பிறந்தமேனியோடு காமுற வந்த கவிதை சாத்தானை
செவிகுத்தி காதிபுலனில் கொடூரமாய் கொன்றாய்.
இதோ
உன் கண்களில் உதிக்கிறதொரு சூரியன்
எனதறையெங்கும் நெருப்பு வளையம்
அலறி மரிக்கிறது சாத்தான் கூட்டம்.
என் கண்களை பயத்தில் மூடியுள்ளேன்
நீ நடாத்துகிறாய் நோக்கு வர்ம நாட்டியம்.
கொதித்தலுக்கு பிந்தைய நொதித்தலில்
எழுத்தாணியின் முன்னின்று ஆடுகிறாய்
எப்போதென்றில்லாமல் வெடிக்கக் காத்திருக்கும்
தோட்டாக்கள் நிரம்பிய துப்பாக்கியின் கலை வடிவாய்.
குற்றுயிரும் குலையுயிருமாக துடிக்கும்
குட்டிச்சாத்தான் ஒன்றை தலையில் குத்தியதும்
முனையொடிந்த நான் நீர்மையாய் அழுகிறேன்.
இறுதியில்
கொன்றதை தின்றுதீர்த்து விட்டு
திரும்புகிறாய்
பழிவாங்க என்னை நோக்கி.
இனி நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்.
ஆடையவிழ்க்கிறதிந்த
வெட்கங்கெட்ட காதல் சாத்தான்.
கண்ணியமானோரே
நாளைய என் கவிதைகளுக்கு
ஆடை தைத்து வையுங்கள்.