மறுநாள், காலை கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி தங்கள் ஸ்டாப் ரூம் நோக்கி சென்று கொண்டிருந்த பாரதியையும் பவித்ராவையும்,
"பாரதி மேடம், உங்களை பார்க்க விவேக் சார் வெயிட் பண்ணிட்டு இருக்கார்...." என்ற ஆபிஸ் அட்டென்டன்ட் கோபாலின் குரல் தடுத்து நிறுத்தியது.
பாரதியும் பவித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பத்து வருடங்களுக்கு முன் இந்த கல்லூரியை இந்த கிராமத்தில் கட்ட கல்லூரி நிர்வாகம் முடிவு செய்த போது, விவசாய நிலங்களில் கல்லூரி கட்டுவதை எதிர்த்து அந்த கிரமத்து மக்கள் சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த ஊரில் பெரிய தொழிலதிபரான நரேந்திரன் தலையிட்டு, பிரச்னையை தீர்த்து வைத்தார். விவசாய நிலங்களை உபயோகப்படுத்துவது தவறென்ற போதும், இந்த கிரமத்திற்கு மட்டும் அல்லாது, நம் நாட்டிற்கும் பொறியியல் கல்லூரியும் அவசியம் என்பதை உணர்ந்திருந்ததால், நரேந்திரன், கல்லூரிக்கு தன்னுடைய தரிசு நிலங்களை குறைந்த விலைக்கு கொடுத்து விட்டு, விவசாய நிலங்களை மீட்டு விவசாயிகளிடமே கொடுத்தார். இதனால் அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு மட்டும் அல்லாது அந்த கல்லூரி நிர்வாகத்திற்கும் நரேந்திரன் மீது தனி மதிப்பு இருந்தது. அதுவும் நரேந்திரன் பரம்பரை பணக்காரர் அல்ல. ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த அவர், தன்னுடைய அயராத உழைப்பால், இன்று உயர்ந்த நிலையை அடைந்திருந்தார். தமிழகம் முழுவதும் அவருடைய நரேன் டெக்ஸ்டைல்ஸ் கிளைகள் பரப்பி சிறந்து விளங்கியது. நரேந்திரனுக்கு மூன்று பிள்ளைகள், இரண்டு மகன்கள், ஒரு மகள். தற்போது முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த மதுமதி தான் அவரின் கடைக்குட்டி மகள். அவரின் இரண்டாம் மகன் தான் விவேக் என அழைக்க படும் விவேகானந்தன்.
மற்ற ஆசிரியர்களின் மூலம் இந்த விஷயங்களை பாரதியும், பவித்ராவும் கேள்வி பட்டிருந்தனர்.
"சரி பவி, நான் போய் பாத்துட்டு வரேன்..." என்றாள் பாரதி.
"இல்லைடீ நானும் உன் கூட வரேன்...."
"ஏன்.. அப்படி என்ன அந்த விவேக் சிங்கமா புலியா? நான் தனியா போக பயப்பட?"
"நீ பயப்படுறேன்னு யார் சொன்னது? அந்த விவேக்குக்கு பாதுகாப்பா இருக்கும்னு தான் நானும் வரேன்னு சொன்னேன்...." என்றாள் பவித்ரா குறுநகையோடு.
பாரதிக்கும் சிரிப்பு வந்தது. எனவே இருவரும் ஆபீஸ் ரூமை அடைந்து, அங்கே காத்திருந்த விவேக்கையும், அவன் அருகில் இருந்த மதுமதியையும் கண்ட போதும் அவள் முகத்தில் அந்த புன்னகை இருந்தது.
"இவங்க தான் சார் பாரதி மேடம்" என்று கோபால் அறிமுகம் செய்து வைக்கவும், அவளை கூர்ந்து கவனித்தவனை, சலனம் இல்லாது நேராக பார்த்தாள் பாரதி.
அவன் முகத்தில் சிரிப்பின் சாயலே இல்லை... சரியான உம்மணாம் மூஞ்சி போலும் என நினைத்துக் கொண்டாள். சில வினாடிகள் சென்ற பின்னும், அவன் எதுவும் கேட்காது, அவளையே பார்த்த படி நிற்கவும், பொறுமையை இழந்து, தானே பேச்சை தொடங்கினாள் பாரதி.
"வணக்கம் சார்... உங்களையும் உங்க பாமிலி பத்தியும் ரொம்ப கேள்வி பட்டிருக்கேன்... இதுவரை நேரா சந்திக்க வாய்ப்பு கிடைக்கலை... இப்போ உங்களை சந்திச்சதில சந்தோஷம்...சொல்லுங்க சார்... என்னை பார்க்கனும்னு சொன்னீங்களாமே?" என்று விஷயம் அறியும் ஆர்வத்தோடு வினவினாள் பாரதி.
அவன் முகத்தில் ஆச்சர்யத்திர்க்கான அறிகுறிகள் தோன்றியது, பின், அருகில் இருந்த தங்கையை சுட்டி காட்டி,
"இவள் என் தங்கை... உங்களுக்கு அது தெரியாது போல...... பரவாயில்லை...."
"இல்லை சார்... எனக்கு தெரியும் மதுமதி உங்கள் தங்கச்சின்னு...." என்றாள் பாரதி மதுமதியை பார்த்து. மதுமதிக்கு நடந்துக் கொண்டிருக்கும் பேச்சில் அவ்வளவு விருப்பம் இல்லை என்பதை அவள் முகம் காட்டியது.
"ஓ!" என்றான் அவன் மீண்டும் ஆச்சர்யத்தோடு.
"இவள் எங்க வீட்டில் செல்ல பெண்... அவள் மனசு வேதனை படுவதை எங்களால் தாங்க முடியாது..."
அவன் சொல்ல வரும் செய்தி புரிந்த போதும், அவனே சொல்லட்டும் என முடிவு செய்தவளாக,
"நல்ல விஷயம் தானே சார்... இது போல் குடும்பம் கிடைக்க, மதுமதி ரொம்ப லக்கி தான்...." என்றாள்.
"உண்மை தான்... அதனால், நீங்கள் இனிமேல் உங்கள் கிளாஸ்ஸிலும் மதுமதியின் மனசு வருத்த படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..." என்றான் தங்கையை அன்புடன் பார்த்தபடி.
"சார்... இன்னைக்கு செகண்ட் ஹவர் நான் அவங்க கிளாசுக்கு போகனும்... வேணும்னா ஒன்னு செய்ங்க... எனக்கு பதில் நீங்க அவங்க கிளாசுக்கு மட்டும் பாடம் நடத்துங்க...."
அவளின் பதிலில் விவேக் மட்டும் அல்லாது, பவித்ராவும் சற்று அதிர்ந்து தான் போனாள். நல்ல வேலையாக, கோபால், வேறு வேலையாக சென்று விட்டதால் அருகில் வேறு யாரும் இல்லை.
"அதாவது.. உங்க விஷயத்தில நான் தலையிட கூடாதுன்னு சொல்றீங்க?" என்றான் அவன் சற்று குரலை உயர்த்தி.
"எஸ் சார்.... கிளாஸ்ல கேள்வி கேட்பதும், ப்ரிபேர் பண்ணிட்டு வர சொல்றதும், தப்பா எனக்கு தோணலை.... உங்க தங்கச்சியை கேள்வியே கேட்க கூடாதுனா பேசாமல், காலேஜில இருந்து நிறுத்திட்டு, ஹோம் ட்யுட்டர் வச்சு படிப்பை கண்டின்யு பண்ண சொல்லுங்க..." என்றாள் அவள் சற்றும் தளராமல்.
அண்ணனின் கோபத்திற்கும், குரலுக்கும், சற்றும் தயங்காமல் பேசும் பாரதியை ஆச்சர்யமாக பார்த்தாள் மதுமதி.
"என் தங்கச்சி இந்த காலேஜை விட்டு போக வேண்டியது அவசியமா இருக்காது... தேவை பட்டால் எனக்கு பிடிக்காதவங்க தான் போக வேண்டி இருக்கும்..."
"என்ன சார்... சின்ன குழந்தை மாதிரி பேசுறீங்க? கிளாஸ்ல கேள்வி கேட்டேன்... உங்க தங்கச்சிக்கு பதில் தெரியலை.. நாளைக்கு ப்ரிபேர் பண்ணிட்டு வான்னு சொன்னேன்.. இதிலே நான் ஏதாவது கடுமையா பேசினேனா? இல்லை தப்பு செஞ்சேனா? இந்த மாதிரி தொட்டா சிணுங்கியா இருக்க கூடாதுன்னு உங்க தங்கச்சி கிட்ட சொல்வீங்களா அதை விட்டுட்டு இப்படி வந்து ரவுடி மாதிரி என்னை மிரட்டுவீங்களா? போய் வேலை வெட்டியை பாருங்க சார்...." என்றாள் பாரதி சற்றும் அசையாது.
பவித்ராவும், மதுமதியும், வாயடைத்து போய் நின்றிருந்தனர்.
"ஏய் நீ ரொம்ப பேசுற.... இப்போவே போய் பிரின்சிபால் கிட்ட பேசி உன் சீட்டை கிழிக்க சொல்றேன்...."
"என்ன வேணா சொல்லுங்க... முதல்ல எனக்கு மரியாதை கொடுத்து பேசுங்க.... ஆனாலும் பாவம் சார் உங்க அப்பா... அப்படி ஒரு நல்லவருக்கு இப்படி ஒரு மகன்..." என்றாள் அவள் சற்று ஏளனமாக.
விவேக் கோபத்தின் உச்சிக்கே சென்றான். அவனின் பேச்சை யாரும் இதுவரை இப்படி உதாசீன படுத்தியது இல்லை. அதுவும் தங்கை முன் இப்படி மானத்தை வாங்கி விட்டாளே. இவளை இப்படியே விட கூடாது என முடிவு செய்தவனாய்,
"மது நீ கிளாசுக்கு போ... நான் போய் ப்ரின்சிபல்ல பார்த்து பேசிட்டு போறேன்..."
தலை அசைத்து விட்டு சற்று தயக்கத்தோடு அங்கிருந்து சென்றாள் மதுமதி. அவள் அங்கிருந்த சென்ற பின் மற்ற இருவரையும் கண்டுக் கொள்ளாது, திரும்பி, பிரின்சிபால் அறை நோக்கி சென்றான் விவேக்.
"ஹே பாரு, எதுக்குடி, இப்படி வாயாடுறே... ஒரு பேச்சுக்கு சரின்னு சொல்ல வேண்டியது தானே?"
"என்ன பவி நீயும் அந்த ஆள் கூட சேர்ந்து கிட்டு... சரியான லூசு... இவனுக்கு எல்லாம் எப்படி தான் கிளாஸ் எடுத்தாங்களோ தெரியலை...... சரி வா நாம போகலாம்..." என்று தோழியுடன், திரும்பி ஸ்டாப் ரூம் நோக்கி நடந்தாள் பாரதி.