புதிய கார்களுக்கு தரப்படும் வாரண்டி எனப்படும் உத்தரவாதம் வாடிக்கையாளர்களுக்கு, தயாரிப்பாளருக்கும் இடையிலான சட்டப்பூர்வமான ஒப்பந்தம். கார் வாங்கிய பின் ஒருவேளை அதில் ஏதெனும் தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது பிரச்னைகள் எழும்போது பிரச்னையை கட்டணமின்றி இலவசமாக சரி செய்து தருவதற்கும் அல்லது சம்பந்தப்பட்ட பாகத்தை முற்றிலுமாக மாற்றி தருவதற்கும் வாரண்டி பயன்படுகிறது.
வாரண்டி கவரேஜ்:
எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் வாரண்டியின் கீழ் இருக்கும். பொதுவாக இரணடு ஆண்டுகள் வரை வாரண்டி கொடுக்கப்படுகிறது. தவிர, அடுத்து வரும் ஆண்டுகளுக்கும் கூட கூடுதல் கட்டணம் செலுத்தினால் நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் வாகன தயாரி்ப்பாளர்கள் வழங்குகின்றனர். இது ஒவ்வொரு நிறுவனங்களுக்கு இடையே மாறுபடும்.
வாரண்டியின் கீழ் வரும் பாகங்கள் குறித்து கொடுக்கப்படும் பிரசுரத்தை நன்கு படித்து தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில், பிரேக் பேட்கள், பல்புகள், கிளட்ச் டிஸ்க் மற்றும் ரப்பர் உள்ளிட்ட பாகங்கள் பெரும்பாலும் வாரண்டி கீழ் கொடுக்கப்பட்டிருக்காது. இதேபோன்று, டயர், பேட்டரி போன்றவற்றிருக்கு கார் தயாரிப்பாளர் வாரண்டி கொடுப்பதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் தனி வாரண்டி வழங்கப்படும். எனவே, வாரண்டி கார்டுடன் கொடுக்கப்படும் விபர அறிக்கையை தெளிவாக படித்துக் கொள்வது அவசியம்.
வாரண்டி நிபந்தனைகள்:
அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் மட்டுமே வாகனத்தை சர்வீஸ் செய்வது அவசியம். சர்வீஸ் கார்டில் கொடுக்கப்பட்டிருக்கும் கால அட்டவணையின்படி, சரியான கால அளவில் சர்வீஸ் செய்வதும் முக்கியம்.
இதைவிட முக்கியமானது காரின் எஞ்சின் மற்றும் பிற முக்கிய பாகங்களில் மாற்றங்கள் செய்யக்கூடாது. உதாரணத்திற்கு அதிக பிக்கப் கொடு்ப்பதற்காக எஞ்சின் மற்றும் புகைபோக்கியில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் வாரண்டி பெற இயலாது. இதேபோன்று, தயாரிப்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களை தவிர பிற சர்வீஸ் மையங்களில் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி சிலிண்டர் பொருத்தினாலும் வாரண்டி கிடைக்காது.
சிலர் கூடுதல் ஆக்சஸெரீஸ்களை வாங்கி பொருத்த விரும்பலாம். டீலர்களை விட வெளியில் குறைந்த விலையில் கிடைக்கும் ஆக்சஸெரீஸ்களை வாங்கி பொருத்தும்போது வாரண்டி நிபந்தனைகளை தெளிவாக படித்துக் கொண்டு பின்னர் வாங்கி பொருத்தினால் வாரண்டி பாதிக்காது.
வாரண்டி பெறுவது எப்படி:
உங்கள் வாகனத்தில் ஏதாவது பிரச்னை இருப்பதாக உணர்ந்தால் வாரண்டி கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்திற்கு செல்லுங்கள். அங்கு வாகனத்தின் பிரச்னை குறித்து தெரிவிக்க வேண்டும். வாகனத்திலுள்ள பிரச்னையை பரிசோதித்து அது தயாரிப்பு நிலையில் எழுந்த குறைபாடாக இருந்தால் இலவசமாகவே சரிசெய்து தருவர்.
சர்வீஸ் மையத்தின் சேவையில் அதிருப்தி ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட கார் தயாரிப்பாளரின் வாடிக்கையாளர் உதவி மையத்தில் புகார் கொடுக்கலாம். அவர்களின் வழிகாட்டுதலின்படி வாரண்டி பெற வாய்ப்பு அதிகம்.
டீலரின் தாமதம்:
வாரண்டி காலம் முடிவடைவதற்கு முன்பே ஒரு பிரச்னையை சொல்லி அது சரி செய்யப்படாமல் வாரண்டி காலம் முடிவடைந்துவிட்டாலும் வாரண்டி கொடுப்பது தயாரிப்பாளரின் கடமை. எனவே, சர்வீஸ் மையத்தில் கொடுக்கப்படும் எழுத்துப் பூர்வமான ஆவணங்களை கவனமாக பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆவணத்தை காட்டினால் வாரண்டி முடிந்து விட்டால் கூட உங்கள் வாகனத்தின் பிரச்னையை இலவசமாகேவ சரி செய்து தருவது தயாரிப்பாளரின் கடமை. மேலும், சர்வீஸ் மையங்களில் ஏதெனும் தாமதம் ஏற்பட்டாலும் பிரச்னை செய்யாமல் எல்லாவற்றையும் எழுத்துப்பூர்வமாக பெற்றுக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.
முதல் 6 மாதங்கள்:
வாகனம் வாங்கி முதல் 6 மாதங்களில் ஏதெனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் தெரிவித்து விடுங்கள். அது தயாரிப்பு நிலை குறைபாடாக கருதி பிரச்னைக்குரிய பாகங்களை இலவசமாக மாற்றித் தருவதோடு, லேபர் கட்டணமும் இல்லாமல் சரி செய்து தருவதற்கு வாரண்டியில் வழியுண்டு.
வாரண்டி கார்டுடன் கொடுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் விபர அறி்க்கை சட்ட மொழியில் இருக்கும் என்பதால் படிக்கும்போது புரியாமல் போகலாம். இதில், வாடிக்கையாளர்களை திசை திருப்பும் வகையிலான நிபந்தனைகள் இருக்கலாம். அது நம்மை ஏமாற்றும் வகையில் இருக்கும் வாசகங்கள் இருந்தாலும் சரி பரவாயில்லை.
வாரண்டி பெற முற்படும்போது சர்வீஸ் மையங்களில் கொடுக்கப்படும் ஆவணங்களை மட்டும் பத்திரமாக சேகரித்து வைப்பது நலம். எந்தவொரு சட்ட நுணுக்கத்தையும் எதிர்கொள்ள அதுதான் நம்மை பாதுகாக்கும் கருவியாக இருக்கும்.