நேரடியாக விஷயத்திற்கு வருவோமே!
சென்னை என்கௌன்ட்டர்!
தற்போது நடந்தேறிய என்கௌன்ட்டர் என்ற திரைக்குப்பின்னால் ஐந்து இளைஞர்களின் கோர மரணங்கள் மிகவும் அதிர்ச்சியையும் மக்களின் மனதில் பல சந்தேகங்களையும் கிளப்பிவிட்டிருக்கின்றன.
அரசு மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அந்தச் சக்திகள் எல்லாம் எப்போதும் மக்களின் நலனுக்காகவும் மற்றும் நாட்டில் எல்லாவிதத்திலும் சமூக நற்சூழல் ஏற்படுத்துவதற்காகவும் தான் இயங்க வேண்டுமே தவிர எக்காரணத்தைக் கொண்டும் மனித நேயத்திற்கும், மனித குலத்திற்கும் எதிராக செயல்படக்கூடாது, செயல்படுத்தப்படக்கூடாது.
நாளையே நமக்குப் பிடிக்காத ஒரு காவலதிகாரி, நம்மீது ஒரு அபாண்ட குற்றச்சாட்டைச் சுமத்தி ஊரறியச் செய்துவிட்டு, அதையே காரணமாக வைத்து நம்மீது ஆயுதப் பிரயோகம் செய்ய மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
"ஏ, இழிந்த இந்தியாவே! தாழ்ந்த தமிழகமே! மனித உயிர்களுக்கு, உன் குடிமக்களின் உயிருக்கு நீ கொடுக்கும் உத்தரவாதம் இதுதானா?" என்று கேட்கத் தோன்றுகிறது!
தற்போது நடந்தேறிய கொலை நாடகம் 'கொலை என்று தான் கூற வேண்டும்' -சட்டம் காவலர்களின் கையில் கோரத்தாண்டவமாடி இருக்கின்றது.
எந்த ஒரு குற்றச்செயலுக்கும் ஓர் உயிரைக் கொல்வது என்பதை நம் நாட்டுச் சட்டம் மிகக் கடைசி கட்டமாக வைத்து இருக்கின்றது.
இப்படி இருக்கையில் மிகவும் சாதாரணமாக 5 இளைஞர்களை, பிரஜைகளுக்குக் காவலாக இருக்கவேண்டிய காவலர்கள் காட்டு மிரண்டிகளைப் போல் சுட்டுத் தள்ளிருப்பது மிகவும் கண்டிக்கவேண்டியது; மட்டும் இல்லாமல் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சட்டம் விரைந்து கடும் தண்டனை அளிக்க வேண்டும்.
இது நம்நாட்டுப் பாரம்பரியத்திற்குக் கேடு விளைவிக்ககூடிய செயல் என்பதை மறுப்பதிற்கில்லை.
இத்தருணத்தில் ஊடகங்கள் / தொலைக்காட்சிகள் மற்றும் சமுக நல மனித நேய இயக்கங்கள் கண்டிப்பான முறையில், பாராபட்சம் இன்றி தங்கள் நியாயக் குரலை உயர்த்தியாக வேண்டும். எல்லாச் செயல்களையும் போல இச்செயலையும் மறக்கடிக்கச்செயும் தந்திரத்தை கைவிட்டு மனித நேயத்தை காக்க ஒருங்கிணைந்து இயங்க வேண்டும். இல்லையெனில் இப்போது நடந்த அராஜகச்செயல் மீண்டும் மீண்டும் தலைவிரித்தாடும்.
இது ஒரு மாபெரும் எச்சரிக்கை !!!!
மக்களின் காலன்களாக மாறிய காவலர்களின் மதிப்பு உயர வேண்டும் என்றால் அவர்களுடைய செயல்களின் மேல் நம் மக்களின் நம்பிக்கை வளர வேண்டும் என்று நினைத்தால், சட்டம் தன்னுடைய காரியத்தை ஒழுங்குமுறைப்படி நல்ல முறையில் ஏற்று நடத்தவேண்டும். மற்றும் ஊடகங்களும் அதற்கு உரிய உதவியைக் கடமை தவறாமல் அளிக்க வேண்டும். தவறினால் நடந்தேறிய இக்கொலைக்கு எல்லோரும் உடந்தை ஆகிவிடுவோம்.
மறக்கவேண்டாம், ஒவ்வொருவரும் அது அரசாக இருந்தாலும்சரி; அதிகாரம் தலைக்கேறிய காவலர்களாக இருந்தாலும்சரி தத்தம் செயல்களுக்குரிய பலனை அனுபவித்தே தீருவர்!