Author Topic: நெஞ்சம் மறப்பதில்லை-005 (நெஞ்சில் நின்ற திரைப்படம் - தமிழ் )  (Read 265 times)

Offline Forum

நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-004

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

“ நெஞ்சில் நின்ற திரைப்படம்
(தமிழ் ) ”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠 participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.

Offline Madhurangi

  • Sr. Member
  • *
  • Posts: 251
  • Total likes: 873
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான அதே சமயம் என்னை ரொம்ப பாதிச்ச படம்னா அது கன்னத்தில் முத்தமிட்டால் தான். இவ்வளவு வருஷம் ஆனாலும் என்னால அழாம ஒரு தடவ கூட climax பார்க்க முடிஞ்சதில்ல.

போரின் வாசனையயும் துயரத்தையும் வெறும் வடிகட்டின தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமே மட்டுமே அறிஞ்ச childhood கொண்ட ஆள் நான். ஒரு போர் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வியலை எப்டி பதிக்குதுனு எனக்குள்ள முதன்முறையா ஆழமா பதிவு செஞ்ச படம் இது.

சிம்ரன்னா glamour and modern. மாதவன்னா சாக்லேட் ஹீரோ கனவு நாயகன்ற விம்பத்தை உடைச்ச படம் அது. முக்கிய கதாபாத்திரமான அமுதா எனும் கீர்த்தனா நடிப்பை பத்தி சொல்லவே வேணாம்.

சினிமா பத்தி ஆராய்ந்து பாக்ற பக்குவம் இல்லாத அந்த பள்ளிப்பருவத்தில கூட அமுதாவோட தவிப்பை நமக்குள்ள அப்டியே இறக்குற மாதிரி நடிப்பை வழங்கின keerthana இன்னும் நிறையவே பல திரைப்படங்கள் பண்ணி சினிமா உலகில் கொண்டாடபட்டுருக்க வேண்டியவங்கனு பல முறை நினச்சுருக்கன்.

அந்த படத்தோட speciality என்னோட வாழ்கையின் ஒவ்வொரு பருவத்தில பார்க்கும்போதும் அந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தோட என்னோட ஒன்றி போக முடிஞ்சுது.

பள்ளி பருவத்துல அமுதாவோட துடிப்பு, அம்மாவை தேடுற தவிப்பு, கேள்விகள் நிறைந்த அந்த பருவத்தை புரிஞ்சுக்க முடிஞ்சுது.

கல்லூரி பருவத்துல சமூக பிரச்சினைகள், ஒரு சிலர் பண்ணும் தவறுகளுக்காக அவங்க சார்ந்த முழு இனத்தையோ மதத்தையோ குறை சொல்றது நியாயம் இல்லனு மாதவனோட சிங்கள நண்பனா வர்ற பிரகாஷ்ராஜ் மூலம் சொல்ல வந்தத உணர முடிஞ்சுது.ஏன்னா கல்லூரி காலங்களில வீட்டை விட்டு வந்து தங்கிருக்க தனிமையில எனக்கு மனதளவுல ஆதரவு தந்த நணபர்கள்ல பல சகோதர மொழி பேசுற நண்பர்கள் இருந்துருக்காங்க

இப்ப maturity வந்த அப்புறம் ஒரு குழந்தை அம்மாவோட பாசத்துக்கு ஏங்குறதுக்கு சற்றும் குறைவில்லாதது தான் வளர்த்த பொண்ணு பெற்ற தாயை பார்த்தது போய்டுவளோ அப்டின்ற தவிப்பு அப்டிங்ரத உணர்த்தும் சிம்ரனோட இந்திரா கதாபாத்திரத்தின் மூலம் உணர முடியுது. பெற்ற பாசத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாதது வளர்த்த பாசம்.

எப்ப கேட்டாலும் மனதுக்கு அமைதியை குடுக்குற “வெள்ளை பூக்கள்” பாடலும், தாய் மற்றும் தகப்பனின் அன்பின் ஒட்டுமொத்த வெளிப்பாடான “தெய்வம் தந்த பூவே” பாடலும், காதல் வரும் தருணத்தை இதுக்கு மேல அழகா சொல்ல முடியுமா அப்டினு நினைக்க வைக்குற “சட்டென நனைந்தது நெஞ்சம்” பாடலும் A. R. Rahman-இன் magical diary ல மறக்க முடியாத பக்கங்கள். ragging time ல பாட சொன்னா எனக்கிருக்கது 2 choice தான் ஒன்னு ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே இன்னொன்னு ஒரு தெய்வம் தந்த பூவே.

முடிவாக…
இந்த படம் எனக்கு ஒரு சினிமா அனுபவம்னு மட்டும் இல்ல; வாழ்க்கையை வேற கோணத்துல பார்க்க கற்றுக்கொடுத்த ஒரு பயணம். ஒவ்வொரு தடவையும் பார்க்கும்போது புதிய உணர்ச்சிகளையும் புதிய புரிதல்களையும் கொடுக்கிற ஒரு உயிரோட படைப்பு. சில படங்கள் நம்ம மனசுல நிக்காது… நம்ம வாழ்க்கையோடே கலந்து போயிடும் — எனக்காக அந்த பட்டியலின் முதல் இடத்துல நிக்குறது “கன்னத்தில் முத்தமிட்டால்” தான்.
« Last Edit: March 19, 2026, 10:51:43 PM by Madhurangi »

Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 246
  • Total likes: 472
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
   என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்  - கர்ணன்.
------------------------------------------------------------------------------------

தினமும் கதைசொல்லும் என் தாத்தாவின் மூலமாக கர்ணன் கதை கேட்டு இருக்கின்றேன்.  இதுவே என் மனதுக்கு பிடித்த கதாபாத்திரம்.

ஒரு நாள் எனக்கு கர்ணன் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது
1964 ஆம் ஆண்டு,  B. R. பந்துலு இயக்கத்தில், சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்த திரைப்படம். இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கவி வரிகள்  கண்ணதாசன்.  வசனம் சக்தி டி.கே. கிருஷ்ணசாமி.

செவி வழியே கேட்ட கதையை, திரையில் பார்க்கும் போதும் மனதில் ஆழமாக பதிந்தது.  இதை வெறும் கதையாக என்னால் பார்க்க முடியவில்லை. வாழ்க்கையை புரியவைக்கும் ஒரு பாடமாக தோன்றியது.

இதில் நிறைய வியக்க வைக்கும் காட்சி அமைப்புகள் இருந்தது.  இதன் போர்க் காட்சிகள் குருக்ஷேத்திரத்தில் படமாக்கப்பட்டன, அதில் நிஜமான நமது இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பல வீரர்கள் இடம்பெற்றனர் . மேலும் அதிகமான  யானைகள்,  குதிரைகள் பயன் படுத்தினார்களாம். 

இந்த திரைப்படத்தில் நடிப்பு, பாடல்கள் இருந்தாலும் என் மனதில் பதிந்தது வேறு.

1.  கர்ணன் : எல்லோராலும் நிராகரிக்க பட்ட ஒருவரின் வாழ்க்கையை புரிந்து கொள்ளமுடிகிறது.
2. குந்திதேவி :  விளையாட்டாக செய்யும் செயலின் விளைவை அவரே அனுபவிக்க வேண்டும்.
3. கர்ணன் : ஒருவனுடைய தகுதி தான்.... அவருடைய திறமைகளை மேடை ஏற்றுகிறது.
4. துரியோதனன் : நம்முள் இருக்கும் தீய குணங்களை தூண்டிவிடும் எவரையும் நம்பக்கூடாது.
5. கர்ணன் : தவறான மனிதர்களுக்கு துணை நிற்பது நம்மையும் தவறான பாதைக்கு அழைத்து செல்லும்.
6. கண்ணன் : நல்லவர்களை வஞ்சகத்தால் வீழ்த்தும் நல்லவனுமே பாவத்தை சுமக்கிறான் .
7. கர்ணன்/குந்தி: தேவை படும் போது கிடைக்காத பாசமும் அன்பும்.. என்றுமே வீண்தான்.
8. அர்ஜுனன் : ஒருவரின் திறமைகளை சூதால் களவாடிய பிறகும் அவருடன் மோதி வெற்றிகொள்வது தோல்விக்கு சமமே.
9. கர்ணன் : நாம் தர்மத்தின் வழியின் நின்றால், மனிதர்களும் தெய்வங்களும் நம்மை கைவிட்டாலும். தர்மம் நம்மை காத்து நிற்கும்.

இன்னும் நிறைய பாடங்களை சொல்லி கொண்டே போகலாம்.

எல்லோரும் இந்த திரைப்படத்தை.. கூடா நட்புக்கு உதாரணம் சொல்லுவாங்க. ஆனால் இது தன்னை நல்லவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரின் , சதியால் வீழ்ந்த மாவீரன் கர்ணனின் கதைன்னு தோணும்.

இந்த படத்தின் தாக்கத்தால், என் மனதில் தோன்றிய எண்ணங்களை சொல்ல நினைக்கின்றேன்.

*  வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு  துணை நிற்க முயற்சி  செய்யணும் .
*  பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களை அவரின் எண்ணங்களை மாற்றனும்.
* நாம் கற்ற பாடங்களை (வித்தைகளை) நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* யாரையும் ஏமாற்றியோ பொய் சொல்லியோ நல்ல விஷயங்கள் கற்றுக்கொண்டால் அது நமக்கு உதவாது.
* நமக்கு நியாயமாக கிடைக்கும் விஷயங்கள், கண்டிப்பாக நம்மை வந்து சேரும் .
* பாசத்துக்கு ஏங்கும்.. எந்த உயிரையும் நம்ம கருணையோடு பார்த்து .. அரவணைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
* நம்ம எதை சாதிக்க நினைக்கின்றோமோ, அதை நம்ம திறமைகளால் வெல்ல வேண்டும். குறுக்கு வழியில் சாதிக்க நினைக்க கூடாது.
* நம் எண்ணங்களும் செயலும் நேர்மையாகவும்.. உண்மையாகவும் இருந்தால்,  அது நிச்சயம் நம்மை கைவிடாது,

இப்படி சொல்லி கொண்டே போகலாம். இப்பொழுதும் இந்த திரைப்படத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன்.

என் தாத்தா இன்று என்னுடன் இல்லையென்றாலும், அவர் என்னுள் விதைத்த கர்ணன்.. இன்னும் என் வாழ்க்கையில் உயிரோடு வாழ்கிறார்.
« Last Edit: March 20, 2026, 01:27:36 AM by Tejasvi »

Offline Sethu

என் நெஞ்சில் நின்ற திரைப்படம் எதுன்னு பார்த்தீங்கன்னா 2012 ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படம். இந்தப் படம் சங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த் ,ஜீவா ஆகியோ நடிச்சிருப்பாங்க. இதுல மொத்தம் ஆறு பாடல்கள் இருக்கும் .பாடல்கள் மிக அருமையாக இருக்கும். இந்தப் படம், பொறியியல் கல்லூரி மாணவர்களின் நட்பு, கல்வி முறை மற்றும் வாழ்க்கையைப் பற்றியது. பாரி (விஜய்) என்ற புத்திசாலி மாணவன், தனது நண்பர்களான வெங்கட் (ஸ்ரீகாந்த்), செந்தில் (ஜீவா) ஆகியோரின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறான், இறுதியில் அவன் எங்கே போகிறான் என்பதுதான் கதை.

பாரி (விஜய்), வெங்கட், செந்தில் ஆகிய மூவரும் பொறியியல் கல்லூரியில் தோழர்களாகிறார்கள். கல்வியை மனப்பாடம் செய்து படிக்கும் முறையை எதிர்த்து, பாரி புரிந்துகொண்டு படிக்க வேண்டும் என்பதை நண்பர்களுக்கு உணர்த்துகிறான். இதுவே இந்த படம் என் என் மனதில்  நின்றதற்கு முதல் காரணம்.பாரி தனது நண்பர்களின் பயம், குடும்ப அழுத்தம் மற்றும் காதல் சிக்கல்களைப் போக்கி, அவர்களை வாழ்க்கையில் சிறப்பாக வாழ ஊக்குவிக்கிறான். நண்பர்கள் என்றால் சேர்ந்து ஊர் சுற்றுவது மட்டுமில்லாமல் அவர்கள் வாழ்வில் முன்னேற ஊக்குவிப்பது தான் என்பதை இப்படம் கூறுகிறது .இதுவே இந்த படம் எனக்கு பிடிப்பதற்கு இரண்டாவது காரணம்.

கல்லூரி முடித்ததும், பாரி யாருக்கும் சொல்லாமல் மறைந்து விடுகிறான்.பல வருடங்களுக்குப் பிறகு, பாரியைத் தேடி வெங்கட் மற்றும் செந்தில் செல்கிறார்கள். இறுதியாக, பாரி ஒரு புதுமையான பள்ளியில் கற்பித்துக் கொண்டிருப்பதைக் கண்டறிகிறார்கள். பாரியின் உண்மையான பெயர் மற்றும் அவனது மறைந்த வாழ்க்கையின் பின்னணி தெரியவருகிறது. இந்த படத்துல நகைச்சுவை அப்புறம் நண்பர்களை என்கரேஜ் பண்றது அப்புறம் காதல் அப்படின்னு எல்லாம் கலந்து கொடுத்து இருப்பார் இயக்குனர் சங்கர்.

அப்புறம் இந்த படத்துல என் பிரண்ட போல யாரு மச்சான் இந்த சாங் வந்து எனக்கு ரொம்ப பிடிக்கும். 6 சாங்ஸ் இல் இது ரொம்ப சூப்பரா இருக்கும் .அப்புறம் பார்த்தீங்கனா நகைச்சுவை விஜய் ,ஸ்ரீகாந்த் ,ஜீவா இவங்க மூணு பேரும் ரொம்ப சூப்பரா நகைச்சுவை பண்ணி இருப்பாங்க .இந்த படத்துல விஜய் கிட்ட விஜயோட லவ்வர் கேப்பாங்க" உனக்கு யாரை பிடிக்கும் "என்று ,அப்ப விஜய் சொல்லுவாரு "எனக்கு முனி மாவ ரொம்ப பிடிக்கும்" என்று .அந்த காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் .

அப்புறம் பாத்தீங்கன்னா பிரண்ட்ஸ ஊக்குவிப்பாரு. விஜய் உங்களுக்கு புடிச்ச வேலையை செய்ங்க அப்படின்னு சொல்லுவாரு. இதன் மூலமா எனக்கு என்ன புரிஞ்சிச்சுன்னா எந்த ஒர்க்கும் இன்ட்ரஸ்ட் இல்லாம செஞ்சா முன்னேற முடியாது என்பதை ரொம்ப தெளிவா சொல்லி இருப்பார் .இயக்குனர் சங்கர் இது மாதிரி ரொம்ப நல்ல விஷயங்கள் இந்த படத்தில் இருப்பது தான் இந்த திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிச்சதாகவும் என் மனதில் நின்ற திரைப்படமாகவும் இருக்கிறது. இதை ஷேர் செய்ய வாய்ப்பு அளித்த  f t c  டீம்க்கும் நெஞ்சம் மறப்பதில்லை ப்ரோக்ராம்க்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

Offline Luminous

Hi Friends, எனக்கு Irugapatru ரொம்ப பிடிக்கும், ஏன்னா இது ரொம்ப ரியல்-ஆ இருக்கும். சாதாரணமா moviesல love-ஐ கொஞ்சம் over-ஆ காட்டுவாங்க, ஆனா இந்த படம் husband-wife lifeல நடக்குற சின்ன சின்ன விஷயங்களையே ரொம்ப natural-ஆ காட்டிருக்கும். நம்ம daily lifeல நடக்குற misunderstandings, ego, பேசாம இருக்குறது எல்லாம் எப்படி relationship-ஐ பாதிக்குது என்பத நல்லா feel ஆகும்.

இந்த படத்தில் வரும் ஒவ்வொரு couple-உம் நமக்கு ஒரு lesson கற்றுக்கொடுக்குது. ஒரு character partner-ஐ control பண்ணணும், எல்லாமே perfect-ஆ இருக்கணும் என்று நினைப்பார். அதுல இருந்து நாம எடுக்க வேண்டியது என்னனா, relationshipல ஒருவர் மற்றவரை மாற்ற முயற்சி பண்ணாமல், அவர்களை அப்படியே accept பண்ணணும் என்பதுதான். புரிந்துகொள்ளுறது தான் முக்கியம், correct பண்ணுறது இல்லைன்னு இந்த படம் சொல்லுது.

மற்றொரு character feelings-ஐ வெளிப்படையாக சொல்ல மாட்டார். அங்க இருந்து நமக்கு புரியுறது, மனசுல வைத்துக்கிட்டா problem அதிகமா ஆகும். open-ஆ பேசினால்தான் misunderstandings குறையும். “நினைப்பதை சொல்லணும்” என்பதையும் படம் ரொம்ப அழகாக காட்டுது.
அதே மாதிரி, சில characters சின்ன விஷயத்துக்கே hurt ஆகுறாங்க. அதிலிருந்து நாம கற்றுக்கொள்ள வேண்டியது, எல்லாத்தையும் over-ஆ எடுத்துக்காம, கொஞ்சம் adjust பண்ணி, understanding-ஆ இருந்தா relationship strong ஆகும் என்பதுதான்.

இந்த படத்தில் வரும் counseling scenes கூட ரொம்ப முக்கியமான message கொடுக்குது. argumentல யார் right என்று prove பண்ணுறதுக்கு பதிலா, relationship-ஐ save பண்ணுறதுதான் முக்கியம். silence-ஆ இருந்தா problem தீராது; பேசினால்தான் தீரும் என்பதையும் இது உணர்த்துகிறது. “right-ஆ இருக்குறதைவிட kind-ஆ இருக்குறது முக்கியம்”ன்னு சொல்லுற message ரொம்ப connect ஆகும்.

இந்த படம் சொல்லுற main message என்னனா, love மட்டும் போதாது… understanding-ம் communication-மும் ரொம்ப முக்கியம். இரண்டு பேரும் open-ஆ பேசணும். இல்லனா சின்ன problem கூட பெரியதாகி விடும். கொஞ்சம் ego விட்டு பேசினா, நிறைய விஷயங்கள் சரியாகிடும் என்பத ரொம்ப simple-ஆ சொல்லிருக்கும்.
Society க்கும் இந்த படம் நல்ல message குடுக்குது. இப்போ சின்ன சின்ன விஷயத்துக்கே relationship break ஆகுது. ஆனா இந்த மாதிரி படங்கள் பாத்தா, கொஞ்சம் adjust பண்ணி, பேசிக்கிட்டு solve பண்ணலாம் என்ற mindset வரும். Counseling போறது தப்பு இல்லன்னு கூட புரிய வைக்குது.
Youngsters இந்த படத்தை பாத்தா, future lifeல வரும் problems-ஐ எப்படி handle பண்ணணும், எப்படி partner-ஐ புரிஞ்சுக்கணும், எப்படி ego-வ விடணும் என்பதெல்லாம் முன்னாடியே கற்றுக்கொள்வாங்க. அதனால் அவர்கள் relationships-ஐ easy-ஆ manage பண்ணி, unnecessary பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
நாம எப்படி react பண்ணுறோம், நம்ம partner-ஐ எப்படி treat பண்ணுறோம் என்று யோசிக்க வைக்குது. கொஞ்சம் patience-ஆ இருந்தா, புரிஞ்சுக்கிட்டா relationship நல்லா போகும் என்று சொல்லுது.
Overall-ஆ இந்த படத்திலிருந்து நாம எடுக்க வேண்டியது என்னனா, love மட்டும் போதாது, patience, understanding, communication எல்லாமே equally முக்கியம். ego-வை விட்டு, ஒருவர் மற்றவரை கேட்டு, புரிஞ்சுக்கிட்டா எந்த relationship-யும் நல்லா போகும். அதனால் தான் இந்த படம் ஒரு love story மட்டும் இல்ல, நம்ம வாழ்க்கைக்கு use ஆகுற ஒரு lesson மாதிரி எனக்கு தோணுது. ❤️

« Last Edit: March 20, 2026, 08:02:44 AM by Luminous »

Offline Oonjal

  • Newbie
  • *
  • Posts: 23
  • Total likes: 93
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
"துள்ளாத மனமும் துள்ளும்"

பூனே ரயில் நிலையத்தில் தொடங்கும் படம். ரயிலில் சந்திக்கும் ஒரு காலேஜ் குழுவினர்களிடம் தன் முன்கதையை குட்டி (விஜய்) சொல்வதாக போகும் கதை. இன்னிசை பாடிவரும் பாடலில் குட்டியின் குரலை கேட்கும் ருக்குமணி (சிம்ரன்) முகமறியா குட்டியின் ரசிகையாகிறார். ஆனால் நேரில் குட்டியை பார்க்கும்போதேல்லாம் ஒரு ரவுடியாக காண்கிறார்.

   பின்னணி பாடகர் ஆசையில் ஊரிலிருந்து மெட்ராஸ் வரும் குட்டி கிடைத்த வேலை செய்து வருகிறார். குட்டியின் தவறால் ருக்குவின் பார்வை பறிபோகிறது. அதன்பின் ருக்கு சந்திக்கும் சோதனைகள் அதிலிருந்து வெளிவர உதவும் குட்டி என்று படம் நகர்கிறது. ஆப்ரேஷன் பண்ணினால் ருக்கு கண் பார்வை வர வாய்ப்பு உள்ளது என டாக்டர் கூறுகிறார். அந்த சமயத்தில் குட்டியின் அம்மா தன் கண்கள் ருக்குக்கு என்று எழுதி வைத்து விட்டு இறந்து போகிறார். ஆப்ரேஷன் செலவுக்காக தன் ஒரு கிட்னியை தானம் பண்ண பூனே செல்கிறார் குட்டி. அதே நேரத்தில் இங்கே ருக்குவின் ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்து கண் பார்வை கிடைக்கிறது.

    பூனேயில் ஆப்ரேஷன் முடிந்து திரும்பும் போது ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தினார் என்று கைது செய்தனர். 7 ஆண்டு ஜெயில் தண்டனை முடிந்து மெட்ராஸ் செல்கிறேன் என்று தன் முன்கதையை சொல்கிறார். மீதி கதையை தெரிந்து கொள்ள உங்களை தேடி வருகிறோம் நீங்கள் முன்னாடி போய் ருக்குவை சந்தியுங்கள் என்று அனுப்பி வைக்கின்றனர். குட்டி பழகிய இடங்களில் தேடி போக அங்கே யாரும் இல்லை. அப்போது ஒரு வாகனத்தில் ருக்கு செல்வதை கண்டு பின்னாடியே சென்று ருக்கு என்று அழைக்க ருக்கு குட்டியை ரவுடியாக நினைத்து கைது செய்யுங்கள் என்று ஆணையிட போலீசார் குட்டியை கைது செய்து அடித்து உதைத்தனர்.

   அந்த நேரத்தில் ஒரு பஸ்சில் இன்னிசை பாடிவரும் பாட்டு சத்தம் கேட்டு அந்த பஸ்சை நிறுத்தி "நீங்க குட்டியா" என்று ஒவ்வொருத்தரிடமும் ருக்கு கேட்க "நீங்கதான் ருக்குவா" உங்களை பார்க்க தானே குட்டி வந்தார் என்று கூற அப்போ வெளியே "இன்னிசை பாடிவரும்...." பாட்டை குட்டி பாட ஓடிவரும் ருக்கு குட்டியை பார்த்து அதிர்ச்சியாகி "குட்டி உன்னால் தான் நான் படிச்சேன் உன்னால் தான் நான் கலெக்டரா இருக்கேன். உன்னை பார்க்கும்போது எல்லாம் தப்பாக நினைத்தேன் "என்னை மன்னித்து விடு" என்று அழ இந்த காட்சியில் என்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுதேன்.

   இத்திரைப்படம் 100 முறைக்கும் மேல் நான் பார்த்த ஒரே படம். பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் விட வைத்த திரைப்படம். விஜய் சிம்ரன் அருமையாக நடித்துள்ளனர். இருவரின் கெமிஸ்ட்ரி படத்தின் பலம். இயக்குனர் எழிலின் முதல் படம் என்று சொன்னால் நம்பமுடியவில்லை. காதலுக்கும் தியாகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து உணர்ச்சிகரமான காட்சிகளுடன் இயக்கியுள்ளார் . எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். "பளபளக்குது புது நோட்டு...." இந்த பாடல் நம்மை குத்தாட்டம் போட வைக்கும். "இன்னிசை பாடிவரும்", "மேகமாய் வந்து போகிறேன்", "தொடு தொடு எனவே", "இருபது கோடி நிலவுகள் கூடி" இந்த பாடல்கள் அனைத்தும்  மெல்லிசையாய் மனதை தாலாட்டும். "காக்கை சிறகினிலே நந்தலாலா" பாடல் மனதை பிசையும்.

   திரைப்படத்தின் முன் பாதி காமெடியில் கலகலக்கும். பின் பாதியில் கண்கலங்க வைக்கும் காட்சிகள் நிறைந்திருக்கும். கட்டாயம் பார்க்க வேண்டிய இன்றும் ரசிக்க கூடிய ஒரு எவர்கீரின் காதல் காவியம் என்றும் சொல்லலாம்.

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1468
  • Total likes: 3182
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
மீண்டும் ஒரு நெஞ்சம் மறப்பதில்லை
  இருவர்

 நான் ஒரு movie freak என்றே சொல்லலாம் .  இந்த மொழி, அந்த மொழி என்று இல்லாமல் எல்லா படங்களையும் பார்ப்பேன்.
எனக்கு ரொம்ப பிடித்த ஒரு பொழுது போக்கு  அப்பா கூட உட்காந்து  படம் பாக்குறதுதான் .

பொதுவாக எனக்கு light-feel படங்கள்தான் மிகவும் பிடிக்கும். இல்லையெனில், நன்றாக சிரிக்க வைக்கும் comedy படங்களை அதிகமாக பார்ப்பேன்.
ஆனால் இந்த தலைப்பைப் பார்த்தவுடன், எனக்கு உடனே ஞாபகம் வருவது “இருவர்” படம் தான். முதல் தடவையாக இந்த படத்தை பார்த்த போது, உண்மையில் எனக்கு பெரிதாக எதுவும் புரியவில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தை பார்க்கும் போது, ஒவ்வொரு frame-மும் என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஒரு கனவுகளுடன் இருக்கும்   நடிகர் மற்றும் ஒரு ஆட்சியாசை கொண்ட எழுத்தாளர் ; இவர்களின் நட்பு, உயர்வு, வீழ்ச்சி ஆகியவற்றை உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு  மணிரத்னம் அவர்களின் கையில் ஒரு காவியமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தோடு வசனங்கள் புரட்சிகரமா எழுதி இருப்பாங்க சுஹாசினி மணிரத்னம் . சந்தோஷ் சிவன் அவர்களின் cinematography இந்த படத்தின் முதுகெலும்பு என்று சொல்லலாம்.

மோகன்லால் ஆனந்தன் கதாபாத்திரமாக வாழ்ந்தே இருப்பார். பல இடங்களில் அவரின் நளினமான முகபாவங்களும் நடிப்பும் நம்மை மிரள வைக்கும். ஒரு பெரிய தலைவரை நேரடியாக imitate செய்யாமல், அவரின் சாயல் மட்டும் கொண்டு நடித்திருப்பது ஒரு பெரிய முயற்சி.

இந்த படத்தின் முத்தாய்ப்பு கதாபாத்திரம் தமிழ்ச்செல்வன் தான். அப்போது பிரகாஷ் ராஜ் புதுமுகமாக இருந்தாலும், அவரின் அசுர நடிப்பு இந்த படத்தில் தெளிவாக தெரியும். இளமையின் அரசியல் தீவிரமும், வயதானபின் வரும் நிதானமும்
 இரண்டையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு வலிமையான வசனம்   (so powerful) ஒன்னு வரும் . ஆனந்தன் (மோகன்லால்) தமிழ்செல்வன் (பிரகாஷ் ராஜ்)  அரசியல் பத்தி பேசுவாங்க , அப்போ ஆனந்தன்  கேப்பாரு உங்க கைலே "செங்க்கோல் கிடைச்ச என்ன பண்ணுவீங்க" .. அதுக்கு தமிழ்செல்வன்  தர பதிலும் (வறுமை ஒழிப்பு , இயலாமை ஒழிப்பு )  பின்னாடி வர bgm ம் , அந்த orange வண்ணத்துலே சூரிய அஸ்தமன frame ம் , இப்போ வரைக்கும் என் mind  விட்டு அகலவே இல்ல. .

ஐஸ்வர்யா ராய்  , கவுதமி , ரேவதி , நாசர் , நிழல்கள் ரவி ena , ஒரு நடிகர் பட்டாளமே இருப்பாங்க . ஒவ்வொருவரும் போட்டி போட்டு கதாபாத்திரங்களாவே வாழ்ந்து இருப்பாங்க.

இதற்கெல்லாம் மேலாக அழகு சேர்த்தவர் ஏ.ஆர். ரஹ்மான். அவரின் பின்னணி இசை  உண்மையில் மாற்று இல்லாத ஒன்று. 60s, 70s காலத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளார். அவர் ஏன் “இசைப் புயல்” என்று அழைக்கப்படுகிறார் என்பதையும் நிரூபித்துள்ளார்.

உன்னோடு
நான் இருந்த ஒவ்வொரு
மணி துளியும் மரண
படுக்கையிலும் மறக்காது
கண்மணியே

தொன்னூறு
நிமிடங்கள் தொட்டணைத்த
காலம் தான் எண்ணுாறு
ஆண்டுகளாய் இதயத்தில்
கனக்குதடி..

இந்த கவிதை பிடிக்காத யாரேனும் இருக்காங்களா என்ன ❤️


அரசியல், நட்பு மற்றும் சினிமா பற்றிய ஒரு விசித்திரமான அறிவார்ந்த, உணர்ச்சி நிறைந்த மற்றும் கலை ரீதியாக துணிச்சலான படம்,   இதை ரசிக்க பொறுமை தேவைப்படும்; ஆனால் நுணுக்கமாக கவனித்தால் பெரும் அனுபவத்தை தரும்.

« Last Edit: March 20, 2026, 10:30:55 PM by Vethanisha »

Offline Ninja

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 507
  • Total likes: 1307
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u
நான் இந்த திரைப்படத்தை குறிப்பிடும்போது ஆச்சரியமா கூட இருக்கலாம். ஆனா உண்மையாவே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச திரைப்படம், இப்போ நான் டவுனா இருந்தா கூட போட்டு பார்க்க கூடிய திரைப்படம் ‘மைக்கேல் மதன காம ராஜன்’ தான்.

சின்ன வயசுல இந்த படத்தை பார்த்தப்போ கேளிக்கையா இருந்துச்சு. ஆனா வளர வளர இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்கும்போது எனக்கு இந்த படம் ஒரு ஹீலரா இருந்திருக்குன்னு தான் சொல்லனும். அப்படி ஒன்னும் இல்லையே இந்த படத்துலன்னு நினைக்கலாம், ஆனா கமல் எனும் கலைஞனை என் மனசுக்கு ரொம்ப நெருக்கமாக்கினது இந்த படம் தான். நாலு கமல், நாலு வித்தியாசமான கேரக்ட்டர்ஸ், நாலு விதமான ஸ்லாங்.. அப்படி ஒரு வெர்சட்டாலிட்டி (Versatility) காட்டியிருப்பாரு கமலஹாசன்.

இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், அப்போ புதுமைக்கும், கிரியேட்டிவிடிக்கும் பஞ்சமே இல்ல. கூடவே அளவில்லாத ஹ்யூமர் தான் இந்த படத்தோட பலம்னு நான் நினைக்கிறேன். வசனங்கள் கிரேஸி மோகன், படத்துக்கு ஒரு பெரிய பலம். பெரிய நடிகர்கள் பட்டாளம் வேற, காமெடிக்கு பஞ்சமே கிடையாது படம் முழுக்க. அவினாசியா நடிச்ச நாகேஷ் மதன் கேரக்ட்டர் கமல்கிட்ட இதெல்லாம் கம்ப்யூட்டர்ல நீங்க அடிச்சதுன்னு சொல்லுவாரு, அதுக்கு கமல் ‘இதெல்லாம் நான் அடிச்சது இல்ல எங்க அப்பாகிட்ட இருந்து நீங்க அடிச்சது’ன்னு ஷார்ப்பா வர்ர டயலாக் ஆகட்டும், ஒரு காட்சில குஷ்பு ‘மாண்புமிகு குத்துவிளக்கை அமைச்சர் ஏற்றி வைப்பார்னு சொல்றதாகட்டும்,  ‘சம்மந்தி காதுல விழுந்துட போகுது - சாம்பர்ல விழுந்துடுத்து காதுல விழுந்தா என்ன?’, ‘கிராமமும் குக்கா  நீங்களும் குக்கு’,  ‘நீ திரிபுர சுந்தரி இல்லே, திருட்டு சுந்தரியாக்கும்’ இப்படி ஒரு சீன் சீக்வன்ஸ் முழுக்கவே வாய மூட முடியாத அளவுக்கு சிரிப்புக்கு கேரண்டி கிரேஸி மோகனோட வசனங்கள்.

காட்சியமைப்பும் கொஞ்சமும் சளைக்காம அமைஞ்சிருக்கும். நம்ம பீம் பாய் பீம் பாய், மனோரமா காமெடி, நாகேஷ், குஷ்பு துப்பாக்கி எடுத்துட்டு எல்லாரையும் சுத்தி சுத்தி அலைய விடுற சீன், கடைசியா அந்த மலை உச்சியில வீடு காட்சி, எல்லாமே முழுக்க முழுக்க பவர் பாக்ட் எண்டர்டெயின்மெண்ட்

கமல் இந்த நாலு கேரக்டர்ஸ்கும் காட்ற வித்தியாசம் இருக்கே,  ஸ்டைலிஷா ஷார்ப்பா பேசுற மதனாகட்டும், வில்லன் வாய்ஸ்ல கரகரப்பா பேசுற மைக்கேல் ஆகட்டும், சென்னை பாஷைல லவ்வாங்கி பண்ணும் ராஜூ, கடைசியா, குழம்புல விழுந்த மீன எடுக்க ‘மீன் பிடிக்கிறவாளா கூட்டிண்டு வரட்டுமா'ன்னு கேட்கிற வெள்ளந்தி பாலகாட்டு ஐயர் காமேஷ்வரனாகட்டும் இப்படி ஒரே படத்துல ஒரே நடிகர் நாலு பேரா பிரிஞ்சு நடிக்கிறதை பார்க்கும்பொழுது நான்கு வேற வேற கதாநாயகர்களே நடிக்கிற ஒரு அனுபவத்தை கொடுக்க கமல் எனும் கலைஞனை தவிர யாரால முடியும். ‘உலக நாயகன் பட்டம் சும்மா வந்ததில்லையாக்கும் கேட்டியோ’.

இந்த பதிவை எழுதும்போது கூட படத்தை திரும்ப பார்க்கனும் அப்படின்னு ஆசைய தூண்டுது. அந்த அளவுக்கு soul saver எனக்கு இந்த படம். வாழ்க்கையோட அடிமட்டத்துக்கு போய், அடிமாட்டு அளவுக்கு உழைச்சு, களைச்சு, ஓய்ஞ்சு போற நேரம் நான் தேடி ஓடுற ரெண்டு விஷயம் ஒன்னு வடிவேலு காமெடி, ரெண்டாவது இந்த படம். என்ன கஷ்டம்னாலும் அந்த கஷ்டத்தை மறந்து சிரிக்க வச்சிருக்கு இந்த படம்.

இளையராஜா இசை, இந்த படத்தோட இன்னொரு பலம். பிண்ணனி இசை, பாடல்கள்னு தனியா சொல்லிட்டு போகலாம். இப்பவும் ப்ரஷ் பீல் (fresh feel) கொடுக்க வைக்கும் பாடல்கள்னு சொன்னா மிகையாகாது.

ஒரு படம் நம்மளை ரசிக்க வைக்கலாம், சிலிர்க்க வைக்கலாம், நெகிழ வைக்கலாம், அழ வைக்கலாம், சிரிக்க வைக்கலாம் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொருவிதமான தாக்கத்தை ஒரு ஒரு நேரங்கள்ல நமக்கு ஏற்படுத்தும். ஆனா தனிமைல துணையா இருக்கிற, ஆறுதலா நண்பன் போல அரவணைக்கிற படம் தான் ஒவ்வொருத்தருக்குமே நெஞ்சில நிக்கிற திரைப்படமா இருக்கும்.

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 333
  • Total likes: 1376
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
என்னை அதிகமா பாதித்த மற்றும் motivate பன்ற திரைப்படங்களுள் ஒன்று "வாகை சூடவா"...

2011 இல் வெளிவந்த இந்த திரைப்படத்துல  விமல், இனியா மற்றும் பாக்கியராஜ் முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சுருப்பாங்க.

கல்வியின் முக்கியத்துவத்த இந்த படத்துல சொல்லிருப்பாங்க. கல்வி கிடைப்பது எல்லோருக்கும் எளிது இல்லனும்  ஒரு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் பிறகு படிக்க ஏங்கும் தருணங்கள் ன்னு கதை காமெடி கலந்த சமூக சிந்தனையோடு அமைந்திருக்கும்.

இந்த படம் personal அ பல பாதிப்ப எனக்குள்ள ஏற்படுத்திற்கு. நமக்கு பிடிச்ச வேலை செய்யணும் அதுவும் பிடிச்ச மாதிரி செய்யணும் முக்கியமா மன நிறைவா செய்யணும் ன்னு இந்த படத்த பாக்கும் போது எல்லாம் தோணும்.

இப்பவும் அந்த படத்துல காட்டுற மாதிரி வேலைக்கு போய்ட்டு படிக்கிற students இருக்காக. கல் அறுக்குறது, பூ பறிக்கிறது, தறி clean பண்றது ன்னு வேலை செஞ்சுட்டே படிக்குற பசங்கள பாக்கும் போது இந்த படம் எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும்.

கதை: 
செங்கல் அறுக்கும் இனமா ஒரு ஊரே ஆண்டே என்பவருக்கு அடிமை மாதிரி வேலை செய்றாங்க. அங்க குழந்தைங்க பள்ளிக்கூடம் போய் படிக்க மாட்டாங்க, அதுக்கு விடவும் மாட்டாங்க. அந்த குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர NGO வால  ஏற்பாடு பண்ணப்படுற teacher தான் விமல். விமல் படிப்போட முக்கியத்துவத்த அந்த ஊர் மக்களுக்கு எப்படி புரியவைக்கிறாங்க, அதுல ஏற்படுற இடர்பாடுகள் ன்னு படம் நகரும்...

Teaching வெறும் வேலை இல்ல அது ஒரு வித அமைதியான புரட்சி ஏற்படுத்த கூடிய கருவி... அத பயன் படுத்துற விதத்துல பயன்படுத்துனா society ல பல மாற்றங்கள ஏற்படுத்தலாம், விதைக்கலாம். இந்த கருத்த விமல் ஆசிரியரா இந்த படத்துல ஆழமா அழகா தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்திருப்பாங்க.

ஹீரோவோட எண்ணத்த புரிஞ்சுகிட்டு supportive character அ பாக்கியராஜ் அப்பாவா நடிச்சுருப்பாங்க. ஹீரோ சமையல்ல திருடி சாப்டுறது, விடுகதை கேட்டு அலற விடுறது ன்னு இனியா ஒருபக்கம் காமெடி பண்ண, படத்துல குட்டி பசங்களா வர குழந்தை நட்சத்திரங்கள் அவங்க பங்குக்கு இயல்பான நடிப்பு ல காமெடிய தெறிக்க விட்டுருப்பாங்க ...

 "செங்கல் சூல காரா" மற்றும்  "ஆ னா ஆவன்னா ஈனா அத அறிவிக்க வந்தவன் ஆண்டவனா" பாடல்கள கேட்கும் போது எல்லாம் மெய்சிலிர்க்கும்...

என் நெஞ்சில் மறக்க முடியாத திரைப்படங்களில் "வாகை சூடவா" என்றுமே முதலிடம் தான்...


« Last Edit: Today at 12:26:51 AM by Yazhini »