தினமும் 20 நிமிட தியானம்
தினமும் சுமார் 20 நிமிடங்கள் தியானம் செய்து வந்தால் நம் உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். நீண்ட நாட்கள் சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கும் அது உதவும். பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் கூட இதை நிரூபித்துள்ளன.
பழங்காலத்திலேயே முனிவர்களாலும் துறவிகளாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இந்த தியானக் கலை, தற்போது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு முக்கியப் பணியில் ஈடுபட்டு வருகிறது. நாம் மேற்கொள்ளும் பல்வேறு வேலைகளிலும் கூட நம் மனத்தை ஒருமுகப்படுத்த தியானம் கை கொடுக்கிறது.
நம்முடைய சில உடல் குறைபாடுகளுக்கு தியானம் தான் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. நாம் எந்த வயதில் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் என்பது எல்லோருக்கும் ஒரு பெரிய ப்ளஸ்! பெரும்பாலும் அதிகாலை நேரமே தியானத்திற்கு உகந்த நேரமாகும்.
காலையில் முடியாதவர்கள், மாலை அல்லது இரவு உறங்கப் போகும் முன் தியானம் செய்யலாம். தினமும் ஒரே நேரத்தில் தியானத்தை மேற்கொள்வது நல்லது. தியானத்தில் அமரும்போது அதில் மட்டுமே உங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.
இந்தத் திறமையை வளர்த்துக் கொண்டாலே தியானத்தை வெற்றிகரமாகச் செய்ய முடியும். யாரும் தொந்தரவு செய்து விடாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமம் இருக்கும். ஆனால், போகப் போக சரியாகி விடும்.