நீலக் கடலில்
துயில் எழுந்த கதிரவனைப் பார்த்து
பனித்துளியில் குளித்த புல்லினம்
முகம் துடைத்துக் கொண்டது
இரவெல்லாம் காத்திருந்து
இளங்காலைப் பொழுதினிலே
இரைதேடச்
சென்றது பறவைக் கூட்டம்
விடியற்காலைப் பொழுதில்
விடியலுக்குக் காத்திருந்து
தூங்கும் மனிதனை
துயில் எழுப்பியது சேவல்
எழுந்த மனிதன்
வீழ்ந்து கிடக்கிறான்
மீண்டும் படுக்கையில்.....
அக்றிணை
உயிர் கூட
அதன் கடமையை செய்கிறது
உயர்திணை மனிதனோ
உறங்குகிறான்
நிஜத்தை தொலைத்து விட்டு
கனவினில்
கரைந்து போனவனுக்கு
இரவென பகலென்ன
இரண்டும் ஒன்று தான்
விழித்தெழாதவரை
விடியலில்லை