Author Topic: ~ புறநானூறு ~  (Read 110690 times)

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #270 on: October 01, 2014, 10:39:00 PM »
புறநானூறு, 273. (கூடல் பெருமரம்!)
பாடியவர்: எருமை வெளியனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: குதிரை மறம்.குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவன் குதிரையின் வீரத்தையோ கூறுதல்.
==================================

மாவா ராதே; மாவா ராதே;
எல்லார் மாவும் வந்தன; எம்இல்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வன் ஊரும் மாவா ராதே;

இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்று கொல்அவன் மலைந்த மாவே

அருஞ்சொற்பொருள்:-

மா = குதிரை
உளை = பிடரி மயிர்
புல் உளை = சிறிதளவே உள்ள பிடரி மயிர்
விலங்குதல் = குறுக்கிடுதல் (குறுக்கே நிற்றல்)
உலத்தல் = அழித்தல்
உலந்தன்று = அழிந்தது
மலைத்தல் = போரிடல்

இதன் பொருள்:-

மாவா ராதே=====> மாவா ராதே

குதிரை வரவில்லையே! குதிரை வரவில்லையே! மற்ற வீரர்கள் அனைவருடைய குதிரைகளும் வந்தன. எம் வீட்டில் உள்ள (சிறிதளவே குடுமியுள்ள) இளமகனைத் தந்த என் கணவன் ஊர்ந்து சென்ற குதிரை வரவில்லையே!

இருபேர்=====> மாவே

இரண்டு பெரிய ஆறுகள் கூடும் பெரிய இடத்தில் குறுக்கே நின்ற பெருமரம் போல், அவன் ஊர்ந்து சென்று போரிட்ட குதிரை சாய்ந்ததோ?

பாடலின் பின்னணி:-

ஒருகால், வீரன் ஒருவன் தும்பைப் பூவை அணிந்து பகைவருடன் போரிடுவதற்காகக், குதிரையில் சென்றான். அவனோடு போருக்குச் சென்ற வீரர்கள் அனைவரும் தங்கள் ஊருக்குத் திரும்பினர். ஆனால், அந்த வீரன் மட்டும் திரும்பி வரவில்லை. அதனால், கலக்கமுற்ற அந்த வீரனின் மனைவி, தன் கணவனின் குதிரை மட்டும் இன்னும் வரவில்லையே என்று புலம்புகிறாள். அதைக் கண்ட புலவர் எருமை வெளியனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

“புல்லுளைக் குடுமி” என்பது இளம் சிறுவன் என்பதைக் குறிக்கிறது. பெற்றோர்க்கு, அவர்களின் புதல்வர் செல்வம் என்று கருதப்படுவதால், புதல்வனைப் பெற்ற தந்தையை, “புதல்வன் தந்த செல்வன்” என்று புலவர் குறிப்பிடுகிறார். இருபெரும் ஆறுகளின் இடையே நிற்கும் மரம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அது காலப்போக்கில் வேருடன் சாய்வது உறுதி. அதனால்தான், புலவர் “விலங்கிடு பெருமரம் போல” என்று கூறுவதாகத் தோன்றுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #271 on: October 01, 2014, 10:41:33 PM »
புறநானூறு, 274. (நீலக் கச்சை!)
பாடியவர்: உலோச்சனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: எருமை மறம்.
==================================

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியே
தன்னும் துரக்குவன் போலும்; ஒன்னலர்
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே

அருஞ்சொற்பொருள்:-

கச்சை = இறுகக் கட்டிய இடுப்புடை
ஆர் = நிறைவு
பீலி = மயில் தோகை
கண்ணி = தலையில் அணியும் மாலை
துரந்து = செலுத்தி
இனி = இப்பொழுது
ஒன்னலர் = பகைவர்
பரத்தர = பரவிவர
மொய்ம்பு = வலிமை
ஊக்கல் = எழுப்பல்

இதன் பொருள்:-

நீல நிறமுடைய கச்சையையும், பூவேலைப்பாடுகள் நிறைந்த ஆடையையும், மயில் தோகையால் தொடுக்கப்பட்ட மாலையையும் உடைய பெரியோனாகிய வீரன், தன்னைக் கொல்ல வந்த யானையை நெற்றியில் வேலால் தாக்கினான். அவன், இப்பொழுது, தன் உயிரையும் கொடுத்துப் போரிடுவான் போல் தோன்றுகிறது. பகைவர் தங்கள் வலக்கரங்களில் வேலை ஏந்தி யானைகளுடன் பரவி வந்து அவன் மீது எறிந்த வேலைப் பிடுங்கி, பகைவரின் கூட்டத்தை அழித்து, அவர்களைத் தோளோடு தழுவித் தன்னுடைய உடல் வலிமையால் அவர்களை உயரத் தூக்கி, நிலத்தில் மோதி, உயிர் நீங்கிய அவர்களின் உடலைத் தூக்கிக்கொண்டு நிற்கின்றான்.

பாடலின் பின்னணி:-

இரு பெருவேந்தர்களுக்கிடையே போர் மூண்டது. அப்போரில், வீரன் ஒருவனை ஒரு யானை தாக்க வந்தது. அவ்வீரன், தன் வேலை யானையின் நெற்றியை நோக்கி எறிந்தான். அந்த யானை பின்நோக்கிச் சென்றது. பகைவரின் வீரர்கள் பலரும் அந்த வீரனை நோக்கி வந்தனர். அவர்கள் எறிந்த வேலைத் தடுத்து, அவர்களின் தோளைப்பற்றி நிலத்தில் மோதி, அவர்களை அந்த வீரன் கொன்றான். அவனுடைய வீரச் செயல்களைக் கண்ட புலவர் உலோச்சனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #272 on: October 01, 2014, 10:43:15 PM »
புறநானூறு, 275. (தன் தோழற்கு வருமே!)
பாடியவர்: ஒரூஉத்தனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: எருமை மறம்.
==================================

கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே: செற்றிய
திணிநிலை அலறக் கூழை போழ்ந்து தன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி

ஓம்புமின்; ஓம்புமின்; இவண்என ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்றுஅமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே

அருஞ்சொற்பொருள்:-

கோட்டம் = வளைவு
கண்ணி = தலையில் அணியும் மாலை
கொடு = வளைவு
திரை = திரைச்சீலை
வேட்டது = விரும்பியது
ஒத்தன்று = ஒத்தது (பொருந்தியுள்ளது)
செற்றம் = மன வயிரம், சினம், கறுவு
திணி = திண்மை
திணிநிலை = போர்க்களத்தின் நடுவிடம்
கூழை = பின்னணிப் படை
போழ்தல் = பிளத்தல்
வடித்தல் = திருத்தமாகச் செய்தல்
எஃகம் = வேல், வாள், எறி படை
கடி = கூர்மை
ஓம்புதல் = பாதுகாத்தல்
தொடர் = சங்கிலி
குடர் = குடல்
தட்ப = தடுக்க
அமர் = விருப்பம்
மான – உவமைச் சொல்
முன்சமம் = முன்னணிப்படை

இதன் பொருள்:-

கோட்டம்=====> ஏந்தி

வளைந்த மாலையும், வளைத்துக் கட்டப்பட்ட ஆடையும், அரசன் விரும்புவதைக் கூறி அவனைத் தன் வசப்படுத்தும் இயல்பும் இவனிடம் பொருந்தியுள்ளன. மனவலிமையையுடன் போர்புரியும் படைவீரர்கள் அஞ்சி அலறப் படையைப் பிளந்துகொண்டு தான் செல்லும் திசையை நோக்கி, நன்கு செய்யப்பட்ட, சிறந்த, கூரிய வேலின் இலைமுகத்தை ஏந்திச் செல்கிறான்.

ஓம்புமின்=====> வருமே

“இவனை இங்கேயே தடுத்து நிறுத்துங்கள்.” என்று வீரர்கள் கூறித் தடுத்தாலும், அவர்கள் தடுப்பதைக் கடந்து, தளைபூட்டப்பட்ட யானைபோல், இறந்த வீரர்களின் குடல்கள் காலைத் தடுக்க, தன் கன்றை விரும்பும் பசுவைப் போல் பகைவரின் முன்னணிப் படையிரனால் சூழப்பட்டிருக்கும் தன் தோழனைக் காப்பாற்றச் செல்கிறான்.

பாடலின் பின்னணி:-

வீரன் ஒருவன், பகைவர்களால் சூழப்பட்ட தன்னுடைய தோழனுக்கு உதவுவதற்காகப் பகைவரை எதிர்த்து, விரைந்து சென்று அவனைக் காப்பற்றுவதைப் பாராட்டும் வகையில் இப்பாடலை ஒரூஉத்தனார் இயற்றியுள்ளார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #273 on: October 01, 2014, 10:44:46 PM »
புறநானூறு, 276. (குடப்பால் சில்லுறை!)
பாடியவர்: மதுரைப் பூதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை நிலை. இரு திறத்தாரும் தன் வீரத்தைப் புகழுமாறு ஒரு வீரன் போர்க்களத்தில் சிறப்பெய்துதல்.
=========================================

நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே

அருஞ்சொற்பொருள்:-

நறுமை = நன்மை
விரை = மணமுள்ள பொருள்
துறந்த = நீங்கிய
காழ் = விதை
இரங்காழ் = இரவ மரத்தின் விதை
திரங்குதல் = சுருங்குதல், உலர்தல்
வறு = வற்றிய
மடம் = இளமை
பால் = இயல்பு
ஆய் = இடையர்
வள் = வளம்
உகிர் = நகம்
உறை = பிரைமோர்
நோய் = துன்பம்

இதன் பொருள்:-

நல்ல மணமுள்ள பொருள்களைப் பயன்படுத்தாத, நரைத்த, வெண்மையான கூந்தலையும், இரவமரத்தின் விதைபோன்ற வற்றிய முலையையும் உடைய சிறந்த முதியவளுடைய அன்புச் சிறுவன், இளம் இடைக்குலப் பெண் ஒருத்தி ஒரு குடப்பாலில் தன் (சிறிய) நகத்தால் தெளித்த சிறிய உறைபோலப் பகைவரின் படைக்குத் தானே துன்பம் தருபவனாயினன்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், இரு வேந்தர்களிடையே போர் நடைபெற்றது. அப்போரில், ஒரு படைவீரன், பகைவருடைய படை முழுவதையும் கலக்கிப் போரில் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதைக் கண்ட புலவர் மதுரைப் பூதன் இளநாகனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

ஓரு குடம் பாலில் சிறிதளவே பிரைமோர் இட்டாலும், பால் தன் நிலையிலிருந்து மாறிவிடும். அதுபோல், இவ்வீரன், தனி ஒருவனாகவே, பகைவரின் படையை நிலைகலங்கச் செய்தான் என்று புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #274 on: October 01, 2014, 10:47:30 PM »
புறநானூறு, 277. (ஈன்ற ஞான்றினும் பெரிதே!)
பாடியவர்: பூங்கண் உத்திரையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: உவகைக் கலுழ்ச்சி. வாளால் புண்பட்ட உடம்பையுடைய கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் வடித்தல்; மகன் புண்ணுற்று இறந்தது கண்டு தாய் மகிழ்தல்.
=========================================

மீன்உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்,
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே

அருஞ்சொற்பொருள்:-

தூவி = இறகு
வால் = வெண்மை
உவகை = மகிழ்ச்சி
ஞான்று = பொழுது, காலம்
நோன் = வலிய
கழை = மூங்கில்
துயல்வரும் = அசையும்
வெதிரம் = மூங்கிற் புதர்
வான் = மழை
தூங்கிய = தங்கிய
சிதர் = மழைத்துளி

இதன் பொருள்:-

மீன் உண்ணும் கொக்கின் இறகுபோன்ற வெண்மையான, நரைத்த கூந்தலையுடைய முதிய தாய், தன் சிறுவன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, அவள் தன் மகனைப்பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிகம். மகிழ்ச்சியால் அவள் வடித்த கண்ணீர்த் துளிகள், மூங்கிற் புதரில் உள்ள மூங்கிலில் தங்கியிருந்து கொட்டும் மழைத்துளிகளைவிட அதிகமானவை.

பாடலின் பின்னணி:-

ஒரு வீரன் அவனுடைய அரசனின் அழைப்பிணற்கு இணங்கிப் போருக்குச் சென்றான். அவன் போரில் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான். அவன் இறந்த செய்தி அவனுடைய முதிய வயதினளாகிய தாய்க்குத் தெரியவந்தது. அவள் தன் மகன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சி அடைந்தாள். அவளுடைய செயல்களைக் கண்டு வியந்த புலவர் பூங்கண் உத்திரையார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

“சான்றோன்” என்ற சொல்லுக்கு “வீரன்” என்று ஒரு பொருளும் உண்டு. ஆகவே,

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். (குறள் – 69)

என்ற திருக்குறள், இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கும் ஒத்திருப்பதைக் காண்க.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #275 on: October 01, 2014, 10:51:15 PM »
புறநானூறு, 278. (பெரிது உவந்தனளே!)
பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: உவகைக் கலுழ்ச்சி.
=========================================

நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்எனச் சினைஇக்

கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே

அருஞ்சொற்பொருள்:-

உலறிய = வாடிய
நிரம்புதல் = மிகுதல்
முளரி = தாமரை
மருங்கு = விலாப்பக்கம்
அழிதல் = நிலைகெடுதல்
மாறுதல் = புறமுதுகிடுதல்
மண்டுதல் = நெருங்குதல்
அமர் = போர்
உடைதல் = தோற்றோடுதல்
சினைதல் = தோன்றுதல்
துழவுதல் = தேடிப்பார்த்தல்
காணூஉ = கண்டு

இதன் பொருள்:-

நரம்பு=====> சினை

நரம்புகள் தோன்றிய, வற்றிய மெலிந்த தோள்களையும், தாமரை இலை போன்ற வயிற்றையும் உடைய முதியவளிடம், அவள் மகன் பகைவரின் படையைக் கண்டு நிலைகுலைந்து, புறமுதுகு காட்டி இறந்தான் என்று பலரும் கூறினர். அதைக் கேட்ட அத்தாய், தீவிரமாக நடைபெற்ற போரைக்கண்டு அஞ்சி என் மகன் தோற்றோடி இறந்தது உண்மையானால், அவன் பால் உண்ட என் முலைகளை அறுத்திடுவேன் என்று,

கொண்ட=====> உவந்தனளே

அங்கே, குருதி தோய்ந்த போர்க்களத்தில், கீழே விழுந்து கிடந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துத், தன் மகனின் உடலைத் தேடினாள். சிதைந்து பலதுண்டுகளாகிய விழுப்புண்பட்ட அவன் உடலைக் கண்டு, அவனைப் பெற்ற பொழுது அடைந்ததைவிட பெருமகிழ்ச்சி அடைந்தாள்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், வீரன் ஒருவன் போரில் பகைவர்களால் வாளால் வெட்டப்பட்டு இறந்தான். அவன் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்தது. அவன் எவ்வாறு இறந்தான் என்று அறியாத பலர், அவனுடைய தாயிடம் சென்று, “உன் மகன் பகைவர்க்குப் புறமுதுகு காட்டிப் போரில் இறந்தான்.” என்று பொய்யாகக் கூறினர். அவள் வயதானவளாக இருந்தாலும், தன் மகன் புறமுதுகு காட்டி இறந்திருப்பானானால் அது தன் மறக்குலத்திற்கு இழுக்கு என்று கருதி, “ என் மகன் புறமுதுகு காட்டி இறந்திருப்பானானால், அவன் பால் குடித்த என் முலைகளை அறுத்தெறிவேன்.” என்று வஞ்சினம் உரைத்தாள். அதைக் கேட்ட புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் அவள் வீரத்தை இப்பாடலில் வியந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

முதுமையால் மேனி பசுமை குறைந்து, நரம்புகள் மேலெழுந்து தோன்றுவதால், “நரம்பெழுந்து உலறிய தோள்” என்று புலவர் குறிப்பிட்டதாகத் தோன்றுகிறது. பலரும் அவள் மகன் புறமுதுகுகாட்டி இறந்தான் என்று கூறினாலும், அத்தாய் அவர்கள் கூறியதை நம்பாமல், தானே போர்க்களத்திற்குச் செல்ல முடிவெடுத்தது அவள் தன் மகன் மீது வைத்த்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.போர்க்களம் குருதி தோய்ந்திருந்ததால் “செங்களம்” என்று குறிப்பிடப்பட்டது. அவ்வீரன் விழுப்புண்பட்டு இறந்ததால் பெரும்புகழ் பெற்றதோடு மட்டுமல்லாமல் தன் குடியைப் பழியினின்று போக்கினான். அவன் தாய் பெருமகிழ்ச்சி அடைந்ததற்கு அதுவே காரணம் என்று தோன்றுகிறது.
« Last Edit: October 01, 2014, 11:13:45 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #276 on: October 01, 2014, 11:21:13 PM »
புறநானூறு, 279. (செல்கென விடுமே!)
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: மூதின்முல்லை. வீரர்க் கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.
=========================================

கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து களத்துஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,

பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கஎன விடுமே

அருஞ்சொற்பொருள்:-

கடிது = கடுமையானது. 2. மூதில் = முதுமையான குடி. 3. செரு = போர். 6. விலங்குதல் = குறுக்கிடுதல். 7. செருப்பறை = போர்ப்பறை. 8. வெளிது = வெள்ளிய (வெண்மையான); உடீஇ = உடுத்தி. 9. பாறுதல் = ஒழுங்கறுதல், சிதறுதல்; பாறுமயிர் = உலர்ந்து விரிந்த மயிர்

இதன் பொருள்:-

கெடுக=====> இவள்கொழுநன்

இவளது சிந்தை கெடுக; இவளது துணிவு மிகவும் கடுமையானது. முதுமையான மறக்குலப் பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள். முந்தாநாள், இவளுடைய தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு, அப்போரில் இறந்தான். நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன்

பெருநிரை=====> விடுமே

ஆநிரைகளை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் இறந்தான். இன்று மீண்டும் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக்கேட்டுப், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால் அறிவு மயங்கித் தன்னுடைய ஒரே மகனாகிய சிறுவனை அழைத்து, அவனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய பரட்டைத் தலையில் எண்ணெய் தடவி, சீவி முடித்து, கையில் வேலைக் கொடுத்துப் “போர்க்களத்தை நோக்கிச் செல்க” என்று அனுப்பினாள்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஓரூரில் போர் நடைபெற்றது. அவ்வூரில் இருந்த முதிய வயதுடைய பெண்மணி ஒருத்தியின் கணவன், நேற்று நடைபெற்ற போரில், பகைவர்களால் கவரப்பட்ட ஆநிரைகளை மீட்கும்பொழுது இறந்தான். அதற்கும் முதல் நாள் நடைபெற்ற போரில், அவள் தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான். போர் தொடர்ந்து நடைபெறுகிறது. ஊரில் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக் கேட்ட அப்பெண்மணி மகிழ்ச்சியுடன் தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பத் துணிந்தாள். அவனோ மிகவும் சிறியவன்; தானாகத் தன் தலையைச் சீவி முடிந்துகொள்ளக்கூடத் தெரியாத சிறுவன். அவள் அவனை அழைத்து, அவனுக்கு ஆடையை உடுத்தி, தலையில் எண்ணெய் தடவிச் சீவி முடித்து, அவன் கையில் வேலைக் கொடுத்துப் போருக்கு அனுப்புகிறாள். இக்காட்சியைக் கண்ட புலவர் ஒக்கூர் மாசாத்தியார் அப்பெண்மணியின் வீரத்தை இப்பாடலில் வியந்து பாடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

“கெடுக சிந்தை, கடிது இவள் துணிவு” என்று கூறியது இகழ்வதுபோல் புகழ்வது என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிபிடுகிறார். தந்தையையும், கணவனையும் போரில் இழந்தாலும், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால், தன் ஒரே மகனை – மிகவும் சிறிய வயதுடைய ஒரே மகனை – போருக்கு அனுப்புவதால் அவள் “மூதில் மகள்” என்ற அடைமொழிக்குத் தகுதியானவள்தான் என்பதைப் புலவர் நன்கு எடுத்துரைக்கிறார்.

இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்ற வீரமுள்ள தமிழ்ப் பெண்டிர், சங்க காலத்தில் மட்டுமல்லாமல் தற்காலத்திலும் இருக்கிறார்கள் என்பதற்கு, அண்மையில் ஈழத்தில் நடந்த இனப்போரில் தம் தந்தை, உடன் பிறந்தோர் ஆகியோரையும், தம் பிள்ளைகளையும், பெண்களையும் இழந்து, தாங்களே போருக்குச் சென்ற பெண்களின் வீரச்செயல்கள் சான்றாகத் திகழ்கிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #277 on: October 01, 2014, 11:27:14 PM »
புறநானூறு, 280. (வழிநினைந்து இருத்தல் அரிதே!)
பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: ஆனந்தப்பையுள்.
=========================================

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய;
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;

நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா;
துடிய! பாண! பாடுவல் விறலி!
என்ஆ குவிர்கொல்? அளியிர்; நுமக்கும்
இவண்உறை வாழ்க்கையோ அரிதே; யானும்

மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல,
வழிநினைந்து இருத்தல் அதனினும் அரிதே

அருஞ்சொற்பொருள்:-

என்னை = என்+ஐ = என் தலைவன் (கணவன்)
வெய்ய = கொடியது
தும்பி = வண்டு
துவை = ஒலி
வரைப்பு = எல்லை
துஞ்சுதல் = உறங்கல்
வேட்கும் = விரும்பும்
குராஅல் = கூகை
தூற்றல் = பழிகூறல்
விரிச்சி = சகுனம்
ஓர்க்கும் = கேட்கும்
நிரம்பா = நிறைவில்லாத
அளியிர் = இரங்கத் தக்கவர்கள்
இவண் = இங்கே
மண்ணுதல் = கழுவுதல்
மழித்தல் = மொட்டையடித்தல்
தொன்று = பழைய நாள்
அல்லி = அல்லியரிசி
வழிநினைந்து = எதிர் காலத்தை நினைத்து வருந்தி

இதன் பொருள்:-

என்னை=====> தூற்றும்

என் கணவனின் மார்பில் உள்ள புண் மிகவும் கொடியது. நடுப்பகலில் வண்டுகள் வந்து ஒலிக்கின்றன; என்னுடைய பெரிய அரண்மனையில் ஏற்றிவைத்த விளக்குகள் நின்று நிலைத்து எரியாமல் அவிந்துவிடுகின்றன; என் கணவன் துன்பத்திலிருக்கும் பொழுது நான் உறங்க விரும்பாவிட்டாலும் என் கண்கள் உறக்கத்தை விரும்புகின்றன;

நெல்நீர்=====> யானும்

அச்சத்தைத் தரும் கூகை தன் குரலால் அலறுகிறது; நெல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும் சிறந்த முதிய பெண்டிரின் சொற்களும் பொய்யாயின. துடியனே! பாணனே! பாடலில் சிறந்த விறலியே! நீங்கள் என்ன ஆவீர்களோ? நீங்கள் இரங்கத்தக்கவர்கள். இதுவரை இருந்ததுபோல் இனிமேல் இவ்விடத்து இருந்து வாழலாமென்பது உங்களுக்கு அரிது.

மண்ணுறு=====> அரிதே

நீராடிய பிறகு மொட்டைத் தலையில் இருந்து தெளிந்த நீர் ஒழுக, முன்பு இளமைக் காலத்தில் உடுத்திய அழகிய பசுமையான தழையாக உதவிய சிறிய வெள்ளாம்பலில் உண்டாகும் அல்லியரிசியை உண்டு, அணிகலன்கள் அணியாத கைம்பெண்கள் போலத் தலைவன் இறந்த பின்னர் வாழ்வதை நினைத்து வருந்தி இங்கு நான் உயிர் வாழ்வது அதனினும் அரிது.

சிறப்புக் குறிப்பு: கணவன் உறக்கமில்லாமல் வருந்தும் பொழுது மனைவி உறங்காள். அதனால்தான், அவள் கண்களைத் “துஞ்சாக் கண்” என்று புலவர் குறிப்பிடுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

ஒன்றைப் பெறுவதற்காகக் கடவுளை வேண்டி வழிபடும்பொழுது, அங்கு யாராவது நற்சொற்களைக் கூறினால் வேண்டியது நடைபெறும் என்றும் நம்பிக்கைதரும் சொற்களை யாரும் கூறாவிட்டால், நினைத்தது நடைபெறாது என்றும் சங்க காலத்தில் மக்கள் நம்பினர். இந்த நம்பிக்கைக்கு “விரிச்சி” அல்லது “விரிச்சி கேட்டல்” என்று பெயர்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், மாறோக்கத்து நப்பசலையார் ஒரு வீரனின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு, அவன் போர்ப்புண்பட்டு இறக்கும் நிலையில் இருந்தான். அவன் இறப்பது உறுதி என்று அவன் மனைவி கருதினாள். அவனுடைய ஆதரவில் வாழ்ந்துவந்த துடியன், பாணன், விறலி முதலியோர் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று அவள் வருந்தினாள். அவர்களை நோக்கி, “தலைவன் மார்பில் உண்டாகிய புண்கள் பெரிதாக உள்ளன. எல்லா அறிகுறிகளும் அவன் இறப்பது உறுதி என்பதைக் கூறுகின்றன. இனி உங்கள் நிலை என்ன ஆகுமோ: நான் அறியேன். இனி, நீங்கள் இங்கே வாழ்வது அரிது; நான் கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வேன் என்று நினைப்பது அதைவிட அரிது.” என்று கூறுகிறாள். அம்மனையோளின் துயரம் தோய்ந்த சொற்களைக் கேட்ட புலவர் மாறோக்கத்து நப்பசலையார் இப்பாடலில் அவள் கூறியவற்றைத் தொகுத்துக் கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #278 on: October 01, 2014, 11:39:10 PM »
புறநானூறு, 281. (நெடுந்தகை புண்ணே!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: காஞ்சித்திணை.
துறை: தொடாக் காஞ்சி.
=========================================

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்இயம் கறங்கக்
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி

நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே

அருஞ்சொற்பொருள்:-

தீ = இனிமை
இரவம் = ஒருமரம்
வேம்பு = வேப்ப மரம்
செரீஇ = செருகி
வாங்கு = வளைவு
மருப்பு = யாழ்க்கோடு (யாழின் தணு)
இயம் = இசைக் கருவி
கறங்க = ஒலிக்க
பயப்பய = பைய = மெல்ல
இழுது = நெய், வெண்ணெய், குழம்பு
இழுகுதல் = பூசுதல்
ஐயவி = சிறுவெண்கடுகு
காஞ்சி = நிலையாமையைக் குறிக்கும் பண்
எறிதல் = அடித்தல்
வரைப்பு = இடம்
கடி = மிகுதி
நறை = மணம்
விழுமம் = துன்பம்

இதன் பொருள்:-

தீங்கனி=====> காஞ்சி பாடி

அன்புடைய தோழிகளே வாருங்கள்! இனிய கனியைத் தரும் இரவமரத்தின் இலையையும் வேப்பிலையையும் சேர்த்து வீட்டில் செருகுவோம்; வளைந்த தண்டையுடைய யாழோடு பலவகை இசைக்கருவிகளும் ஒலிப்போம்; கையால் மெல்ல எடுத்து மைபோன்ற சாந்தைத் தலைவனின் புண்களில் மெழுகுவோம்; சிறுவெண்கடுகுகளைத் தூவி, ஆம்பல் தண்டை ஊதி, ஓசையைச் செய்யும் மணியை ஒலித்து, காஞ்சிப் பண்ணைப் பாடி,

நெடுநகர்=====> புண்ணே

நெடிய அரண்மனை முழுதும் நல்ல மணமுள்ள புகையை எழுப்புவோம். வேந்தனுக்கு உண்டாகிய துன்பத்தைத் தான் தாங்கிய, பூ வேலைப்பாடுகள் அமைந்த கழல் பூண்ட பெருந்தகையாகிய தலைவனுக்கு உண்டாகிய புண்களை ஆற்றி அவனைக் காப்போம்.

சிறப்புக் குறிப்பு:-

போரில் புண்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்வோர், புண்பட்டோர் இருக்கும் வீடுகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், இனிய இசை பாடுவதும், நறுமணமுள்ள பொருட்களைத் தீயிலிட்டுப் புகையை எழுப்புவதும் பழங்காலத்தில் வழக்கிலிருந்ததாக இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.

பாடலின் பின்னணி:-

ஒருகால், அரிசில் கிழார், போரில் புண்பட்ட தலைவன் ஒருவனைக் காணச் சென்றார். அங்கே, அத்தலைவனின் மனைவி, அவனுடைய புண்களை ஆற்றுவதற்கு பல செயல்களைச் செய்கிறாள். மற்றும், தலைவனின் புண்களை ஆற்றுவதற்குத் துணைபுரியுமாறு அவள் தன் தோழிகளைத் அழைக்கிறாள். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளை அரிசில் கிழார் இப்பாடலில் தொகுத்துக் கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #279 on: November 12, 2014, 08:13:22 PM »
புறநானூறு, 282. (புலவர் வாயுளானே!)
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தெரியவில்லை.
துறை: தெரியவில்லை.
(இப்பாடலில், சில பகுதிகள் கிடைக்கவில்லை.)
===========================================

எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செய் ஆளனை
யாண்டுள னோவென வினவுதி ஆயின்
. . . . . . . . . . . .
வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
அருங்கடன் இறுமார் வயவர் எறிய
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே;
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
. . . . . . . . . . . . . . . .

அலகை போகிச் சிதைந்து வேறாகிய
பலகை அல்லது களத்து ஒழியாதே;
சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
நாநவில் புலவர் வாய் உளானே

அருஞ்சொற்பொருள்:-

எஃகு = வேல், வாள்
உளம் = உள்ளம் = நெஞ்சு, மார்பு
இரு = பெரிய
மருங்கு = பக்கம்
கடன் = கடமை
இறுத்தல் = முடித்தல்
பெருஞ்செய்யாளன் = செய்தற்கரிய செயல் செய்தவன்
ஆய்தல் = நுணுகி அறிதல் (ஆராய்தல்)
கிளர் = மேலெழும்பு
தார் = மாலை
அகலம் = மார்பு
வயவர் = படைவீரர்
எறிதல் = வெட்டல், ஊறுபடுத்தல், வெல்லுதல்
மலைதல் = போர் செய்தல்
மடங்குதல் = திரும்புதல்
மாறு = பகை
அலகை = அளவு
பலகை = கேடயம்
சேண் = தொலை தூரம், நெடுங்காலம்
இசை = புகழ்
நிறீஇ = நிறுவி
நவிலல் = சொல்லுதல், கற்றல்

இதன் பொருள்:-

மார்பை வேல் ஊடுருவிச் செல்ல, இப்பெரிய உலகில் செய்தற்கரிய கடமைகளைச் செய்த வீரன் எவ்விடத்து உள்ளான் என்று கேட்கின்றீர். ஆராயுமிடத்து,…..
தம் அரிய கடமைகளை நிறைவேற்றும் வகையில் பகைவர்கள் போரிட்டதால், தன்னைக் குறிபார்த்து வரும் பகைவர்களின் படையை எதிர்த்து நின்று தடுத்த, மாலை அணிந்த மார்புடன் கூடிய அவனுடல் அடையாளம் தெரியாமல் அழிந்தது; உயிரும் நீங்கியது. போரிடும் பகைவர் புறமுதுகு காட்டி ஓடினார்கள். உருத்தெரியாமல் அளவின்றிச் சிதைந்து பலவேறு துண்டுகளாகிய அவனுடைய கேடயம் போல் போர்க்களத்தில் அழியாமல், அவன் நெடுங்காலம் நிலைபெறும் நல்ல புகழை நிறுவி, நல்லுரைகளைக் கூறும் நாக்குடைய புலவர்களின் வாயில் உள்ளான்.

சிறப்புக் குறிப்பு:-

எஃகு என்பது ஆகுபெயராகி, வேலையும் வாளையும் குறிக்கிறது.

பாடலின் பின்னணி:-

போர்புரியும் ஆற்றலில் சிறந்து விளங்கிய வீரன் ஒருவன் போரில் புண்பட்டு இறந்தான். அவனைக் காணச் சான்றோர் ஒருவர் சென்றார். அச்சான்றோர் அவ்வூரில் இருந்தவர்களிடம் அவன் எங்கே உள்ளான் என்று கேட்டார். அவ்வூரில் உள்ளவர்கள், “அவ்வீரன் போரில் செய்தற்கரிய சாதனைகளைச் செய்தவன். மார்பில் வேல்கள் ஊடுருவினாலும் அவன் தொடர்ந்து போர்செய்தான். அவன் செய்த செயற்கரிய செயல்களால் அவன் பெரும்புகழடைந்தான். அவன் எங்கு உள்ளான் என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவன் புலவர்களின் வாயில் உள்ளான்” என்று பதிலளித்தார்கள். இக்காட்சியைப் புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #280 on: February 08, 2015, 06:42:34 AM »
புறநானூறு, 283. (அழும்பிலன் அடங்கான்!)
பாடியவர்: அண்டர் நடுங்கல்லினார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: பாண்பாட்டு.
(இப்பாடலில், சில பகுதிகள் கிடைக்கவில்லை.)
===========================================

ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்னும்

வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
மன்றுள் என்பது கெட …...தானே பாங்கற்கு
ஆர்சூழ் குறட்டின் வேல்நிறத்து இங்க
உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
தெற்றிப் பாவை திணிமணல் அயரும்

மென்தோள் மகளிர் நன்று புரப்ப
இமிழ்ப்புறம் நீண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதலசைத் தோனே

அருஞ்சொற்பொருள்:-

குரலி = நீரில் உள்ள ஒருவகைச் செடி
தண்கயம் = குளிர்ந்த நீர்நிலை
வாளை = வாளைமீன்
அரா = பாம்பு
வராஅல் = வரால்மீன்
ஊழ் = முறை
மாறு = பகை
அழும்பிலன் = அழும்பில் என்னும் ஊரின் தலைவன்
தகைத்தல் = தடுத்தல்
வலம் = வெற்றி
புரிதல் = விரும்புதல்
பாங்கன் = தோழன்
ஆர் = ஆரக்கால்
குறடு = மரத்துண்டு. அச்சுக் கோகும் இடம் ( வண்டிச் சக்கரத்தின் குடம்)
நிறம் = மார்பு
இங்கல் = ஊடுருவுதல், நுழைதல்
அளவை = அளவு
தெறு = சினம்
தெற்றி = திண்ணை
பாவை = பதுமை (பொம்மை)
அயர்தல் = விளையாடுதல்
புரப்ப = பாதுகாக்க (காக்க)
இமிழ்தல் = தழைத்தல், மிகுதல்
பாசிலை = பசிய இலை
நுதல் = நெற்றி
அசைத்தல் = கட்டுதல்

இதன் பொருள்:-

ஒண்செங்======> என்னும்

ஒளிபொருந்திய செங்குரலிக்கொடி நிறைந்த குளிர்ந்த நீர்நிலை கலங்க, வாளைமீனை நீர்நாய் தனக்கு அன்றைய உணவாகப் பெற்றுக்கொண்டு, உணவு இல்லாமல் அங்கே வாழும் பாம்புகளை வரால்மீன் எனக்கருதி மயங்கி முதலைகளோடு மாறிமாறி முறையாக நீர்நாய்களும் முதலைகளும் போரிடும் அழும்பில் என்னும் ஊருக்குத் தலைவன், அடங்காதவனாக எதிர்நின்று போரிடக்கருதி எழுந்தான்.

வலம்புரி=====> அயரும்

வெற்றியை விரும்பும் கோசருடைய அவைக்களமும் போர்க்களத்தின் நடுவிடமும் இல்லையாக … அவன் தோழனின் மார்பில் பகைவரின் அம்புகள் செருகி இருந்தன. அவை வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் அமைந்திருப்பதுபோல் இருந்தன. தோழனின் உயிர் உடலிலிருந்து நீங்காமல் ஊசலாடிக்கொண்டிருந்தது. திண்ணையில் வைத்து விளையாட வேண்டிய மண்பாவைகளைத் திணிந்த மணலில் வைத்து விளையாடும்

மென்தோள்=====> நுதலசைத் தோனே

சிறுமிகள் அவன் புண்களை ஆற்றி அவனை நன்கு காத்துவந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட தலைவன், சினந்து, ஒளியுடன் விளங்கும் நீண்ட பசிய இலைகளையுடைய மணங்கமழும் தும்பைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலையை நெற்றியில் கட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான்.

பாடலின் பின்னணி:-

பகைவர்கள் எய்த அம்புகள் ஒரு வீரனின் உடலில், வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் செருகி இருப்பதைப் போல் செருகி இருந்தன. அவனைச் சில சிறுமிகள் பாதுகாத்துவந்தனர். அவ்வீரனைக் காணவந்த நண்பன் ஒருவன், வீரனின் நிலையைக் கண்டு, சினத்துடன் போருக்குப் புறப்பட்டான். இப்பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை. பாடல் சிதைந்துள்ளதால், தெளிவான பொருள் காண்பது அரிதாக உள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

ஒரு நீர்நாய் ஒரு முதலையுடன் போரிட்டுத் தோற்றால், மற்றொரு நீர்நாய் வென்ற முதலையோடு போரிடும்; போரில் ஒரு முதலை தோற்றால் மற்றொரு முதலை வென்ற நீர்நாயோடு போர்புரியும். இவ்வாறு மாறிமாறி முறையாகப் போரிடுவதைத்தான் “ஊழ்மாறு பெயரும்” என்று புலவர் குறிப்பிடுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

பெரும்போர் செய்து இறந்த வீரனுக்கு சாப்பண்னைப் பாடிப் பாணர் தம் கடன் கழித்தலைக் கூறும் பாடல்கள் பாண்பட்டு என்னும் துறையைச் சார்ந்தவையாகும்.

இப்பாடலில் பாணர்கள் சாப்பண்ணைப் பாடி வீரன் ஒருவனின் சாவைக் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்ற துறையைச் சார்ந்ததாகத் தெரியவில்லை. இப்பாடலில், வீரன் ஒருவனின் செயலைப் புலவர் புகழ்ந்து கூறியிருப்பதால், இப்பாடல் பாடாண் பாட்டு என்னும் துறையைச் சார்ந்தது என்று முடிவு செய்வதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #281 on: February 08, 2015, 06:43:33 AM »
புறநானூறு, 284. (பெயர்புற நகுமே!)
பாடியவர்: ஓரம்போகியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: பாண்பாட்டு.
===========================================

வருகதில் வல்லே வருகதில் வல்என
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
நூலரி மாலை சூடிக் காலின்
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமம் தாங்கி முன்நின்று எறிந்த
ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்
தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே

அருஞ்சொற்பொருள்:-

தில் = விழைவைக் குறிக்கும் அசைச்சொல்
வல் = விரைவு
விழு = சிறந்த
அரி = அறுத்தல்
சமம் = போர்
ஒருகை = யானை
மிறை = வளைவு
வாய்வாள் = குறிதவறாத வாள்
இரிதல் = ஓடுதல்

இதன் பொருள்:-

“விரைந்து வருக, விரைந்து வருக” என்று வேந்தனின் சிறந்த தூதுவர் ஆங்காங்கு சென்று தெரிவிக்க, நூலால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிக்கொண்டு, காலால் நடந்து தனியனாய் வந்த மறக்குடி மறவன், கடுமையான போரில் பகைவரை மேலே செல்லாதவாறு தடுத்துப் பகைவரின் யானையொன்றை வெட்டி வீழ்த்தினான். தான் வெட்டி வீழ்த்திய யானையின் தந்தத்தில் தனது வளைந்த வாளைத் தீட்டிக்கொண்டிருந்தான். அப்பொழுது பகைவரின் வீரன் ஒருவன் அவனைக்கண்டு புறமுதுகுகாட்டி ஒடினான். அதைக்கண்டு இவ்வீரன் சிரித்தான்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஒருவேந்தன் வீரர்கள் பலரையும் போருக்கு வருமாறு அழைத்தான். அப்போரில், வீரன் ஒருவன் சிறப்பாகப் போர் புரிந்தான். அவனுடைய வீரச் செயல்களைப் புலவர் ஓரம்போகியார் கண்டார். அவ்வீரன் ஓர் யானையைக் கொன்று வீழ்த்தினான். அவன் யானையுடன் போரிட்டதால் அவனுடைய வாள் கோணியது. அந்த வாளை இறந்த யானையின் தந்தத்தில் தீட்டிக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த பகைவரின் வீரன் ஒருவன் புறமுதுகுகாட்டி ஒடினான். அதைக் கண்ட அவ்வீரன் சிரித்தான். இக்காட்சியை இப்பாடலில் புலவர் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

இறந்த வீரனுக்குத் தம் கடன் ஆற்றுவதற்காகப் பாணர்கள் சாப்பண்ணில் யாழிசைப்பது பாண்பாட்டு. இப்பாடல், வீரன் யானையைக் கொன்று வீழ்த்தியதைப்பற்றிக் கூறுகிறது. ஆனால் இப்பாடலில் வீரன் இறந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்னும் துறையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்குரியது.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #282 on: May 23, 2015, 10:26:02 PM »


புறநானூறு, 285. (தலைபணிந்து இறைஞ்சியோன்!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: சால்பு முல்லை.
===========================================

பாசறை யீரே! பாசறை யீரே!
துடியன் கையது வேலே; அடிபுணர்
வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே; காண்வரக்
கடுந்தெற்று மூடையின் ………..

வாடிய மாலை மலைந்த சென்னியன்
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
மூரி வெண்டோள் ……..
சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ!

மாறுசெறு நெடுவேல் மார்புளம் போக
நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே.
அதுகண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே

(பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை)

அருஞ்சொற்பொருள்:-

பாசறை = படை தங்குமிடம்
துடியன் = துடி என்னும் பறையை அடிப்பவன்
புணர் = சேர்த்த
வாங்கு = வளைவு
இரு = கரிய
மருப்பு = யாழின் தண்டு
தொடை = யாழின் நரம்பு
தோல் = கேடயம்
கடுதல் = மிகுதல்
தெற்று = அடைப்பு
மூடை = மூட்டை
மலைதல் = அணிதல்
சென்னி = தலை
அயர்தல் = செய்தல்
மொசித்தல் = மொய்த்தல்
மூரி = வலிமை
உகு = சொரி, உதிர்
செறுதல் = சினங்கொள்ளுதல்
பரந்தோர் = பரந்த அறிவுடைய சான்றோர்
இறைஞ்சுதல் = தாழ்தல், வணங்குதல், கவிழ்தல்
குருசில் = குரிசில் = தலைவன்
பிணங்குதல் = பின்னுதல்
அலமரல் = அசைதல்
தண்ணடை = மருத நிலத்தூர்
இலம்பாடு = வறுமை
ஒக்கல் = சுற்றம்
கரம்பை = சாகுபடி செய்யக்கூடிய நிலம்
நல்குதல் = அளித்தல்

இதன் பொருள்:-

பாசறை=====> மூடையின் ………

பாசறையில் உள்ளவர்களே! பாசறையில் உள்ளவர்களே! தலைவனின் வேல் துடியனின் கையில் உள்ளது; அவன் கேடயம், யாழின் அடியில் இணைக்கப்பட்ட வளைந்த கரிய தண்டோடு, இனிய இசையை எழுப்பும் நரம்புகளுடன் கூடிய சிறிய யாழையுடைய பாணனின் கையில் உள்ளது. மிகவும் நெருக்கமாக அடுக்கிய மூட்டைகள் போல ….....

வாடிய=====> செம்மலுக் கோஒ!

வாடிய மாலை அணிந்த தலைவன், வேந்தனுக்கு வேண்டிய செயல்களைச் செய்யும் அரிய சுற்றத்தாரோடு நெடிய அரண்மனைக்கு வந்தான். பகைவர்கள் எய்த அம்புகள் மொய்த்த வலிய தோள்…. நிலத்தைச் சேறாக்கும் குருதி சொரிந்தான்.

மாறுசெறு=====> எனவே

ஐயோ! பகைவர்கள் சினத்துடன் எறிந்த நெடிய வேல் அவன் மார்பை ஊடுருவிப் புதைந்து நின்றது. பிணங்களிடையே நின்று போர்புரிதலால், மாமிசம் படிந்த கழலுடன் நிலத்தில் வீழ்ந்தான். அவன் வீழ்ந்ததைக் கண்டு, அங்கிருந்த சான்றோரெல்லாம், “கதிர்கள் தம்முள் பின்னிக்கொண்டு அசையும் நெற்கழனிகளையுடைய மருதநிலத்தூர்களை முன்னே இரவலர்க்குக் கொடுத்தான். இரவலராகிய சுற்றத்தின் தலைவனுக்கு எஞ்சியிருந்த, சாகுபடி செய்யக்கூடிய நிலத்தைப் பரிசாகக் கொடுத்தான்.” என்று புகழ்ந்தார்கள். அதைக் கேட்ட தலைவன் நாணித் தலைகுனிந்தான்.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஒரு தலைவனுக்கும் அவன் பகைவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பகைவர் எறிந்த வேல் அவன் மார்பில் பாய்ந்தது. தலைவனின் நிலைமையை வீரன் ஒருவன் பாசறைக்குத் தெரிவித்தான். அவ்வீரன் அச்செய்தியைத் தெரிவிக்கும் பொழுது, “பாசறையில் உள்ளவர்களே! நம் தலைவனின் வேல் துடியனின் கையில் உள்ளது. அவன் கேடயம் பாணனின் கையில் உள்ளது. பகைவர் எறிந்த வேல் அவன் மார்பை ஊடுருவியது; அவன் நிலத்தில் வீழ்ந்தான். சான்றோர் பலரும் அவனைச் சூழ்ந்து நின்று தலைவனைப் பாராட்டினர். அவர்களின் பாராட்டுக்களைக் கேட்டு அவன் நாணித் தலைகுனிந்தான்.” என்று அறிவித்தான். இதைக் கேட்ட அரிசில் கிழார் இப்பாடலை இயற்றியுள்ளார். இப்பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #283 on: May 23, 2015, 10:27:05 PM »
புறநானூறு, 286. (பலர்மீது நீட்டிய மண்டை!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: வேத்தியல்.
===========================================

வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே!

அருஞ்சொற்பொருள்:-

செச்சை = கடா (கிடாய்)
மண்டை = இரப்போர் கலம் (மண்டை என்ற சொல் கள் குடிக்கும் பாத்திரத்தையும் குறிக்கும். இது கள்ளுக்கு ஆகுபெயராக வந்துள்ளது)
கால்கழி கட்டில் = காலில்லாத கட்டில் (பாடை)
அறுவை = சீலை, ஆடை

இதன் பொருள்:-

வெண்மையான நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்கள் போலத் தன்னைப் போன்ற இளைஞர்கள் பலர் இருக்கவும், அவர்களுக்கு மேலாக என் மகனுக்குத் தரப்பட்ட கள், என் மகனைப் பாடையில் இருக்கச் செய்து தூய வெண்ணிறப் போர்வையால் போர்த்தும் நிலையைத் தரவில்லையே.

பாடலின் பின்னணி:-

ஒரு அரசன் பகைவரோடு போரிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய படையில் இருந்த வீரர்கள் பலர் இறந்தனர். ஒரு வீரனின் தாய், அரசனுக்குத் துணையாகப் போரிட்டு இறக்கும் பேறு தன் மகனுக்குக் கிடைக்கவில்லையே என்று தன் ஏமாற்றத்தைத் தெரிவிப்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

ஆடுகள் ஒன்றை ஒன்றுத் தொடர்ந்து பின் செல்வது போல், வேந்தனைப் பின் தொடர்ந்து செல்லும் வீரர்களின் ஒற்றுமையை ஒளவையார், “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை” என்று குறிப்பிடுகிறார். அரசனுக்காகப் போராடிப், போர்க்களத்தில் விழுப்புண்பட்டு இறப்பதுதான் வீரனுக்குப் புகழ்தரும் செயல் என்பதை இப்பாடல் மறைமுகமாகக் கூறுகிறது. மகன் இறக்காததால் தாய் ஏமாற்றமடைந்தாள் என்று நேரிடையாகப் பொருள் கொள்வது சிறந்ததன்று.

இப்பாடல் கரந்தைத் திணையையும் வேத்தியல் துறையையும் சார்ந்ததாக நூல்கள் கூறுகின்றன. ஆனால், இப்பாடலின் பொருளை ஆராய்ந்து பார்த்தால், இப்பாடல் கரந்தைத் திணையையும் வேத்தியல் துறையையும் சார்ந்ததாகக் கருதுவதற்குத் தகுந்த காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

Offline MysteRy

Re: ~ புறநானூறு ~
« Reply #284 on: May 23, 2015, 10:28:09 PM »
புறநானூறு, 287. (காண்டிரோ வரவே!)
பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: கரந்தை.
துறை: நீண்மொழி.
===========================================

துடி எறியும் புலைய!
எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம்புனை ஓடை அண்ணல் யானை

இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது? படினே,

மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே

அருஞ்சொற்பொருள்:-

துடி = ஒருவகைப் பறை
எறிதல் = அடித்தல்
புலையன் = பறை அடிப்பவன்
எறிகோல் = பறையடிக்கும் குறுந்தொடி
இழிசினன் = பறையடிப்பவன்
மாரி = மழை
பிறழ்தல் = துள்ளுதல்
பொலம் = பொன்
புனைதல் = அணிதல், அலங்கரித்தல்
ஓடை = யானையின் நெற்றிப் பட்டம்
அண்ணல் = தலைமை
இலங்குதல் = விளங்குதல்
வால் = வெண்மை
மருப்பு = விலங்கின் கொம்பு (யானையின் தந்தம்)
நுதி = நுனி
மடுத்தல் = குத்துதல்
பீடு = பெருமை
வியன் = மிகுதி
கூடு = நெற்கூடு
தண்ணடை = மருத நிலத்தூர்
யாவது = எது (என்ன பயன்?)
படுதல் = இறத்தல்
மாசு = குற்றம்
மன்றல் = திருமணம்
நுகர்தல் = அனுபவித்தல்
வம்பு = குறும்பு
இம்பர் = இவ்விடம்
காண்டீரோ = காண்பீராக

இதன் பொருள்:-

துடி=====> யானை

துடிப் பறையை அடிக்கும் பறையனே! குறுந்தடியால் பறையடிக்கும் பறையனே! கார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைக்குமாயினும், வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படைவந்து பாயினும், பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய யானைகள்

இலங்குவால்=====> படினே,

விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியால் குத்தினாலும், அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள் ஆழ்ந்த நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் நெல்வளமிக்க வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டில் புரளும் மருதநிலத்தூர்களைப் பெறுவதால் என்ன பயன்? வீரர்கள் போரில் இறந்தால்,

மாசில்=====> வரவே

அவர்கள் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து நன்கு இன்பம் அனுபவிப்பார்கள். அதனால், குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படைவருவதை இங்கிருந்தே காண்பீராக.

சிறப்புக் குறிப்பு:-

”போரில் இறந்தவர்கள் மேலுலக்த்திற்குச் செல்வார்கள். அங்குச் சென்று அங்குள்ள மகளிரை மணம்புரிந்து இன்பம் அனுபவிப்பார்கள்.’ என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாக இப்பாடலிலிருந்து தெரிகிறது.

பாடலின் பின்னணி:-

சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்பவன் தன் தந்தையோடு கொண்டிருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக, தந்தையோடு வாழாமல் ஆமூரில் வாழ்ந்துவந்தான். அவன் ஆமூரை ஆண்ட மன்னனுக்குத் தானைத் தலைவனாகப் பணிபுரிந்தான். ஒருகால், பகை அரசனின் வீரர்கள் ஆமூரிலிருந்த ஆநிரைகளைக் கவர்ந்து சென்றனர். அவற்றை மீட்கும் பொறுப்பு கோப்பெரு நற்கிள்ளிக்கு உரியதாயிற்று. அவன் தன் வீரர்களுடன் கரந்தைப் போருக்குச் சென்றபொழுது, வீரர்களை ஊக்குவிப்பதற்காகக் கூறியவற்றை சாத்தந்தையார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.