காலையில் விழிக்கையில்
மங்கிய வெளிச்சமும்
கதிரவன் விரிகையில்
பூத்திடும் அனிச்சமும்
சோலையை எழுப்பிடும்
பறவையின் எச்சமும்
சோர்வுடன் இருக்கையில்
சோம்பலின் மிச்சமும்
பச்சை போர்வையில்
மூடிய மலையும்
பாதம் நனைத்திட
கூடிடும் அலையும்
பசித்திருக்கையில்
கொதித்திடும் உலையும்
பக்தியின் கண்களில்
ஒளிர்ந்திடும் சிலையும்
நட்ட நடுநிசி
நகைத்திடும் விண்மீன்
வெட்ட வெளியினில்
மேய்ந்திடும் கலைமான்
வீட்டுக்கருகினில்
கட்டிடும் மலைதேன்
மதுரை ஆயிரங்கால்
மண்டபத்தின் தூண்
குருவிகள் கீச்சிட
உதித்திட்ட சோலை
மனல்வெளி திட்டிலே
கோலமிடும் பாலை
கிராமத்து பாதையில்
தோன்றிய ஆலை
எந்தன் தனிமையில்
என்தாயின் சேலை
இப்படி எனக்குமே
ரசனையை தூண்டிட
எத்தனை படைப்புகள்
உலகினில் வந்ததே
அத்தனை அழகையும்
விஞ்சிடும் ஒன்றென
தந்தான் இறைவனும்
உன்னையே எனக்குமே..