போதும் நித்யானந்தரே......நிறுத்துங்கள்!!!!!
சற்றே பெருமுச்செறிந்து நான் பொறுமை காக்கிறேன், சுற்றியும் நடக்கும் தீமைகளையும் அதை செயற்படுத்தும் அரக்கர்களையும் இன்றே ஒரு சூரசம்ஹாரம் செய்யும் வரம் ஒன்று எனக்குத் தா என்று இடமும் வலமும் ஓடி, மேல் நோக்கி கை கூப்பி ஏதோ ஒரு பெருஞ்சக்தியிடம் வேண்டுகிறேன்....!
ஆன்மீகம் என்ற பெயரால் அத்துமீறல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நித்யானந்தன் என்ற புழுவினை இக்கணமே இந்த பிரபஞ்சத்தை அசைத்து உருட்டி நகர்த்திக் கொண்டிருக்கும் சக்தி அசைத்துப் போட்டு விடக் கூடாதா என்ற என் கோப அக்னி சூடேறி கண்களின் வழியே ரெளத்ரமாய் பரவ எண்ணங்கள் அதே கதியில் எழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. திறந்தே விடட்டும் நெற்றிக் கண் என்று புருவ மத்தியில் எண்ணங்களைச் சேர்த்து அதை இக்கட்டுரையாக்கியிருக்கிறேன்.
கற்றாயா? தெளிந்தாயா? பகின்றாயா? சாந்த சொரூபியாய் உன்னில் நீயாய் இருந்தாயா? அகண்ட திறந்த வெளியில் நீ கற்றதை லெளகீக இச்சைகளின்றி மனிதர்களுக்குப் பயிற்றுவித்தாயா? மானுடக்கூட்டம் தெளிந்தது என்ற திருப்தியில் உனது மெளனங்களின் அடர்த்தியில் நிர்சங்கற்ப சமாதியில் உன்னை உகுத்தாயா? இதுவெல்லாமற்று நீ நடத்தும் நாடகங்களின் பெயர்தான் ஆன்மீகமா? தன்னிலை உணர்ந்த உன்னதமா? நீ துறவியா? நீ சன்மார்க்க விதிகளை பரப்புரை செய்யும் சாந்த சொரூபியா....?
அப்பட்டமாய் ஒரு தேசத்தின் வேரிலிருந்து கிளைத்த வழிமுறையின் சூத்திரங்களை வாசித்து அதில் சிலவற்றை உணர்ந்து கிஞ்சித்தேனும் அவற்றைப் பின்பற்றமால் முற்றிலும் எதிர் திசையில் பயணிக்கும் நித்யானந்தர் என்னும் இராஜ சேகரா? உனக்கும் நீ சார்ந்திருப்பதாக கூறும் ஒரு வழிமுறைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை இக்கணமே அறுதியிட்டு எம்மளவில் எம்மவருக்கு அறிவிக்கிறோம்.
தியானத்தை கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்லுமிடத்தில் ஆரம்பிக்கிறது முதல் முரண். அதற்கு கட்டணம் வசூலித்தது இரண்டாவது முரண். ஆன்மீக சேவை என்பது என்ன? என்றறியா பாலகனே, நீ சமூக சேவை செய்யவேண்டும் என்று யார் உன்னிடம் வந்து மண்டியிட்டு அழுதார்கள். ஆன்மிகத்தை அறிகிறேன் பேர்வழி என்று அத்துமீறி மனிதர்களைக் குழப்பி விட்டு அநீதிகளை இழைக்கும் நீ கடவுளா?
நீதான் கடவுளென்றால் நாங்கள் சாத்தானை வணங்கி விட்டுப் போகிறோம்!
தன்னில் தன்னை உணர்ந்த முக்தன் மனிதர்களுக்குp போதிக்க வேண்டியது... நிலையாமையை, தான் கற்றுக் கொண்ட ஒழுக்கத்தை, தன்னில் இருக்கும் அமைதியை, பிரபஞ்ச சூத்திரத்தில் இருந்து உமது மூளைக்குள் ஏறிக் கரைந்து போன சத்தியத்தைப் போதிக்க உனக்கு லட்சங்களில் பணம் எதற்கு...?
ஆன்மீகம் உனது பணி, ஆன்ம பலத்தை மனிதர்களுக்கு விதைப்பது உமது கடமை. இன்ன பிற சமூக நல அக்கறை உமக்கு இருந்தால், உம்மிடம் கற்க வரும் மனிதர்களை.... இருக்கும் சமூக நல இயக்கங்களுக்கு, அனாதை ஆசிரமங்களுக்கு, ஏழைகளுக்கு, முதியோர் இல்லங்களுக்கு நேரடியாய் சென்று உதவிகள் செய்யுமாறு பணிக்கலாம்தானே?
முற்றும் துறந்த துறவியெனில் நிர்வாகமும் பதவியும் உமக்கெதற்கு? காலமெல்லாம் ஆன்மீகத்தின் வேர்கள் பரவி நின்று எப்போதும் நல்வழி காட்டும் பூமியும் பாரதம்தான், காலமெல்லாம் ஆன்மீகத்தின் பெயரால் எம்மக்களை சீரழித்து சின்னாபின்னமாக்கி, அதன் பொருட்டு பலதரப்பட்ட பகுத்தறிவுக் கருத்துக்களை பிறப்பித்த ஒரு தேசமும் பாரதமும்தான்...!
ஆன்மிக அரைகுறை நித்தியானந்தாவின் முகத்திரையை எல்லாம் வல்ல பெரும் சக்தி நவீன கால தமது அஸ்திரத்தின் மூலம் கிழித்தெறிந்தது. நித்யானந்தன் இல்லறவாசியாக இருப்பது தவறு என்று பரதகண்டத்தில் இருக்கும் பூர்வாங்க வழிமுறை நிர்ப்பந்திக்கவில்லை. பிரம்மச்சார்யம் என்பதை ஒரு வழிமுறையாக சூழல்கள் பொருந்தி வருபவருக்கான சாஷ்டாங்கமாத்தான் பார்க்கச் சொல்லியிருக்கிறது.
இல்லறம் என்பது ஆன்மிகத்துக்கு எதிரானது என்று யாரோ ஒரு குருட்டுப் பார்வைகள் கொண்டவன் எங்கோ போதித்து செல்ல...இந்த நித்யானந்தர்களுக்கு தம்மை பிரம்மச்சாரிகள் என்று அறிவித்து ஆசி வழங்குவதே பெரிய சுத்த புருசர்கள் என்று தம்மைக் காட்டிக் கொடுக்கும் நிகழ்வாய் அறியப்பட்டது.
நீ பெண்ணோடு சல்லாபித்ததில் யாதொரு குற்றமும் இல்லை நித்யானந்தா ஆனால் நீ பிரம்மச்சார்யன் என்று கோடாணு கோடி மனிதர்களின் மனதினின் விதைத்த நம்பிக்கை நச்சுதான் குற்றமாகிறது. திருடனுக்கு தேள் கொட்டியது போல சத்தியம் உன் துகிலுரித்த பின்னும், வேண்டிய பாடங்களை பிரபஞ்சம் குறைவற்று வழங்கிய பின்னும் மீண்டும் மீண்டும் நீ பல்வேறு பொய்களைச் சொல்லி உன்னை நிரூபிக்க முயலும் குரூர புத்தியின் பின்னால் ஒளிந்திருக்கிறது உனக்குள் இருக்கும் மிருகம்.
18 சித்தர்களில் இல்லறத்தார்கள் இருந்தார்கள், மாமுனிகள் எல்லாம் மனைவிகளைக் கொண்டிருந்தார்கள், இது காலத்தின் வரலாறு, ஆனால் உன்னைப் போன்ற கத்துக் குட்டி கன்று குட்டிகள் இன்று போதிக்கும் பாடங்கள் எல்லாம் எம்மைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பதை உன் மட மூளை இன்னமும் அறியாமல் நீ இன்னமும் மக்களைக் கூட்டுகிறாயா? நீசனே!!! குண்டலினையை உயர எழுப்ப நீ சவால் விடுகிறாயா? சத்திய வழிமுறைகளை கேலிக்குரியாதாக்குகிறாயா?
ஓராயிரம் பேர் உன் முன்னால் பைத்தியங்கள் போல எம்பி எம்பிக் குதிக்க நீ மாலைகள் இட்டு காவியுடுத்தி கையசைத்து சிரிக்கிறாயா? கயவனே? உன்னை ஊடகங்களில் காட்சிப்படுத்தியவர்களின் மனதில் ஒராயிரம் குற்றங்கள் இருக்கலாம் ஆனால் அவற்றைக் கூட ஏற்றுக் கொண்டு விடலாம் ஏனென்றால் அவர்கள் தங்களை சுத்த சித்த புருஷர் என்றும் தம்மைக் கடவுளர் என்றும் எப்போதும் கூறியதில்லை. அவர்கள் சாதரண மானுடர்தாம் உள்நோக்கங்கள் இருக்கலாம் ஆனால் உன் நோக்கம் சரியானாதா?
இனியும் நீ ஒரு மதத்தின் ஆன்மிகத் தலைவன் என்ற பதம் கொள்ள வேண்டாம். எம்மக்களை சீர்திருத்துகிறேன் பேர்வழி என்று எம்மை சீர்கெடுக்கவேண்டாம். காலமும் வாழ்க்கையும் உனக்கு ஏற்கனவே பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டது. ஒரு ஆன்மீகவாதி என்று அறிவித்துக் கொண்ட உனக்கு, முற்றும் துறந்தவன் என்று கொக்கரித்த உனக்கு தொடர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பிரபஞ்சம் இப்போதும் நீ அடங்கவில்லை எனில் இன்னமும் கொடுமையான பாடங்களை எடுக்கும்....நீ உன்னைக் காத்துக் கொள்...!
எம் மக்களை தத்தம் அறிவுகள் காக்கும்...!
எம் மக்களே....! ஆன்மீகம் என்ற பெயரில் பணம் வசூலிப்பவன் முதல் திருடன்.
ஆன்மீகம் கற்றுத் தருகிறேன் என்று கூறுவது போலி வழிமுறை. ஆன்மீகம் உங்களுக்குள் உள்ள ஒரு விசயம், அதை தனித்தமர்ந்து நீவீர் உம்மை உற்று நோக்கி உமது குறை நிறைகளை நேருக்கு நேர் நின்று பார்க்கும் போது சத்திய புருசர்களாக நீங்கள் மாறும் ஆச்சர்யம் நிகழ்ந்தே விடும். ஒரு நல்ல குரு உங்களை உற்று நோக்குகிறார், உங்களிடம் தாம் போதிக்க விரும்புவதை பெரும்பாலும் உங்களைக் கொண்டே செய்ய வைக்கிறார்கள்...
ஆன்மீகம் என்பது ஓவ்வொரு மனிதனிதனும் தன்னையும் தன் சுற்றுப் புறத்தையும் உணர்ந்து உள்வாங்கி வாழ வழி சொல்லும் ஒரு வழிமுறை. இதை நித்யானந்தர் போன்ற ஆசாமிகள் தடம் புரட்டி விட்டு போடும் கூத்துக்களை எல்லாம் ஆளும் அரசுகளும் மக்களும் பொறுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டுமா என்ன?
உங்களில் யாராய் வேண்டுமானாலும் இப்படிபட்ட ஆசாமிகளை ஆதரிப்பவர்களாக இருக்கலாம். உங்களில் உறவினர்கள் நண்பர்கள் அல்லது வேறு தெரிந்தவர்கள் கூட இருக்கலாம். எல்லோரையும் அவசர கதியில் அழைத்து தத்தம் பணிகளை செவ்வனே செய்யச் சொல்லுங்கள்....
எவனொருவன் தன்னுடைய கடமையை தன்னை உணர்ந்து செய்கிறானோ, எவன் ஒருவன் தனக்கும் பிறர்க்கும் இயன்றவரையில் துன்பம் தராமல் வாழ்கிறானோ அவனெல்லாம் கடவுளே....!
இருப்பது எல்லாம் கடவுளர்தாம்...கடவுளுக்கு நான் நெருக்கமானவன் அல்லது நான் மட்டும்தான் கடவுள் என்று எவரேனும் கூறி வந்தால் பாரதி சொன்னது போல காறி உமிழ்ந்து, மோதி மிதித்து விரட்டியே அடிப்போம்..!
தெளிவான சமுதாயத்தின் அங்கத்தினராவோம்...! கூர்மையான பார்வைகள் கொள்வோம்...!