரூரில் இருந்த அரசனின் அரண்களைப் பகை அரசன் ஒருவன் முற்றுகையிட்டான். அதனால் போர் தொடங்கியது. வீரர்கள் அனைவரையும் போருக்கு வருமாறு பறை சாற்றப்படுகிறது. வீரர்கள் பலரும் ஏற்கனவே போருக்குச் சென்றுவிட்டார்கள். போருக்கு அஞ்சி இன்னும் தங்கள் வீடுகளிலேயே இருக்கும் ஆண்கள் வெட்கப்படும்படி அந்தப் பறை ஒலிக்கிறது. வீரர்கள் போருக்குச் சென்றால், அவர்களின் மனைவியர் அவர்களைப் பிரிந்திருக்கும் நாட்களில் தங்கள் தலையில் பூ அணியாமல் இருப்பது மரபு. போருக்குச் சென்ற வீரர்களின் வீடுகள் உள்ள இடத்தில் பெண் ஒருத்தி பூ விற்க வந்தாள். அங்குள்ள மறக்குலப் பெண் ஒருத்தி, ”இங்கு யாரும் பூச் சூட மாட்டர்களே. இவளிடத்தில் பூ வாங்குவார் எவரும் இல்லையே; இவள் நிலைமை மிகவும் இரங்கத்தக்கது.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

தன் கணவன் போருக்குச் சென்றால் அவன் திரும்பி வரும்வரை மனைவி தன் தலையில் பூச்சூடாமல் இருப்பது மரபு என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.

பார்ப்பனர், நோய்வாய்ப்பட்டோர், ஆண்பிள்ளைகள் இல்லாதோர் ஆகிய ஒரு சில ஆண்கள் மட்டுமே போருக்குச் செல்லமாட்டார்கள். ஆனால், அத்தகையவர் வெகு சிலரே. ஆகவே, பூ விற்கும் பெண் அத்தகையவர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றுதான் பூ விற்க வேண்டும். அதனால்தான், அவள் மிகவும் இரங்கத் தக்கவள் என்று மறக்குலப் பெண் கருதுவதாகப் புலவர் குறிப்பிடுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #291 on: November 25, 2015, 07:15:12 PM »
புறநானூறு, 294. (வம்மின் ஈங்கு!)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை மறம்.
===========================================

வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்
குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
இறையும் பெயரும் தோற்றி நுமருள்
நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்குஎனப்
போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
அரவுஉமிழ் மணியின் குறுகார்;
நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே

அருஞ்சொற்பொருள்:-

மதியம் = மதி
கண்கூடு = கண்குழி (கண்)
இறுத்தல் = தங்குதல்
கண்கூடு இறுத்த = கண்களை மூடுவதற்காக (உறங்குவதற்காக)
மருள் - உவமை உருபு
தழீஇ = உள்ளடக்கிக்கொண்டு
கூற்று = இயமன்
அழுவம் = போர், போர்க்களம்
இறை = இறைவன் = அரசன்
பெயர் = புகழ்
நுமர் = உங்களவர் (உம்மவர்)
நாண்முறை = வாழ்நாள்
தபுத்தல் = கெடுத்தல்
சிறை = பக்கம்
அரவு = பாம்பு
மணி = இரத்தினம்
நிரை = ஒழுங்கு (வரிசை)
தார் = மாலை
கேள்வன் = கணவன்

இதன் பொருள்:-

வெண்மையான குடைபோலத் திகழும் திங்கள் வானத்தின் மேலிருந்து ஒளி வீசிக் கொண்டிருந்தது. வீரர்கள் உறங்குவதற்காகக் கட்டப்பட்ட கடல்போன்ற பாசறையில் புதிதாகச் செய்யப்பட்ட படைக்கருவிகளுடன் கொலைத் தொழிலைச் செய்யும் வீரர்கள் கூடியிருந்தனர். நம்மவர் அயலவர் என்று வேறுபாடு காணமுடியாத அளவுக்குக் கடுமையாகப் போர் நடைபெற்றது. அப்போர்க்களத்தில், உன் கணவன், “உங்கள் அரசனின் பெருமையையும் உங்கள் புகழையும் கூறி, உங்களுக்குள் யாருக்கெல்லாம் வாழ்நாள் முடியப் போகிறதோ அவர்கள் என்னோடு போரிட வாருங்கள்.” என்று கூறி, போரிட வந்தவர்களையெல்லாம் வென்று ஒரு பக்கம் நின்றான். பாம்பு உமிழ்ந்த மணியை (நாகரத்தினத்தை) எடுக்க எவரும் நெருங்காததைப்போல், வரிசையாக மாலையணிந்த மார்பையுடைய உன் கணவனை எவரும் நெருங்கவில்லை.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஓரூரில் கடும்போர் நிகழ்ந்தது. தம்மவர் என்றும், அயலார் என்றும் வேறுபாடு அறியாமல் வீரர்கள் போர் செய்தனர். அப்போரில், தானைத் தலைவன் ஒருவன் மிகுந்த வீரத்தோடு போர் செய்தான். அத்தலைவன், பகைவர்களை நோக்கி, “உங்கள் அரசனின் பெருமையையும் உங்கள் புகழையும் சொல்லிக்கொண்டு வந்து என்னோடு போரிடுங்கள்” என்று கூறி எதிர்த்து வந்தவர்களையெல்லாம் வென்றான். பின்னர், பகைவர்களைப் பார்த்து, “ உங்களில் யாருக்கு வாழ்நாட்களின் எல்லை முடிந்ததோ அவர்கள் என்னோடு போரிட வருக.” என்று பகைவர்களை போருக்கு அழைத்து ஒரு பக்கம் நின்றான். அவனை நெருங்குவதற்கு பகைவர் அஞ்சினர். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் பெருந்தலைச் சாத்தனார், அத்தலைவனின் மனைவியிடம் அதைக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

இங்கு வெண்குடை என்று குறிப்பிடப்பட்டது அரசனின் வெண்கொற்றக்குடையாகும். திங்களை அரசனின் வெண்கொற்றக்குடைக்கு ஒப்பிட்டதால், அரசனின் குடை திங்ககளைவிடச் சிறப்பானதாகப் புலவர் கருதுவதாகத் தெரிகிறது.

உயிரை உடம்பினின்று நீக்குவது கூற்றின் (இயமனின்) செயல். அச்செயலைப் படைவீரர்களும் செய்வதால், அவர்களைக் “கூற்று வினை ஆடவர்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #292 on: November 25, 2015, 07:16:41 PM »
புறநானூறு, 295. (ஊறிச் சுரந்தது!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: உவகைக் கலுழ்ச்சி.
===========================================

கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
வெந்துவாய் வடித்த வேல்தலைப் பெயரித்
தோடுஉகைத்து எழுதரூஉ துரந்துஎறி ஞாட்பின்
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
சிறப்புடை யாளன் மாண்புகண்டு அருளி
வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே

அருஞ்சொற்பொருள்:-

கிளர்தல் = எழுதல்
கட்டூர் = கட்டப்பட்ட ஊர் (பாசறை)
நாப்பண் = இடையே
வடித்த = கூர்மையாக்கிய
தோடு = தொகுதி (கூட்டம்)
உகைத்தல் = செலுத்துதல்
துரந்து = சென்று
ஞாட்பு = போர், போர்க்களம்
போழ்தல் = பிளத்தல்
வாய் = இடம்
அழுவம் = போர், போர்க்களம்
பூட்கை = கொள்கை
விடலை = வீரன்

இதன் பொருள்:-

கடல் எழுந்தாற்போல் அமைந்துள்ள பெரிய பாசறையோடு கூடிய போர்க்களத்தின் நடுவில், தீயால் சூடாக்கிக் கூர்மையாகத் தீட்டிய வேலைப் பகைவர்பால் திருப்பி, தன் படையை ஏவித் தானும் எழுந்து சென்று, அம்பும் வேலும் செலுத்திப் பகைவரைக் கொல்லும் போரில் எதிர்த்து வரும் பகைவர் படையைப் பிளந்து தான் போர் செய்வதற்கு இடமுண்டாகுமாறு குறுக்கிட்டுத் தடுத்த வீரன் ஒருவன் படைகளின் நடுவில் துண்டுபட்டு வேறு வேறாகக் கிடந்தான். புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையையுடைய அவ்வீரனின் தாய்க்குத் தன் மகன் வீரமரணம் அடைந்ததைக் கண்டதால், அன்பு மிகுந்தது. அவளுடைய வற்றிய முலைகள் மீண்டும் பாலூறிச் சுரந்தன.

பாடலின் பின்னணி:-

ஒருகால், இரு அரசர்களிடையே பெரும்போர் நடைபெற்றது. அப்போரில், வீரன் ஒருவன் சிறப்பாகப் போரிட்டான். அவன் உடல் பல துண்டுகளாகப் பகைவர்களால் வெட்டப்பட்டது. அவன் இறந்த செய்தி அவன் தாய்க்குத் தெரியவந்ததது. அவன் தாய், தன் மகனின் உடலைக் காணப் போர்க்களத்திற்குச் சென்றாள். போர்க்களத்தில், அவன் வீரமரணம் அடைந்ததைப் பார்த்த அத்தாய் பெருமகிழ்ச்சி அடைந்தாள். உனர்ச்சிப் பெருக்கால் அவள் முலைகளினின்று பால் சுரந்தது. இச்செய்தியை ஒளவையார் இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

போர்வீரர்கள் தங்குவதற்காகப் புதிதாகக் கட்டப்படும் பாசறை கட்டூர் என்று அழைக்கப்பட்டது. போர்க்களத்தில் கொல்லரும் உடனிருந்து வேல் போன்ற படைக் கருவிகளைச் செம்மைப் படுத்திக் கொடுத்தனர் என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #293 on: November 25, 2015, 07:17:40 PM »
புறநானூறு, 296. (நெடிது வந்தன்றால்!)
பாடியவர்: வெள்ளை மாறனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: ஏறாண் முல்லை.
===========================================

வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ?
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?

அருஞ்சொற்பொருள்:-

வேம்பு = வேப்ப மரம்
சினை = கிளை
காஞ்சி = ஒரு பண்
ஐயவி = வெண்கடுகு
கல் – ஆரவாரக் குறிப்பு
உடன்றல் = சிதைத்தல், பொருதல், சினக் குறிப்பு
எறிதல் = வெட்டுதல், வெல்லுதல்
நெடுந்தகை = பெரியோன்

இதன் பொருள்:-

வேப்ப மரத்தின் கிளைகளை ஒடிப்பதும், காஞ்சிப் பண் பாடுவதும், நெய்யுடைய கைய்யோடு வெண்கடுகைப் புகைப்பதும் ஆகிய நிகழ்ச்சிகள் எல்லா வீடுகளிலும் ஆரவாரமாக நடைபெறுகின்றன. பகை வேந்தனைச் சினந்து அவனை வீழ்த்தாமல் மீளேன் என்று இவன் போர் புரிகிறான் போலும். அதனால்தான் இப்பெரியோனின் தேர் காலம் தாழ்த்தி வருகிறது போலும்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஓரூரில் போர் நடைபெற்றது. அப்போர் முடியும் தருவாய் நெருங்கியது. அச்சமயம், போருக்குச் சென்ற வீரர்கள் பலரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர். அவர்களின் வீடுகளில், பெண்டிர் வேப்பிலகளை வீட்டின் கூரையில் செருகினர்; காஞ்சிப் பண் பாடல்களைப் பாடினர்; கடுகுகளைப் புகைத்தனர். இவ்வாறு, எல்லா வீடுகளிலும் ஆரவாரம் மிகுதியாக இருந்தது. ஒரு வீட்டில் மட்டும், போருக்குச் சென்ற ஆண்மகன் இன்னும் திரும்பி வரவில்லை. அவன் பகைவேந்தனைக் கொன்றுவிட்டுத்தான் திரும்புவான் போலும் என்று அவன் தாய் நினைக்கிறாள். இக்காட்சியை, புலவர் வெள்ளை மாறனார் இப்பாடலாக இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

வீடுகளில் வேப்பிலையைச் செருகுவதும், காஞ்சிப் பண்ணைப் பாடுவதும், ஐயவி புகைப்பதும், போரில் காயமடைந்தவர்களின் புண்களை ஆற்றுவதற்காக நடைபெறும் செயல்களாகும்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #294 on: November 25, 2015, 07:18:44 PM »
புறநானூறு, 297. (தண்ணடை பெறுதல்!)
பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வெட்சி.
துறை: உண்டாட்டு.
===========================================

பெருநீர் மேவல் தண்ணடை எருமை
இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
கோள்இவண் வேண்டேம் புரவே; நார்அரி

நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித்
துறைநணி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்
மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே

அருஞ்சொற்பொருள்:-

மேவல் = விரும்பல்
தண்ணடை = மெதுவான நடை
இரு = பெரிய
மருப்பு = கொம்பு
உறழ்தல் = ஒத்தல்
பை = பசிய
கோது = தோடு, சக்கை
கோல் = திரட்சி
அணை = படுக்கை
மரையா = காட்டுப்பசு
துஞ்சும் = தூங்கும்
சீறூர் = சிற்றூர்
கோள் = கொள்ளுதல்
இவண் = இங்கே (இவ்விடத்து)
புரவு = கொடை
நனை = பூ
நறவு = கள்
துறை = நீர்த்துறை
நணி = அணிமையான இடம்
கெழீஇ = பொருந்தி
கம்புள் = சம்பங்கழி (காட்டுக் கோழி)
தண்ணடை = மருதநிலத்தூர்
உரித்து = உரியது
வை = கூர்மை
நுதி = நுனி
வன் = வலிய
போந்தை = பனை

இதன் பொருள்:-

பெருநீர்=====> நார்அரி

மிகுந்த நீரில் இருக்க விரும்பும் மெல்லிய நடையையுடைய எருமையின் பெரிய கொம்பு போன்ற நெடிய முற்றுகளையுடைய பசிய பயற்றின் தோட்டைப் படுக்கையாகக் கொண்டு கன்றுடன் கூடிய காட்டுப்பசு உறங்கும் சிறிய ஊர்களைக் கொடையாகக் கொள்வதை விரும்பமாட்டோம். நாரால் வடிக்கப்பட்டு

நனைமுதிர்=====> மோர்க்கே

பூக்களையிட்டு முதிரவைத்த சாடியிலுள்ள கள்ளை வாழ்த்தி, நீரின் பக்கத்தே பொருந்தி காட்டுக்கோழிகள் முட்டையிடும் மருதநிலத்தூர்களைப் பெறுவதும், கூர்மையான நுனியையுடைய நீண்ட வேல் தைத்து மார்புடன் மடல் நிறைந்த வலிய பனைமரம்போல் நிற்கும் வீரர்க்கு உரியதாகும்.

பாடலின் பின்னணி:-

பகை அரசன் ஒருவன் மற்றொரு அரசனின் நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்வதற்காகத் (வெட்சிப் போர் புரிவதற்காகத்) தன் படைவீரர்களைத் திரட்டினான்; அவர்களுக்கு உண்டாட்டு நடத்தினான். அவ்வமயம், போரில் வெற்றி பெற்றால் அரசனிடமிருந்து எதைப் பரிசாகப் பெறுவது சிறந்தது என்று வீரர்களுக்கிடையே உரையாடல் நிகழ்ந்தது. அங்கிருந்து அதைக் கேட்ட புலவர் ஒருவர் வீரர்களுக்கிடையே நடைபெற்ற அந்த உரையாடலை இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

ஒரு வீரன் தனக்கு அளிக்கப்படும் பொருளை ”வேண்டா” என்று மறுக்கும் பொழுது கள்ளை வாழ்த்துவது மரபு என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார்.

”கள்ளை வாழ்த்தி, சிறிய ஊர்கள் வேண்டா என்று கூறி, மருதநிலத்தூர்களைப் பெறுவதும் வீரர்க்கு உரியது” என்று கூறியதால், மருதநிலத்தூர்களைப் பெறாமாலும் இருக்கலாம் என்ற கருத்தும் தோன்றுகிறது. அதனால், வீரர்கள் எப்பொழுதும் வீரத்தோடு போர்புரிவதால் வரும் புகழையே தமக்கு உரியதாகக் கருதினார்கள் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது. (ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, புறநானூறு, பகுதி 2, பக்கம் 194)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #295 on: November 25, 2015, 07:19:54 PM »
புறநானூறு, 298. (கலங்கல் தருமே!)
பாடியவர்: ஆவியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: நொச்சி.
துறை: குதிரை மறம்.
===========================================

எமக்கே கலங்கல் தருமே; தானே
தேறல் உண்ணும் மன்னே; நன்றும்
இன்னான் மன்ற வேந்தே; இனியே
நேரார் ஆரெயில் முற்றி
வாய்மடித்து உரறிநீ முந்துஎன் னானே

அருஞ்சொற்பொருள்:-

கலங்கல் = கலங்கிய கள்
தேறல் = தெளிந்த கள்
நன்று = பெரிது
இன்னான் = அன்பில்லாதவன்
நேரார் = பகைவர்
ஆர் = அரிய
எயில் = அரண்
முற்றி = சூழ்ந்து
உரறுதல் = ஒலியெழுப்புதல்
வாய்மடித்து உரறி = சீழ்க்கையடித்து

இதன் பொருள்:-

முன்பெல்லாம் எமக்குக் களிப்பை மிகுதியாகத் தரும் கலங்கிய கள்ளைக் கொடுத்துவிட்டுத் தான் களிப்பைக் குறைவாக அளிக்கும் தெளிந்தகள்ளை அரசன் உண்பான். அத்தகையவன், பகைவருடைய கொள்ளற்கரிய அரணைச் சூழ்ந்து போரிடும் இந்நேரத்தில், வாயை மடித்துச் சீழ்க்கையடித்து ஒலியெழுப்பி “நீ முந்து” என்று எங்களை ஏவுவதில்லை. ஆகவே, இப்பொழுது எம் அரசன் பெரிதும் அன்பில்லாதவனாகிவிட்டான்.

பாடலின் பின்னணி:-

அரசன் ஒருவன் தன் படைவீரர்களுடன் போருக்குப் புறப்படுகிறான். அவ்வேளையில், வீரர்களுக்குக் களிப்பை அதிகமாகத் தரும் கலங்கிய கள்ளைக் கொடுத்துத் தான் களிப்பை குறைவாக அளிக்கும் தெளிந்த கள்ளை உண்ணும் தன் அரசன், இப்பொழுது, போரில், “ நீங்கள் முதலிற் போங்கள்” என்று வீரர்களுக்குக் கட்டளையிடாமல் தானே முதலில் செல்லும் வீரமுடையடையவனாக இருக்கின்கிறானே என்று வீரன் ஒருவன் வியப்பதை, இப்படலில் ஆவியார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

மிகுந்த களிப்பைத் தரும் தெளிந்த கள்ளைத் வீரர்களுக்குத் தருவது மன்னன் வீரர்கள் மீது கொண்ட அன்பைக் காட்டுகிறது. வீரர்களை முதலில் போருக்கு அனுப்பாமல் மன்னன் தானே முதலில் போவது அவன் வீரத்தைக் குறிக்கிறது. ஆகவே, மன்னன் அன்பிலும் வீரத்திலும் சிறந்தவன் என்பதை வீரன் புகழ்கிறான்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #296 on: November 25, 2015, 07:21:15 PM »
புறநானூறு, 299. (கலம் தொடா மகளிர்!)
பாடியவர்: பொன்முடியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: நொச்சி.
துறை: குதிரை மறம்.
===========================================

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே

அருஞ்சொற்பொருள்:-

சீறூர் = சிற்றூர்
உழுத்ததர் = உழுந்தின் தோலோடு கூடிய சிறுதுகள்கள்
ஓய்தல் = தளர்தல்
புரவி = குதிரை
மண்டுதல் = விரைந்து செல்லுதல்
படைமுகம் = போர்முகம்
போழ்தல் = பிளத்தல்
நெய்ம்மிதி = நெய்ச்சோறு
கொய்தல் = அறுத்தல்
சுவல் = குதிரையின் கழுத்து மயிர் (பிடரி)
எருத்து = கழுத்து
தண்ணடை = மருதநிலத்தூர்
தார் = மாலை
அணங்கு = தெய்வத்தன்மை, வருத்தம்
கோட்டம் = கோயில்
கலம் = பாத்திரம்
இகழ்தல் = சோர்தல்
நின்றவ்வே = நின்றன

இதன் பொருள்:-

பருத்தியை வேலியாகக் கொண்ட சிறிய ஊரின் மன்னனுடைய குதிரைகள், உழுந்தின் சிறுதுகள்களைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடையனவாக இருந்தன. அவை, கடல்நீரைப் பிளந்துகொண்டு விரைந்து செல்லும் தோணியைப் போலப் பகைவரின் படையைப் பிளந்துகொண்டு சென்று போர் செய்தன. நெய்யுடன் கூடிய உணவை உண்டு, ஒழுங்காகக் கத்திரிக்கப்பட்ட பிடரியையுடைய, மருதநிலத்தூர்களையுடைய பெருவேந்தனின் மாலைகள் அணிந்த குதிரைகள் தெய்வத்தன்மை வாய்ந்த முருகன் கோட்டத்தில், கலன்களைத் தொடாத விலக்குடைய மகளிரைப்போல சோர்ந்து ஒதுங்கி ஒளிந்து நின்றன.

பாடலின் பின்னணி:-

ஒருகால், சிற்றரசன் ஒருவனுக்கும் பெருவேந்தன் ஒருவனுக்கும் போர் நடந்தது. அப்போரில், சிற்றரசனின் குதிரைகள் சிறப்பாகப் போர்புரிந்ததாகவும் பெருவேந்தனின் குதிரைகள் போருக்கு அஞ்சி ஓடி ஒளிந்தன என்றும் இப்பாடலில் பொன்முடியார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:=

நல்ல வளமான உணவு உண்ணாததால் சிற்றூர் மன்னனின் குதிரைகள் தளர்ந்த நடையையையுடையனவாக இருந்தன என்ற கருத்தை “ஓய்நடைப் புரவி” என்பது குறிக்கிறது.

காதலனைப் பிரிந்து வாடும் பெண், உடல் மெலிந்து, பொலிவிழந்து காணப்படும் பொழுது, அவள் தாய் அவளை முருகன் வருத்துவதாகக் கருதி, வெறியாட்டு நடத்தி முருகனை வழிபடுவது சங்க கால மரபு. அம்மரபுக்கேற்ப, அணங்கு என்ற சொல்லுக்கு வருத்தம் என்று ஒருபொருள் இருப்பதால், ”அணங்குடை முருகன் கோட்டம்” என்பதற்கு, ”பெண்களை வருத்தும் முருகனின் கோயில்” என்றும் பொருள் கொள்ளலாம்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #297 on: November 25, 2015, 07:22:17 PM »
புறநானூறு, 300. (எல்லை எறிந்தோன் தம்பி!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை மறம்.
===========================================

தோல்தா தோல்தா என்றி ; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர்இல் கோயின் தேருமால் நின்னே

அருஞ்சொற்பொருள்:-

தோல் = கேடயம்
என்றி = என்றாய்
துறுகல் = பாறை
உய்குதல் = தப்பித்தல்
நெருநல் = நேற்று
எல்லை = பகல்வேளை
எறிதல் = கொல்லுதல்
குன்றி = குன்றிமணி
அட்ட = காய்ச்சிய
கோய் = கட்குடம்
தேரும் = தேடும்

இதன் பொருள்:-

“கேடயம் தா; கேடயம் தா” என்று கேட்கிறாயே! கேடயம் மட்டுமல்லாமல் பெரும்பாறையையும் வைத்து உன்னை நீ மறைத்துக் கொண்டாலும் நீ தப்ப மாட்டாய். நேற்று, பகற்பொழுதில் நீ கொன்றவனின் தம்பி, அகலிலிட்ட குன்றிமணிபோல் சுழலும் கண்களோடு, பெரிய ஊரில், காய்ச்சிய கள்ளைப் பெறுவதற்கு, வீட்டில் புகுந்து, கள்ளை முகக்கும் கலயத்தைத் தேடுவதுபோல் உன்னைத் தேடுகிறான்.”

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஓரூரில் போர் நடைபெற்றது. அப்போரில், வீரன் ஒருவனைப் பகைவரின் படைவீரன் ஒருவன் கொன்றான். பகைவரின் படை வீரன், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காகக் “கேடயத்தைக் கொடு” என்று தன்னுடன் இருந்தவர்களைக் கேட்கிறான். அவர்களில் ஒருவன், “கேடயம் மட்டுமல்ல; பெரிய பாறாங்கல்லை வைத்து உன்னை நீ மறைத்துக்கொண்டாலும் உன்னால் தப்ப முடியாது. நேற்று நீ கொன்றாயே, அவன் தம்பி உன்னைத் தேடி வருகிறான்” என்று அவனை எச்சரிக்கிறான். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் அரிசில் கிழார் அதை இப்பாடலாக அமைத்துள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

குன்றிமணிபோல் சுழலும் கண்களையுடையவன் என்பது சிறப்பான உவமை. விளக்கிலிட்ட குன்றிமணிபோல் கண்கள் சுழல்வது மட்டுமல்லாமல், சினத்தால் கண்கள் குன்றிமணியைப்போல் சிவந்திருப்பதையும் அவ்வுவமை குறிப்பிடுகிறது என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #298 on: November 25, 2015, 07:32:26 PM »
புறநானூறு, 301. (அறிந்தோர் யார்?)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை மறம்.
===========================================

பல் சான்றீரே! பல் சான்றீரே!
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்ட அருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே!
முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்;
ஒளிறுஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்;

எனைநாள் தங்கும்நும் போரே; அனைநாள்
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால்
அறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே
பலம்என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக்காண்

நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
எல்லிடைப் படர்தந் தோனே; கல்லென
வேந்தூர் யானைக்கு அல்லது
ஏந்துவன் போலான்தன் இலங்கிலை வேலே

அருஞ்சொற்பொருள்:-

சான்றோர் = அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்
புரைய = போல
அமர் = போர்
ஓம்புதல் = பாதுகாத்தல்
மருப்பு = கொம்பு
யாவண் = எவ்விடம்
கண்ணிய = கருதிய
பலம் = படை
உது – சுட்டுச் சொல்
உதுக்காண் – இதோ பாருங்கள்
வண் = மிகுதி
பரிதல் = ஓடுதல்
புரவி = குதிரை
எல் = இரவு
கல் = ஆரவாரக் குறிப்பு
இலங்குதல் = விளங்குதல்
இலைவேல் = இலை வடிவில் அமைந்த வேல்

இதன் பொருள்:-

பல் சான்றீரே=====> போற்றுமின்

பல சான்றோர்களே! பல சான்றோர்களே! மணமாகாத பெண்ணின் கூந்தல் போல, போர் கருதி நடப்பட்ட கடத்தற்கரிய முள்வேலி சூழ்ந்த ஆரவாரம் மிகுந்த பாசறையில் உள்ள பல சான்றோர்களே! முரசு முழங்கும் படையையுடைய உங்கள் அரசனையும் , விளங்குகின்ற கொம்புகளையுடைய உங்கள் யானைகளையும் நன்கு பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

எனைநாள்=====> உதுக்காண்

எத்தனை நாட்கள் உங்கள் போர் இங்கே நடைபெறுமோ அத்தனை நாட்களும் தன்மேல் படையெடுத்துப் போரிடாதவரை போரிடுவது எங்கே உண்டு? தன்மேல் படையெடுத்துப் போரிட்டவர் தகுதியில்லாதவராக இருந்தால் எங்கள் எதிர்சென்று போர்செய்ய மாட்டான். அதனால், அவன் கருதியதை அறிந்தவர் உங்களுள் யார்? உங்கள் படையில் பலர் இருப்பதாக எண்ணிச் செருக்குடன் இகழ்வதைத் தவிர்க. இதோ பாருங்கள்!

நிலன்=====> வேலே

நிலத்தை அடியிட்டு அளப்பதைப்போல குறுகிய நீண்ட வழியிலும் நில்லாது மிக விரைவாக ஒடும் குதிரையின் பண்புகளைப் பாராட்டி, இரவுப்பொழுது வந்ததால், தன் பாசறைக்குச் சென்றிருக்கிறான். உங்கள் வேந்தன் ஏறிவரும் யானையைத் தாக்குவதற்கு அல்லாமல் தன்னுடைய விளங்குகின்ற, இலைவடிவில் அமைந்த வேலை எங்கள் அரசன் தன் கையில் எடுக்க மாட்டான்.

பாடலின் பின்னணி:-

இருவேந்தர்களுக்கிடையே போர் மூண்டது. அப்போரில், பகைவேந்தன் பாசறை அமைத்து மிகுந்த பாதுகாவலோடு இருக்கிறான். ஆனால், அவன் போர்க்களத்திற்குச் சென்று போர்புரியவில்லை. அதைக்கண்ட மற்றொரு வேந்தனின் படைவீரர்கள், பகையரசனின் பாசறையோரைப் பார்த்து, “வீரர்களே! நீங்கள் உங்கள் பாசறையை முள்வேலியிட்டு அதனுள் அரசனையையும் யானைகளையும் நன்கு பாதுகாக்கிறீர்கள். எத்தனை நாட்கள் இவ்வாறு தங்குவதாக இருக்கிறீர்கள்? நீங்கள் எத்தனை நாட்கள் தங்கினாலும், நீங்கள் போர்புரியாவிட்டால் உங்களை நாங்கள் தாக்க மாட்டோம். தனக்கு நிகரற்றவர்களுடன் எங்கள் அரசன் போரிட மாட்டான். எங்கள் அரசனின் கருத்தை அறிந்தவர் உங்களில் உளரோ? எங்கள் அரசனின் கருத்தை அறியாது, உங்கள் படை பெரியது என்று இறுமாப்புடன் இருக்காதீர்கள். எங்கள் அரசன் தன் பாசறைக்குச் சென்றிருக்கிறான். அவன் வேலை எடுத்தால், உங்கள் அரசன் ஊர்ந்து வரும் யானையை நோக்கித்தான் எறிவான்” என்று கூறினான். அவன் கூறியதை இப்பாடலாகப் புலவர் ஆவூர் மூலங்கிழார் இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

“குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அருமுள்வேலி” என்பது பிறரால் தீண்டப்படாத குமரிப் பெண்ணின் கூந்தலைப்போல் எவராலும் தாண்டப்படாத அரிய முள்வேலி என்ற கருத்தில் கூறப்பட்டிருக்கிறது. பெண்களின் கூந்தலைத் தொடும் உரிமை அவர்களின் கணவருக்கு மட்டுமே உண்டு என்பது சங்க காலத்தில் நிலவிய கருத்து என்பது புறநானூற்றுப் பாடல் 113- லும், குறுந்தொகைப் பாடல் 225-லும் காணப்படுகிறது.

”அரசும் ஓம்புமின்; களிறும் போற்றுமின்” என்றது போருக்கு வந்த மன்னன் போரிடாமல் பாசறையிலேயே உள்ளான் என்பதை இகழ்ச்சியாகச் சுட்டிக் காட்டுகிறது. போரிட வந்த அரசன்தான் போரைத் துவக்க வேண்டும் என்பது சங்க காலத்துப் போர் மரபு என்பதும் இப்பாடலிலிருந்து தெரிகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #299 on: November 25, 2015, 07:34:35 PM »
புறநானூறு, 302. (வேலின் அட்ட களிறு?)
பாடியவர்: வெறிபாடிய காமக்காணியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: குதிரை மறம்.
===========================================

வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும் மாவே; பூவே
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்

கைவார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய
நிரம்பா இயவின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறுபெயர்த்து எண்ணின்
விண்ணிவர் விசும்பின் மீனும்
தண்பெயல் உறையும் உறையாற் றாவே

அருஞ்சொற்பொருள்:-

வேய் = மூங்கில்
தாவுபு = தாவும்
மா = குதிரை
உகளுதல் = திரிதல்
விளங்குதல் = ஒளிர்தல்
நரந்தம் = மணம், நரந்தப் பூ
காழ் = முத்துவடம் (வடம்)
கோதை = கூந்தல்
ஐது = மெல்லிது
பாணி = தாளம்
வணர் = வளைவு
கோடு = யாழின் தண்டு
சீறீயாழ் = சிறிய யாழ்
வார்தல் = யாழில் சுட்டு விரலால் செய்யும் தொழில்
ஓக்குதல் = தருதல்
நிரம்பு = மிகுதியாக
இயவு = வழி
நிரம்பா இயவு = குறுகிய வழி
கரம்பை =சாகுபடி செய்யக்கூடிய நிலம்
செகுத்தல் = அழித்தல், கொல்லுதல்
அட்ட = கொன்ற
இவர்தல் = செல்லுதல், உலாவுவுதல்
விசும்பு = ஆகாயம்
தண் = குளிர்ச்சி
பெயல் = மழை
உறை = மழைத்துளி
உறையாற்ற = அளவிட முடியாத

இதன் பொருள்:-

வெடிவேய்=====> சீறியாழ்

வளைத்த மூங்கில் விடுபட்டதும் கிளர்ந்து எழுவது போலக் குதிரைகள் தாவி ஒடித் திரிந்தன. ஒளிரும் அணிகலன்களை அணிந்த விறலியரின் கூந்தலில் நரந்தம் பூவால் பலவடங்களாகத் தொடுக்கப்பட்ட மாலை சுற்றப்பட்டிருந்தது. அந்தக் கூந்தலில் பொன்னாலான பூக்கள் இடம் பெற்றன. மெல்லிய தாளத்திற்கேற்ப தம் கையால் யாழின் வளைந்த தண்டில் உள்ள

கைவார்=====> உறையாற் றாவே

நரம்புகளை மீட்டி இசையெழுப்பும் பாணர்களுக்குக் குறுகிய வழிகளையுடைய, சாகுபடி செய்யக் கூடிய நிலங்கள் உள்ள சிற்றூர்கள் வழங்கப்பட்டன. தன்னைப் பகைத்துப் பார்த்த பகைவரைக் கொல்லும் காளை போன்ற வீரன் ஒருவன் ஊக்கத்தோடு தன் வேலால் கொன்ற களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தால், மேகங்கள் பரந்து உலவும் ஆகாயத்திலுள்ள விண்மீன்களும் குளிர்ந்த மழைத்துளிகளும் அவற்றை அளவிடற்கு ஆகா. அதாவது, அவன் கொன்ற களிறுகளின் எண்ணிக்கை வானத்தில் உள்ள விண்மீன்களையும் குளிர்ந்த மழைத்துளிகளையும்விட அதிகம்.

பாடலின் பின்னணி:-

குதிரையில் விரைந்து சென்று பகைவர்களையும் அவர்களுடைய யானைகளையும் அழிக்கும் வீரன் ஒருவனின் மறச்செயல்களை, இப்பாடலில் வெறிபாடிய காமக்காணியார் வியந்து பாடுகிறார்.