Author Topic: நெஞ்சம் மறப்பதில்லை-002 (திருவிழா கொண்டாட்டம்)  (Read 88 times)

Offline Forum

நெஞ்சம் மறப்பதில்லை - நினைவுகள் பேசும் நேரம்

நெஞ்சம் மறப்பதில்லை- உங்கள்
மனதிற்குள் ஒளிந்திருக்கும் நினைவுகளுக்கும், சொல்லப்படாத அனுபவங்களுக்கும், சொல்ல தயங்கிய உணர்வுகளுக்கும், எங்கோ மனதில் பதிந்த ஆசைகளுக்கும், காலம் கடந்தும் மனதை விட்டு அகலாத அனுபவங்களுக்கும் குரல் கொடுக்கும் நிகழ்ச்சி.

ஒவ்வொரு மனிதருக்கும் பல நினைவுகள் இருக்கும்.
சில புன்னைகையை தரும்…
சில கண்களை நனைக்கும்…
சில வாழ்க்கையை மாற்றிய தருணங்களை மீண்டும் நினைவூட்டும்.
அந்த நினைவுகளை உள்ளுக்குள் அடக்கி வைக்காமல்,
வார்த்தைகளாக மாற்றி,
உணர்வுகளாய் எங்கள் குரல் வழியே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியே
நெஞ்சம் மறப்பதில்லை – நினைவுகள் பேசும் நேரம்.


இந்த நிகழ்ச்சியில், FTC Forum Team வழங்கும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு,
உங்கள் அனுபவங்கள்,
நினைவுகள்,
உணர்வுகள்,
சிறு சம்பவங்கள்,
மனதில் இருக்கும் ஆசைகள், உங்களை நீங்கள் அறிந்துகொள்ள உதவிய ஒரு தருணம்
என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்


இந்த நிகழ்ச்சி bi-weekly ஆக (இரு வாரத்திற்கு ஒருமுறை) நடைபெறும்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தலைப்பு…
அதில் பல நினைவுகள்…
சில நிகழ்வுகள்…
சில கதைகள்…
📅 திங்கட்கிழமை இரவு (இரு வாரத்திற்கு ஒருமுறை)
🕥 IST 10:30 PM
🎧 FTC FMல்


இது போட்டி அல்ல.
இது மதிப்பீடு அல்ல.
இது சரி – தவறு என்ற அளவுகோலும் அல்ல.
இது
உங்களை நீங்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம்.
உங்கள் நினைவுகள் மற்றொருவரின் மனதிற்கும் நெருக்கமாகும் ஒரு தருணம்.

📌 நிகழ்ச்சி விதிமுறைகள்

1. இந்த நிகழ்ச்சிக்காக பயனர்கள் எழுதும் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும்.

2. பதிவுகள், அந்த வாரத்திற்கு FTC Forum Team அறிவிக்கும் குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். தலைப்பிற்கு தொடர்பில்லாத பதிவுகள் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்படமாட்டாது.

3. பகிரப்படும் அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் பயனரின் சொந்த அனுபவமாக இருக்க வேண்டும். பிறரின் தனிப்பட்ட வாழ்க்கை, அனுமதி இல்லாத விவரங்கள் அல்லது அடையாளம் தெரியக்கூடிய தகவல்களை பதிவில் குறிப்பிட வேண்டாம்.

4. அனைத்து பதிவுகளும் மரியாதை, நாகரிகம் மற்றும் மனிதநேயத்தை கடைப்பிடிக்கும் வகையில் எழுதப்பட வேண்டும். பிறரை காயப்படுத்தும், இழிவுபடுத்தும், அவமதிக்கும் அல்லது தவறான வார்த்தைகள் பயன்படுத்தப்படும் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

5. இந்த நிகழ்ச்சி ஒரு உணர்வு மற்றும் நினைவுகளை பகிரும் மேடை என்பதால், தேவையற்ற அரசியல், மதம் சார்ந்த கருத்துகள் அல்லது சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

6. பயனர்கள் பகிரும் பதிவுகள் FTC FM நிகழ்ச்சியில் வாசிக்கப்படும். பதிவை பகிர்வதன் மூலம், அதை FM நிகழ்ச்சியில் பயன்படுத்த FTC Team-க்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள் என்று கருதப்படும்.

7. எழுத்து நடை மிக நீளமாகவோ அல்லது மிகச் சுருக்கமாகவோ இல்லாமல், உங்கள் உணர்வுகளை தெளிவாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

8. Artificial Intelligence (AI) மூலம் முழுமையாக உருவாக்கப்பட்ட அல்லது copy-paste செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அனுமதிக்கப்படாது. AI உதவியை மொழி திருத்தம் அல்லது அமைப்பு மேம்படுத்துதலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவின் உள்ளடக்கம் மற்றும் உணர்வு முழுமையாக பயனரின் சொந்த அனுபவமாகவோ, ஆசைகளாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

9. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றும் பதிவுகளையே FTC Team நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யும். தேர்வு தொடர்பான முடிவுகள் இறுதியானவை.

10. ஒவ்வொரு வாரமும், இந்த நிகழ்ச்சிக்காக இடப்படும் பதிவுகளில் (சரியான முறையில் இந்நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில்) முதலில் பதிவாகும் 6 பதிவுகள் மட்டுமே நிகழ்ச்சிக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

11. முந்தைய வாரத்தில் ஏற்கனவே எழுதி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பயனர்களின் பதிவுகள், அடுத்த வாரத்திற்கான தேர்வில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12.முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட பதிவுகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
இடம் பிடிப்பதற்காக காலியான அல்லது பாதியாக எழுதப்பட்ட பதிவுகள், அதனை பின்னர் நிரப்பும் நோக்கில் இடப்படும் பதிவுகள் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

******************************************************
நெஞ்சம் மறப்பதில்லை-002

இந்த வாரம் FTC Team தேர்வு செய்திருக்கும் தலைப்பு

“திருவிழா கொண்டாட்டம்”

 இந்த தலைப்பை மையமாகக் கொண்டு, உங்களின் மனதோடு இணைந்த அனுபவங்கள், நினைவுகள், உணர்வுகள் மற்றும் ஆசைகளை நயமான வகையிலும், சுவாரசியமாகவும் எழுதிப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவு குறைந்தபட்சம் 250 வார்த்தைகளும், அதிகபட்சம் 350 வார்த்தைகளும் கொண்டதாக இருக்க வேண்டும். மனதைத் தொடும் எளிமையும், வாசிக்க ஈர்க்கும் எழுத்து நடையும் உங்கள் பதிவினை அழகாக்கும் என்பதை பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.

உங்கள் பதிவுகளை  எதிர்வரும் ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

****************************************************************

IMPORTANT RULE (EFFECTIVE THIS WEEK)

🟢 This week, the first 6 posts received before the cut-off time will be selected for FM Program.

🟠Starting next week onwards, participants whose posts were selected in the previous week will not be selected again in the immediate following week for FM. This is to ensure a fair opportunity for everyone.

🔵However, this rule does not restrict anyone from posting memories or content. We strongly encourage all users to continue sharing your memories and posts every week before the cut-off time, as your participation is always valued and appreciated.

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 242
  • Total likes: 804
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
எங்க குடும்ப குலதெய்வம் கண்ணகி அம்மாளாச்சி.
வருஷத்துக்கு ஒரே ஒரு தடவை, 15 நாட்கள் நடக்கிற எங்க கோவில் திருவிழா வெறும் திருவிழா மட்டும் இல்ல… அது எங்க குடும்பத்தோட reunion.

அதுலயும் 12-ம் நாள் திருவிழா எங்க குடும்பத்துக்கு மாத்திரம் உரித்தான  ரொம்ப ஸ்பெஷல் திருவிழா நாள் . போர் காலத்துல வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த என் அம்மாவோட friends கூட, வருஷம் முழுக்க விடுமுறையை சேமிச்சு வச்சு இந்த ஊர் திருவிழாக்கு தான் வருவாங்க. அம்மாளாச்சியைப் பார்க்கறதுக்காக மட்டும் இல்ல… அவங்க விட்டு போன ஊருக்கும், அவங்களுக்கும் நடுவில இருக்குற உறவை மீண்டும் மீட்டி பார்த்து புதுப்பிக்கிறதுக்கும் தான். .

மஞ்சள் பூ , பட்டு சிவப்பு ரோஜா ல செஞ்ச பூ அலங்கார சாத்துப்படி சூடி  எங்க அம்மாளாச்சி பிள்ளையார் முருகன் சகிதம் வெளி வீதி உலா வரும்போது… அப்டியே உடம்பே சிலிர்த்துப் போகும்.
இப்போ எல்லாம் social media-ல noise pollution, Air pollutionன்னு பட்டாசுக்கு எதிரா எத்தனை போராட்டம் நடந்தாலும், அம்மாளாச்சி வெளில வரும்போது காதைப் பிளக்கும் வேட்டு   சத்தமும், கண்ணை பறிக்கும் வாணவேடிக்கையும் இல்லனா… அந்த திருவிழா முழுமையடையாத மாதிரி தான் தோணும்.

“ஏழு கழுதை வயசானாலும்” மாமாவையும் அண்ணாவையும் இழுத்துக்கிட்டு போய் cone ice cream gang ஆ   வாங்கி சாப்பிடுற பழக்கம் இன்னைக்கும் மாறல. வயசு கூடுது… ஆனா அந்த சந்தோஷம் மட்டும் மாறல.

எங்க திருவிழால எனக்கு ரொம்ப பிடிச்ச இன்னொரு விஷயம், மாலை பூஜை முடிஞ்சதும் நடக்கிற ஸ்பெஷல் ப்ரோக்ராம்.
குமரன் நாதஸ்வரக் கச்சேரி, செண்டை மேளக் கச்சேரி, வில்லுப்பாட்டு… பக்தியோட சேர்ந்து கலையும் கொண்டாடற அந்த நேரம் பார்ப்பதுக்கே மனசு நிறைவா இருக்கும் .

WhatsApp group-ல எத்தனையோ படங்களும் மெசேஜ்களும் பகிர்ந்தாலும், நேர்ல cousin-களை சந்திச்சா வருஷம் முழுக்க சேமிச்ச கதைகள் எல்லாம் ஒரே மூச்சில வெளிய வரும்.
“என்னதான் இப்படி ஓயாம பேசுறீங்க?”ன்னு பெரியவங்க சலிச்சாலும், அந்த பேச்சு தான் எங்களை இன்னும் நெருக்கமா கட்டி வைக்குது.

புகைப்படத்துல மட்டுமே தெரிஞ்ச பாட்டி-தாத்தாக்கள் பேர் சொல்லி, ஊர் பெரியவங்க நம்மை பார்த்து
“அந்தக் கண்ணு அப்படியே இருக்கு… அந்த மூக்கு அப்படியே இருக்கு”
ன்னு சொல்றப்போ,அப்பாடா , அண்ணா அடிக்கடி சொல்ற மாதிரி ,
நம்மை யாரோ குப்பைத் தொட்டிலிருந்து எடுத்து வந்துடலன்னு ஒரு சின்ன reassurance மனசுக்குள்ள கிடைக்கும்.

முடிவா சொன்னா,
இந்த திருவிழா எங்களுக்கு சாமி தரிசனம் மட்டும் இல்ல.
உறவுகளை மீண்டும் சேர்க்கிற விழா.
நினைவுகளை புதுப்பிக்கிற விழா.
“நம்ம வேரு எங்க இருக்குனு” ஒவ்வொரு வருஷமும் நினைவூட்டற விழா
.
« Last Edit: January 21, 2026, 10:37:44 PM by Madhurangi »

Offline Thenmozhi

  • Jr. Member
  • *
  • Posts: 83
  • Total likes: 567
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
  எனக்கு யாழ்ப்பாணத்தில் அன்பான அழகான தாத்தா பாட்டி இருந்தாங்க.நாங்கள் அவர்களுடன் தினமும் போனில் பேசுவோம்.போன் பேசினாலே பாட்டி கேட்கும் கேள்வி "எப்போ ஊருக்கு வாரீங்கன்னு".பாட்டி ஆகஸ்ட் மாதம் லீவு வருவோம் என்று சொல்லுவோம்.உடனே பாட்டி சொல்லுவாங்க நல்லூர்த் திருவிழா வருது வாங்க போகலாம் என்று.எப்போ ஆகஸ்ட் மாதம் வரும் என்று வெயிட் பண்ணிட்டு இருப்பேன்.
   யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளம் நல்லூர் கந்தசுவாமி கோவில். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 25 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் உச்சக்கட்டமே தேர்த் திருவிழா.யாழ்ப்பாணத்தில் எங்களுக்கு நிறைய உறவுகள் இருக்கிறார்கள்.நான் எங்கள் குடும்பத்துடனும் ,உறவுக்காரர்களுடனும் அந்த தேர் திருவிழாவை பார்க்க போயிருந்தேன்.
    அழகாக பட்டுப்பாவாடை உடுத்தி,தலைக்கு பூ வைத்து ,என்னை கண்ணாடியில் பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது.அனைவரும் கலாச்சார உடையில் தான் வந்தார்கள்.ஏனெனில் கலாச்சார உடையில் செல்லும் பக்தர்களைத்தான் கோயிலின் உள் நுழைய அனுமதிப்பார்கள்.
    செல்லும் வீதி எல்லாம் ஒரே பக்தர் கூட்டம்.தண்ணீர் பந்தல்கள், தெருக்கடைகள் தெரு ஓரங்களில் காட்சியளித்தன.கடைகளை வேடிக்கை பார்த்து வந்தேன்."அப்பா அங்க பாருங்க ஐஸ்கிரீம் கடை"."கோவில் கும்பிட்டு வரும் போது வாங்கி தாரேன்" என்று அப்பா கூற மனதை அடக்கி கொண்டு நடந்து சென்றேன்.
  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லூரின் நான்கு வீதிகளிலும் கூடி இருந்தார்கள்.இலங்கையின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தமிழர்களும் ,வெளிநாட்டவர்களும் அங்கே வந்திருந்தனர்.பக்தர் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தேன்.அப்பா என்னை தோளில் சுமந்து சென்றார்.இந்தத் தருணம் அப்பா தான் எனக்கு கடவுளாக தெரிந்தார்.
  அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேரில், வள்ளி-தெய்வானை சமேதராய் முருகப்பெருமான் எழுந்தருளி, நான்கு வீதிகளிலும் பவனி வந்தார்.பக்தர்கள் "அரோகரா" முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பல்லாயிரக்கணக்கான தேங்காய்கள் சிதறு தேங்காய்களாக "படார் படார்" என்று உடைக்கப்பட்டன.மேள,தாள, நாதஸ்வரங்கள் இசைக்கப்பட்டதைக் கேட்டு நான் இசையில் மெய் மறந்து விட்டேன்.ஆண்கள் அங்கபிரதட்சணம்,பெண்கள் அடி எடுத்து வைத்தல்,பாற் காவடி ,பறவை காவடி ,தூக்கு காவடி என பக்தர்கள் நேர்த்திக்கடன் தீர்த்தனர்.பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
  இரு பக்கமும் இரு வடங்கள் பிடித்து தேர் இழுக்கப்பட்டு வந்து கொண்டிருந்தது.நேரடி அஞ்சல் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது."இறுக்கமாக கையப் பிடி தொலைந்தால் இந்த ஆட்களுக்குள்ள பிடிக்க இயலாது"அம்மாவின் உரத்த தொனி. என் மனதில் பயம் ஆரம்பித்தது."ஐயோ நான் தொலைந்தால் வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியாதே" .அம்மாவை கேட்டேன் "தொலைந்தால் எங்கே நிற்க வேண்டும் என்று".அம்மா ஒரு மரத்தினை காண்பித்தார் அப்பாடா  என்று நிம்மதி.
    பக்தர்கள் தேரின் பின்னால் பஜனை பாடியபடி வந்தார்கள்.இந்த காட்சிகளை பார்ப்பது என் மனதுக்கு சந்தோசமாக இருந்தது.கோவில் உள்வீதி, வெளிவீதி என வலம் வந்து வணங்கினோம்.மிகப் பிரமாண்டமான கோவில்.
  இந்தக் கோவிலில் எனக்கு மிகவும் பிடித்தது சரியான குறிப்பிட்ட நேரத்தில் பூஜைகள் ஆரம்பித்து நிறைவேறும்,அர்ச்சனை டிக்கெட் ஒரு ரூபாய்,கோவிலைச் சுற்றியுள்ள மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டமை.இதனால் நிறைய பக்தர்கள் பயனடைந்தார்கள்.தேர் இருப்பிடத்தை வந்ததும் சுற்றி கும்பிட்டோம்.சாமிக்கு பச்சை சாத்துதல் இடம் பெற்று,பூஜைகள் நடைபெற்று, இனிதே தேர் திருவிழா நிறைவு பெற்றது.
     திருவிழா நிறைவுற்றது என் மனசு நிறைவாகனும் அல்லவா?ஸ்பெஷல் ஐஸ் கிரீம் ,காரச் சுண்டல்,கச்சான்,இனிப்பு வகைகள் சாப்பிட்டு இன்புற்றோம்.வந்தவர்கள் "என்ன toys வேணும் "என கேட்க நானும் கையை காட்டினேன்.கை நிறைய toys  அடுக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
   நல்லூர் திருவிழா என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல, அது ஈழத்தமிழர்களின் பக்தி, கலாசாரம் மற்றும் ஒற்றுமையின் அடையாளம்.இதுவே என்னால் என்றும் மறக்க முடியாத திருவிழா கொண்டாட்டம்.