என்னைப் பார்த்தாய்
ஆனால் பார்க்காதவள் போல நடந்தாய்
உன் கண்களில் நான்
ஒரு வழித்தட நிழலாய்
என் கண்ணீர்
உன் பெயரை
எத்தனை முறை
உச்சரித்திருக்கிறது தெரியுமா?
அது கேட்கப்படாததால்
இன்று வரை
அது நிற்கவில்லை போலும்
உன் புன்னகை கண்ட நாள்
என் இரவுகளுக்கெல்லாம்
தூங்காத சுகமான நினைவுகளை தந்தன
உனக்கு அது ஒரு நொடி
எனக்கு அது ஒரு ஆயுள்
நீ சிரித்த போது
அந்த சிரிப்பின் ஓசை
என் இரவுகளுக்கெல்லாம்
தூங்காத கண்ணீராய் மாறியது.
நீ பேசாத ஒவ்வொரு நாளும்
என் உள்ளே ஒரு மரணம் நடந்தது.
ஆனால் வெளியில்
நான் உயிரோடுதான் இருந்தேன்
அதுதான் கொடுமை
நான் உன்னை
என் வாழ்க்கையாய் நினைத்தேன்.
ஆனால் இன்று நீயோ
என்னை ஒரு பழகிய முகமாய் கூட
நினைக்கவில்லை
பல நேரம் உன் விருப்பங்களில்
என் ஆசைகளை புதைத்தேன்,
ஒரு நாள் என் காதலையும்
புதைப்பாய் என்றறியாமல்
நான் அழுத நாட்கள்
உனக்குத் தெரிய வாய்ப்பில்லை
ஆனால் நீ சிரித்த நாட்கள்
அனைத்தும்
நடிப்பு என்று
தெரிந்து கொண்டேன்
என்னுடையது காதல் அல்ல என்கிறார்கள்
அவர்களுக்கு என்ன தெரியும்?
தினம் தினம்
உயிரோடு வாழ்ந்து
மெதுவாகச் செத்துபோவது
நானல்லவோ !
இன்றும் நான்
உன்னை நேசிப்பதை
நிறுத்தவில்லை.
ஆனால் இனிமேல்
அந்த காதலில்
நான் இல்லை
உனக்கு வேண்டாத
என் கனவுகளை
கண்ணீரில் மூழ்கடித்தேன்
என் காதல்
உனக்கு சுமையாக இருக்கக் கூடாது என்று
நான் என் இதயத்தையே
இலகுவாக்க முயன்றேன்.
ஆனால் அது
அதிகமாக இரத்தம் சிந்தியது.
ஒருதலைக் காதல்
ஒரு தோல்வி அல்ல.
அது
யாருக்கும் தெரியாமல்
நடக்கும்
தினசரி படுகொலை.
சிறுக சிறுக
சாக
காதலித்து பார்!?
***Joker***