வான்கோ தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்தபோது, அவருக்கு முப்பத்தியேழு வயது நடந்து கொண்டிருந்தது. மனச்சிதைவும், உடற்கோளாறும் கொண்டிருந்த வான்கோ மனநலகாப்பகம் ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்றார். மருந்தை விடவும் அவருக்குத் தேவையானதாகயிருந்தது சகமனிதர்களின் அன்பு. ஆனால், அது அவருக்கு கிடைக்கவேயில்லை. அவருக்கு இருந்த ஒரே துணை அவரது சகோதரன் தியோ.
தன்னுடைய ஆசை, நிராசை, துக்கம் யாவையும் ஒளிவு மறைவின்றி கடிதங்களாக சகோதரனுக்கு எழுதியிருக்கிறார் வான்கோ. எண்ணூறுக்கும் மேற்பட்ட வான்கோவின் கடிதங்கள் இன்றும் முறையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கடிதங்கள் யாவிலும் அன்பிற்காக ஏங்கித் தவிக்கும் குரலே எதிரொலிக்கின்றன. வான்கோ நவீன ஓவியத்தின் உயர்சாதனையாளர். போஸ்ட் இம்ப்ரசன்ஸிச (Postlmpressionism) வகை ஓவியங்களில் முன்னோடி, வான்கோவின் புகழ்பெற்ற ஓவியங்களின் நகல்பதிப்புகளே இன்று லட்சக்கணக்கான ரூபாய் விலையில் விற்கப்படுகின்றன. அவரது ஒரிஜினல் ஓவியங்களின் விலை நூறு கோடிக்கும் மேல், இவ்வளவு புகழும் பணமதிப்பும் கொண்டிருந்த வான்கோவின் ஓவியங்களை அவர் வாழும் காலத்தில் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. ஒரேயொரு ஓவியம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
வான்கோ தன் இறுதிநாட்களில் பாரீஸை விட்டு விலகிய கிராமப்புறங்களில் தங்கி ஓவியம் வரைந்து கொண்டிருந்தார். அந்த நாட்களில் ஒரு கோப்பை மதுவும் சிகரெட்டும் ஒரேயொரு ரொட்டித் துண்டுமே அவரது ஒருநாள் உணவாக இருந்தது. பசியை அடங்க விடாமலே வாழப் பழகிய வான்கோ இரண்டு மாதங்களில் நூற்றுக்கும் அதிகமான ஓவியங்களை வரைந்திருந்தார். தன் வாழ்நாளில் வான்கோ இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஓவியங்கள் தீட்டியிருக்கிறார்.
ஓவியம் வரைவதற்காக தனது மனதிற்குப் பிடித்த கோதுமை வயல்கள் கொண்ட நிலப்பரப்பிற்குச் சென்று வருவதே அவரது தினசரி வேலையாக இருந்தது. தன் ஓவியங்களுக்கு எப்போதும் ஆதர்சமாகயிருப்பது சூரியனே என்று சொல்லும் வான்கோ, பகல் சூரியனோடு பேசியபடியே ஓவியம் வரைந்து கொண்டிருப்பார்.
1890 ஆண்டு ஜூலை இருபத்தியொன்பதாம் நாள் வான்கோ கோதுமை வயல் ஒன்றினைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை. பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் தொலைவில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
கடல் அலையைப் போல வெளிச்சம் கோதுமை வயல்களின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. வான்கோவின் கண்கள் எல்லையற்ற நீலவானையும், விரிந்து கிடக்கும் நிலப்பரப்பையும் கண்டு கொண்டிருந்தன. இயற்கை மிகவும் புதிரானது என்று அவரது உதடுகள் திரும்பத் திரும்ப முணுமுணுத்துக் கொண்டன.
தனது படைப்பாற்றல் இயற்கையின் முன்பாக ஒரு குழந்தை விளையாட்டு என்றே தோணியது. இந்த கோதுமை வயல்களையும், அதன் மீது கடந்து செல்லும் காற்றையும் ஒளியையும், இந்த ஒளியில் நிமிஷநிமிசம் புதிதாகத் தோற்றம் கொள்ளும் கதிர்களின் நளினத்தையும், கண்ணுக்குத் தெரியாமல் பொங்கிக் கொண்டிருக்கும் இயற்கையின் வீரியத்தையும் எப்படி நிறங்களால் வசப்படுத்த முடியும். ஏதோவொரு விதத்தில் இயற்கை அனுமதித்தால் மட்டுமே நாம் அதனை வசப்படுத்த முடியும் என்று வான்கோவிற்குப் புரிந்தது. வான்கோவின் மனது இயற்கையை வியந்தபடி ஒரு பக்கமும், தன்னிரக்கமும் விரக்தியும் வெறுமையும் கொண்டதாக மறுபக்கமும் இருந்தது. இயற்கையின் கோடானகோடி வர்ணங்களும் ஒத்திசைவுகளும் தன்னால் ஒரு போதும் வெற்றி கொள்ள முடியாதவை என்று அவரது மனது ஒப்புக் கொண்டது. வாழ்வதன் காரணம் அறுபடும்போது மனது சாவை நோக்கி ஊஞ்சலாடத் துவங்கியது. வாழ்க்கை தனக்கு துயரத்தை மட்டுமே பரிசாக அளித்திருக்கிறது என்று தீவிரமாக நம்பினார் வான்கோ.
காலைச்சூரியன் ஒரு மலரென பூத்திருந்தது. பேராசையுடன் ஓவியம் வரையத் துவங்கினார். ஆனால் மதியத்திற்குள் அவரது மனது ஓவியத்திலிருந்து விடுபட்டு வெறுமை கவ்வத் துவங்கியது. தன்னை அறியாமலே அவர் சாவின் நிழல்கள் தன் மீது ஊர்ந்து செல்வதை உணரத் துவங்கினார். அந்த நிலவெளியில் தன்னைத் தவிர யாருமில்லை என்பதை அறிந்த மறுநிமிசம் ஓவியம் வரைவதை நிறுத்திவிட்டு பெருமூச்சிட்டபடியே சில அடிகள் நடந்து சென்று ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்தபடியே தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் வான்கோ.
துப்பாக்கியின் வெடிச்சப்தம் கேட்டு பறப்பதற்கு அங்கே காகங்கள் கூட இல்லை. வெடிசப்தம் சில நிமிசங்களில் அடங்கி நிசப்தமாகிப் போனது. ஆனால் வான்கோவின் உடலில் இருந்து வழியும் ரத்தம் நிற்கவில்லை. வான்கோ தள்ளாடியபடியே தான் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போதும் ஓவியம் தீட்டும் வேட்கை அடங்கவில்லை. ஆனால் உடல் நிலை குலையத் துவங்கியது.
துப்பாக்கி குண்டு இதயத்தின் அடியில் சென்று வேதனைப்படுத்தத் துவங்கியது. வலியோடு தானே அறைக்குத் திரும்பினார். படுக்கையில் உதிரம் கசிந்து கொண்டேயிருந்தது. உணவு வேளைக்கு அழைப்பதற்காக வந்த பணிப்பெண் அவரது உதிரம் கசியும் உடலைக் கண்டதும் வீறிட்டு அலறினாள்.
ஒரு இரவு முழுவதும் மருத்துவர்களும் அறிந்த மனிதர்களும் அவரை உயிர் பிழைக்க வைக்க போராடினார்கள். மறுநாள் வான்கோவின் சகோதரன் பாரீஸிலிருந்து வரவழைக்கப்பட்டான். அவன் வரும்வரை உயிரை விடக்கூடாது என்று காத்திருந்தவர் போல, என் துயரங்களிலிருந்து விடுபட்டுவிட்டேன் என்ற படியே வான்கோ இறந்து போனார்.
வான்கோ தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு தேவாலயத்தில் இறுதிச் சடங்கு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆகவே அவரது உடலை தெரிந்த நண்பர்களும் உறவினர்களுமாக இருபது பேர் இறுதிச் சடங்கிற்காக கொண்டு சென்றனர். ஒரு விதையைப்போல பூமியினுள் சென்று சேகரமானார் வான்கோ. அப்போதும் வானம் நீல நிறமாகவே இருந்தது.
கடந்த சில மாதங்களாக அவர் தங்கி ஓவியம் வரைந்து கொண்டிருந்த அறையில் தீட்டப்படாத கேன்வாஸ்களும், மீதமிருக்கும் நிறங்களும், பெயிண்ட் கறைபடிந்த உடைகளும், யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாத தனிமையும் நிரம்பியிருந்தன. தனது சகோதரனுக்கு எழுதி அனுப்பப்படாத தபால் ஒன்றும் அவரது மேஜை மீதிருந்தது. வரைந்து தீராத தனது கனவுகளுடன் வான்கோ இறந்து போனார். வான்கோ விட்டுச் சென்ற ஓவியங்கள் இன்றும் அவரது மனவேகத்தை, உலகின் மீது அவர் கொண்டிருந்த நெருக்கத்தை ஈர்ப்பை வெளிப்படுத்துகின்றன.
வான்கோவின் வாழ்க்கை மற்றும் அவரது ஓவியங்கள் குறித்து மிக முக்கியமான திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் குறிப்பிடப்பட வேண்டியவை. பால்காக்ஸ் இயக்கிய வின்செண்ட் (Vincent. A Film by Paul Cox) மற்றும் வின்சென்ட் அண்ட் தியோ என்ற ராபர்ட் அல்ட்மென் திரைப்படம். (Vincent and Theo: A Film by Robent Altman (1990)அது போலவே இர்விங் ஸ்டோன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Lust for Life. அத்துடன் வான்கோ மனநலக் காப்பகத்தில் இருந்த நாட்கள் குறித்து அலெக்சாண்டர் பெர்னாட் இயக்கிய The Eyes of VanGogh மற்றும் அகிரா குரசோவா இயக்கிய ட்ரீம்ஸ் (Dreams) படத்தில் வான்கோவைப் பற்றிய காகங்கள் என்ற ஒரு பகுதி இடம் பெறுகின்றது. சமீபமாக வான்கோ என்ற பெயரில் மாரீஸ் பிலாத் இயக்கிய படமும் மிக குறிப்பிடப்பட வேண்டியது.
இந்தப் படங்களில் பால் காக்ஸ் இயக்கிய வின்சென்ட் திரைப்படம் வான்கோவின் கடிதங்களின் வழியே அவரது வாழ்க்கையையும், அவரது ஓவியங்களின் பின்புலத்தையும் புரிந்து கொள்ள வைக்கின்றது. வான்கோ நேரடியாக தன் வாழ்வைப் பற்றி பார்வையாளர்களுடன் பேசுவது போன்ற நெருக்கத்தை இந்தப் படம் உருவாக்குகிறது. வண்ண ஓவியங்கள், கோட்டோவியங்கள், வான்கோவின் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் என கேமிரா ஒன்றிலிருந்து மற்றொன்றிக்கு என ஊடுருவிச் செல்கின்றன. ஓவியர்களின் வாழ்வைப் பற்றிய திரைப்படங்களிலும் இந்தப் படம் மிக முக்கியமானது. பால் காக்ஸ் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முக்கிய இயக்குனர். இவர் பதினெட்டு திரைப்படங்கள் மற்றும் 17 ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார்.
ராபர்ட் அல்ட்மெனின் வின்சென்ட் அண்ட் தியோ திரைப்படம் வான்கோவிற்கும் அவரது சகோதரன் தியோவிற்குமான உறவின் நெருக்கத்தை முதன்மைபடுத்துகிறது. தியோ இல்லாமல் இருந்திருந்தால் வான்கோ என்னவாகியிருப்பார் என்று எவராலும் கூற முடியாது. வான்கோவிற்கான பொருளாதார உதவிகளையும் ஓவியம் வரைவதற்கான உத்வேகத்தையும் உருவாக்கியது தியோ.
வான்கோ ஒரு போதகரிடம் பாவமன்னிப்பு ஒப்புதல் தருவது போல தியோவிற்கு எழுதிய கடிதங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்தத் திரைப்படம் வான்கோவின் வாழ்வில் தியோ கொண்டிருந்த நெருக்கத்தை விளக்குகிறது.
இது போலவே கிரிக் டக்ளஸ் வான்கோவாக நடித்து வெளியான லஸ்ட் பார் லைஃப் திரைப்படம் ஹாலிவுட்டில் மிக பிரபலமானது. அப்படம் பால்காகின் என்ற ஓவியருக்கும் வான்கோவிற்குமான நட்பை விவரிக்கிறது. காகினும் நவீன ஓவிய உலகில் மிக முக்கியமான ஓவியர். அவரும் வான்கோவும் ஒன்றாக அறையெடுத்து தங்கி ஓவியம் வரைந்தார்கள். காகின் படுக்கை அறையை அலங்கரிப்பதற்காக சூரியகாந்தி பூக்களை சுவர் முழுவதும் வரைந்திருக்கிறார் வான்கோ. இதன் பாதிப்புதான் பின்னாளில் பனிரெண்டு சூரியகாந்தி பூக்கள் என்ற அவரது பிரசித்திபெற்ற ஓவியம் வரைவதற்குத் தூண்டுகோலாக இருந்தது. பால் காகினின் நட்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். மித மிஞ்சிய ஆத்திரத்தில் காகினைக் கொல்வதற்குக் கூட வான்கோ முயன்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பால்காகினாக ஆண்டனி குயின் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
வான்கோவின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்வதை விடவும் அவரது ஓவியத்தின் வழியே அவரைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது அகிரா குரசோவின் ட்ரீம்ஸ். இந்தப் படம் குறுங்கதைகளின் தொகுப்பு போன்றது. இதில் காகங்கள் என்ற பகுதியில் வான்கோவின் ஓவியங்களைப் பார்வையிடும் ஒரு ஜப்பானிய இளம் ஓவியன் அவரது புகழ்பெற்ற காகங்கள் மிதக்கும் கோதுமை வயல் என்ற ஓவியத்தின் உள்ளே பிரவேசிக்கும் பகுதி ஒன்றிருக்கிறது.
நவீன ஓவியம் ஒவ்வொன்றும் கனவின் துண்டிக்கப்பட்ட பகுதிகளே என்று கூறும் அகிரா குரசோவா இந்தப் படத்தில் வான்கோவின் உலகிற்குள் நாம் நுழைந்து செல்வதற்கு அவரது ஓவியத்தின் வர்ணங்கள் வாசல்களாக இருக்கின்றன என்று அறிமுகம் செய்கிறார்.
ட்ரிம்ஸ் படத்தில் ஒரு இளம் ஓவியன் வான்கோவின் ஓவியக் கண்காட்சியைச் சுற்றிப்பார்க்கிறான். புகழ்பெற்ற ஓவியங்களான சூரியகாந்தி பூக்கள், வான்கோவின் அறை, மற்றும் நட்சத்திரங்கள் துவங்கும் இரவு போன்றவற்றைப் பார்வையிடுகிறான். அவனுக்கு காகங்கள் பறக்கும் கோதுமை வயல் ஓவியம் மிகவும் பிடித்திருக்கிறது. அதை உன்னிப்பாகப் பார்க்கத் துவங்குகிறான். மறுநிமிசம் அவன் அந்த நிலக்காட்சியினுள் பிரவேசிக்கிறான்.
ஓவியத்தில் இருந்த அதே வர்ணத்திலிருக்கிறது நிலப்பரப்பு, ஓவியமாக உறைந்திருந்த உருவங்கள் அப்படியே சலனமுற்று இயல்புக்குத் திரும்புகிறார்கள். வான்கோவின் ஓவியம் உயிர்பெறுகிறது. இளம் ஓவியன் அங்கிருந்த பெண்களிடம் வான்கோ எங்கேயிருக்கிறார் என்று கேட்கிறான். அந்தப் பெண்களில் ஒருத்தி அவர் மனநலக்காப்பகத்திலிருந்து வந்தவர், ஜாக்கிரதையாகப் பார்த்து வா என்று கேலி செய்கிறாள். வான்கோவைத் தேடி நடக்க துவங்குகிறான். வான்கோவின் ஓவியத்திலிருந்த அதே காட்சிகள் இப்போது கண்முன்னே விரிகின்றன. ஒரு பரந்த நிலவெளி ஒன்றில் தனியே வான்கோ ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார். அவரை நெருங்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.
இப்படத்தில் வான்கோவாக நடித்திருப்பவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனரான மார்ட்டின் ஸ்கார்சசி. வான்கோ அந்த இளைஞனுடன் பேச விருப்பமற்றவரைப் போல தான் சூரியன் அடங்குவதற்குள் ஓவியங்கள் வரைய வேண்டும் என்று தனது தூரிகைகளுடன் நடந்து செல்லத் துவங்குகிறார். அந்த இளைஞன் திரும்பி வரும் வழி முழுவதும் இயற்கையே உருமாறி வான்கோவின் ஓவியம் போலிருக்கிறது. அவன் ஓவியத்தின் வழியே நடந்து வெளியே வருகிறான். திரையெங்கும் காகங்கள் பறந்து அலைகின்றன.
இந்தப் படம் நவீன ஓவியம் குறித்த மிக முக்கிய பதிவுகளில் ஒன்றாகும். கலை வாழ்க்கையை நகல் எடுப்பது போலவே வாழ்க்கையும் கலையிடமிருந்து நிறைய சுவீகரித்துக் கொள்கிறது என்பதைப் புரிய வைக்கிறது. வான்கோவின் ஓவியங்கள் நம் காலத்தின் சிதறடிக்கப்பட்ட கனவுகள் என்பதை, படம் பார்க்கும் பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ள முடிவதே இப்படத்தின் சிறப்பு.
வான்கோ நெதர்லாந்தில் 1853-ம் ஆண்டு ஒரு கிறிஸ்துவ போதகர் குடும்பத்தில் பிறந்தவர். வறுமையான குடும்பம். பதினைந்து வயதிலே ஆர்ட் டீலரான உறவினரிடம் வேலை செய்ய அனுப்பப்பட்டார். இருபது வயதில் லண்டனில் கமிஷன் அடிப்படையில் ஓவியங்களை வாங்கி விற்கும் பணிக்காக சென்றார். அதில் வெற்றி காண முடியவில்லை. அதிலிருந்து ஆசிரிய, தேவ ஊழியர், புத்தகக்கடையில் பணியாளர், நிலக்கரி சுரங்கப்பகுதியில் பணியாற்றிய போதகர் என்று பல்வேறு வேலைகள் செய்து யாவிலும் தோற்றுப்போனவராகவே இருந்தார்.
முடிவில் தனது சகோதரனின் விருப்பப்படியே ஓவியராவது என்று ஓவியங்களைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். புதிய உலகம் ஒன்று அவருக்கு அறிமுகமானது. பரவலாக பிரசித்தி பெற்ற ஓவியங்களைப் பார்த்து நகல் எடுக்கவும் ஓவியங்களின் அடிப்படைப் பயிற்சியை மேற்கொள்ளவும் செய்தார். இதற்காக அவர் மியூசியங்களைத் தேடிச் சென்று புகழ்பெற்ற ஓவியங்களை நேரில் பார்த்து வந்தார்.
அவருக்கு விருப்பமாக இருந்த பெண்கள் எவரும் அவரோடு வாழ்வதற்குத் தயாராகவில்லை. யூஜின், மார்க்ரெட், சிரின் என்று மூன்று பெண்கள் வேறுவேறு வயதில் அவரோடு நெருக்கமாகப் பழகியிருக்கிறார்கள். அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளும்படியாக கேட்டிருக்கிறார். ஆனால், அவர்களில் ஒருவரும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. முடிவில் ஒரு வேசையோடு பழக்கம் ஏற்பட்டு அவளுடன் குடும்பம் நடத்தத் துவங்கினார்.
தனிமையும், வாழ்விற்கு என்ன அர்த்தமிருக்கிறது என்று புரியாத வெறுமையும் அவரை மனச்சோர்விற்குள் தள்ளியது. அவர் அபிசிந்த் என்ற மதுவை மிதமிஞ்சிக் குடித்தார். புகைப்பழக்கமும் அதிகமானது. அத்தோடு வேசையோடு நெருக்கமாகப் பழகியதால் மேகநோயும் தாக்கியது. சிகிச்சை பெறுவதற்காக மருத்துவர்களிடம் தொடர்ந்து சென்று வந்தார்.
மனப்பிறழ்வு முற்றி தன்னுடைய ஒரு காதை தானே அறுத்துக் கொண்டு அதை தன்னோடு நெருக்கமாக இருந்த வேசைக்கு பரிசாகத் தந்தார் வான்கோ. அவரை தியோ மனநலக் காப்பகம் ஒன்றில் தங்கி சிகிச்சை பெறச் செய்தான். அங்கிருந்து வெளியே வந்த பிறகும் அவரது உடல்நலம் தேறவில்லை. தொடர்ந்து சிகிச்சை பெறவும் ஓவியம் வரையவும் பாரீஸின் கிராமப்புறங்களை நோக்கிச் சென்றார். அங்கும் அவரது காதல் தொடர்ந்தது. ஆனால் அதுவும் நிறைவேறாமலே துண்டிக்கப்பட்டது.
வான்கோவின் ஓவியங்களுக்கு உந்துதலாக இருந்தவை ஜப்பானிய மரபு வகை ஓவியங்கள். அவற்றை தியோவும் அவரும் மிக ஆர்வமாக சேகரித்து அதில் இயற்கை எவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை உன்னிப்பாக கற்றுக் கொண்டனர். தனது காலத்தைய புகழ்பெற்ற ஓவியர்களான பால் செசான், பிகாஸோ போல வான்கோ புகழ்பெறவில்லை. மாறாக ஒதுங்கியே வாழ்ந்து கொண்டிருந்தார்.
வான்கோவின் ஓவியங்களின் சிறப்பிற்கு முக்கிய காரணம், அவர் வர்ணங்களைக் கையாளும் விதம். மஞ்சளும் நீலமும் அவரிடம் இதுவரை கொள்ளாத மூர்க்கம் அடைந்தன. பற்றி எரியும் நெருப்பின் உக்கிரம் போல வர்ணங்கள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டன. அது போலவே மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்ற நாட்களில் அவர் வரைந்த புகழ்பெற்ற ஓவியங்கள் வானிலும் கோடுகள் நர்த்தனம் புரிகின்றன.
வான்கோவின் புகழ்பெற்ற ஓவியமான உருளைக்கிழங்கு உண்பவர்கள் என்ற ஓவியத்தில் காணப்படும் மனிதர்களின் தோற்றத்திலே துயரமும் பதட்டம் நிரம்பிய பார்வையும் காணப்படுகிறது. பாதி இருளும் ஒழுகும் வெளிச்சமும் கொண்டிருக்கும் அந்த ஓவியம் பார்வையாளர்களிடம் எண்ணிக்கையற்ற கதையைச் சொல்ல கூடியவை. அது போலவே மனநலக்காப்பகத்தில் இருந்த நாட்களில் வான்கோ வரைந்த நட்சத்திரங்கள் நிரம்பிய இரவு என்ற ஓவியத்தில் காணப்படும் நட்சத்திரங்கள் கூட மஞ்சள் படித்து போனதாகவேயிருக்கின்றன.
செயிண்ட் ரெமி மனநலக்காப்பகத்தில் வான்கோ தங்கியிருந்த நாட்களைப் பற்றியதே The Eyes of Van Gogh. அலெக்சாண்டர் பெனர்ட் இயக்கிய இந்தப் படம் வான்கோவின் தீவிரமான படைப்பாற்றலின் பின்னால் உள்ள மனக்கொந்தளிப்பை விவரிக்கிறது. வான்கோவின் ஓவியங்களைப் போலவே அடர்ந்த நிறங்களும் இருண்ட மனநிலையும் வெளிப்படும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.
வான்கோ இறந்து நூற்றாண்டுகள் கடந்து போன பிறகும் இன்றும் அதே சூரியன் அதே கோதுமை வயல் தன்னை வான்கோவை தேடியபடி ஊர்ந்து சென்று கொண்டேயிருக்கிறது. வான்கோவோ யாவர் நினைவிலும் ஒரு சூரியகாந்தி பூவைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.