Author Topic: மனித உடலின் புதிர்கள் - வர்மத்தின் மர்மங்கள்  (Read 2311 times)

Offline Global Angel

மனித உடலின் புதிர்கள் - வர்மத்தின் மர்மங்கள்



வர்மத்தின் சக்தி...


          இறையருள் இருப்பவர்களுக்குத்தான் வர்மம் கைகூடும் என்பது சித்தர் வாக்கு.  திருவருளும் குருவருளும் பெற்றவர்களின் சந்ததியினருக்கு மட்டுமே அந்த மருத்துவம் கிடைக்கும் என்று  கடந்த இதழில் கண்டோம்.

வர்ம சாஸ்திரங்களை கற்றறிந்த முன்னோர்கள் மேலும் பல வகையான சாஸ்திரங்களையும் படித்தனர்.  ஆன்மீகத் தன்மை உள்ளத்தில் ஊற்றெடுக்கும் போதுதான் இந்த வகையான சாஸ்திரங்கள் கைகூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.  அதனால் தான் குரு சிஷ்யன் என்ற முறை இருந்தது.  இந்த குருகுலம் அனைத்தும் சித்தர்கள், ஞானிகளால் நடத்தப்பட்டது.  மன்னர்கள் பலர் இங்குதான் கல்வி பயின்றனர்.

முக்காலத்தையும் உணர்ந்த சித்தர்களும், ஞானிகளும் நல்ல கருத்துக்களை ஏடுகளில் எழுதி உலக மக்களுக்கு உண்மையை உறைத்தார்கள்.  தங்களின் தவப் பயனால் பிரபஞ்ச சக்தியை அடைந்து அதன்மூலம்  மக்களுக்கு   தேவையானதை செய்தார்கள்.  மக்கள் ஆரோக்கியமாக வாழ மருத்துவ முறையையும் மருந்துகளை கண்டறிந்து அவை சாப்பிடும் காலத்தையும் உணர்ந்து சொன்னார்கள்.

சூரிய மண்டலத்தை தன் சக்தியால் கண்டறிந்து அதன் செயல்பாடுகளையும், கோள்களின் ஆதிக்கத்தையும்,  அதனால் ஏற்படும் மாற்றங்களையும் துல்லியமாக அறிந்து சொன்னார்கள்.    மருத்துவத்தை மட்டுமே சித்தர்கள் சொல்ல வில்லை. உலக சாஸ்திரங்களை எழுதியவர்களே இவர்கள் தான்.

இவர்கள் கண்டறிந்த உண்மைகளை ஏடுகளில் பதிவு செய்தனர்.  ஆனால் இடையில் வந்த சபல கபடதாரிகள் தனக்கு தெரியாததை தெரிந்தது போல் காட்டி மக்களை ஏமாற்றி பணம் பறித்து கொண்டிருக்கின்றனர்.  இவர்கள் வயிறு பிழைக்க வாயால் பொய் பேசி வேடதாரிகள் வேடம் பூண்டு உள்ளதை எல்லாம் சொல்லாமல் ஏதோ வாய்க்கு வந்தபடி சொல்லி சாஸ்திரங்களின் பயன்களை திரித்து கூறிவிட்டனர்.

ஞானம் என்னும் அறிவை பெறாமல் தங்களுக்கு வித்தை எல்லாம் தெரிந்தவர்கள் போல் காட்டி மக்கள் மத்தியில் சாஸ்திரங்களை கேலிப் பொருளாக்கினார்கள்.

சாஸ்திரங்கள்  எக்காலத்திலும் பொய்க்காது.  இதை அறியாமல் பேசிக் கொண்டிருப்பவர்களின் வாழ்வுதான் கேள்விக்குறியதாகும்.

மக்களுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று சுவாமி விவேகானந்தர் கூறிய கருத்துக்கள் தான் அன்றே சித்தர்களின் சிந்தனையில் தோன்றிய கருத்தாகும். ஊண் உடம்பை ஆலயம் என்றார் திருமூலர்.  ஆம் இந்த உடல்தான் ஆலயம்.  அதில் வாழும் ஆன்மா இறைவன் என்றார்கள் பெரியோர்.

மனித உடம்பின் செயல்பாடுகள் வாத, பித்த கபம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.  இதையே சிவன், விஷ்ணு, பிரம்மா என்று அழைக்கின்றனர்.  வாத, பித்த, கபத்திற்கும், சிவன்,  விஷ்ணு பிரம்மாவுக்கும் உள்ள தொடர்பு  பற்றி வரும் இதழில் காண்போம்