Author Topic: ~ தினந்தோறும் ஆரோக்கியம்! அசத்தல் குடும்பத்துக்கு 60 டிப்ஸ் !! ~  (Read 921 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/






நம் இந்தியப் பண்பாட்டை உலகம் மதிப்பதற்கான காரணங்களில் பிரதானமானது நமது குடும்ப அமைப்பு. வீடு என்பது சுவர்களால் ஆனது அல்ல. நமது உணர்வுகளால் ஆனது. நிற்பதற்கு நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்த நவீன வாழ்க்கைமுறை நம் குடும்ப அமைப்பைக் கொஞ்சம் அசைத்துப்பார்த்திருப்பது என்னவோ நிஜம்தான். ஆனால், அழகான ஆரோக்கியமான குடும்பம் என்பது நடைமுறை சாத்தியமானதே. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?மனநல மருத்துவர் அசோகன், குழந்தைகள் மனநல மருத்துவர் பி.பி.கண்ணன், முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராஜன், பிசியோதெரப்பிஸ்ட் விஸ்வநாதன், டயட்டீஷியன் குந்தளா ரவி ஆகியோர் தரும் டிப்ஸ்கள் இங்கே...

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உடற்பயிற்சி

ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீண்ட நேரம் அமர்ந்தே வேலை பார்ப்பதால், உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துவிட்டது. இதைத் தவிர்க்க...
1 தினமும் காலை குறைந்தது 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள். இயற்கையான காற்றை சுவாசித்தபடி செல்லும்போது, மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. எடை சீராக இருக்கும். நோய்களும் அண்டாது. உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கும்.
2 நடைப்பயிற்சிக்குப் பின், தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் செய்ய வேண்டும். எடுத்ததும் கடினமான பயிற்சிகளைச் செய்யக் கூடாது. எளிய வார்ம் அப் பயிற்சிகளுடன் தொடங்க வேண்டும். அவரவர் உடல் நலம், வயது, பாலினம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு, குடும்ப மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகரிடம் உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் பெற வேண்டும்.



3 குழந்தைகள், தசையை உறுதிப்படுத்தும் எடை பயிற்சிகளைச் செய்யக் கூடாது. பெரியவர்கள், குழந்தைகள் என அவரவர்கானப் பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
4 குழந்தைகளைப் பொறுத்தவரை பிரதானமான உடற்பயிற்சி என்பது விளையாட்டுதான். குழந்தைகளை ஓடியாடி விளையாட விடுங்கள்.
5நீச்சல், ஸ்கேட்டிங், டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற தனி விளையாட்டுகளிலும், கால்பந்து, கூடைப்பந்து போன்ற அணி விளையாட்டுகளிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு எந்த விளையாட்டு பிடிக்கிறதெனக் கண்டறிந்து, அதில் அவர்கள் பிரத்யேகக் கவனம் செலுத்த ஊக்குவியுங்கள். 
6  முதியவர்கள் அன்றாடம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. ஒரே நேரத்தில் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றால், பத்து பத்து நிமிடங்களாகப் பிரித்துச் செய்யலாம்.
7 நடைப்பயிற்சி செய்யும்போது, மிதமான வேகத்தில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதாவது, முதல் 5-10 நிமிடங்களுக்கு மிதமான வேகம். கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்து அடுத்த 20 நிமிடங்களுக்கு அதிவேகம். பின்னர் 5-10 நிமிடங்களுக்கு வேகத்தைப் படிப்படியாகக் குறைத்து இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டும்.



8 நடைப்பயிற்சிக்கு என பிரத்யேகமான காலணி களை உபயோகியுங்கள். இதனால் மூட்டுத் தேய்மானம் கட்டுப்படுத்தப்படும். குதிகால் வலி வராது.
9தசை இழுப்புப் பயிற்சிகளான பாதம் தொடுதல், கைகளை உயர்த்துதல், மணிக்கட்டைச் சுழற்றுதல், குதிகால் சுழற்றுதல், முட்டியை மடக்குதல், கழுத்து அசைவுகள் போன்றவற்றை  தினமும் 5 முறை செய்யலாம்.
10 பெரியவர்கள், பேட்மிண்டன், டென்னிஸ், கிரிக்கெட் என ஏதாவது ஒரு விளையாட்டில் நேரம் கிடைக்கும்போது ஈடுபடலாம். இது உங்களை ஃபிட்டாக வைத்திருக்க உதவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உணவு

எண் சாண் உடம்புக்கு வயிறும் பிரதானம்தான். நாக்குக்கு கீழே செல்வதைப் பற்றி நமக்கென்ன கவலை என்று இருப்பது, நோய்களை ரத்தினக் கம்பளமிட்டு வரவேற்பதற்குச் சமம். நோய்களுக்கு நோ என்ட்ரி சொல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் அவசியம். ஆரோக்கியமான குடும்பங்கள் சமையலறையில்தான் உருவாகின்றன.
1 சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். சமச்சீரான உணவு என்பது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அடங்கியது. எனவே, உணவைக் காய்கறி, கீரை, அரிசி அல்லது கோதுமை என அனைத்தும் உள்ளதாகத்  தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
2 செயற்கையான பழரச பானங்கள், குளிர்பானங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகள், அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.



3 மூன்று வேளை உண்ணாமல் உணவை ஆறு வேளையாகப் பிரித்துச் சாப்பிடுவது நல்லது. மூன்று வேளை உண்ணுவதாக இருந்தால், நான்கு மணி நேர இடைவேளையில் சாப்பிட வேண்டும். காலை உணவை அதிகமாகவும், மதியம் மிதமாகவும் இரவு குறைவாகவும் உட்கொள்ள வேண்டும்.
4 காலை மட்டும் அல்ல, எந்த வேளை உணவையும் எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம். காலை, மதியம், இரவு குறித்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
5 காலை நான்கு இட்லிகள், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாம்பார், ஒரு டம்ளர் பால் அருந்தலாம். காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் முன்பு,  ஏதாவது ஒரு பழத்தை ஜூஸாகக் குடிக்காமல் அப்படியே மென்று சாப்பிட வேண்டும். அல்லது ஃபுரூட் சாலட்டாகச் சாப்பிட வேண்டும். இதனால், தாடை தசைக்கள் வலுவாகும். பழங்களின் நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.
6 மதியம் அளவான சாப்பாட்டுடன் காய்கறிகள் நிறைய சேர்க்கப்பட்ட சாம்பார், கீரை, ரசம், தயிர் எனச் சாப்பிட வேண்டும்.
7 மாலை 4 மணி அளவில் முளைக்கட்டிய பயறை, வேகவைத்துச் சாப்பிடலாம். இரவு அளவாகச் சாப்பிடுவது நல்லது. இதனால், அஜீரணம், தூக்கம் கெடுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படாது. உடலும் தேவையற்ற கலோரி சேர்வதால் பருமனாகாமல் இருக்கும். இரவில் படுக்கப்போகும் முன்பு பால் அருந்த வேண்டும்.
8 டீ, காபி போன்றவற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும். அதாவது, காலை காபி என்றால் மாலை டீ என்றோ அல்லது காலை மாலை இருவேளையும் ஏதேனும் ஒன்றை மட்டுமோ சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிடுவது, அந்தப் பழக்கத்துக்கு நம்மை அடிமையாக்கி நம் உணவுப்பழக்கத்தைச் சீர்குலைக்கும்.
9 குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை என்றால், வேறு வேறு வடிவங்களில் உணவுகளை செய்து தர வேண்டும். முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டாம். இதனால், பிற்காலத்தில் அவர்கள் அந்த உணவை உண்ணும் பழக்கம் இல்லாதவர்களாக  மாறிவிட வாய்ப்பு உண்டு.
10 தினமும் ஒரு டீஸ்பூன் நட்ஸ் வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி என அனைத்தும் கலந்த நட்ஸில் ஒரு டீஸ்பூன் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான சத்துக்கள் சேர்த்துப் பலத்தைக் கூட்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வீடு

வீடு என்ற சொல்லுக்கு சொர்க்கம் என்றோர் பொருள் உண்டு. நம் வீட்டை சொர்க்கம் போன்று வைத்திருப்பது நமது கைகளில்தான் உள்ளது. கொஞ்சம் சிரத்தை எடுத்துச் சில செயல்களைச் செய்தாலே, நமது வீடு நம்மை மட்டுமல்ல, வீட்டுக்கு வருபவர்களையும் பரவசப்படுத்தும் இனிமையான இடமாக மாறும்.
1வீட்டின் அமைப்பை நல்ல ஆரோக்கியமான உணர்வுகளைத் தூண்டும் வண்ணங்களால் ஆனதாக மாற்றுங்கள். வண்ணங்களுக்கும் நம் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கண்களை உறுத்தாத, இயல்பான வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அடிக்கலாம். பொதுவாக, சமையலறை மற்றும் ஹால் மஞ்சள் நிறத்திலும் படுக்கை அறை பச்சை நிறத்திலும் இருப்பது நல்லது. ஆனால், நிறங்கள் தனிப்பட்ட ரசனை மற்றும் மன அமைப்புக்கு ஏற்ப மாறுபடுபவை. எனவே, உங்களுக்குப் பிடித்த அல்லது உங்களுக்கு அமைதி தரக்கூடிய நிறங்களையே தேர்ந்தெடுத்து அடியுங்கள்.



2 பகலில் மின்சார செலவில்லாமல் காற்றும் ஒளியும் வரும்படி கட்டப்பட்டிருப்பதே நல்ல வீடு என்று சொல்வார்கள். இன்றைய நகர நெருக்கடியில் அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், வீட்டில் எப்போதும் வெளிச்சமும் காற்றும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஹாலிலும் சமையலறையிலும் வெளிச்சமான ஃப்ளோரோசன்ட் பல்புகளையும், படுக்கை அறையில் சற்றே ஒளி குறைவான விளக்குகளையும் பயன்படுத்தலாம். இரவு தூங்கும்போது, நீல நிற ஒளிதரும் ஜீரோ வாட்ஸ் பல்பைப் பயன்படுத்துவது நல்லது. தேவையான அளவு காற்றும் வெளிச்சமும் நம்மை எப்போதும் உற்சாகமான மனநிலையில் வைத்திருப்பவை.
3 நம் அழகுணர்வின், நேர்த்தியின் வெளிப்பாடு நம் வீடுதான். எனவே அதை எப்போதும் சுத்தமாகவும் அலங்காரமாகவும் வைத்திருங்கள். அலங்காரம் என்பது வேறு, ஆடம்பரம் என்பது வேறு. பொருட்களை நேர்த்தியாகவும், சுத்தமாகவும் அந்தந்த இடத்தில் வைத்திருந்தாலே வீடு பளிச்சென அழகாகத் தோன்றும். வாய்ப்பு இருந்தால் சித்திரங்கள், கைவினைப்பொருட்கள், கலை வேலைப்பாடுகள் கொண்டு நம் ரசனைக்கேற்ப வீட்டைஅலங்கரிக்கலாம்.
4 வீட்டின் முன்புறமோ பின்புறமோ தோட்டம் அமைத்து, அன்றாட உணவுக்குப் பயன்படும் வாழை, தென்னை, கொய்யா, பப்பாளி, முருங்கை போன்ற மரங்களையும் வீட்டின் முன்புறம் குளிச்சியான காற்று கிடைக்க வேப்பமரமும் வளர்க்கலாம்.  அடுக்குமாடிக் கட்டடம் எனில், உரிமையாளர்கள் அனைவரும் சேர்ந்து, மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து, அன்றாடம் தேவையான காய்கறிகளைப் பயிரிட்டு வளர்க்கலாம். இயற்கை விவசாயமுறை என்பதால், சத்துக்கள் சேரும். செலவுகள் மிச்சமாகும். தோட்ட வேலையில் ஈடுபடும்போது மனதுக்கு இதமானதாக இருக்கும். கலோரிகளும் செலவாகும்.



5 வீட்டை, பசுமை வீடாக மாற்றுவது உங்களை உற்சாகமாகவும், மனநிறைவோடும் வைத்திருக்கும். வீட்டுக்குள் ஆங்காங்கே மணி பிளான்ட், பூச்செடிகள் போன்ற குறைந்த வெளிச்சத்தில் வளரும் தாவரங்களைவைக்கலாம். அதிகத் தண்ணீரும் தேவைப்படாது. இயற்கைக்கும் நமக்குமான நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க... ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும்.
6 வீட்டில் ஒரு முதலுதவிப் பெட்டி கட்டாயம் இருக்கட்டும். சிறுசிறு காயங்களுக்குக் கட்டுப்போட தேவையான பருத்தி பஞ்சு, பேண்டேஜ், டெட்டால் போன்ற கிருமிநாசினி, ஆயின்மென்ட், சாதாரணத் தலைவலி, காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை, தீக்காயத்துக்கு சில்வர் சல்ஃபாடையாசின் ஆயின்மென்ட், வயிற்று வலிக்கு டைசைக்லமின், டிரோட்டோவெரின் உள்ள வலி நிவாரணிகள் போன்றவை அதில் இருக்க வேண்டும். முதலுதவிப் பெட்டியில் உள்ள மருந்துகளின் காலாவதித் தேதிகளைக் கவனத்தில்கொண்டு மாற்றிக்கொண்டே இருப்பது மிகவும் முக்கியம்.
7 ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிறிய அலமாரியிலாவது கொஞ்சம் புத்தகங்களை வைத்திருங்கள். உங்கள் மனதுக்குப் பிடித்த உங்களின் தொழிலுக்குப் பயன்படக்கூடிய, உங்கள் குழந்தைகளின் நலனுக்கு வித்தாகும் புத்தகங்களை வாங்கி அடுக்குங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரை மணி நேரம், புத்தகம் படிப்பது நம் மனதைப் புத்துணர்ச்சியாக்கும். நம் குழந்தைகளுக்கும் வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கத் தூண்டுதலாய் இருக்கும்.



8 வீட்டின் தட்பவெப்ப நிலைக்கும் நம் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உங்கள் வீட்டின் நிலவியல் அமைப்புக்கு ஏற்ற சீதோஷ்ணம் வீட்டுக்குள்ளும் இருப்பது நம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. ஏ.சி இருக்கிறது என்பதால் எந்த நேரமும் ஏ.சியிலேயே இருக்க வேண்டும் என்று இல்லை. கோடை காலத்தில் ஏ.சியைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை. மழைக் காலத்திலும் அதைப் பயன்படுத்துவது மின்சார செலவை மட்டுமின்றி உங்கள்  மருத்துவச் செலவையும் கூட்டி ஆரோக்கியத்துக்கு விலை வைத்துவிடக்கூடும்.
9 அண்டை வீட்டாருடன் நல்ல சுமுகமான தொடர்பில் இருங்கள். இது இருவருக்குமே பரஸ்பரம் மிகவும் பயனுடையது. இதனால், உங்கள் வெளியுலகத் தொடர்பு அதிகரிக்கும். சுற்றிலும் நடக்கும் விஷயங்கள் உங்கள் காதுக்கு வரும். நீங்கள் வீட்டில் இல்லாதபோது, வீட்டின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வு ஓரளவு நீங்கும். குழந்தைகளை அண்டை அயலாருடன் பழக அனுமதிப்பது குற்றம் அல்ல. குழந்தைகள்தான் நல்லெண்ணத் தூதுவர்கள். அவர்கள்தான், அக்கம்பக்க வீட்டாருடன் சுமுகமான சூழலை விரைவில் ஏற்படுத்துவார்கள். இதனால், குழந்தைகளுக்கும் வெளியுலகத் தொடர்பு கிடைக்கும்.
10 படுக்கையறையில் மெத்தை, தலையணைகள் மிகவும் கடினமானதாகவும் இல்லாமல், மிகவும் லேசானதாகவும் இல்லாமல், ஓரளவு இலகுவானதாக, பருத்திப்பஞ்சால் ஆனதாக இருப்பது நல்லது. இதனால் முதுகுவலி, கழுத்துவலி இருக்காது. இடை விழிப்பற்ற சீரான ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
« Last Edit: August 10, 2015, 07:30:21 PM by MysteRy »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குடும்பம்

`குடும்பம்தான் சமூகத்தின் சிறிய அலகு. சமூகம் என்பது ஒரு குடும்பம்' என்று சொல்வார்கள். அழகான ஆரோக்கியமான குடும்பங்களிலிருந்தான் சிறந்த மனிதர்கள் உருவாகிறார்கள். குடும்ப உறவுகளை ஆரோக்கியமாகவும், அன்னியோன்னியத்தோடும் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இது நம்மை பாதுகாப்பானவர்களாகவும் உற்சாகமானவர்களாகவும் வைத்திருக்க பெரிதும் உதவும்.
1தினமும் காலை 5 - 6 மணிக்கு எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதிகாலை எழுவது, ஒரு நாளை நன்கு திட்டமிட உதவும். மேலும், நாள் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும். குழந்தைகள் அதிகாலையில் எழுந்து படித்தால், பாடங்கள் நன்கு மனதில் பதியும். அவர்களின் நினைவாற்றல் மற்றும் சிந்தனைத்திறன் (ஐ.க்யூ) மேம்படும்.



2 தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயிற்சிகளைச் செய்யலாம். உடற்பயிற்சிகளை வீட்டில் செய்வதற்கு முன் தகுந்த நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுச் செய்வது நல்லது.
3 குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதியுங்கள். அனைவரின் விருப்பங்களையும், ரசனைகளையும், சுவையையும் நன்கு அறிந்துகொள்ளுங்கள். அன்பைப் பகிர்வது என்பது பொறுப்பெடுத்துக்கொள்வது, போதுமான சுதந்திரம் தருவது. எனவே, மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள். ஆரோக்கியமான உரையாடலைச் செய்வதற்கான குடும்ப ஜனநாயகம் எப்போதும் வீட்டில் இருக்கட்டும்.
4 தினமும், ஒருவேளை உணவையாவது குடும்பத்தில் உள்ள அனைவருடனும் சேர்ந்து உண்ணுங்கள். முடிந்தவரை தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போதுதான், ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்கள், வெறுப்புகள், தேர்வுகளை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடியும். குழந்தைகளை உணவு நேரத்தில் சுதந்திரமாக இயங்கவிடுங்கள். தங்கள் முன் உள்ளவற்றை அவர்கள் விருப்பப்படி சாப்பிடட்டும். அதே சமயம், எச்சில் விரலை சூப்பக்கூடாது. கீழே சிந்தாமல், பொறுமையாகச் சாப்பிட வேண்டும். சிந்திய பருக்கைகளை கையில் எடுத்து சாப்பிடக் கூடாது போன்ற ஆரோக்கியமான, சுத்தமான உணவுப்பழக்கங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.



5 தொலைக்காட்சி, மொபைலில் நேரம் செலவிடுவதற்குப் பதில், வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருமே சேர்ந்து அமர்ந்து மனமவிட்டுப் பேசுங்கள். உரையாடல் பாசிடிவ்வான சொற்களில் இருக்கட்டும். பொருளாதாரம் உள்ளிட்ட குடும்பத்தின் சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கட்டும்.
6குடும்ப சூழ்நிலையைப் பற்றி மட்டுமின்றி, பொதுவான விஷயங்களையும் பேசுங்கள். கலகலப்பான, நகைச்சுவைகள் நிறைந்த  உரையாடல்களை உருவாக்குங்கள். மனிதர்களைப் பற்றி பேசுவது, சம்பவங்களைப் பற்றி பேசுவது, கருத்தியல்களை (கான்செப்ட்ஸ்) பற்றி பேசுவது என உரையாடல்களை மூன்று வகைகளாகச் சொல்வார்கள். மனிதர்களை பற்றி பேசுவது சாதாரண நிலை. இதில் உரையாடல் நிகழ்வதைத் தவிர, வேறு பலன்கள் ஏதும் இல்லை. சம்பவங்களைப் பற்றி பேசுவது அதற்கு அடுத்த நிலை. இது, நமது அனுபவங்களை மற்றவர்களின் அனுபவங்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளவும், இதனால் நம்மைச்செம்மைப்படுத்திக்கொள்ளவும் உதவும். கருத்தியல்களைப் பற்றி பேசுவது மூன்றாவது நிலை. இது, நம்மைப் பற்றி மட்டுமின்றி நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களையும் இந்த சமூகத்தைப் பற்றியும் புரிந்துகொள்ள உதவும். இந்த மூன்று நிலை உரையாடல்களுமே தவிர்க்க இயலாதவை என்றாலும், உரையாடல்களை மூன்றாவது நிலை நோக்கிக்கொண்டு செல்லப் பழகுங்கள்.
7 வாரம் ஒருமுறை எங்காவது வெளியில் செல்வது, ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வது என்பதைப் போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் குடும்பத்தினருடன் இனிமையான தருணங்களை உருவாக்கி, நீங்கள் ஒரு குடும்பம் என்கிற ஐக்கிய உணர்வையும் உணர்வுபூர்வமான மனநிலையையும் உங்களுக்கு இடையே உருவாக்கும்.



8 பண்டிகை நாட்களையும் பிறந்த நாள், திருமண நாள் போன்ற வீட்டு விசேஷங்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். `வேலை இருக்கிறது வர முடியாது. நீங்களே கேக் கட் பண்ணிடுங்க, எனக்கு மீட்டிங் இருக்கு' என்று சொல்வதை இயன்றவரை தவிருங்கள். வீடும் வேலையும் நமது இரண்டு கண்கள். ஒன்றை ஒன்று பாதிக்காதவாறு கையாளுங்கள்.
9சமையல் முதல் எல்லா வீட்டு வேலைகளையும், பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று இல்லை. சமைப்பது, துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஆண்களும் உதவுதில் தவறே இல்லை. நம் வீட்டு வேலையைச் செய்வதில் நமக்கு என்ன தயக்கம் என்ற மனநிலை தேவை. வீட்டு வேலைகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். குறைந்தபட்சம் சமையல் செய்யாவிட்டாலும் சமையலுக்குத் தேவையான சிறுசிறு உதவிகளையாவது செய்துகொடுங்கள். வார இறுதிகளில் சமைப்பது, வீட்டை சுத்தமாக்குவது போன்ற வேலைகளைப் பகிர்ந்துகொள்வது கணவன் மனைவிக்கு இடையே நல்ல இணக்கத்தையும் அன்பையும் ஏற்படுத்தும்.
10 குடும்பத்துக்கு என நீங்கள் ஒதுக்கும் நேரத்தை சிறப்பான நேரமாக பயன்படுத்துங்கள் (குவாலிட்டி டைம்). எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைவிட எப்படி அந்த நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதே முக்கியம். எனவே, நீங்கள் செலவிடும் நேரம் எப்போதும், நினைவில் நிற்கும் இனிமையான தருணங்களாக, ஆரோக்கியமான தருணங்களாக இருக்கட்டும். இந்த உலகில் நாம் விட்டுச்செல்வது நம்மைப் பற்றிய நினைவுகளை மட்டும்தான். அந்த நினைவுகள் நல்ல நினைவுகளாக இருக்க நாம் செலவிடும் நேரம் சிறந்த நேரமாக இருக்க வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைகள் பராமரிப்பு

`கடவுள் மனிதன் மேல் நம்பிக்கை இழக்காததன் அடையாளம் குழந்தைகள்' என்பார் தாகூர். சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
1 இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில் இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம்.
2 இரண்டு வயது வரை குழந்தைக்குக் கொஞ்சுவதும் சீராட்டுவதும் தேவைப்படும். இரண்டரை வயது முதல் ஆறு வயது வரை நல்லது கெட்டதுகளை சொல்லித்தர வேண்டும். பிடிவாதம் அதிகம் இருக்கும் பருவம் இது என்பதால், கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துகொள்ளலாம். பொய்சொல்லும் போதும், அளவுக்கு அதிகமாகக் குறும்புத்தனம் செய்யும் போதும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். செய்த தவறை திரும்பத் திரும்பச் செய்யும் குழந்தைகளிடம் கண்டிப்பைப் படிப்படியாக அதிகரிப்பதில் தவறு இல்லை.



3 சாப்பிட மறுக்கும் குழந்தைகளைத் துரத்தி துரத்தி உண்ணவைப்பது மிகவும் தவறு. அவர்களின் உணவுகளை அவர்களுக்கு எட்டும் இடத்தில் வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். அவர்களுக்குத் தேவையானதை அவர்கள் எடுத்துச் சாப்பிடுவார்கள். வலிய போய் உணவைத் தருவது, அவர்களின் பிடிவாதக்குணத்தை அதிகரிக்கும். மேலும், குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான உணவைத் தேர்வு செய்ய ஏழு முதல் பத்து சந்தர்ப்பங்கள் தேவைப்படும் என்கிறது ஓர் ஆய்வு. எனவே, ஒரு முறை குழந்தை மறுத்த உணவை வற்புறுத்தித் தருவதைவிட, வேறு வகை உணவை அதனிடம் தரலாம். மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த உணவை வேறு வடிவிலோ ருசியிலோ மாற்றம் செய்து கொடுத்துப் பார்க்கலாம்.
4 ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுத் தேவை மாறுபடுகிறது. எனவே மற்ற குழந்தைகளோடு ஒப்பிட அதிகமாகத் தருவதோ குறைப்பதோ கூடாது. அவர்களின் பசியறிந்து ஆரோக்கியமான உணவைக் கொடுப்பது நல்லது.
5 மொட்டை மாடித் தோட்டத்தில் நீர்விடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைக் குழந்தைகளோடு சேர்ந்து செய்யுங்கள். அவர்களால் செய்ய இயன்ற வேலைகளைச் செய்ய அனுமதியுங்கள். குழந்தைகள் ஆர்வத்தோடு ஈடுபடும்போது அவர்களின் மனவலிமை அதிகரிக்கும்.
6தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, தும்மல் வந்தால் கைக்குட்டையைக்கொண்டு மூக்கை மூடுவது, போன்ற நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

7ஷூவுக்குப் பாலிஷ் போடுவது போன்ற அவர்களின் சின்னச்சின்ன வேலைகளை (Self care activity) அவர்களே செய்ய அனுமதியுங்கள். இது, எதிர்காலத்தில் அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் சொந்தக்காலில் நிற்பவர்களாகவும் மாற்றும். அவர்களின் ஆளுமைப் பண்பினை வளர்க்க உதவும்.



8 குழந்தைகள் செய்யும் சின்னச்சின்ன நல்ல செயல்களுக்கு எளிய கிஃப்ட்களைக் கொடுத்து ஊக்குவியுங்கள். இதனால் அவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள். இதுபோலவே,  அவர்கள் தவறு செய்யும்போது, தர வேண்டிய கிப்ட்களைத் தராமல் தாமதபடுத்தலாம். இது அவர்களுக்கு கண்டிப்பின் வலுவை உணர்த்தும்.
9 மார்க்கெட்டுக்கு அழைத்துச்சென்று காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன எனக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள். அவர்களுக்குப் பிடித்தமானக் காய்கறிகளை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள். இதனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை உண்ணும் பழக்கமும் ஏற்படும். சமூகத் தொடர்பும் குழந்தைக்குக் கொஞ்சம் புரியும்.
10 தினமும் படிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். நாளிதழ்களில் வரும் செய்திகளில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து அவர்கள் ஏதேனும் கேட்டால், எதிர்மறை எண்ணங்கள் தோன்றாதவாறு பாசிடிவ்வான முறையில் அதற்கு விளக்கங்கள் கொடுங்கள். இது சமூகத்தில் என்ன நடக்கிறது என அவர்கள் தெரிந்துகொள்ள உதவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முதியோர் நலன்

இரண்டாவது பால்யம் எனப்படும் முதுமையை உற்சாகமாக மாற்றுவது குடும்பத்தின் கைகளில் உள்ளது. முதியவர்கள் அனுபவஞானத்தின் விளைச்சல்கள். அவர்களை போற்றிப் பாதுகாப்பது நம் வாழ்வை அர்த்தப்படுத்துவதோடு நம்மை பக்குவமானவர்களாகவும் மாற்றும்.
1 முதியோர் எதிர்பார்ப்பது உணர்வுபூர்வமான அன்பு. தனியறை, ஏ.சி, டி.வி போன்ற வசதிகள் மட்டுமல்ல. எனவே, அன்பை, பாசத்தை சொற்களால் வெளிப்படுத்துங்கள். காலையில் செல்லும்போது, ‘சென்று வருகிறேன்’ என்று சொல்வதும், மாலையில் வந்ததும் ‘எப்படி இருக்கிறீர்கள்’ எனக் கேட்பதும் அவர்களை சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உணரவைக்கும்.
2 முதியவர்கள் அவர்களின் நண்பர்களுடன் தொடர்புகொள்ளத் தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டும். நண்பர்களுடன் அளவளாவுவதால்  தனிமையில் இருக்கிறோம் என்கிற மன அழுத்தம் குறையும்.
3வீட்டுக்கு யாராவது நண்பர்கள் வந்தால் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்.  இதனால், அவர்களுக்கு `தனிமைப்படுத்தப் படுகிறோமோ’ என்ற உணர்வு வராமல், பாதுகாப்பான உணர்வைத் தரும்.



4 பெரியவர்களை கேலி, கிண்டல் செய்யக்கூடாது. குறிப்பாக, முதுமையினால் அவர்களுக்கு ஏற்படும் இயலாமை, மறதி போன்றவற்றைக் குத்திக்காட்டியோ, பரிகசித்தோ கிண்டலாகவோ பேசக்கூடாது. இதனால் அவர்கள் மனம் புண்படும்.
5 சர்க்கரைநோய், இதய நோய், மூட்டுவலி போன்ற நோய் உள்ள முதியவர்களுக்குத் தேவையான மருந்துகளை தீர்வதற்குக் கொஞ்சம் முன்பாகவே வாங்கிவைத்திருப்பது நல்லது. முதியோருக்கு  ஃப்ளூ, டெட்டனஸ் உள்ளிட்ட நோய்த்தொற்றுத் தடுப்பூசிகளையும், நிமோனியா தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
6 முதியோருக்கான டயட், உடற்பயிற்சி, மருத்துவம் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவு, அல்ட்ரா சவுண்ட், கண்பரிசோதனை போன்றவற்றை ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். 50 வயதைக் கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை, மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம் பரிசோதனை, கர்பப்பை வாய் நோயைக் கண்டறியும் பேப்ஸ்மியர் பரிசோதனை போன்றவற்றை அவசியம் செய்துகொள்ளா வேண்டும்.



7முதியவர்களை செல்போன், கம்ப்யூட்டர் போன்ற நவீன மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இது அவர்களுக்கு அப்டேட்டட் ஆக உள்ளோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அவர்களின் தன்னம்பிக்கைக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும்.
8 குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, கடைகளுக்குச் சென்றுவருவது போன்ற சின்ன சின்ன வேலைகளை வீட்டு முதியவர்களைச் செய்யவைக்கலாம். இதனால், நாமும் இந்தக் குடும்பத்தின் ஓர் அங்கம். எனக்கும் பொறுப்புகள் இருக்கின்றன என்கிற மனநிலை அவர்களுக்கு ஏற்படும்.
9 முதியவர்களிடம் கொஞ்சம் பாக்கெட் மணி கொடுக்கலாம். அவர்களுக்கு கோயில்களுக்கோ வேறு எங்கேனும் செல்லும்போதோ செலவு செய்வதற்கும், குழந்தைகளுக்கு சிறுசிறு திண்பண்டங்கள் வாங்கித் தரவும் உதவும். இதனால், குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டிக்குமான உறவு பலப்படும்.
10 முக்கிய முடிவுகள் எடுக்கும்போது,  முதியவர்களிடம் தேவையான ஆலோசனை கேட்கலாம். அவர்களின் அனுபவம் நமக்கு உதவியாக இருக்கும். அதே சமயம், முதியவர்கள் இளையோரின் எல்லா விஷயங்களிலும் தலையிட்டு தன்னுடையக் கருத்தைச் சொல்லக் கூடாது. இது தேவையற்ற தொந்தரவாக இளையோரால் பார்க்கப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முதியோர் டயட்



அன்றாட தேவை: 2,320 கி.கலோரி முதல்  2,730 கி.கலோரி வரை. புரதம் - சுமார் 60 கிராம் புரதம். 50 கிலோ எடை இருந்தால், அவருக்கு 50 கிராம் புரதம் தேவையாக இருக்கும்
காலை 7 மணி: பால் / சத்துமாவுக் கஞ்சி / கிரீன் டீ / காபி / டீ. (முடிந்தவரை காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது நல்லது)
8 மணி:இட்லி - 4 / தோசை - 3 / பொங்கல் - 250 கிராம் / உப்புமா - 250 கிராம், (தொட்டுக்கொள்ள - புதினா, கொத்தமல்லி சட்னி வகைகள், சாம்பார்)
11 மணி: காய்கறி சூப், ஒரு ஆப்பிள்
மதியம் 1 மணி:சாதம் - 300 கிராம், பருப்பு, இரண்டுவிதமான காய்கறிகள், தயிர் - ஒரு கப், வேக வைக்கப்பட்ட கோழி இறைச்சி அல்லது மீன் - 75 கிராம், முட்டை வெள்ளைப் பகுதி மட்டும் - 75 கிராம். இனிப்பு அல்லது பழங்கள் - 25 கிராம்.
மாலை 4 மணி: கிரீன் டீ, சுண்டல் - 75 கிராம்
இரவு 8 மணி: எண்ணெய் சேர்க்காத சுக்கா ரொட்டி, பருப்பு தால் (அ) ஏதேனும் ஒரு டிஃபன் + காய்கறி சாம்பார்
எண்ணெய் மிகக் குறைந்த அளவு சேர்க்கலாம். பொரித்ததைத் தவிர்க்க வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/