Author Topic: நீரால் எரியும் நெருப்பு  (Read 4958 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக்கொண்ட, ஐந்து வால்யூம்கள் கொண்ட தனது தீர்ப்பில் தமிழ்நாட்டின் பங்கு 419 டி.எம்.சி. என அது கூறியிருக்கிறது. கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில் காவிரியின்(Cauvery) மொத்த நீர் 740 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டு அது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. வழங்கப்பட்டிருந்தாலும் உண்மையில் கர்நாடகா தரப்போவது 192 டி.எம்.சி. மட்டுமே. மீதமுள்ள 227 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்தில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்குமென நடுவர் மன்றம் கூறியிருக்கிறது.
கர்நாடக எல்லையில் உள்ள பில்லிகுண்டுலு நீர் தேக்கத்தில் 192 டி.எம்.சி. நீரை அளவிட வேண்டுமென நடுவர் மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கேரளாவுக்கு 30 டி.எம்.சி.யும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி.யும் வழங்கப்பட வேண்டுமென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நீரில் 7 டி.எம்.சியைப் புதுவைக்குத் தர வேண்டும். இந்தத் தீர்ப்பின் மூலம் 1892 மற்றும் 1924ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இனிச் செயலற்றுப்போகும்.
1991இல் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்று ஒரு இடைக்கால ஆணையை நடுவர் மன்றம் வழங்கியது. ஆனால் இதுவரை கர்நாடகா அதை முழுமையாக நடைமுறைப்படுத்தியதில்லை. இடைக்காலத் தீர்ப்பையே ஏற்றுக்கொள்ள மறுத்த கர்நாடகம் இந்த இறுதித் தீர்ப்பை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொண்டுவிடாது. பாதிக்கப்பட்டதாகக் கருதுகிற மாநிலங்கள் 90 நாட்களில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று நடுவர் மன்றம் அனுமதித்திருப்பதையொட்டி இப்போது கர்நாடகமும் தமிழ்நாடும் மறு ஆய்வு மனு செய்யப்போவதாக அறிவித்துள்ளன. அந்த மனுக்களின் மீது ஒரு ஆண்டுக்குள் நடுவர் மன்றம் தனது முடிவைத் தெரிவிக்க வேண்டும். இதனால் இந்தச் சிக்கல் மேலும் நீளுமென்பது உறுதியாகிவிட்டது.
தமிழகத்துக்கு 566 டி.எம்.சி. தண்ணீர் தரப்பட வேண்டுமென்று நடுவர் மன்றத்தின் முன்பு தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. தமக்கு 456 டி.எம்.சி. நீர் தேவையென கர்நாடகம் வற்புறுத்தி வந்தது. கர்நாடகத்தில் காவிரிப் படுகைப் பகுதியில் 48 தாலுகாக்கள் உள்ளன. அவற்றில் 27 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதைக் கணக்கில் கொண்டு தண்ணீர் ஒதுக்கீடு அமைய வேண்டும் என்றும் கர்நாடகத்துக்காக ஆஜர் ஆன மூத்த வழக்கறிஞர் அனில் திவான் கோரியிருந்தார். பிரபல வேளாண் விஞ்ஞானி ஜே.எஸ். கன்வார்(J.S.Kanwar) கர்நாடகத்தில் பெய்யும் மழை அளவு குறித்துக் கூறிய விவரங்களை அவர் கர்நாடகத்துக்குச் சாதகமாக எடுத்துக்காட்டியிருந்தார். ஆனால் இதைத் தமிழகத் தரப்பு மறுத்து வந்தது. நடுவர் மன்றமோ தனியாக நிபுணர்களை அனுப்பித் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பயிர் செய்யப்படும் நிலத்தின் பரப்பையும் வறட்சி நிலையையும் கணக்கிட்டது.
இந்தியாவில் இப்போது மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சனைகள் தீவிரம்பெற்று வருகின்றன. இந்தியாவில் பதினான்கு மகாநதிகள் உள்ளன. அவை எல்லாமே ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுபவைதான். 44 நடுத்தர ஆறுகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்பது ஆறுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன. மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற நதிகளால் பிரச்சினைகள் வரும் என்பதை உணர்ந்துதான் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கெனப் பிரிவு 262 சேர்க்கப்பட்டுள்ளது. நதிநீர்ப் பங்கீடு பற்றிய சிக்கல் எழுந்தால் அதை நாடாளுமன்றம் தலையிட்டுத் தீர்த்துவைக்க வேண்டும் என அந்தப் பிரிவு கூறுகிறது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 262 இன்படி 1956 இல் இயற்றப்பட்டதுதான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம். காவிரிப் பிரச்சினைபோலவே மேலும் பல நதிநீர்ச் சிக்கல்களுக்கும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்ட வரலாறு நம் நாட்டுக்கு உண்டு. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கிருஷ்ணா(Krishna) நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் எதிர்கொண்ட சிக்கலைத் தீர்க்க 1969இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. கிருஷ்ணா நதி நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் மட்டுமல்ல, கோதாவரி(Godavari), நர்மதா(Narmada) முதலிய நதிகளின் நீரைப் பங்கிடுவதிலும்கூடச் சிக்கல் எழுந்து அவற்றுக்காகவும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் எதுவும் நிரந்தரமாகத் தீர்க்கப்படவில்லை.
காவிரிப் பிரச்சினையின் வரலாற்றைச் சுருக்கமாக நாம் தெரிந்துகொண்டாக வேண்டும். காவிரிப் (Cauvery) பிரச்சினை என்பது இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு முன் 1807இல் மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892இல் முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அது குறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.
1910இல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சிக்கல் எழுந்து, மைசூர் அரசு மத்திய அரசிடம் பிரச்சினையைக்கொண்டு சென்றது. மத்திய அரசு, கண்ணம்பாடி அணையின் கொள்ளளவு 11 டி.எம்.சி.க்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுமதி அளித்தது. அதற்கு ஒப்புக்கொண்ட மைசூர் அரசு, தான் திட்டமிட்ட 41.5 டி.எம்.சி. அளவுக்கே அணையைக் கட்ட ஆரம்பித்தது.
மைசூர் அரசும் சென்னை மாகாண அரசும் முரண்பட்ட நிலையை எடுத்த காரணத்தால் அன்றைய பிரிட்டிஷ் அரசு(British Government) 1892ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிரிஃபின் (Griffin) என்பவரை நடுவராக நியமித்து உத்தரவிட்டது. அவர் 1914ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதை இங்கே எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
"இரண்டு தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் ஒரு தீர்வைத் தர முடியாததற்காக நான் வருந்துகிறேன். இரண்டு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளும் ஏற்கத் தக்கவையாக இல்லை... இரு தரப்பினருமே ஒரு சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஆர்வ மற்றவர்களாக இருந்தனர்... தற்போதைய சென்னை மாகாணத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம். அதே சமயம், மைசூர் அரசு சென்னை மாகாணத்துக்குத் தந்தது போக மிச்சமிருக்கும் நீர் முழுவதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்" என கிரிஃபின்(Griffin) தனது உத்தரவில் தெரிவித்தார்.
கிரிஃபின் கூறியதைச் சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. அது மேல்முறையீடு செய்தது. மீண்டும் மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அதன் இறுதியாக 1924 பிப்ரவரியில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் ஐம்பது ஆண்டுகள் நடை முறையில் இருக்குமென்று அப்போது தீர்மானித்தார்கள்.
1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1929, 1933 ஆகிய ஆண்டுகளில் மேலும் சில துணை ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 1929 ஒப்பந்தப்படி மைசூர் அரசு(Mysore Government) கிருஷ்ணராஜசாகர்(Krishnarajasagar) திட்டத்தையும் சென்னை மாகாண அரசு மேட்டூர் திட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள வகைசெய்யப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு நிலைமை மாறியது. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு காவிரிச் சிக்கல் மேலும் தீவிரமடைந்துவிட்டது.
1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு "காவிரி உண்மை அறியும் குழு" ஒன்றை அமைத்தது. அந்தக் குழு 1972இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1976 ஆகஸ்டு மாதத்தில் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசுகள் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்தாமல் பின்வாங்கிக்கொண்டன. பல ஆண்டுகள் சென்ற பிறகு மத்திய அரசு 1990இல் அமைத்ததுதான் "காவிரி நடுவர் மன்றம்" ஆகும்.
இப்போது வழங்கப்பட்டிருக்கும் தண்ணீரின் அளவு தமிழகம் கேட்ட அளவைவிடக் குறைவுதான். இது இடைக்காலத் தீர்ப்பில் வழங்கப்பட்டதைவிடவும் குறைவு என ஜெயலலிதா கூறியிருப்பதில் ஓரளவு உண்மையுள்ளது. ஆனால் அவர் குறிப்பிட்டுள்ள கணக்கு தவறானது. இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. தரப்பட்டது. இப்போதோ 192 டி.எம்.சி.தான் கொடுத்திருக்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். இடைக்காலத் தீர்ப்பில் வழங்கப்பட்ட 205 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்கு வந்து சேர்கிறதா என்பதை அளவிடும் இடமாக அப்போது மேட்டூர் அணையை நிர்ணயித்திருந்தனர். அந்த 205 டி.எம்.சி.யில் கர்நாடக எல்லைப் பகுதியிலிருந்து மேட்டூர் வரையிலான தமிழகப் பகுதியிலிருந்து 25 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்வதாகக் கணக்கிட்டிருந்தனர். மேலும் பாண்டிச்சேரிக்குத் தர வேண்டிய 6 டி.எம்.சி. அந்த 205 டி.எம்.சியில் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனவே அப்போது கர்நாடகம்(Karnataka) தமிழ் நாட்டுக்குத் தர வேண்டிய நீர் 174 டி.எம்.சி.தான் (205இல் தமிழகப் பகுதியில் சேருவதாகச் சொல்லப்பட்ட 25 மற்றும் பாண்டிச்சேரிக்கான 6 டி.எம்.சி.யைக் கழித்தால் 174). ஆனால் இதை ஜெயலலிதா(Jayalalitha) வசதியாக மறந்துவிட்டார்.
கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் தர வேண்டிய நீரின் அளவையும் நடுவர் மன்றம் வரையறுத்துள்ளது. ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலையில் 34 டி.எம்.சி., ஆகஸ்டில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 22 டி.எம்.சி., நவம்பரில் 15 டி.எம்.சி., டிசம்பரில் 8 டி.எம்.சி., ஜனவரியில் 3 டி.எம்.சி., பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டும் என நடுவர் மன்றம் கூறியுள்ளது. இந்த அட்டவணைப்படி தண்ணீர் திறந்துவிடப்பட்டால் ஜூன் மாதம் மேட்டூர் அணையைப் பாசனத்துக்காகத் திறந்துவிடுவதில் சிக்கல் ஓரளவு குறையும்.
மறு ஆய்வு மனு செய்யப்போகிறோம் என இப்போது தமிழக அரசு கூறியுள்ளபோதிலும் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்குச் சற்றே நிம்மதியைத் தந்திருக்கிறது என்பதுதான் உண்மை. முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் பாலாறு பிரச்சினையிலும் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில் காவிரி நடுவர் மன்றம் மிகவும் பாதகமான தீர்ப்பை அளித்துவிடுமோ என்ற அச்சம் தமிழக அரசுக்கு இருந்திருக்கும். இந்தத் தீர்ப்பு வந்த வேளையில் தமிழக முதல்வரும் பொதுப் பணித்துறை அமைச்சரும் டெல்லியில் இருந்தனர். தீர்ப்பை வரவேற்பதாகவும் இதனைக் கர்நாடகம் செயல்படுத்துமென நம்புவதாகவும் தெரிவித்த தமிழக முதல்வர், மற்றவர்களோடு கலந்து பேசி எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடப்போவதாக அப்போது கூறினார்.
நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடகம் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்த வேளையில் அப்போது முதல்வராயிருந்த கலைஞர்(Kalaignar Karunanidhi), மத்தியிலிருந்த வாஜ்பாயி(Vajpayee) அரசுக்குக் கடிதமொன்றை எழுதினார். இடைக்காலத் தீர்ப்பை மத்திய அரசு ஆணையாகப் பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். அந்த வழக்கை அட்டர்னி ஜெனரல்(Attorney General) எட்டு முறை ஒத்திவைக்கச் செய்திருப்பதை சுட்டிக் காட்டியிருந்த அவர் மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சினைச் சட்டம் 1956இன் பிரிவு 6கிஇன்படி ஆணை பிறப்பிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையென்றும் சுட்டிக்காட்டியிருந்தார். அப்போது பா.ஜ.க.வின் கூட்டணியிலிருந்த அ.தி.மு.க.(A.D.M.K) உடனே அந்த ஆணை பிறப்பிக்கப்படாவிட்டால் வாஜ்பாயி(Vajpayee) அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது. காவிரிப் பிரச்சினையில் தமிழக முதல்வர் அரசியல் ரீதியாகப் பயனடைந்துவிடக் கூடாது என்பதில் ஜெயலலிதா(Jayalalitha) குறியாக இருந்தார். ஆனால் இப்போது வந்துள்ள தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு அரசியல் லாபத்தைத் தருமா இல்லையா என்பது மத்திய அரசும் மாநில அரசும் இதில் நடந்துகொள்ளும் முறையில்தான் தெரியவரும்.
காவிரிப் பிரச்சினையை இவ்வளவு தூரம் சிக்கலாக மாற்றியதில் மத்தியில் ஆட்சி செய்தவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. கர்நாடக அரசியலில் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் இருக்கின்ற பிடிப்பு அவர்கள் தலைமையில் அமைந்த அரசுகள் கர்நாடகத்துக்கு ஆதரவாகச் செயல்படும் நிலையை உருவாக்கியது. மத்தியில் கூட்டணி ஆட்சி என்பது யதார்த்தமாக மாறிய பிறகும்கூடத் தமிழ்நாட்டுக்கு நியாயமான விதத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்ததில்லை. அ.தி.மு.க.வின் மிரட்டல்கூட அதில் பெரிய பலனெதையும் கொடுக்கவில்லை. இப்போது அந்த நிலையில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரசோ பா.ஜ.க.வோ ஆட்சியில் இல்லாததுதான் மத்திய அரசின் இந்த மாற்றத்துக்குக் காரணம் எனத் தோன்றுகிறது.
வாஜ்பாயி அரசில் எரிசக்தித் துறை அமைச்சராக அங்கம் வகித்த காலம்சென்ற ரங்கராஜன் குமாரமங்கலம் கூறிய ஒரு கருத்து இப்போது நம் கவனத்துக்கு உரியதாக உள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதை விமர்சித்துப் பேசிய ரங்கராஜன் குமாரமங்கலம்(Rangarajan Kumaramangalam), காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கர்நாடக அரசு காவிரியில் கட்டவுள்ள நீர்மின் திட்டங்களுக்கும் இடையில் உள்ள உறவைச் சுட்டிக்காட்டியிருந்தார். "கர்நாடக அரசு காவிரியில் உருவாக்கவுள்ள நான்கு நீர்மின் திட்டங்களையும் தேசியப் புனல் மின் கழகத்திடம்(NHPC) ஒப்படைத்துவிட்டால் காவிரியில் வரும் நீரின் அளவையும் தமிழகத்துக்குச் செல்லும் தண்ணீரின் அளவையும் சரியாக அளவிட முடியும். இந்தப் பிரச்சினை முடிவுக்குவர அது உதவும்" என்று ரங்கராஜன் குமாரமங்கலம் அப்போது கூறியிருந்தார்.
மத்திய அரசு அண்மையில் இதே யோசனையைக் கர்நாடகத்துக்குத் தெரிவித்திருந்தது. காவிரியில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கினால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறைந்துவிடும் எனத் தமிழக அரசு அச்சம் தெரிவித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த மின் உற்பத்தித் திட்டங்களைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள என்.எச்.பி.சி.(NHPC) மூலம் செயல்படுத்துமாறு கர்நாடகாவுக்கு யோசனை தெரிவித்தது.
சிவசமுத்திரத்தில் 270 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும் ராசிமனாரில் 360 மெகாவாட், மேகதாதுவில் 400 மெகாவாட் திறன் கொண்ட நிலையங்களும் ஹொகேனக்கலில் 120 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும் அமைத்திட கர்நாடகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் கர்நாடகம் அறுபது சதவீதம் எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு 40 சதவீதம் தந்துவிட வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் இதைக் கர்நாடக முதல்வர் குமாரசாமி(Karnataka chief minister HD.Kumaraswamy) ஏற்கவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததற்குப் பிறகுதான் இதுபற்றி முடிவுசெய்யப்படுமென்று அவர் கூறியிருந்தார். தற்போதைய தீர்ப்பு கர்நாடகத்துக்கு மகிழ்ச்சி அளிக்காத நிலையில் மத்திய அரசின் இந்த யோசனையைக் கர்நாடகம் ஏற்பது சந்தேகம்தான்.
இந்தத் தீர்ப்பு கர்நாடக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கூட்டணி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் குமாரசாமியின் பதவிக்கே இது உலை வைத்தாலும் ஆச்சரியம் இல்லை. கர்நாடக மாநில காங்கிரஸ் இந்தத் தீர்ப்பைக் குறைகூறியிருக்கிறது. இந்தத் தீர்ப்பைப் பற்றி விவாதிப்பதற்காகக் கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவு எதையும் எடுக்காமலேயே கலைந்துள்ளது. தீர்ப்பு வந்தவுடன் தமிழ்நாட்டிலிருந்து எந்த வாகனமும் கர்நாடகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் கர்நாடக-தமிழக(Karnataka - Tamilnadu) எல்லையில் தேங்கிக் கிடந்தன. கர்நாடகத்தில் உள்ள இனவெறி அமைப்பினர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமிழர்களுக்கு எதிரான வெறுப்பை ஊதி வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தனக்கு அரசியல் லாபம் அதிகமில்லாத நிலையில் பா.ஜ.க. கர்நாடக மாநிலத்துக்கு சார்பான நிலையையே எடுக்கும். அது கர்நாடக முதல்வருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தலாம். விவசாயிகளின் நண்பனாகத் தன்னை காட்டிக்கொள்ளும் தேவகவுடாவும்(Deve Gowda) கூட இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளவே நினைப்பார். ஆக, இந்தத் தீர்ப்பு கர்நாடகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி என சித்தரித்து இதை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிக்கவே கர்நாடகம் முயற்சிக்கும். இந்தச் சூழலில் தமிழ்நாடு இனிமேல்தான் கடுமையாகப் போராடியாக வேண்டும்.
நடுவர் மன்றம் இப்போது வழங்கியுள்ள தீர்ப்பை உடனடியாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டுமெனத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். 90 நாட்களுக்குள் மத்திய அரசு ஆணை வெளியிடாவிட்டால் இந்தத் தீர்ப்பு பயனற்றதாகிவிடும். இந்தத் தீர்ப்பிலும்கூடச் சில பிரச்சினைகள் உள்ளன. காவிரியின் மொத்தத் தண்ணீர் 740 டி.எம்.சி. எனக் கணக்கிட்டுள்ள நடுவர் மன்றம் அதில் 4 டி.எம்.சி.யைக் கடலில் கலந்து வீணாகும் நீரென்று குறிப்பிட்டுள்ளது. கடல் கலக்கும் நீராக 44 டி.எம்.சி.யைத் தமிழகம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதில் 4 டி.எம்.சி.யை மட்டும்தான் நடுவர் மன்றம் அனுமதித்துள்ளது. காவிரி கடலில் கலக்கும் தமிழ் நாட்டின் பங்கில்தான் அந்த 4 டி.எம்.சி. சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை நடுவர் மன்றம் தமிழகத்துக்குக் கிடைக்கும் தண்ணீரில் இருந்தே கழித்து விட்டது. இது தமிழகத்துக்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவை மேலும் குறைத்திருக்கிறது. உடனடியாக இதைத் தீர்ப்பதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில்(Cauvery) உள்ள தண்ணீரின் அளவைப் பொறுத்துத் தமிழகத்துக்குத் தரும் நீரின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம் என நடுவர் மன்றம் கூறியிருப்பதும் இந்தப் பிரச்சினையை மேலும் வளர்க்கவே வழி வகுக்கும். காவிரியில் கட்டப்படும் புனல் மின் நிலையங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் விடவும் மின் உற்பத்தியில் தமிழகத்துக்கான பங்கை கேட்டுப் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் நமக்கான நியாயத்தைப் போராடிப் பெறும் அதே நேரத்தில் இன்னும் சில அம்சங்கள் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும். உலக அளவில் இப்படியான நதி நீர்ச் சிக்கல்களை ஆய்வு செய்பவர்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்துகின்றனர். தண்ணீரை இலவசமாகத் தருவதை விடுத்து அதற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இது குறித்து ஆய்வு செய்துள்ள ரோஸ்கிராண்ட், கஸ்மூரி ஆகியோர், சரியான கொள்கைகளை வகுப்பதன் மூலம் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் நீரின் விலையை உயர்த்தினால் தொழிற்சாலைகள் தாமாகவே நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிடும் என அவர்கள் கூறுகின்றனர். தண்ணீர் என்றால் அது இலவசமாகக் கிடைக்கக்கூடியது என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பது அவர்களின் வாதம். அது போலவே நீர் அதிகம் தேவைப்படும் நெல் முதலான பயிர்களுக்கு மாற்றாக வேறு பயிர்களைச் சாகுபடி செய்வது பற்றியும் நாம் சிந்தித்தாக வேண்டும்.
தற்போது நதி நீர்ப் பங்கீடு பொதுப் பட்டியலில் உள்ளது. அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதுபோல மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சோஸ் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இது ஆபத்தான யோசனை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மாநிலங்களின் உரிமையை மேலும் பறிக்கும் முயற்சிக்கு ஒருபோதும் இடம்தரக் கூடாது.
மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பொன் விழா ஆண்டு இது. மொழியின் அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவது பிரிவினை உணர்வைத் தீவிரப்படுத்திவிடக்கூடும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர்(Ambedkar) எச்சரித்தார். மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்படாவிட்டால் அது பிரிவினைவாதிகளின் நோக்கங்களுக்கு வலு சேர்த்துவிடும்.
நெருப்பை அணைப்பதுதான் தண்ணீரின் குணம். ஆனால் காவிரித் தண்ணீரோ இனப் பகை என்னும் நெருப்பை வளர்ப்பதில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. நடுவர் மன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே இதை மாற்ற முடியும். அதைச் செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதே நம்முன் உள்ள கேள்வி.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்