உங்களுக்கு இது தெரியுமா? மனிதன் தனது கண்களால் கிட்டத்தட்ட 1,000,000கும் அதிகமான நிறங்களை தரம் பிரித்து அடையாளம் காண முடிகின்றான். அதே போன்று அவனது காதுகளால் 340,000 வகை ஒலிகளை வேறுபடுத்தி அறிய முடிகின்றான். ஆனால், மூக்கினால் சுமார் 10,000 நறுமணங்களையே நுகர்ந்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று மட்டுமே இதுவரையில் நம்பப்பட்டு வந்தது. ஆனால், 1920ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையிலான இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில், மனிதர்களால் சுமார் 1,000,000,000,000 (லட்சம் கோடி) வாசனைகளை தரம் பிரித்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் 26 தன்னார்வலர்களிடம் 128 வாசனாதி பொருட்களின் கலவையுடன் கூடிய 264 நறுமண மாதிரிகளை முகர்ந்து, தரம் பிரித்து அடையாளம் காட்டும்படி நடத்தப்பட்ட சோதனையில் இந்தப் புதிய முடிவு வெளியாகியுள்ளது. இதில் உள்ள விசேஷம் என்னவென்றால், இந்த வாசனைகளை நினைவுபடுத்திக் கூற அவர்கள் யாரும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளாமல், வாசனைக்குரிய பொருளின் மூலப்பெயரை உடனுக்குடன் சரியாகக் கூறியுள்ளார்கள்.
முன்பு உண்மை என்று எண்ணப்பட்ட ஒரு விடயம் இன்று பொய் ஆகிவிட்டது. இன்று உண்மை என்கிற விடயம் நாளை என்னவோ தெரியாது?