Author Topic: உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்  (Read 1339 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கிறிஸ்துமஸ் என்ற இந்தத் திருநாளில், கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவார் என்பது சம்பிரதாயம். ஆனால் இந்த நன்னாளில் இயேசு கிறிஸ்துவுக்கு நாம் அன்பளிப்பு கொடுக்கலாம். இயேசு கிறிஸ்துவுக்கே அன்பளிப்பா!? சரி, அப்படி அவருக்கு எதைக் கொடுப்பது?




இயேசுவின் பெற்றோர், யோசேப்பு&மரியாள் ஆவார்கள். இதில் யோசேப்பு இயேசுவின் சரீரப் பிரகாரமான தகப்பனல்லன். இந்த யோசேப்பு ஏலியின் குமாரன் (லூக். 2:23). இவர் தாவீதின் ஊராகிய பெத்லகேமில் பிறந்தார். பின் நாசரேத் ஊருக்குப்போய் தச்சு வேலை செய்து கொண்டிருந்தார். இவர் மாமனாகிய யாக்கோபின் குமாரத்தி மரியாள். மரியாள் என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். எபிரேய மொழியில் மிரியாம் என அழைக்கப்படுகிறது. மரியாள் என்றால் கண்ணீர் என்று பொருள். இந்த மரியாளை யோசேப்பு விவாக பொருத்தனை செய்திருந்தான். ஆனால் அவள் கர்ப்பவதியாயிருந்ததை அறிந்து அவளை சேர்த்துக் கொள்ள தயங்கினான். அப்போழுது ஒரு தூதன் அவனுக்கு தரிசனமாகி தேவ திட்டத்தை வெளிப்படுத்தினபடியால், அவளை தள்ளிவிடாமல் தன் மனைவியாக சேர்த்துக் கொண்டு, அவள் தன் முதற்பேறான குமாரனை பெறுமளவும் அவளை அறியாதிருந்தான் (மத். 1:25). தூதன் சொன்னபடியே பரிசுத்த ஆவியினால் உருவான இயேசு, பெத்லகேமில் பிறந்தார். யோசேப்பு தன் மனைவியுடன் சேர்ந்து இயேசுவை தன் சொந்த குழந்தையைப்போல பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார்.




பெத்லகேம் இயேசு பிறந்த பெத்லகேம் என்ற ஊர் எருசலேமிற்கு தெற்கே ஐந்து மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இது எப்பிராத்தா மாகாணத்தில் உள்ளது (மீகா 5:2). இங்கு வளமான மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ளன. மேசியா பெத்லகேமில் பிறப்பார் என்று மீகா முன்னறிவித்தார் (மீகா. 5:2). இந்த தீர்க்க தரிசனம் மத்.2:6வது வசனத்தில் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளது. இயேசு தாவீதின் முன்னோர்கள் பிறந்த ஊரில் பிறப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இயேசு, தாவீதின் நகரமாகிய பெத்லகேமில் பிறந்தார் என்று லூக்கா 2:11வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து ஜீவ அப்பமாக இருக்கிறார். பெத்லகேம் என்னும் எபிரேய பெயருக்கு அப்பத்தின் வீடு என்றும் கிரேக்க மொழியில் ஆகாரத்தின் இருப்பிடம் என்றும் பொருள். இயேசு பிறந்த இடத்தில் சர்ச் ஆப் தி நேடிவிட்டி என்னும் பெயரில் ஒரு ஆலயம் கட்டியிருக்கிறார்கள். இந்த ஆலயம் ஒரு குகையின் மீது கட்டப்பட்டிருக்கிறது. கி.பி. 6ம் நூற்றாண்டில் ரோம பேரரசன் ஜஸ்டீனியின் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டது. கி.பி. 330ல் ரோம பேரரசர் கான்ஸ்டான்டைன் என்பவரின் தாயார் ஹெலெனா, இயேசு பிறந்த இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டினான். தற்பொழுதுள்ள ஆலயம், ஹெலெனா கட்டிய ஆலயத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது. இன்றும் நாம் பெத்லகேம் போய் இயேசு பிறந்த அந்த இடத்தை பார்க்கலாம்.




இயேசு கிறிஸ்து உலக சரித்திரங்களிலே பரிசுத்தமான, பிரபலமானது இயேசுவின் சரித்திரம். இயேசு என்ற பெயருக்கு எபிரேய மொழியில் இரட்சகர் அல்லது மீட்பர் என்று பொருள். கிரேக்க மொழியில் யோசுவா (ஏசு) என்பதாகும். யூதர்கள் தங்களை விடுவிக்க, மேசியா வருவார் என்று எதிர்பார்ப்போடு இருந்தார்கள். அந்த காலகட்டத்தில்தான் இயேசு பிறந்தார். இயேசுதான் யூதர்கள் எதிர்பார்த்த மேசியா என்பதை வெளிகாட்டும்படி ‘‘இயேசு கிறிஸ்து’’ என அழைத்தனர். கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பதாகும். அதாவது கிறிஸ்து என்றால் எபிரேய பாஷையில் மெசியாவைக் குறிக்கும்.

இயேசு என்ற பெயர் தேவனால் கொடுக்கப்பட்டது. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார் (மத். 1:21). இயேசு பெத்லகேம் ஊரிலே கி.மு. 4ம் ஆண்டில் பிறந்ததாக சரித்திர குறிப்புகள் கூறுகின்றன. அகஸ்துராயன், ரோம சக்ரவர்த்தியாயும் பெரிய ஏரோது, யூதேயா தேசாதிபதியுமாயிருந்தார்கள். உலகமெங்கும் ஒரே ராஜ்ஜியமாக இருந்தது. கிரேக்க பாஷை எங்கும் பேசப்பட்டது. யூதர்கள் எல்லா இடங்களிலும் பரவி காணப்பட்டனர். ஆகவேதான் தேவன் இந்த காலத்தை தெரிந்துகொண்டு உலகில் மாம்சமானார். சிறப்பான வெகுமதி உலகத்தையே படைத்த உன்னதருக்கு பிறக்க ஓர் இடமிருந்தது. அதுதான் மாட்டுத் தொழுவம். அந்த தொழுவம், அவருக்கு தொட்டிலாயிற்று. பின்பு அவரை பார்க்கும்படியாய் மேய்ப்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே அவர்கள் வந்து பார்த்து பாலகனாம் இயேசுவை பணிந்தனர். மற்றும் கிழக்கு தேசத்திலிருந்து சாஸ்திரிகளும் வந்து வினோதமான நட்சத்திரத்தினால் நடத்தப்பட்டு, விலையுயர்ந்த தங்கள் காணிக்கைகளை படைத்து பாலகனை தொழுதார்கள். தேவனுக்கு ஒரேயொரு குமாரன். அந்த குமாரனையும் நமக்காக தேவன் தியாகம் செய்தார்(யோவான். 3:16).





ஓ.ஹென்றி என்ற புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளரின் ஒரு கதை நம் உள்ளத்தை உடைத்து விடும். ஜிம்&டெல்லா இருவரும் அமெரிக்க இளம்
தம்பதியர். ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் நேசித்தார்கள். இருவரிடமும் அவர்களுக்கு சொந்தமான ஒரு விந்தையான பொருள் இருந்தது. டெல்லாவினுடைய கூந்தல் அவளது மகிமையாயிருந்தது. அவள் அதை தலையிலிருந்து அவிழ்த்து விட்டால் கீழே முழங்கால் வரை தொங்கி ஒரு ஆடையைப்போல மூடிக் கொள்ளும். ஜிம்மிடம் அவன் அப்பா கொடுத்த தங்கத்திலான வாட்ச் இருந்தது. அது அவனுக்கு பெருமையை தந்தது.
கிறிஸ்துமஸ் பரிசாக ஜிம்முக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்தாள் டெல்லா. கையில் ஒரேயொரு டாலர்தான் இருந்தது. அதனால் அவளது மகிமையாயிருந்த நீள முடியை விற்று 20 டாலரை பெற்றாள். அந்த தொகையில் ஜிம்மின் தங்க கடிகாரத்துக்கு சரியான செயின் இல்லாததால், அதற்கு ஒரு தங்க செயின் வாங்கினாள். இரவு வீடு திரும்பிய ஜிம், டெல்லாவின் தலையைப் பார்த்து திடுக்கிட்டான். மெதுவாய் தான் வாங்கி வந்த கிறிஸ்துமஸ் பரிசை டெல்லாவிடம் கொடுத்தாள். அது, தலைமுடியை அலங்கரிக்கும் கிளிப்! இக்கதையிலிருந்து அவர்கள் ஒருவருக்கொருவர் அதிகமாய் நேசித்தபடியினால் தங்களிடமிருந்த சிறந்ததை பரிசாக கொடுத்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இதைப்போலவே இயேசு நம்மை அதிகமாய் நேசித்தபடியினால்தான் இவ்வுலகில் மனிதனாக அவதரித்தார். இந்த இயேசுவை நாமும் அதிகமாய் நேசிக்க வேண்டுமல்லவா? வெறுமனே நேசித்தால் மட்டும் போதாது; நம்மிடமுள்ள சிறந்ததை அவருக்கு கொடுத்து அவரை நேசிக்க வேண்டும். அதுதான் உண்மையான நேசம்.
எதைக் கொடுப்பது?

பொன்னையோ, பொருளையோ, ஆஸ்தியையோ, அந்தஸ்தையோ அவர் கேட்கவில்லை. மாறாக ‘‘என் மகனே உன் இருதயத்தை எனக்குத் தா’’ (நீதி. 23:26) என்று அவர் நம்மைப் பார்த்து கேட்கிறார். ஆபரேஷன் செய்து அல்ல, நம்மை முழுமையாக அவருக்கு (அவரிடம்) அர்ப்பணிப்பதையே (சரணடைவதையே) இது குறிக்கிறது. மகா கேடு நிறைந்த இந்த இருதயத்தை அவரிடம் கொடுக்கும்போது அவர் நம்மோடு இருந்து நம் வாழ்க்கையில் நிறைவான மகிழ்ச்சியை உண்டு பண்ணுவார். இந்த சந்தோஷமான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் நம்மை அவருக்கு அர்ப்பணித்து, இயேசுவின் அருளால் சந்தோஷமாயிருப்போம். இதுதான் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாகும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்