எனக்கு பிடித்த ஆசிரியர்னு குறிப்பிட்ட ஒருத்தரை சொல்லவே முடியல என்னால, என் வாழ்க்கைல நான் கத்துக்கிட்ட பல வாழ்க்கை பாடங்களுக்கும், இப்போ நான் இருக்கிற நல்ல நிலைமைக்கும் காரணமான ஆசிரியர்கள் பல பேர் இருக்காங்க. எங்க ஸ்கூல் அக்மார்க் கேத்தலிக் கிரிஸ்டியன் ஸ்கூல். Father, Brother நிறைய பேர் இருப்பாங்க, அவங்களை சார்னுலாம் கூப்பிட கூடாது. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பிரதர், சகாயராஜ் பிரதர் எனக்கு அறவே பிடிக்காத இயற்பியல் பாடத்தை ரொம்பவும் பிடிச்சு போற அளவுக்கு மாத்தினவர். நான் ஸ்கூல்லயும் இப்போ மாதிரி தான் ரொம்ப செல்லம் நிறைய டீச்சர்ஸ்கு (ஓவரா போறோமோ, போவோம் என்னா பண்ணிட போறாய்ங்க).
நானும் சகாயராஜ் பிரதர சுத்தி சுத்தி வருவேன் பிரதர் பிரதர்னு, இதென்ன, அதென்னா, இதெப்படி வேலை செய்யுது, இந்த பெண்டுலம்ம எனக்கு கொடுத்துருங்கன்னு நான் செய்யாத சேட்டைகள் கிடையாது. எங்களுக்கு அவர் தான் கிளாஸ் டீச்சர் வேற.
ஒரு ஆசிரியர் கிட்ட ஒருத்தர் இந்த அளவுக்கு உரிமை எடுத்துக்க முடியுமான்னு இப்போ யோசிச்சா ஆச்சரியமா இருக்கு, ஆனா அப்போ எனக்கு அந்த spaceஅ கொடுத்திருந்த ஆசிரியர் அவர். ஸ்கூல் டூர் போனப்போலாம் நாங்க நாலஞ்சு பேரு பஸ்ல அவர் மடியில படுத்து தூங்கிட்டு போனோம், அந்த அளவுக்கு எங்க எல்லார் கூடவும், ஆசிரியர் மாதிரி ரொம்ப கண்டிப்போட இல்லாம நண்பனை போல பழகினவர். அப்புறம் எங்க chain of schoolsயோட வேற ப்ராஞ்சுக்கு மாறிட்டாரு. இப்போ வரைக்கும் நான் பார்க்கனும் ஏக்கப்படுற ஆசிரியர் அவர்.
அடுத்ததா எங்க க்ளோரி மிஸ். தேவதை சார். ஒரு ஸ்டூடண்ட் நல்லா படிக்கலன்னா அதுக்கான உண்மையான காரணம் என்னனு ஆராய்ஞ்சு அதுக்கான தீர்வ கரக்ட்டா கண்டுபிடிச்சு சரி செய்ய கூடிய ஆசிரியர் அவங்க. லேட்டா வரோமா திட்டவே மாட்டாங்க. தனியா கூப்பிட்டு கேப்பாங்க வீட்ல எல்லாமே ஓகேவா ஒன்னும் பிரச்சனை இல்லை தானேன்னு. அந்த அக்கறை, கனிவு எல்லாம் நான் பார்த்து வியந்தது. எத்தனை டீச்சர்ஸ் கிட்ட, ஸ்ஸ்ஸ்ஸூ ஸ்ஸ்ஸூன்னு கைல மாத்தி மாத்தி அடிவாங்கிட்டு, திட்டு வாங்கிட்டு, கொட்டு வாங்கிட்டு இருந்திருப்போம். ஆனா ஸ்கேல்லோ குச்சியோ இல்லாம வர்ர ஒரே ஒரு மிஸ், க்ளோரி மிஸ் தான். ஆனா, ஒரு உண்மைய சொல்றேன், இப்போ வரைக்கும் கூட எனக்கெல்லாம் டீச்சர் வேலைக்கு போகனும்னு உள்ளுக்குள்ள ஓரமா ஒரு ஆசை இருக்கு, அதுக்கான அடித்தளம் இவங்களை மாதிரி ஒரு சில ஆசிரியர்கள் தான். அந்த அளவுக்கு நல்லவிதமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்காங்க.
அடுத்ததா, எங்க தமிழ் ஐயா அய்யப்பன். எங்க ஸ்கூல ஒரு விநோதமான ஸ்கூல், தமிழ் பீரியட் தவிர வேற எந்த பீரியட்ல ஒரு வார்த்தை தமிழ் வந்தாலும் ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபா fine. ஆனா தமிழ் பீரியட்ல ஒரு வார்த்தை இங்கிலிஷ் வந்தாலும் 25 பைசா fine (அப்போ 25 பைசா புழக்கத்துல இருந்த காலத்துல ஸ்கூல் படிச்சேனான்னு ஆராய்ச்சி பண்ணாதீங்க). ஒரு ரூபாய்க்கு 25 பைசா தேவலாம் தான்னு அப்போ தான் பென்சில கொடு, நோட்ட கொடுன்னு வேணும்னே பேசி fineஅ வாங்கி கட்டிப்போம். ஆனா எங்க ஐயா இருக்காரே, இன்னைக்கு நான் தமிழ்ல இந்த அளவுக்காச்சும் கொஞ்சம் ஆர்வத்தோட இருக்கிறதுக்கு அடித்தளமே அவர் தான். இவ்வளவு புத்தகங்களை இன்னைக்கு நான் படிக்கிறேன்னா அன்னைக்கு அவர் எனக்கு உரைக்கிற மாதிரி சொல்லிக் கொடுத்த சங்க இலக்கியங்கள் தான் மிகப்பெரிய காரணம். தமிழ் மேல எனக்கு இருந்த ஆர்வத்தை எப்படி அவர் கண்டுபிடிச்சார்னே தெரியல. ஏன்னா எனக்குமே அப்போ தெரியாது எனக்கு இவ்வளவு ஆர்வம் இருக்குன்னு. ‘முத்தை தரு பத்தித் திரு’ பாட்டை மூணே மூணு முறை தான் எனக்கு பாடி காட்டினார். இன்னைக்கு வரைக்கும் அவர் குரலும், தமிழும், அந்த இனிமையும் ஒலிச்சிக்கிட்டே இருக்கு, அந்த பாடலையும் இப்ப வரைக்கும் நான் மறக்கல.
ஒவ்வொரு காலகட்டத்தில ஒவ்வொரு ஆசிரியர்கள் என்னோட வாழ்க்கைய சீர் படுத்தியிருக்காங்க, செம்மையாக்கி இருக்காங்க. நான் வாங்காத திட்டு, அடியெல்லாம் இல்ல ஆனா இன்னைக்கு வாழ்க்கைங்கிற ஆசான் கத்துக்கொடுக்கிற பாடங்களை பணிவோட, என் இடம் அறிஞ்சு கத்துகிட்டு, கடந்து போக உறுதுணையா இருக்கிறது இந்த ஆசிரியர்களோட அன்பும், கண்டிப்பும், வாழ்க்கையை கனிவோடு அணுக கத்துக் கொடுத்ததும் தான். இந்த தருணத்துல அத்தனை ஆசிரியர்களுக்கும் அன்பான நன்றிகளை தெரிவிச்சிக்கிறேன், இந்த பதிவை எழுத வாய்ப்பை கொடுத்த FTC எனும் ஆசானுக்கும் அன்பும் நன்றியும்.