திருவள்ளுவர் மீண்டும் இவ்வுலகிற்கு வந்தால்..
திருவள்ளுவர் உலகின் வழிகாட்டி.தமிழகத்தில் பிறந்தவர் ஈடு இணையற்ற இலக்கியம் தந்தவர்.சம நோக்குடைய சமரச ஞானி. தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல உலகிற்கே நீதியை வழங்கிய நல்லவர். இவருடைய திறமையை புகலாத புலவர்கள் இல்லை. உலகிற்கு சூரியன் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் திருக்குறள். அறத்துப் பால்,பொருட் பால்,காமத்துப் பால் என முப் பெரும் பிரிவுகளை கொண்டது. 133 அதிகாரங்களை கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்களையுடையது.
இத்தகைய ஒப்பற்ற திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் ஒரு நாள் திடீரென்று பூவுலகிற்கு விஜயம் செய்கிறார். திருவள்ளுவர் என்ற பெயருடன் பல விளம்பர பலகைகள் அறிவிப்பு பலகைகளைக் காண்கிறார்.வள்ளுவர் நகரம்,வள்ளுவர் அங்காடி,வள்ளுவர் தெரு,வள்ளுவர் கல்வி நிலையம்,வள்ளுவர் போக்குவரத்து வண்டி,வள்ளுவர் அச்சகம்,வள்ளுவர் புத்தக நிலையம்,வள்ளுவர் கணிணி நிலையம்,போன்ற விளம்பர பலகைகளை வள்ளுவர் கண்ணுற்றார். தனது பெயரை சொல்லி எத்தனை பேர் வயிற்றுப் பிழைப்பு நடாத்துகிறார்கள் எனத் தன மனதுக்குள் சொல்லி சிரிக்கிறார்.
வள்ளுவர் இரவில் ஒவ்வொரு நாளும் பி பி சி தமிழ் செய்திகளை கேட்கிறார்.வானொலியில் நிகழ்ச்சி தொடங்கு முன் ஒரு குறளும் அதற்கான பொழிப்புரையும் கூறப் படுவதையும் கேட்கிறார். தேமதுரத் தமிழோசை வானொலி மூலம் பரவுவதற்கு தான் ஆக்கிய திருக்குறள் அறிவுரையாக கூறப்படுவதை கேட்டு புளகாங்கிதம் அடைகிறார். தமது மனைவியார் வாசுகியும், தன்னையும் போல வாழ்வு வாழ வேண்டும் என பலர் வாழ்த்துவதையும் கேட்கிறார். இயக்குனர் பாலச்சந்தர் தனது கவிதாலய நிறுவன சினிமாவுக்கு வள்ளுவர் இலச்சினையை தேர்ந்தெடுத்துத் தொலைக் காட்சியிலும் பெரிய திரையிலும் காண்பிப்பதை கண்டு மகிழ்கிறார்.முதலாம் வகுப்பு தொடக்கம் பல்கலை கழக கல்வி வரை தமிழ் மொழி பாடத்திட்டத்தில் திருக்குறள் இணைக்கப்பட்டுள்ளதை காண்கிறார்.
"தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத் தோன்றுத்
துன்னற்க தீவினைப்பால் "
ஒருவன் தன்னிலே தான் பற்றுள்ளவனாயிருக்க வேண்டும் அதாவது சுயநலம் உள்ளவனாக இருக்க வேண்டும் இதையே இன்றுள்ள மனிதர்கள் கடைப் பிடிப்பதை கண்டு வள்ளுவர் கவலைபடுகிறார்.எத்துனை சிறிய ஒரு தீமையையும் பிறருக்கு செய்ய கூடாது என்பதை மனிதர் கடைப்பிடிக்காமையையும் கண்டு கவலைப்படுகிறார்.
பாரதியார், "வள்ளுவர் தனை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு" எனக் கருத்து செறிவோடு பாடியதை கேட்டு புளகாங்கிதம் அடைகிறார். " ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி: நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி" இங்கு இரண்டு என்பது ஈரடியாய் அமைந்த திருக்குறளை குறிக்கின்றதை கேட்டு மகிழ்கின்றார். தனது நூலுக்கு பலர் உரை எழுதிய போதும் பரிமேழகர் உரை சிறந்ததாக இன்று போற்றப் படுவதை காணுகிறார்.
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல் "
" உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"
ஆகிய குறள்கள் இன்று மதிப்பு பெறுவதை காண்கிறார்.
திருக்குறட் பொருட் பகுதியில் அரசர்,அமைச்சர்,படைத் தலைவர்,முதலியோரின் இலக்கணங்களாக கூறப் பட்டனவும் பிறவும் யாண்டும் காண்டற்கரியனவாம். ஒற்றும் நீதி நூலும் ஆகிய இரண்டும் அரசற்கு இரு கண்களாகும் என்று கூறப் பட்டுள்ளது. நாட்டின் இலக்கணங் கூறுங்கால் ஒரு நாட்டில் வாழ்வார் தேடி வருந்தாமல் வேண்டுவன எல்லாம் அங்கே பெறத்தக்கதாக இருத்தல் வேண்டும் என்னும் கருத்தமைய "நாடென்ப நாடா வளத்தன" என்கிறார். பிணியின்மையும்,நிரம்பிய செல்வமும்,விளைவும் இன்பமும் காவலும் ஆகிய இவ்வைந்தும் நாட்டுக்கு அழகு செய்வனவும் கூறப்பட்டுள்ளன. இதனால் அரசன் தன நாட்டை இத் தகுதிகளுக்கு உரியதாக அமைத்துக் கொள்ள வேண்டும். திருவள்ளுவரது இக் கூற்றுக்கள் இன்று அவமதிப்புப் பெறுவது கண்டு கவலையடைகிறார்.
பன்னாட்டு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளதை காண்கிறார். குறள் பலராலும் மேற்கோளாக எடுத்தாளப்படுவதை காண்கிறார். தன குறட்பாக்களுக்கு புதுப்பாக்கள் புனையப்பட்டுள்ளமை கண்டு கவலையடைகிறார். தான் கூறிய சமூக பொருளாதார அரசியல் கருத்துக்களுக்கு இன்றைய சமூகம் அளிக்கின்ற அவமதிப்பு கண்டும் மனம் கவலையடைகிறார். சுவாமி விபுலானந்தர் தான் இயற்றிய "கங்கையில் விடுத்த ஓலை" என்ற நூற் பகுதியில் சந்திரனுடன் உரையாடுகிறார். ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவனுடன் மாய்ந்து மறைந்து விடுமோ என்று சுவாமி சந்திரனை வினாவுகிறார். அதற்கு சந்திரன் குறளை மேற்கோள் காட்டுகிறான்.
"ஒருமைக் கண் தான் கற்ற கல்வி
எழுமைக்கும் ஏமாப்புடைத்து " என்ற திருக்குறளை உதாரணம் காட்டுகிறான். இவற்றையெல்லாம் கேட்டு திருவள்ளுவர் புளகாங்கிதம் அடைகிறார்.