Author Topic: யானை மலையைச் சூழ்ந்த தீவினை  (Read 4975 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
மதுரை அருகில் உள்ள ஒத்தக் கடையில் அமைந்துள்ளது யானை மலை. தூரத்திலிருந்து பார்த்தால் யானை ஒன்று படுத்திருப்பதுபோல் காட்சியளிப்பதால் இதனை மக்கள் யானைமலை என்று அழைக்க முற்பட்டார்கள். 90 மீட்டர் உயரமும், 1200 மீட்டர் அகலமும், 4000 மீட்டர் நீளமுமாக ஒற்றைப் பாறையாக மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த மலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தப் பாறையின் அமைப்பு ஆஸ்திரேலியாவில் உள்ள அயர்ஸ் மலையையும், இலங்கையில் உள்ள சிகிரியாவையும் ஒத்ததாக உள்ளது. மதுரை நகரத்தின் அருகில் உள்ள திருப்பரங்குன்றம் மலையும், கீழக்குயில்குடி முதல் மேலக்குயில்குடிவரை நீண்டு  கிடக்கும் மலையும் இந்தப் பாறை ரகத்தைச் சேர்ந்ததாக உள்ளது. ஏறக்குறைய கடந்த 5 லட்சம் ஆண்டுகளாக இந்த மலைகள் அங்கு மக்களின் அரவணைப்பிலும் அன்பிலும் திளைத்துக் கம்பீரமாகத் திகழ்கிறது. தொன்மையானதாகக் கருதப்படுகிற பிராமி எழுத்துக்கள் முதல் நூற்றாண்டிலேயே யானைமலையில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த மலைக்கு இன்று நீங்கள் சென்றாலும் ஒன்பதாம் நூற்றாண்டில் சமணர்கள் வாழ்ந்த குகைகள், அவர்கள் செதுக்கிய சிற்பங்கள், படுகைகள், ஓவியங்கள் என பல வரலாற்று எச்சங்களைக் காணலாம். மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா, இயக்கி ஆகியோரது சிலைகள் இங்கு புடைப்பு சிற்பங்களாக உள்ளன. அவை சுதைபூசி வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. இந்த மலையின் குடவரைகளில் கீழ்கிரந்த வட்டெழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
மலையைச் சுற்றிலும் பல தொன்மையான இடங்கள் உள்ளன. அதில் லாடன் கோயில் குடைவரை முதன்மையானது. இங்கு 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக்கள் உள்ளன. ஸ்ரீஸி புல்லா(ரி), வட்டக்குறிச்சி நம்பி, ரன்பட்ட சோமாசிபரி, விராச்ஜகர் புதுக்கு, மற்றும் முருகன் - தெய்வானை ஆகியோரது சிலைகள் புடைப்பு சிற்பமாக உள்ளது. மிக அழகான ரம்மியமான இடமாக இந்த லாடன் கோயில் உள்ளது. லாடன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பெரும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி உள்ளது. சில பகுதிகள் நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் இருந்த தலித்துகள் அரசாங்கத்தின் லத்திகளை, பொக்லைன்களைச் சந்தித்து விடை பெற்றனர். ஆனால் இதே அரசின் குணமளிக்கும் தொடுதல் அங்கு உள்ள பார்ப்பனக் குடும்பங்களைக் காத்து நிற்கிறது. இவை எல்லாம் கேட்பாரற்றுக் கிடக்க அருகில் உள்ள அருள்மிகு யோக நரசிங்கப் பெருமாள் திருக்கோயில் மட்டும் இந்து சமய அறநிலை ஆட்சித்துறையின் கவனிப்பில் பிரகாசிக்கிறது. தொன்மையின் படிமமாகத் திகழும் சமண தளங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி, பராமரிப்பு இல்லாமல் வாடிக் கிடக்க, தொடர்ந்த அரசுகள் சைவ-வைணவத் தளங்களை தன் செல்லப் பிள்ளைகளாக வளர்த்து வருவது தான் சுதந்திர இந்தியாவின் ஆட்சிக் கொள்கை பிரகடனமாகத் திகழ்கிறது.
அருகில் காலம் காலமாக இருந்து வந்த நாகர் கோயில், சமீபத்தில் ஏகாந்த விநாயகராக மாற்றம் பெற்றுள்ளது. அடுத்து நீங்கள் இன்னும் மலையைக் கொஞ்சம் சுற்றினால் வேதநாயகப்பெருமாள் கோவில் உள்ளது. அது ஒரு அழகிய சுணை அருகே அமைந்துள்ளது. மலையைச் சுற்றி வருவதே ஒரு அற்புத இயற்கை நடை (Green Walk) சென்றது போல் உள்ளது. குயவர்கள் மண் அடுப்புகள் செய்வது என பல சிறு சிறு கைவினைப் பொருட்கள் அங்கு கிராமப் பொருளாதாரத்தின் உற்பத்தியாக உருவாவதைப் பார்ப்பதே இன்றைய காலகட்டத்தில் ஆச்சரியத்தை அளிக்கிறது. யானை மலைக்குப் பின் பகுதியில்- சற்று தொலைவில் என்றுகூட கூற இயலாது- கடந்த 40-50 ஆண்டுகளாக கல் உடைக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. சில கிலோ மீட்டர் தூரத்திற்கு அங்கு பாறைகள் தரையின் கீழே உடைக்கப்படுகின்றன. எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாத ஆபத்தான நிலையில் அரசியல் கட்சியின் பிரமுகர்களால் இது நடத்தப்படுகிறது. அருகில் அரசின் கல் உடைக்கும் எந்திரங்கள் பாழடைந்த பகுதி போல் காட்சியளிக்கிறது. இந்த 300 மீட்டர் ஆழம் உள்ள கல்குவாரிகளைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. ஆனால் அதன் கரையில் ஜாலியாக ஒரு சிற்றுந்து (டாப்பிலும்) ஆட்களை ஏற்றி தினமும் சவாரி செய்கிறது. AXN சேனல் சாகச காட்சிகளை விட இது மிகவும் விபரீதமானதாக உள்ளது.
யானைமலையை அரசு ஒரு புராதன வரலாற்றுச் சின்னமாக அறிவித்துள்ளது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில்தான் இங்குள்ள குடவரைகள் உள்ளன. ஆனால் அந்தத் துறையினருக்கே உரித்தான அலட்சியத்துடன் இந்த இடங்கள் சமூக விரோதிகள் பராமரிப்பில் விடப்பட்டுள்ளதை தமிழகத்தின் பல பகுதிகளில் காணலாம். தொல்லியல் துறையில் இந்ததுறை சார்ந்த ஈடுபாடு, புரிதல்கள் இல்லாது, இது ஒரு அரசு உத்தியோகம் எனக் கருதி அங்கு 90% பேர் பணிபுரிவதால் அந்தத் துறை பல நேரங்களில் தனக்கு எதிரான காரியத்தை தானே இயல்பாகச் செய்யும்.
இந்தப் பின்புலங்களில் யானைமலைபற்றி 2009 டிசம்பர் முதல், இந்த ஆண்டின் முதல் இரு மாதங்கள் வரை தொடர்ந்து ஊடகப் பரப்பில் தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. ஏராளமாக கட்டுரைகள், செய்திகளைப் படித்தபோதும் இதில் பல தொடர்ச்சிகள் இல்லாது இருந்தது. ஆகவே ஒரு கள ஆய்வை நிகழ்த்தி இதனை விளக்க முற்பட்ட தன் விளைவாக இந்தக் கட்டுரை சாத்தியமானது.
ஒத்தக்கடை, நரசிங்கம், அரும்பனூர் ஆகிய ஊராட்சிகள்தான் யானைமலையைச் சூழ்ந்துள்ளன. யானைமலையின் பெரும் பகுதி அரும்பனூர் ஊராட்சிக்கு உட்பட்டே உள்ளது. ஒத்தக்கடை ஊராட்சி மதுரை-மேலூர்-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஒத்தக்கடையில் வாழும் மக்கள் ஏற்கனவே பலமுறை அரசின் திட்டங்களுக்காக அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். ஒத்தக்கடையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்காக இந்த ஊரின் மக்கள் தங்கள் விளைநிலங்களில் 230 ஏக்கரை வழங்கியுள்ளனர். அடுத்து உச்சநீதி மன்றத்தின் மதுரைக் கிளை இங்கு நிறுவப்பட்டபோது 86 ஏக்கர் நிலத்தை ஒத்தக்கடை மக்கள் வழங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்தியாவெங்கும் போடப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை ஒத்தக்கடையை உரசிச் செல்வதால் அதுவும் தனது பங்கிற்கு மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்த ஒரு 160 ஏக்கரை மட்டும் விழுங்கிச் சென்றது. மெல்ல மெல்ல தங்களின் விளைநிலங்களை இழந்த மக்களுக்கு சமீபத்தில் ஒரு பேராபத்து வந்தது.
வழக்கமாக யானைமலையைச் சுற்றிப் பார்க்க பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். ஒத்தக்கடை அருகில் உள்ள திரூமோகூர் கோயிலை ஒரு தொழில் குழுமம் தத்தெடுத்ததன் விளைவாக கேட்பாரற்றுக் கிடந்த அந்தக் கடவுளுக்கு சமீபகாலமாக பெரும் கிராக்கி ஏற்பட்டது. உலகமயத்துக்குப் பின் மத்தியதர மக்களின் வருமானங்கள் பலமடங்கு பெருகியதும் அத்துடன் ஒரு பெரும் இசைவுடன் பக்தியும், மூடநம்பிக்கையும் கைகோர்த்து வளர்ந்ததில் தமிழகத்தில் பல புதிய பக்தி முறைகள், கோயில்கள், சாமியார்கள் என ஒரு பெரும் பக்தி தொழிற்சாலையும் பூகம்பமாய் வளர்ந்து இந்தத் தேவையைப் பூர்த்தி செய்தது. பார்ப்பனீயம் தன்னை இந்தப் பெரும் அலையில் மீள்நிர்மாணம் செய்யத் துடித்தது. மெல்ல பார்ப்பனர்கள் யானைமலையின் பின்புறம் அமைந்துள்ள சுனை அருகில் ஒரு சிறிய கோவிலைக் கட்டினார்கள். அதற்கு ஸ்ரீ பிள்ளைலோகாசார்யா திருவரசு என்று பெயர் சூட்டினார்கள். விளக்கம் கேட்டதற்கு இது வைணவ எழுச்சியில் முக்கியமாகத் திகழ்ந்தவருக்கான நினைவிடம் என்றனர். அதாவது லோகாசார்யார் பரமபதித்த இடமாம். இந்தக் கோவில் 12.04.2007ல் நிர்மாணிக்கப்பட்டது. அந்தக் கோவிலின் கல்வெட்டுகளில் ஒத்தக்கடையின் பெயர் ஜ்யோதிஷ் குடி என மாற்றப்பட்டிருந்தது. பெரும் பார்ப்பனிய முதலாளிகள் இதில் முதன்மை பங்கு வகிக்க, உள்ளூர் அம்பலங்கள் தங்கள் பெயரைக் கல்வெட்டில் பார்த்து மகிழ்ந்தன. அடுத்து சுண்டல், பொங்கல், விளக்கு பூஜை என ஐட்டங்கள் தொடர்ந்தன. இந்தக் காரியங்களுக்குப் பின்னுள்ள அரசியலை அறியாத அம்பலங்கள் சுண்டலை இலையில் கட்டி வீடுவந்து சேர்ந்தார்கள். பெரும் முதலாளிகள் தொடர்ந்து வந்து இந்த இடத்தில் வணங்குகிறார்கள் என மக்கள் நினைத்து தங்களின் அன்றாட வாழ்க்கையின் ஓட்டத்தில் கரைந்து போனார்கள்.
வெளிநாட்டு ஜோடி ஒன்று இந்த மலையைச் சுற்றிச் சுற்றி வந்தது. கனவன் பெயர் ஹெந்த்ரிக், மனைவி பெயர் ஆல்கா. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இவர்கள் இந்தியா வந்து தங்களின் பெயரை ராவணன் - மண்டோதரி என மாற்றிக் கொண்டார்கள். இவர்கள் இருவரும் கணபதி ஸ்தபதியின் மாணவர்கள். இவர்கள் மலையைச் சுற்றி வந்த போது சுற்றுலா பயணிகளாகவே கருதப்பட்டார்கள். இவர்கள்தான் இந்த மலையை ஒரு சிற்ப நகரமாக மாற்றும் திட்டம் ஒன்று உள்ளதை முதலில் வெளி உலகத்திற்குச் சொன்னார்கள்.. ஒரே கல்லால் ஆன இம் மலைக் குன்றைத் தற்கால நவீன சாதனங்களைப் பயன்படுத்தி கலை வடிவங்களாக்குவது ஒரு சிறந்த திட்டம் என அறிவித்தனர். இதனைச் செய்தால் தமிழகத்தின் கலை, பண்பாடு, கலாச்சாரமும் உலக அளவில் பிரபலமடையுமாம். யார் மலையை யார் குடைவது என மக்களின் மனங்கள் இந்தப் பத்திரிகை செய்தியைக் கண்டு கொதித்த நிலையில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது மற்றோர் அறிக்கை.
சிற்பக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், பெருந்தச்சர் அவைய நிறுவனரும், வழக்கறிஞருமான தஞ்சையைச் சேர்ந்த அரசு என்பவர் புதிய பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். யானை படுத்திருப்பது ஊருக்கு நல்லதல்ல. வாஸ்துப்படி யானை நின்றால்தான் நன்மை. ஆகையால் ஒற்றைக்கல்லில் நிற்பது போல் 900 அடி புடைப்பு சிற்பமாகச் செதுக்கப்படும். அடுத்து அதிலிருந்து 27 அடி இடைவெளி விட்டு 400 அடி அகலமும் 864 அடி உயரமும் கொண்ட தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய கோபுரத்தை மிகப் பெரிய அளவில் இங்கு செதுக்குவது தான் முதன்மை திட்டம். மேலும் மலையின் வால் போன்ற பகுதியில் இந்தியப் பாராளுமன்றம் போன்ற அமைப்பை உருவாக்கி அதில் உலகத் தலைவர்களது சிலையைக் கண்காட்சியாக அமைத்து இந்த இடத்தை இந்திய அளவில் பிரபலம் அடையச் செய்யலாம். இந்த யானை கோபுரப் பணி மூன்றாண்டுகளில் முடியும். அதி நவீன மின் அணுக் கருவிகளால் ஓசையின்றி ஒளி பாய்ச்சி ஓராண்டில் பாறையைக் கிழித்து 13 நிலைகளுடன் கோபுரத்தை எல்&டி நிறுவனம் வடித்துத்தரும். ஐந்தடிக்கு ஒரு சாரம் என 9 ஆயிரம் சிற்பிகள் அமர்ந்து மீதி இரண்டாண்டுகளில் தங்களின் கைத்திறனில் கலைநயமான சிற்பங்களைச் செதுக்கி முடிப்பார்கள். இதன் பிறகு ஓரங்களைக் குடைந்து மிகப் பெரிய கூடங்கள், சர்வ மத குடவரை ஆலயங்கள் அமைத்து, சங்கத்தமிழ் இலக்கியத்தை, திருக்குறளை சிற்பங்களாகச் செய்வது. மனித வரலாற்றை, புராணங்களை, இதிகாசங்களை, வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை என்றென்றும் அழியாத காட்சிப் படிமமாய் மாற்றி வைப்பது... என மேலும் பத்தாண்டுகளில் பணிகள் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இப்படி மலையைச் செதுக்கி கலைவடிவமாக மாற்றும்போது செம்மை நிற அபூர்வ ரக கிரானைட் கற்கள் கிடைக்குமாம். அதனை விற்றால் ஏராளமாகப் பணம் கிடைக்குமாம். அது பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வரும். அதனால் அரசு இத்திட்டத்திற்கு மிகக் குறைந்த நிதியைச் செலவிட்டால் போதுமாம். இதுதான் இவர்களின் திட்டத்தின் ஆரம்பம் என்று பார்த்தால், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையானது. சிலைகள் வடிக்கும் போது கிடைக்கும் கற்களை விற்றால் 5000 கோடி ரூபாய் கிடைக்குமாம். அரசு திட்ட செலவுக்கு சும்மா ஒரு 1500 கோடி ரூபாய் ஒதுக்கினால் போதும், சிற்பநகரம் தயார். இப்படி ஒரு திட்டதை நிறைவேற்ற அரசு அவர்கள் தமிழக அரசிற்கு 24/6/2008 அன்று கருத்துரு அனுப்பியுள்ளார்.
இந்த செய்திகளை நாளிதழ்களில் பார்த்து மெல்ல மக்களிடம் பதற்றமும், பயமும் ஏற்பட்டது. இதுவரை பல திட்டங்களின் பெயரில் விளை நிலங்களை இழந்தோம். இந்த முறை அநேகமாக ஊரையே இழக்க நேரிடும். காலம் காலமாக மக்களின் நத்தமாகத் திகழும் இந்த இடத்தை விட்டுத் தாங்கள் விரட்டப்படுவோம் என ஒரு பதற்றம் ஊரெங்கும் வீசத் தொடங்கியது. இந்த மலை இந்தப் பகுதி மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாகவே திகழ்கிறதை அங்கு காண முடிகிறது. இந்த மலையைக் கடவுளாகவே அவர்கள் வணங்குகிறார்கள். ஏறக்குறைய அங்கு உள்ள பல வீடுகளில் யானை மலையின் படம் ஒன்று உள்ளது. பலரது கழுத்தில் யானை உருவம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் உள்ளன. மலைச்சாமிதான் இவர்களின் கிராமத் தெய்வமாக உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் அமைத்த கண்காணிப்பு மேடை மலை உச்சியில் உள்ளதை இன்றும் நீங்கள் காணலாம். திருவிளையாடற்புராணம் யானை எய்த படலத்தில் இந்த மலையைப் பற்றி விரிவான பல குறிப்புகள் உள்ளன. இந்தக் கிராமங்களில் பெரும் பகுதியான குடும்பங்களில் மலைச்சாமி என்கிற பெயர்தான் இன்றும் சூட்டப்படுகிறது. இந்த யானை மலையின் அடிவாரத்தில் உள்ள மரங்களை யாரும் சேதப்படுத்துவது கிடையாது. அந்த மலை ஒரு கம்பீர உருவமாக, அந்த ஊரின் ஒரு நம்பிக்கையின் சின்னமாகத் திகழ்கிறது. அந்த வழியாகப் பேருந்தில் பயணம் செய்யும் அனைவருக்குமே அதைப் பார்ப்பது மனதில் இயற்கை சார்ந்த ஒரு பிரம்மாண்ட உருவத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மலை சுற்றி வந்தால் தாமரைக் குளங்கள், சுனைகள், மலை உச்சியில் பெரும் தேன்ராட்டைகள், பழத்தோட்டங்கள் என ஒரு இயற்கை சுற்றுலா சென்ற அனுபவமாகவே உள்ளது. இந்த யானைமலை அந்த ஊர் மக்களின் ஆதர்சமாக உள்ள நிலையில் எப்படி இந்த ஊரின் மக்களை ஆலோசிக்காமல் அரசும் தமிழக அரசும் இப்படி ஒரு திட்டத்தை யோசித்தார்கள் என்றே தெரியவில்லை.
ஊருக்குப் பின்னால் ஒரு கோவிலைக் கட்டி, ஊருக்குப் பெயரை மாற்றி அங்கு வந்தமர்ந்து இயற்கையை ரசிக்காமல் சிலர் கால்குலேட்டர்களை வைத்து 4000 X 1200 X 900 என கணக்குப் போட்டுப் பார்த்துள்ளது தெரிய வருகிறது. இதில் மதுரையில் உள்ள கிரானைட்டு மாபியாக்களுக்குப் பெரும் தொடர்புள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் மூலம் அவர்களே அதிக லாபம் பெறுவார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன. துறை சார்ந்தவர்களிடம் விசாரித்தபோது தொகை லட்சம் கோடியை எட்டும் என்றார்கள். இந்த யானைமலையில் உள்ள செந்நிறக் கருங்கற்களே இந்த மொத்த திட்டத்திற்கும் ஆதாரமான குவிமையம். ஆனால் அப்படி இந்த மலையைப் பெயர்த்து எடுப்பது சாத்தியமில்லை என்பதால் இதனை எப்படி எல்லாம் சாத்தியப்படுத்த இயலும் என்பதற்கு இதுவே ஒரு பெரும் உதாரணம்.
மக்கள் விழிப்புடன் அரசை நாடியபோது, இப்படி எந்தத் திட்டமும் அரசு அறிவிக்கவில்லை என்று செய்தி வந்தது. பெருந்தச்சர் அவையத்தின் தலைவரோ பல வாரப் பத்திரிகைகளில் விரிவான விளக்கப் படங்களுடன் பேட்டி கொடுக்கத் தொடங்கிவிட்டார். இந்த திட்டத்திற்கு அண்ணா-கலைஞர் சிற்பநகரம் என அறிவித்தார். மெல்ல யானைமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஊர் கூட்டங்கள் நடந்தன. ஒத்தக்கடை, அரும்பனூர், கொடிக்குளம், நரசிங்கம், சிட்டம்பட்டி என அது தொடர்ந்தது. ஆட்டோ ஓட்டுநர்கள், சில்வர் பட்டறை தொழிலாளிகள், கல்குவாரியில் பணிபுரிபவர்கள், வேளாண்மைப் பல்கலைக்கழக ஊழியர்கள், டி.வி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், அல்ட்ரா கல்லூரியின் ஊழியர்கள், விவசாயிகள், விவசாயக் கூலிகள் என இப்படியான ஒரு வேலை வாய்ப்பில் ஈடுபடுபவர்களே ஒத்தக்கடையில் உள்ளனர். பல அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களாக, பல ஜாதிகளாக அவர்கள் அங்கு பிரிந்து கிடந்தபோதும் ஊர் கூடி நின்றால்தான் இந்தப் பிரச்சினையைச் சந்திக்க இயலும் என அனைவருக்கும் திடமாக விளங்கியது. ஊரின் பெரும்பான்மையினரின் பங்களிப்புடன் யானைமலை பாதுகாப்பு இயக்கம் அமைக்கப்பட்டது. ஏறக்குறைய மொத்த கிராமத்திலும் இந்தக் காலத்தில் எங்கு பார்த்தாலும் ஊரின் இடப்பெயர்வு சார்ந்த ஒரு பயம் காற்றில் மிதந்து அலைந்தது. சிற்பக்கலை நகரம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என மக்கள் பலவகை போராட்டத்தில் களமிறங்கினர். மனுநீதி நாளில் ஊரே திரண்டு ஆயிரக்கணக்கில் மனு கொடுத்தது. பிப்ரவரி 10 ஆம் தேதி இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 2000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மலையின்மீது செயற்கைக்கோள் குறிப்புகள் இடப்பட்டதை மக்கள் கண்டறிந்தனர்.
இந்தக் காலத்தில் அரசு இப்படி ஒரு திட்டமே இல்லை எனக் கூறியது முழுப் பொய் என நிரூபணமானது. 30.12.2009 அன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை (நிலை) எண் - 227 மக்களின் கைகளுக்குக் கிடைத்தது. அதில் அரசாங்கம் இந்த திட்டம் தொடர்புடைய ஆய்வை நிகழ்த்த ஒரு குழு அமைத்துள்ளது தெரியவந்தது. அதில் முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தலைவர் தொல்லியல் துறை, ஆணையர் - கலைப் பண்பாட்டுத்துறை, இயக்குநர் - சுற்றுலாத்துறை, மாவட்ட ஆட்சியர் மதுரை, ஆணையர் - சுரங்கத்துறை, முதல்வர் - அரசு கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, துணைவேந்தர் - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஆ.அரசு - வழக்கறிஞர், வை.கணபதி ஸ்தபதி ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவை முதனிலைக் குழுவிற்கான தகுதியுடையது என அந்த அரசாணை தெரிவித்தது. ஆனால் இப்படி ஒரு குழு அமைந்துள்ளதை அரசு இறுதிவரை ஏற்கவில்லை. இப்படி ஒரு ஆய்வை ஏற்படுத்த அனுமதிப்பதில்லை என யானை மலை பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்தது. அரசு வாகனங்கள் எதையும் ஊருக்குள் விடுவதில்லை என இரவு நேரத்திலும் கூட ரோந்து செல்லும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இந்தக் குழுவின் ஆய்வுக்குத்தடை கோரி சோகோ அறக்கட்டளையின் சார்பாக மகபூப் பாட்சா வழக்குத் தொடர்ந்தார். தடை விதிக்க இயலாது என்று கூறிய உச்சநீதிமன்றம் ஆய்வுக்காக இந்த மலையிலிருந்து ஒரு கல்லைக்கூட எடுக்கக் கூடாது என்றது.
ஏற்கனவே மதுரையில் பல பகுதிகளில் இருந்து மலைகளைக் கல் உடைப்பவர்கள் விட்டு வைக்கவில்லை. 1980களில் திருப்பரங்குன்றம் மலையில் பின்பகுதியில் சரவணப் பொய்கையை அடுத்துக் கல் உடைக்கும் வேலை தொடங்கி பின்னர் கைவிடப்பட்டது. மேலக்குயில்குடி அருகில் உள்ள மலையை உடைக்கத் தொடங்கி ஒரு பகுதி உடைக்கப்பட்ட நிலையில் அங்கு வைக்கப்பட்ட வெடியில் மொத்த சமணர் படுகைகளும் குகைகளும் மறைந்து போனது. அதன் பின்னர் தொல்லியலாளர்கள் போட்ட கூப்பாட்டில்தான் அரசு மெல்ல விழித்தது. மதுரை மேலூர் அருகே உள்ள சக்கரை அவுலியா தர்கா மலை, முத்துப்பட்டியில் உள்ள சமணர் படுகைகள் எல்லம் தரைமட்டம் ஆக்கப்பட்டுவிட்டன. இந்த மலை 1958ல் தொல்லியல் தளங்கள், எச்சங்கள் சட்டத்தின்கீழ் மிக அரிதான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதையும் இந்த வழக்கு சுட்டிக் காட்டியது. இந்த மலையில் விளம்பரங்கள் எழுதுவது போன்ற வியாபார நடவடிக்கைகள் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு கூறியிருக்கும் பட்சத்தில், இந்த மலையையே வெட்டி வியாபாரம் செய்ய ஒரு கும்பல் முயன்று வருவது எத்தனை அராஜகமானது.
யானைமலையை ஆய்வு செய்ய மைசூரிலிருந்து விசேஷ ஹெலிகாப்டர் என வந்த பத்திரிகை செய்தி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 10 ஆயிரம் சிற்பிகள் தேவை என செய்தி- இதுபோல் இந்தக் குழுவின் உறுப்பினர்கள் வெளியிட்ட செய்திகள் மக்களின் மனங்களை மிரட்டியவண்ணமிருந்தன. தஞ்சைக் கோயிலின் 1000மாவது விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் சிற்பிகளைத் திரட்டிப் பரிசு வழங்கப்படும் என அடுத்த அறிவிப்பு வந்தது. மதுரைக்கு வந்த தமிழ்நாட்டின் முதன்மைச் செயலர் ஸ்ரீபதி "அரசிற்கு இப்படி ஒரு திட்டமே இல்லையே, ஏன் வீணாக இங்கு கூச்சல் குழப்பம்" என அறிவுரை கூறினார். வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. வைகோ, நெடுமாறன் என ஒரு சிலர் மட்டும் அங்கு நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இடதுசாரிக் கட்சிகள் கடைசி நேரத்தில் தனித்தனியாக இயக்கம் நடத்தின. போராட்டம் வெல்லும் சூழலில் அதனைக் கைப்பற்ற பல இயக்கங்கள் முயன்றன. இருப்பினும் யானைமலை பாதுகாப்பு இயக்கம் தன் நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. ஆர்.எஸ்.எஸ்- பிஜேபியின் மற்றொரு அங்கமான இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் மட்டும் மலையைச் சேதப்படுத்தாமல் அழகுபடுத்த வேண்டும் என்றார். இந்த அறிக்கையின் அர்த்தம் என்ன என தமிழகத்தில் யாராவது ஆய்வு செய்யலாம்.
பிஜேபியின் நிலைப்பாடு அப்படித் தானே இருக்கும். அவர்களுக்கும் இயற்கையைச் சுரண்டுபவர்களுக்கும் அலாதியான உறவு ஒன்று உள்ளது. இயற்கை வளங்களைச் சுரண்டுபவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு இந்தக் கட்சி முழு பாதுகாப்பு அளிக்கிறது. கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்களுக்கு குமாஸ்தாவாக உள்ள எடியூரப்பா, நர்மதை அணையை வெறியுடன் கட்டும் மோடி, மார்பிள் மாபியாக்களுக்காக சொராபுத்தீனை போலி மோதலில் போட்டுத் தள்ளிய அமித் ஷா, சத்தீஸ்கரில் பழங்குடியினரை விரட்டியடிக்க சல்வா ஜுதும் படை அமைத்த ரமன் சிங், ஒரிசா- ஜார்க்கண்ட் மாநிலங்களில் இரும்புத்தாது வெட்டியெடுக்கத் துடிக்கும் பன்னாட்டு- உள்நாட்டு முதலாளிகளுக்காக வாதாடும் அருண் ஜெட்லி, அப்படியானால் இந்த வரிசையில் சங்கப் பரிவாரங்களின் தமிழகக்கிளை மட்டும் எப்படி வித்தியாசமாக முடிவு எடுக்கும்? மொகஞ்சதாரோ முதலே நாகரீகங்களை அழிக்கும் பணி தொடங்கி விட்டது. அதை எப்படி திடீரென நிறுத்துவது.
10,000 பேர் திரண்டு நடத்திய மறியல் பெரும் எழுச்சியாக இருந்தது. அதில் 4500 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது அரசு. இந்தத் தொடர் போராட்டங்களைப் பார்த்த மாவட்ட நிர்வாகம் அரசு அமைத்துள்ள குழுவைத் திரும்பப் பெற பரிந்துரைக்க முடிவு செய்தது. மாவட்ட நிர்வாகத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது பலர் இப்படி ஒரு குழு மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசிக்காமலே அமைக்கப்பட்டது என தகவல்கள் தெரிவித்தன.
அடுத்த அரசாணை (நிலை) எண் 39/ 24.02.2010 அன்று வெளியிடப்பட்டது. "தஞ்சாவூர் மாவட்ட பெருந்தச்சர் அவையத்தின் ஸ்தபதி அ.அரசு மதுரை மாவட்ட ஒத்தக் கடையில் யானை மலை என்று அழைக்கப்படும் ஒற்றைக்கல்லில் வடிவம் குறையாமல் ஒரே வரிசையில் குகைகள் மற்றும் தூண்கள், சிற்பக் கலை நகரத்தை உருவாக்கலாம் என்று அரசுக்குத் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். இது குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு முதன்மைச் செயலர் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் தலைமையில் ஒரு குழு மேலே 1ல் படிக்கப்பட்ட அரசாணையில் அமைக்கப்பட்டது. இந்த குழு 19.02.2010 அன்று கூடி ஆய்வு செய்தது. மேலே 2ல் படிக்கப்பட்ட கடிதத்தில் குழுத் தலைவர் தனது அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தார். யானைமலை உச்சியில் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும் சமணர் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மலையின் மேற்புறத்தில் நரசிங்கப் பெருமாள் குடவரைக் கோவில் ஒன்று உள்ளது. எனவே யானைமலையில் சிற்ப நகரம் உருவாக்கும் சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லை எனவும், இம்முன்மொழிவினைப் பரிசீலிக்க தேவையில்லை எனவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது. மேற்கூறிய குழுவின் அறிக்கையை அரசு கவனத்துடன் பரிசீலித்தது. அதன்படி குழுவின் அறிக்கையினை ஏற்று பெருந்தச்சர் அவையத்தின் கோரிக்கையை நிராகரித்து அரசு ஆணை வெளியிடுகிறது" என்று அந்த அரசாணை கூறியது.
பல கேள்விகள் அடுக்கடுக்காய் எழுகிறது. இந்த மலையைச் சுற்றியுள்ள தொன்மையான தளங்களைப் பற்றி ஒரு தொல்லியல் துறையின் முதன்மைச் செயலருக்குள்ள அறிதல்தான் என்ன? அப்பட்டமாக யாருடைய தூண்டுதலின் பெயரில் இந்த திட்டம் வகுக்கப்பட்டது? இதுபோல் ஏற்கனவே தரைமட்டமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மலைகளின் அழிவுக்கு யார் பொறுப்பு? இந்தப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் பலருக்கு மிரட்டல்கள் விடுத்துள்ளவர்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? இப்படி ஒரு காமெடியான முடிவைச் சந்திக்கும் குழுவுக்கு அரசு எப்படி முதனிலைக் குழு அந்தஸ்தை வழங்கியது? அரசு ஆணையே வெளிடவில்லை என அப்பட்டமாய் பொய்யைப் பரப்பிய மாவட்ட நிர்வாகத்தினர் முதல் - முதன்மைச் செயலர் வரை அனைவரின் மீதும் என்ன நடவடிக்கை? இத்தனை மாதங்கள் அந்த ஊரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல குடும்பங்கள் தங்களின் அன்றாட வாழ்வில் சந்தித்த இன்னல்களுக்கு அரசு நிவாரணம் வழங்குமா? இந்த முதனிலைக் குழு மக்களின் வரிப் பணத்தை எவ்வளவு செலவு செய்தது? இந்தக் குழுவினர், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற துடித்தவர்கள் எப்படி மீண்டும் சமூகத்தில் கூச்சமின்றி உலவுவார்கள்? பகுத்தறிவு வழி வந்த ஒரு அரசு வாஸ்துவுக்காக உட்கார்ந்திருக்கும் யானையை நிற்கவைக்க முயலலாமா?
யானைமலை பாதுகாப்பு இயக்கத்தினர் "மீண்டும் இந்தத் திட்டம் புதிய வடிவில் வர வாய்ப்புள்ளது. ஆகையால் தொடர்ந்து விழிப்புடன் மக்கள் இருப்பதுதான் உசிதம்" என்று முடிவு செய்தனர். இதுதான் ஆப்ரிக்கா தொடங்கி உலகின் ஏழை நாடுகளின் நிலையாக உள்ளது. நம் அரசுகளும் கடந்த 20 ஆண்டுகளாக அவ்வாறே செயல்பட்டு வருகின்றது. சமீபத்தில் "வேதாந்தா" நிறுவனத்திற்கு அனுமதி மறுத்துள்ள நீதிமன்றத்தின் ஆணை மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் சில அரசியல் கட்சிகள் ஒத்தக்கடையில் வெற்றி விழாக்கள் நடத்தின. அவர்களுக்கு அடுத்து தேர்தல் இருப்பதால் இது ஒரு நல்ல புகைப்பட தருணம். உலக முழுவதும் உள்ள விளிம்பு நிலை மக்கள் அவ்வாறு கொண்டாட இயலாது. உலகமயத்தை நாம் நம் பலத்துடன் எதிர்கொள்ளும்வரை.
கடந்த பத்தாண்டுகளில் இப்படி இயற்கை வளங்கள் சார்ந்து நூற்றாண்டுகள் வாழ்ந்து வந்த மக்கள் லட்சக்கணக்கில் தங்கள் பூர்வீக இடங்களில் இருந்து கட்டாயமாக அரசாங்கத்தால் விரட்டியடிக்கப்பட்டதை நாம் பார்த்துள்ளோம். அதில் ஒரு குடும்பத்திற்குக்கூட முறையான நிவாரணத்தை அரசு வழங்கியதில்லை. இயற்கை வளங்களைச் சூறையாடும் மாபியாக்கள் இன்று இந்தியாவெங்கும் பெரும் கோடீஸ்வரர்களாக வலம் வருவது சமீபத்தில் நடைமுறையாக உள்ளது. இது முற்றிலும் அரசுக்கு எந்த வருவாயையும் அளிக்காமல் மக்களின் சொத்தை அபகரிப்பதாக உள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அரசுகள் இவ்விசயத்தில் ஒன்று போலவே வேலை செய்கிறது. பெரும் மூலதனமான இயற்கையை வன்புணர்வுக்கு உட்படுத்த அரசு இசைவான சூழலை அமைத்துத் தருவதுதான் அதன் ஒரே கடமை என, மூன்றாம் உலக நாடுகளுக்கு உலக வங்கி வழங்கியுள்ள பத்துக் கட்டளைகள் கூறுகிறதோ.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்