Author Topic: குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்!  (Read 242 times)

Offline MysteRy


ந‌மது தாத்தா காலத்தில் எல்லாம் மன இறுக்கமாக இருக்கும் குழந்தைகளைத் தேடித்தான் பார்க்க‍ வேண்டும். ஆனால்
இன்று நிலைமை அப்ப‍டியா இருக்கிறது.?

“நானே செம்ம கடுப்புல இருக்கேன், பேசாம போயிரு” - இந்த வார்த்தையை ஒரு 6 வயது சிறுவன் தனது 4 வயது தங்கையிடம் கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இப்படிப்பட்ட உணர்வு வெளிப்பாடுகளையும், மொழி நடைகளையும் அவர்கள் எங்கிருந்து கற்றுக் கொள்ளுகிறார்கள்? வேறு எங்கிருந்துமல்ல பெரும்பாலும் பெற்றோரிடமிருந்தும், வீட்டுப் பெரியவர்களிடமிருந்தும் தான். பள்ளியின் மீதும், டிவி மீதும் மட்டும் நாம் பழி போட்டுத் தப்பிக்க இயலாது. நம்மைப் போலவே குழந்தைகளும் கூட மன இறுக்கத்துக்கு ஆளாகிறார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். பிள்ளைகளின் உளவியலில் முதல் பாதிப்பை ஏற்படுத்துவது குடும்பம் தான், அதற்குப் பிறகுதான் மற்றவை.

பெற்றோருக்குள் நடக்கும் சண்டைகள், வீட்டில் பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்தி அடக்கியாள்வது, மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பேசி சிறுமைப்படுத்துவது, நீ அப்பா செல்லம், தம்பிதான் அம்மா செல்லம் என உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு இடையே பாரபட்சம் காட்டுவது, கல்விச்சுமை, வெளி வட்டாரத்தில் ஏற்படும் தோல்விகள் போன்ற பல காரணிகள் அவர்களது பிஞ்சு மனதில் உளைச்சலை ஏற்படுத்துகிறது.

பிள்ளைகள் மன இறுக்கத்தில் இருந்தால் பெரும்பாலும் யாரிடமும் பேசாது அல்லது எதிர்மறையாக நடந்துகொள்ளும். அதுபோன்ற தருணங்களில் அவர்கள் அருகிலே அமர்ந்து அரவணைத்து அவர்களோடு பேச வேண்டும். அவர்கள் சொல்லுவதை காதுகொடுத்து கேட்க வே ண்டும். அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். நாம் அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்கிறோம், அதற்கு மதிப்பளிக்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தி விட்டாலே அவர்களுக்கு பாதி மன இறுக்கம் குறைந்துவிடும்.

நாம் மன இறுக்கத்தில் இருக்கும்போது எப்படி நடந்து கொள்ளுகிறோமோ அதைத்தான் அவர்களும் நம்மிடத்திலிருந்து கற்றுக் கொள்ளுகிறார்கள். அப்பா டென்ஷனாய் இருக்கும்போது சத்தம் போட்டு காட்டுக் கத்தல் கத்தினால் பிள்ளைகளும் அதையே செய்யும், கோபப்படும் போது அம்மா பாத்திரங்களை தூக்கி விசிறியடித்தால் அதைப் பார்க்கும் பிள்ளைதான் கோபத்தில் இருக்கும்போது புத்தகங்களை விசிறியடிக்கும்.

எனவே குழந்தைகள் மனதில் நேர்மறையான நல்ல விஷயங்களை பதிக்கவேண்டியது பெற்றோரின் தலையாயக் கடைமை தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் இருந்தே பலவற்றையும் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றன. இதனால் பெற்றோர் குழந்தைகள் முன்னிலையில் சர்வ ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுவது அவசியம். அரசியல் தலைவர்களையும், பிரபலங்களையும் பற்றி பிள்ளைகளுக்கு முன்பாக பேசும்போது அவர்களை ஒருமையில் விளிப்பதைத் தவிர்க்கவேண்டும். உறவினர்களையும், ஆசிரியர்களையும், படிக்கும் பள்ளியையும் பிள்ளைகளுக்கு முன்பாக விமர்ச்சிக்கக் கூடாது. கோபத்தை வெளிப்படுத்த சனியனே, நாயே, பேயே என்று கத்துவதையும் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்துவதையும் அறவே தவிர்க்க வேண்டும்.

.

வீட்டில் குழந்தைகளுக்கு சுதந்திரமான சூழலும், அவர்களோடு மனம்விட்டுப் பேசுமளவு பெற்றோருக்கு நல்ல நெருக்கமும் இருந்தால் குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுவது மிகவும்குறையும். ஏற்படும் சின்னச்சின்ன பிரச்சனைகளையும் எளிதில் சரிசெய்துவிடலாம்.