Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )
»
~ புறநானூறு ~
« previous
next »
Print
Pages:
1
...
4
5
[
6
]
7
8
...
22
Go Down
Author
Topic: ~ புறநானூறு ~ (Read 108136 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #75 on:
April 10, 2013, 08:15:59 PM »
புறநானூறு, 76. (அதுதான் புதுமை!)
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
==================================
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரள்அரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்தக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே!
அருஞ்சொற்பொருள்:-
அடுதல் = அழித்தல்
தொலைதல் = கெடுதல் (தோற்றல்)
ஊங்கு = முன்னர்
அரை = மரத்தின் அடிப்பக்கம்
மன்றம் = மரத்தடிப் பொதுவிடம்
சினை = மரக்கொம்பு
பவர் = நெருக்கம், அடர்ந்த கொடி
பாய்தல் = பரவுதல்
ஒலியல் = தழைத்தல் , வளைய மாலை
பாடு = ஓசை
கிணை = பறை
கறங்கல் = ஒலித்தல்
இதன் பொருள்:-
ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை. ஊர்ப்பொதுவில் உள்ள திரண்ட அடிப்பாகத்தை உடைய வேப்ப மரத்தின் பெரிய கிளையின் ஓளி பொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் கலந்து நெருக்கமாகத் தொடுத்த தேன் மிக்க மாலையை வளைய மாலையுடன் சிறப்பாகச் சூடி, இனிய போர்ப்பறை ஒலிக்கக் கண்ணுக்கு இனிய பசும்பொன்னாலான அணிகலன்களை அணிந்த நெடுஞ்செழியனின் செல்வம் பொருந்திய நாட்டையும் அவனுடைய பெருமையையும் அறியாமல், கூடிப் போர் செய்வோம் என்று தன்னிடத்தில் வந்த கழலணிந்த எழுவரின் நல்ல வலிமை அடங்குமாறு தான் ஒருவனாக நின்று போர்க்களத்தில் அவர்களை அழித்ததை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.
பாடலின் பின்னணி:-
தலையாலங்கானத்தில் இப்பாண்டிய மன்னன் வென்றதைப் புகழ்ந்து பாடிய புலவர் பலருள்ளும் இடைக்குன்றூர் கிழார் சிறந்தவர் என்பது மிகையாகாது. இவர், இப்போர் நிகழ்ந்த காலத்தில் போரைத் தாமே நேரில் பார்த்தது போல் எழுதியிருப்பதிலிருந்து இவர் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #76 on:
April 10, 2013, 08:19:44 PM »
புறநானூறு, 77. (யார்? அவன் வாழ்க!)
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
==================================
கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க அவன் கண்ணி! தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
அயினியும் இன்றுஅயின் றனனே; வயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே; அவரை
அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
கவிழ்ந்துநிலம் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும்அதனினும் இலனே
அருஞ்சொற்பொருள்:-
கிண்கிணி = சதங்கை (சலங்கை)
தொட்டு = செறிந்து (பொருந்தி)
பவர் = அடர்ந்த கொடி
மிலைதல் = சூடுதல்
சாபம் = வில்
கொடுஞ்சி,கொடிஞ்சி = தேர்முன் உள்ள அலங்காரவுறுப்பு
அயினி = சோறு
அயில்தல் = உண்ணுதல்
வயின் = முறை
உடன்று = வெகுண்டு
வம்பு = புதுமை
மள்ளர் = வீரர்
ஆர்ப்பு = பேரொலி
அட்டதை = அழித்ததை
மலிதல் = செருக்குதல்
இதன் பொருள்:-
கிண்கிணி=====> நின்றோன்
சலங்கை கழற்றப்பட்ட கால்களில் ஒளிபொருந்திய கழல்கள் அணிந்திருக்கிறான். தலைமுடி நெற்றியில் விழாமல் விலக்கிக் குடுமியாகக் கட்டப்பட்டத் தலையில் வேம்பின் ஒளிபொருந்திய தளிரை நீண்ட உழிஞைக் கொடியுடன் நெருக்கமாகத் தொடுத்துச் சூடியுள்ளான். சிறிய வளையல்களைக் கழற்றிய கைகளால் வில்லைப்பற்றிக்கொண்டு நெடுந்தேரின் முன் தளத்தில் அழகாக நிற்கின்றானே
யார்கொல்=====> இலனே
அவன் யார்? அவன் (அணிந்திருக்கும் மாலை) வாழ்க! அவன் மாலை அணிந்திருக்கிறான்; ஆனால் அவன் இன்னும் (சிறுவர்கள் அணியும்) தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்றுதான் சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! வரிசை வரிசையாக வெகுண்டு வந்த புதுப்புது வீரர்களைக் கண்டு அவன் வியக்கவும் இல்லை; அவர்களை இழிவு படுத்தவும் இல்லை. அவர்களை இறுகப் பிடித்து, அகன்ற ஆகாயத்தில் ஒலி எழுமாறு அவர்களது உடலைக் கவிழ்த்து நிலத்தில் படுமாறு வீழ்த்தி அழித்ததை நினைத்து மகிழவும் இல்லை; தன் செயலை நினைத்துப் பெருமிதமும் அடையவில்லையே!
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #77 on:
April 10, 2013, 08:22:01 PM »
புறநானூறு, 78. (அவர் ஊர் சென்று அழித்தவன்!)
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
======================================
வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள்
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து
“விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது” என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர,
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்
மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.
அருஞ்சொற்பொருள்:-
வணக்கல் = வளைதல்
தொடை = தொடர்ச்சி
வணங்கு தொடை = வீரக் கழல்
பொலிதல் = சிறத்தல், அழகு
நோன்தாள் = வலிய கால்
நோனுதல் = நிலை நிறுத்தல்
அணங்கு = வருத்தம்
கடுத்தல் = மிகுதல்
திறல் = வலி
முணங்குதல் = சோம்பல் முறித்தல்
அளை = குகை
செறிதல் = பொருந்தல்
உழுவை = புலி
மலைத்தல் = பொருதல்
அகலம் = மார்பு
சிலைத்தல் = சினங்கொள்ளுதல், கிளர்தல்
விழுமியோர் = பெரியோர், சிறந்தோர்
கொண்டி = கொள்ளை
வம்பு = புதுமை, நிலையின்மை
மள்ளர் = வீரர் (பகைவர்)
புல் = புன்மை, பார்வை மங்கல்
ஒல்லுதல் = இசைதல்
கழிதல் = சாதல்
தெண் = தெளிந்த
கறங்கல் = ஒலித்தல்
இதன் பொருள்:-
வணங்குதொடை=====> நம்மிற்
வீரக் கழல்கள் அழகு செய்யும், வலிய, நிலை தளராத கால்களையுடைய, வருத்தற்கரிய மிக்க வலிமையுடயவன் என் இறைவன் பாண்டியன் நெடுஞ்செழியன். குகையிலிருந்த புலி இரை தேடுவதற்காக சோம்பல் முறித்து வெளியே வருவது போல் அவன் போருக்கு வருகிறான். அவனுடைய வலிமையை (பொருதற்கரிய அகண்ட மார்பை) மதிக்காமல், “நாங்கள் சிறந்தவர்கள்; பெரியவர்கள். நம்மோடு
பொருநனும்=====> அட்டனனே
போர் புரிய வந்திருப்பவன் இளைஞன்; இவனைப் போரில் வென்றால் நாம் கொள்ளை கொள்ளக் கூடிய பொருட்கள் இங்கு பெருமளவில் உள்ளன” என்று ஏளனத்தோடு கிளர்ந்து எழுந்து அணியணியாக வந்த ஒளியிழந்த கண்களையுடைய பகைவர்கள் புறமுதுகு காட்டி ஓட, அவர்களைத் தலையாலங்கானத்தில் கொல்ல விரும்பாமல், அவர்களைத் தொடர்ந்து சென்று, அவர்களின் மகளிர் நாணம் கொண்டு இறந்து படுமாறு, அவர்களின் சொந்தமான ஊர்களிலேயே தெளிந்த போர்ப்பறையொலிக்க அவர்களைக் கொன்றான்.
பாடலின் பின்னணி:-
முந்திய பாடலில் (புறம் - 77) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் இளமையையும் அவன் பகைவரை வென்றதையும், அவ்வெற்றியினால் வியப்போ பெருமிதமோ அடையாதவனாக அவன் இருந்ததையும் பாராட்டிய புலவர் இடைக்குன்றூர் கிழார், இப்பாடலில் அவன் பகைவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களுடைய ஊரில் அவர்களை அழித்ததைப் புகழ்ந்து பாடுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
வம்பு என்னும் சொல் புதுமை அல்லது நிலையின்மை என்று பொருள்படும். போரிட வந்த வீரர்கள் கொல்லப் படுவதால் புதிய வீரர்கள் போருக்கு வருவதைக் குறிக்கும் வகையில் “வம்ப மள்ளர்’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #78 on:
April 21, 2013, 09:06:09 PM »
புறநானூறு, 79. (பகலோ சிறிது!)
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
======================================
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே?
அருஞ்சொற்பொருள்:-
மண்ணுதல் = மூழ்குதல்
குழை = தளிர்
மலைதல் = அணிதல்
தெண் = தெளிவு
கிணை = பறை
இயலல் = அசைதல் (நடத்தல்)
வம்பு = புதுமை, நிலையின்மை
மள்ளர் = வீரர் (பகைவர்)
தவ = மிக
இதன் பொருள்:-
தனது பழைய நகரத்தின் வாயிற்புறத்தே உள்ள குளிர்ந்த நீருடைய குளத்தில் மூழ்கி, பொதுவிடத்தில் உள்ள வேப்பமரத்தின் ஒளிபொருந்திய தளிர்களை அணிந்து, தெளிந்த ஒலியுடைய பறை முன்னே ஒலித்துச் செல்ல, அதன் பின்னர் யானையைப்போல் பெருமிதத்தோடு நடந்து கடுமையான போர் செய்யப் பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களத்திற்கு வருகிறான். அவனை எதிர்த்துப் போர் புரிவதற்கு அணியணியாகப் புதுப்புது வீரர்கள் பலர் வருகிறார்களே! பகற்பொழுது மிகச் சிறிதே (எஞ்சி) உள்ளதால், சில பகைவர்கள் தப்பிவிடுவார்களோ?
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #79 on:
April 21, 2013, 09:09:24 PM »
புறநானூறு, 80. (காணாய் இதனை!)
பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: தும்பை.
துறை : எருமை மறம். படை வீரர் புறமுதுகிட்ட நிலையிலும், தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் எதிரிட்டு நிற்றல்.
=======================================
இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே;
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லற் கடந்துஅடு நிலையே.
அருஞ்சொற்பொருள்:-
இன் = இனிய
கடுங்கள் = அழன்ற கள்
ஆங்கண் = அவ்விடத்து
மைந்து = வலிமை
மதன் = வலி
முருக்குதல் = அழித்தல், முறித்தல்
தார் = உபாயம்
நல்குதல் = விரும்பல்
பணை = மூங்கில்
தலை = இடம்
ஒசித்தல் = முறித்தல்
எற்றுதல் = மோதுதல்
இதன் பொருள்:-
இனிமையும் புளிப்பும் கூடிய (அழன்ற ) கள்ளையுடைய ஆமூரில் வலிமை பொருந்திய மற்போர் வீரன் ஒருவனின் மிக்க வலிமையை அழித்து, ஒரு கால் அவன் மார்பிலும், மற்றொரு கால் அவன் சூழ்ச்சியைத் தடுக்கும் வகையில் அவன் முதுகிலும் வைத்துப் பசியோடு மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப்போல் தலையும் காலும் ஆகிய இரண்டும் முறிய மோதிப் போரவையில் மற்போர் புரிய வந்த மல்லனை எதிர்த்து நின்று அவனைக் கொன்ற நிலையை வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய இவன் தந்தையாகிய தித்தன் விரும்பியோ அல்லது விரும்பாமலோ காண்பானாக.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #80 on:
April 21, 2013, 09:12:05 PM »
புறநானூறு, 81. (யார்கொல் அளியர்?)
பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
======================================
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே?
அருஞ்சொற்பொருள்:-
ஆர்ப்பு = பேரொலி
கார் = கார்காலம்
பெயல் = மழை
உரும் = இடி
அளி = இரக்கம்
ஆர் = ஆத்தி
செறிதல் = நெருங்குதல்
கண்ணி = மாலை
கவிகை = கொடுத்துக் கவிந்த கை
கவிதல் = வளைதல்
மள்ளன் = வீரன்
இதன் பொருள்:-
இவன் படையினரின் ஆரவாரம் ஏழு கடலினும் பெரிது. கார்காலத்து மழையோடு கூடிய இடியினும் அதிகமானது அவனது யானைகள். கோப்பெரு நற்கிள்ளி நாரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட ஆத்தி மாலையையும் இரவலர்க்கு ஈகை செய்து கவிந்த கையும் உடைய வீரன். அவன் கையில் அகப்பட்டோரில் யார்தான் இரங்கத் தக்கவர்? அவன் யாருக்கும் இரக்கம் காட்டப்போவது இல்லை. அனைவரும் கொல்லப்படுவது உறுதி.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #81 on:
April 21, 2013, 09:16:57 PM »
புறநானூறு, 82. (ஊசி வேகமும் போர் வேகமும்!)
பாடியவர்: சாத்தந்தையார்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
======================================
சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்று
உற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!
அருஞ்சொற்பொருள்:-
சாறு = விழா; தலைக்கொள்ளுதல் = கிட்டுதல்; ஈற்று = மகப்பேறு; உறுதல் = நேர்தல். 2. ஞான்றஞாயிறு = சாயுங்காலம். 3. நிணத்தல் = முடைதல், கட்டுதல்; இழிசினன் = புலைமகன். 4. போழ் = தோல் வார்; தூண்டு = முடுக்கு. மாது - அசைச் சொல். 6. ஆர் = ஆத்தி; தெரியல் = மாலை; நெடுந்தகை = பெரியோன்.
இதன் பொருள்:-
ஊரிலே விழா, அதற்குப் போகவேண்டும். மனைவிக்கோ குழந்தை பிறக்கும் நேரம். வீட்டிற்குச் சென்று அவளுக்குக் கைமாறு செய்தல் வேண்டும். மழை பெய்கிறது; கதிரவன் மறையும் சாயுங்காலமும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கட்டிலைப் பின்னிக்கொண்டிருக்கும் தொழிலாளியின் கையிலுள்ள ஊசி எவ்வளவு வேகமாக (கட்டில் பின்னும்) தோல் வாரைச் செலுத்துமோ, அவ்வளவு விரைவாக, ஆத்தி மாலை சூடிய பெரியோன் கோப்பெரு நற்கிள்ளி ஊரைத் தன்வசமாக்கிக்கொள்ள வந்த மற்போர் வீரனுடன் போர் நடத்தினான்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #82 on:
May 08, 2013, 09:07:12 PM »
புறநானூறு, 83. (இருபாற்பட்ட ஊர்!)
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை. ஒருதலைக் காதலைப்பற்றிய பாடல்கள் கைக்கிளை என்ற திணையில் அடங்கும்.
துறை : பழிச்சுதல். தலைவனைப் போற்றும் பாடல்கள் பழிச்சுதல் என்னும் துறையைச் சாரும்.
======================================
அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!
அருஞ்சொற்பொருள்:-
புனைதல் = அணிதல்
தொடுதல் = அணிதல்
மை = கருநிறம்
அணல் = தாடி
தொடி = கைவளை
கழித்தல் = விலக்கல், நேக்கல்
யாய் = தாய்
அடுதல் = வெல்லுதல், வருத்துதல், போரிடுதல்
முயங்கல் = தழுவல்
விதுப்பு = நடுக்கம்
மையல் = மயக்கம்
இதன் பொருள்:-
கழல் அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளைபோன்ற நற்கிள்ளிமேல் நான் கொண்ட காதலால் என் கைவளைகள் கழல்கின்றன. ஆகவே, நான் காதல்கொண்ட செய்தி என் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். அவன் வலிய தோள்களைத் தழுவவேண்டுமென்று என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், அவையில் பலரும் இருப்பதால் அவனைத் தழுவுவதற்கு நாணுகிறேன். நான் என் காதலை வெளிப்படுத்தாமலேயே என் தாய்க்கு என் காதல் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், நான் காதலை வெளிப்படுத்தினால் ஊர் மக்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற நாணம். அச்சத்திற்கும் நாணத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு நான் நடுக்கமடைவதுபோல், நற்கிள்ளியை ஆதரிப்பதா அல்லது மல்லனை ஆதரிப்பதா என்று புரியாமல் மயங்கும் இவ்வூர் ஒரு கட்சியாக இல்லாமல் இரு கட்சியாய் இருந்து என்றும் என்போல் பெரிய நடுக்கம் உறுக.
பாடலின் பின்னணி:-
இப்பாடலின் பின்னனியைப் புரிந்து கொள்வதற்கு, இப்பாடலோடு அடுத்து வரும் இரண்டு பாடல்களையும் (பாடல்கள் 84, 85) ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும். சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளிக்கும் ஓரு மல்லனுக்கும் இடையே ஆமூர் என்னும் ஊரில் மற்போர் நடைபெற்றது. நற்கிள்ளி ஆமூரைச் சார்ந்தவன் அல்லன். ஆனால் மல்லனோ ஆமூரைச் சார்ந்தவன். இருவருக்கும் இடையே நிகழ்ந்த மற்போரைப் பார்த்த மக்களில் ஒரு சாரார் நற்கிள்ளிக்கும் மற்றொரு சாரார் மல்லனுக்கும் ஆதரவு அளித்தனர். நற்கிள்ளி மல்லனை எதிர்த்து மற்போர் புரிந்த ஆற்றலையும், அவன் வலிமையும், அழகையும் கண்டு அவன் மீது நக்கண்ணையார் காதல் கொண்டார். இப்பாடலில், அவர் தன் காதலை மறைக்கவும் முடியாமல் வெளியில் காட்டிக்கொள்ளவும் முடியாமல் கலக்கமுற்று இருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறார். தான் என்ன செய்வது என்று தெரியாமல் இருவகையான எண்ணங்களோடு போராடுவதைப் போலவே ஆமுர் மக்களும் யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்ய முடியாமல் கலங்கட்டும் என்ற கருத்தை இப்பாடலில் நக்கண்ணையார் கூறுகிறார்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #83 on:
May 08, 2013, 09:10:28 PM »
புறநானூறு, 84. (புற்கையும் பெருந்தோளும்!)
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை.
துறை : பழிச்சுதல்
======================================
என்ஐ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போரெதிர்ந்து என்ஐ போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!
அருஞ்சொற்பொருள்:-
ஐ = தலைவன்
புற்கை = கஞ்சி, கூழ்
புறஞ்சிறை = அருகில், வேலிப்புறம்
ஏம் = மயக்கம், செருக்கு
உமணர் = உப்பு விற்பவர்
வெருவுதல் = அஞ்சுதல்
துறை = வழி.
இதன் பொருள்:-
என் தலைவன், கூழ் போன்ற உணவை உண்டும் பெரிய தோளை உடையனாக உள்ளான். நான் அவன் இருக்கும் இடத்திற்கு அருகிலிருந்தும் (அவனோடு கூட முடியாமையால்) பசலையால் பொன்னிறமானேன். போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், ஒலிமிக்க விழாக்கோலம் கொண்ட இவ்வூரில், செருக்குடன் போருக்கு வரும் வீரர்களின் நிலைமை, உப்பு விற்கப் போகும் உமணர்கள் தாங்கள் செல்லும் கடினமான வழியை நினைத்து அஞ்சுவார்களே, அதே நிலைமைதான்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #84 on:
May 08, 2013, 09:14:06 PM »
புறநானூறு, 85. (யான் கண்டனன்!)
பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை.
துறை : பழிச்சுதல்
======================================
என்ஐக்கு ஊர் இஃது அன்மை யானும்
என்ஐக்கு நாடு இஃது அன்மை யானும்
"ஆடுஆடு" என்ப, ஒருசா ரோரே;
"ஆடன்று" என்ப, ஒருசா ரோரே;
நல்ல பல்லோர் இருநன் மொழியே;
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று
யான்கண் டனன் அவன் ஆடா குதலே.
அருஞ்சொற்பொருள்:-
அம் = அழகு
முழா = முரசு
அரை = அடிமரம்
போந்தை = பனை
ஆடு = வெற்றி
இதன் பொருள்:-
என்ஐக்கு=====> மொழியே
என் தலைவன் இவ்வூரைச் சார்ந்தவன் அல்லன்; இந்த நாட்டைச் சார்ந்தவனும் அல்லன். ஆகவே, என் தலைவனுக்கும் மல்லனுக்கும் இடையே நடைபெறும் மற்போரைப் பார்ப்பவர்களில், ஒரு சாரார் நற்கிள்ளிக்கு “வெற்றி, வெற்றி” என்பர். மற்றொரு சாரார் அவனுக்கு வெற்றி இல்லை என்பர். நல்லவர்களாகிய பலரும் கூறும் இருவகையான கூற்றுக்களும் நன்றாகவே இருந்தன. (ஆனால், என்னால் அங்கே இருக்க முடியவில்லை.)
அஞ்சிலம்பு=====> ஆடா குதலே
நான் என் அழகிய சிலம்புகள் ஒலிக்க ஓடி வந்து என் வீட்டில் முரசு போல் அடிமரம் பருத்த பனைமரத்தில் சாய்ந்து நின்றவாறு அப்போரில் என் தலைவன் வெற்றி பெறுவதைக் கண்டேன்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #85 on:
May 08, 2013, 09:17:17 PM »
புறநானூறு, 86.
பாடியவர்: காவற் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம்.
பாடப்பட்டோன்:
திணை: வாகை
துறை: ஏறாண் முல்லை
=================================
"சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே"
அருஞ்சொற்பொருள்:-
கல் = மலை
அளை = குகை
ஓரும் மற்றும் மாதோ என்பவை அசைச் சொற்கள்
இதன் பொருள் :-
சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு, “உன் மகன் எங்கே உள்ளான்” என்று கேட்கிறாய். என் மகன் எங்கே உள்ளான் என்பதை நான் அறியேன். புலி தங்கிச் சென்ற குகையைப் போல் அவனைப் பெற்ற வயிறு இது. அவன் போர்க்களத்தில் தோன்றுவான். அங்கு போய்ப் பார்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #86 on:
May 08, 2013, 09:19:50 PM »
புறநானூறு, 87.(எம்முளும் உளன்!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.
திணை : தும்பை
துறை : தானை மறம்.
===============================
"களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே"
இதன் பொருள்:-
போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.
குறிப்பு : படைச்செருக்கு என்னும் அதிகாரத்தில் வள்ளுவரும் இதைச் சுட்டிச் செல்கிறார்.
என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின்றவர். (குறள் -771)
விளக்கம்.
பகைவர்களே, எம் தலைவனை எதிர்த்து அவன் முன்னே நிற்காதீர்கள். அவனை எதிர்த்து நின்றவர்களெல்லோரும் இப்போது நடுகல்லாக நிற்கிறார்கள் என்பதே.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #87 on:
May 08, 2013, 09:23:45 PM »
புறநானூறு, 88. (எவருஞ் சொல்லாதீர்!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: தும்பை.
துறை : தானை மறம். இருபடைகளும் வலிமையுடயவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்ற கருத்தைக் கூறுவது.
=======================================
யாவிர் ஆயினும், கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின்; ஓங்குதிறல்
ஒளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழவுமேம் பட்ட நற்போர்
முழவுத்தோள் என்ஐயைக் காணா ஊங்கே.
அருஞ்சொற்பொருள்:-
கூழை = பிற்படை
தார் = முற்படை
ஓம்புதல் = தவிர்தல்
திறல் = வலி
இலங்கல் = விளங்கல்
மழவன் = வீரன்
பெருமகன் = அரசன்
அம் = அழகு
பகடு = பெரிய, அகன்ற
காணா ஊங்கு = காண்பதற்கு முன்\
இதன் பொருள் :-
அதியமான் ஓங்கிய வலிமையும் ஒளிவிட்டு விளங்கும் நீண்ட வேலையுமுடைய வீரர்களுக்குத் தலைவன். சுடர்விடும் நுண்ணிய வேலைப்பாடுகளுடைய அணிகலன்களை அணிந்த அழகிய அகன்ற மார்பும் போர்க்கள வெற்றி விழாக்களில் மேம்பட்ட நல்ல போர்முரசு போன்ற தோளையுமுடைய என் அரசனாகிய அவனைக் காண்பதற்கு முன்னே நீங்கள் எவராய் இருப்பினும் முற்படையும் பிற்படையும் கொண்டு யாம் போரிடுவோம் என்று கூறுவதைத் தவிருங்கள்.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #88 on:
June 13, 2013, 07:40:24 PM »
புறநானூறு, 89. (என்னையும் உளனே!)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: தும்பை.
துறை : தானை மறம்.
=====================================
இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
அது போர்! என்னும் என்ஐயும் உளனே!
அருஞ்சொற்பொருள்:-
இழைத்தல் = செய்தல், பதித்துச் செய்தல்
ஏந்து கோடு = உயர்ந்த பக்கம்
மடவரல் = இளம்பெண்
உண்கண் = மை தீட்டிய கண்
வாள் = ஒளி
நுதல் = நெற்றி
விறலி = உள்ளக் குறிப்பு புறத்தில் வெளிப்பட ஆடுபவள் (நாட்டியம் ஆடும் பெண்)
தலை = இடம்
வன் = வலிய
விசி = கட்டு
தண்ணுமை = ஒருவகைப் பறை
வளி = காற்று
தெண் = தெளிந்த
கண் = முரசு முதலியவற்றில் அடிக்கும் இடம்.
இதன் பொருள் :-
“மணிகள் கோத்த அணிகள் விளங்கும் (உயர்ந்த பக்கங்களையுடைய) இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே! அகன்ற இடங்களுடைய உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ?” என்று என்னைக் கேட்ட போர்ப்படையுடன் கூடிய அரசே! எங்கள் நாட்டில், அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போல் வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல் காற்று மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு, “அது போர்ப்பறையின் முழக்கம்!” என்று பொங்கி எழும் என் அரசனும் உளன்.
பாடலின் பின்னணி:-
ஒருகால், அதியமானின் பகைவருள் ஒருவன் அவ்வையாரைப் பார்த்து, “ உங்கள் நாட்டில் போர் வீரர்கள் உளரோ” என்று கேட்டதற்கு, அவ்வையார், “எங்கள் நாட்டில் எறியும் கோலுக்கு அஞ்சாமல் சீறும் பாம்பைப் போல் வெகுண்டு எழும் வீரரும், போர்ப்பறைமேல் காற்று மோதினால் அந்த ஒலி கேட்டு போர் வந்துவிட்டது என்று பொங்கி எழும் அரசனும் உளன்” என்று பதிலளிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.
Logged
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221731
Total likes: 27345
Total likes: 27345
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ புறநானூறு ~
«
Reply #89 on:
June 13, 2013, 07:42:28 PM »
புறநானூறு, 90. (பொருநரும் உளரோ, நீ களம் புகினே?)
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: தும்பை.
துறை : தானை மறம்.
=====================================
உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்
மறப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய,
அரிமணல் ஞெமரக், கல்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை, மழவர் பெரும!
இருநில மண்கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீகளம் புகினே?
அருஞ்சொற்பொருள்:-
உடைதல் = தகர்தல், பிளத்தல்
வளை = வளையல்
கடுப்பு = ஒப்பு
அடை = இலை
மல்குதல் = நிறைதல், செழித்தல்
குளவி = காட்டு மல்லிகை
சாரல் = மலைப்பக்கம்
உடல்தல் = கோபங்கொள்ளுதல், பகைத்தல்
கணம் = கூட்டம்
மருளல் = மயங்குதல்
விசும்பு = ஆகாயம்
மாதிரம் = திசை
ஈண்டுதல் = நிறைதல் (சூழ்தல்)
பார் = நிலம்
இயங்கிய = புதைந்த
சாகாடு = வண்டி
ஆழ்ச்சி = தாழ்ச்சி, பதிவு, அழுந்துகை
சொலிய = நீங்க, பெயர
ஞெமிர்தல் = பரத்தல்
பக = பிரிய
பகடு = காளைமாடு
எழுமரம் = கணையமரம்
வழு = தவறு
மழவர் = வீரர்
இரு = பெரிய
சிலைத்தல் = ஒலித்தல், சினங்கொள்ளுதல்.
இதன் பொருள் :-
உடைந்த வளையல்களைப் போல் மலர்ந்த வெண்காந்தளும், இலைகள் நிறைந்த காட்டு மல்லிகையும் மணக்கும் மலைச்சரிவில் வலிய புலி தாக்கின் மான் கூட்டம் அங்கே எதிர்த்து நிற்குமோ? கதிரவன் சினந்தெழுந்தால், மயங்கிய ஆகாயத்திலும் மற்ற திசைகளிலும் இருள் சூழ்ந்து இருக்குமோ? பாரம் மிகுதியால் பண்டங்களைச் சுமந்து செல்லும் வண்டியின் அச்சு தரையில் இடித்துச் செல்லவும், நீரலைகளால் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும் கல் பிளக்கவும் பெருமிதத்தோடு வண்டியை இழுத்துச் செல்ல வல்ல காளைக்குப் போக முடியாத வழியும் உண்டோ? முழந்தாள் வரை நீண்ட, கணையமரம் போன்ற, குற்றமற்ற வலிய கைகளையுடைய மழவர் தலைவனே! நீ போர்க்களம் புகுந்தால் உன் பெரிய நிலத்தை கவர்ந்து கொண்டு ஆரவாரம் செய்யக்கூடிய வீரரும் உளரோ?
பாடலின் பின்னணி:-
ஒரு சமயம், பகைவர்கள் தன்னோடு போர் புரியக் கருதுகின்றனர் என்று அதியமானுக்குத் தெரிய வந்தது. போரின் விளைவுகளை அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவ்வையார், “ புலி சினந்தால் மான்கள் உயிர் தப்ப முடியுமா? ஞாயிறு சினந்தால் இருளும் உண்டோ? மிகுந்த பாரத்தைப் பெருமிதத்தோடு இழுத்துச் செல்லும் காளை போக முடியாத வழியும் உண்டோ? அது போல், நீ களம் புகுந்தால் உன்னை எதிர்த்துப் போரிடக் கூடிய பகைவரும் உளரோ?” என்று கூறி அதியமானை ஊக்குவிக்கிறார்.
சிறப்புக் குறிப்பு:-
“வளையுடந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்” என்று வேறு நூல்களிலும் (மலைபடுகடாம், 519)குறிப்பிடப்படுவதால், சங்க காலத்தில் வளையல்கள் சங்கு அல்லது முத்து போன்ற வெண்ணிறமான பொருட்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
Logged
Print
Pages:
1
...
4
5
[
6
]
7
8
...
22
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
வாழ்வியல் கருவூலங்கள் ( நூல் )
»
~ புறநானூறு ~