Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 371  (Read 471 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 371

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Evil

கடவுளின் கரம்...  நான் பிடித்தே
நடந்த தருணம் அது

வா மகனே வா என ஆசையாய்
அழைத்து செல்லும் என் அன்பு அப்பா

காயங்கள் மனதோடு ஆயிரம் இருந்தாலும்..
பிள்ளைகளுக்காக மனதுக்குள்ளே

கவலை அனைத்தும் புதைத்துக்கொண்டு
வாழும் மனித தெய்வம் அவர்...

எனக்கு இவுலகில் எது பார்த்தும் பயம் இல்லை ஏன் எனில்,
நான் பற்றிக்கொண்டிருக்கும் கரமே எனை காத்து நிற்கும்.

உலகமே எதிர்த்தாலும் உன் கரம் ஒன்றே
போது என்னை காத்து நிற்கும் அந்த கைகள்..

கடவுள் தந்த வரம் தானோ உன் மகனாய் 
நான் பிறந்து உன் கரம் பற்றி நடக்கின்றேன்

என் அருகில் அலைகள் வரவும் பயம் கொள்கிறது..
என் தந்தை.. என் அருகில் இருப்பதாலே..

அன்பில் அன்னை என்பர் பலர் ஆனால்
அவளே தோற்று போவாள் என் தந்தைமுன்னே 

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்கிறார்கள்
அன்னை முதல் பத்து மாதம் மட்டுமே சுமக்கிறாள்.

ஆனால் ஆயுள் வரை நம்மை சுமக்கும் ஓர் உயிரென்றால்..
அது நம் தந்தையே.. அவருக்கு ஈடு அவரே..

வானத்தில் சிரிக்கும் வானவில்லை கேட்டாலும்..
பாய்ந்து சென்று.. வில்லை வளைத்து நம் கையில்
கொடுக்க துடிக்கும் ஓர் இதயம் கொண்டவன் அவனே..

போர்க்களத்தில் மிக பெரிய படையே வந்தாலும்
என்னுடன் என் சிங்கம் ஓங்கிய கர்ஜனையுடன்

என் தந்தை வந்தாலே..  எட்டு திக்கும் ஓடி ஒளியும்.
தொல்லைகள் கொடுக்கும் அசுர படைகளுமே ..

என்றும் என்னுடனே வாழ்ந்திடும் நடமாடும் தெய்வம் அவரே..
என் அன்பு தெய்வத்திற்கு  இந்த கவிதை சமர்ப்பணம்...
« Last Edit: May 20, 2025, 10:39:49 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline சாக்ரடீஸ்


அப்பா – என் மனப் பயணம்

சிறியவனாக இருந்தபோது
அப்பா எனக்கு ஒரு வானம் போல,
எல்லாமே அவர்தான்
பாதுகாப்பு, சக்தி, ஆதரவு.

அவரது வார்த்தை
என்றால் சட்டம்,
அவரது பார்வை
என்றால் பெருமை.
அந்த நாட்களில்
அவர் என்ன
சொன்னாலும் நம்பினேன்.

ஆனால்…
நான் வளர்ந்தபோது
என் கனவுகள் பிறந்தன,
எனக்கான பாதை உருவானது.

ஆனால்…
அவர் என் பாதையைப்
புரிந்து கொள்ளவில்லை.

ஆனால்...
காலம் தாவியது...
கனவுகள் மாறின,
அவரைப் புரியாமலே
என் மனம் கலங்கின.
“இது செய்யாதே”, “அதை விடு”
என்ற வார்த்தைகள்,
தடைகள் போல் தோன்றின
அன்பு இல்லா கட்டுப்பாடுகள்.

"என்ன செய்வது,
எதை விரும்புகிறேன்"
என்ற என் சொற்கள்
அவருக்கு தேவையில்லை
போல இருந்தது.

"நீ மகன்…உனக்கு
கடமை இருக்கிறது" என்றார்,
ஆனால் என் மனம் சொல்லியது
"நானும் ஒரு மனிதன்,
எனக்கும் ஆசைகள் இருக்கும்".

என் கனவுகள் கலைந்தது,
நான் ஆசைப்பட்ட வாழ்க்கை
அனைத்தும் கண்ணீரானது.

இப்போது,
என் வாழ்க்கை ஓர் பயணம் தான்,
ஆனால் அது என் பயணம் அல்ல,
அவருடைய கனவுக்கான நடைதான்.

Offline Titus

.       .   .    நான் எழுதும் எதிலும்,
மிகச் சிறந்த மூன்று எழுத்து – அப்பா..❤️

விலை மதிக்க முடியாத பொம்மை வாங்கி தருபவர் அல்ல
தன் நெஞ்சையே பொம்மையாக மாற்றிக்
குழந்தையின் புன்னகையிலே வாழ்வை காணும் ஒரு மனிதன்!
அப்பா... ❤️

கண்ணில் கோபம் போல தெரிந்தாலும்,
இதயத்தில் பாசம்தான் பொங்குகிறது...
அன்பும், ஆசையும் கலந்து உருவான
உணர்வின் கோயில் – அப்பா.❤️

தன் துயரை சொல்லாது தாங்கி,
நம் கனவுகளை சுமந்துகொண்டு ஓடும்
தோழனும், தாயாகிவரும்
என் வாழ்க்கையின் முதல் ஆசான்!
அப்பா.... ❤️


தன் தோளில் அமர்த்தி
உலகத்தை வானம் போல காட்டியவர்,
அந்த தோள்கள் வலி கொண்டபோதும்
என்னை உயரத்தில் ஏற்றிவைத்தார்…

உயரச் செல்வதற்கான ஏணி,
தந்தையின் மென்மையான முதுகு!

வாழ்க்கையின் நிழலாக,
எந்தப் புகழும் வேண்டாது நின்றவர்,
கண்ணுக்கு தெரியாத கடவுள் எங்கே தேடுறேன்?
கண்ணுக்குத் தெரிந்தும்,
நெஞ்சால் புரிந்து கொள்ளவே முடியாதவர் –
அப்பா...❤️

அன்பை சொல்வதில்லை, ஆனால்  வாழ்ந்து காட்டுபவர்
நமக்காக வாழ்ந்திட, தன்னை மறந்தார்,
தன் கனவுகள் எல்லாம் நம்மில் வீழ்ந்ததே,
தொலையாத தாக்கம் அவர் நிழல்தான்,
ஒரு பாராட்டும் எதிர்பாராத பேருணர்வு
. என் உயிரின் அடையாளம்.
அப்பா...❤️

நடக்கும் வழியில் என் கைவிடாத கைவாள்,
பசுமை கனவுக்குள் நான் பூக்கும் காரணம்,
என் சுவாசத்துக்கு கூட அர்த்தமாய் நிறைந்தவர்,
அவரின் சிரிப்பே எனக்கு சொர்க்க வாசல்,
என் உள்ளத்தின் எல்லா திரைகளிலும் அவர்தான்,
அப்பா என்றொரு வார்த்தை... உயிர் கொடுக்கும் மந்திரம்.
அப்பா.. ❤️

உன் நிழலில் நான் மலர்ந்த நிமிடம்தான் என் பிறப்பு,
உன் ஆசீர்வாதம் எனும் ஒளியில் நான் ஒளிர்கிறேன்,
உன் தோளில் தலை வைக்கும் நினைவே, எனக்கான தேவையாக   உள்ளது.
 
உன் சுவாசம் இல்லாமல் எது என் வாழ்க்கை?
உனைப் போல யாரும் என்னை நேசிக்க முடியாது,
அன்பாகும் என் அப்பா... Love you, Dad!♥️♥️♥️♥️



     
 
     
« Last Edit: May 23, 2025, 10:54:49 AM by Titus »

Offline Asthika

தந்தையின் தோளில் சுமந்தேன் வாழ்வு,
தாயின் புன்னகையில் கண்டேன் நம்பிக்கை.
முழுமனதுடன் வளர்த்தாய்ங்கே நீ,
என் முதல் நண்பன், என் முதல் ஆசானே!

பள்ளி வழி நீ நடக்க வைத்தாய்,
பிழைகள் செய்ததும் மன்னிக்க வைத்தாய்.
உன் பார்வை போல ஒளி இல்லை என் பாதையில்,
உன் வார்த்தை போல ஆதரவு எதுவும் இல்லை!

நான் வளர்ந்தாலும் நீ என் மரம்,
நிழலாய் நீயிருப்பாய் என்றும் நம் பயணம்.
மகனாய் வந்தேன், நண்பனாய் இருந்தேன்,
தந்தையாய் நீ எனை தேடி வந்தாய்

வாழ்க்கை என்னும் பள்ளத்தில்,
தந்தை ஒரு தூணாக இருந்தார்.
மகன் கற்றது ஒவ்வொரு அடியிலும்,
அந்த தூணின் துணை நிறைந்தது.

தந்தையின் கடின பார்வையின் பின்னால்,
ஒரு மென்மையான காதல் மறைந்திருக்கும்.
மகன் விழுந்தால் தோளாக அமைவார்,
வெற்றியில் தூரத்தில் நின்று பாராட்டுவார்.

மௌனமாகும் அந்த அன்பு மொழிகள்,
நித்தம் உரைக்கும் வாழ்வின் பாடங்கள்.
மகன் வளர்ந்தாலும் மறவேனடா,
தந்தையின் கைப்பிடி இன்னும் என் வழிகாட்டி.

தாயின் மடியில் நெஞ்சம் உண்டு,
தந்தையின் தோளில் உலகம் உண்டு.
வாயாற் சொல்லாது வெளிப்படும் அன்பு,
வாழ்க்கையின் நிழலாய் வருவான் தந்தை.

வெட்கத்தில் மறையும் நெகிழ்ச்சியின் பெயர்,
வெறும் பார்வையில் உருகும் ஒரு நெருப்பின் பேர்.
சிரிப்பதற்குள் பதைந்து நிற்கும் மனம்,
தந்தையின் பாசம் ஒரு கடல் எனும் தனம்.

சோர்ந்தேன் என்றால் துணையாக நிற்பார்,
சூறாவளியில் கூட சுவாசமாய் இருப்பார்.
அரசனாய் அல்ல... அடியெடுத்து நடத்தும்,
அழகான புரட்சியாய் வருவார் என் தந்தை!

மகனிடம் தந்தை கூறும் வார்த்தைகள் குறைவு,
ஆனால் செயல்களில் பாசம் பெருகும்.
கோபம் போல தெரியும் கூச்சல் கூட,
ஒரு அன்பின் முகம் – நமக்குத் தெரியாத மொழி.

மௌனமாய் கொடுக்கப்படும் ஒவ்வொரு சீருடை,
சிறு சிரிப்பாய் மறைந்திருக்கும் பெரும் நம்பிக்கை.
மகனின் கண்ணீரைப் பார்த்தாலே போதும்,
தந்தையின் உள்ளம் உருகும் ஓர் ஊற்று போல.

கண்களைத் திறக்கும் முன் வேலைக்குச் செல்லும்,
மறுபடியும் களைப்புடன் வீடு சேரும்.
அவர் பேசாமல் போன நாளிலும்,
மகனுக்காய் வாழ்ந்தார் – அந்த தந்தை.

வெறும் நிழலாய் தோன்றும் ஒருவர்,
வாழ்க்கையின் ஒளியாகி விட்டார் பிறகு.
அவனுக்குள் ஒளிந்திருக்கிறது பாசம்,
பார்த்தால் தெரியும் – நம்மையே போன்றவன்!

தந்தை அன்பு வாழ்நாளும் கிடைக்காத பாக்கியமற்றவளாக ஆகிவிட்டேன்...
எனது இரண்டாவது தந்தையாக இருக்கும் என்னவனுக்கு சமர்ப்பிக்கின்றேன்.. i love u so much 💗💗💗💗💗..
« Last Edit: May 20, 2025, 12:01:27 PM by Asthika »

Offline Yazhini



தத்தி நடந்த காலத்தே அதிகம்
என் சிகையை அலங்கரித்தது சனல்கயிறு...
எனது சிம்மாசனமானது தராசு...
தந்தையின் விரல்பிடித்து சுற்றிய இடங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
ஆனால் ஆண்டுக்கொருமுறை வரும்
என் காய்ச்சலுக்கு அப்பாவின் வைத்தியம் முடிவைத்த பொம்மை.

ஆசைப்பட்டதை கேட்கும் முன் வாங்கித் தந்ததுமில்லை
எதை கேட்டாலும் தாமதமின்றி கிடைத்ததுமில்லை.
தோல்வியும் பழக வேண்டுமாம்.
பிழைகள் செய்தாலும் தட்டிக்கொடுத்து
முயற்சித்து பார் என
கூறிய என் ஆண்தேவதை.

வேலைபளுவினால் அதிகம் பேசியதில்லை
ஆனால் வளைந்த கால்களும்
உருமாற்றம் அடைந்த  விரல்களும்
பாதவெடிப்புகளும் சொல்லாமல் சொல்கிறது
என் தந்தையின் தியாகத்தை.

காலை துயிலெழுந்ததைக் கண்டதுமில்லை
இரவு துயிலுற்றதைக் கண்டதுமில்லை.
தன் மனச்சோர்வையும் அழுத்தத்தையும்
முகத்தில் சிறிதும் காட்டியதுமில்லை.

ஆதியை தந்த தந்தையைவிட
சிறந்த ஆண் ஒரு பெண்ணுக்கு யார்?
சிரித்த முகமாய் மகளிருக்க
தன்னைத்தானே சிதைக்கும் சிற்பி.
தன்னை உருக்கி குடும்பத்தை
மெருகேற்றும் மெழுகுவர்த்தி
அப்பா!!!
« Last Edit: May 20, 2025, 08:00:13 PM by Yazhini »

Offline Thenmozhi

பத்து திங்கள் கருவறையில் சுமந்தாள் என் அன்னை
பார் போற்ற என்னை உன் தோளில் சுமந்தாய் நீ அப்பா
உலகிற்கு நான் உதயமான தருணம் பிடித்த உன் விரல்
இன்று வரை பிடித்து நிற்கின்றேன் விட மனமின்றி

நீங்கள் என் கை பிடிக்கும் போது உணர்ந்தேன் பாதுகாப்பை
நீங்கள் தோளில் சுமந்த போது உணர்ந்தேன் உங்களை விட உயர்ந்தது எதுவும் இல்லை
 என்று
என் நெற்றியில் முதல் கிடைத்த முத்தம் உன்னுடையது
நம் குடும்ப விருட்சத்தின் ஆணி வேர் நீ அப்பா
நம் குடும்பத்திற்அல்லும் பகலும் அயராது பாடுபடும் உழைப்பாளி நீ அப்பா

நான் எது கேட்டும் நீ மறுத்து இல்லை ஏனெனில் உனக்கு தெரியும் உன் மகள் அவசியமானது தான் கேட்பாள் என்று
ஒருநாள் கூட இதுவரை என்னை பட்டினியாக விட்டதில்லை அப்பா நீங்கள்

என் குழந்தை பருவத்தில் உன் மார்பில் என்னை தூங்க வைத்து குட்டி குட்டி கதைகள் கூறுவார்
நகைச்சுவை பல கூறி எப்போதும் என்னை சிரிக்க வைத்துக்கொண்டு இருப்பீர்கள் அப்பா
நிலாவை காட்டி உணவு ஊட்டி
புதிர்கள் விடுகதைகள் என்னிடம் வினவுவாய்

நீங்கள் கோபப்பட்டோ அழுதோ நான் பார்த்தது இல்லை ஆனால்
நான் அழும் போது ஆறுதலாகவும்
கோபப்படும் போது புத்திமதியும் கூறிய ஆசான் நீ அப்பா

நான் விரும்பிய கலைகளையும் கல்வியையும் எனக்கு அளித்தாய்
அன்பை அள்ளித் தந்து கொண்டிருப்பாய்
அயராது புத்திமதி கூறிக்கொண்டே இருப்பீர்கள்
அப்பா பார் போற்ற என்னை வாழ வைக்கும் தெய்வம் நீங்கள்
என் முதல் ஆசான் நடிகர் ஆலோசகர் நகைச்சுவையாளர் எல்லாம் நீ அப்பா
மறு ஜென்மத்திலும் உன் மகளாய் பிறக்கனும் உன் கரம் பற்றி காததூரம் நான் செல்ல

அன்புடன் உன் ஆசை மகள் தேன்மொழி

Offline Vethanisha

கரையோடு  கவிபேசும் அலைபோல
என் மனதோடும்  கவிபேசும் என் மகனே!
பிஞ்சு பாதம் பதிக்கும் சுவடு போல்
என் நெஞ்சோடும்  பல உணர்வுகளைப்
பதிப்பவனே!! ♥️


வார்த்தைகளில்  பாசத்தை
 வெளிக்காட்ட தெரியாமல்!
உனது தேவைகளை
நிறைவேற்றி  பூரிப்பேன்!!
அன்னை போல அரவணைக்கத்
தெரியாதெனினும்!
உன்னை அவையத்து முந்தி
நிற்கச் செய்து மகிழ்ந்திடுவேன்!!♥️

என் வாழ்வின் பெருமை நீ
தெய்வம் தந்த வரமும் நீ
தந்தை என என்னை நீ அழைக்க
தலை நிமிர்ந்து உன்னுடன் நான் நடக்க
செல்லும் பாதை தோறும்
உன் நிழலாய்  நான் இருக்க
பற்றிய இக்கரம் விடுவதில்லை மகனே❤️
இணைந்தே வருவேன் உன்னோடு!
இருப்பேன்  என்றும்  உன்னோடு❤️!

வாழ்வில் நீ முன்னேற! 
நான் உழைப்பேன் உனக்காக!!
என் கனவு நான்  துறப்பேன்!!
உன்  கனவு நனவாக!  ♥️


என் முகம் கொண்டு பிறந்தவனே♥️
இனி நீயே என் முகவரி
எனக்கென பிறந்த என் உயிரே♥️
வாழ்க நீ நீடுழி
« Last Edit: May 21, 2025, 07:31:57 AM by Vethanisha »

Offline KS Saravanan

தந்தையின் அரவணைப்பு..!

கடற்கரையின் கரையோரத்தில்
கார்குழலோடு கலந்த அலையோசை
தந்தையின் கைபிடித்துச் செல்லும்
பிள்ளை மனதில் பயம் இல்லை..!

தடம் பதித்த சிறு பாதங்கள்
தலைநிமிர்ந்த பெரும் கனவுகள்
தந்தையின் விரல் - பிள்ளைக்கு
வாழ்க்கையின் வழிகாட்டும் விளக்கு..!

முன்னே நடக்கின்றான் தந்தை - அவர்
முகத்தில் நம்பிக்கையின் வெளிச்சம்
பின்வந்தான் சிறு குழந்தை - அவன்
பார்வையில் பக்தியும் பாசமும்..!

அழகான அந்தப் தருணம்
அன்பின் மொழியல்லவோ அது..?
மௌனத்திலே பேசும் கைகள்
இதய துடிப்பாய் இணைந்த உறவுகள்..!

மழலை குரலில் கேள்வி வரும்
"அப்பா, கடல் எதுக்கு பெருசா இருக்கு..?"
அப்பா சிரித்துப் பதில் சொல்லுவார்,
"உனது கனவுகள் அதைவிடப் பெரிது..!"

ஒரு காலையில் நாம் நடந்த பாதை
ஒரு நாள் நினைவாகி விடும்
அந்த நினைவில் நிலைத்திருக்கும்
எண்ணற்ற மகிழ்ச்சி..!

தந்தையின் தோளில் கனவுகள் ஆயிரம்
பிள்ளையின் என்னமோ - அப்பா தான்
உலகத்தின் மையம்..!

வயதாகி அவர் முன்னே செல்வார்
அவரின் கனவுகளை நனவாக்கி - இவன்
பின் தொடர்வான் - நாளை
அவன் கேட்ட அதே கேள்விகளை
அவன் பிள்ளை மீண்டும் கேட்கும்..!

வாழ்க்கையை ஒரு வட்டமாய்
தந்தையின் காதல் மாறாது
பரிணமிக்கும் மழலையின் பாசப் பயணமும்
என்றும் மாறுவதில்லை..!

Offline Ashik

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை .. வாழ்வின் ஆதி மந்திரம் நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்த மந்திரம் !! நம் முயற்சிகள் அனைத்தும் ஏமாற்றினாலும் என்றும் நம்மை கட்டி அணைத்து வழி நடத்தும் மந்திரம் !! உறவுகள் அனைத்தும் விட்டு சென்றாலும் உறுதுணையா நம் வாழ்நாள் எல்லாம் நம்முடன் வரும் மந்திரம் !! முகவரி இல்லாத வாழ்வுக்கு முகவரி கொடுத்த முதல் மந்திரம் !! நம்மால் முடியும் என்பதை நம்மை உணரவைக்கும் அற்புத மந்திரம் !! நம் வாழ்நாள் எல்லாம் நான் பின்பற்ற வேண்டிய தாரக மந்திரம்!! ஏனோ நம்மில் பலர்க்கு இந்த மந்திரம் மட்டும் புரிந்து கொள்ள வருடங்கள் ஓடி விடுகின்றன !! சிலர்க்கு வாழ் நாள் எல்லாம் கழிந்து விடுகின்றன !! நானோ மந்திரம் புரிந்தும் புரியாத மாதிரி விலகி நிற்கிறேன் !! மந்திரங்கள் கேட்டு வருடங்கள் ஓடி விட்டன !! அவரின் மகன் என்பதை நிரூபிக்க அவரின் கர்வத்தை எனக்கு சொந்தமாக்கி என் தந்தையின் வார்த்தைகள் என்னும் மந்திரத்தை தவிர்த்து வரும் நான் !!என்றாவது ஒரு நாள் ஏக்கம் என்னும் வெள்ளம் !! கர்வம் என்ற அணையை உடைத்து பாசம் என்னும் வெள்ளமாய் அவரை கட்டி தழுவும் நாளுக்காக காத்திருக்கிறேன் !! தந்தையே மீண்டும் உன் மந்திரங்கள் கேட்க எனக்கு வாய்ப்பு தாருங்கள் என் வாழ்க்கை எல்லாம் உங்கள் மந்திரங்கள் கொண்டு வழி நடத்துங்கள் என்று ஏக்கத்துடன் நான் இன்று !!