பாகம் 5:
தனக்குத் தெரிந்த தமிழில் அர்த்தங்களும் அனர்த்தங்களும் நிறைந்த கவிதைக்கிறுக்கல்களைப் பதிக்கையிலே யார் கண் பட்டதோ தெரியவில்லை. விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. எப்போதும் அவனுக்கு அதிககோபம் வராது. ஆயினும் காதலின் பிடியில் சிக்கியவனுக்கு மனமும் அறிவும் மரத்தது போலிருந்தது. அவளின் நினைவாக எழுதும் கவிதைகள் கண்டவர் கண்பட்டு சின்னாபின்னாமாவதை அவன் விரும்பவில்லை.
இப்படி தான் ஒரு நாள் அவளை நினைத்து மனம் உருகி எழுதினான்.
"மணியே
தனியே
இனியே வா
என் கனியே
முன்பனியே
உன்
விரல்நுனியே
என்னை
விட்டுவிட்டான்
சனியே"
தான் எழுதியதிலேயே ஆகச்சிறந்த கவிதையென இதைக் கொண்டான். எப்படியும் அவள் வருவாள் இதை படிப்பாள் இன்முகம் காட்டுவாளென எதிர்பார்த்து ஏங்கி நின்றான்.
அப்போது தானா அவன் வரவேண்டும். எல்லாம் தெரிந்த கவிஞன் போலும். என்னைவிடவா?! வரிக்கு வரி அர்த்தம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். நான் எழுதிய கவிதை புரியவில்லையாம். இவர்களெல்லாம் கவிஞர்கள் என்று ஏன் வெளியே சொல்லிக் கொண்டு திரிகிறார்களோ? இத்தனை எளிதான கவிதையே புரியவில்லை. பின் சங்க இலக்கியம் எங்கே புரிய போகின்றது. பதில் எழுதினான். '
'காதலியே கண்ணின் மணி போன்றவளே, கனி போல இனிமையானவளே, உன் சுற்றத்தாரை விட்டு என்னுடன் பேச தனியே வா. முன்பனிக்காலை பொழுதில் என்னருகில் நீ இருக்கையில் உன் விரல்நுனியில் ஸ்பரிசம் படும் போது என்னை இதுவரை ஆட்கொண்டிருந்த ஏழரைநாட்டு சனியும் விட்டுவிட்டான். இனி எனக்கு நல்ல காலம் தான். நீ என்னருகில் இருக்கும்வரையில்'
புரியாத மனிதர்கள். எதற்கு புரியவைக்க வேண்டும்? அவளுக்கு மட்டும் புரிந்தால் போதும். இவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை. ஆனால் ஏனோ தெரியவில்லை. அவர்கள் மறுபடியும் விமர்சனம் செய்தனர்.
'காதலியை சனியுடன் ஒப்பிட்ட மாதிரி அல்லவா இருக்கிறது'
அதீத கோபம் வந்தது. தன் கவிதைகளை விமர்சித்ததாலா இல்லை காதலி அந்த விமர்சனங்களையெல்லாம் படித்துவிட்டு தன் கவிதை பிடிக்கவில்லை என சொல்லிவிடுவாளா?.கோபம் இருமடங்காகியது. வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாய் யார் இவர்கள். காதலைப்பற்றி என்ன தெரியும்? இல்லை காதலியைப் பற்றி என்ன தெரியும்? முகம் காணாமல் காத்திருப்பதன் வலி புரியுமா? மனதில் இதுவரை கேட்ட கெட்ட வார்த்தையெல்லாம் உதித்தது. நாகரிகம் கருதி தவிர்த்தான்.
சும்மாவா சொன்னார்கள் விதி வலியது. அவள் அவன் கவிதைகளை படித்தாள். அதிலும் அதற்கு வந்த விமர்சனங்களை இன்னும் படித்தாள். அவனுடன் பேசுகையில்
"உன் கவிதையைப் படித்தேன். ஆனாலும் தெரியவில்லை. ஏனோ ஈர்க்கவில்லை"
நொறுங்கிப் போனான். ரொம்பவே கஷ்டப்பட்டு எழுதியிருந்தான் அந்த கவிதையை. இதுவும் பிடிக்கவில்லை என்கிறாளே. அவர்கள் மேல் கோபம் கோபமாக வந்தது.
"ஏன் பிடிக்கலை?"
"அங்கே எழுதியிருந்தார்களே படிக்கவில்லை. சில இடங்கள் இடறுதென்று. என்று உன் கவிதையை படிக்கும் ஒருவர் விடாமல் பாராட்டி அதிசயிக்கிறார்களோ, என்று எனக்குள்றுன் கவிதை மூலம் பூகம்பத்தை ஏற்படுத்துகிறாயோ அன்று உனைக்காண வருகிறேன்"
முடிந்தது. இனி எத்தனை கவிதை எழுத. அதிலும் அவர்கள் விமர்சனம் என்னும் பேரில் என் கவிதையை சின்னாபின்னமாக்கி வருகிறார்கள். அவர்களை விடக்கூடாது. மனத்தில் ஆத்திரத்தின் அரங்கேற்றம். காதல் போதையின் தள்ளாட்டம். மனதில் தோன்றியதையெல்லாம் கவிதையாய் கிறுக்க ஆரம்பித்தான். அவர்களுடனான போராட்டம் தொடர்ந்தது. தன் கவிதையில் பிழை என்பதை ஒப்ப மனமில்லை. அதிலும் அவர்கள் வாயை எங்கனம் மூடுவது. அதற்கு அவர்கள் வெளியேறினால் தான் உண்டு. சூசகமாக தாக்கி எழுத ஆரம்பித்தான்.
படித்த அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை. அடுத்த முறை அழைக்கையில் சொன்னாள்.
"நீ என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?"
"உனக்கான கவிதைகள். ஏன்?"
"நீ எனக்காக எழுதுவதைக்காட்டிலும் அவர்களுக்காக எழுதுவது போலுள்ளது. என்மீது இன்னும் காதல் உண்டா?"
"சந்தேகமென்ன? உயிர்பிரிந்தாலும் என்காதல் இருக்கும்"
"அப்போ அவர்களே ஒத்துக்கொள்ளும் படி கவிதை எழுத ஏன் தாமதம்? இதில் நம் காதலும் நானும் சிக்கித் தவிப்பது உனக்கு தெரியவில்லையா என்ன?"
மனம் பொறிந்தது. அவர்களால் தான்.
"அது சரி, அவர்களை தாக்கி வேறு எழுதுகிறாய். உன் பொறுமை அவ்வளவு தானா?"
பொறிக்குள் சிக்கிய எலியாய் உணர்ந்தான். இப்போது என்ன தான் செய்வது? இதற்கு முடிவு தான் என்ன? பொறுமை காக்க வேண்டுமானால் அவர்களை எப்படி சமாளிப்பது?
யோசித்து யோசித்து தலைவலித்தது. முகம் தெரியா காதலியும் அவர்களும் அவனை சித்ரவதை செய்தனர். கண் இருண்டது. தலைசுற்றியது. தலையைப்பிடித்து அலறினான். கண்திறந்து பார்த்தாலும் இருட்டாய் இருந்தது. அவன் எதுவுமே புரியாத தெரியாத ஒரு வெளியில் அவன் தூக்கியெறியப்பட்டான்.