காதல் கடந்து!!
காதல் மட்டுமே
பெண்ணின் உலகமல்ல,
அவள் இதயம் உடைவதற்கு
அதுமட்டுமே காரணமுமல்ல!
கோடிப் பேராசை
அவள் கொள்வதில்லை,
சின்னஞ்சிறு எதிர்பார்ப்புகள்
சிதையும்போதே உடைகிறாள்!
தாலாட்டுப் பாடித் தந்த
பெற்றோரை இழக்கும்போது,
வேர் அறுந்த மரமாக
விழுந்தே அழுகிறாள்!
பாதி உடலென்று நம்பிய
கணவனை இழக்கும்போது,
மங்கல நாணோடு சேர்த்து
மகிழ்ச்சியையும் புதைக்கிறாள்!
உதிரத்தில் சுமந்து பெற்ற
பிள்ளையை இழக்கும்போது,
தன் உயிரையே இழந்தவளாய்
பிணமாகிப் போகிறாள்!
தன்மானம் இழந்து
தலைகுனிய நேரிடுகையில்,
அவள் கண்ணியம் குறையும்போது
கண்ணீரில் கரைகிறாள்!
ஆயுள் முழுக்க அவள்
காத்திருந்த கனவுகள் யாவும்,
கண்ணெதிரே தகரும்போது
நம்பிக்கை இழக்கிறாள்!
அவன் தான் தன் உலகமென
அத்தனையும் நம்பியபின்,
அவசியம் தீர்ந்தவுடன் அவன்
விலகும்போது ஏமாறுகிறாள்!
தன் தூய்மையான முதல் காதல்
இப்படித் தோற்குமென்று,
அவள் முட்டாளாய் நின்ற தருணத்தில்
முற்றிலுமாய் உடைகிறாள்!
தன்னை வெறும் பகடைக்காயாய்
பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும்,
தடுக்க முடியாத் தவிப்போடு
தனிமையில் அழுகிறாள்!
கண்ணாடித் துண்டுகளாய்
அவள் கனவுகள் சிதறுகையில்,
அள்ளி அணைக்க இங்கே
அன்புள்ளங்கள் யாருமில்லை!
புன்னகையைத் தொலைத்துவிட்டு
பூட்டிய அறைக்குள்ளே,
விடைதெரியா கேள்விகளுடன்
தினமும் போராடுகிறாள்!
வீழ்த்த நினைத்த வலிகள் யாவும்,
அவளின் மகுடமாய் மாறிப்போகும்!
காலத்தின் காலடிப் பாதையிலே,
பேராற்றலாய் வீறுநடை போடுவாள்!