என் குணங்கள்
முள் முளைத்து
கீறிவிடுகின்றன் உன்னை...
அரக்கத்தனம் வழியும்
அந்த பொழுதுகளில்
பேய்க்குரல் கொண்டு
அலறும் என்னை
எப்படி சகிக்கிறாயோ...
நீ எண்ணிய கணவனின்
அம்சம்
ஒரு விழுக்காடாவது
என்னிடம் உள்ளதா ?
ஒவ்வொரு பெண்ணுக்கும்
கணவன் நிறைவேற்ற வேண்டிய
விருப்பங்கள் இருக்கும்..
அதில் எத்தனை
நான் நிறைவேற்றி இருக்கிறேன் ?
உன் கனவு கோட்டையின்
எத்தனை சுவர்களை
நான் தகர்த்திருக்கிறேனோ ?
என் கோபம் உடைத்து
கண்ணாடித் துண்டுகளாய்
உன் வெறும் மனதில்
வீசிய வார்த்தைகளை எண்ணுகையில்
இதயத்தை மெல்ல அறுக்கிறது
நீ அழுத கண்ணீர் துளிகள்...
நீயோ-
வழக்கம் போல்
என்னை எழுப்பி
எதுவுமே நடக்காத தோரணையில்
காப்பி தருகிறாய்
சிரித்த முகத்துடன்.....