தற்செயலாக தொலைபேசியில்
ராங் நம்பரில் சிக்கினான் இறைவன்
அட இறைவா
தேடினாலும் கிடைப்பதில்லை நீ
இப்படித்தான் தேடாத போது வந்து
சிக்கிக்கொள்கிறாய் சில நேரம்
பல நாட்களாக
இதயத்தை குடைந்துகொண்டிருக்கும்
சில கேள்விகளுக்கு
பதில் சொல்லிவிட்டுப் போ
எல்லா காரியங்களிலும் குற்றம் பிடிப்பவன் நீ
ஏன் எங்களை இந்த
சபிக்கப்பட்ட மண்ணில் படைத்தாய்
ஏதேன் தோட்டத்தில் ஏன்
விலக்கப்பட்ட கனியை வைத்தாய்?
உனக்கு எதிரியான சாத்தானை
மனிதனுக்கு நண்பனாக
ஏன் அனுப்பி வைத்தாய்?
இங்கே என்ன நடக்கிறது
கொஞ்சம் உற்றுப்பார்
உனக்கு வீடு கட்டுவதத்திற்காக
உனது வீட்டையே இடிக்கிறார்களே
இந்த மூடர்கள்
இந்த ராம் யார் ரஹிம் யார்?
பெயரில் என்ன இருக்கிறது?
பெயரில் நீ இருக்கிறாயா?
ஆதியும் அந்தமும் நீயே என்று
மார்தட்டிக் கொள்பவனே
நீ யார்
நீ அன்பு என்றால்
இந்த பகை யார்
நீ சாந்தி என்றால்
இந்த வெறி யார்
நீ ஆனந்தம் என்றால்
இந்த துயரம் யார்
நீ உண்மை என்றால்
இந்த பொய் யார்
நீ ஒளி என்றால்
இந்த இருள் யார்
உன் பெயர் சொல்லி
எரிக்கப்படும் வீடுகள்!!
எரியும் வீடுகள்
உனக்கு தீபஆராதனையா?
சிந்தப்படும் ரத்தங்கள்
ரத்தங்களால் உனக்கு அபிஷேகமா?
நீ எந்த வேதம் நீ எந்த மதம்?
தீமை அதிகரிக்கும் போதெல்லாம்
அவதரிப்பேன் என்கிறாயே
இதை விடக்கொடிய காலம் வேறுண்டா
எங்கே உன்னைக் காணவில்லை
இன்னும் எதற்காக
பூக்களை மலர்விக்கிறாய்?
குழந்தைகளை பூமிக்கு அனுப்புகிறாய்?
ஆலயமணி ஓசையும்
மசூதியின் அழைப்பொலியும் - என்று
ஒன்றாக சங்கமிக்கும்
கடைசியாக கேட்கிறேன் - நீ
இந்துவா முஸ்லிமா
இல்லை கிறிஸ்தவனா?
" ராங் நம்பர்" என்ற பதிலோடு
இணைப்பு துண்டிக்கப்பட்டது