அலைகள்
என்ன பேசக்கூடும்…
கடல் கடந்த
கணவனின்
கவலை ஓரலை…
துணை பிரிந்த
மனைவியின்
துயரம் ஒரு
பேரலை…
பலரின்
வாழ்வுக் கடலில்
இந்த அலைகள்
ஓய்வதே இல்லை…
இளமைக் கற்பூரம்…
அதில் எரிவதோ
வறுமை நெருப்பு…
முன்னதாய்
முடிந்த
சகோதரிகளின்
திருமணம்……
பின்னர் நடந்த
சடங்குச் சுரண்டல்கள்…
இளமையின் விளிம்பில்
இவனது திருமணம்
எல்லாம்
கடனைக் கடலாக்க…
கடல் தாண்ட வேண்டிய
நிர்ப்பந்தம்…
பாலைநிலத் தீக்கொடுமை
அங்கே தன்
மழலைச் சொல்
கேட்டறியா மாக்கொடுமை
பிள்ளை சுமக்கும்
கைகளில்
கல்லைச் சுமக்கும்
கட்டட வேலை…
இருபது நாள் விடுமுறையில்
இரண்டாண்டை வாழ்வது…
பல்லாயிரம் பேர் வாங்கிய
வரமா? சாபமா?
விசா பறவைகளே…!
உங்களுக்கு
வீடு என்ன
வேடந்தாங்கலா…?
ஆடம்பரத் திருமணங்கள்…
வரவுக்கு மீறிய வாழ்க்கை…
முடங்க வைக்கும் சடங்குகள்…
இவையாவும்…
உங்கள்
வாழ்வை எரிக்கும்
தீப்பந்தங்கள்…
உங்களை
நித்தியக் கைதியாக்கும்
நிர்ப்பந்தங்கள்…
மனதைக் கடலாக்கும்
மார்க்கம் தேடுங்கள்…
பந்தங்களை அங்கே
அணையுங்கள்…
வாழ்க்கையில்…!
எல்லாம் சம்பாதிக்கிறீர்கள்
வாழ்க்கையை…?
எப்போது சம்பாதிப்பீர்கள்?