என் வாழ்க்கை
நான் பிறந்த நொடியில்
என் பெற்றோரின் சிரிப்பை பார்க்கவில்லை..
வளர் பருவமதில் பெற்றோரின்
வறுமைநிலை புரியவில்லை...
காதல் வந்த நேரத்தில்
எதிர்காலத்தைப்பற்றி எண்ணவில்லை
கழுத்தில் தாலி ஏறியபோது
கணவனைத்தவிர வேறாரும் தெரியவில்லை..
குழந்தைகளை பெற்றபோதும்
என் குழந்தைத்தனம் மாறவில்லை...
பணிக்குத்தான் போனபோது
பணக்கஷ்டம் ஏதும் இல்லை...
வாழ்க்கை வழிதான் மாறிப்போகும்
மகிழ்ச்சியும்தான் மறைந்துபோகும்
வாழ்க்கை நிலையும் தடுமாறும்
என்று துளியும் நினைக்கவில்லை...
கரம் பிடித்தவன் கைவிட்ட போது
காலத்தின் கட்டாயம் என அறியவில்லை...
காலம் பதில் சொல்லும் என்று
கவலைதான் கொள்ளவில்லை....
நான் இருக்கேன்னு சொன்ன அப்பா காணாம போனபோதும்
நிர்கதியாய் நான் நின்ற போதும்
வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கவில்லை...
பிள்ளைகளின் அம்மாவாய் இருந்த போதும்
அனைத்தையும் இழந்தபோதும்
அரவணைக்க ஆளில்லா அன்புச்செல்வங்களுக்கு
அப்பாவுமாய் இருக்க தவறவில்லை..
இல்லை இல்லை எதுவும் இல்லை
என் வாழ்க்கையையும் நான் வாழவில்லை
தனிமரமாய் நின்றபோதும் துவண்டு தான் போகவில்லை..
பிள்ளைகளின் வளர்ச்சிக்காய் வைராக்கியம் அதை விடவில்லை...
யார் சென்ற போதும் கலங்காத என் மனம்
எது வந்த போதும் பயக்காத என் மனம்
முதல் முறையாய் கதறியது
காலத்தின் கட்டாயம் மீண்டும் அரங்கேரியது....
பிள்ளைகளோ அவர் வாழ்க்கைப்பயணமதில்
அவரவர் வழி தேடி விலகித்தான் சென்றனரே
மீண்டும்தான் நான் தனிமரமாய் நின்றேனே
எதிர்காலம் என்னவென்று இப்போதும் தெரியவில்லை...
நல்லதே நடக்கும் என்று நம்பித்தான் நிற்கின்றேன்
எதுவுமில்லை என்று ஆனாலும்
அதனை ஏற்கவும் துணிகின்றேன்
பிறந்தோறெல்லாம் ஓர்நாள் இறக்க வேண்டும்
வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை வாழவேண்டும் ❤️