Author Topic: பழம்  (Read 8183 times)

Offline Global Angel

பழம்
« on: July 26, 2012, 03:52:04 AM »

பழம்


பல்வேறு பழங்கள்

பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழம் என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் காய் என வழங்கப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரை கொண்டவை. இது பழத்தை உண்ண விலங்குகளையும், பறவைகளையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது. பழம் எனும் வார்த்தையை உச்சரிக்கும்போதே பழம் உண்ணும் முறையை உணர்த்தும் வகையில் உள்ளது .'ப' எனும்போது பழத்தை வாயில் வைக்கும்போதான உணர்வும் 'ழ'எனும்போது பழம் வாய்க்குள் செல்வது போலும் 'ம்' எனும்போது விழுங்கிய உணர்வும் தோன்றும். இந்த சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை.



பழங்கள் பட்டியல்

மா
 பலா
 கொய்யா
 வாழை
 நெல்லி, நெல்லிக்காய்
 அன்னாசி
 கொடிமுந்திரி, திராட்சை
 பப்பாளி, பப்பாபழம்
 இலந்தை
 மாதுளை
 மங்குசுத்தான்
 தோடை
 குமளி, ஆப்பிள்
 நாவல்
 வில்வம்
 எலுமிச்சை
 புளி
 பனை
 அத்தி
 விளாத்தி, விளாம்பழம்
 கொவ்வை
 குழிப்பேரி (peach)
 பேரி (pear)
 kiwi
 watermelon
 blueberry
 strewberry
 cherry
 plum
 வெண்ணைப்பழம் (avocado)
 ஈச்சம்பழம்
 நாகதாளிப்பழம்
 வத்தகப்பழம் - water melaon
 வெள்ளரிப்பழம்
 அன்னமுன்னாப்பழம்
 ஜம்புக்காய்
 அணிஞ்சில்பழம்
 அத்திப்பழம்
 ஈச்சம்பழம்
 பாலைப்பழம்
 வெள்ளரிப்பழம்
 விலிம்பிக்காய்
 கொவ்வைப்பழம்
 காரைப்பழம்
 சூரைப்பழம்
 பூலாப்பழம்
 நாகப்பழம்
 துரியன் பழம்
 சீத்தாப்பழம்
 
 வகைகள்
 
பழங்கள் மூன்று வகைப்படுகின்றன. அவையாவன:
 எளிய பழம் (Simple Fruit)
 கூட்டுப் பழம் (Aggregate Fruit)
 Multiple Fruit
 
தமிழ்ச்சூழலில் பழங்கள்

 பன்டைய தமிழகத்தில் மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகள் என்று வழங்கப்பட்டன.
 ஔவை அதியமானுக்கு கொடுத்த நெல்லிக்கனியும், நாரதர் சிவனிடம் கொடுத்த ஞானப்பழமும் பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்தவை.
                    

Offline Global Angel

Re: பழம்
« Reply #1 on: July 26, 2012, 04:11:06 AM »
மா




மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. இவற்றுள் இந்திய சிற்றினமே (Mangiferra indica) உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மாம்பழம் உலகெங்கும், குறிப்பாக ஆசியாவில், கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன

வரலாறு
 
இந்தியாவின் வேதங்களில் மா பற்றிய குறிப்புகள் அதை கடவுள்களின் உணவாகக் குறிக்கின்றன. மேங்கோ(Mango) என்ற ஆங்கிலப் பெயர் 'மாங்காய்' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானதே ஆகும். மேலும் மாம்பழம் பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும்.
 
இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரென்சு மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தனர்.

மாமரம்

மாமரம் 35 - 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. இவை 15 - 35 செ.மீ நீளமும், 6 - 16 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை மிகச்சிறியதாக, 5 - 10 மி.மீ. நீளமுடைய இதழ்களையும், மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன. பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.
 
மாம்பழம் நீன்ட காம்புகளுடன் மரக்கிளைகளில் கொத்தாய் தொங்கும். பழங்கள் 10 - 25 செ.மீ நீளமும், 7 - 12 செ.மீ விட்டமும், 2.5 கிலோகிராம் வரை எடையும் உடையவை. காய்கள் பச்சையாகவும், பழங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பெருபாலும் இரகத்தைப் பொருத்து நிறம் மாறினாலும், சூரியன் படும் பாகங்கள் சிவப்பாகவும், மற்ற இடங்கள் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கிறது. பழத்தின் நடுவில் கடின ஓடுடைய ஒற்றை விதை காணப்படும். இரகத்தைப் பொருத்து இந்த ஓடு நார்களுடனோ வழுவழுப்பாகவோ இருக்கும். விதை 4 - 7 செ.மீ நீளமும், 3 - 4 செ.மீ அகலமும், 1 செ.மீ தடிமனும் கொண்டு, ஒரு மெல்லிய விதை உறையுடன் இருக்கும்.



மா வளர்ப்பு


மாமரங்கள் ஆசியா, அமெரிக்கா, தென் மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் பூமத்தியரேகைப்பகுதிகளிலும், பிற உறைபனியற்ற பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. மாமரம் வளர்ப்பது எளிது; மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரகங்கள் வெவ்வேறு குணங்களுடன் கிடைக்கின்றன. உலகிலேயே, அதிகம் அப்படியே உண்ணப்படும் பழம் என்ற சிறப்பு மாம்பழத்தையே சாரும். ஹவாய் தீவுகளின் சில காடுகள் வேற்று நாடுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட மாமரங்களால் நிறைந்திருக்கின்றன.

மண் மற்றும் தட்பவெப்பம்

 
நல்ல வடிகால் வசதியும் சற்றே அமிலத்தன்மையும் (pH 6-7) உள்ள எந்த மண்ணிலும் மாமரங்கள் நன்கு வளரும். மேற்கூறியவாறு, உறைபனியற்ற எந்த பகுதிகளிலும் மாமரங்கள் வளரும்; ஆனால், 12-15 பாகை C வெப்பநிலைக்குக் கீழே வளர்ச்சி குன்றிவிடும். 15 பாகை C க்கு கீழேயும், 40 பாகை C க்கு மேலும் பூக்கள் உதிர்ந்து, மகரந்தம் குறைவதால் காய் பிடிப்பு குறைந்துவிடும். காய் முதிரும்போது அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. அதிக காற்று, பூக்களையும், காய்களையும் உதிர்த்து விடும். மாமரத்தின் இலைகளாலும், பூக்களாலும் சிறிதளவு உறைபனியை கூட தாங்க முடியாது. மாமரம் சுமார் -5 பாகை C வரை தாங்கவல்லது


மாங்கன்றுகள்

 
இந்திய மாம்பழ வகைகள் பெரும்பாலும் ஒட்டு மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. வேகமாக வளரக்கூடிய இரகத்தை சேர்ந்த ஒரு வருட மாங்கன்றின் மேல் விருப்பப்படும் இரகத்தினை ஒட்டுவது பொதுவான முறையாகும். சிலநேரம், மண்ணுக்கேற்ப உகந்த இரகங்களின் மேல் சிறந்த குணமுடைய மா இரகங்கள் ஒட்டப் படுகின்றன. இந்தியசீன வகை இரகங்கள் சில விதையிலிருந்தும் வளர்க்கப்படுகின்றன. இவை ஒரு விதையில் பல முளை கருக்களைக் (embryo) கொண்டுள்ளன.
 
தோட்டம் அமைக்கும் போது கன்றுகள் 40 - 50 அடி இடைவெளியில் 90x90x90cm pit (ஏக்கருக்கு சுமார் 100 மரங்கள்) நடப்படுகின்றன. சாதாரணமாக, மாமரத்தோட்டங்களில் கழித்து விடுதல் தேவையற்றது. எனினும், முதல் சில ஆண்டுகள் அடிப்பாகத்தில் 3 அடி உயரம் வரை கிளைகள் வளராமல் கழித்து விடுவது நல்லது. அதன் பிறகு மாமரங்கள் தாமாகவே விரும்பத்தகுந்த நிலைக்கு வளரும்.
 

பூப்பு, காய்ப்பு, அறுவடை


 
மாமரப் பூங்கொத்தில் சுமார் 4000 பூக்கள் இருக்கும். பூங்கொத்தில் பெரும்பகுதி ஆண் பூக்களாகவும் மற்றவை இருபால் பூக்களாகவும் இருக்கும். சாதாரணமாக, நிழலில் வளரும் பூக்கள் இருபால் பூக்களாக இருக்கும். உலர்ந்த அல்லது குளிர் தட்பவெப்பம், மாமரம் பூப்பதை தூண்டுகிறது. மேலும், எதிபான், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது நாப்தலீன் அசிடிக் ஆசிட் ஆகிய வேதிப்பொருட்களும் பூப்பதை தூண்டப் பயன்படுத்தப்படுகின்றன.
 
மாங்காய் நன்கு முற்றியதன் அடையாளம், அதன் நிறம் பச்சையிலிருந்து மஞ்சள் நிறமாவதாகும். பழத்தின் சதையும் உள்ளிருந்து வெளியாக மஞ்சளாக மாறும். முழுதாகப் பழுக்காமல் பாதியளவு மஞ்சளாக இருக்கும்போதே இவை அறுவடை செய்யப்படுகின்றன. பழங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே கையாலோ, நீண்ட கழியின் நுனியில் பொருத்திய கத்தியாலோ பறிக்கப்படுகின்றன. பழங்கள் கீழே விழாதவாறு ஒரு பையில் சேமிக்கப்படுகின்றன.
 
ஏற்றுமதிக்கான மங்காய்கள் நான்கு அங்குலம் காம்பு விட்டு பறிக்கப் படுகின்றன. இது பழத்தின் மேல் மாம்பால் கறை படுவதைத் தவிர்க்கிறது. பின்னர், பழங்கள் தேர்வு செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்படுகின்றன. பழ ஈக்களை நீக்கவும், பூஞ்சைப் புள்ளிகள் இல்லாதிருக்கவும் சுடுநீர் மற்றும் சுடுகாற்றினால் பதப்படுத்தப்பட்டு, 12 பாகை C க்கு அதிகமான வெப்பநிலையில் வைக்கப்படுகின்றன. இதற்கு குறைவான வெப்பநிலையில், மாம்பழத்தோல் கறுத்து அழுகத் துவங்கிவிடும். விற்பனைக்குத் தயாராகும்போது, பெரும்பாலும், கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில், எத்திலீன் வாயு செலுத்தப்பட்டு பழங்கள் சீராக பழுக்கவைக்கப்படுகின்றன.


மாம்பழ விளைச்சல்


உலகிலேயே மாம்பழம்தான் மற்ற எல்லாப் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழம். மாப்பழத்தின் விளைச்சல் வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம் ஆகிய மற்றெல்லாப் பழங்களைக்காட்டிலும் கூடுதல் ஆகும். உலகநாடுகள் மன்ற உணவு, வேளாண்மை நிறுவனம் (The Food and Agriculture Organization of the United Nations), கணித்தபடி 2001 ஆம் ஆண்டில் உலகில் 23 மில்லியன் டன் மாம்பழம் விளைவிக்கப்பட்டது[1]. இதில் இந்தியாவில் விளைந்த அளவு 12 மில்லியன் டன். இது உலக விளைவில் பாதிக்கு மேலாகும். சீனாவில் 3 மில்லியன் டன்னும், பாக்கித்தானில் 2.25 மில்லியன் டன்னும், மெக்சிக்கோவில் 1.5 மில்லியன் டன்னும் தாய்லாந்தில் 1.35 டன்னும் அடுத்து நிற்கும் நாடுகள். முன்னணி 10 நாடுகளின் மொத்த விளைச்சல் உலக விளைச்சலில் 80% ஆகும்


பயன்பாடு

மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. இந்தியாவில், இது மிக அதிக அளவில் காணப்படும் பழக்கம். பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில், மாம்பழக்கூழில் சர்க்கரை சேர்த்து உலர்த்தப்பட்டு சிறு துண்டுகளாக மிட்டாய் போலவும் உண்ணப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், மற்றொரு பிரபலமான பானம், மாம்பழத்தையும் தயிரையும் கலந்து செய்யப்படும் மாம்பழ லஸ்ஸி ஆகும்.

மாங்காயும், பலவிதமாக உலகெங்கும் உண்ணப்படுகிறது. இந்தியாவில், மாங்காய் துண்டுகள் மிளகாய்த் தூள் அல்லது உப்பு சேர்த்து உண்ணப்படுகின்றன. மேலும் மாங்காயைக் கொண்டு குழம்புகள், ஊறுகாய்கள், பச்சடிகள் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், மாங்காய்கள் ருஜக் அல்லது ரொஜக் எனப்படும் புளிப்பு பச்சடி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில், மாங்காய்கள் 'பகூங்க்' எனப்படும் மீன் அல்லது இறால் கொண்டு தயாரிக்கபடும் கூழுடன் உண்ணப்படுகின்றன. மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் சட்னி இனிப்பாகவோ, புளிப்பாகவோ, காரமாகவோ பல நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.
 
இந்தியாவில், மாங்காயைக் காயவைத்து அரைத்து 'அம்ச்சூர்' என்ற சமையல் பொடியாக பயன்படுத்தப்படுகிறது



உடல் நல பலன்கள்



மாம்பழச்சதையில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பெரும்பாலான மாம்பழ வகைகள் இனிப்பாக இருப்பினும், சில சற்றே புளிப்பாக இருக்கும். இரகத்தைப் பொருத்து பழச்சதை மிருதுவாகவோ, கூழாகவோ, உறுதியாகவோ இருக்கும்.
 
மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலும், கொப்புளங்களும் உண்டாக்கலாம். மாம்பாலில் இருக்கும் அமிலப்பொருட்களே இதற்கு காரணமாகும். இந்திய மக்கள் மாம்பழம் உண்பதால் வயிற்றுத் தொல்லைகள் சரியாகும், இரத்த இழப்பு நிற்கும், இதய நலம் உண்டாகும் என நம்புகின்றனர்.
 
இந்திய துணி வகைகளில் மாம்பழ வடிவம் அழகுக்காகப் பயன் படுத்தப்படுகிறது.


வகைகள் அல்லது இரகங்கள்
 தேமா (இனிப்பு மிக்கது} [2]
 புளிமா (புளிப்பு மிக்கது)
 கறுத்த கொழும்பான்
 வெள்ளைக் கொழும்பான்
 பங்கனப்பள்ளி
 மல்கோவா
 ருமானி
 திருகுணி
 விலாட்டு
 அம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு]
 செம்பாட்டான்
 சேலம்
 பாண்டி
 களைகட்டி
 பச்சதின்னி
 கொடி மா
 மத்தள காய்ச்சி[/color]
« Last Edit: July 26, 2012, 04:14:38 AM by Global Angel »
                    

Offline Global Angel

Re: பழம்
« Reply #2 on: July 26, 2012, 06:31:23 PM »

பலா


பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. விந்தையாக, உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது.




வரலாறு
 
பலா எங்கு தோன்றியது என்பது பற்றி சரியான குறிப்புகள் ஏதுமில்லை. எனினும், அது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.
 
தென்னிந்தியாவில், மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும். இந்தியாவில், 2000ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, சுமார் 14,286 ஏக்கர் பரப்பளவில் (சுமார் 1,00,000 மரங்கள்) பலா வளர்க்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் வீட்டுத்தோட்டங்களிலும், வெற்றிலை, காப்பி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களில் நிழலுக்காகவும் பலா வளர்க்கப்படுகிறது. இலங்கையில், முக்கியமாக மரத்திற்காகவும், தாய்லாந்தில் பழத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது.
 
பலா வளர்ப்பு
 
 இரகங்கள்
 
தென்னிந்தியாவில் இருவகை பலாக்கள் வளர்கின்றன.
 1. கூழச்சக்கா: சிறிய நாறுடைய மிக இனிப்பான சுளைகள்
 2. கூழப்பழம்: பெரிய, சுவையான விற்பனைக்கேற்ற சுளைகள்.
 

இவை அல்லாமல் இலங்கையின் தேன்பலா எல்லோராலும் மிக சிறந்தது என பாராட்டப்படுவதாகும். மேற்கூறிய பலா வகைகள் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
 
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சிலோன்' அல்லது 'சிங்கப்பூர்' பலா மிக விரைவில் பழம் தரக்கூடியதாகையால், 1949 இல் மிக பிரபலமடைந்தது. இந்தியாவில், சஹரன்பூர், கள்ளார் ஆகிய இடங்களிலுள்ள ஆராய்ச்சி நிலையங்கள் பல உயரிய பலா இரகங்களையும், பெயரிடப்படாத ஒரு கலப்பின இரகத்தையும் வெளியிட்டன.
 இலங்கையில் கூழன்பழம், வருக்கன் பழம் என இவை வகைப்படுத்தப்படும்.கூழன் சிறிய நார்த்தன்மையான பழம். வருகன் பெரிய சுவைமிகுந்த பழம்.
 
மண் மற்றும் தட்பவெப்பம்
 
பலாமரம் ஈரப்பதம் அதிகமுள்ள பூமத்தியரேகைப்பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. உறைபனியைத் தாங்கும் சக்தி பலாமரத்திற்கு இல்லை. மழை குறைவாக இருப்பின், நீர்ப்பாசனம் செய்ய வேண்டியது அவசியமாகும். இந்தியாவில், பலா மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையிலான இடங்களில் கூட காணப்படுகின்றன. ஆனால், 4000 மீட்டர் உயரத்திற்கு மேலான இடங்களிலிருந்து கிடைக்கும் பலாப்பழங்கள் குறைந்த தரமுள்ளவையாக இருக்கும்.
 
நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் பலா நன்றாக வளரும்; சுண்ணாம்பு பாங்கான நிலத்தில் சற்று மெதுவாகத்தான் வளரும். வேர்ப்பகுதியில் நீர் தேங்குவது பலா மரத்திற்கு உகந்ததல்ல; இதனால் மரங்கள் பழம் தராமலோ வாடியோ போய்விடும்.


பலாக் கன்றுகள்

பலா சாதாரணமாக விதை மூலமே வளர்க்கப்படுகிறது. நீரிலோ, 10% ஜிப்பரெலிக் அமில கரைசலிலோ ஊர வைப்பதன் மூலம் விதைகள் விரைவாக முளைக்கும். விதைகளை நிலத்தில் நேரடியாக நடாமல், நாற்றங்காலிலும் நடலாம். ஆனால், நாற்றுகளை விரைவில் நடாவிட்டால் அவை நாற்றங்காலிலேயே வேர் பிடித்து விடும். பலவிதமான ஒட்டு முறைகளில் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டாலும், அவை விதைசெடிகள் அளவு பிரபலமடையவில்லை. எனினும், காற்றில் வேர் பிடிக்கச்செய்தல், சிறு தண்டுகளை வேர் பிடிக்கச்செய்தல் ஆகிய முறைகள் மூலம் பலாச்செடிகள் உருவாக்கப்படுகின்றன. திசு வளர்ப்பு முறையிலும் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
நன்கு வளர்ந்த பலா மரம் 21 மீ உயரம் வரையும், தடித்த தண்டும் கிளைகளும் கொண்டதாயும் இருக்கும். பலா இலைகள் பசுமையான நீள்கோள வடிவில் இருக்கும். எல்லா பாகங்களுமே பிசுபிசுவென்ற வெண்ணிறப் பால் கொண்டிருக்கும். பொதுவாக, பலாச்செடிகள் 3 - 7 வருடம் முதல் காய்க்கத் தொடங்கும்


பலா பூப்பு, காய்ப்பு, அறுவடை
 
பலாமரம் ஆண் பூ, பெண் பூ என இருவகை பூக்கள் கொண்டது. ஆண் பூக்கள் கொத்தாக புதிய கிளைகளிலும், பெண் பூக்கள் கொத்தாக மரத்தண்டிலும், தடிமனான கிளைகளிலும் காணப்படுகின்றன. பூ பூத்த 3 - 8 மாதங்களில் பலாக்காய்கள் முற்றுகின்றன.
 
ஆசியாவில் பலாப்பழங்கள் முற்றும் காலம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆகும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 100 - 150 பழங்கள் வரை கிடைக்கும். பழங்கள் காம்பை அறுத்து மரத்திலிருந்து பறிக்கப்படுகின்றன. வெகுவாக பால் சிந்தினால் அது நன்கு முற்றாத பலாக்காய் என அறியலாம். நன்கு முற்றிய பலாக்காய்கள் சுமார் 40 கிலோ வரை எடை உடையவயாய் இருக்கும். பழத்தின் வெளிப்புறம் தடிமனான முட்களுடையதாயும், பச்சை நிறத்திலும் இருக்கும். உட்புறம் மஞ்சள் நிற சுளைகள், வெளிர் மர நிறத்திலான கொட்டைகளுடன் இருக்கும்.
 
சில விவசாயிகள் பழத்தின் நுனியை சற்று பிளந்து விடுவதன் மூலம் விரைவாக பழுக்க வைக்கின்றனர்.



சிங்களவர் பயன்பாட்டில்

இலங்கையின் தமிழர் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பலாவை ஒரு பழமாகவே பார்க்கப்படுகிறது. சிறப்பாக யாழ்ப்பாணத்தில் பலாச் சுளையுடன் பிட்டு சாப்பிடும் வழக்கமே உள்ளது. ஆனால் இலங்கையின் மத்திய மற்றும் தென்னிலங்கைப் பகுதிகளில் பலாவை பழமாக மட்டும் சாப்பிடுவதில்லை. அவற்றை கறியாக சமைத்து சாப்பிடும் வழக்கம் உள்ளது. குறிப்பாக கொழும்பில் உள்ள சிங்களவர் உணவகங்களில் பலாக்காய் கறி மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்றாகும். சிங்களவர்களின் பிரதான உணவுகளில் ஒன்றாகவே பலாக்காய் கறி பார்க்கப்படுகிறது. இதனை சிங்களவரின் பண்பாட்டுடன் தொடர்புடைய ஒரு உணவாகக் கூறுவோரும் உளர். இந்த பலாக்காயை நான்கு பருவங்களாக சிங்களத்தில் கூறுவர்.

பொலஸ் (இளம் பருவம்)
 
பலா மிகவும் இளம் பருவமான காலத்தில், அதாவது 6 முதல் 8 அங்குளம் வரையான வளர்ச்சியின் போது, இதனை சிங்களத்தில் "பொலஸ்" அல்லது "பொலஸ் கெடி" (காய்) என்றழைப்பர். தமிழில் பலாபிஞ்சு எனலாம். இந்த "பொலஸ்" எனும் பருவத்தில் பலாப்பிஞ்சுவின் உள்ளே சுளைகள் எதுவும் இருக்காது. அதனை பெரும் துண்டங்களாக வெட்டி சமைப்பர். இந்த கறி இறைச்சி கறிக்கு இணையான சுவையாக இருக்கும். இதனை ஒட்டுமொத்தமாக அனைத்து சிங்களவர்களும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவு வகையாகும். சாதாரண உணவகங்களில் இருந்து, நட்சத்திர சொகுசகங்கள் வரை இலங்கையில் இந்த "பொலஸ்" கறி மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இதன் சுவை காரணமாக கொழும்பு போன்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களும் பலாபிஞ்சு கறி சமைக்கப் பழக்கமாகியுள்ளதை காணலாம். குறிப்பாக "மாத்தறா பத்கடை" களில் இந்த கறி இருக்கும்.
 
கொத்து (நடுப்பருவம்)
 
பலா காய் ஓரளவான வளர்ச்சியின் போது, அதாவது உள்ளே சுளைகள் உருவாகுவதற்கான ஆயத்த வளர்ச்சி காலத்தின் போது அதனைப் பறித்து, வெளித்தோலை சீவி அகற்றிவிட்டு, கத்தியால் சிறுதுகல்களாக கொத்துவர். அதனாலேயே சிங்களத்திலும் இதன் பெயர் "கொத்து" அல்லது "கொத்து கெடி" (காய்) எனப்படுகின்றது. இதனை கறியாக சமைத்தாலும், சுவை வேறுப்பட்டதாக இருக்கும். அநேகமாக இது "சுண்டல்" வகையிலான ஒரு உணவாகவே இருக்கும்.
 
முற்றிய பருவம்
 
பலா பழுப்பதற்கு முன்னைய நிலையை, முற்றியப் பருவம் என்கின்றனர். பலா காய்களை கடைகளில் வாங்கும் பொது அது சரியாக முற்றியுள்ளதா என அறிய விரல்களால் சுண்டிப்பார்த்து அறியும் வழக்கமும் தென்னிலங்கை சமுகத்தினரிடம் காணப்படுகின்றது. சிலக் கடைகளில் சுழைகளை மட்டும் தனியாக எடுத்து விற்பனை செய்வதனையும் காணலாம். இந்த முற்றியப் பருவத்தில் சமைக்கும் கறியையே "பலாக்காய் கறி" என்பர். இதனை வெவ்வேறு விதமாக சமைப்பர். இந்த முற்றிய நிலை பலாக்காய் கறியின் சுவைக்கு இணையாக குறிப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் தேங்காய் பால்விட்டு வைக்கும் உருளைக்கிழங்கு கறிக்கு நிகரானதாக இருக்கும். இந்த பருவத்தில் கறியாக அல்லாமல் பலா சுளைகளை அவித்து முழுநேர உணவாக உட்கொள்வோரும் உளர்.
 
இலங்கை சிங்களவர் நடுவில் நான்கு காய்க்கும் பலா மரம் நின்றால், பஞ்சம் அற்ற வீடு எனும் சொல்வழக்கும் உள்ளது. அதாவது எத்தகை வறுமை நிலை தோன்றினாலும் பலா காயை அவித்து சாப்பிடலாம் எனும் பொருளே அதுவாகும்.
 
 நான்காவது பருவம்
 
பலா காய் பழுத்தப் பருவமாகும். இந்த நான்காவது பருவமான பலா பழத்தையே சமைக்காமல் உண்ணப்படுகின்றது.
 
இவற்றைத் தவிர பலா சுளைகளை பல்வேறு இனிப்பு சுவைப்பொருட்களாகவும் பயன்படுகின்றது.[1] இலங்கையில் யாழ்ப்பாணத்தவரின் வாழ்வில் பனை எத்தகைய முக்கியத்துவம் பெறுகிறதோ, அதே முக்கியத்துவம் சிங்களவர் வாழ்வில் "பலா" முக்கியத்துவம் பெறுகிறது.
 
இலங்கை வரலாற்றில் பலா
 
இலங்கை வரலாற்றில் 1977ம் ஆண்டு காலப்பகுதியில் சிறிமாவோ பண்டார நாயக்கா ஆட்சியின் போது, இலங்கையில் வரலாறு காணாத பஞ்சம் தோன்றியது. அக்காலங்களில் பெரும்பான்மையான சிங்களவர்களின் மூன்று நேர உணவாகவும் இந்த பலா காய் இருந்ததான குறிப்புகளும் செய்திகளும் நிறையவே உள்ளன. இது தொடர்பான பல நூல்கள், கொழும்பு விக்டோரியா பூங்காவின் பின்புறம் உள்ள நூலகத்தில் உள்ளன.



பலா பலகை
 
இலங்கை வடக்கு கிழக்கில் மிகவும் தரமானதும் நீண்டகால பயன்பாட்டிற்கு ஏற்றதுமாக முதிரை, பாலை, கருங்காலி போன்ற மரப் பலகைகளையே தெரிவுசெய்வர். அதேவேளை இலங்கையின் மத்திய, மேற்கு, தெற்கு பகுதியினர் தரமான பலகையாக பலா பலகையையே தெரிவு செய்வர். மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறத்தில் பார்ப்பதற்கும் அழகானவையாக பலா பலகைகள் இருக்கும். மிக நீண்ட காலப் பயன்பாட்டிற்கு ஏற்ற மிகவும் உறுதிவாய்ந்த பலகை, பலா பலகைகளாகும். இலங்கையில் விலை அதிகமான பலகையும் பலாபலகை ஆகும்.
 
வேறு நாடுகளில் பலா
 
பலா காயை கறியாக சமைத்து உண்ணும் வழக்கம், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாட்டவர்களிடமும் காணப்படுகின்றது. தாய்லாந்து மற்றும் பிலிப்பியன் போன்ற நாட்டவர்கள் பலா சுளைகளைக் கொண்டு பல்வேறு சுவை உணவுகளை தயார்செய்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
 
இலக்கியத்தில் பலா
 
பலா அடிமலரல் எனும் தனித்துவ இயல்புடையது. இதன் காரணமாக மரத்தின் பிரதான தண்டிலும் வேரிலும் பூத்தல் காய்த்தல் நிகழும். இதை தன்வயமாக்கி தமிழ் கவிஞர்கள் பல பாடல்களைப் படைத்துள்ளனர்.
 "கோரிகையற்றுக் கிடக்குதண்ணே இந்த வேரில் பழுத்த பலா" (பாரதிதாசன்)


"வேரோடு பலாக்கனி பழுத்துத் தொங்கும் வெள்ளாடு அதன் மீது முதுகு தேய்க்கும்" (காசி ஆனந்தன்)



பயன்பாடு

ஆசியாவில் பலாப்பழங்கள் பலவாறாக உண்ணப்படுகின்றன. பெரும்பாலும், நன்கு பழுத்த பழத்தின் சுளைகள் அப்படியே உண்ணப்படுகின்றன. சிறு காய்,மற்றும் முற்றிய காய்களின் சுளைகள் கூட கறியாக சமைத்தோ அல்லது மெல்லிய வறுவல்களாகவோ உண்ணப்படுகின்றன.
 
ஆனால், மேலை நாடுகளில் பலாப்பழத்தின் மணம் விரும்பத்தகாததாக கருதப்படுகிறது. எனவே, அவர்கள் பெரும்பாலும் முற்றிய காய் சுளைகளையே உண்கின்றனர். மற்ற பழங்களைப் போலவே பலாப்பழத்திலிருந்தும் சாறு, ஐஸ் கிரீம், பழக்கூழ் மற்றும் பல விதமான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
 
பலாப்பழத்தின் விதைகள் கூட ஆசியாவில் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை வறுத்தும், வேக வைத்தும், சர்க்கரைப்பாகில் ஊற வைத்தும் உண்ணப்படுகின்றன. இவற்றை அரைத்து மாவும் தயாரிக்கப்படுகிறது. பலாப்பூக்கள் கூட சிலரால் சமைத்து உண்ணப்படுகின்றன.
 
உணவாக மட்டுமின்றி, பலாப்பழத்தின் கடினமான தோல், பெக்டின் வகை கூழ்கள் தயாரிக்க உதவுகிறது. மேலும், இது புகையிலையை பதனிட பயன்படுகிறது.
 
உடல் நல பலன்கள்
 
பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.
 
அதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.
 
                    

Offline Global Angel

Re: பழம்
« Reply #3 on: July 26, 2012, 06:39:34 PM »

கொய்யா


கொய்யா அல்லது சிடியம் (Psidium) என இலத்தீன் மொழியில் அழைக்கப்படுவது ஒரு நிலைத்திணைக் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் அண்ணளவாக 100 இனங்கள் உள்ளன. மெக்சிக்கோவையும் நடு அமெரிக்காவையும் தென் அமெரிக்காவின் வடபகுதியையும் பிறப்பிடமாகக் கொண்ட இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் கடல் ஓட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளன. கொய்யா இன்று வெப்பவலய நாடுகளில் காணப்படுகிறது



கொய்யாவின் மருத்துவக் குணங்கள்

 கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.

 கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

 கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

 கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

 கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.

 கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


கொய்யாவின் பயன்கள்

கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள். கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி சந்தையில் உலா வருகின்றன.

 கொய்யாப்பழத்தைப் பதப்படுத்தி ஐஸ்கிரீம், வேஃபர்ஸ், புட்டிங்ஸ், மில்க்ஷேக் இவற்றோடு கலந்தும் விற்கப்படுகிறது. சில இடங்களில் கொய்யா ஜுஸ் பாட்டில்களில் அடைத்தும் விற்கிறார்கள் உலர வைக்கப்பட்ட கொய்யாவை பவுடராக்கி, கேக், புட்டிங்ஸ், ஐஸ்கிரீம், ஜாம், சட்னி போன்ற உணவுப் பொருட்களில் கலந்து விற்கிறார்கள்.
 கொய்யாப் பட்டை தோலைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.
 
பயிரிடத் தேவையான காலநிலை


 ஈரலிப்பான காலநிலையிலும் அதேபோல் உலர் பிரதேசங்களிலும் பயிரிடப்படக்கூடியது.
 மழை வீழ்ச்சி- 1000 முதல் 4000 மில்லி மீட்டர்.
 உயரம் - கடல் மட்டத்திலிருந்து 1500-2000 மீட்டர்.
 மண்- களி, மணல், இருவாட்டி எதிலும் பயிரிடலாம்.
 கார காடித்தன்மை -pH 4.5-9.0