Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
இங்கு ஒரு தகவல்
»
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால்! இந்த மானம்கெட்ட அரசுகள் எதற்கு?
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால்! இந்த மானம்கெட்ட அரசுகள் எதற்கு? (Read 5308 times)
Yousuf
Golden Member
Posts: 3159
Total likes: 46
Total likes: 46
Karma: +0/-0
Gender:
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால்! இந்த மானம்கெட்ட அரசுகள் எதற்கு?
«
on:
December 25, 2011, 02:35:45 PM »
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால்! இந்த மானம்கெட்ட அரசுகள் எதற்கு?
தன்மகன் போரிலே புறமுதுகில் அம்பு தைத்து மாண்டு போனான் என்று கேள்விப்பட்டதும் அந்த கோழைக்கு இந்த மார்புகளா பாலூட்டியது’ என்று சினம் கொண்டு தன் மார்புகளை அறுத்தெரிந்தாளாம் ஒரு புறநானூற்றுத் தாய். இலக்கியத்தில் பதிவான அந்த வீரத்தாயின் வரிசையில் உண்மையாகவே ஒரு தாய் இருக்கிறாள். நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டி என்ற கிராமத்தில் கூலி வேலைச் செய்து பிழைப்பை ஓட்டும் ஒரு பாவப்பட்ட கூலி ஏழை சந்திராதான் அந்த தாய். 45 வயதான இந்த தாய்க்கு 16 வயதில் ஒரு மகன்.
‘தன் மகன் ஒரு திருடன்’ என்று கேள்விப்பட்டவுடன் தூக்கு மாட்டிக்கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் அந்த உத்தமி. அந்தத் தாய் செய்த தவறு ஒன்றே ஒன்று தான். கூலி வேலை செய்து சம்பாதித்த அற்பத் தொகையில் தன் மகனை 11ஆம் வகுப்பு வரை படிக்க வைக்கத்தான் முடிந்தது. வயிறார அவனுக்கு இரண்டு வேளை சோறு போட முடியவில்லை. வாழ வேண்டிய வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்த அந்த அனாதைத் தாயால் உழைக்க முடிந்தது அவ்வளவுதான்.
அவனுக்கு சொந்த பந்தங்கள் இருந்தும் அந்தப் பாலகனின் பசியால் வாடிய முகத்தைப் பார்த்தும் கூட ஒருவாய் சோறு போட யாரும் முன் வரவில்லை. அடுத்தவர் சாப்பிடும் போது வாயையும், கையையும் பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி, இறுதியாக முடிவெடுத்தான், திருடித்தின்றாவது பசியாற்றுவதென்று. ‘பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’- என்ற பழமொழி உண்மையாயிற்று. எச்சில் கையோடு கைது செய்தது சேந்தமங்கலம் போலீசு. சுற்றி வளைத்துப் பிடித்துத் தந்தது சோத்துக்கு சொந்தக்காரர் கூட அல்ல, அக்கம் பக்கத்து வீட்டு ‘அரிச்சந்திரர்கள்’ தான்.
இந்தச் சமூக விரோத பெருங்குற்றத்திற்கு ‘யார் காரணம்?! அவனா இல்லை அவனையும், அம்மாவையும் அனாதையாக விட்டு விட்டுச் செத்துப் போனாரே... அவனுடைய அப்பா, அவரா?! இல்லை, பச்சப்புள்ளையைப் பார்க்க வைத்துத் தின்றார்களே அவனுடைய சொந்த பந்தங்கள்.. அவர்களா?! இல்லை.... ’எப்படியாவது சாந்துச்சட்டி சுமந்து தன் மகனை காலேஜ் வரைக்கும் படிக்க வச்சா, ஒரு நல்ல வேலை கெடச்சி, மகன் கஞ்சி குடிச்சி பொழச்சிக்குவான்’ என்று அந்தக் கனவிலேயே உடைந்து போன உடலோடும், வாழ்க்கையோடும் சித்தாள் வேலைக்குப் போய் 11-ஆம் வகுப்பு வரைப் படிக்க வைத்தாளே, அந்த மானமுள்ளத் தாயின் தவறா?!’ இப்படித்தானே நீங்களும் யோசிப்பீர்கள்?
நியாய விலைக் கடைகளில் கலைஞர் சிரிக்கிறார். "ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி"! மகிழ்ச்சி. அந்த ஒத்த ரூபாய் அரிசிகூட கிடைக்காமல் ஏன் அந்த ‘இளவரசன்’ சோத்தைத் திருடினான்? இதற்கு ‘நியாயமாக’ பதில் சொல்ல கலைஞரால் முடியுமா?! இல்லை பூச்சியும், எலியும் தின்றால் கூட அந்த அரிசியை ஏழைகளுக்குத் தரமாட்டேனென்று அடம் பிடிக்கிறாரே பிரதமர்! அவர் பதில் சொல்வாரா?! கலைஞர் வேண்டுமானால் ‘தம்பிக்கு கடிதம்’ எழுதி தப்பித்துக் கொள்ளலாம். இந்தக் கொடுமைக்கு அவரது குடும்பமே ஒன்று சேர்ந்தால் கூட பதில் சொல்ல முடியாது. ஒரு வேளை கடந்த நவம்பர் 17ஆம் தேதி தன் பேரன் துரை தயாநிதிக்கு நடந்த திருமணத்தில் ரேசன் அரிசி சோத்தை வேகவத்து விருந்து போட்டிருந்தால், இதற்கு பதில் சொல்லத் தகுதியிருந்திருக்கும் கலைஞருக்கு. ஆனால் ‘ஊருக்குத்தான் ஒத்த ரூபாய் அரிசி’!
சின்ன வயதிலேயே தகப்பனை எடுத்து விழுங்கிவிட்டு, வீட்டுக்காரர்கள் வந்து விடுவார்களோ என்ற பதற்றத்தில் கவளம், கவளமாக திருட்டுச் சோத்தை கண்ணில் நீர்வர விழுங்கி விட்டு, கடைசியில் ஒரே ஆதராவாக இருந்த தாயையும் எடுத்து விழுங்கி விட்டு, இப்போது சேலம் சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான் இளவரசன். சட்டம் தன் கடமையைச் செய்கிறது. இருக்கட்டும், நல்லது.
சோறு திருடினான் என்பதைக்கூட அந்த தாயால் தாங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி அழுத்த தன் உயிரை துறந்திருக்கிறாள். ஆனால் இந்த மான உணர்ச்சி ஏழைகளுக்கு மட்டும்தான் சொந்தமோ? ஸ்பெக்ட்ரம் ஊழலின் அளவு ஒத்தை ரூபா அரிச போன்றது அல்ல. ஒன்னே முக்கால் இலட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்று கூட அந்த ஏழைகள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த பூஜியங்களை அறிந்தவர்களுக்கும், அபகரித்தவர்களுக்கும் மான உணர்ச்சி கிஞ்சித்தும் இல்லையா? கலைஞர் குடும்பம், டாட குடும்பம், மந்திரிகள், அதிகாரிகள், முதலாளிகள் எங்கும் யாராவது ஒருவர் கூட தற்கொலை செய்ய வில்லையே? சோறு திருடுவதுதான் மானக்குறைவா, இலட்சம் கோடிகளில் திருடினால் அது பெருமையா?
காமன்வெல்த் போட்டிக்கு ஏற்பாடு செய்ததில், கேவலம் மலம் துடைக்கும் பேப்பரில்கூட கமிஷன் வச்சிகாசு திருடினாரே காங்கிராஸ் கல்மாடி.... அவருடைய வீட்டுப் பெண்கள் யாராவது ரோசத்தோடு தூக்கு மாட்டிக் கொண்டிருக்கலாமே..... ஏன் செய்யவில்லை? நம்ம நாட்டுல தேசபக்திக்கு மட்டும் குறைச்சலே இல்லை. நடிகர் விஜயகாந்தை, அர்ஜுனையே விஞ்சி விடுவார்கள். ‘வீரமரணம்’ அடைந்த கார்கில் வீரர்களின் விதவை மனைவி மார்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுத்ததில் தன்னுடைய மாமியார், மைத்துனி, மைத்துனர் ஆகியோருக்கும் ‘வீட்டு வசதி’ செய்து கொடுத்தாரே.... மகாராஷ்டிரா முதல்வர் அசோக்சவான்... அவருடைய களவாணித்தனம் தெரிந்து அவருடைய வீட்டுப் பெண்களோ, ஆண்களோ இல்லை அவரோ ஏன் ஒருவர் கூட ஏன் தூக்கு மாட்டிக் கொள்ளத் துணிய வில்லை!!
இதற்கெல்லாம் மன்மோகனும், சிதம்பரமும் பதில் சொல்வார்களா? பதில் சொல்ல பிரதமருக்கு ஏது நேரம்! 10 ஆயிரம் கோடி செலவு செய்து அம்பானி கட்டியிருக்கிற ‘அன்டிலியா’ வீட்டுக்கு பால்காய்ச்சவே நேரம் போதவில்லை. ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தன் பிள்ளைகளுக்கு நோகாமல் எடுத்துத் தந்தாரே கர்நாடகா முதல்வர் எடியூரப்பா.... அவர் வீட்டில் யாராவது தேசப்பற்றோடு ஏன் தூக்கு மாட்டிக்கொள்ளவில்லை?!
தோல்வி மனப்பான்மையால் தற்கொலை செய்துக்கொள்வதில் எமக்கு உடன்பாடில்லை என்பது வேறு விசயம். ஆனால் அந்தத் தாயின் தன்மான உணர்ச்சி சுயமாரியாதையுள்ள அனைவரையும் தலைகுனிய வைக்கிறது. ஆனால் நாட்டையே திருடும், கூட்டிக் கொடுக்கும் திருடர்கள் தலை நிமிர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார்களே.... அதைப் பார்த்து பொறுத்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் அவமானமில்லையா?!
முதலாளிகள் போடும் எச்சில் காசில் வாழும் இந்த மானங்கெட்ட அரசும், அதிகாரவர்க்கமும், அரசியல்வாதிகளும் இனிமேலும் நாட்டையும், நாட்டின் கௌரவத்தையும் காப்பாற்றுவார்கள் என்று உங்களால் நம்ப முடிகிறதா?! ஒன்றே ஒன்றுதான் இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும். ஓன்று அவர்களாகவே தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும். அது நடக்கப் போவதில்லை. ஏனென்றால் நாம்தான் அவர்களை தூக்கியெறிய வேண்டும். மானமுள்ள எம் உழைப்பாளி மக்களே உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள். வறுமைக்கும், தரித்திரத்திற்கும் காரணமானவர்களின் சுயரூபத்தை வெளிச்சம்போட்டு காண்பியுங்கள். இந்தத் தினவெடுத்த முதலாளித்துவத்திற்கு ஒரு உணவுக் கலகம் விடை சொல்லட்டும். அந்த உணவுக் கலகம் என்பது புரட்சிதான் என்பதற்கு முன்னோட்டமாக இருக்கட்டும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
இங்கு ஒரு தகவல்
»
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால்! இந்த மானம்கெட்ட அரசுகள் எதற்கு?