தந்தியறுந்தும் சந்தம் தரும் என் வீணை..
தவறி விழ நொந்து போனேன்..
அந்தி வந்தும் அண்ணாந்து பார்க்கவில்லை
அரவணைக்குந் தூரத்தில் நானும் இல்லை
சிக்கலுக்குள் சிக்கிக்கொண்ட என் சுரங்கள்
சிதையாமல் நெஞ்சிலைணைத்தேன்.. சிறிதாய்
சிவந்த என் கன்னங்களை உராய்ந்து பார்த்தேன்
சினத்தைச் சிதைத்துப் பார்த்தன்..
முக்காலமுணர்ந்த முறுகல் முட்டி மோத
முதுகடைந்த தென்றலை இழுத்துப் பார்த்தேன்
முரண்கொண்ட முகங்கள் முன் நின்று சிரிக்க
முன் பின் நிலையுணர்ந்து அடங்கிப் போனேன்
விட்டதும் விடாததும் வினையாகிப் போன பின்னும்
வித்துவங்கொண்டதனை விலக்கிப் பார்த்தேன்
வினாக்களும் வினைகளும் விரல் கோர்த்து நிற்க
விதந்தும் மறந்தும் மழுப்பியும் பார்த்தேன்
பொல்லாக் கோணம் பின் பொறுமையாய்ச் சொன்னது
பொருதிக்கொள்
பொருந்துவதிணைத்துப் பெருகிக்கொள் !
எல்லாக் கதையும் இது தானா என்ற மனம்
எட்டித்தட்டிப் பார்த்தது.. அற்புதம்
எதிரொலி தந்ததந்தத் தந்தியறுந்த வீணை !