Author Topic: வளமான வாழ்க்கைக்கு இயற்கை வேளாண்மை  (Read 1290 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
நம் நாட்டின் "வேளாண்மை" என்பது நீண்ட நெடுங்காலமாக வாழ்க்கை முறையாக மதிக்கப்பட்டு வந்தது. உழவர்கள் உற்பத்தி செய்கின்ற உணவு பொருட்களைக் கொண்டு அனைத்து மக்களின் பசி போக்கி வாழ்ந்து வந்தனர். இப்படியொரு மேன்மையான பணியைச் செய்து வந்து உழவர்கள் உயர்வாக மதிக்கப்பட்டு வாழ்ந்தனர். ஆனால், 1970களில், அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி பசுமை புரட்சியாக வெடித்து உழவர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டது.
மேன்மையாக மதிக்கப்பட்டு வந்த உழவர்களின் வாழ்க்கை மதிப்பு குறையத் தொடங்கியது. நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியிலான மாற்றங்கள் பேராபத்தை உழவர்களுக்கும், சூழலுக்கும் ஏற்படுத்தியது. உணவுப் பொருட்களின் இறக்குமதியை தடுத்து நிறுத்துவதாகக் கூறிக் கொண்டு, வளர்ந்த நாடுகளில் இருந்து, கேடுவிளைவிக்க கூடிய, வேதி உரங்களையும், பூச்சிக் கொல்லி நஞ்சுகளையும் இறக்குமதி செய்தனர். இதன் விளைவாக, வளமான நமது நிலங்கள், வளம் குன்றி வேளாண்மைக்கு பயன்பாடற்ற நிலமாக மாறிவிட்டன. பூச்சிக் கொல்லி நச்சின் பயன்பாட்டால், மனிதன் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. வேளாண்மையால் விளைச்சல் அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. பூச்சிக் கொல்லி தொழிற்சாலைக்கும், உப்பு உர வணிகர்களும் பணங்குவித்துக் கொண்டனர். உழவர்களோ வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு தற்கொலை செய்து வருகின்றனர்.
இந்தியாவில் பயிரிடப்படும் நிலங்களில் பாதி அதாவது 17 கோடி ஏக்கர் நிலங்கள் அதிகப்படியான இரசாயனப் பயன்பாட்டால் உவர் நிலமாகி, விளைச்சல் தாழ்ந்துள்ளது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.கோ. நம்மாழ்வார் குறிப்பிடுகிறார்.
இந்திய மக்கள் உண்ணும் உணவு அனைத்திலும், தாய்ப்பாலிலும் கூட பூச்சிக் கொல்லி நஞ்சு மிகுந்து காணப்படுகிறது. இதன் விளைவாக புதிய நோய்கள் தோன்றுகின்றன. மருத்துவம் வணிகமாகிவிட்டது. பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் இன்று கம்பெனிகளில் கைக்குள் அடங்கிவிட்டன. பலரகங்கள் காணாமல் போய்விட்டன.
மண்ணில் உள்ள ஊட்டங்கள் மட்கும் பொருட்கள், ஆகியவை அழிந்து மண்ணின் தன்மை கெடுகின்றது. நீரும் வளமும் குறைந்த நிலத்தில் விளைபவை சத்தான தானியங்களும், அவற்றின் ரகங்களும் மறைந்துவிட்டன.
தனது நாட்டு உழவர்களுக்கும் மானியத்தை உயர்த்திக் கொடுக்கும் வளர்ந்த நாடுகள், நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் உழவர்களுக்கு வழங்கும் மானியத் தொகையை நிறுத்தச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.
வேதி உரப்பயன்பாடு, பூச்சிக் கொல்லி நஞ்சின் பயன்பாடு, சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்து வருகிறது.
நமது அடிப்படை வாழ்வாதாரமான நீர் வளம் மிகக் கடுமையாக சிரழிந்துள்ளது. நிலத்தடி நீர்வளம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. வேதி உர உற்பத்தி ஆலைகளும், நச்சு பூச்சிக் கொல்லி உற்பத்தி நிறுவனங்களும் நமது நிலத்தையும். நீரையும், கடல் மீனையும் அழித்து வருகின்றன. சத்தான உணவின்றி, பெண்களும், மிகக் கடுமையாகக் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தக் கொடுமைகளை தடுப்பதற்கு மண்ணை வளமாக்கி, சத்தான உணவு உற்பத்திக்கு அடிகோல இயற்கை வழி வேளாண்மையே மாற்றாக உள்ளது. இயற்கை வழி வேளாண்மை என்பது மண், நீர், பயிர் வளர்ப்பு என பல்வேறு கூறுகளைக் கொண்டது.
இயற்கை முறையில் எளிய உத்திகளைக் கையாளுவதன் மூலம் வெற்றிகரமாக வேளாண்மை செய்ய இயலும். பண்ணைகளில் கிடைக்கும் கழிகளை, மதிப்புமிக்க, இயற்கை இடு பொருட்களாக மாற்றி, இயற்கை வழியில் பயிர் வளர்ப்பு செய்து, வேளாண்மையில் தற்சார்பு நிலையை ஏற்படுத்த முடியும்.
தமிழகத்தைச் சார்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளும், பயிற்றுனர்களும், கீழ்கண்ட எளிய நுட்பங்களை உழவர்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.
அமுதக் கரைசல்:
இக்கரைசல் ஓர் உடனடி வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. இந்த அமுதக் கரைசலைத் தயாரிக்க 1 கிலோ அமுதக் கரைசலைத் தயாரிக்க 1 கிலோ சாணம், ஒரு தடவை மாடு பெய்யும் மூத்திரம், ஒரு கைப்பிடி வெல்லம் இவற்றை எடுத்து 10 லிட்டர் நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு நாளில் கரைசல் உருவாகிவிடும். இக்கரைசலை எடுத்து 1 லிட்டருக்கு 10 லிட்டர் என்ற அளவில் (1:10) நீருடன் சேர்த்து செடிகளுக்கு அடிக்க வேண்டும். இக் கரைசல் உடனடியாக தழை ஊட்டத்தை இலை வழியாக செடிகளுக்கு கிடைக்கச் செய்கிறது.
பஞ்ச கவ்யம்:
பசுவின் ஐந்து பொருட்களான பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகியவற்றை சேர்ந்து ஊறவைத்து செய்யும் கலவை. முதலில் சாணத்தையும் நெய்யையும் நன்கு பிசைந்து 4 நாட்கள் ஈரத்துணி போட்டு மூடி வைக்க வேண்டும். தினமும் இதை பிசைந்து கொடுத்து வர வேண்டும். பின்னர் கலவையுடன் மாட்டு சிறுநீரையும் தேவையான அளவு நீரையும் சேர்த்து மண்பானையில் ஊறவிட வேண்டும். 15 நாட்களுக்கு நாள்தோறும் 3 முறை கலக்கி வர வேண்டும். 16-ம் நாள், 15 நாள் புளித்த தயிரையும் பாலையும் இத்துடன் பனங்கருப்பட்டியையும் கலந்து பாத்திரத்தில் கரைத்து விட வேண்டும். மேலும் ஒரு வாரம் ஊறவிட வேண்டும். நாள்தோறும் 3 முறை கலக்கி வர வேண்டும். 22 நாட்களில் பஞ்ச காவ்யம் தயாராகும். இதை 35 முதல் 50 லிட்டர் நீரில் 1 லிட்டர் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நீர் பாய்ச்சும் போது வாய்க்காலில் கலந்து விடலாம். இது நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது. வளர்ச்சியை தூண்டிவிடுகிறது. பூச்சிகளை விரட்டியடிக்கிறது. பயிரில் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது.
பூச்சி விரட்டி:
ஆடாதொடை, ஆடு தின்னாபாலை, ஊமத்தை, எருக்கு, துரத்தி, காட்டாமணக்கு, எட்டி, வேம்பு, கற்றாழை, நொச்சி, துளசி, தும்பை ஆகிய மூலிகை செடிகளில் ஏதேனும் 4 வகையை வகைக்கு 2 கிலோ வீதம் எடுத்து, துண்டு துண்டாக வெட்டிப் போட்டு இடித்து ஒரு மண்பானையில் போட்டு, அது பானையின் கழுத்து வரை மூழ்கும் படி மாட்டு மூத்திரத்தை ஊற்றி அந்த பானையை மண்ணுக்குள் கழுத்து வரை இருக்கும் படி புதைத்து விட வேண்டும். மேலே அதை மூடி வைத்து விட வேண்டும். 10 நாட்கள் கழித்து 1 லிட்டர் கரைசலும் 10 லிட்டர் தண்ணீரும் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் பூச்சிகள் எல்லாம் போய் விடும். பயிர்கள் செழித்து வளரும்.
மண் புழு உரம்:
மண் புழுக்கள் நிலத்தின் குடல்கள். இவை மண்ணை உழுது கொண்டே இருக்கின்றன. எனவே மண் பொல பொலப்பாக இருக்கிறது. ஆகவே நிலம் காற்றோட்டமும், நீர் பிடிப்புத் தன்மையும் நிறைந்ததாகிறது. மண் புழுவின் வயிற்றுக்குள் செல்லும் போது பல மடங்கு சத்து கூட்டப்பட்டு வெளிவருகிறது. மண்புழு உரத்தில் தழைச்சத்து, சாம்பல்சத்து, மணிச்சத்து, போன்றவை கூடுதலாக கிடைக்கின்றன. மண் புழுக்களின் வயிற்றிற்குள் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும் விதத்தில் தகுந்த சுரப்பிகள் சுரக்கின்றன. எனவே நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பெருக்கத்திற்கு மண்புழு உதவுகிறது. செடிகளுக்கும், பயிர்களுக்கும் தேவையான 16 வகையான சத்துக்களை மண்புழுக்கள் தருகின்றன.
முதலில் ஒற்றை செங்கற்களால் ஒரு நீண்ட சதுரம் அமைத்துக் கொள்ள வேண்டும். காலியான இளநீர் காய்களை அதற்குள்ளே கொட்டி பரப்ப வேண்டும். அதன் மேல் அரை அடி உயரத்திற்கு வயிக்கோல் பரப்ப வேண்டும். அதன் மீது சாணியை தெளித்து மேலே மக்கிய குப்பை எருவை போட வேண்டும். இதை ஒன்றன் மேல் ஒன்றாக 4 அடி அல்லது 5 அடி உயரம் வரை செய்து கொள்ள வேண்டும். பிறகு மக்கிய கழிவுக்குள்ளே மண் புழுக்களை விட வேண்டும். மண் புழுவை விட்ட பிறகு ஒரு பழைய சாக்கை தண்ணீர் தெளித்து மூடுவதுப் போல் வைத்து தென்னை ஓலைகள் போட்டு மூடி விட வேண்டும். செங்கல் வைத்துள்ள பகுதியை சுற்றி மஞ்சள், மிளகாய்தூள் கலந்து தூவி விட வேண்டும். இப்படித் தயாரித்த மண் புழு உரத்தை பயிர்களுக்குப் போட்டால் பயிர்கள் செழிப்பாக வளரும் மண் வளமாக மாறும்.
பல பயிர் சாகுபடி:
நமது நிலத்தின் வளம் கெட்டுவிட்டது. அதை திரும்ப வளமாக்க வேண்டும். அதற்கு தான் இந்த பல பயிர் சாகுபடி. இதற்கு நாம் 5 வகையான பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். தானிய வகைகள் என்றுப் பார்த்தால் சோளம் 500 கிராம், கம்பு 100 கிராம், திணை 200 கிராம், சாமை 250 கிராம், வரகு 300 கிராம், குதிரைவாலி 250 கிராம், பனிவரகு 250 கிராம் இந்த தானிய வகைகளில் ஏதேனும் நான்கு பயிர் வகைகளில் பாசிப்பயிறு 2 கிலோ, துவரை 1 கிலோ, உளுந்து 2 கிலோ, கொள்ளு 1 கிலோ, தட்டை பயிறு 2 கிலோ இதில் ஏதாவது நான்கு எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை 2 கிலோ, ஆமணக்கு 3 கிலோ, சூரியகாந்தி 1 கிலோ, சோயா 1 கிலோ அதில் ஏதாவது நான்கு வாசனைப் பொருட்களில் சோம்பு 100 கிராம், கடுகு 100 கிராம், வெந்தயம் 100 கிராம், மல்லி 1 கிலோ, உரச் செடிகளில் சணப்பு 2 கிலோ, தக்கைப்பூண்டு 1 கிலோ, கொலுஞ்சி 1 கிலோ, அகத்தி 1 கிலோ, இதில் ஏதேனும் நான்கு.
இவைகளில் ஏக்கருக்கு 20 கிலோ கிராம் விதை தேவைப்படும். இந்த 20 வகை விதைகளையும், பயிர் சாகுபடிக்கு முன்பே விதைத்து 60 நாட்களுக்கு பின் மடித்துப் போட்டு உழுது விட வேண்டும். எப்படிப்பட்ட மண்ணாக இருந்தாலும் மண் வளமாக மாறிவிடும். எதைப் போட்டு பயிர் செய்தாலும் பயிர் செழிப்பாகிவிடும்.
கியூபா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியான மாற்றங்கள், குறிப்பாக, நிலச்சிர்சிருத்தம், உழவர்களுக்கான இயற்கை வேளாண்மை களப்பயிற்சி, வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான விலை நிர்ணயம் போன்றவை வேளாண்மையை நிலைப்புத் தன்மையுடையதாக மாற்றி வெற்றியடையச் செய்துள்ளது. தமிழகத்தில் இங்கொன்றும், அங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்டு வரும், இயற்கை வேளாண்மை முறையானது, அனைத்து உழவர்களாலும் பின்பற்றப்படும் போது உழவர்களின் வாழ்வு சிறக்கும். இதன் மூலம் நிலைத்த வளர்ச்சியை எட்ட முடியும்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்