Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 263  (Read 2873 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 263

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

« Last Edit: April 11, 2021, 12:14:21 AM by Forum »


எல்லா அரண்ட இடைவெளிகளுக்குமான,
ஓர் நிரப்பமாய்!
எல்லா சலனத் தனிமைக்குமான,
ஓர் அருகாமையாய்!

எல்லா அயர்ச்சிக்கும் போதுமான,
ஓர் குதூகலமாய்!
மொத்தக் கண்ணீருக்குமான,
பெரும் ஆனந்தமாய்!

காரணங்களற்ற வேண்டுதலின் பின்னர்
வந்து விழும்,
பெரும் உற்சவ மழை போல்...!

எந்தக் கரத்தினை
பற்றிக் கொண்டு பேச,
இதயம் தயாராகிறதோ!

எத்தேவையின் நிமித்தமும் அணுகாது,
பிரேமித்துத் தீர்க்கும் பெரும் வரமாய்,
எவரை மனம் நாடி நிற்கிறதோ!

அக்கரத்தின் பற்றுதல்
நழுவிச் செல்லாதிருப்பதே,
ஆசீர்வதிக்கப்பட்ட பேரானந்த வாழ்வு.....
« Last Edit: April 04, 2021, 07:07:25 PM by இளஞ்செழியன் »
பிழைகளோடு ஆனவன்...

Offline TiNu


ஏதோ ஓர் காரணம்,.. நாம் ஊர் விலகி.. உறவிகளை ஒதுக்கி..
புதிய பாதையில் பயணித்த நிமிடங்களில்... நீயோ.. 
என் வயிற்றில் 2 மாத குட்டி.. மீன் குஞ்சுடா..

முகமறியா மனிதர்கள்... மொழியறியா ஊர்...
தட்ப வெப்பம் பழகாத நிலப்பரப்பு.. நீயும் நானும்...
தன்னந்தனியே.. மறவேன் நம் முதல் நாளுமே..

தங்க இடமின்றி... சாலையோரம் தவித்து நிற்கையில்..
தாய் என கரம் நீட்டியது ஓர்.. மகளிர் விடுதியுமே..
பசியிலும்... பரிதவிப்பிலுமே.. பூஜ்யமானது.. என் கல்வியுமே

விடுதியில் கிடைத்த வேலைகளை செய்து கொண்டே....
நம் வாழ்வின் அழகிய பாதைகளை வரைந்தேனடா...
என்றும் மறவேன்... அதுவே நம் வாழ்வின் முதல் படி...

உன் பிஞ்சு பாதம் இப்பூமியை தொடுமுன்னே..
நாம் மட்டும் வசிக்க..  சுதந்திர காற்றை சுவாசிக்க
ஓர் ஸ்வர்ண சுவர்க்கம் எழுப்பினேன்.. அன்பே...

ஓடி ஓடி உடல் தளர்ந்து ஓய்ந்து விட்டேனடா..
உழைத்து உழைத்து மனமும் உழண்டு விட்டேனடா.. ஆனால்
வாழ்வின் ஓட்டத்தில்.. ஒவ்வொரு நிமிடங்களும் நமக்காக..

பெண்ணின் வாழ்வோ.. நுணல் போல் இரட்டை வாழ்க்கையடா.
நீரிலே பிறப்பெடுத்து... நீரிலே  முதல் வாழ்வை தொடங்கி..
கரடு முரடான நிலத்தில் பயணிக்கும் வாழக்கையடா..

அன்று,.. ஒவ்வொரு நாளும் எனை துரத்திய..
கஷ்டங்களும்.. வேதனைகளும் மறந்து சிரித்தேன்..
உன் பிஞ்சுவிரல் தீண்டலிலும்.. உன் வெள்ளை சிரிப்பிலுமே..

இன்றோ.. பறந்து.. பறந்து..  களைத்து விட்டேன்..
உன் கை பிடித்து நடக்கவே.. உன் தோளில் சாய்ந்து 
உனக்கு பாரமாக.. இருக்க விருப்பம் இல்லையடா..

மகனே.. போராட்டங்களையே பார்த்து வளர்ந்தாயடா..
என்னை நீ சுமக்கும் நிலை வேண்டாம்.. என் உயிரே...
எனக்கு அனுமதி கொடு....மீளா...  அமைதி நித்திரைக்கே..


Offline AgNi



நிலவு இருக்கும் வானுக்கு
தெரிவதில்லை..
நிலவுக்குள்ளும் புயல்கள் உண்டு...
பூகம்பங்கள் உண்டு...
அக்னி பொழியும் எரிமலையும் உண்டு..

கடந்து செல்லும் மேகங்களால்
தீர்ந்து போகுமோ அதன் தாகங்கள்!
நட்சத்திர பூக்களில். ....
வண்ணமும் வாசமும் உண்டோ?

வானவில்லின் மரக்கிளையில்
கயிறு கட்டி ஊஞ்சலாட முடியுமோ?
மழைதிரையின்  பட்டுடுத்தி...
மயங்கி அழகு பார்க்க முடியுமா?

ஆனாலும்....
பாலையின் ஊடே எப்போதோ
தென்படும் சோலையாய்...

வறண்ட பூமியில் என்றோ
வான்தூவும் பன்னீர் துளிகளாய்..

பட்டுபோன செடியிலும்..
பூத்து தளிர்த்த அபூர்வ மலராய்..
கசந்த காலத்திலும்...
வசந்தம் வருவதுண்டு...?
காலத்தின் கோலத்தை அறிவார் யாரோ?

அன்றியும்

காய்ந்த கண்ணீரும்,
வறண்ட சோகங்களும்,
அரண்ட தனிமையும்,
அரங்கேறாத ஆசைகளும் தான்,
நான் சதாவும் பெற்ற அவலங்கள். அதிலிருந்து
என்னை மீட்டெடுக்கும் முகமாக,
உன் மடியில் கிடத்திக் கொள்வாய் என்பதற்காகவே,
உன்னை நாடுகிறேன்.

வாழ்வின்
எல்லா சாபங்களுக்கும் பின் தான்,
நீயே கதியென
உன்னிடம் சரணாகதி ஆகியிருக்கிறேன்! காருண்யம் அருளிடு
போதுமெனக்கு....
« Last Edit: April 04, 2021, 09:02:46 PM by AgNi »

Offline MoGiNi

« Last Edit: April 07, 2021, 01:16:38 AM by MoGiNi »

Offline thamilan

அன்பே
தண்ணீரில் ஆக்சிஜன் போல
நீ எனது கண்ணீரில் மறைந்திருக்கிறாய்
உண்மையை சொன்னால்
உனது நினைவு சூரியனே
என் கண்ணீர்த் தாமரையை
மலர்விக்கிறது

நீ எனது கண்ணீருக்கு
காரணமானவன் மட்டுமல்ல
எனது கவிதைக்கும்  காரணமாகிறாய்
அடக்க முடியா துயரம் இருந்தாலும்
கவலையால் மனமும் உடலும் சோர்ந்து போனாலும்
உன் நெஞ்சில் சாய்ந்து
உன் நெருக்கமான உஷ்ண
அணைப்புக்குள் அடங்கும் போது
மனமும் உடலும் இலவம் பஞ்சென
மெதுவாகிப் போகிறதே

உன் பார்வை கயிற்றுக்குள் - என்னை
கட்டிப் போடும் போது
என் இதயம் மலர்ந்தது 
உன் கைகள்- என்னை
கட்டிப் போடும் போது
என் பெண்மை மலர்ந்தது

உன் அணைப்புக்குள்
கோழியின் சிறகுக்குள் இருக்கும்
குஞ்சிகள் போலே
வெதுவெதுப்பு இருந்தது
உனக்கு நான் இருக்கிறேன் என
உன்கைகள் கொடுக்கும் தைரியமும் தெரிந்தது

உன் அணைப்பும் ஆறுதலும் இருக்கும் வரை
எந்த துயரையும் தாங்கிக் கொள்வேன்
எல்லாவற்றையும் உனது தோளில் இறக்கிவைத்து
நிம்மதி பெருமூச்சு விடுவேன்

Offline Cholan



            கருவறை இருட்டு என்னைப்  போ என்றது 
            உலகம்  வா  என்றழைத்தது
            மழலை   கொடுத்த தைரியம் 
            வாழ்க்கைக்கு  வெளிச்சமானது

            கல்வி  எனக்கு அறிவூட்டியது
            வேலை இல்லா திண்டாட்டம்
            என்னை பசி பழக வைத்தது
            சொந்தங்களின் அர்த்தமற்ற  கேள்விகள்
            ஓட  ஓட   துரத்தியது

            நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் 
            நம்பிக்கையும் புத்துணர்வும் கொடுத்தன   
            காதல் என் கண்களை  மறைத்தது
            தலைமைத்துவங்களிடம் தொழில் பயின்றேன்

            இத்தனை இருந்தும் என்ன பயன் :
            நம் நாடுகளில்  ஜாதிப்பிரிவு   அழியவில்லையே
            அதில் என் காதலும் என் துணையும்   அழிந்து  போயின
            மறுமணம் என்னை  அடிமையாக்கியது

            இன்று என் பிள்ளைக்காக பயணிக்கிறேன்
            வாழ்க்கை என்ன தான் சொல்கிறது
            இந்த வாழ்க்கை தேவையில்லை
            திரும்பவும் என் மனம் இருட்டை நாடுகிறது

            என்னடா வாழ்க்கை இது


நன்றி இப்படிக்கு இவன்
« Last Edit: April 08, 2021, 07:12:04 PM by Nafraz »
           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline SweeTie

ஜெனிப்பது  உன் குற்றமா?
சமூகத்தின்  சொந்த விருப்பமா ?
ஆசைக்கு அடிமையாகும்  ஆண்கள்
அழகை விலைபேசும் பெண்கள்
ஆராதிக்கப்பட வேண்டிய   சிசுக்கள்
அநாதைகளாய்   அலைகின்றன 

பெற்றவள் முகம் தெரியாமல்
பிறந்த  ஊர்  தெரியாமல்   
எத் தனை  குழந்தைகள்  இப்புவியில் ???
பல லட்சம்  பணச்  செலவில் 
செயற்கையில்   ஓர்  சிசுவை
பரீட் சித்து  பார்க்கிறது விஞ்ஞானம்   

அணைத்து  தாலாட்ட வேண்டியவள்
அனாதரவாக   புறக்கணிக்கப்பட்டு
வாழ்வதற்கு  அருகதையற்று
கண்ணீரும் கம்பலையுமாக நிற்க...
வாழ்விழந்து   நிற்பவளை
அவப் பெயரால்  மகுடம்  சூட்டி
அழகு பார்க்கிறது   சமூகம்  .

பால் மணம்  மாறாத  பாலகன்
பாவத்தின்  சின்னம்   என்றால் 
காலத்தின்   மயக்கத்தில்  பிறந்த
காமத்தின் விலையென்ன ?:
மேகத் திரைக்குள்  மறைந்து
நிற்கும்  நிலாப் போல 
பாவத் திரைக்குள்   எத்தனை  சந்திரரோ ?

தத்துப்பிள்ளை இவன் 
தாயுமானவன்  நான்
பெற்றவளும்   தெரியவில்லை
பெயரும் வைக்கவில்லை 
முற்றவெளியில்  இவன் பிறப்பு
இவன்  இனி என் இருப்பு .

அம்மாக்கள்  மடியில்
உலாப்போகும் உயர்ரக  நாய்க்குட்டிகள் 
ஒரு வேளை  சோற்றுக்கு   கையேந்தும்
அனாதைக்  குழந்தைகள் 
அன்பே சிவம்   உலகில்   
அறமே தவம் என்கிறார்  .. ஆனால்
படிப்பதோ திருவாசகம் 
இடிப்பதோ  சிவன் கோவில்   


 
« Last Edit: April 07, 2021, 12:51:45 AM by SweeTie »